பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: கட்டுரைகள்.. Page 3 of 11

ஏனெனில்.. எங்கள் உலகம் அழகானது.

❤️❤️❤️❤️❤️❤️❤️

தம்பி குடவாசல் மணிகண்டனின் திருமணத்திற்கு திருவாரூர் வரை என் அம்மா சென்று வந்தது குறித்து எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. அவர்களுக்கு இந்தத் திருமணம் குறித்து உள்ளூர ஆழ்ந்த விருப்பம் கொண்டிருந்தார்கள் என நான் அறிந்தே இருக்கிறேன். அவன் சக்கர நாற்காலியில் நாம் தமிழர் கூட்டத்திற்கு பாடுவதற்காக வரும் போதெல்லாம் அம்மா அருகில் சென்று நின்று கொள்வார்கள். ஒருபோதும் அவனுக்காக நான் எந்த சகாயமும் செய்ததில்லை. அவன் வருவான். பாட அனுமதி கேட்டு வற்புறுத்துவான். பிடிவாதம் பிடித்து பாடியும் விடுவான்.

கால் நடக்க முடியாதவர்களுக்கு , மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பெண் கிடைப்பதில்லை. உடல் குறைபாடுள்ள பெண்கள் நிலை இன்னும் மோசம். நானும், தம்பி மணிகண்டனும் கொஞ்சம் அதில் விதிவிலக்கு. மனதைப் பார்த்து காதலியுங்கள் என்றெல்லாம் புத்தகத்தில் வரிகள் மின்னும் போது நானெல்லாம் சிரித்துக் கொள்வேன். அப்படி எல்லாம் எந்த காதலும் பிறக்காது. அப்படி பிறந்தால் அது குறுகிய கால அனுதாபமாகத்தான் இருக்கும் என்பதை என்னை ஒத்த பலர் வாழ்வில் நான் நேரடியாகவே கண்டிருக்கிறேன்.

தம்பி மணிகண்டன் திருமண புகைப்படங்களை பார்க்கும் போது எனக்கு எனது கடந்த காலங்கள் நினைவுக்கு வந்தன. திருமணத்தன்று நான் தடுக்கி விழுந்து விடக்கூடாது என ‌ திருமணத்திற்கு முதல் நாள் நான் மண்டபத்திற்கு சென்று‌ என் அம்மா முன்னிலையில் ஒரு இரண்டு மணி நேரம் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

ராஜபார்வை என்ற ஒரு படம் உண்டு. கமலஹாசனின் 100வது திரைப்படம். கண்பார்வை திறன் அற்றவராக கமல் அதில் திறம்பட நடித்திருப்பார். எந்த அனுதாபத்தையும் எதிர்பார்க்காத கண் பார்வைத் திறனற்ற ஒரு வித்தியாசமான கதாபாத்திரம் அது. சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளிவந்த அந்த திரைப்படம் அந்த காலகட்டத்தில் சரியாக போகவில்லை என்பார்கள். அந்தப் படத்தின் தோல்வியில் தான் ‌ கமல் வெறுப்பில் சில வணிக திரைப்படங்களில் நடித்ததாகவும் சொல்வார்கள்.

அந்தத் திரைப்படத்தில் கண் பார்வைத் திறனற்ற கமலஹாசனின் வீடு அவர் புழங்குவதற்கு ஏற்ப திட்டமிட்ட அடிகளில் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும். சிறிது இடம்மாறி போனாலும்‌ அவர் தடுமாறி விடுவார். ஒருமுறை கதாநாயகி மாதவி வீட்டிற்கு வரும்போது சில பொருட்களை இடம் மாற்றி வைத்து விட, கமல் தடுமாறி விடுவார். இந்த நுட்பமான திரைப்படக் காட்சி எங்களைப் போன்றோரின் அனுதாபம் கோராத திட்டமிடலுடன் கூடிய ஒரு வாழ்வியலை ஆவணம் ஆக்கிய மிக முக்கியமான காட்சி. மாற்றுத்திறனாளிகளை போற்றுவதாக கூறிக்கொண்டு ராகவா லாரன்ஸ் போன்ற கோமாளிகள் எடுக்கின்ற முட்டாள்தனமான படம் அல்ல அது. படத்தின் முடிவு கூட மகிழ்ச்சியுடன் தான் இருக்கும். உடல் குறைபாடுள்ள சகமனிதனின் சுயமதிப்பை பற்றி ஆராய்கிற ராஜபார்வை தமிழின் மிக முக்கியமான ஒரு திரைப்படம்.

எந்த மாற்றுத்திறனாளியும் அனுதாபம்‌ கோருவதில்லை. அவர்களுக்குத் தேவை அவர்களை இடையூறு செய்யாத ஒரு உலகம். ஆனாலும் உலகம் அவ்வாறு இல்லை தானே..

அன்பின் மிகுதியால் சிலர் எங்களுக்கு உதவி செய்வதாக நினைத்துக்கொண்டு எங்களுடைய சமநிலை தவறுவது போல சில செயல்களை செய்து விடுவார்கள். குறிப்பாக எனக்கெல்லாம் வலது கையை பயன்படுத்தி இடதுகையை காலில் ஊன்றிக்கொண்டு நடந்து செல்லும் உடலமைப்பு. ஆனால் உதவி செய்ய வருபவர் இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் மாற்றி வேறு கையைப் பிடிக்கும் போது நான் தடுமாறி விடுகிறேன். அது அவர்களது பிழையல்ல. அது அன்பின் ஒரு பகுதி என்று‌ நானும் உணர்ந்திருக்கிறேன்.

எங்கள் அமைப்பில் புதிதாக சேர்ந்த நண்பர் ஒருவர் என நேரடியாக அதுவரை பார்த்திராத ஒருவர், தஞ்சை கலந்தாய்வுக் கூட்டத்தில் என்னை முதன்முதலாக பார்த்தார்.‌ இன்று அவர் அலைபேசியில் என்னை அழைத்து இந்த உடல் சூழ்நிலையிலும் நீங்கள் கட்சி வேலை செய்கிறீர்கள், யூ ஆர் கிரேட் என்றெல்லாம் அன்போடு பேசிக்கொண்டிருந்தார். அதுகுறித்து நீண் ட நேரம் சிந்தித்துக் கொண்டிருந்தேன். உண்மையில் அமைப்பில் வேலை செய்வதுதான் என்னை சமநிலையில் வைத்திருக்கிறது என்பதை எப்படி அவரிடம் விளக்கி புரிய வைக்க முடியும் என்பதை பற்றி நான் சிந்தித்துக் கொண்டே இருந்தேன்.

நான் உலகத்தில் அதிகம் விரும்பும்‌ அனைவருமே என்னிடம் அனுதாபம் காட்டாதவர்கள். குறிப்பாக என் அம்மா. பிறகு அண்ணன் சீமான். பின்னர் என் மனைவி உள்ளிட்ட சில பெண்கள் என இவர்கள் யாருமே என்னிடம் அனுதாபம் காட்டியதில்லை. என்னை வெகுவாக விரும்பிய (disclaimer: அது மிக நீண்ட காலத்திற்கு முன்னால்…) ஒரு பெண் என்னிடம் சொன்னது இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. நீண்ட பயணத்தைக் கொண்ட ஒரு பணிக்கு என்னை அவள் அழைத்த போது என் உடல் நிலையை சிந்தித்து தான் இதை கேட்கிறாயா என நான் கேட்டதற்கு “உன்னால் ஒரு விஷயம் முடியாது என்று நான் இதுவரை நினைத்துக் கூட பார்த்ததில்லை. என் பார்வையில் இயல்பான மற்றவர்களைப் போலத்தான் நீயும் இருக்கிறாய். கிளம்பி வாடா”என்று அலட்சியமாகச் சொன்னாள்.

திருமணத்திற்காக நான் பெண் பார்க்கும்போது .. என் மனைவியிடம் நான் ஏதோ அறிவுரை சொல்வது போல பெரியவர்கள் சொல்வதை கேட்க வேண்டாம் எனவும் பிடித்திருந்தால் மட்டும் திருமணம் செய்து கொள்ளலாம் எனவும், விளக்கமாக அறிவுரை கூறி என் உடல் இருக்கும் தகுதி குறித்து அவளிடம் விளக்கி பேசினேன்.

அதை எல்லாம் அமைதியாக கேட்டு விட்டு நான் பேசிய எதையும் பொருட்படுத்தாமல், அவள் அப்பாவிடம் போய் சென்று “எனக்குத் திருமணம் என்ற ஒன்று ஆனால் இவரோடு தான்” என்று பெரியோர்களால் பேசப்பட்ட சாதாரண திருமணத்தை ஒரு அழகான காதல் திருமணமாக என் மனைவி மாற்றி விட்டாள்.

இந்த வரிசையில் என்னை மிகவும் வெறுக்கும் என் அரசியல் எதிரிகளும் வருகிறார்கள். அவர்களை நான் மிகவும் விரும்புகிறேன். அவர்கள் வசவுகளை எத்தனையோ முறை நான் ரசித்து இருக்கிறேன். அவர்களுக்கு நான் இவ்வளவு தொந்தரவாக இருப்பது குறித்து மட்டுமே வருந்தி இருக்கிறேனே தவிர, என் உடல் குறைபாட்டினை குறித்து எதையும் பொருட்படுத்தாது, அனுதாபமோ, கருணையோ காட்டாது என்னை தீவிரமாக எதிர்க்கும் அவர்களது எதிர்ப்பு கூட நான் விரும்புகிற ஒன்றுதான்.

ஏனெனில் ஒரு உலகம் இவ்வாறு அமைய எங்களைப் போன்றோருக்கு மிக மிக அரிது. எனது மகன்களுக்கு என் அப்பாவால் எல்லாம் முடியும் என்கிற மகத்தான நம்பிக்கை இருக்கிறது. அது நான் கொடுத்தது இல்லை. அவர்களாகவே மனதில் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போதெல்லாம் பல இடங்களுக்கு எனது மூத்த மகன் சிபி தான் என்‌ உடன் வருகிறான். என் கட்சி உறவுகள் போலவே அவனும் கவனமாக என்னை அழைத்துச் செல்கிறான்.

அண்ணன் சீமான் எப்போதும் நான் மேடை ஏறும் போது பார்த்துக் கொண்டிருப்பதாக பலர் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். என்னை அவர் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் எனக்குத் தெரியும். நான் தடுமாறி விடக்கூடாது என்பதில் அவர் மிகுந்த கவனம் கொண்டு இருக்கிறார் என்பதும் எனக்குத் தெரியும். சில சமயங்களில் தடுமாறும் போது அவரது சிறிய கணைப்பு போன்ற ஒரு ஒலி என்னை எச்சரித்து சுதாரிக்க வைத்திருக்கிறது. ஒருபோதும் என் அண்ணன் சீமான் எனக்கு எவ்வித சார்பும் செய்தததில்லை. உன்னால் முடியாது என்று அவர் எப்போதும் சொன்னதில்லை. இன்னும் உன்னால் முடியும் என்றுதான் என்னை எப்போதும் திட்டிக் கொண்டே இருக்கிறார். அதனால்தான் அவர் என் அண்ணன்.

அந்த வகையில் என்னை மதிப்பு மிகுந்தவனாக இந்த உலகம் நடத்தியிருக்கிறது. தம்பி மணிகண்டனுக்கும் ஏறக்குறைய அப்படித்தான். நான் எல்லாம் அவனை கடுமையாக திட்டி இருக்கிறேன். அவனும் சளைத்தவன் அல்ல. கல்லூரி வாழ்க்கை தொடங்கி சகலத்திலும் அவன் சேட்டைக்காரன் தான். சிறந்த பாடகன். பாடிப் பாடியே காதலித்து மனதுக்குப் பிடித்தவளைக் கரம் பிடித்தும் விட்டான்.தம்பி குடவாசல் மணிகண்டனின் மணவாழ்க்கை என்னைப்போலவே மகிழ்ச்சியாகவும், வெற்றிகரமாகவும் அமைய நான் மனதார வாழ்த்துகிறேன்.

திருமணம் முடிந்து வீட்டிற்கு திரும்பிய என் அம்மாவிற்கு மிகவும் மகிழ்ச்சி. சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.

அந்த மகிழ்ச்சியின் ஊடே நெடுங்காலமாய் சுமந்துவரும் ஒரு பெரும் வலியை அவர்கள் கரைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மட்டும் நான் அந்த நேரத்தில் உணர்ந்தேன்.

அம்மா என்றால் அப்படித்தானே.. மணிகண்டனுக்கு திருமணம் நடந்தால் என்ன.. எங்களைப் போல வேறு யாருக்கு நடந்தால் என்ன..

அம்மாவுக்கு எல்லாம் ஒன்றுதான்.

ஏனெனில் உலகத்தில் அம்மாக்கள் ஒரே மாதிரிதான்.

❤️

தமிழ்நாடு- ஓர் வரலாற்று சித்திரம்

தமிழினம் தனது தனி நலன்களுக்காக போராட புரட்சிப் பாதையில் படை எடுத்து விட்டது.அந்த படையெடுப்பை எதிர்க்கும் எந்த அரசியல் கட்சியும் இனி தமிழகத்தில் வாழ முடியாது.
-ம. பொ. சி 1954 செப்டம்பர்.

ஒவ்வொரு தேசிய இனமும் தனது அடையாளங்களில் முதன்மையாக கொண்டிருப்பது மொழி. மொழி என்ற முகமே ஒரு தேசிய இனத்தின் முகவரி. உலகத்தில் தோன்றியுள்ள எத்தனையோ நாடுகள் மொழி அடிப்படையிலான தேசிய இனங்களை சார்ந்தே நிலப் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
 ஒரு தேசிய இனம் என்பது பொதுவான மொழி, வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு, பொதுவான மக்கள் பொருளியல் வாழ்க்கை, பொது பண்பாடாக வெளிப்படும் நாம் ஓரினம் என்கின்ற உளவியல் பாங்கையும் தழுவி வரலாற்றின் தொடர்ச்சியாக வந்த ஒரு நிலையான சமூகம் என அறியப்படுகிறது.


சங்க காலம் தொட்டே தமிழ்மொழி பேசப்பட்டு வந்த தமிழக எல்லை என்பது வரையறுக்கப்பட்ட எல்லையாக இருந்து வந்திருக்கிறது. சேர சோழ பாண்டியர்கள் ஆண்டாலும் வடவேங்கடம் தொடங்கி தென்குமரி வரையிலான பெரும் நிலப்பரப்பு தமிழகம் என அறியப்பட்டு வந்திருக்கிறது.
 “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து”என்கிறது தொல்காப்பியம்.
சேர சோழ பாண்டியர்களான தமிழ் மூவேந்தர்கள் 1300 வருடம் ஆண்டுகளாக ஒற்றுமையுடன் இருந்து தமிழக நிலப்பரப்பினை காத்து வந்து இருக்கிறார்கள்.கி-மு இரண்டாம் நூற்றாண்டில் கலிங்கத்து மன்னன் காரவேலன் இந்தக் கூட்டணியை உடைத்து எறிந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
இடைக் காலத்திலும் மூவேந்தர்கள் ஒருவருக்கொருவர் படையெடுத்து வெற்றி தோல்வி கண்டாலும், தமிழக நிலப்பரப்பு ஏறக்குறைய பிறமொழி இனத்தாரிடம் சிக்காமல் பாதுகாக்கப்பட்டே கிபி 12ஆம் நூற்றாண்டு வரை வந்தது. 

 
முகலாயர் படையெடுப்பின்போது கூட சில இன ஊடுருவல்கள் நடந்ததே ஒழிய தமிழக நிலப்பரப்பை பொருத்தவரையில் அது தமிழர்களின்  தாயகமாக தான் விளங்கியது.
வரலாற்றின் முதல் விடுதலைப் போர் என அறிவிக்கப்படுகிற 1857 சிப்பாய் கலகத்திற்கு முன்பாகவே 1801 ஆண்டிலேயே ஆங்கிலேயருக்கு எதிராக தமிழக மண்  போர்க்கோலம் கண்டது. அதற்கும் முன்பாக மாவீரன் பூலித்தேவனும், மருதநாயகம் யூசப்பும் வெள்ளையர் ஆதிக்கத்திற்கு எதிராக தமிழக மண்ணில் எழுச்சியோடு போராடினார்கள். 1801ஆம் ஆண்டு மருதுபாண்டியர் தூக்கிலிடப்பட்ட காலகட்டத்தில் ஏறக்குறைய முந்தைய சென்னை மாகாணம் என அழைக்கப்பட்ட தமிழ்நாடு கேரளா ஆந்திரா கர்நாடகா போன்ற பகுதிகளில் ஆங்கிலேயர் ஊடுருவி ஆட்சி செய்ய தொடங்கி விட்டார்கள். திப்புசுல்தானின் வீழ்ச்சி தென்னகத்தில் ஆங்கிலேயர் கால் ஊன்றுவதற்கு நாற்றங்காலாய் அமைந்தது. 


1825 ஆம் ஆண்டு தெலுங்கு கன்னட மலையாள பகுதிகளை தமிழ் நாட்டோடு இணைத்து சென்னை மாகாணம் ( Madras presidency) கடலூரை தலைநகரமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.1858 ஆம் ஆண்டு விக்டோரியா மகாராணி பேரறிக்கைக்கு பிறகு ஆளுநர் நியமிக்கப்பட்ட சென்னை மாகாணம் தனித்த பெரும்பகுதியாக திகழ்ந்தது. சென்னை மாகாணத்தின் தலைநகராக, முக்கிய பகுதியாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் கூடிய சென்னை திகழ்ந்ததால் தென்னிந்தியா முழுக்க சென்னை அரசியல் முக்கியத்துவம் பெற்ற பகுதியாக விளங்கியது. சென்னையை தலைமையிடமாகக் கொண்ட இந்தப் பெரும் நிலப்பரப்பு 1956 இல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படும் வரை ஒரே மாகாணமாக தான் இருந்தது.
ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு முன்பாக இந்தியா என்கிற ஒரு நாடு இல்லை. இந்தப் பெரும் நிலப்பரப்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறுநில மன்னர்களால், சமஸ்தான ஜமீன்தார்களால் ஆளப்பட்டு வந்தது. அதற்கு முன்பாக கூட வரலாற்றில் எப்போதும் இன்று இந்தியா என வரையறுக்கப்படும் இந்தப் பெரும் நிலப்பரப்பு ஒருபோதும் ஒரே மன்னரால் ஆளப்பட்டது இல்லை. இந்த நிலப்பரப்பு முழுக்க வாழும் மக்கள் ஒரே மொழி பேசியதில்லை.மொழி, பண்பாடு, பருவநிலை, பழக்கவழக்கங்கள் என அனைத்திலும் முரண்பட்ட இந்த பெரும் நிலப்பரப்பை ஆங்கிலேயர் தனது துப்பாக்கி முனையின் மூலமாக இந்தியா என்ற ஒரு பெரும் நாடாக கட்டி எழுப்பினர்.


அதற்கு முன் இந்தப் பெரும் நிலப்பரப்பு வரலாற்றில் எப்போதும் இந்தியா என்று அழைக்கப்பட்டதில்லை. ஆங்கிலேயர் தனது அதிகார வசதிக்காக இந்தியா என்ற நாட்டை உருவாக்கி சென்னை, மும்பை, கல்கத்தா என அதிகார தலைநகரங்களை உருவாக்கினர்.
பலதரப்பட்ட மொழி பேசும் பண்பாடு பழக்கவழக்கங்கள் கொண்ட அப்போதே ஏறத்தாழ 20 கோடி மக்கள் தொகைக்கும் அதிகமான மக்கள் கூட்டத்தை கட்டி ஆள இந்தியா என்கின்ற ஓர்மை ஆங்கிலேயருக்கு தேவைப்பட்டது. ஆனால் இந்தியா என்கின்ற நாடு ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்ட போது நாமெல்லாம் இந்தியர் என்கின்ற உணர்வு அப்போது யாருக்கும் இல்லை என்பதுதான் மிக முக்கியமானது. ஆங்கிலேயர் எப்படி நிர்வாக வசதிக்காக இந்தியா என்கின்ற நாட்டை உருவாக்கினார்களோ, அதேபோல ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைக்க ‘இந்தியர்’ என்கின்ற அடையாளம் ஆங்கிலேய எதிர்ப்பாளர்களுக்கு அன்று தேவைப்பட்டது.


1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திரமான நாளுக்கு பிறகு, இந்தியாவை ஒரே நாடாக இந்திய அரசியலமைப்பு சட்டம் கூட கருதவில்லை என்பது தான் குறிப்பிடத்தக்கது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவை ஒன்றியங்களின் நாடு என்றுதான் குறிப்பிடுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு மூல காரணமாக அமைந்த இந்திய அரசியலமைப்பு சட்ட அமர்வு விவாதங்களின் போது கூட மொழிவழி மாநிலங்கள் பிரிவது குறித்து விவாதிக்கப்பட்டு இருக்கின்றன. சுதந்திர இந்திய நாட்டில் முதன்மையான ஆளுங்கட்சியான காங்கிரஸ் தனது ஒவ்வொரு பொதுத் தேர்தல் அறிக்கையிலும் மொழிவாரி மாகாணப் பிரிவினை நடைமுறைப்படுத்தப்படும் என வாக்குறுதியை அளித்தது.
1947 இல் இந்தியா விடுதலைப் பெற்ற ஒரு நாடாக அறிவிக்கப்பட்டாலும், மொழி உணர்வுகள், பல்வேறு பண்பாட்டு கலாச்சார விழுமியங்கள் இவற்றின் முரண்கள் காரணமாக மொழிவாரி மாநிலங்கள் தோன்றுவதற்கான மக்கள் உளவியல் தொடக்கத்திலிருந்தே இருந்தன. 1954 ல் தொடங்கப்பட்ட தெற்கெல்லை போராட்டம் என வரலாற்றில் அறிவிக்கப்பட்ட திருவிதாங்கூர் எல்லைப் போராட்டம் மொழி உணர்வுக்கு சரியான எடுத்துக்காட்டாகும். 1954 ஆகஸ்ட் 11 ஆம் தேதி தங்களை தாய்த் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையோடு போராடிய திருவிதாங்கூர் தமிழர்கள் 10 பேர் மலையாள காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.அதேபோல சித்தூர், திருத்தணி , கன்னியாகுமரி போன்ற எல்லையோர மாவட்டங்களிலும் போராட்டங்கள் வெடித்தன.


ஆனாலும் அப்போதைய ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி மொழிவழி மாகாணப் பிரிவினையில் அக்கறை காட்டாததோடு மட்டுமில்லாமல், தமிழர்களின் நலனுக்கு எதிராக நடந்து கொள்வதில் தீவிரமாக இருந்தது. அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த பழுத்த தேசியவாதியான காமராஜர்  ஒட்டுமொத்த இந்தியாவின் தானே அனைத்து பகுதிகளும் இருக்கப் போகின்றன என்ற பரந்த எண்ணத்தில் மொழிவழி மாகாணப் பிரிவினையில் அக்கறை காட்டாமல் இருந்துவிட்டார். தொடர்ச்சியான பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு 1957 ஆம் ஆண்டு படாசுக்கர் எல்லை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. பிரகாசம் தலைமையிலான ஆந்திரத் தலைவர்கள் ‘மதராஸ் மனதே’ என முழங்கி சென்னை ஆந்திராவோடு இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு போராடினார்கள்.ஐக்கிய கேரளம் வேண்டும் என்று கேரள பொதுவுடமை கட்சியின் தலைவர் உயர்திரு ஏகே கோபாலன் தலைமையில் மலையாளிகள் போராடி வந்தனர். தமிழக பொதுவுடைமை கட்சியின் தலைவர் தோழர் ஜீவா தேவிகுளம், பீர்மேடு தமிழ்நாட்டிற்கே சொந்தம் என அறிவிக்க , பொதுவுடமை கட்சியிலும் பிரிவினைகள் தோன்றின. திருவாங்கூர் கொச்சி போன்ற பகுதிகளில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளை கேரளாவோடு  இணைப்பதற்கு திராவிட இயக்கத்தின் தலைவராக இருந்த ஈவேரா ஒப்புதல் அளிக்க , அதை தமிழ்த் தேசிய அமைப்புகள் கடுமையாக எதிர்த்துப் போராடினர். 1960 ஆம் ஆண்டு தான் திருத்தணி தமிழ்நாட்டோடு தளபதி கே விநாயகம் தலைமையிலான போராட்டத்தால் இணைக்கப்பட்டது. மார்ஷல் நேசமணி, தளபதி கே விநாயகம், ம பொ சிவஞானம், உள்ளிட்ட எண்ணற்ற தலைவர்கள் எல்லை மீட்புப் போரில் தமிழகத்தின் எல்லைக் காக்க போராடினர்.  

ஆனாலும் தமிழர்களின் பரந்துபட்ட மனப்பான்மையின் காரணமாக தமிழகம் தனது பூர்வீக நிலத்தில் பலவற்றை இழக்க நேரிட்டது. கர்நாடகாவிலும் கொள்ளேகால் வனப்பகுதி உள்ளிட்ட பல பகுதிகளையும்,ஆந்திராவிடம் சித்தூர், நெல்லூர் மாவட்டங்களையும், கேரளா விடம் தேவிகுளம் பீர்மேடு, மூணாறு உள்ளிட்ட பல பகுதிகளையும் அன்றைய தமிழகத் தலைவர்களின் அலட்சியப் போக்கினாலும், திராவிட தேசிய அரசியல் கட்சிகளின் தமிழர் விரோத நிலைப்பாடுகளாலும் தமிழகம் இழந்தது.
திராவிட-தேசிய கட்சிகளின் தமிழர் விரோத மனப்பான்மையால் தமிழக எல்லைப் போராட்டம் முழுவதுமாக வெற்றி அடைய முடியாமல் பகுதி வெற்றியோடு தமிழர்கள் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.


1956 ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படும் அறிவிப்பு வெளியானது. தற்போதைய எல்லை படி சென்னை மாகாணம் என வழங்கப்பட்ட நிலப்பரப்பு தனித்த மாநிலமாகவே உருவானது. 


விருதுநகர் மாவட்டம் மண்மலை மேடு என்ற கிராமத்தை சேர்ந்த சங்கரலிங்கனார் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டுமென 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து தன் உயிரைத் துறந்தார். 1962 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய பாராளுமன்றத்தில் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையோடு கொண்டுவரப்பட்ட மசோதா தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 1964 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அப்போதைய சென்னை மாகாண சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட மசோதாவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்திமொழி எதிர்ப்பு போராட்டத்தின் காரணமாக ஆட்சிக்கு வந்த அண்ணா தலைமையிலான திமுக அரசாங்கம் 1968 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டும் மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்றியது.


முதன்முதலாக தமிழ்நாடு என்கிற மொழிவாரி மாநிலம் உருவான நாளான 1956 நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு நாள் என அறிவித்து  2019 அக்டோபர் 25 ஆம் தேதி தமிழக அரசு ஒரு அறிவிப்பு ஒன்றினை செய்தது. 
இந்த உலகில் வாழும் 12 கோடி தமிழ்த் தேசிய இன மக்களின் தாயக நிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இந்திய ஒன்றியத்தின் கீழ் தமிழ்நாடு ஒரு மாநிலமாக உருவாக்கப்பட்ட நாளான 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு நாளாக அறிவிக்கப்பட்டிருப்பது வரலாற்றுச் சிறப்பு கொண்டது. 2009 ஈழத்தில் நடந்த இன அழிப்பிற்கு பிறகு தாயகத் தமிழகத்தில் பொங்கியெழுந்த தமிழ் தேசிய உணர்விற்கு கிடைத்த வெற்றியாக தமிழ்நாடு நாள் அமைந்து உள்ளது.


கேரளா கர்நாடகா ஆந்திரா போன்ற மாநிலத்தவர்கள் தங்கள் மாநிலம் உருவான நாளை மிகப் பெரிய விழாவாக எடுத்து, தங்கள் மாநிலத்திற்கு என பொதுவாக இருக்கும் கொடியை அந்நாளில் ஏற்றி கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். இதுபோன்ற ஒரு உயர்வு நிலை தமிழகத்திற்கு ஏற்படாதா என எண்ணியிருந்த நிலைமையில், தமிழக அரசின் தமிழ்நாடு நாள் அறிவிப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
நாம் தமிழர் இயக்கத்தை நடத்திய ஐயா சி பா ஆதித்தனார் வடிவமைப்பில் ஏற்கனவே உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டு கொடி சில மாற்றங்களோடு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையிலான குழுவினரால் உருவாக்கப்பட்டு , இன்று பரந்துபட்ட தமிழர்களால் அது ஏற்றுக்கொள்ளப்பட்டு அதுவே தமிழ்நாட்டு கொடியாக பட்டொளி வீசி பறக்கிறது.
தமிழக அரசியல் கட்சிகளில் ‘தமிழ்நாடு நாள்’ கட்சியின் நிகழ்ச்சியாக கொண்டாடப்பட்டு தமிழ்நாட்டு கொடி ஏற்றப்பட வேண்டும் என்கிற அறிவிப்பினை வெளியிட்ட இந்திய தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட முதல் அரசியல் கட்சி என்கிற பெருமையை நாம் தமிழர் கட்சி பெறுகிறது. 


தமிழராய் பிறந்ததில் பெருமைகள் கொள்வோம்.நாம் தமிழராய் திகழ்வதில் பெருமிதம் கொள்வோம்

பாடு நிலாவே… தேன் கவிதை..

❤️

எனக்கு பார்க்கவே பரிதாபமாக இருந்தது. என் எதிரே அமர்ந்திருந்த சாந்தினி தன் அழுகையை கட்டுப்படுத்தவே முடியாமல் அழுதுகொண்டே இருந்தாள். உண்மையில் மானுட இனத்தின் அழுகை தனித்துவமானது. யார் அழுதாலும் அழுகை அவர்களை வயது குறைவானவர்களாக காட்டிவிடுகிறது. அழுகை என்பது சிறுவர்களுக்கான செய்கை என்பது போல ஒரு மனத்தடம் நம் மனதில் ஆழ பதிந்திருக்கிறது.துயர் மிகுந்து ஒருவர் அழும் விழிகளில் அவரின் பால்யத்தின் நிழல் படிந்து கொண்டே இருப்பதுதான் வாழ்வின் விசித்திரம்.சாந்தினியும் ஒரு சிறுமியைப் போல மாறி விட்டிருந்தாள்.அழுது அழுது அவளது கண்கள் வீங்கி இருந்தன. என்னோடு அமர்ந்திருந்த குமார் அவளது அழுகையை பொருட்படுத்தாமல் அலட்சியமாக இருப்பது போல வலிந்து காட்டிக்கொண்டது எனக்கு என்னவோ போல் இருந்தது. “நான் வேண்டுமானால் வெளியே இருக்கட்டுமா.. ? “என்ற எனது தயங்கிய கேள்விக்கு “சும்மா அனத்தாம உட்காருடா..” என உறுதியான குரலில் பதிலளித்தான் குமார்.

குமார் என்னோடு பள்ளியில் படித்தவன். பெங்களூரில் பணிபுரியும் போது மும்பையைச் சேர்ந்த சாந்தினியை காதலித்து திருமணம் செய்து கொண்டான். ஓரிரு வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்த அவர்கள் என்னவோ காரணத்தினால் பிரிய முடிவு செய்துவிட்டார்கள். குமார் பல காரணங்களை சொன்னான். சாந்தினியிடம் இருந்தது ஒரே ஒரு காரணம் தான். “குமாருக்கு என்னை பிடிக்கவில்லை.”அப்போது ஒரு இளம் வழக்கறிஞராக இருந்த எனது சட்ட ஆலோசனை கேட்கத்தான் இருவரும் என் வீட்டிற்கு வந்திருந்தார்கள். குமாருடன் அவனது பெரியப்பா வந்திருந்தார். நடிகர் வினு சக்கரவர்த்தி போல காட்சி அளித்த அவர் கடுகடுத்த குரலில் “சீக்கிரமாக செல்ல வேண்டும்..” என அவசரப்படுத்திக் கொண்டே இருந்தார்.சில வருடங்கள் காதலித்து இருந்திருக்கிறார்கள். ஓரிரு வருடம் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் பிரிவினை மட்டும் சில நிமிடங்களில் எடுக்கச் சொல்லும் குமாரின் பெரியப்பா எனக்கு மூர்க்கமான மனிதராக தெரிந்தார்.குமார் கிளம்ப தயாரானான். “சரி மாப்பிள்ளை.. நீ மீயூசுவல் டைவர்ஸ் பெட்டிஷன் தயார் செய். நாங்கள் திங்கட்கிழமை வந்து கையெழுத்து போடுகிறோம்..” என்றான். சாந்தினி “சார்.. உங்கள் போன் நம்பர் வேண்டும்.” என கேட்டாள். “அதுதான் எல்லாமே முடிந்துவிட்டதே.. எதற்கு அவனுடைய போன் நம்பர் ‌…” என குமார் அதிர்ந்து பேச.. நான் அமைதியாக எனது விசிட்டிங் கார்டை அவளிடம் கொடுத்தேன்.

அன்று இரவே சாந்தினி என்னை அழைத்தாள். போனில் ஒரே அழுகை.யாரோ சொந்தக்காரப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காகத்தான் குமார் இப்படி நடிக்கிறான் என சொல்லி அழுதாள். எனக்கு என்ன சொல்லி தேற்றுவது என்றே புரியவில்லை. எப்போதும் நேசிப்பதற்கு ஓராயிரம் காரணங்கள் தேவையாக இருக்கின்றன. ஆனால் வெறுப்பதற்கு எந்த காரணமும் தேவையில்லை. நோக்கம் மட்டும் இருந்தால் போதுமானது.”நீங்க சொல்லுங்க சார்..நான் அவசியம் டைவர்ஸ் பெட்டிஷனில் கையெழுத்து போடணுமா..?” என சாந்தினி கேட்டதற்கு என்னிடத்தில் பதில் இல்லை. “அது.. உங்க விருப்பங்க. ஆனால் இப்படி வெறுப்பவனோடு இனி எப்படி வாழ்வீர்கள்..?” எனக் கேட்டேன்.சாந்தினி அமைதியாக இருந்தாள். அதன் பிறகு நீதிமன்றத்தில் கையெழுத்துப் போட வருகையில் சாந்தினியை பார்த்தேன். தெளிவாகவும் ஏதோ ஒரு சிந்தனையோடும் அவள் இருப்பதாக தோன்றியது. அமைதியாக கையெழுத்து போட்டுவிட்டு அங்கிருந்து வேகமாக சென்று விட்டாள்.இதுபோன்ற விவாகரத்து வழக்குகளில் நீதிமன்றத்திலேயே கதறியழும் பல பெண்களையும், சில ஆண்களையும் நான் பார்த்திருக்கிறேன். வாழ்க்கை என்பது இத்தனை கடினமானதா.. ஒரு நேசிப்பின் முறிவு என்பது ஏறக்குறைய மறுபிறப்பு போல அமைந்துவிடுகிறதே.. என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். இந்த அனுபவங்களால் எனக்குள் திரும்பத் திரும்ப நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால் ‌…”எது அதிக இன்பம் தருகிறதோ.. அதுவே அதிகத் துன்பம் தரும்.”

❤️

சில மாதங்களுக்குப் பிறகு சாந்தினி அலைபேசியில் வந்தாள்.நீதிமன்ற வாய்தா தேதி உறுதிப்படுத்திக் கொள்ளவும், ஆர்டர் காப்பி எப்போது வாங்கிக் கொள்ளலாம் என்பதை அறிந்து கொள்ளவும் என்னோடு பேசுவதாக கூறினாள்.தற்போது தான் மும்பையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும், விடுதியில் தங்கி இருப்பதாகவும் கூறினாள்.நான் விவரங்கள் சொன்னதும் சரியாக அதே நாளில் வந்து மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகி தங்களது விவாகரத்தை உறுதிப்படுத்திக்கொண்டு சாந்தினியும், குமாரும் பிரிந்து போனார்கள்.நீதிமன்றத்தில் காத்திருந்தபோது சாந்தினி வாக்மேனில் ஏதோ பாடல்களை கேட்டவாறு சற்று துணிவாக அமர்ந்திருந்தது வழக்கமான அந்த நீதிமன்ற சூழலுக்கு பொருந்தாது போல எனக்குத் தோன்றியது.அன்று இரவு மீண்டும் சாந்தினி அழைத்தாள்.

இந்த முறை சற்று தெளிவாக பேசினாள்.”நீங்க சொன்ன பிறகு தான் சார் புரிஞ்சிச்சு. ஏன் பிடிக்காதவங்களோடு வாழணும்.. ? நம்பிக்கையும் அன்பும் இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கை சார்..?”என்றெல்லாம் அவள் பேசிக்கொண்டே போனாள்.”எப்படி குறுகிய காலத்தில் எவ்வாறு மீண்டு வந்து இருக்கிறீர்கள்..?” என கேட்டேன்.”நிறைய ஊர் சுத்தினேன் சார். நிறைய பாட்டு கேட்டேன். குறிப்பா உங்க ஊர் எஸ்பிபி சாங்ஸ். அந்தக் குரல் எப்போதுமே லைட்டா இருக்கும் சார். அதே சமயத்தில் கம்பீரமாகவும் இருக்கும். எவ்வளவு கடினமான பாட்டா இருந்தாலும், எஸ்பிபி அதை அலட்டிக்காம லைட்டா பாடுவார் சார்.அந்தக் குரலே ஒரு மெசேஜ் சார்.எதையும் லைட்டா எடுத்துக்கணும் எனச் சொல்வது போல இருக்கும்.”எனக்கு ஒரே ஆச்சரியம். எஸ்பிபி தமிழ் திரைப்பட பாடல்கள் நிறைய பாடி இருக்கிறார் என தெரியும். ஒரு சில ஹிந்தி பாடல்கள் பாடியிருக்கிறார் என அப்போதுகேள்விப்பட்டும் இருந்தேன். ஆனால் ஒரு தீவிரமான எஸ்பிபி ரசிகை தமிழகத்தில் இல்லாமல் மும்பையைச் சேர்ந்த ஒரு பெண் என என்னால் நினைத்துக்கூட பார்க்கவில்லை.ஆனால் சாந்தினி பேசிக்கொண்டே போனாள். “ஹம் ஆப் கே ஹைன் கோன்..படத்தில் எல்லா பாட்டும் எஸ்பிபி தான் பாடி இருப்பார். அதேபோல “ஏக் துஜே கேலியே” படத்தில் எல்லா பாட்டும் எஸ்பிபி தான் பாடியிருப்பார்.

இன்னைக்கு கோர்ட்ல கூட நான் இருந்தபோ “ஹம் ஆப் கே ஹைன் கோன்..” பாட்டை தான் சார் கேட்டுக்கொண்டிருந்தேன் என்றாள் அவள். விவாகரத்து வாங்க வந்திருந்த அவள் கேட்டுக்கொண்டிருந்தது திருமணக் கொண்டாட்டத்தை பற்றிய படமான “ஹம் ஆப் கே ஹைன் கோன்” படத்தின் பாடலை என்பதுதான்‌ சற்று வினோதமாக இருந்தது.

❤️

“எஸ்பிபி” என நம் அனைவராலும் அழைக்கப்பட்ட திரு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் சுமார் 42 ஆயிரம் திரை இசைப் பாடல்களைப் பாடி இருப்பவர். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட எஸ்பிபி 1946 ஆம் வருடம் ஜூன் 4 இல் ஆந்திர மாநிலம் கொகேணாட்டம் பேட்டையில் பிறந்தார். இயற்பெயர் ‌ சீறீபதி பண்டிதரதயுல பாலசுப்பிரமணியம். பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசன் நடிப்பில் வெளிவந்த சாந்தி நிலையம்(1969) படத்தில் “இயற்கை என்னும் இளைய கன்னி..”என்று எஸ்பிபி பாடிய பாடல் தான் அவர் பாடிய முதல் பாடல். சிறந்த பாடகருக்கான தேசிய விருதை ஆறு முறை வென்றிருக்கும் அவர் 60 படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பணிபுரிந்திருக்கிறார்.எஸ்பிபி பாடகரான புதிதில் தமிழ்த் திரை உலகில் டி.எம் சௌந்தரராஜனின் கொடி பட்டொளி வீசி பறந்து கொண்டிருந்தது. அழுத்தம் திருத்தமான தெளிவான உச்சரிப்பிற்கு பேர்போன டிஎம்எஸ் குரலில் இருந்து எஸ்பிபி முற்றிலுமாக வேறுபட்டவர்.மொழி அழகின் வளைவு நெளிவுகளோடு தன் குரலை இழைய விட்டு தன் பாடும் திரையிசைப் பாடலை வேறு வடிவத்திற்கு கடத்தி சென்று எல்லையில்லா பேரின்பத்தை கேட்போருக்கு அளித்தவர் எஸ்பிபி.இவரின் சக பாடகராக திகழ்ந்த ஜேசுதாஸ் கொஞ்சம் கடினத்தன்மை வாய்ந்த குரல் கொண்டவர். ஆனால் எஸ்பிபி ஒரு மெல்லிய கோடு போல எத்தனை கடினமான இசைக் கோர்வை களாக இருந்தாலும் ‌ அதனோடு ஒட்டி இணைந்து பாடுவதில் தேர்ந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, மராத்தி என பல இந்திய மொழிகளில் பாடியவர்.எஸ்பிபி தன் வாழும் காலத்தில் இசையமைப்பாளர்களின் பாடகராக திகழ்ந்தார்.தன் குரலால் ஒரு பாடலை எவ்வளவு மேம்படுத்தி தர முடியும் என்கின்ற மேதமை அவரிடம் இயல்பிலேயே இருந்தது.கடந்த 15 வருடங்களுக்கு முன்னால் “லட்சுமண்-ஸ்ருதி” சார்பில் கும்பகோணத்தில் நடந்த கச்சேரி ஒன்றினில் எஸ்பிபி அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

அந்த நிகழ்ச்சிக்கு நான் தான் சட்ட ஆலோசகராக இருந்தேன். அதனால் நிகழ்ச்சி முடிந்து இரவு உணவு அவரோடு சாப்பிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஐஸ்கிரீம் உள்ளிட்ட எதையும் மீதம் வைக்காமல் அவர் ‌ சாப்பிட்டு மகிழ்ந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இப்படி எல்லாம் குளிர்ச்சியாக சாப்பிடுகிறீர்களே.. உங்கள் குரலுக்கு எதுவும் ஆகாதா..?” எனக் கேட்டேன். “இதுவரை அப்படி ஆனதில்லை. ஏன் அப்படி ஆகவில்லை என நானும் ஆராய்ந்ததில்லை…” என சொல்லிவிட்டு சிரித்தார்.அந்த இசை இரவில் அவர் பாடும் நிலாவே பாடிய போது.. எனது பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு வயதான அம்மா கண்கலங்கி நெகிழ்ந்து கூறியது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது.”இவன் பாடும் போதெல்லாம் அந்த நிலாவே வானத்திலிருந்து இறங்கி வந்து கேட்கும் போல..”உண்மைதான். எஸ்பிபி தன் பாடும் பாடலுக்கு அவ்வளவு நேர்மை செய்யக்கூடிய மனிதராக திகழ்ந்தார். “மலையோரம் வீசும் காற்று..” என அவர் பாடும் போதெல்லாம்‌ நம் காதோரத்தில் மலையோரம் வீசுகிற காற்று தொட்டுத் தீண்டியது. தொலை தூரப் பயணங்களில் காரில் செல்லும் போது மௌன ராகம் படத்தில் வருகிற “மன்றம் வந்த தென்றலுக்கு..”பாடலைக் கேட்கும்போதெல்லாம் நாம் பயணம் செய்யும் கார் ஏதோ மிதப்பது போல உணர்வை நாம் அடைந்திருக்கிறோம். அவர் பாடிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் சிப்பிக்குள் முத்து படத்தில் “துள்ளித் துள்ளி நீ பாடம்மா சீதையம்மா..” என்ற பாடல். இதன் தெலுங்கு வடிவம் மொழி புரியாவிட்டாலும் நமக்கு அது இன்னும் நெருக்கமாக இருக்கும். அதுதான் மூல வடிவம். வெறும் பாடலாக மட்டும் கேட்பு வாய்ப்பாக மட்டும் இல்லாமல் அதை பேரின்ப அனுபவமாக அரை நூற்றாண்டுகாலம் மாற்றியவர் எஸ்பிபி அவர்கள். அமேசானின் “அலெக்ஸ் இன் வொண்டர்லாண்ட்” நிகழ்வில் கூட நிகழ்கலை கலைஞர் அலெக்ஸ் சொன்னது போல தமிழில் புகழ்பெற்ற “மாசி மாசம் ஆளான பொண்ணு..” என்ற பாடலை தெலுங்கில் எஸ்பிபி குரலில் கேட்டவர்கள் புண்ணியவான்கள்.எங்களது எத்தனையோ இரவுகள் அவரால் தான் முழுமை அடைந்தன‌. எங்களது துயரங்கள், இழப்புகள், பிரிவுகள் என மனித வாழ்வின் இயல்பான வலிகளில் இருந்து மிக்கவராக அவரது குரல் விளங்கியது.உண்மையிலேயே சொல்கிறேன்.எங்கள் தலைமுறையின் ஈடு இணையற்ற பாடகர் அவர்தான்.

❤️

இன்று தொலைக்காட்சித் திரைகளில் எஸ்பிபி மரணமுற்ற செய்தி கேட்ட கேட்டபோது எனக்கு ஏனோ சாந்தினியின் நினைவு வந்தது. அவளது அலைபேசி எண்ணிற்கு முயற்சி செய்தபோது அது சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது.விவாகரத்து நாளின் போது கூட அழாமல் அவளை காப்பாற்றிய எஸ்பிபி இன்று அவளை கலங்கி அழ வைத்திருப்பார் என நான் யோசித்த போது…எஸ்பிபி எதிரே இருந்த தொலைக்காட்சி திரையில் பாடத் தொடங்கினார்.

“போகும் பாதை தூரமே..வாழும் காலம் கொஞ்சமே..ஜீவ சுகம் பெற ராக நதியினில்நீ நீந்தி வா..இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேனே..கேளாய் பூ மனமே..”

❤️

துரோகத்தின் வழித்தடங்கள்..

துரோகம் என்பது என்ன…. அது ஒரு வசைச் சொல்லா, கடந்த காலத்தின் அழிக்கமுடியாத காய வடுவா.., யாரோ ஒருவர் நம்மீது மாறாத வலியை சுமத்தி வைத்துவிட்டு பெற்றுக்கொண்ட சாபத்தின் பாடலா.. நம்பி நிற்பவர் சற்றும் எதிர்பார்க்காத தருணத்தில் அவர் நிழலில் நின்றுக்கொண்டு நேசித்து நம்பிக்கை செலுத்தும் உடன் இருப்பவர் குத்தும் கத்தியா.. என்றால் இவை அனைத்தும் தான் என சொல்லத் தோன்றுகிறது.வரலாற்றின் பல பக்கங்கள் துரோகத்தின் நிழலால் இருண்டு கிடக்கின்றன. ஏதோ ஒரு ஆதாயம் கருதி இழைக்கப்படும் துரோகம் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வந்து விதிக்கப்படும் சாபமாக மாறி துரத்தி வருவதை நாம் காண்கின்றோம்.துரோகத்தை ஆங்கிலத்தில் Betrayal என்று அழைக்கிறார்கள். அதற்கு ஆக்ஸ்போர்டு அகராதி “the action of betraying one’s country, a group, or a person; treachery.” என விளக்கம் தருகிறது. இதுகுறித்து தமிழ் அகரமுதலியில் தேடியபோதுராஜ துரோகம், சாமித் துரோகம், குரு துரோகம், இனத் துரோகம், பிரித்துரோகம் என ஐவகை துரோகங்களை நம்மால் காண முடிகிறது. துரோகம் என்பது ஒருவகை ஏமாற்றுகையின் வடிவத்தைத் தான் கொண்டிருக்கிறது என்றாலும், இது அதைவிட கொடியதான ஒன்றாக விவரிக்கப்படுகிறது.எதையும் மறக்க முடிகிற, கடக்க முடிகிற மனிதனின் ஆன்மா துரோகத்தின் வலியை மட்டும் கடக்கப் படாதபாடு படுகிறது. அது மகத்தான நம்பிக்கையின் மீது விழுந்த இடி. அந்த நம்பிக்கை தகர்வில் இருந்து வெகு சாதாரணமாக மனிதமனம் மீள மறுக்கிறது.சில வருடங்களுக்கு முன்பாக ஆங்கிலேயர்களிடம் கட்டபொம்மனை காட்டி கொடுத்த புதுக்கோட்டை ஜமீன் எட்டப்பனின் வாரிசுகள் அளித்திருந்த பேட்டி ஒன்றை வாசிக்க நேர்ந்தது. இன்னமும் அந்த துரோகத்தின் நிழலில் இருந்து தங்களது சந்ததிகள் தப்ப முடியாத வலியினை அவர்கள் உருக்கமாக தெரிவித்திருந்தார்கள். இன்னமும் தங்களை சொந்தபந்தங்கள் சேர்த்துக் கொள்ளாமல் நிகழ்வுகளில் புறக்கணிக்கிற வேதனையை அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.எத்தனையோ தலைமுறைகளுக்கு முன்னால் நடந்த ஒரு துரோகச் செயல் பல தலைமுறைகளை தாண்டியும் அந்தச் செயலுக்கு சிறிதும் சம்பந்தமில்லாத சந்ததிகளை கூட விடாமல் துரத்தி வருவது என்பது வரலாற்றின் விசித்திரம்.பண்டைய கிரேக்க சாம்ராஜ்யத்தின் மாபெரும் மன்னன் ஜூலியஸ் சீசர் மனித இனத்தின் நாட்காட்டியையே மாற்றியமைத்தவர். அவரால்தான் ரோமன் காலண்டர் மாற்றியமைக்கப்பட்டது. எல்லா இடங்களிலும் தனது சிலையை நிறுவ சொன்ன சீசர் , நாணயங்களிலும் தன் உருவத்தை பதித்தார். அதற்கு சொன்ன விளக்கம்தான் “உன் தகுதியை நீயே உரக்கச் சொல். பிறருக்காக காத்திருக்காதே”.அப்படிப்பட்ட ஜூலியஸ் சீசர் மீது கடுமையான போட்டி, பொறாமைகள் காரணமாக பலருக்கும் பகை ஏற்படுகிறது. கிரேக்கத்தின் உயரிய சபையான செனட் சபையின் கூட்டம் நடக்கும்போது அங்கே இருந்த பல பகைவர்களால் ஜூலியஸ் சீசர் கத்தியால் குத்தப்படுகிறார். தன் மகன் போல நேசித்த புரூட்டஸிடம் ஓடிச்சென்று அவன் காப்பாற்றுவான் என நம்பி நிற்க, அவனும் மறைத்து வைத்திருந்த ஒரு கத்தியால் சீசரை குத்த அப்போது வலியோடு ஜூலியஸ் சீசர் சொன்ன வார்த்தைதான் “யூ டூ புரூட்டஸ்..”(you too Brutus..?)இதை சீசர் சொன்னாரோ, சொல்லவில்லையோ.. என்று நமக்குத் தெரியாது. ஆனால் சீசரின் வரலாற்றை நாடகமாக படைத்த ஷேக்ஸ்பியர் தனது வசனத்தில் “யூ டூ புரூட்டஸ்..” என்கிற சொல்லாடலை பயன்படுத்தியபோது அது உலகத்திற்கு பொதுவான சொல்லாக மாறியது.சங்க இலக்கியங்களில் துரோகத்தை பற்றிய ஒரு முக்கியமான பாடல் ஒன்று உண்டு . கள்ளூர் என்ற ஊரில் ஒருவனால் காதலிக்கப்பட்டு துரோகம் இழைக்கப்பட்ட இளம்பெண் ஒருவள் ஊரின் அவையிடம் முறையிடுகிறாள். அவளது முறையீட்டை ஏற்றுக்கொண்ட ஊரவை காதலனை விசாரிக்கிறது. இந்தப் பெண்ணை தான் விரும்பவே இல்லை உறுதிப் பாடாக மறுக்கிற காதலனின் மறுப்பு பொய்யென சாட்சிகள் மூலம் உறுதி செய்கிறது. அந்த ஆடவன் குற்றவாளி என சபை அறிவித்து மூன்று கிளைகளாகப் பிரிந்து செல்கிற மரக்கிளைகளில் அவனை கட்டி வைத்து அவன் தலையில் சாம்பலை கொட்டி தூற்றிப் பேசிய தண்டனையை பின்வரும் பாடல் மூலம் நாம் அறியலாம்.”தொல்புகழ் நிறைந்த பல்பூங் கழனிக்கரும்பமல் படப்பைப் பெரும்பெயர்க் கள்ளூர்த், திரு நுதல் குறுமகளணி நலம்வவ்விய அறனிலாளன் அறியே னென்ற திறனில் வெஞ்சூளரிகரி கடாஅய், முறியார் பெருங்கிளை செறியப் பற்றி நீறு தலைப்பெய்த ஞான்றை வீறுசாலவையத்து ஆர்ப்பினும் பெரிதே”(அகம் 256)சீவலப்பேரி பாண்டி என்கின்ற திரைப்படம் தென் மாவட்டத்தில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. ஜூனியர் விகடன் இதழில் 1994 ஆம் ஆண்டு செளபா என்றழைக்கப்பட்ட சௌந்தரபாண்டியன் எழுதிய வரலாற்று உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்துத்தான் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது.தன் சாதியை சேர்ந்த உறவுக்காரர்களின் அவதூறுகளை நம்பியும், தன் எதிர்காலம் குறித்து வழங்கப்பட்ட ஆசை வாக்குறுதிகளை நம்பியும் தன் மீது மிகுந்த மரியாதையும், பாசமும் வைத்திருந்த ‘கிராம முன்சீப்’ பை அவர் எதிர்பார்க்காத நேரத்தில் கொலை செய்து விடுகிறார். பிறகு சிறை வாழ்க்கையில் அவர் வாடும் போது தான் தனக்கு வாக்குறுதி அளித்த பெரிய மனிதர்களின் துரோகங்கள் தெரியவருகிறது. சிறையிலிருந்து தப்பிக்கின்ற பாண்டி தன்னை ஏமாற்றியவர்களை வெட்டி சாய்த்துவிட்டு இறுதியாக போலீசாரால் சுட்டுக் கொல்லப்படுகிறார். வாழ்நாள் முழுக்க துரோகத்தின் நிழல் சீவலப்பேரி பாண்டியை ஒரு வெறி பிடித்த மிருகம் போல துரத்திக்கொண்டே இருந்தது.எல்லாவற்றையும் தாண்டி துரோகம் ஒரு மாபெரும் குற்றமாக வலியாக ஏன் கருதப்படுகிறது என்றால்.. நாம் நம்பிக்கை கொண்டு நேசிப்பவர்கள் இடத்திலிருந்து துரோகம் பிறக்கிறது. ஒரு வகையான நேசிப்பின் முறிவு போல துரோகத்தின் பாடல் எப்போதும் இருண்மையாகவே இருந்து வருகிறது.தமிழ் திரைப்படங்களில் துரோக உணர்ச்சியை மையமாக வைத்து பல திரைப்படங்கள் வெளிவந்து இருக்கின்றன. அதில் ரோசாப்பூ ரவிக்கைக்காரி மற்றும் சுப்பிரமணியபுரம் என்கின்ற 2 திரைப்படங்கள் மிக முக்கியமானவை.குறிப்பாக ரோசாப்பூ ரவிக்கைக்காரி கணவன் மனைவிக்கு இடையிலான உறவின் ஊடலாக நிகழ்ந்த துரோகத்தை பற்றி விரிவாகப் பேசுகிறது. அதற்கு இணையாக நட்பின் ஊடாக நிகழ்ந்த துரோகத்தைப் பற்றி சுப்பிரமணியபுரம் குறிப்பாக பேசுகிறது. இரண்டிலும் துரோகம் செய்தவர்கள் இறந்து போகிறார்கள். ரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்படத்தில்கணவனுக்கு துரோகம் செய்த இளம் மனைவி பிற ஆடவன் ஒருவனோடு தான் இருப்பதை நேரடியாக பார்த்துவிட்ட கணவனை எதிர்கொள்ள முடியாமல் மிகுந்த குற்ற உணர்ச்சியில் தன்னைத்தானே மாய்த்துக் கொள்கிறாள். அதேபோல சுப்பிரமணியபுரம் திரைப்படத்தில் நண்பர்களுக்கு துரோகம் செய்த ஒருவனை அந்தக் கும்பலில் மிஞ்சி இருக்கிற ஒரு மாற்றுத்திறனாளி ஒருவன் கொலை செய்து பழி தீர்ப்பான்.துரோகம் தான் கொடிய பாவம். “பாவத்தின் சம்பளம் மரணம்” என்கிறது பைபிள்.கடவுளின் மைந்தனான இயேசுநாதர் மிகப் புனிதமானவர். கருணை மிக்கவர். எளியவர்களை பார்த்தால் இரக்கம் கொள்பவர். ஆனால் அவருடைய நெருங்கிய சீடனான யூதாஸ் அப்படிப்பட்டவன் அல்ல. யூதாஸின் பணத்தாசை இயேசு நாதரை காட்டிக்கொடுக்க வைக்கிறது.கெத்சமனே என்ற இடத்தில் இருந்த தோட்டத்தில் நடந்த இரவு விருந்தில் இயேசு தனது சீடர்களின் மீதான தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாக அவர்களது கால்களை கழுவி தூய்மைப்படுத்தி பெருமை செய்கிறார். இயேசுவை கைது செய்ய தேடி வந்த பரிசேயர் என்றழைக்கப்பட்ட காவலர்களிடம் யூதாஸ் இயேசுவை அடையாளம் காட்ட அவரை முத்தமிட்டுக் காட்டிக் கொடுக்கிறான்.இயேசு அவனைப் பார்த்து கேட்ட இறுதி கேள்வி ” மனுஷ குமாரனை முத்தத்தின் மூலமாக காட்டிக் கொடுக்கிறாய்..?(luk 22:48)யூதாஸ் அளித்த அந்த முத்தம் என்பது இயேசுநாதரின் தாடையோடு தாடை வைத்து விசுவாசத்தின் சின்னமாக அளிக்கப்பட்ட முத்தமாக இருந்தாலும் அதன் உள்நோக்கம் துரோகத்தின் விஷம் நிரம்பியிருந்தது.இயேசு கொடுமைப்படுத்தப்பட்டு சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்படுவதை காண சகிக்காமல் குற்ற உணர்ச்சியில் யூதாஸ் தற்கொலை செய்துகொண்டான் என பைபிள் கூறுகிறது.நேர்மையான எதிரிக்கு என்றுமே வரலாற்றில் ஒரு வசீகரம் இருக்கிறது. ஆனால் துரோகி மட்டும் எக்காலத்திலும் புறக்கணிக்கப்படுகின்றவனாக மாறிவிடுகிறான். இதிகாச நாயகர்களின் எதிரிகளாக இருந்த இராவணன் மற்றும் துரியோதனும் கூட கதாநாயகர்கள்தான். ஆனால் ராமாயணத்தில் விபீஷணன் கதாபாத்திரம் துரோகத்தின் வடிவமாக இன்றளவும் தூற்றப்பட்டு கொண்டிருக்கிறது.மகாபாரதத்தில் துரோணருக்கு கேட்கும் விதமாக தருமன் “அவருடைய மகன் அஸ்வத்தாமா இறந்துவிட்டான்”(ஆனால் இறந்தது அஸ்வத்தாமா என்ற ஒரு யானை) என்று உதிர்த்த இரு பொருள் கொள்ளும் விதமான ஒரு பொய் துரோகத்தின் சாயல் உடையது. அதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த துரோணர் மரணம் அடைகிறார். இத்தனைக்கும் துரோணர் தருமனின் ஆசிரியர்.அறத்தின் சாயலாக நின்று கடைசி வரை களத்தில் போராடிய தேசியத் தலைவர் பிரபாகரன் என்ற சொல் இருக்கும் வரையில் அதற்கு எதிர்ப்பதமாக துரோகச் சின்னங்களாக “கருணாக்கள்” என்கின்ற பெயர்களும் உச்சரிக்கப்பட்டு கொண்டேதான் இருக்கும்.”நேர்மையாக இருந்து விடு.. நிம்மதியாக தூங்கி விடலாம்.”என்கிறது ஆப்பிரிக்க பழங்குடிகளின் பாடல் ஒன்று.அதே பாடலில் விசித்திரமாக ஒரு வரி வருகிறது.துரோகத்திற்கு இமைகள் இல்லை.அப்படி என்றால்.. துரோகம் கொண்ட ஆன்மா விழி மூடி தூங்க முடியாது, என்பதை தான் “இமைகள் இல்லை” என கவித்துவமாக சொல்லியிருக்கிறார்கள்.இறுதியாக என் துருவனின் “அடர்பச்சை” நூலிலிருந்து துரோகம் பற்றிய சில வரிகள்..”கொஞ்ச நேரம்கரையிலேயேநடந்திருந்தபோதுஉப்புக் காற்றில் அவன் முதுகுவலிக்கத்தொடங்கியது.அத்தனையும் கட்டிப் பிடித்தபடியேகுத்தப்பட்ட தழும்புகள்.”

கடலோடு.. உரையாடு.

♥️

ஒரு இளவேனில் காலத்தின் பின் மதிய நேரத்தில் கடலை பார்க்கப் போவோம்‌‌ என அவள் திடீரென கேட்டபோது ஏன் எதற்கு என தோன்றாமல் உடனே கிளம்பிவிட்டேன். சில அழைப்புகள் திரும்ப இயலா ஒற்றையடி பாதை போல. ஏற்பதைத்தவிர வேறு எதுவும் வழியில்லை.

எங்கோ தொலைதூரத்தில் கடலோசை கேட்கின்ற திசையில் நாங்கள் பயணிக்கத் தொடங்கினோம்.

இங்கேயே எனக்கு அலைகளின் ஒலி கேட்கிறது என்றாள்.

எனக்கும் அலைகளில் கால் நனைக்காமலே கால்கள் நனைந்து விட்டது போல ஒரு உணர்வு.

உப்பினை சுமந்து உலர்ந்து திரியும் காற்றின் கரம்பிடித்து சென்றோம்.

சில மணி நேரங்களில் கடல் எங்கள் காலடிகளுக்கு சில அடி தூரத்தில் அலைபாய்ந்து கொண்டிருந்தது.
மின்னிய கண்களோடு ததும்பிக் கொண்டிருந்த அந்த கடலை பார்ததுக்கொண்டிருந்தவள் சட்டென என்னை இறுக்கி கட்டிப்பிடித்துக் கொண்டாள்.

ஒரு நீரலைப் போல அவள் மாறி இருந்தாள். அவள் விழிகள் முழுக்க இளநீலம் பரவி எதிரே விரிந்து கிடக்கும் கடலின் நகலாக அவள் மாறி இருக்கிறாள் என எனக்குத் தோன்றியது.

அவளை அணைத்த அப்பொழுதில் தான் காதலலை நிரம்புகிற தேநீர் குவளையாக நானும், என்னுள் நிரம்புகிற, தாகம் மிக்க என் ஆன்மாவின் வடிவத்திற்கு ஏற்றாற் போல் வார்த்துக்கொள்ளும் நேசத்தின் நீராக அவளும் மாறிவிட்டாள் என்பதை புரிந்து கொண்டேன்.

நீர்மையும், நடுக்கடல் ஆழமும் , அளக்க முடியா அமைதியும், எப்போதும் பெண்களுக்கு உரியவை. எனவேதான் கடலும் ஒரு பெண் என்று
அறிந்ததெல்லாம் புத்தகங்களில் மட்டும் காணப்படும் பொய்யழகு அல்ல, உண்மையின் தரிசனம் எனத் தெரிந்துகொண்டேன்.

♥️

எப்போதும் பார்த்தாலும் கடல் மட்டும் பார்க்கப் பார்க்க புதிதாகவே இருக்கிறது என்று முணுமுணுத்தாள்.

ஏறக்குறைய உன்னைப்போல என நான் அக்கணம் நினைத்ததை அவளிடம் சொல்லவில்லை.

ஏதோ யோசித்தவாறே.. உள்ளங்கையில் மணலை எடுத்து கொட்டிய வாறே..
இந்த மணல் துகள்களை என்றாவது எண்ண வேண்டும் என யோசித்து இருக்கிறாயா என விசித்திரமாக கேட்டாள்.

இந்த உலகத்தில் காதல் கதைகளை நான் கணக்கெடுப்பதில்லை என்றேன்.

சிரித்துக்கொண்டாள்.

சிறிது நேரம் கழித்து எப்போதும் ஏன் கடல் ஆச்சரியமாகவே இருக்கிறது என விழிவிரிய கேட்டாள்.

ஆழம் மிக்க எதுவும் ஆச்சரியமாக தான் இருக்கும். பெண்களைப் போல.
என்றேன்.

பெண்கள் அலையடிக்கும் கடல் என்றாலும் ஆண்கள் என்னவோ கொந்தளிக்கும் எங்கள் மீது எப்படியோ தத்தளித்து படகோட்டி விடுகிறீர்கள் என நக்கலாக சற்றே கடுப்புடன் சொன்னாள்.

நான் அமைதியாக கடலைப் பார்த்துக் கொண்டு இருந்தேன். சில விஷயங்களுக்கு பதில் அளிக்கக் கூடாது. பெண்கள் ஒன்றிலிருந்து வேறொன்றை உருவாக்குவதில் தேர்ந்தவர்கள். சிறிய அலைக்கு பின்னால் வரும் பேரலை போல.

ஏதோ அவள் விழிகள் கலங்கி இருந்ததாக எனக்குத் தோன்றியது.

என்ன ஆயிற்று எனக் கேட்டதற்கு எப்போதும் உலகத்தில் பெண்கள் அனைவருக்கும் இருக்கும் ஒரே பதிலை அவளும் ஒருவித இறுக்கத்தோடு சொன்னாள்..

“ஒன்றுமில்லை”.

அந்த ஒன்றும் இல்லை என்பதில்தான் ஓராயிரம் இருக்கின்றன என்பதை ஒவ்வொரு ஆணும் புரிந்துதான் வைத்திருக்கிறான்.

எங்களிடையே ஒரு உருகா மௌனம் ஒன்று பாதரசம் போல மிதந்துகொண்டிருந்தது

நீ வர வர அதோ அந்த பாறை போல இறுகி விட்டாய் என்றாள்.

நீ கவனித்தாயா.. அப்போதும் உன் கால்களை உரசும் அலைகளை தான் நான் தழுவிக் கொண்டு இருக்கிறேன் என்றேன்.

நிமிர்ந்து பார்த்தாள்.

ஏதேதோ பேசி சொற்களின் மயக்க கூட்டில் என்ன வைத்திருக்கிறாய் என தீவிரமான குரலில் சொன்னாள்.

அமைதியாக இருந்தோம்.

இவையெல்லாம் சொற்களை வைத்துக்கொண்டு நான் நிகழ்த்தும் மாய விளையாட்டு என நீ நம்புகிறாயா.. என நான் அவளிடம் உயிர் துடிக்கும் வேதனையோடு கேட்டபோது சில நொடிகளுக்கு அலைகள் எங்கள் பக்கம் வரவில்லை.

பதில் அளிக்காமல் அவள் அமைதியாக இருந்தாள்.

உன்னிடம் நான் சொல்கிற ஒவ்வொரு சொல்லுக்கும் பின்னாலும் உண்மையின் உதிரம் வழிகிற அசலான இதயம் ஒன்று வலியோடு அசைந்து கொண்டிருக்கிறது என்றேன்.

என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

எதிர்பார்க்காத தருணம் ஒன்றில் அலை வீசும் காற்றில் மிதந்து வந்த நீர்த்துளி ஒன்று எங்கள் முகத்தில் பட்டு தெறித்து சிலிர்ப்பை உண்டாக்கிய அந்த நொடியில் எதையோ உணர்ந்தவள் என் தலையை மெதுவாக கோதினாள்.

அடுத்தடுத்து வருகிற இரு அலைகள் போல.‌. உன் உடன் இருக்கும் போது அளவற்ற மகிழ்ச்சியையும், பிரிவின் துயரில் அளவற்ற கண்ணீரையும் சுமந்தே அலைகிறேன் என்று ஏக்கத்துடன் சொன்னாள் அவள்.

அவள் கரங்களை மென்மையாய் பற்றினேன்.

அந்த நேரத்தில் வீசுகிற காற்றுக்கு லயம் பிடித்து அலைபாய்ந்து கொண்டிருந்த அவளின் கூந்தலை நான் கண்டேன். எப்போதும் அதை ஒரு கடலாகத்தான் நான் உணர்ந்திருக்கிறேன். அதன் கருநிற அலைகளில் எத்தனையோ முறை தொலைந்து இருக்கிறேன்.

தனித்திருக்கும் போது நாங்கள் பித்துப்பிடித்து ஒருவரைப் பற்றி ஒருவர் நினைத்து மகிழ்ந்து இருந்தது எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நினைவுக்கு வந்தன.

நான் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்பதைப் பற்றி அவள் சரியாக உணர்ந்து விட்டாள் என்பதை சிவப்பேறுகிற அவளது கன்ன கதுப்புகள் காட்டின.

ஏதோ நினைத்துக்கொண்டே பேச்சை மாற்றுவதாக கருதி.. இந்தக் கடலுக்கு என்ன பெயர் என ஒரு சிறுமி போல அவள் கேட்டாள்.

இந்த கணத்தில் இந்தக் கடலுக்கு உன் பெயர்தான் என்று அவள் முகம் பார்த்து சொன்ன போது..

அவள் அவளுக்குள் ஒரு கடலை உருவாக்கிக்கொண்டு, ஏற்கனவே ஒரு கடலாகி போயிருந்த என் மீது வெட்கத்துடன் சாய்ந்துக்கொண்டாள்.

கடல் பார்க்க சென்ற எங்களை.. கடல் பார்த்துக்கொண்டிருந்தது.

❤️

மணி செந்தில்‌.

❤️

காட்சித்துளிக்கு கிருஷ் நடேஷ்க்கும்..
கவிதை அலைக்கு அண்ணன் அறிவுமதிக்கும்,
இசைக்கடலுக்கு இசைஞானிக்கும்
ஈர முத்தங்கள்.

❤️

அந்தியொன்றின் நீலநிறப்பூ.

 

[youtube]https://www.youtube.com/watch?v=pQj12Y7XPno[/youtube]

நிகழ்காலம் என்ற ஒன்று இருப்பதாலேயே இறந்தகாலம் இறந்து விடுவதில்லை. நினைவுகள் ஊறித்திளைக்கும் ஆன்மாவில் தான்
வேர்க்கொண்டு மலர்ந்த பூக்கள் என்றும் வாடுவதில்லை. 
அப்படித்தான் ஒரு மழைக்கால அந்தியில் ஒரு மஞ்சள் நிற உடையில் எப்போதோ நான் தவறவிட்ட அவள் கடந்த காலத்தின் நீல நிறப் பூவை எடுத்து வந்திருந்தாள். சொல்லப்போனால் அந்த சந்திப்பிற்கு நான் எந்தத் திட்டமும் இடவில்லை. திடீரென நேர்ந்துவிட்ட ஒரு விபத்து போல அந்த சந்திப்பும் நிகழ்ந்தது என்றும் வாடாத அந்த நீல நிறப் பூவை எனக்கு முன்னால் இருந்த மேசையின் மீது வைத்துவிட்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.‌ அருகே இருந்த கண்ணாடி குவளையில் நான் குடித்து மீதம் வைத்திருந்த தண்ணீரை எடுத்து மென்மையாக பருகினாள். நேரடியாக என் கண்களை பார்த்து இவ்வளவு நாள் நான் எங்கிருந்தேன் ஏன கேட்க மாட்டாயா.. என்பதுபோல அவளது விழிகள் கேட்பதாக எனக்குத் தெரிந்தது. அந்த விழிகளில் விழுந்து மீண்டும் ஒரு பிறவி எடுத்து வாழ்வதென்பது இனி என்னால் முடியாது என்பது எனக்கு நன்றாக தெரிந்தாலும் முடிவிலியான அந்த பகடை ஆட்டத்தில் எப்படியேனும் நான் ஈடுபட்டு விடுவேன் என அவளுக்கும் தெரிந்தது. ஆனாலும் நான் கவனமாக இருப்பதாக அவளுக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக..

“காலம் நிறைய மாறிவிட்டது” என்றேன்.

“ஆனால் நீ மாறவில்லை” என்றாள்.

இனி ஆயுதங்களை பயன்படுத்தி விட வேண்டியதுதான் என்பதற்காக அவள் ஆன்மாவிற்கு என நான் தனித்தே தயாரித்து வைத்திருந்த ஒரு குறுங்கத்தி பதிலை அவளிடம் இவ்வாறாக சொன்னேன். “இப்போது இன்னொருவள் என் அகம் புறம் என அனைத்தையும் நிரப்பி இருக்கிறாள்” என்றேன். அவள் சற்றே அலட்சிய சிரிப்போடு.. “ஆனால் நீ என்னவோ தளும்பிக்கொண்டு தான் இருக்கிறாய்” என்றாள்.

“உனக்கும் வயதாகி விட்டது போல” என்று சொல்லிப் பார்த்தேன்.

“இன்னும் நமக்குள் ஜோடிப் பொருத்தம் தான்” என சொல்லி விட்டு சிரித்துக்கொண்டாள்.
“எனக்குப் பிள்ளைகள் இருக்கிறார்கள்..” என்று நேரடியாக அவள் மார்பில் என் கத்தியை சொருகினேன். அதை துளி கூட பொருட்படுத்தாமல் “அவர்களிடமும் நீ என் சாயலை தான் தேடிக் கொண்டிருப்பாய்” என எனக்கு நன்றாக தெரியும் என்றாள்.

“ஆனால் நீ பார்த்தவன் எப்போதோ இறந்து விட்டான்” என எங்கோ பார்த்துக்கொண்டு சொன்னேன். அவளோ என் மீது பார்வையை விலக்காமல்.. “அவனை என்னைத் தவிர யாராலும் கொல்ல முடியாது..” என்று விசித்திரமாக பதிலளித்தாள். நான் என் தலையைத் தாழ்த்தியவாறே.. “இப்போது நான் முழுவதுமாக வேறு மனிதன்” என்று உறுதியான குரலில் அவளுக்கு சொல்வது போல எனக்கும் சொன்னேன்.

” என்னை முதலில் நேருக்கு நேராக பார். மிக எளிதாக நான் அவனை அடைந்து விடுவேன்” என்று அவள் சொன்னாள் .

“இதுவெல்லாம் கதைகளிலும், திரைப்படங்களிலும் மட்டும்தான் சாத்தியம்” என்றேன். “அவரவர் கதைகளைத்தான் பல காட்சிகளாக படம் பிடித்து மீண்டும் மீண்டும் திரைப்படங்களாக எடுக்கிறார்கள் என பலரும் நினைக்கிறார்கள்” என்றாள்.

“இறுதியாக என்னதான் வேண்டும்..?” என்கிற மன்றாடலில் என் கைகள் நடுங்கியவாறே தழுதழுத்த குரலில் அவளிடம் கேட்டேன்.

எனக்கு வேண்டியது ஒரு உண்மையின் மலர் என்றாள்.

“நான் இல்லாத இக் காலங்களில் எப்போதாவது என்னை மறந்த நேரம் என்ற ஒன்று உண்டா..” என தலை கவிழ்ந்த என் முகம் பார்த்து தலைச்சாய்த்தவாறே கேட்டாள்.

கலங்கிய கண்களை மறைத்துக் கொண்டு..”உண்மையை சொன்னால் நீ எழுந்து போக மாட்டாய் என நான் அஞ்சுகிறேன்”.. என்றேன்.

“இது போதும்”. என்றாள் சிரித்துக்கொண்டே.

நான் நிமிர்ந்து பார்த்தபோது ஒரு நீல நிறப் பூவைத் தவிர அங்கு வேறு எதுவும் இல்லை.

காதலின் விடியல்.

 

[youtube]https://www.youtube.com/watch?v=KZyn3KCMFI4[/youtube]

 

❤️

கார் அமைதியாக சென்று கொண்டிருந்தது. தோளில் சாய்ந்தவாறே அவள் தூங்கிக்கொண்டிருந்தாள். தோளில் சாயும் தருணங்களில் எல்லாம் குழந்தையைப் போல் ஆகி விடுகிறாள். அப்படி என்ன இருக்கிறது என் தோளில்… என நிறைய முறை கேட்டிருக்கிறேன். அதற்கு பதில் சொல்லாமல் “நீ அமைதியா ஓட்டிக்கொண்டே போ. நான் தூங்கணும் டா” என சொல்லியவாறு தூங்கி விடுகிறாள். ஒரு கோடைகால பின்னிரவில் அந்த நெடும் வழிச்சாலையில் நானும் என்னுடன் நீண்ட நேரமாக பயணித்து வரும் ஒரு நிலவும், சில இளையராஜா பாடல்களும் தனித்து இருந்தோம். என்னைப் பார்த்தவுடன் ஏன் இப்படி ஆகிவிடுகிறாய் எனக் கேட்டதற்கு அவளிடம் ஒரு மர்மமான புன்னகை தான் மிஞ்சியது. நான் புரியாமல் அவள் முகத்தையே உற்றுநோக்கி கொண்டிருந்தபோது.. மென்மையான குரலில் சொல்கிறாள்.. “அது அப்படித்தான். நான் விளையாடுவதை ரசிக்க நீ மட்டும்தான் இருக்கிறாய். உன் கண்களில் நான் விழும் போதெல்லாம் சிவந்துக் கொண்டே போகிறேன்” என்கிறாள். இப்போதெல்லாம் பேசுவதைவிட உன்னுடன் எங்கோ போய்க் கொண்டிருப்பது தான் எனக்கு பிடித்திருக்கிறது என்கிறாள். அந்த நெடுஞ்சாலை முடிந்து ஒரு மலைச்சாலையில் மீது கார் ஏற தொடங்குகிறது. எதிரே எந்த வாகனமும் வரவில்லை. எனக்கு முன்னால் பெரும்பெரும் பூதங்கள் போல மலைகள் அதனூடாக மலைக்காடுகள் என அந்தப் பின்னிரவு சற்று அச்சமாகத்தான் இருந்தது. தூங்கிக் கொண்டிருந்தவளை அப்படியே மறுபுறம் சாய்த்து வைத்துவிட்டு காரை ஓரமாக நிறுத்திவிட்டு அந்த மலைச் சாலையில் தனியே நின்று கொண்டிருக்கிறேன். அடர் குளிர் இரவு. இதேபோன்ற எத்தனை இரவுகள் இந்த மலைகள் மீது நிழலாக படிந்திருக்கும் என விசித்திரமாக யோசித்தவாறு நின்று கொண்டிருக்கிறேன்.‌ ஒரு காதல் தரும் இரவு மிக விசித்திரமானது. பூக்களோடு வருகிற உதிரிகள் போல அந்த இரவு முழுக்க ஏகாந்த நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டே இருக்கின்றன. ஒரு முறை அவளது கூந்தலை நான் இரவு என வர்ணித்த போது.. அதை கலைப்பதற்கு தான் விடியலின் முன் வெளிச்சச் சுடர்கள் போல உன் விரல்கள் இருக்கின்றனவே என்று சிரித்துக்கொண்டே பதில் சொல்கிறாள். அடிக்கடி சிரிக்காதே. நீ அழகாகிக் கொண்டே போகிறாய் என்கிறேன். என் முன்னந்தலையை மெலிதாக கலைத்து ஓடி விடுகிறாள்.

❤️

பயணம் மீண்டும் தொடர்ந்தது. திருப்பங்களாலும் ஏற்றங்களாலும் நிரம்பிய அந்த மலைச்சாலை வளைந்து நெளிந்த பாம்பின் உடலைப் போல வசீகரமான ஒன்றாக எனக்கு தோன்றியது. அந்த மலைச்சாலை இறுதியில் ஒரு ஏரிக் கரையில் முடிவடைகிறது. தூங்கிக் கொண்டிருந்த அவளை மெதுவாக எழுப்பினேன். கண்களை கசக்கி நாம் எங்கே இருக்கிறோம் என்று கேட்கிறாள்.என்னால் எளிதாக சொர்க்கத்தில் என்ன சொல்லிவிட முடியும். ஆனால் நான் மௌனமாக கீழே இறங்கு என்று சொல்லிவிட்டு நானும் இறங்கினேன். இருவருக்கும் முன்னால் ஒரு படுத்திருக்கும் யானையை போல ஒரு ஏரி சாய்ந்து கிடந்தது.
அந்த அதிகாலை நேரத்தில் யாருமில்லா தருணத்தில் பனி போர்த்திய ஏரியை கண்ணிமைக்காமல் அவள் என் தோளில் சாய்ந்து கொண்டு பார்த்துக் கொண்டே இருக்கிறாள். “இப்படி ஒரு இடத்திற்கு என்னை அழைத்து வரவேண்டும் என உனக்கு எப்படித் தோன்றியது” எனக் கேட்கிறாள்.” சில எண்ணங்களுக்கு காரணங்கள் கேட்காதே. நீ என்னுடன் இங்கே வரவேண்டும் என எனக்குத் தோன்றியது. அழைத்து வந்திருக்கிறேன்.” *என் கையில் ஒரு விடியல் இருக்கிறது. அதை இன்னும் சற்று நேரத்தில் என் தேவதைக்கு பரிசளிக்க நான் காத்திருக்கிறேன்” என்கிறேன். இந்த விடியல் போல பரிசுத்தமானது உலகில் ஏதுமில்லை என நான் சொல்லிவிட்டு அவளை பார்க்கும் போது அவளது கண்கள் கலங்கியிருந்தன. தன்னை யாருமே இதுவரை இப்படி நேசித்தது இல்லை என நினைக்க வைப்பது தான் காதலின் அதிதீவிர ரசவாதம். பனியின் ஊடாக மெல்லிய வெளிச்சம் பரவத் தொடங்குகிறது. ஏரிக் கரையில் இருந்த மரங்களிலிருந்து பறவைகளின் சிறகடிப்புகள், கூவல்கள் கேட்கத் தொடங்கிவிட்டன. கொஞ்சம் கொஞ்சமாக அந்த விடியல் மழைத்துளி மண்ணில் கரைவது போல எங்களுக்குள் கரையத் தொடங்க .. நாங்கள் உருகத் தொடங்கி இருந்தோம். திடீரென என் கழுத்தில் மெல்லிய ஈரம் பதிய … நான் மெலிதாக புன்னகைத்துக் கொண்டேன். இதைவிட மேலான பரிசை அவளுக்கு நானும், எனக்கு அவளும் அளித்திருக்க முடியாது என்கிற நினைவில் அந்த நிமிடங்கள் உறைந்திருக்க..

விடியத் தொடங்கியிருந்தது.

 

எம்.எஸ்.வி -இசையால் நிறைத்த பெருமழை..

 

 

எழுபதுகளின் இறுதியிலும் , எண்பதுகளின் தொடக்கத்திலும் பிறந்தவர்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியான கட்டமைக்கப்பட்ட மனநிலையை கொண்டவர்களாக இருப்பார்கள். அந்தக் காலகட்டத்தில் பிறந்த நாங்களெல்லாம் இளையராஜாவோடு வளர்ந்தவர்கள். ஏறக்குறைய எம்எஸ்வி காலம் அப்போது இறுதி காலத்தை எட்டியிருந்தது.நாட்டுப்புற அழகியலோடு இளையராஜா அள்ளிக்கொடுத்த மென் சோக செவ்வியல் இசை இரண்டு தலைமுறை காலத்து தமிழ்ச் சமூகத்தை கட்டிப்போட தொடங்கியதும் அந்த காலகட்டத்தில்தான் .

இளையராஜாவின் இசை கேட்கத்தான் காதுகள் படைக்கப்பட்டிருக்கின்றன என்பதாகவே நாங்கள் நம்பினோம். அவரது சமகாலத்து எத்தனையோ நல்ல இசையமைப்பாளர்கள் எங்களது அதிதீவிர இளையராஜா இசை நம்பிக்கைகளால் திரை உலகை விட்டே நகர்ந்து போய்விட்டார்கள். அதுபற்றி எல்லாம் நாங்கள் சிந்தித்துப் பார்த்ததே இல்லை. எங்களைப் பொறுத்தவரையில் இளையராஜா தான் எங்களுக்கு சர்வ மயம்.

அந்தக்காலத்தில் எம்எஸ்வி முன்னொரு காலத்தின் இசையமைப்பாளராக மாறியிருந்தார். 60களின் ஆகப்பெரும் இசையரசன் மெல்லிசை மன்னர் எம்எஸ்வி தான். அவரும் ராமமூர்த்தியும் இணைந்து விஸ்வநாதன்-ராமமூர்த்தியாக‌ பல இசை உச்சங்களை தொட்டார்கள். நாங்கள் இந்த காலகட்டத்தை கடந்து பிறந்தவர்கள். எங்கள் பால்ய காலத்தில் எம்எஸ்வி பாடல்களை கேட்பது என்பது பழைய காலத்து ஆள் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கும் என்பதால் இளையராஜா தவிர நாங்கள் எதையும் கேட்பதில்லை.

ஆனாலும் எங்களுக்கும் ஒரு மூத்த தலைமுறை எங்கள் வீட்டிலேயே இருந்ததால் வேறுவழியின்றி அவ்வப்போது எம்எஸ்வி பாடல்களையும் கேட்க நேரிட்டது. அப்போது வானொலி தான் வீட்டுக்கு வீடு இசைக்கச்சேரி வைக்கின்ற முக்கிய பாடகர்.

“சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து..” என்ற பாடல் வானொலியில் ஒலிக்க தொடங்கினால் போதும். அதுவரை ஏதேதோ பேசிக் கொண்டிருந்த என் அம்மாவும், அப்பாவும் அமைதியாகி விடுவார்கள்.

என் பதின்பருவத்தில் எனக்கு மிகவும் நெருக்கமான என் தோழி ஒருவள் டி கே ராமமூர்த்தி (விஸ்வநாதன்) இசை அமைத்து வெளிவந்த கர்ணன் திரைப்படத்தில் வருகிற” கண்கள் எங்கே.. நெஞ்சமும் அங்கே .. என்ற பாடலை அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்பாள். “என்ன இருக்கிறது அதில்..? “என அந்தக் காலத்தில் நான் கேட்டபோது “என்ன இல்லை இதில் ..?”என சிரித்துக் கொண்டே சென்றது இன்னும் நினைவில் இருக்கிறது. ஆனால் இன்று கேட்கிறபோது அவள் சொன்னது உண்மையாக தான் இருக்கிறது.

எனது சிறுவயதில் “நாளை இந்த வேளை பார்த்து ஓடிவா நிலா..” என்று சுசீலா வானொலியில் கசிந்துருகும் பொழுதில் என் தந்தையின் கண்கள் கலங்குவதை நான் கண்டிருக்கிறேன். ஒரு பாடலைக் கேட்டுவிட்டு கண் கலங்குவது என்பதை என் தந்தையார் மூலம் தான் முதன் முதலாக நான் அறியத் தொடங்கினேன்.

பிற்காலத்தில் நான் வளர்ந்த பிறகு தங்கர்பச்சான் இயக்கத்தில் வெளிவந்தது அழகி திரைப்படம். இளையராஜாவின் இசை அந்தப்படத்தை ஒரு காவியமாகவே மாற்றி இருக்கும். அத் திரைப்படத்தில் படத்தின் நடுவில் வருகின்ற “உன் குத்தமா, என் குத்தமா..” என்ற பாடல் ஒலிக்கத் தொடங்குவதற்கு முன்பாக காட்சி அமைப்பில் ஒரு சிறிய மௌனத்தை உணர்வுத் தூண்டலுக்காக இயக்குனர் திட்டமிட்டு வைத்திருப்பார். பால்யக் கால காதலியான தனலட்சுமியை எதிர்பாராமல் சந்தித்த பார்த்திபன் அந்தப் பெண் வாழும் இடமான தெருவோரத்தில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கும்போது மழைத்தூறல் தூறத் தொடங்கும். பார்த்திபன் நனைந்து விடக்கூடாது என்பதற்காக அவரது காதலியான தனலட்சுமி ஆக நடித்த நந்திதா தாஸ் உணவுத் தட்டை குடை போல பிடிக்க.. அதை நிமிர்ந்து பார்க்கும் பார்த்திபன்.. என விரியும் அந்தக் காட்சியில் ஒரு சிறிய மௌனத்திற்குப் பிறகு திரையரங்கமே அமைதியாக இருக்கும் அப்பொழுதில், தனித்து ஒலிக்கும் இளையராஜாவின் குரல்” உன் குத்தமா.. என் குத்தமா.. ” என கேட்கத் தொடங்க
படத்தை பார்த்துக் கொண்டிருந்த என் பக்கத்தில் அமர்ந்து இருந்த ஒருவர் அந்த சிறு மௌனத்தையும், அதற்குப் பிறகு வந்த இளையராஜாவின் குரலையும் கேட்டு தேம்பித் தேம்பி அழத்தொடங்கினார். அதுவரை நாகரீகம் கருதி கட்டிவைத்திருந்த எனது விழிகளின் கோட்டை தகர்ந்து கண்ணீர் எனக்கும் பெருக்கெடுத்தது.

ஒரு நல்ல இசை அப்படித்தான். அழ வைக்கும். ஒரு Guide போல நம் கரம்பிடித்து கடந்த காலத்திற்கு அழைத்துச் செல்லும். நாம் வேண்டுமென்றே நினைக்க தவிர்த்தவை எல்லாவற்றையும் வருந்தி அழைத்து நம் மனதில் அமர வைக்கும்.

அந்தச் சமயத்தில் எனக்கு பாதர் மார்ட்டினின் நினைவு வந்தது.
நான் பள்ளி பயின்ற காலங்களில் ஃபாதர் மார்ட்டின் என்கின்ற பாதிரியார் மன்னார்குடியில் இருந்தார். வானம் உயர்ந்திருக்கும் புனித ஆண்டவரின் தேவாலயத்தின் பக்கத்திலேயே அவரது வசிப்பிடம் இருந்தது. எனக்கு நிறைய கிருத்தவ நண்பர்கள். புனித பைபிளின் கவித்துவ தமிழில் நான் என்னையே இழந்து அலைந்து கொண்டிருந்த காலம் அது. அந்தத் தமிழை கேட்பதற்காகவே நான் தேவாலயங்களுக்கு செல்வேன்.

அங்குதான் பாதிரியார் மார்ட்டின் எனக்குப் பழக்கம். பள்ளி முடிந்து அவருடன் சென்று பேசிக்கொண்டிருப்பேன்.
அவர் தீவிரமான மெல்லிசை மன்னர். எம்.எஸ்.விஸ்வநாதனின் ரசிகர். பிராத்தனை நேரங்களை தவிர மற்ற நேரங்களில் அவர் ஏதோ ஒரு எம்எஸ்வி பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருப்பார்.

ஒரு பின் மாலை நேரம். தேவாலயத்தை கடந்து நான் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது தூரத்தில் ஒலித்த “மாலைப் பொழுதின் மயக்கத்திலே.. ” என்கின்ற அந்த தெய்வீகப் பாடலை நான் கேட்டேன். பேனாசோனிக் டேப் ரிகார்டரில் கேசட் போட்டு கேட்டுக் கொண்டு தேவாலயத்தின் பக்கவாட்டுப் பகுதியில் இருந்த தனது வசிப்பிடத்திற்கு முன்னால் சாய்வு நாற்காலியில் அமர்ந்தவாறே மார்ட்டின் பாதர் மாலைப் பொழுதின் மயக்கத்தில் கண்மூடி மூழ்கியிருந்தார். ஏறக்குறைய முழு இருட்டு. அருகில் இருந்த ஒரு சிறு பீடத்தில் ஒரே ஒரு பெரிய மெழுகுவர்த்தி எரிந்துகொண்டிருந்தது. மெழுகுவர்த்தியின் மஞ்சள் நிற ஒளி பாதர் மார்ட்டின் முகமெங்கும் பரவி பரவச ஜோதியில் அவர் நிறைந்திருந்தார்.

நான் அமைதியாக சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு அவரின் எதிரே முன் இருந்த ஸ்டுலில் அமர்ந்தேன். அந்த வளாகத்தில் நானும், பாதரும், புனித ஆண்டவரும் மட்டுமே தனித்து இருந்தோம். நான் வந்தது கூட தெரியாமல் அவர் எம்எஸ்வியின் இசையில் மூழ்கிக் கிடந்தார். அந்த மாபெரும் வளாகம். தனிமை. சூரியன் மங்கிய மாலைப் பொழுது. மெழுகுவர்த்தி ஒளி,தனித்துவமான அந்த இசை என பலதும் சேர்ந்து என் மனநிலையை வேறு மாதிரி ஆக்கத் தொடங்கியது. முன்னொரு பிறவியில் எங்கேயோ கேட்ட பாடல் போல அந்தப் பாடல் இருந்தது.

இருந்தாலும் இளையராஜா தவிர இன்னொரு இசையையும் ரசிக்க முடியும் என்கின்ற ஒரு நிலையை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எனவே அந்தப் பாடலை கேட்பதில் இருந்து என்னை விலக்கிக் கொள்ள முயற்சித்தேன். ஆனாலும் மீண்டும் மீண்டும் ஒரு சுழி போல அந்த தெய்வீக இசை என்னை இழுக்கத் தொடங்க.. நானும் அமைதியாக அந்த பாடலை கேட்டுக் கொண்டிருந்தேன். ஒருவழியாக அந்த பாடல் முடிவடைந்தது. கலங்கியிருந்த கண்களோடு பாதர் கண்களைத் திறந்தார்.

சின்னப் புன்னகையோடு எனது வருகையை அங்கீகரித்து விட்டு அமைதியாய் இருந்தார். ஒரு நிறைவுக்கு பிறகான அமைதி போல அந்த உணர்ச்சி . சில கணத் துளிகளுக்கு பிறகு நிமிர்ந்து என்னை பார்த்து புன்னகைத்தார்.

இந்த எம்எஸ்வி இசை பெரும் போதைடா.. இந்த உலகத்தையே துறந்து விட முடிகிறது. ஆனால் எம்எஸ்வியை மட்டும் விட முடியல என்று எனக்கும் அவருக்குமாக சேர்த்து சொல்லிக் கொண்டார்.

நான் சற்றே வீம்புடன்.. அப்படி எல்லாம் இதில் ஒண்ணும் இல்ல. இப்ப இதையெல்லாம் தாண்டி வேற வடிவத்திற்கு இளையராஜா இசையைக் கொண்டு போய்விட்டார் என்றெல்லாம் நான் பேச தொடங்கினேன்.

இளையராஜா நல்லாதான் பண்றார். அவர் எம்எஸ்வியோட தொடர்ச்சி என்று பாதர் பதிலளிக்க.. அதிதீவிர இளையராஜா ரசிகனான என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இளையராஜா பெரிய ஆளா எம்எஸ்வி பெரிய ஆளா என்பது போல நான் குறைகுடம் போல தளும்பி விவாதிக்கத் தொடங்க.. பாதர் அமைதியாக எழுந்து உள்ளே சென்றுவிட்டார்.

பிறகு கிறிஸ்துமஸ் காலம் முடிந்து மார்ட்டின் பாதரை பார்க்க நான் சென்றிருந்தேன். ஊரிலிருந்து அவரைப் பார்க்க உறவினர்கள் சிலர் வந்திருந்தார்கள். அவர்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். மார்ட்டின் பாதர் அமைதியாய் தலைகுனிந்தவாறு அமர்ந்து இருந்தார். வந்திருந்தவர்களில் வயதான அம்மா ஒருவர் மார்ட்டின் ஃபாதரின் தோளைத் தட்டி அவருக்கு ஆறுதலாக ஏதோ சொல்லிவிட்டு கிளம்பலாம் என்பதுபோல மற்றவர்களைப் பார்க்க.. மற்றவர்களும் அமைதியாய் அங்கிருந்து வெளியேறினர். வாசலில் நின்று கொண்டிருந்த நான் எப்போதும் உற்சாகமாக இருக்கிற மார்ட்டின் பாதர்
எதற்காக தலைகவிழ்ந்து சோகமாக இருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள உள்ளே சென்றேன். அவர் என்னை நிமிர்ந்து பார்க்கவே இல்லை.

நான் குரலைக் கனைத்தவாறு என்ன பாதர் என்ன ஆச்சு.. என கேட்டேன்.
பாதர் அமைதியாய் தலைகுனிந்து அமர்ந்திருந்தார். மெதுவாய் நிமிர்ந்து பார்த்தபோது அவரது கண்கள் முழுக்க கண்ணீர். என்ன பாதர் என்ன ஆச்சு என்று நான் பதட்டமாய் கேட்க.. எனக்கு வேண்டியவங்க கொஞ்ச நாளைக்கு முன்னாடி இறந்து போயிருக்காங்க.. எனக்கு இப்பதான் தெரிய வருது என்று சொல்லி கண்களைத் துடைத்துக் கொண்டார்.

அமைதியாய் எழுந்து சென்ற அவர் வழக்கமான அவரது டேப் ரிகார்டரில் எங்கிருந்தோ தேடி ஒரு கேசட்டை எடுத்துப் போட்டார். சுசீலா அவர்களின்
நீண்ட ஹம்மிங்கோடு அந்தப் பாடல் ஒலிக்கத் தொடங்கியது.

அதுதான் “பார்த்த ஞாபகம் இல்லையோ..” என்ற புதிய பறவை திரைப்படத்தின் பாடல். அதற்கு முன்னால் அந்தப் பாடலை நான் சில முறை கேட்டிருந்தாலும் இப்போது முதல்முறையாக கேட்பது போன்ற ஒரு மன உணர்ச்சி. பாதர் பாடலை ஒலிக்க விட்டு விட்டு அவரது சாய்வு நாற்காலியில் அப்படியே கண்மூடி சாய்ந்தார். பாடல் ஓடிக்கொண்டே இருந்தது. மூடிய மார்ட்டின் பாதர் கண்களிலிருந்து சாரை சாரையாய் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது. பாடல் முடிந்த பிறகு இறந்துப்போனது யாரது என கேட்கலாம் என நான் காத்திருந்தேன்.

பாடலும் முடிவடைந்தது. நான் அவருக்கு ஆறுதல் சொல்லலாம் எழுந்து அவரது அருகே செல்ல முயற்சித்தபோது.. மீண்டும் சுசீலா அம்மாவின் குரல் கேட்கத் தொடங்கியது. ஆமாம் அதே பாடல்தான். மீண்டும் “பார்த்த ஞாபகம் இல்லையோ..” ஒலிக்கத் தொடங்கியது.

எழுந்த நான் அப்படியே அமர்ந்துவிட்டேன். ஒவ்வொரு முறையும் பாடல் முடிய அதே பாடல் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருந்தது. ஒரு கேசட் முழுக்க ஒரே பாடலை பதிவு செய்து வைத்திருந்தார்கள்.

மார்ட்டின் பாதர் அழுதுகொண்டே இருந்தார். இரண்டு மூன்று முறைகளுக்கு பிறகாக அந்தத் தனிமையும், பாதர் இருந்த மனநிலையின் அழுத்தமும் என்னை ஏதோ செய்ய.. நான் அப்படியே அமைதியாக எழுந்து என் வீட்டிற்கு புறப்பட்டேன்.

அந்த பாடலுக்கும், அவருக்குமான உறவு என்பது எப்படிப்பட்டது என்று என்னால் யோசிக்கவே முடியவில்லை. அவர் அழுததை பார்த்தால் விஸ்வநாதன் ராமமூர்த்தி அவருக்காகவே அந்தப் பாடலை உருவாக்கி இருப்பார்கள் போல என நம்பத் தோன்றியது.

கடந்த காலம் கடந்தவை தான் என்றெல்லாம் நாம் ஆயிரத்தெட்டு ஆறுதல்களை, நியாயங்களை, தர்க்கங்களை நமக்குள்ளாக சொல்லிக்கொண்டாலும் கடந்தவை எதையும் அவ்வளவு எளிதாக கடந்து விட முடியாது. வாழ்வின் சூட்சம புள்ளிகளில் ஏதோ ஒன்றில் சிக்கிக்கொண்டு, ஒரு உடைபட்ட அணை போல கடந்த கால நினைவுகள்
கட்டவிழ்க்கப்பட்டு பெருகும் போது.. எதனாலும் மறைக்க முடியாதத் துயர் இருட்டில் சிக்கிக் கொள்வது தான் மனிதமனம் கொண்டிருக்கிற துன்பியல் விசித்திரம்..

சில நாட்கள் கழித்து மார்ட்டீன் பாதரை பார்க்க தேவாலயத்தின் வளாகத்திற்கு சென்றிருந்தபோது அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது.‌ தொலைதூர ஊருக்கு மாற்றலாகிச் சென்று விட்டதாக சொன்னார்கள். அதன்பிறகு அவரை நான் எங்கும் பார்க்கவில்லை.

முதன்முதலாக எம்எஸ்வி இசையில்லாத அந்த வளாகத்தில் புனித ஆண்டவரும் நானும் மட்டுமே தனித்திருந்தோம்.
எப்போதும் கருணையின் கண்களை கொண்டிருக்கிற தேவ குமாரனின் விழிகளில் அன்று சோகத்தின் சாயல் படிந்திருந்ததாக எனக்குத் தோன்றியது.

அண்ணன் சீமானின் “அன்பு”

அந்த கிராமம் இந்திய வரைபடத்தில் தான் இருக்கிறதா என்பது போன்ற சந்தேகங்களை எழுப்புகிற ஒரு நிலப்பகுதி. தஞ்சை கடைநிலை பகுதியான சீர்காழி என்கின்ற ஒரு சிறிய நகரத்தைத் தாண்டி தில்லை நத்தம் என்கின்ற உள்ளடங்கிய ஒரு குக்கிராமம். ஒரு வாகனம் சென்றால் எதிரே வரும் வாகனம் வழி விட முடியாத அளவிற்கு குறுகிய ஒற்றைச் சாலை. அந்தக் கிராமத்தின் தெருவில் கடைசி வீடாக அந்த பச்சை வண்ணம் பூசப்பட்ட எளிய வீடு இருந்தது.‌ மிகச் சிறிய வீடு.

அந்த வீட்டில்தான் தம்பி அன்பு கிடத்தப்பட்டு இருந்தான். அந்த வீடு கூட தம்பி அன்பிற்கு சொந்தமானது இல்லை. அது அவனது அண்ணன் வீடு . அண்ணன் சீமானையும் உலகம் முழுக்க வாழ்ந்து வருகிற நாம் தமிழர் உறவுகளை மட்டும் சம்பாதித்தால் போதும் என்று நிறைவுற்று இருந்த அந்த ‌ புன்னகை மாறாத முகத்துடையவன் அமைதியாய் சலனமின்றி படுத்திருந்தான். அவனது இயற்பெயர் சுரேஷோ.. ரமேஷோ.. அண்ணன் சீமான்தான் அவனுக்கு அன்புச்செழியன் என பெயர் சூட்டியிருந்தார்.

உள்ளடங்கிய அந்த நிலத்திலிருந்து ஏதோ ஒரு அழுத்தத்தில் எகிறித் தாவி அன்பு அண்ணன் சீமானை வந்து சேர்ந்திருந்தான். அந்த ஊருக்கு சென்றபோது எனக்குத் தோன்றிய ஒரே ஒரு சிந்தனை.. இங்கிருந்து எப்படி இவன் அண்ணன் சீமானிடம் வந்து சேர்ந்தான் என்பது தான்.

பூர்வக் கதைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை தான். ஆனாலும் அவனுக்கும் அண்ணன் சீமானுக்கும் இருந்த பிணைப்பு பூர்வக் கதைகளுக்கே உரிய காவிய பூர்வமானது.

அண்ணன் சீமானுக்கும் அவனுக்குமான உறவு மிகவும் தனித்துவமானது. அண்ணன் சீமான் என்ன சிந்திக்கிறார் என்பதை அவர் சிந்திக்கும் நொடியின் தொடர்ச்சியிலேயே அன்பு உணர்ந்து கொள்வான். அண்ணன் சீமானுடன் நெருங்கி இருக்கிற எங்களுக்கெல்லாம் அகப்படாத பிரத்யோக அலைவரிசை அவனுக்கு மட்டும்‌ அண்ணனோடு அமைந்திருந்தது.

அதை கண்சாடையாக எல்லாம் அர்த்தப்படுத்த முடியாது. அது ஒரு சிமிட்டல் அவ்வளவே. அந்த மெல்லிய விழி அசைவு அண்ணன் சீமானிடமிருந்து பிறந்த நொடியிலேயே அன்பு புரிந்து கொள்வான். அவர் எத்தனை மணிக்கு எங்கே செல்லவேண்டும் என்பதில் தொடங்கி அவரது உடை உணவு மருத்துவம் என அனைத்திலும் அன்பு முழுமையாய் நிறைந்திருந்து நிறைவேற்றுவான். அதுமட்டுமே அவனது வாழ்க்கை என அவன் அர்த்தப்படுத்தி இருந்தான்.

அவனுக்கு யாரைப்பற்றியும் எவ்வித குறையும் இல்லை. அடுத்தவரைப் பற்றி எந்த குறையும் இல்லாத அவனது ஆன்மா தெய்வத்தின் சாயல் உடையது. எவரைப் பற்றியும் அண்ணனிடம் அவன் தவறாக சொன்னதாக எங்களுக்கு தகவல் இல்லை. அதேபோல் அண்ணனிடம் அவனுக்குள்ள நெருக்கத்தை எங்கேயும் அவன் பயன் படுத்திக் கொண்டதில்லை. அவனது ஒரே தேவை.. அண்ணனின் நலம்.

ஒரு அரசியல் தலைவரின் ஓட்டுநர் என்கிற பொறுப்பு சாதாரணமானதல்ல. தொடர்ச்சியான நள்ளிரவு பயணங்கள், கடுமையான அலைச்சல்கள், ஓய்வின்றி கடும் உழைப்பை கோருகிற சூழல்கள் என மாபெரும் சவால்களை கொண்ட அந்த பொறுப்பினை அன்பு புன்னகையோடு நிர்வகித்து வந்தான்.

2016 சட்டமன்ற தேர்தல். ஒரு நாளைக்கு அண்ணன் சீமான் குறைந்தது 5 கூட்டங்கள் பேச வேண்டும். ஒவ்வொன்றும் இரண்டு மணி நேரம் 3 மணி நேரம் பயணத்தொலைவு உள்ள பகுதிகள். குறித்த நேரத்திற்கு அண்ணன் சென்றாக வேண்டும். வேட்பாளர்களும், மக்களும் காத்துக் கொண்டிருப்பார்கள். அண்ணன் உணர்ச்சி வேகத்தில் ஒரு ஊரில் அதிக நேரம் பேசி விட்டால் அடுத்த ஊரின் கூட்டம் பாதிக்கப்படும். மேடு பள்ளமான சாலைகள், சாலை விதியை சற்றும் மதிக்காமல் எதிரே வரும் வாகனங்கள் இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சீறிப்பாயும் அந்த வாகனம் பாதுகாப்பாகவும் பயணிக்க வேண்டும். ஏனெனில் உள்ளே இருப்பவர் எதிர்கால தமிழகத்தின் ஒற்றை நம்பிக்கை. இதையெல்லாம் உணர்ந்து கொண்டு அன்பு அண்ணன் சீமானின் கருப்பு நிற அந்த வாகனத்தை ஒரு பறவையாக கருதி அவனுக்கே உரிய கவித்துவ ஓட்டுதல் மொழியோடு ஓட்டும்போது பார்க்கிற எங்களுக்கு அவ்வளவு பரவசமாக இருக்கும். அந்தத் தொலை தூரப் பயணங்களில் அண்ணன் ஓய்வு எடுத்துக்கொண்டோ, படித்துக்கொண்டோ இருக்கும்போது அது பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பிரேக்கை அழுத்தும் போது கூட நாசூக்காக அழுத்தி வேகம் எடுக்கிற அந்த அழகு அண்ணன் மீதான அவன் கொண்டிருந்த தாய்மைக்கு நிகரான மகத்தான பேரன்பின் வெளிப்பாடு.

அண்ணன் திருச்சி விமான நிலையத்திற்கு வரும் போதெல்லாம் அன்புவின் அலைபேசி எண் என் அலைபேசி திரையில் ஒளிரும். அண்ணன் விமான நிலையத்துக்குள் சென்றுவிட்டார்கள். நீங்கள் எங்கே அண்ணா இருக்கிறீர்கள்.. இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அண்ணன் திருச்சி வந்துவிடுவார். அதற்கு முன்பாக நீங்கள் விமான நிலையம் சென்று விடுவீர்களா என்றெல்லாம் தொடர்ச்சியாக கேள்விகளை அன்பு வைத்துக் கொண்டே போவான். அவன் திருப்திப்படும் வரை நாங்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.

அதேபோல அண்ணனோடு அவன் பயணிக்கும் காலங்களில்.. அண்ணன் குளித்துவிட்டு வரும்போது அவரது உடைகள் மற்றும் அவர் எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகள், என அனைத்தும் ஒருவித ஒழுங்கில் அன்பு வைத்திருப்பான். அந்த ஒழுங்கு அவனுக்கு மட்டுமே உரியது.

தேவையற்ற ஒரு சொல்லை அன்பு பேசியதாக நான் கவனித்ததில்லை. என்னுடைய பதிவுகளை அவனுக்கு பகிரியில் அனுப்பும் போதெல்லாம் படித்துவிட்டு உடனே பாராட்டி பேசுவான். அதுவும் அண்ணன் சீமானை பற்றி எழுதும் போதெல்லாம் அவனது மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.

ஏனெனில் அண்ணன் சீமான் தான் அவனது உலகம். அதைத்தாண்டி அவனுக்கு எதுவும் இல்லை. அவன் குடும்பத்தைப் பார்க்க அதிகம் ஊருக்கு போனதாகக் கூட நான் கேள்விப்பட்டதில்லை. அண்ணன் சீமான் ,அண்ணியார் கயல்விழி, மகன் மாவீரன் பிரபாகரன் என்ற அவனது உலகம் மிகச் சிறியது. இன்று அந்த உலகத்தை விட்டு தான் அவன் பிரிந்து போய் இருக்கிறான்.

அவனது உடலை கண்டு அண்ணன் சீமான் கதறி அழுதது சுற்றியிருந்த எங்களையெல்லாம் உலுக்கி எடுத்து விட்டது. தன் உடலிலிருந்து ஒரு பாகம் பிரித்து எடுக்கப்பட்டது போல அண்ணன் கதறித் துடித்தார். இந்த பிரிவினை எதனாலும் அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவர் திரும்பி பார்க்கும் பொழுதெல்லாம் அன்பு நின்றுகொண்டிருந்தான். இன்று அவன் இல்லாத வெறுமை அவருக்கு தாங்க முடியாத உயிர் வலியை தந்து விட்டது. இடுகாட்டிற்கு அவனை அவரை தூக்கிச் சென்றார். இத்தனை ஆண்டுகாலம் அவரை சுமந்து அன்பு அலைந்து திரிந்தான். அவனது இறுதிப் பயணத்தில் அவன் உயிராக நேசித்த அவனது அண்ணன் சீமான் அவனை சுமந்து எடுத்துச் சென்றார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் அவனுக்கு நுரையீரலில் புற்று நோய் என்று நான் கேள்விப் பட்டபோது உண்மையில் பதறிப்போனேன். அவனை நேரில் சந்திக்கும்போதெல்லாம் இதுபற்றி விசாரிக்க எனக்கு மிகுந்த தயக்கமாக இருக்கும். ஆனாலும் அதை புரிந்து கொண்ட அவன் நான் நல்லா இருக்கேன்னே.. என்று சொல்லி விட்டு சிரித்துக்கொண்டே கடந்து விடுவான். அண்ணன் சீமான் எங்கெங்கோ அவனுக்காக மருத்துவம் தேடி பேசிக்கொண்டிருந்தார். எப்படியாயினும் எவ்வளவு செலவு செய்தாலும் அவனை காப்பாற்றி விடவேண்டும் என துடித்தார். அவன் இல்லாத ஒரு உலகை நினைத்துப் பார்க்கவே அவரால் முடியவில்லை. ஆனால் அவர் எதை நினைத்து அச்சப்பட்டு துடித்தாரோ அது நடந்தே போனது.

கடைசியாக அவனை நான் பார்த்தது மகன் மாவீரன் பிரபாகரன் பிறந்த நாளில்.. என் கையை இறுகப் பிடித்தவாறே என்னோடு போட்டோ எடு அண்ணா என்றான். நான் என் அலைபேசியை அதற்காக தயார் செய்தபோது.. அவனே சொன்னான்.. இந்த போட்டோ ஒரு நாள் நீ எழுதுகிற பதிவுக்கு உனக்கு பயன்படும் அண்ணே.. என்று சிரித்துக்கொண்டே சொன்னான்.
சட்டென யாரோ என்னை சாட்டையால் அடிப்பது போல உணர்வு.. லூசு மாதிரி பேசாதடா.. என்று போட்டோ எடுக்காமல் நான் கோபத்தோடு திரும்பிவிட்டேன்.
என்னை இறுக்கி அணைத்துக் கொண்டான்.

நானும் அந்த புகைப்படம் எடுக்காமலேயே திரும்பிவிட்டேன்.

ஆனால்..அந்த நொடியில் சின்னப் புன்னகையோடு சிரித்திருந்த அவனது முகம் என்றும் மாறாமல் ஒரு புகைப்படம் போல என் ஆன்மாவில் உறைந்து விட்டது.

அன்பு காற்றோடு காற்றாய் கலந்துவிட்டான்.

தனது உதிர உறவை பறிகொடுத்துவிட்டு அண்ணன் சீமான் கண்கலங்கி தனியே அமர்ந்து இருக்கிறார்.

நினைவுகளின் அழுத்தத்தால்.. அடிக்கடி பெருமூச்சு விட்டுக் கொள்கிறார் அவர்.

அந்த மூச்சுக்காற்றில்தான் அன்பு கலந்து இருக்கிறான் என்ற சிறு ஆறுதல் அவருக்கு ‌ வாழ்நாள் முழுக்க நீடிக்கப் போகிற அவன் இல்லாத வெறுமையின் துயரத்தை சற்றே ஆற்றட்டும்.

மெளனத்தின் மலர்

 

 

 

அலைவரிசை
தவறிய
உன்
தடுமாற்ற சொற்களுக்கு
மத்தியில்..

உனது மெளனம்
ஒன்று சின்னதாய்
பூத்துவிடுகிறது.

அந்த மெளனத்தின்
ஆழத்தில் தான்
எனது
மீளெழும்பலுக்கான
பாடலை நான்
கண்டடைய வேண்டும்.

புராதன காதலுணர்வின்
ஆதித்துயராக
அந்த மெளனத்தை
நான் நம்புகிறேன்.

அது அதுவாக
கலைவதற்குள்..

அல்லது நீயே
அதை
கலைப்பதற்குள்..

இப்போதே நீ போகலாம்.

மணி செந்தில்.

Page 3 of 11

Powered by WordPress & Theme by Anders Norén