பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: கட்டுரைகள்.. Page 8 of 11

பேரறிவாளன் – துயரக் காற்றில் அலையும் தீபம்.



பேரறிவாளன் – துயரக் காற்றில் அலையும் தீபம்.

( ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற பேரறிவாளன் எழுதிய

தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல் – என்று நூலை முன் வைத்து)

மனித நாகரிக சமூகம் மேம்பட தனக்குள் வரைந்து கொண்ட அறக்கோடுகள் விழைந்த ஓவியமாய் திகழும் பேரறிவாளன் தூக்குக் கொட்டடியில்.. மரணக் கயிற்றின் நிழலில் நிற்பது நாம் வாழ்க்கையின் மீது அமைத்துக் கொண்டுள்ள அனைத்து சமன்பாடுகளையும் கலைத்துப் போடுகிறது . மனித மாண்புகளின் மீது கட்டப்பட்டுள்ள எளிய மனித வாழ்வின் இருப்பினை பேரறிவாளன் தலைக்கு மேல் ஊசலாடும் தூக்குக் கயிறு சிதைத்துப் போடுகிறது .

மரணத்தின் நிழல் தரும் மன வலி மிக கொடுமையானது. வாழ்வதற்கான பற்றை வைத்துதான் மனித சமூகமே கட்டமைக்கப்பட்டுள்ளது. மாபெரும் ரஷ்ய எழுத்தாளர் தாஸ்தாயெவ்ஸ்கி சைபீரிய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது ஒரு மரணத்தின் வாயில் வரை சென்று திரும்பியதை ‘குற்றமும் தண்டனையும்’ என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார். நாஸி வதை முகாமில் இருந்து தப்பி வந்த யூத இளைஞன் ஒருவரான எலீ வீஸல் என்பவர் தனது அனுபவங்களை எழுதியுள்ள இரவு என்ற சுயசரிதை நாவலும் (தமிழில் வெளிவந்துள்ளது. யூனிடெட் ரைட்டர்ஸ் வெளியீடு ) வாழ்வின் மீது மனிதன் கொண்டுள்ள மாறாப் பற்றை விளக்குகிறது. சிறை வாழ்க்கை குறித்து தோழர் .தியாகு எழுதிய சுவருக்குள் சித்திரங்களும் இத்தகையதுதான்.

உயிர் வாழும் வேட்கை தரும் உணர்வில் தான் மனித சமூகத்தின் இயக்கமே நடைபெறுகிறது. ஒரு மனிதனின் உயிரை எடுப்பதற்கான உரிமை எவருக்கும் ,எதற்கும் இல்லை என உலகச் சட்டங்கள் அனைத்தும் உரத்த குரலில் கூறுகின்றன. ஆனால் சட்டங்களை அமல் படுத்தும் நீதிமன்றங்களுக்கு மட்டும் தண்டனை என்ற பெயரில் ஒரு உயிரைக் கொல்வதற்கு உரிமை இருக்கிறதென்றால் எத்தகைய முரண்பாடு ?

இறுக்கி கட்டப்பட்ட கட்டிடங்களுக்குள் அமர்ந்து கொண்டு ..சட்டப் புத்தகங்களின் காற்புள்ளி, அரைப்புள்ளிக்கெல்லாம் அர்த்தம் தேடுவதுதான் நீதிமன்றத்தின் பணியா என்றால் இல்லை. மாறாக தனி மனித விழுமியங்கள் மேல் கவிழும் இருட்டினை துடைக்கும் வெளிச்ச தெறிப்பாக சட்டங்களும், நீதிமன்றங்களும் மாறி இருந்திருக்க வேண்டும். இன்றளவும் சர்ச்சைகள் நீங்காத வழக்கொன்றின் முடிவு தவறொன்றும் செய்யாத ஒரு எளிய மனிதனின் மரணத்தில் தான் விளையும் என்பது வெட்கக்கேடானது. துயரமானது. பேரறிவாளன் தனது முறையீட்டு மடல்களில் முன் வைத்திருக்கும் எந்த கேள்விக்கும் எந்த அமைப்பிடமிருந்து பதிலில்லை. மூர்க்கமும் , அவசரமும் நிரம்பிய நம் நாட்டு அதிகார கட்டமைப்புகளின் துயரமான விளைவாக மாறி நிற்கிறது பேரறிவாளனின் உயிர்.

அமெரிக்க விடுதலைப் போராட்டக் காலத்தில் அங்கு குடியேறிவர்களுக்காக ஆதரவு குரல் கொடுத்து விடுதலையை ஆதரித்த குற்றத்திற்காக பிரிட்டிஷ் கவிஞர் தெல்வால் (THELWALL) சிறையிலடைக்கப்பட்டார். அப்போது அவர் தன் வழக்கறிஞருக்கு எழுதிய கடிதத்தில் “ என் வழக்கினை நானே உரைக்காவிடில் எனக்கு தூக்குத் தண்டனை கிடைக்கும்” என எழுதி இருந்தார். அதற்கு அவரது வழக்கறிஞர் எழுதிய பதிலில் “ உங்களின் வழக்கினை நீங்களே உரைத்தாலும் தூக்குத் தண்டனை கிடைக்கும்” என கூறியிருந்தார் – இந்த உரையாடல்களில் இருந்து உருவான சொற்றொடர்தான் “ நான் செய்தால் தூக்கிலிடப்படுவேன், செய்யாவிடில் தூக்கிலிடப்படுவேன் “(I’ll be hanged if I do and hanged if I don’t ). அதிகார வல்லாதிக்கத்தின் உச்சக் கட்ட அவல காட்சியின் வடிவம் இந்த சொற்றொடர்தான் அமெரிக்க பெரு நிலத்தின் வல்லாதிக்க அரசாட்சியை வீழ்த்துவதற்கான ஆயுதமாக ,ஆவேசம் மிகுந்த முழக்கமாக அமெரிக்க வீதிகளில் எழுந்தது.

உயர்ந்த மதிற்சுவர்களுக்கு மத்தியில் நாள், கிழமை, மாத வருடம் பேதம் அறியாமல் சிறை அறைகளில் எப்போதும் தேங்கி இருக்கும் வற்றா இருட்டில் ..துளித்துளியாய் கசிகிற வெளிச்சத் துளிகளை கண்களுக்குள் உள்வாங்கி ..வாழ்வின் ஏதோ ஒரு முனையில் திரும்பி விட மாட்டோமா…அதிசயம் நிகழ்ந்து விடாதா என்றெல்லாம் நினைத்துக் கொண்டு கண்கள் பனிக்க காத்திருப்பதன் வலியை பேரறிவாளன் எத்தனை நாள் சுமப்பார்?.. ஒரு ஆயுள் தண்டனைக்கும் அதிகமான நாட்களும் கடந்து..இயல்பான வாழ்க்கையின் எவ்வித சுகங்களையும் அறியாமல் ..அடைப்பட்டு கிடக்கும் பேரறிவாளன் மீதுள்ள குற்றச்சாட்டு – ஒரு கொலைக் குற்றத்திற்கு உதவி செய்ததாக . ராஜீவ் காந்தியின் படுகொலையை ஒரு தனி நபர் படுகொலையாகத்தான் கருதப்பட வேண்டும் என உச்சநீதிமன்றமே முடிவு செய்து விட்ட நிலையில்.. வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் சூழ்ந்துக் கிடக்கிற மரணத்தின் இருட்டில் தான் கழிக்க வேண்டும் என்ற தண்டனை ஒரு நொடியில் தொண்டையை இறுக்கி..கண்களை பிதுக்கி உயிரை கக்குகிற மரண தண்டனையைக் காட்டிலும்…கொடுமையானது.

தனது 19 ஆவது வயதில் சிறை புகுந்த பேரறிவாளனுக்கு இன்று 35 வயது ஆகிறது. தனிமைச் சிறையும், மரண வாசலின் முன்னே ஊசலாடும் தன்மையும் தந்த பரிசினால் கடுமையான உயர் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல் என்ற அவரது நூலின் தலைப்பில் உள்ள மடலில் பேரறிவாளன் நெஞ்சுருக்கும் சொற்களோடு தன் பக்கம் உள்ள அனைத்து நியாயங்களையும் ஒரு தேர்ந்த வழக்கறிஞர் போல எடுத்து முன் வைக்கிறார். பக்கங்கள் புரள புரள உண்மைகளும், உண்மைகளை புறந்தள்ளி ஒரு குற்றமற்றவனை பலியிடும் தன்மைகளும் வெளிவந்து நம்மை கண்கலங்க செய்கின்றன. ஒரு எளிய மனிதன் வெகு சுலபமாக கொல்லப்படும் அவலம் நிறைந்த சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம் என்ற உணர்வு நம்மை மிகுந்த அச்சத்தில் கிடத்துகிறது. இந்த நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் புலனாய்வுத் துறையினரும், ஆளும் வர்க்கத்தினரும், உளவுத்துறையினரும், ஊடக தாக்குதல்களும் சூறையாடிய ஒரு அப்பாவி இளைஞனின் ரத்தக்கறை படிந்திருக்கிறது.

பேரறிவாளன் மீது அரசுத் தரப்பில் வைத்துள்ள குற்றச்சாட்டுக்களில் முக்கிய மாபெரும் குற்றச்சாட்டு என்னவெனில் ராஜீவ் காந்தி கொலையாளி தனுவிற்கு பெல்ட் பாம் செய்ய மின்கலம்(பேட்டரி) அதாவது சாதாரண பெட்டிக் கடைகளில் கிடைக்கும் 9 வோல்ட் பேட்டரி வாங்கிக் கொடுத்து குண்டு தயாரிக்க உதவியது.

ராஜீவ்காந்தி கொலையை விசாரித்த புலனாய்வு குழுவின் தலைமை அதிகாரியாக இருந்து ஒய்வுப்பெற்ற ரகோத்தமன் 10-08-2005 தேதியிட்ட குமுதம் வார இதழிலும்., 31-07-2005 தேதியிட்ட ஜீனியர் விகடன் இதழிலும் “தனு தன் இடுப்பில் கட்டியிருந்த வெடிகுண்டு பெல்டை செய்து கொடுத்தவர் யார் என்று இது நாள் வரைக்கும் கண்டுபிடிக்க முடியவில்லை “ என மிக மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

இது நாள் வரை கண்டுபிடிக்கப்படாத ஒரு காரணிக்காக பேரறிவாளன் தலையின் மேல் தூக்குக் கயிறு தொங்குகிறது என்பது எவ்வளவு மோசமான சமூகத்தில் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் நாம் வாழ்கிறோம் என்பதற்கு உதாரணம். ஆள்பவர்களும், அதிகாரம் படைத்தவர்களும் நினைத்தால் அப்பாவியான ஒரு எளிய மனிதனை தன் அதிகார கரங்கள் கொண்டு கொன்று விட முடியும் என்கிற நிலையில் தான் நாமெல்லாம் வாழ்கிறோம்.

ராஜீவ்காந்தி கொலைக்கு பிறகு 20-06-1991 ஆம் தேதியில் வெளிவந்த இந்தியா டுடே நாளிதழ் வெளியிட்ட “ராஜீவ் படுகொலை – சதி திட்டம்” தீட்டப்பட்டது எப்படி என்ற கட்டுரையில் பேரறிவாளன் வெடிகுண்டு நிபுணர் எனவும், ராஜீவை கொன்ற தனு கட்டியிருந்த வெடிகுண்டை செய்தவர் என்றும் சித்தரித்து எழுதப்பட்டிருந்தது. புலனாய்வு குழுவினரும், உளவுத் துறையினரும் திட்டம் போட்டு ஊடகங்களில் பரப்பி விட்ட பொய்யான கதைகளால் பேரறிவாளன் குற்றவாளியாக்கப்பட்டு தூக்குத் தண்டனை கைதியாக இன்று மரணக் கொட்டடியில் வாடிக் கொண்டிருக்கிறார். பிறகு இதே இந்தியா டுடே இதழ் 1996 ஆண்டு “துப்பில் துவாரங்கள்” என்ற தலைப்பில் வெளியிட்ட கட்டுரையில் இது நாள் வரை வெடிகுண்டு குறித்து எந்த புலனாய்வும் செய்யவில்லை என கட்டுரை வெளியிட, அதை எதிர்த்து புலனாய்வு துறையினர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது வேறு கதை.

அரசு தரப்பு சாட்சிய ஆவணம். 392 என்ற 07-05-1991 ல் பெறப்பட்டதாக கம்பியில்லா தந்தியில்

( சிவராசன் சென்னையிலிருந்து இலங்கையிலிருக்கும் பொட்டுஅம்மானுக்கு கம்பியில்லாத் தந்தி வழியாக அனுப்பியதாக சொல்லப்படும் சங்கேதச் செய்தியை இடைமறித்து ஆராய்ந்து பார்த்து உருவாக்கிய ஆவணம்) கொலைச்சதி சிவராசன், தனு,சுபா ஆகிய மூவருக்கு மட்டும்தான் தெரியும் என பதிவாகி உள்ளது. இந்த கூற்றை வழக்கினை விசாரித்த நீதிபதிகளும் ஒத்துக்கொண்டுள்ளார்கள். எனவே கொலைச்சதி பற்றி பேரறிவாளனுக்கு எதுவும் தெரியாது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாக இருக்கிறது. “குற்றமனமில்லா செயல் குற்றமென ஆவதில்லை “(actus non facit reum nisi mens sit rea- The intent and the act must both concur to constitute the crime –The act itself does not make a man guilty unless his intention were so –An act does not make one guilty unlees the mind is also guilty) என்ற சட்ட முதுமொழிகேற்ப பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சட்டகோட்பாடுகளின் மீதும், இயற்கை நீதியின் மீதும் அரசியலும், அதிகாரமும் நிகழ்த்திய வன்முறையாக பேரறிவாளனின் வாதங்கள் யாராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புரை (Pachan singh vs State of Punjab) பேரறிவாளன் வழக்கில் பின்னுக்கு தள்ளப்பட்டதில் இருந்து நியாயமும், நீதியும் மட்டுமே தண்டனையையும், விடுதலையையும் முடிவு செய்வன அல்ல என்பது முடிவாகி இருக்கிறது.

பேரறிவாளனுக்கு கிடைத்திருக்கும் தூக்குத் தண்டனை என்பது தடா சட்டத்தின் அடிப்படையில் பெறப்பட்ட வாக்குமூலங்களை அடிப்படையாக வைத்து வழங்கப்பட்டது ஆகும். தடா சட்டம் மிகக் கொடுமையான ஒன்று என்பதிலும், அது அரசியலைப்பு சட்டத்திற்கே முரணானது என்பதிலும் யாருக்கும் இருவேறுபட்ட கருத்துக்கள் இருக்க முடியாது. இக்கருத்தினை அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் எஸ்.பி சவாண் தடாச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என பாரளுமன்றத்திலேயே ஒத்துக் கொண்டார். (19-08-1994 மாநிலங்களவையில்). போலீஸ் அதிகாரிகளிடம் கொடுக்கப்படும் வாக்குமூலம் சாதாரண சட்டங்களின் படி நீதிமன்ற சாட்சியமாக ஏற்றுக் கொள்ளப்படக்கூடாது. (A confession made to a police officer is irrelevant-sec 25 Indian Evidence Act 1872 ) ஆனால் தடா என்ற ஆட்தூக்கி சட்டத்தின் வாயிலாக( பிரிவு 15 தடா சட்டம்) போலீஸ் அதிகாரிகளிடம் பேரறிவாளன் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம் அவருக்கு எதிராக நீதிமன்ற சாட்சியமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

தான் நிரபாரதி என்பதற்கு அனைத்து விதமான காரணங்களையும் தன் முறையீட்டு மடல்களில் பட்டியலிடுகிறார் பேரறிவாளன். ஆனால் ஒரு எளிய மனிதனின் நியாயங்களை கேட்பதற்கும், அவரது துன்பச் சூழல்களையும் போக்குவதற்கும், நெடிய சிறை தந்த காயங்களை ஆற்றுவதற்கும் ஆள்வோருக்கு விருப்பமில்லை. அண்ணா நூற்றாண்டு விழாவினை ஒட்டி தன்னை விடுவிக்க கோரி தமிழக முதல்வருக்கு எழுதியிருக்கின்ற முறையீட்டு மடலில் பேரறிவாளனின் ஆழமான புரையோடிப் போன காயத்தின் வலி தெரிகிறது. தேர்ந்தெடுத்த வார்த்தைகளில் தானும் தன் குடும்பமும் அனுபவித்து வரும் சொல்லவியலா துன்பத்தினை வடித்து இருக்கிறார் அறிவு. அந்த மடலில் தனக்கென கொள்கை பின்னணி இருந்ததே ஒழிய அரசியல் பின்னணி- செல்வாக்கு ஏதுமில்லை என குறிப்பிடுகிறார். உண்மைதான். பட்டப்பகலில் பத்திரிக்கை அலுவலகத்தினை தாக்கி 3 பேரை கொன்று விட்டு வரும் நபர்களுக்கு கூட மிக எளிதாக விடுதலை கிடைத்து விடும் இந்த நாட்டில் எந்த குற்றமும் செய்யாமல் 15 வருடமாய் சிறையில் வாடும் எளிய நிரபாரதிக்கு நியாயம் கிடைத்து விடுமா ..என்ன.?

பேரறிவாளன் தனது முறையீட்டு மடலில் தன்னை மொழி, இனப் பற்றாளன் என்றும், தொப்புள் கொடி உறவான தமிழீழ மக்கள் படும் இன்னல்களை போக்க உலகத் தமிழர்கள் போல தன்னால் இயன்றதை செய்பவன் எனவும் அடையாளம் காட்டியுள்ளார். இவ்வாறு பிறந்து வாழ்ந்ததுதான் பேரறிவாளன் செய்த ஒற்றை குற்றம். உண்மையான மொழி, இனப்பற்றாளர்கள் ஆளும் அதிகார வர்க்கத்தினரால் கொலைகாரன் ,கொள்ளைக்காரன் என பட்டங்கள் சூட்டி கொல்லப்படுவார்கள். இல்லையெனில் தீவிரவாதி என சிறைப்படுத்தப்படுவார்கள். அதுவும் இல்லையென்றால் அண்ட சராசரங்களையும் ஆட்டிப்படைக்கிற வல்லாதிக்க நாடாக வளர்ந்து வருகிற இந்திய திரு நாட்டின் இறையாண்மை ஒரு எளிய கிராமத்தில் பிறந்து, வளர்ந்து போராடி ஒரு இயக்குனராக உயர்ந்து ..காலத்தின் கோலமாய் இனம் அழிந்த சோகத்தில் இனி அழியாமல் இருக்க ஒரு அமைப்பினை கட்டி.. இளைஞர்களை சேகரித்து ..களமாடி வருகிற செந்தமிழன் சீமானின் தன் சகோதரன் கொல்லப்படுகிறானே என்ற வேதனையில் உதிர்த்த சொற்களில் இருக்கிறது என கூறி சிறையில் போடுவார்கள். வேதனை.

பேரறிவாளனின் தாயார் அற்புதம் அவர்களை நாம் தமிழர் கட்சி நிகழ்வுகளிலும், உணர்வாளர்களின் திருமணங்களிலும் நான் சந்தித்திருக்கிறேன். கண்களில் நிரந்தரமாக தங்கிவிட்ட சோக நிழலினை காட்டிக் கொள்ளாமல் அனைவரிடமும் அன்புடன் பழகும் அற்புத தாய் அவர்கள். வயதான அந்த தாய் தன்னுடைய நிரபாரதியான மகனுக்காக இன்றளவும் ஒரு நெடிய போராட்டத்தினை மேற்கொண்டு வருகிறார். தன்னுடைய மகன் தலையின் மேல் தொங்கிக் கொண்டிருக்கும் தூக்குக் கயிற்றின் நிழலினை அகற்றிட ஒய்வு எடுக்க வேண்டிய வயதில் போராடிக் கொண்டிருக்கிறார் .ஒரு நாள் அவர் என்னிடம் சொன்ன “ ரொம்ப அலைஞ்ச்சிட்டேன்பா” என்ற சொற்கள் என்னை இன்றளவும் தூங்க விடாமல் அலைகழிக்கின்றன. கடுமையான மன உளைச்சலும், நெடிய சிறைவாசம் தந்த சோர்விலும் இருந்தாலும் பேரறிவாளன் சிறையில் ஒரு நன்னடத்தை உடைய மனிதனாக வாழ்ந்து இளநிலை கணி செயல்முறையியல் (B.C.A) படிப்பினை இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைகழகத்தின் மூலம் 3 ஆண்டுகள் படித்து முடித்து பட்டம் பெற்றுள்ளார். அத்தோடு 5 க்கும் மேற்பட்ட சான்றிதழ் கல்வியையும் இந்த துயர் மிகுந்த இடைப்பட்ட காலத்தில் முடித்துள்ளார். பேரறிவாளன் 10 ஆம் வகுப்பு படிக்கும் போது அரசு இறுதித் தேர்வில் பள்ளியின் இரண்டாவது மாணவனாக வந்திருந்து ஜேசிஸ் சங்க விருது பெற்றிருக்கிறார். N.C.C என்ற தேசிய மாணவர் படையில் இணைந்திருந்து உயர்நற்சான்றிதழ்களை பெற்றிருக்கிறார். இன்றளவும் சிறை வாழ்க்கையில் சிறையில் உள்ள நூலகத்தினை பராமரித்து வருகிறார். அங்கு வந்திருக்கும் அனைத்து புத்தகங்களையும் வாசித்து விட்டு குறிப்பு எடுத்து வைத்திருக்கிறார். சிறை வாழ்க்கையில் சக கைதிகளுக்கு சான்றான நபராக இருப்பதோடு..சக மனிதர்களின் மீட்சிக்காகவும் உழைத்து வருகிறார். அப்பழுக்கில்லாத அந்த மாமனிதனின் விடுதலையை கோர வேண்டியது மனசாட்சி உள்ள மானுட கடமையாக இருக்கின்றது.

குற்றம் செய்யாத ஒரு எளிய மனிதனை, அவரது வயதான தாயை அலைகழிப்பதும், மரணத்தின் பெயரைச் சொல்லி மிரட்டுவதும்தான் உயர்ந்த மாண்புகள் பெற்றிருக்கும் ஒரு ஜனநாயக நாட்டின் நீதி என்றால் நாம் வாழும் நாடு நாடல்ல என்பதனை நாம் உணர வேண்டும் . தூக்குத் தண்டனையை உலகத்தில் பெரும்பாலான நாடுகள் அகற்றி மனித உரிமைகள் மீதான தங்களது அக்கறையை வெளிப்படுத்தி கொண்டிருக்கும் இவ்வேளையில் இன்றளவும் தூக்குத் தண்டனை வழங்கிக் கொண்டிருக்கும் மூர்க்கத்தனமான ,பிற்போக்கு அம்சங்கள் உடைய நீதி பரிபாலன கட்டமைப்பை நாம் பெற்றிருக்கிறோம் என்பது மிகவும் சிந்திக்க வேண்டியது. மரண தண்டனையை ஒழிக்கும் போராட்டத்தின் மிக முக்கியப் புள்ளியாக பேரறிவாளனின் இந்த நூலை கொள்ளலாம்.

தூக்கு கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல் என்ற நூலில் மனித உரிமைகள் மீது மிகுந்த அக்கறை காட்டும் நீதியரசர் டி. ஆர்.கிருஷ்ணய்யர் , நீதியரசர் எச்.சுரேஷ் உள்ளீட்ட பல அறிஞர் பெருமக்கள் அணிந்துரை வழங்கியுள்ளார்கள். அணிந்துரைகளின் வாயிலாக வலியுறுத்தப்படும் கருத்துக்கள் மனித உரிமைகள் மீதும், அதன் விழுமியங்கள் மீது ஆர்வம் உள்ளோர் மிகவும் ஆழமாக கற்க வேண்டியவை ஆகும். பல்வேறு சமயங்களில் பேரறிவாளன் எழுதியுள்ள முறையீட்டு மடல்கள், விண்ணப்பங்களின் தொகுப்பாக இந்த நூல் வெளிவந்திருக்கிறது. ராஜீவ் கொலை வழக்கில் தான் சிக்குண்ட விதம் குறித்தும், எவ்வாறெல்லாம் விசாரணை என்ற பெயரில் தான் கொடுமைப்படுத்தப்பட்ட விபரங்களையும் இந்த மடல்களில் அறிவு மிக விளக்கமாக எடுத்தியம்பி உள்ளார். அவரது முறையீட்டு மடல்களும், விண்ணப்பங்களும் கெஞ்சல்களும், புலம்பல்களும் நிறைந்த இரங்கத் தக்க மனுக்களாக இல்லை. மாறாக இந்த உலகத்தில் தான் வாழ்வதற்கான உரிமை கோரும் ஒரு மனிதனின் நேர்மையான கோரலாக இருக்கிறது. இந்த நூல் தனிப்பட்ட ஒருவர் தூக்குத் தண்டனையில் இருந்து தப்பி செல்வதற்கான வழியாக விரியவில்லை. மாறாக ஒழிக்கப்பட வேண்டிய மரணதண்டனையை எதிர்க்கவல்ல இயக்கமாகவும் இந்த நூல் விளங்குவது சிறப்பு. இந்த நூல் ஆகாயம் வரை உயர்திருந்து பளபளக்கும் இந்தியாவின் நீதிமன்றங்கள் போற்றும் மாட்சிமை நிறைந்த நீதி பரிபாலனத்தின் மனசாட்சியில் வடுவாக நிலைத்திருக்கிறது.

நூல் முழுக்க அரசு தரப்பின் குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் ஆதாரப்பூர்வமாக பதில் அளித்து, சட்டத்தின் முன்பாகவும், இந்த சமூகத்தின் முன்பாகவும் வினாக்களை வைத்து காத்திருக்கிறார் பேரறிவாளன். அவரது விளக்கங்களைப் படித்து இந்திய நீதிமன்றங்களின் இரண்டு புகழ்ப் பெற்ற நீதியரசர்கள் இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ளார்கள். இந்த ஒற்றை நூலை படித்தால் போதுமானது. பேரறிவாளனின் விடுதலை என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் அறியலாம். தமிழனாய் பிறந்த ஒவ்வொருவரும் படித்து.. உணர வேண்டிய உணர்ச்சியாக.. அவரவர் உள் மனச் சான்றினை உலுக்கி எடுக்கும் வினாவாக இந்த நூல் அமைந்திருக்கிறது.

இனத்தின் மேலும், இந்த மொழியின் மீதும் பற்று வைத்து ஒரு முற்போக்கு குடும்பத்தின் மகனாய் பிறந்து தான் எந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டோம் என்று இன்றளவும் யோசித்துக் கொண்டிருக்கிற துயரோடு வாழும் பேரறிவாளனின் ஆன்மா நீதிபதி கிருஷ்ணய்யர் சொன்னது போல உயர்வானது. பேரறிவாளனின் துயர் மிகுந்த இருட்டில் உலக வெளிச்சம் பட வேண்டும் . உலகமெங்கும் இயங்கும் மனித உரிமை அமைப்புகளுக்கு பேரறிவாளனின் துயர் சேர வேண்டும். இந்த புனிதக் கடமையை உலகத் தமிழர்கள் தாங்களாக முன் வந்து செய்ய வேண்டும். இந்த நூல் ஆங்கிலத்திலும் மொழிப்பெயர்க்கப்பட்டு கிடைக்கிறது.

ஒரு மனித உயிரை பறிக்க நம் நாட்டு சட்டங்களும், நீதிமன்றங்களும் வைத்திருக்கும் அளவு கோல்கள் மிகவும் அபாயகரமானவை. பெரும்பாலான சமயங்களில் குற்றமற்றவர்களே சிக்கிக் கொள்ளும் வகையில் தூக்குமேடையின் உயரம் மிக அருகில் இருக்கிறது. இதனால் தான் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. மரணவாசல் அருகே வரை சென்று விட்டு இன்று தமிழ்த் தேசிய அறிவுலகின் ஆளுமையாக திகழ்ந்து வரும் தோழர். தியாகு இதற்கு மிகச் சரியான உதாரணம். கண்டிப்பாக பேரறிவாளனுக்கு சீர்க்கெட்டு கிடக்கும் தமிழ் உலக சூழலில் தேவை இருக்கிறது. நிச்சயமாக பேரறிவாளன் எங்களுக்கும் , எம் தமிழ்ச் சமூகத்திற்கும் அவசியத்தேவையாக இருக்கிறார். அனைத்திற்கும் மேலாக நீதியின் மேலும் ,இந்த தமிழ்ச் சமூகத்தின் மேலும் நம்பிக்கை வைத்து வயது முதிர்ந்த நிலையி்லும் எப்படியாவது குற்றம் செய்யாத தன் மகன் விடுதலை ஆகி விடுவான் என்ற எண்ணத்தின் உச்சியில் கனவை சுமந்து நிற்கும் எங்கள் தாய் அற்புதம் அவர்களுக்காகவது…

சிதிலமடைந்த உச்சியில்

சுழற்றி அடிக்கும் சூறைக்காற்றில்

அலைந்தெரியும் தீபம்.

பேரறிவாளன் திரு.

(தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல் – அ.ஞா.பேரறிவாளன். வெளியீடு: திருவள்ளுவர் பெரியார் மானுட ஒன்றியம். விலை.ரூ.60. மேலதிக தகவல்களுக்கு : அற்புதம் குயில் தாசன் 11,கே.கே.தங்கவேல் தெரு,பெரியார் நகர், சோலையார் பேட்டை-635851 .www.hang-hanging.com,perarivalan.blogspot.com)

தீபச் செல்வன் – வலிச்சொற்களில் கனன்றுக் கொண்டிருக்கும் கனவு.






கனவு நிலத்தில் பேய்களின் நிழல் படர்ந்து ஆக்கிரமிக்க முயல்கிறது
குழந்தைகளின் நிலக்கனவு தகிக்கிறது.
நாம் பார்த்துக் கொண்டிருக்க
பூர்வீக நிலத்தை அள்ளிச் செல்லும் பொழுது
குழந்தைகளின் கண்களை பொத்திக் கொள்வதா? – தீபச் செல்வன்






துயர் மிகுந்த உண்மை படைப்பாய் மிளிரும் போது நன்றாக இருக்கிறது என்று கைக் குலுக்க முடியவில்லை. கண் கலங்கத்தான் முடிகிறது. என் சகோதரன் தீபச் செல்வன் சொற்களில் ஈழத்து துயரம் பெருக்கெடுக்கையில் மிகுந்த குற்ற உணர்வோடு என் வாசிப்பு அனுபவம் நிகழ்கிறது. ஒவ்வொரு வரியின் ஊடாக ஆழமாக நாம் ஊடுரும் போது ஈழத்து உறவின் சதை துணுக்கு ஒன்று நம் முகத்தில் அறைந்து நம்மை திடுக்கிட வைக்கிறது. எதனால் நடந்தது..எப்படி முடிந்தது என ஆய்வுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டது நிகழ் காலத்தின் துயர். அந்த துயரின் சாட்சியாக தீபச்செல்வனும்..அவரது சொற்களும் எவ்வித ஒப்பனையும் இல்லாமல் நிற்கிறார்கள்.

உண்மை இவ்வாறாகத்தான் இருக்கிறது. ஒப்பனைகள் ஏதுமில்லாமல்..வார்த்தை மயக்கங்களை கடந்து ..தனியே நிற்கிறது அது. ஈழத்து துயரங்களின் ரத்த சாட்சியாய் தீபச் செல்வனின் எழுத்துக்கள் உறைந்திருக்கின்றன. எம்மைப் போன்ற தாயகத்து தமிழனுக்கு தன் வாழ்நாளில் அகற்றவே முடியாத கனத்த சங்கிலியாய் ஈழத்து அழிவினை வேடிக்கை பார்த்த குற்ற உணர்வு கனக்கும். எம்மால் எதுவும் இயலவில்லை என்பது போதுமான சமாதானமா என்ன..? அல்ல.

ஆனால் தீபனின் எழுத்துக்கள் வெறும் தகவல்களாக இல்லாமல் அழிந்த ஒரு பெரும் நிலத்தின் அழிவை நிர்வாணமாக்குகின்றன. யுத்தம் முடிந்த பின்னரும் இன்றளவும் நம் உறவுகள் மீது தொடுக்கப்படும் உளவியல் போர் நடந்து முடிந்த கோர அழிவை விட மிக மோசமானது. கந்தல் உடைகளோடு..முள்வேலிகளுக்கு நடுவில்..வெறித்த பார்வைகளுடன் மனிதன் உலவும் ஒரு நிலத்தினை அவர்களுக்கு மத்தியில் இருந்து தன் எழுத்துக்கள் ஊடாக காட்சிமயப் படுத்துவதன் வலி மிகக் கொடுமையானது. வலி சுமந்து வரும் தீபனின் எழுத்துக்கள் யாருக்கும் எப்போதும் ஆறுதலை தரப் போவதில்லை. மாறாக நீங்கவே இயலாத குற்ற உணர்வினை நம்முள் விதைத்து விட்டு போகின்றன அவை.

லும்பினி தளத்திற்காக சோபா சக்திக்கு தீபச் செல்வன் வழங்கிய பேட்டி துரோகத்தனங்களால் அப்பி கிடக்கிற இருட்டினை சுட்டெரிக்கும் நெருப்பாய் தகிக்கிறது. நம் சம காலத்தில் வாழ்ந்த நம் சகோதர, சகோதரரிகள் கற்பனைக்கும் எட்டாத தியாக உணர்வோடு தாய்நாட்டின் விடுதலைக்காக போரிட்டு வீர மரணம் அடைந்திருக்கிறார்கள் என்ற உணர்வு துயர் மிகுந்த இக் காலத்திலும் பெருமிதம் கொள்ள செய்கிறது. விடுதலைப் புலிகள் மக்களிடமிருந்துதான் தோன்றினார்கள்…மக்களிடையே வாழ்ந்தார்கள்..மக்களுக்காக போரிட்டார்கள் என்ற உண்மையை அழிக்க எதிரியை விட இன்று துரோகிகள் தான் வெகுவாக உழைக்கிறார்கள். இணையத் தளங்கள் ஊடாக விஷச் செடியாய் முளை விட்டு கிளைத்து பரவும் இவர்களின் அவதூறுகளின் சாரம் உண்மைக்கு எதிர்மாறானது . எந்த இனத்திற்கும் நேர்ந்து விடக் கூடாத பிழை என நான் கருதுவது இதுதான். எதிரிக்கு மிக எளிதாக நம்மினத்தில் கிடைத்த விஷயம் துரோகம். தமிழர்கள் எவ்வித துயரும், நிர்பந்தமும் இல்லாமல் தமக்கு எதிராகவே தாங்களே துரோகமிழைத்துக் கொண்டார்கள். கொள்கிறார்கள் என்பதனை நாம் தலைக் குனிந்து ஒத்துக் கொள்ளத்தான் வேண்டி யிருக்கிறது.

இன்றளவும் எதிரி கரங்களில் சிக்கிக் கொண்டு..எதிரியின் குரலாய் ஒலிக்கிற குரல்கள் கூட விடுதலைப் புலிகள் இயக்கத்தினைப் பற்றியும் , அதன் மாபெரும் தலைமைப் பற்றியும் சுட்டு விரல் கூட நீட்ட முடியவில்லை என்பதில் தான் அடங்கி இருக்கிறது ஒரு இனத்தின் தியாக வரலாறு. மற்றபடி இணையத்தளங்களின் ஊடாக பழி சொல்பவர்களின் வினாக்களுக்கு விடையாக இருக்கிறது போராளிகளின் வாழ்வும் கனவும். தீபச் செல்வன் அந்த வாழ்வினை தன் கண்ணெதிரே கண்டிருக்கிறார். விடுதலைப்புலிகள் இயக்கம் வெற்று தீவிரவாதத்தின் மீது நம்பிக்கைக் கொண்டு சாகச மயக்கங்களின் ஊடாக வளர்ந்த இயக்கமல்ல . மாறாக தியாக உணர்வின் அடித்தளத்தில் தாயக விடுதலைக்காக..இனி இழப்பதற்கு எதுவுமில்லை. ஆனால் அடைவதற்கு ஒர் கனவு இருக்கிறது. அது எம் மக்களின் சுதந்திரம் என்ற முழக்கத்தோடு மக்களிடையே கனவாய் துளிர்த்து ..நினைவாய் நிறைவேறி ..நாடாய் நகர்ந்த இயக்கம். அதைத்தான் தீபச்செல்வன் பதிவு செய்கிறார். புலிகளின் இருப்பற்ற ஒரு சூழலில் இன்றும் சாதீய நுண் அரசியல் பேசும் மாமேதை மார்க்ஸ் உள்ளீட்ட மாமனிதர்கள் மக்களின் துயரங்களைப் பற்றியோ..போரைப் பற்றியோ பேசுவதில்லை. புலிகளின் இருப்பற்ற சூழலிலும் …தாயக விடுதலைக்காக களமாடி ..கனவோடு புதைந்த மாவீரர்களின் பெரு மூச்சுக் காற்று கூட இவர்களுக்கு அச்சமூட்டுகிறது. அதனால்தான் இல்லாத..மெளனித்த போராளிகள் மீது களங்கம் கற்பிக்க ஓடி வருகிறார்கள் இவர்கள்.

தீபச்செல்வனின் லும்பினி செவ்வி இது வரை விவரிக்காத ஒரு உலகினை நமக்கு காட்டுகிறது. அறிவுலகின் அனைத்து ஆடம்பரங்களையும் தகர்த்து எறிந்து விட்டு ..மென்மையாக சோபாசக்தியின் கேள்விகளை எதிர் கொண்டிருக்கிறார் தீபன். போரினால் நேரடி அலைகழிப்பிற்கும்..அவலத்திற்கு உள்ளான ஒரு மனம்.. இத்தனைக்கு பிறகும் கூட.. இன்றளவும் தன்னுடைய தன்னுரிமை தாகத்தினை இழக்காமல் தக்க வைத்துக்கொள்ள போராடும் போராட்டத்தினைத்தான் தீபச் செல்வனின் வார்த்தைகளில் தெரிந்தது. விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒடுக்கப்பட்ட மக்கள் நிரம்ப இருந்தார்கள் என்ற உண்மையை சாதீயம் பேசி ..சிங்களவனுக்காக சாதிக்க துடிக்கும் துரோகிகளால் ஏற்க முடியாதுதான். அதனால் தான் தீபச் செல்வன் இவர்களுக்கு ஆபத்தானவராக தெரிகிறார். ஏனெனில் உண்மை இலட்சியமாக துலங்குகிறது. அது கோபமாக..போராக மலர்கிறது. உண்மை இவர்களைப் பொறுத்தவரை பிழைப்பிற்கான உத்திரவாதங்களை தருவதில்லை. அதனால் தான் சிங்களன் சிந்தும் சில்லறைகளுக்கு..(சில்லறைகள் எந்த வடிவத்திலும் இருக்கலாம்) விலை போய்.. பொய் பேசி பொல்லாங்கு வளர்க்கிறார்கள். ஆனால் தீபச் செல்வன் கனத்த இதயத்தோடு சொற்களை இறைக்கிறார். ஒவ்வொரு பதிவும் காலத்தினை..களத்தினை..காயத்தினை விவரித்தவாறே நகர்கிறது.

தீபச் செல்வன் மிகத் தெளிவாக கூறுகிறார்.” சாதியம் குறித்து விடுதலைப் புலிகளுக்கு நல்ல புரிதல் இருந்தது. அமைப்பில் தலைமை வகித்தவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்தவர்கள். இந்த உண்மை புலிகள் மீது அவதூறாய் பேசிய நாக்குகளில் திராவகம் பூசுகின்றது. சாதீ உணர்வினை மையமாக வைத்து சாதி நுண் அரசியல் பேசும் சகலமானவர்களுக்கும் இச் சொற்கள் சங்கடத்தினை அளிக்கின்றன. அவர்களின் அறிவுஜீவி முகமுடியில் அப்பட்டமாய் உண்மை கோடு கிழிக்கிறது. இன்றளவும் இங்கே தமிழகத்தில் தீண்டாமையை ஒழிக்க டீக் கடைகள் தோறும் போய் ஆய்வு நடத்த வேண்டியிருக்கிறது. ஆனால் ஈழத்தில் நம் சகோதரர்கள் அதை சாதித்தே விட்டிருந்தார்கள். அதை தீபச் செல்வன் மிக நேர்மையாக பதிவு செய்துள்ளார்.(“ஈழப்போராட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முக்கிய நடவடிக்கையாயிருந்தது. விடுதலைப் புலிகள் காலத்தில் சாதிய ஒடுக்குமுறை குறைந்திருந்தது. வன்னியில் தீண்டாமை முற்றாக ஒழிந்துவிட்டதைப் பார்த்திருக்கிறேன். “)

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசினால் புலத்திலிருந்து பணம் வருகிறது என்று பேசுபவர்களால்..விடுதலைப்புலிகளை எதிர்த்து பேசி அவதூறு பரப்பினால் சிங்களம் பணம் தருகிறது என்று நாங்கள் சொன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இன்றளவும் மக்களால் புலிகளின் தியாகத்தினை நினைக்காமல் இருக்க முடியாததை தீபச்செல்வன் தன் செவ்வியில் பதிகிறார். முள்வேலிக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் மக்களுக்கு மரணம் கூட ஆறுதலாக போய் விட்ட நிலையிலும்… பதிவுகளை தொடர்ந்துக் கொண்டிருக்கிறார் தீபன்.

தீபச்செல்வனின் சொற்கள் ஒரு ஓவியமாய் மக்களின் அலைகழிப்பினை பதிவு செய்கின்றன. மிக எளிதாக கடந்து விட முடியாத அளவிற்கு தீபனின் சொற்களில் உண்மை உருவேறி கிடக்கிறது. வலியோடிய வாழ்க்கையில் தப்பித்தவறி குழந்தைகள் முகத்தில் துளிர்க்கிற சிறு புன்னகை கூட தீபச்செல்வனின் வார்த்தைகளில் நமக்கு வலியைத்தான் தருகின்றது. ஒரு காலத்தின் பதிவாய் என்றென்றும் தீபச் செல்வனின் எழுத்துக்கள் அழியாத சாட்சியமாய் இருக்கும். அவை என்றென்றும் உண்மையை உரத்துப் பேசி …வீரம் செறிந்த இளைஞர்கள் மீதான பெருமித இருப்பினை தக்க வைக்கும்.

தீபச் செல்வன் வாழும் வாழ்க்கையும்..உதிர்க்கும் சொற்களும், கடுமையான மிரட்டல்களுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் மத்தியில் எழுபவை என்பதை நாம் நினைத்துப்பார்க்காமல் இருக்க முடியவில்லை. கடுமையான அச்சுறுத்தல்களுக்கு நடுவிலும்..ஒரு படைப்பாளியாக தான் வாழும் காலத்து வாழ்க்கையை…மக்களை..வலிகளை பதிவு செய்வது தன்னுடைய கடமையாக கருதுவது தீபச்செல்வன் மேல் நமக்கிருக்கும் மதிப்பு மேலும் அதிகரிக்கிறது. படைப்பாளி என்ற உடன் இசங்கள் பேசி கசங்களாக திரியும் நம்மூர் ஜிப்பாக்களை பற்றி யாரும் நினைத்து விட வேண்டாம்.

தீபச் செல்வனின் கவிதைகள் அசாதாரணமானவைதான். படைப்புகளின் இலக்கணமாக கொண்டாடப்படவேண்டியவைதான். ஆனால் இப்படி அசாதாரணமானவை உருவாவுவதற்கு ஒரு இனம் அழிய வேண்டியிருக்கிறது என்ற நினைவினையும் தீபச் செல்வன் ஏற்படுத்துவதுதான் நம்மை நிம்மதியிழக்க செய்கிறது. தீபச்செல்வன் துயரோடிய சொற்களோடு உண்மையின் தூதுவனாக வருகிறார். அவரது சொற்கள் நம் கனவுகளிலும் வலி விதைக்கும் துயராய் இருக்கின்றன. இந்த துயரும் ,வலியும் தான் எம் இனத்தின் வரும் காலத்திற்கான மூலதனமாய் இருக்கின்றன. தீபச்செல்வனின் வலிச் சொற்களில் தாயக விடுதலைக்கான கனவு கனன்றுக் கொண்டே இருக்கின்றது . கனன்று கொண்டிருக்கும் தீபனின் சொற்கள் உதிர்க்கும் வெப்பம் விடுதலை உணர்வினை துரோக தூறல்களால் ஈரமடைய செய்யாமல் உலர்வாக வைத்திருக்கின்றன.

தீபச்செல்வன் மீது யாரும் அவதூறுகளை அள்ளி வீச எம்மால் பார்த்திருக்க இயலாது. ஏனெனின் தீபன் ஒற்றை மனிதனல்ல. அவன் சுமக்கும் வார்த்தைகளும்..வலிகளும் தான் நாங்கள் மீள் எழ நினைப்பதற்கான துவக்கப் புள்ளி. அந்த வகையில் அவன் தான் நாங்கள். நாங்கள் தான் அவன்.


மணி.செந்தில்

http://lumpini.in/sevvi_003.html

தமிழ்த் தேசியமும் முஸ்லிம்களும் – விஷமிகள் விவரிக்கும் கற்பித முரண்



“சிங்களவன் போட்டக் குண்டில்

50 பேர் பலியானார்கள்.

500 பேர் புலியானார்கள்” ‍- பேரா.ஹாஜா கனி

ஒவ்வொரு தேசிய இனமும் தன் அடையாளங்களையும், தன் பண்பாட்டு விழுமியங்களையும் காப்பாற்ற போராடத் துணிந்திருக்கும் இவ்வேளையில் தமிழ்த் தேசிய சிந்தனை மென்மேலும் தன்னகத்தே செழுமை அடைந்து விரிவடைவதை நாம் காண்கிறோம். நடந்து முடிந்திருக்கும் ஈழப்போரும், அதில் தமிழர்கள் அடைந்த பின்னடைவும் தமிழ்த் தேசிய சிந்தனையினை மேலும் கூர்மைப்படுத்தி இருக்கிறது. ஒரு தேசிய இனம் தனக்கான அடையாளங்களை பாதுகாக்க முனைவதும், தன் மொழியின் அடிப்படை சாரத்தினை அறிவியல் உச்சங்களில் ஏற்றி வாழ வைப்பதற்கான தகவமைப்புப் போராட்டத்தில் ஈடுபடுத்துவதும் இயல்பானதே. இந்நிலையில் இனம் குறித்த வரையறைவியலில் தவறான பிரச்சாரங்களைப் போதிப்பதன் மூலம் பெருகி வரும் தமிழ்த் தேசிய ஓர்மையினை மதம், சாதி போன்ற சமூக உள்ளடுக்கு முரண்களை முன்னிறுத்தி முறியடிக்க முயன்றிருக்கும் ஆபத்தானவர்கள் கருத்து நிலையின் துவக்கத்திலேயே வீழ்த்தப்பட வேண்டியவர்கள் ஆகிறார்கள்.

பூர்வக் குடி மக்களிடையே அயலார் ஊடுருவல் வழியாய் உருவாகும் சாதி, மதம் போன்ற சமூக குழுக்கள் நாளடையில் அந்த மக்களிடையே உருவாகி இருக்கவேண்டிய உரிமை சார்ந்த ஓர்மை உணர்விற்கு மிகப்பெரிய சவாலாய் மாறுகின்றன. இந்த மண்ணில் பூர்வக் குடிமக்களாகிய தமிழர்கள் மீது ஆரியர் உள்ளிட்ட அயலார் படையெடுப்புகள் மூலமாகவே சாதிக்குழுக்கள், மதப்பிரிவுகள் தோன்றின என்பதற்கான அனைத்து சாட்சியங்களும் ஏற்கனவே பல ஆராய்ச்சியாளர்களால் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. தமிழர் மெய்யியல் வரலாற்றில் சாதிக்கு இடமில்லை என்பதும், இந்த பரந்துபட்ட நிலப்பரப்பில் காலத்தால் பழைமை உடையதாகக் கருதப்படும் சமண, பெளத்த மரபுகளுக்கு மூத்தது தமிழர் மெய்யியல் என்பதும் ஆசீவகம் என்றும், தமிழர் அணுவியம் என்றும் அழைக்கப்படும் இந்த சிந்தனை தமிழர்களுக்கான மெய்யியல் அடையாளமாய் இருந்திருக்கிறது என்பதும் புத்துலக சிந்தனையாய், ஆய்வாய் உருவாகி வருகிறது. (ஆசீவகம் என்னும் தமிழர் அணுவியம் –பேரா.க.நெடுஞ்செழியன், மனிதம் வெளியீடு).

இச்சூழலில் இந்த மண்ணின் பூர்வகுடி தமிழர்களான முஸ்லிம்களை தமிழ்ச் சமூகத்திலிருந்து பிரித்தெடுக்கும் நாசகார வேலையை அ.மார்க்ஸ் போன்ற மூன்றாம் தர பிழைப்பு ஆய்வாளர்கள் செய்யத் துவங்கி உள்ளார்கள். மொழி, இனம், குடும்பம் போன்ற அனைத்துமே கற்பிதம் என உச்சாணிக் கொம்பில் ஏறிக்கொண்டு உரத்துப் பேசும் அ.மார்க்ஸ்க்கு மதம் மட்டும் சமீப காலமாக இனிக்கும் காரணியாக மாறிப் போனதன் உண்மை அனைவரும் அறிந்ததே. அ.மார்க்ஸ் போன்றவர்கள் மதத்தினை முன் வைத்து இயங்கி இனத்தினைப் பிரிக்கும் விஷமிகள், மத அடிப்படைவாதிகளை விட அபாயமானவர்கள்.

முஸ்லிம்கள் இந்த மண்ணின் பூர்வீகத் தமிழர்கள் என்பதும் அவர்கள் தமிழ்த் தேசிய தன்னுரிமைப் போராட்டத்தில் தங்களுக்குரிய பங்கினை நிறைவாகவே செய்து வருகின்றனர் என்பதனையும் யாராலும் மறுக்க இயலாது. மதம், சாதி போன்றவை தமிழ் இன வரலாற்றில் இடையில் தோன்றிய முரண்கள் ஆகும். மேலும் இந்து மதம் கடைப்பிடிக்கும் வர்ணாசிரமக் கோட்பாடுகளுக்கு எதிராகவே தமிழர்களின் பூர்வீக மெய்யியல் வரலாறு இருந்திருக்கிறது. எனவே இந்து மதத்தில் நிலவும் சாதீய ஏற்றத்தாழ்வும், இதர சமூகக் காரணிகளுமே தமிழர் முஸ்லிம்களாக‌, கிருத்துவராக மதம் ஏற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்பதும் உண்மை. எனவே பூர்வீகத் தமிழர்களான முஸ்லிம்களை தமிழ்த் தேசிய ஓர்மைச் சிந்தனைக்கு எதிராக முன்னிறுத்துவதன் அரசியல் இன எதிரிகளிடம் எவ்விதக் கூச்சமுமில்லாமல் நக்கிப் பிழைக்கும் பிழைப்புவாதிகளைச் சார்ந்தது.

தமிழ்த் தேசிய சிந்தனை மரபின் அளவுகோல் முழுக்க முழுக்க சமூக அறிவியலை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது. ஆனால் மதங்களின் அளவுகோல் அவ்வாறல்ல. குறிப்பாக இந்து மதத்தின் அளவுகோல் சாதீய ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கிய வர்ணாசிரமக் கோட்பாடுகளின்படி அமைந்தது. இந்து மத மேலாண்மையை போதிக்கும், பெரும்பான்மை மதவாத சின்னமான ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளை எதிர்த்துத்தான் தமிழ் தேசிய அமைப்புகளின் அரசியல் இருந்து வருகிறது. 1992 டிசம்பர் 6 –ல் பாபர் மசூதித் தகர்ப்பில் ஈடுபட்ட இந்து மத மேலாதிக்கத்தினை ஒற்றைக்குரலாய் எதிர்த்த தமிழர்களின் குரலே இன்றளவும் தமிழ்நாட்டினை மதவாதம் பெருகாத பூமியாய் நிறுத்தி வைத்திருக்கிறது. எனவே தமிழ்த் தேசிய சிந்தனை என்பது மதங்கள் வழி சார்ந்தது அல்ல என்பதும் மதங்களின் மேலாதிக்கத்தினை எதிர்த்து மிகவும் உக்கிரமாக போர் தொடுக்கும் சக்தி என்பதும் இந்த மண்ணில் மதச் சிறுபான்மையான இஸ்லாமியர்களுக்குத் தோழமையான குரல் என்பதனையும் உணர்வு மிக்க தமிழர்களாகிய இஸ்லாமிய உறவுகள் புரிந்தே வைத்துள்ளனர். தமிழர்கள் மதத்தில் இந்துவாக, முஸ்லிம்களாக, கிருத்துவர்களாக இருக்கலாம். ஆனால் இனத்தில் தமிழர்களாக இருக்கிறார்கள்.

இஸ்லாமியர்களில் தமிழ் தேசிய சிந்தனையை உள் வாங்கி தன் இனம் உணர்ந்து இனம் காக்கப் போராடும் வீரர்கள் ஏராளம். ஈழப் போரின் கடைசி கட்ட காலத்தின் தமிழினத்தின் அறம் சார்ந்த உணர்வின் உச்சமாய் நின்ற முத்துக்குமாரின் ஈகைக்கு முன்பாகவே, 1995 ஆம் ஆண்டு சிங்களப் பேரினவாதி சந்திரிக்கா யாழ்ப்பாணத்தின் மீது போர் தொடுத்தபோது சுரணையற்ற தமிழனை சூடேற்ற அன்றும் ஒரு முத்துக்குமார் இருந்தான். அவன் தான் அருமை தமிழின வீரன் அப்துல் ரவூப். அன்றைய காலக் கட்டத்தில் தமிழினத்தினை அழித்தொழிக்கும் சிங்களர்களின் பிள்ளைகள் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு விளையாட்டுப் போட்டிக்கு இந்திய அரசால் அழைக்கப்பட்டிருந்தனர். இந்திய அரசின் இந்த இரண்டக துரோகம் தாங்காமல், இனம் காக்க, தன் சொந்த சகோதர சகோதரிகளின் துயரம் பொறுக்காமல்.., தமிழினத்தினை உசுப்ப தன்னைத் தானே எரித்துக் கொண்டு இந்த மண்ணில் விதையாய் விழுந்த தமிழன் அப்துல் ரவூப்பினை அ.மார்க்ஸ் போன்ற ‘சிறுபான்மை உரிமைகளுக்காக எழுதுகிறேன்’ என்ற போலி முகமூடியில் திடீரென்று வானில் இருந்து குதித்து, இனத்தினைப் பிரிக்கும் பிழைப்புவாதிகளுக்குத் தெரியாது.

மாவீரன் அப்துல் ரவூப்பின் தந்தை, அருமை அப்பா அசேன் முகமது இன்றளவும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவர். அது மட்டுமல்ல தமிழினத்தின் போராளியாக இருந்து கடும் பொடாச் சட்டத்தில் ஜெயலலிதா ஆட்சியில் சிறைப்பட்ட தமிழ் முழக்கம் சாகுல் அமீது நாம் தமிழர் அமைப்பின் நிர்வாகிகளுள் ஒருவர். நாம் தமிழர் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூத்தன் இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர்.

தமிழர்களுக்கு என தரணியில் ஒரு நாடு கட்டி ஆண்ட எம் இனத்தின் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரனை சந்திக்கச் சென்ற கவிதை உலகின் போர்க்குரல் இன்குலாப் இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர். தமிழக முதல்வர் கருணாநிதி அளித்த விருதை திருப்பி அனுப்பிய பெரும் தமிழர் இன்குலாப்பினை இவர்களால் சீரணிக்க முடியாது. இன்னும் ஏராளமான, லட்சணக்கணக்கான இஸ்லாமிய தமிழின வீரர்களை எம்மால் அடையாளம் காட்ட இயலும்.

திருத்துறைப்பூண்டி கலை இலக்கிய இரவில் இந்து மதத்தின் போலித் தன்மைகளை எடுத்துக் காட்டி பேசிய செந்தமிழன் சீமான் மீது இந்துத்துவா வெறியர்கள் கடுமையான தாக்குதலை மேற்கொண்டதும், அந்தக் கலவரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் ஒருவர் கொல்லப்பட்டதும் அனைவரும் அறிந்ததே. கோவையில் நடந்த தோழர் மதிமாறனின் புத்தக வெளியீட்டு விழாவில் சீமான், இந்து மத போலித்தன்மைகளை தன் பேச்சால் அடித்து நொறுக்கியபோது பொறுத்துக் கொள்ள முடியாத இந்து மத ஆதரவாளர்கள் மிகப்பெரிய கலவரத்தில் ஈடுபட்டதும், பெரியார் திக தோழர்கள் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்து மத வெறியர்களை ஓட ஓட விரட்டியதும் அனைவருக்கும் தெரியும். பெரியாரின் பேரன்களாக தமிழ்த் தேசிய பரப்பில் செயல்பட்டு வரும் லட்சக்கணக்கான தமிழின இளைஞர்கள் சாதி, மத மறுப்பாளர்களாய் களம் கண்டு வருகிறார்கள் என்பதும்… இவர்கள் தான் மதம் கடந்து, சாதி வென்று இனம் காக்க தமிழ்த் தேசியம் வென்றெடுக்கும் நம்பிக்கையாய்த் திகழ்கிறார்கள் என்பதும் அ.மார்க்ஸ் போன்ற நேர்மையற்றவர்களால் பொறுக்க முடியவில்லை. பால் தாக்கரேவினை செந்தமிழன் சீமான் சபை நாகரீகத்திற்காக பெருமகன் என விளித்ததை வைத்து சொல் அரசியல் பேசும் இவர்கள் ராசபக்சேவினை இலங்கையில் எப்படி விளித்தார்கள் என்பது குறித்து யாருக்கும் தெரியாது. ஒரு வேளை அ.மார்க்ஸ் உள் மனச்சான்றோடு ராசபக்சேவினை விமர்சித்து பேசி இருந்தால் அவரது இலங்கைப் பயணம் இவ்வளவு இலகுவானதாக இருந்திருக்காது. அங்கு வாய்மூடி மெளனம் சம்மதம் என்று வந்து விட்டு இங்கு பம்மாத்து வேடங்களை காட்டுவது அ.மார்க்ஸின் தற்போதைய பணி. இவரைப்போன்றவர்கள் போராளிகளை அழித்த பிறகான சிங்கள அரசின் தலைவர் ராசபக்சேவின் நடவடிக்கைகள் இன்றளவும் முஸ்லீம் களுக்கு எதிராக இருப்பது குறித்து வாய்மூடி கள்ள மெளனம் காக்கிறார்கள். தமிழனின் அறிவு சார் பெருஞ்சொத்தான யாழ்ப்பாண நூலகம் அழிவிற்கும், எண்ணற்ற இளைஞர்களும், இளம் பெண்களும் விடுதலைப்புலிகளாக கருதப்பட்டு முள்வேலி வதை முகாம்களில் அடைக்கப்படிருப்பதற்கும் , உலக மகா போர்குற்றங்களுக்கும் காரணமான ராசபக்சே பற்றி இவர்கள் பேசுவதில்லை. காஷ்மீருக்கு சென்று மனித உரிமை ஆய்வு செய்யும் இவர்கள் இலங்கைக்கு சென்று விட்டு வந்து சிங்கள பேரினவாதத்தினைப் பற்றி பேசாமல் தன்னின விடுதலைக்காக போரிட்டு வீழ்த்தப்பட்ட விடுதலைப்புலிகளை இன்றளவும் வன்மத்துடன் திட்டி தீர்க்கிறார்கள். காரணம் என்ன வென்றால் விடுதலைப் புலிகள் ஒரு சமூகத்திற்கான, ஒரு இனத்திற்கான விடுதலை வீரர்கள். ஆனால் இவர்களோ… அறிவுஜீவி போர்வையில் புத்தகம் போடவும், கூட்டம் நடத்தவும் தன்னையே விற்று, வார்த்தை அரசியல் பேசும் பிழைப்புவாதிகள்.

ஏற்கனவே தோழர் கார்க்கி அவர்கள் அ.மார்க்ஸ்க்கு எழுப்பிய வினாக்களுக்கு இது வரை பதிலளிக்காமல் கள்ள மெளனம் காத்து… கருத்து சுதந்திரம் என்ற பெயரில் கண்டதையும் வாந்தி எடுக்கும் அ.மார்க்ஸின் போலி முகமூடி மேன்மேலும் கிழித்தெறியப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்னால் சென்னை லயோலா கல்லூரிக்கு அருகில் உள்ள AICUF அரங்கில் ஈழத்தினைப் பற்றியும், தமிழர்களைப் பற்றியும் தரக்குறைவாகப் பேசிய அ.மார்க்ஸினை நோக்கி அந்த அரங்கில் இருந்த உணர்வுமிக்க தோழர்கள் சிலர் ஜனநாயக முறையில் வினாக்களை முன் வைத்தனர். வளர்மதி என்ற தோழர் மேடைக்குச் சென்று அ.மார்க்ஸின் பேச்சுக்கெதிரான தனது வினாவினை முன்வைத்தபோது , எவ்வித பதிலும் தெரிவிக்காத அ.மார்க்சும் , அந்த கூட்டத்தினை நடத்தியவர்களும் வளர்மதியை தடுத்து சட்டையைப் பிடித்து இழுத்து மேடையை விட்டு வலுக்கட்டாயமாக இறக்கி விட்டுள்ளனர். இது தான் அ.மார்க்ஸ் பேணி வரும் கருத்துச் சுதந்திர லட்சணம். சிங்களப் பேரினவாதம் தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் இழைத்து வரும் கொடுமைகளை முஸ்தீன் என்பவர் கீற்று இணையத் தளத்தில் தெரிவித்துள்ளது இச்சமயத்தில் கவனிக்கத்தக்கது. ஈழத் தமிழர்களின் விடுதலைப்போராட்டத்திற்கெதிரான அவதூறுகளை பரப்பும் அ.மார்க்ஸுற்கு எதிராக அவர் கலந்துக் கொள்ளும் கூட்டங்களில் தமிழின உணர்வாளர்கள் மற்றும் முற்போக்காளர்கள் ஆற்றும் எதிர்வினைகளை முஸ்லீம்களுக்கு எதிரான ஒன்றாக அ.மா மிகவும் விஷமத்தனமாய் கற்பிதம் செய்கிறார். அ.மாவிற்கு எதிராக நிகழும் எதிர்வினைகள் அவரின் சிறுபான்மையின உரிமைகள் சார்ந்த நடவடிக்கைகளுக்கானதில்லை. மாறாக அவர் சிங்கள பேரினவாதத்தின் மறைமுக ஆதரவாளராய் , ஊது குழலாய் மாறி செய்யும் ,பரப்பும் செயல்களுக்கானது.இது போன்ற நடவடிக்கைகள் தான் சென்னை AICUF அரங்கில் நடைப்பெற்றது. ஆனால் அ.மார்க்ஸ் தன்னையும், சிங்கள பேரினவாதத்தினையும் எதிர்த்தால் உடனே அதனை முஸ்லீம்களுக்கு எதிரான நடவடிக்கைகளாக மாற்றி மோசடித்தனம் செய்கிறார்.

தமிழர்கள் மீது நிகழ்ந்த பெருங்குற்றங்களைக் கேட்காத அ.மார்க்ஸ் தான் தோழனாக காட்டிக் கொள்ள விரும்பும் முஸ்லிம்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையை எதிர்த்து கூட ராஜபக்சேவினைத் தாக்கிப் பேசவில்லையே.. ஏன்..? இலங்கையில் முஸ்லிம்களை வாழ்விடங்களை விட்டு அகற்ற முக்கியக் காரணமாக இருந்த கருணா, பிள்ளையான் போன்றவர்களைப் பற்றி வாய் திறக்க மறுக்கும் இந்த அ.மார்க்ஸ், இனப்படுகொலை நடந்த ஒரு நாட்டில்… இதுவரை பத்திரிக்கையாளர்கள் கூட அனுமதிக்கப்படாத ஒரு பூமியில்.. எல்லாவித சுதந்திரத்தோடு வலம் வருகிறார் என்றால்.. யாருடன் கூட்டு… எந்த குரலுக்காக இந்த ஒத்து ஊதும் பாட்டு என்று தெரியாமலா இருக்கிறது..?

நாம் தமிழர் போன்ற தமிழ்த் தேசிய அமைப்புகள் அ.மார்க்ஸினை மிரட்டுவதாக அவரே கதை கட்டிக் கொண்டு .. இனம் சார்ந்த பிரச்சனையை மதம் சார்ந்ததாக ஆக்கும் அ.மார்க்ஸின் அரசியல் அருவருப்பானது. சிங்களப் பேரினவாதத்தினை தமிழ்த் தேசிய அமைப்புகள் எதிர்த்துப் பேசினால் அ.மார்க்சுக்குப் பொறுக்காது. உடனே தமிழ்த் தேசிய அமைப்புகளுக்கு எதிராக முஸ்லிம்களைத் திருப்பி விடும் விஷமத்தினை அவர் செய்யத் துவங்குவார். தமிழர்கள் எதன் பொருட்டும் ஒன்றாகக் கூடாது.. மதம், சாதி என அவர்கள் வேறுபட்டு நிற்கவேண்டும் என்ற சிங்களப் பேரினவாதத்தின் ஆசையின் வடிவமாய் அ.மார்க்ஸ் காட்சியளிக்கிறார். எனவே தமிழ்த் தேசிய சிந்தனை மரபிற்கு முரணான சமூகமாய் இஸ்லாமியர்களை முன் நிறுத்தும் அ.மார்க்ஸ் போன்றவர்களின் போக்கு கற்பிதமாகப் புனையப்பட்டவை ஆகும். இயல்பான தமிழ்த் தேசிய தன்னுரிமைப் போராட்டத்தின் தவிர்க்க முடியாத சக்திகளாய் தமிழ் முஸ்லிம்கள் இருக்கிறார்கள்; இருப்பார்கள்.

நாம் தமிழர் உள்ளிட்ட தமிழ்த் தேசிய அமைப்புக்கள் இந்த மண்ணின் பூர்வக்குடித் தமிழர்களான முஸ்லிம்களுக்கு என்றென்றும் உறுதுணையாக இருந்து இந்து மத மேலாதிக்கத்தினை விரட்டும் படையாக செயல்படும். இந்த மண்ணின் பூர்வ குடித் தமிழர்களான முஸ்லிம் பெருமக்கள் இது போன்ற சதிகளை முறியடித்து மத மேலாதிக்கத்தினைத் தகர்க்கும் பணியினை இனத் தன்னுரிமைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக செய்து வரும் தமிழ்த் தேசிய சிந்தனை மரபினை வலிமைப்படுத்த வேண்டும் என்பதில்தான் எதிர்கால தமிழ் இனத்தின் மேன்மையும், பெருமையும் அடங்கியிருக்கிறது.

நன்றி : www.keetru.com

நம்பிக்கையுடன் நாம் தமிழராய் விடிவோம்…

நம் நிகழ்காலத்துக்கு முழுமையான சமகாலத்தவராக ஒரு போதும் நாம் இருப்பதில்லை. மாறுவேடத்துடனேயே முன்னேறுகிறது வரலாறு .முந்தைய காட்சியின் முகமூடியை அணிந்த படியே மேடையில் தோன்றுகிறது அது

புரட்சிக்குள் புரட்சியில் ரெஜி டெப்ரே.

என்றுமே சமூகம் சமநிலையாக இருந்ததில்லை என்பதில் இருந்து நம் சிந்தனையை துவக்குவோம். அரை நூற்றாண்டு காலமாக போராடிய நம் தேசிய இனத்தின் மிக முக்கிய அடையாளமாக கருதப்பட்ட ஈழ சகோதர சகோதரிகள் இன்று மிகப் பெரிய பின்னடைவில் இருக்கிறார்கள். சர்வ உரிமைகளுடன் வாழ ஒரு நாடு என்ற அடிப்படை மனித தேவையை மனித விழுமியங்களை சுரண்டி கொழிக்கும் வல்லாதிக்கம் மிகத் தீவிர எதிர்க்கிறது. வல்லாதிக்கத்தின் இருப்பு எளிய இனங்களின் அழிவின் மேல் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. ஈழத்தின் பூர்வ குடி மக்களாகிய தமிழர்கள் ஒரு நாடு அடைய வேண்டியதற்கான அனைத்து அவசியங்களையும் ஒருங்கே பெற்றிருந்தார்கள். அவர்களின் சுதந்திர வேட்கைக்கான புள்ளி சிங்கள பேரினவாதத்தின் மீறல்களில் இருந்து எழுகிறது. உலக மானுட சமூகம் யாரும் சிந்தித்துப் பார்க்க கூட இயலா உச்சியில் அவர்களின் வீரம் செறிந்த சமரும், தியாகமும் இருந்தன. இருந்தும் உலக வல்லாதிக்கங்கள் கூட்டமைவு கொண்டு நடத்திய போரில் நம் சகோதரர்கள் தோற்றார்கள்.

ஒரு தோல்வியை தோல்வியாக உணரும் போது தான் மீள் எழுவதற்கான சாத்தியப்பாடுகளை சிந்திப்பதற்கான மன வலு கிடைக்கும். எனவே நம் தோற்றோம் என்பதை மிக நேர்மையாக ஒப்புக்கொள்வோம். தோற்றோம் என்ற சொல்லில் அவ்வளவாக உண்மையில்லை என்பதனால் இன்னும் உண்மைக்கு நெருக்கமான சொல்லாக இருக்கக் கூடிய தோற்கடிக்கப்பட்டோம் என்பதை ஒப்புக் கொள்வோம். நம் சம காலத்தில் ..நம் கண் முன்னால்.. நாம் அனைத்தையும் இழந்து தோற்கடிக்கப்பட்டோம் என்பதுதான் நம்மால் எளிதில் செரிக்க முடியாத உண்மையாக இருக்கிறது. ஆனால் தோல்விகளையும், பின்னடைவுகளையும் உலக வரலாறு வேறு மாதிரியாக கணிக்கிறது. ஒரு தேசிய இனம் தன் உயரிய இலட்சியமான இறையாண்மை உடைய ஒரு நாடு அடைவதற்கான போராட்டத்தில் பல்வேறு காலக் கட்டங்களை சந்திக்கிறது. பலவிதமான பின்னடைவுகளுடன் கூடிய தியாகங்களுக்கு மத்தியில் அப் போராட்டம் தன்னைத்தானே செழுமைப் படுத்திக் கொண்டு ,புதிய புதிய பாடங்களை கற்றுக் கொண்டு இலக்கு நோக்கி முன்னேறிக் கொண்டே இருக்கிறது.

முதலாளித்துவம் மனித மனங்களில் வரையறுத்து உள்ள எதையும் உடனே துய்க்கிற நுகர்வு மனநிலைதான் எளிய தோல்வியை கூட சந்திக்க இயலா பலவீனத்தினை பரிசாக அளித்திருக்கிறது. சம காலத்து மனிதனுக்கு எதுவும் உடனே வேண்டும் . தமிழனும் இம் மனநிலைக்கு விதி விலக்கானவன் இல்லை. முள்ளிவாய்க்கால் துயர் முடிந்து இன்னும் ஓரு வருட காலத்திற்கு பின்னரும் தமிழினம் தனக்கான பாதையை வகுத்துக் கொள்வதில் தலையாய சிக்கல் என்னவென்றால் தற்காலத்து தமிழன் கொண்டிருக்கிற நுகர்வு மனநிலை தொடர்ச்சியான பயணத்திற்கு தயாராக இல்லை என்பதுதான்.

ஆனால் மீள் எழுந்துதான் ஆக வேண்டும். ஒரு நாட்டினை இன்னொரு இனத்திடம் இருந்து மீட்பதற்கான போராட்டம் அவ்வளவு எளிதானதல்ல. இந்திய பெருந்தேசத்தின் சுதந்திர போராட்டம் இரண்டு நூற்றாண்டுகளாக நடந்து..இரு நாடுகளாக பிரிவதாக குழப்பத்தில் முடிந்தது. கியூபப் புரட்சியை லத்தீன் அமெரிக்காவில் மற்றொரு முறை நிகழ்த்திட இயலாது என்று ஒரு சொற்றொடர் உண்டு. கியூப புரட்சியின் மீது கட்டமைக்கப்பட்டுள்ள அதீத காவியத் தன்மையின் வெளிப்பாடு இது. கியூபப் புரட்சி காலக் கட்டத்தில் இருந்த சமன்பாடுகள் தற்காலத்தில் வெகுவாக மாறி விட்டன என்றாலும் அதன் ஊடாக நாம் கற்க வேண்டிய பாடங்கள் இருக்கின்றன. கியூபப் புரட்சி என்பது 12 பேரில் துவங்கி கணக்கின்றி பெருகி தலைவர் பிடல் ,தளபதி சே குவேரா போன்றோரின் சாகச உத்திகளால் வல்லாதிக்கத்தினை முறியடித்து வெற்றிக்கொடி நாட்டிய கதை என இரண்டு வரிகளில் இனிப்புத் தடவி கூறி விட முடியாது. கியூபப் புரட்சிக்கு தேவையான சூழலும், அகக்காரணிகளும், புறக்காரணிகளும் ஈழப் போராட்டத்திற்கு ஒப்பாகவே இருந்தன. தலைவரும், தளபதிகளும் கியூப புரட்சியாளர்களை தாண்டிய சாகசக் காரர்களாகவும், மிகு ஒழுங்கினை உடையவர்களாக இருந்தார்கள் . இருந்தும் கியூபாவில் புரட்சியாளர்கள் வெற்றியடைந்தனர். நாம் தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம்.

தோல்விக்கான காரணங்களை மாசற்ற தலைமையின் மீதும் இயக்கத்தின் மீதும் போட்டு விட்டு எதிரியின் வெற்றியில் குளிர்காயும் துரோகிகளின் எழுத்துக்களை நாம் ஏறெடுத்துக் கூட பார்க்க மறுப்போம். நம் தேசியத் தலைவரின் சொல்லும் , வாழ்க்கையும் நமக்கு போதித்தது இதுதான் .எதிரியை விட துரோகி ஆபத்தானவன்.

ஆனால் நமக்குள்ளாக நம் மீள் எழுதலுக்கான சக்தியை பெற நடந்து முடிந்த ஈழப் போரின் வாயிலாக சில பாடங்களை கற்றுக் கொள்ளத்தான் வேண்டும். முதலில் ஈழம் என்பது அந்நிலப்பகுதியில் வசிக்கக் கூடிய தமிழர்களுக்கான நாடு என்பது உண்மை என்றாலும் அது உலகம் முழுக்க வாழக் கூடிய தமிழர்களுக்கான நாடும் அதுதான் என்பதில் நாம் உறுதிக் கொள்ள வேண்டும் . வெறும் நிலப்பகுதியும், புறவியல் காரணிகளும் மட்டுமே ஒரு நாடாக நாம் கருதி விட இயலாது. மாறாக நாடு என்பது ஒரு உணர்ச்சி. ஒரு தேசிய இனத்தின் அடிப்படையான குணம். மனித வரலாறு நாடுகளை அடையும் போராட்டங்களாகத்தான் பகுக்கப்பட்டிருக்கிறது. எனவே ஈழம் என்ற ஒற்றைக் கனவினை சுமக்க உலகில் வாழும் 12 கோடி தமிழர்களின் விழிகளும் தயாராக வேண்டும்.

அடுத்து . நம் தேசியத் தலைவர் மீது நாம் வைத்திருக்ககூடிய விசுவாசம். இன்றளவும் சிங்களன் திகைப்பது இதில் தான். நம் தேசியத் தலைவர் கொல்லப்பட்டார் என்று கூறி ஒரு உடலையும் காண்பித்து விட்ட பிறகு கூட உலகமெங்கும் பரவி வாழக் கூடிய நம் இன மக்கள் அதை நம்பக் கூட மறுத்து ஒற்றை அலைவரிசையில் ஒரே குரலாய் எம் தலைவர் சாக வில்லை என்று உரத்தக் குரலில் முழங்கினோமே…அது தான்.. அந்த விசுவாசம் தான் எதிரி அடைந்திருக்கும் வெற்றியில் கூட அவனை பதட்டமாக வைத்திருக்கிறது. இந்த உலகம் கண்டிராத ஒரு மாபெரும் வீரனை.. உலக இலக்கியங்களின் சாறாய் தொகுத்த நற்பண்புகள் உடையவனை.. தம் மொழியின் மேல் ,தம் இனத்தின் மேல் தன் உயிரைக்காட்டிலும் மதிப்பு உடையவனை நாம் தலைவராக அடைந்திருக்கிறோம். இன்றளவும் பிரபாகரன் என்ற பெயர்தான் உலகம் முழுக்க பரவிக் கிடக்கின்ற தமிழர்களை இணைக்கிற…இயக்குகிற சொல். தொன்மை வாய்ந்த தமிழினத்தின் உயரிய பெருமிதம் நம் தேசியத் தலைவர் அவர்கள் . அவரின் மீதான நம் பற்றையும் ..விசுவாசத்தினையும் நாம் தலைமுறைகளாக கடத்திப் போவோம். வீட்டுக்கு வீடு பிரமாண்டமாய் அவரது புகைப்படங்களை நாம் மாட்டுவோம். நம் பிள்ளைகளுக்கு அவரை நம் அண்ணனாக காட்டுவோம். பிள்ளைகள் அவரை பெரியப்பா என்றே அழைக்கட்டும். நம் தேசியத் தலைவர் இல்லாத தமிழன் வீடு இல்லை என்ற மிகப் பெரிய தோற்றத்தினை உருவாக்குவோம்.. நம் வீட்டு விழாக்களில் அவரையே விழா நாயகனாக முன் நிறுத்துவோம் . திருமண அழைப்பிதழ்களில் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் வாழ்த்துகளோடு என்று அச்சிடுவோம். நம் குழந்தைகளுக்கு இரவில் பயம் வந்தால் தேசியத் தலைவரை நினைத்துக் கொள் எனக் கூறுவோம். தேர்வுக்கு முன்னால் தலைவரை நினைத்து விட்டு போ என்று அறிவுறுத்துவோம். நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் அவரின் பங்கு இருக்கட்டும்.

அடுத்து நம் மரபின் மேல் , நம் மொழியின் மேல் ஆழ்ந்த பற்றும், மதிப்பும் உடையவர்களாக மாறுவோம். உலகின் எந்த மூலையில் நாம் வசித்தாலும் நம் குழந்தைகளை தமிழில் அப்பா, அம்மா என அழைக்கச் சொல்வோம். பண்டிகைக் காலங்களில் வேட்டி கட்டுவோம். தமிழர்கள் ஒருவருக்கு ஒருவர் சந்தித்துக் கொண்டால் நம் மொழியில் வணக்கம் , நன்றி எனச் சொல்வோம். கூடிய மட்டும் பிற மொழிக் கலப்பின்றி பேசுவோம்.

இப்படிப்பட்ட பிடிவாதம் மிக்க நிபந்தனைகளின் பேரில் தான் தமிழர்கள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் . ஒரு தோற்ற சமூகம் எப்படி மீள் எழக் கற்றது என்பதனை நம் எதிரிக்கு உதவிய இஸ்ரேலில் இருந்து கற்போம். அடுத்தாண்டு இஸ்ரேலில் சந்திப்போம் என்ற அவர்களது ஆழ்ந்த நம்பிக்கைதான் அவர்களுக்கு இஸ்ரேலை பெற்றுத் தந்தது. எனவே நாமும் அடுத்தாண்டு ஈழத்தில் சந்திப்போம்.

தாயகத் தமிழர்கள் இனி திராவிடர்களாக அடையாளம் காட்டப்படுவதை பெரும் கோபங் கொண்டு மறுப்போம். திராவிடமும்,இந்தியமும் தான் எங்களை வீழ்த்தின என்று உரத்தக் குரலில் சொல்வோம். சாதீயம் பேசி அரசியலுக்காக அணி மாறிக் கொண்டு பேரம் பேசும் போலிமைகளை புறக்கணிப்போம். சமூகத்தினுள் ஆழமாக புரையோடிப் போன சாதீயத்தினை வெல்ல இனம் வாயிலாக ஒன்று படுவதை அவசியமாக கொள்வோம் . நாம் வாழ நாம் நதி ஆள்வோம். தர மறுக்கும் அயலானுக்கு நாமும் எதையும் தர மறுப்போம். நம் இனத்து ஆளுமைகள் ஏராளம் இருக்கையில் மாற்றான் இனத்து ஆளுமைகளை முன் நிறுத்தும் அபத்தம் ஒழிப்போம். நம் நாட்டினை நாம் ஆள வேண்டும். குறைந்த பட்சம் ஆள்பவனை தீர்மானிக்கும் சக்தியை நாம் பெறும் வல்லமையை நாம் பெற வேண்டும் . அதற்காக தான் நாம் தமிழர்களாக ஒன்றிணைய வேண்டும் . அமைப்பு ரீதியாக ஒன்றிணைந்து குடும்பமாக இறுகி ..பல்கி பெருகிய கூட்டமாய் அதிகாரத்தினை நோக்கிய பயணத்தினை துவக்க வேண்டும். நம் மொழிக்கும், நம் மக்களுக்கும் இன்னல் இழிவென்றால் சீற்றம் கொண்டு கேட்க வேண்டும். சினம் மறந்த இனம் பிணம். நமக்குள் நம் தொன்ம மரபின் வாயிலாக பெற்றிருக்கிற அற சீற்றப் பண்பை நாம் அவ்வப் போது பயன்படுத்திட வேண்டும். மதுவிற்கும் ,தொலைக்காட்சிக்கும், காசுக்கும் மயங்கும் மாண்பினை கைவிட வேண்டும். நமக்கான உரிமைகளை எதன் பொருட்டும் யாருக்கும் விற்கவோ ,அடகு வைக்கவோ கூடாது. தமிழை வாழ வைப்போம். தமிழனையே ஆள வைப்போம்.

தமிழின இளைஞர்கள் மற்ற இனத்து இளைஞர்களை விட உழைக்க வேண்டும். நாம் அடைந்த தோல்வி நம்மை வன்மம் கொள்ள வைத்திருக்கிறது. நமக்கான .. நம் இனத்திற்கான ..பொருளாதார முன்னேற்றத்தினை அடைய நாம் கடுமையாக உழைக்க வேண்டும். இரவு பகல் பாராது உழைக்க வேண்டும். மற்ற இனத்தவரைக் காட்டிலும் நம் திறமையை அதிகம் உபயோகித்து பொருள் சேர்க்க வேண்டும் . நம் வருமானத்தில் நம் இனமானம் காக்க ஒரு குறிப்பிட்ட தொகையை மாதம் தோறும் ஒதுக்கி இன நலப் பணிகளுக்கு செலவிட வேண்டும்.

உடல் முழுக்கக் காயங்களோடு..ரத்தம் வழிய வழிய… தீரா வன்மத்துடன் ..ஒரு மிருகம் போல நாம் நின்று கொண்டிருக்கிறோம். எதிரி எக்காளம் வழிய ஏளனம் பேசுகிறான். நாம் பொறுமையாக காத்திருப்போம். காத்திருப்பு என்பது ஒய்வல்ல. மாறாக வலுவோடு மீள நமக்கு கிடைத்திருக்கும் இடைவேளை .தாக்குதல் என்பது இனி நேருக்குநேர் நின்று ஒருவரை உடல்ரீதியாக விழ்துவது இல்லை. மாறாக நம் போர் வாக்காய், வாழ்க்கையாய், பேச்சாய், செயலாய், முழக்கமாய், எண்ணமாய் , கனவாய், நினைவாய், ஆற்றலாய், அறிவாய்., தெளிவாய், கொள்கையாய், கோட்பாடாய், தத்துவமாய் விரியட்டும் எமக்கான வாழ்க்கை, எமக்கான உயர்வு நம் கையில்தான் உள்ளது என்பதனை நம் அறிவு தெளியட்டும்.

நாம் தமிழர்,

மணி செந்தில் .

துரோகங்களை எரித்துப் போடும் விடுதலையின் ஊழித் தீ.

தமிழர்களின் தாயக நிலமான ஈழம் எதிரிகளின் கரங்களுக்கு இடமாறிய பிறகு கருத்து என்ற பெயரில் தத்துவங்களை உதிர்த்தும், ஆராய்ச்சி என்ற பெயரில் தன் இனத்தின் சுதந்திரத்திற்காக தன் உயிரையும் இழந்த போராளிகளின் பின்னடைவினை போஸ்ட்மார்ட்டம் செய்யும் மோசடி பேர்வழிகள் இணையத் தளங்களின் ஊடாக நிரம்பி வழிகிறார்கள்.

அ.மார்க்ஸ் என்ற உலக மானுட இனத்தின் மனித உரிமை காப்பாளர் சமீபத்தில் இலங்கைக்கு சென்றிருந்த அனுபவங்களை முற்காலத்தில் உலகப் பயணம் செய்து பயணக்கட்டுரைகள் எழுதுவாரே ..ஆம் அவரே தான் இதயம் பேசுகிறது மணியன் பாணியில் பல தளங்களில் அள்ளி விட்டுக் கொண்டிருக்கிறார். சிறுபான்மை இஸ்லாமியர்களின் உரிமைகள் இன்னும் மீள கிடைக்கவில்லை என கதறும் அ.மார்க்ஸ் , பெரும்பான்மையான பூர்வீக குடி மக்கள் பிச்சைக்காரர்களாய் எதுவும் அற்ற ஏதிலிகளாய் நிற்கும் மக்களைப் பற்றி பேசுவதில்லை. காஷ்மீருக்கு எல்லாம் சென்று மனித உரிமையை நிலைநாட்டி ,புள்ளி விபரங்களை அள்ளித் தெளித்து புத்தகம் எழுதும் அ.மார்க்ஸ் ஈழத்தில் நடைப்பெற்ற போர்க்குற்றங்களை பற்றி கேட்டால் மவுனம் சாதிக்கிறார். தோழர்.மு.கார்க்கி அ.மார்க்ஸின் முகமுடியை கிழித்து எறிந்து (அ.மார்க்சின் உபன்யாசமும் சில கேள்விகளும் ) அப்பட்டமாக்கி காட்டிய பிறகும் இது நாள் வரை தோழர் கார்க்கி எழுப்பிய எந்த கேள்விக்கும் பதிலளிக்க துப்பில்லாத அ.மார்க்ஸ் ஈழம் பற்றி பேச எவ்வித அருகதையும் இல்லாதவர். அ.மார்க்ஸின் கள்ள மவுனம் எதன் பொருட்டு என்பது அம்சாகளுக்கு மட்டுமே வெளிச்சம். அ.மார்க்ஸின் சிறுபான்மை இன அக்கறை என்பது அப்பட்டமான மூன்றாம் தர ஒத்திகை பார்க்கப்படாத நடிப்பு என்பது பல்வேறு சமயங்களில் நிருபிக்கப்பட்டிருக்கிறது . அடுக்கடுக்காய் வெளியாகும் அ.மார்க்ஸின் புத்தகங்களுக்கான பொருளாதார பின்புலத்தினை எட்டிப் பார்த்தால் தெரியும் எதன் பொருட்டு அ.மா சிறுபான்மை அக்கறை பிடில் வாசிக்கிறார் என்று. தேசிய இனங்களின் தன்னுரிமை கோரல் குறித்து அ.மாவின் நிலைப்பாடு பற்றி கேள்வி கேட்டால் நாம் புலி ஆதரவாளர் ஆகி விடுவோம். அ.மார்க்ஸ், சோபா சக்தி ,சுகன் , ஞானி ,சோ, சுப்பிரமணியசாமி ,ஜெயலலிதா , கருணாநிதி போன்றோர் எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம் .எதிர்த்து கேட்டால்..கேட்பவர் புலி ஆதரவாளர் என்ற தட்டையான விமர்சனத்தினை வைத்து இவர்கள் பித்தலாட்டம் செய்கிறார்கள்.

ஈழ மக்கள் புலிகளால் வதைக்கு உள்ளானர்கள் என்ற இவர்களின் சொத்தையான வாதம் ராசபக்சேவிற்கு ஆதரவான ஒன்றே . மக்களில் இருந்து தான் புலிகளின் துவக்கம் என்ற அடிப்படை உண்மையும், புலிகள் வேறு மக்கள் வேறு அல்லர் என்ற உண்மையையும் மறைத்து புலிகளின்ஆயுதப் போராட்டத்தினால் தான் ஈழப் பெரு நிலம் அழிவிற்கு உள்ளானது என்று மாய்மாலம் பேசும் இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதனை வரலாறு முடிவுசெய்யும் .

இனப்பிரச்சனையின் முதல் கலவர நிகழ்வாக கருதப்படும் 1956ஆம் வருடத்திய தனி சிங்களச் சட்டத்தினை எதிர்த்து அகிம்சை வழிப் போராட்டமான 05-06- 1956 அன்று நடைப்பெற்ற காலி முகத் திடல் போராட்டத்தில் தந்தை செல்வா தலைமையிலான அறவழிப் போராட்டத்தினை சிங்கள குண்டர்கள் தாக்கியதை பற்றியும் , போராடிய தலைவர்களை அருகில் இருந்த பெய்ரா ஏரியில் தூக்கிப் போட்ட கதையையும் அது முதல் தமிழர்கள் தன் எதிர்ப்பினை பதிவு செய்யும் உரிமை கூட மறுக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்பதையும் இவர்கள் அறியாதவர்களா என்ன..? 1956 ஆம் வருடம் ஜீன் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் சிங்கள காடையர்களால் வன்முறைக்கு பலியாகி இனக்கலவரத்தில் பலியாகிப் போன தமிழர்களில் எத்தனை சிறுபான்மையினர் இருந்தார்கள் என்ற பட்டியல் இவர்களிடம் இருக்கிறதா..?

1958 ஆம் வருடம் மே மாதம் சிங்கள எழுத்தான ஸ்ரீ யை பொறிக்க தமிழச்சிகளின் மார்புகள் தான் ஏடுகளாய் பயன்பட்டன மற்றும் இந்த கலவரத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதும் , 14,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் இடம் பெயர்ந்தனர் என்பதும் இவர்கள் அறியதவரா என்ன..?

1961 ஆம் ஆண்டு சிங்கள ஆட்சி மொழி சட்டத்தினை எதிர்த்து தந்தை செல்வா சத்யாகிரகப் போராட்டம் நடத்தி அவரது தமிழரசு கட்சி தனி தபால் தலையை அச்சிட்டு உரிமையை நிலைநாட்டும் முயற்சியில் போராட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஏகாம்பரம் இறந்ததும், தந்தை செல்வா உள்ளீட்டோர் 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனைப் பெற்ற வரலாற்றினையும் இவர்கள் அறியாதவரா என்ன..?

1971 ஆம் வருடத்திய சிங்கள அரசின் கல்வி தரப்படுத்துதல் சட்டத்தினால் கட்டாய சிங்கள கல்வியாலும் , மதிப்பெண் அடிப்படையில்லாது, இனத்தின் அடிப்படையில் தான் உயர்கல்வி, உத்தியோகம் என்ற அநீதியால் தமிழ் இளைஞர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டார்கள் என்பதையும் அதன் காரணமாக போராட தமிழ் இளைஞர்கள் வீதிக்கு வந்தனர் என்பதையும் இவர்கள் அறியாததா என்ன..?

1974 ஆம் ஆண்டு , உலக தமிழ் அறிஞர்கள் உட்பட 50,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துக் கொண்டு மிக ஒழுங்கமைவோடு நடைப்பெற்ற உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளில் சிங்கள அரசு வலுக்கட்டாயமாக காவல்துறையை ஏவி நடத்திய கலவரத்தில் 10க்கும் மேற்பட்டோர் பலியானதும் இவர்களுக்கு தெரியாததா என்ன?

1976 ஆண்டு நடைபெற்ற தனி தாயகத்தினை வலியுறுத்தி ஈழத்து காந்தி தந்தை செல்வா எடுத்த வட்டுக் கோட்டை மாநாட்டு தீர்மானங்களுக்கு பிறகு மேலும் மூர்க்கம் பெற்ற சிங்கள பேரினவாதம் 1977 ஆம் ஆண்டில் ஆயிரக் கணக்கில் தமிழர்களை வேட்டையாட துவங்கியதையும்,1981 ஆம் ஆண்டு யாழ் நூலகம் எரிக்கப்பட்டு விலை மதிப்பில்லாத ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உயர் தமிழ் நூற்கள் எரிந்து சாம்பலானதையும், 1983 ஆம் ஆண்டு கருப்பு சூலை கலவரத்தில் பாதிக்கப்பட்டு லட்சக் கணக்கான ஈழத்தமிழர்கள் தன் சொந்த பூர்வீக நிலங்களை துறந்து நாடு கடந்து போய் இன்றளவும் உலக நாடுகளில் பரவி கிடக்கிறார்கள் என்பதையும், இவர்கள் அறியாததா என்ன..? புலிகளின் தாயகப் போராட்டம் சிறுபான்மையினரையும் உள்ளடக்கியதுதான் என்பதும்… புலிகளின் போராட்டம் இனம் சார்ந்ததே ஒழிய …மதம் சார்ந்தது அல்ல என்பதையும் …தன் மகனுக்கே சார்லஸ் ஆண்டனி என்ற பெயர் சூட்டிய தலைவர் பிரபாகரன் என்பதையும் இவர்களுக்கு தெரியும்.

எல்லாம் தெரியும். சிங்கள பேரினவாதம் அளிக்கும் எச்சிலைகளுக்கு நன்றி விசுவாசம் பாராட்ட இவர்களுக்கு கிடைத்த ஆயுதம் சிறுபான்மையினர் உரிமை. மற்ற படி மனித உரிமையாவது..மண்ணாங்கட்டியாவது.

ஈழத் தமிழர்கள் படிப்படியான நிலைகளில் ஆயுத வழிப் போராட்டங்களுக்கு தள்ளப்பட்டனர் என்பதையும்…உலக வல்லாதிக்க நாடுகளின் உதவியால் இன்று சிங்கள பேரினவாதம் அடைந்திருக்கும் வெற்றியை உலகம் முழுக்க பரவிக்கிடக்கும் 12 கோடி தமிழர்கள் தங்கள் உயிரைக் கொடுத்தேனும் நிரந்தரமாக்க விட மாட்டார்கள் என்பதற்கு அறிகுறியாக ஐ.நா கொடுக்கும் போர்க் குற்ற விசாரணை நிர்பந்தங்களால் சிங்கள பேரினவாதம் நிலை குலைந்து செய்வது அறியாமல் ஐ.நா பொதுச் செயலாளர் படத்தினை செருப்பால் அடித்து வருவதை நாம் பார்க்கதானே செய்கிறோம்..?

இதற்கு மேலும் செருப்புகள் தேவைப்படும். சிங்கள பேரினவாதம் தங்களைத் தாங்களே அடித்துக் கொள்வதற்கும், இப்போது கூடி கும்மி அடிக்கும் இந்த துரோக பதர்களை சிங்கள பேரினவாதமே தோற்றுப்போன எரிச்சலில் செருப்பால் அடித்து துரத்துவதற்கும் செருப்புகள் தேவைப்படும்.

ஒரு நாள் அல்ல ஒரு நாள். நம்பிக்கைகளோடு சொல்கிறோம். எம் இனத்திற்கான விடுதலையை, எம் இனம் கனவு கண்டு.. தலைவர் அணு அணுவாய் உருவாக்கி.. தற்போது துரோகங்களின் சதியால் எதிரிகளில் கரங்களில் சிக்குண்டு கிடக்கும் ஈழ நாட்டை நாங்கள் அடைந்தே தீருவோம். ஒரு தேசிய இனத்தின் தாகத்தினை துரோகத்தின் சோரங்களால் சிதைத்து விட முடியாது. தலைமுறை தலைமுறையாக வன்மத்துடன் வாழ்வோம். உயிர் கொடுத்து..உதிரம் கொடுத்து தாயகம் அமைக்க தளமாய் போன மாவீரர்களின் மூச்சுக் காற்று இன்னும் இந்தப் பூமியில் தான் உலவுகிறது. அது எம்மை இயங்க வைத்துக் கொண்டே இருக்கும். துரோகங்களின் முகத்தில் காறி உமிழ எம்மை தூண்டிக் கொண்டே இருக்கும். எம் விழியோரத்தில் பூத்திருக்கும் உதிரச் சிவப்பில் என்றாவது எம் இனத்திற்கான விடுதலை சாத்தியப்பட்டே தீரும் .

கும்பகோணம் பள்ளியின் தீ விபத்து – நேர்காணல்களோடு ..நேரடி சாட்சியமாய் ஒரு பகிர்வு.


கடந்த 2004 ஆம் வருடம் ஜீலை 16 ஆம் நாள் கும்பகோணம் தீ விபத்தில் பலியாகிப் போன 94 குழந்தைகளின் நினைவு நாள் வழக்கம் போல விமரிசையாக நிகழ்த்தப்படுகிறது. அனைத்துக் கட்சி ஊர்வலம், பள்ளி வாரியாக குழந்தைகளை அழைத்து வந்து அஞ்சலி நிகழ்வுகள்.. கூட்டம் கூட்டமாக மக்கள் திரண்டு வந்து தீ விபத்து நிகழ்ந்த பள்ளியில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி எனஎப்போதுமே அமைதியாக இருக்கும் பள்ளி அமைந்துள்ள காசிராமன் தெரு இந்த ஒரு நாளில் மற்றும் போக்குவரத்து நெரிசல்களில் சிக்குகிறது. ஊரெங்கும் சுவர்களில் அரசியல் கட்சியினர், ரோட்டரி,லயன்ஸ் சங்கங்கள், மற்றும் வியாபாரிகள் சங்கம் ,தொழிலாளர்கள் சங்கம் என அனைத்து சங்கங்கள், அமைப்புகள் ஆகியவை சுவரொட்டி அடித்து ஒட்டி வைத்து தங்கள் சமூக உணர்ச்சியினை பதிவு செய்கிறார்கள். இதைத் தவிர வேறு எதுவும் இனிமேலும் இது போன்ற அவலம் நடக்கக்கூடாது என்ற இந்த நாளும் கழிகிறது மற்றொரு நாளாய்.

உண்மையில் வெட்கமாகத்தான் இருக்கிறது. தொழிற்நுட்பத்தின் உச்சக்கட்ட வளர்ச்சியினை உலகம் நுகர்ந்துக் கொண்டிருக்கும் போதுதான் ..விண்வெளி பயணம் என்பது பக்கத்து வீட்டிற்கு செல்வது போல என மிக சாதாரணமாகி விட்ட போதுதான்… எங்கிருந்தாலும் ஒரே நாளுக்குள் வந்து சென்று வந்து விடலாம் என உலகம் சுருங்கி விட்ட அதே காலக்கட்டத்தில் தான் .. கல்வி கற்கப் போன ஏழை வீட்டு குழந்தைகள் எவ்வித பாதுகாப்பும் இன்றி தீயினால் எரிந்துப் போனார்கள் . நாம் எவ்வளவு மோசமான ,புரையோடிப் போய் சீழ் பிடித்த ஒரு உலகில் வாழ்கிறோம் என்பதற்கு மிக நேரிடையான எடுத்துக்காட்டு கும்பகோணம் பள்ளி தீ விபத்து.

கும்பகோணம் பள்ளி தீ விபத்து நிகழ்ந்த கிருஷ்ணா பள்ளிக்கும் எனக்கும் நேரிடையான தொடர்பு உண்டு. நான் அந்தப் பள்ளியில் தான் என் 2 மற்றும் 3 ஆம் வகுப்புகளை படித்தேன். எனக்கு நன்கு நினைவில் இருக்கிறது. நான் படித்த காலக்கட்டத்தில் பள்ளியின் குறுகலான பாதையின் துவக்கத்தில் தலைமை ஆசிரியரின் அறை . பிறகு 5 ஆம் வகுப்பில் இருந்து தொடங்கி 1 ஆம் வகுப்பு வரை வலப்புறம் தமிழ் வழிக் கல்வி பயிலும் வகுப்புகள் . அதே போல அப்பாதை இடதுப் பக்கம் 5 ஆம் வகுப்பில் இருந்து தொடங்கி LKG வரை ஆங்கில வழிக் கல்வி. நான் தமிழ் வழிக் கல்வி 2 ஆம் வகுப்பு B பிரிவில் படித்தேன். அடர்த்தியான மீசை வைத்த வாத்தியார் ,எங்களால் முடியும் என்ற குழந்தைகள் திரைப்படம் , ஜெய்சங்கர் , கணேஷ் என்ற இரண்டொரு நண்பர்களின் பெயர்கள் என இவற்றினை தவிர வேறு எதுவும் நினைவில்லை. ஆனால் மறக்கவே முடியாமல் இருப்பது அப்பள்ளியின் நடுவே இருந்த மிக குறுகலான நடைபாதை. அந்த ஒரு பாதையில் தான் மாணவர்கள் சென்று வர இயலும்.

அதற்கு பிறகு அந்த பள்ளியை நான் பல்வேறு காலக் கட்டங்களில் பார்த்திருக்கிறேன். அந்த பள்ளி பல அடுக்குகளாக அச்சிறிய இடத்திற்குள் வளர்ந்தது. தீப்பெட்டி அடுக்குகள் போல வளர்ந்த அப்பள்ளியில் அப்பகுதியில் வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளும், பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களின் குழந்தைகளும் தான் படித்தன. அப்பள்ளிக்கு மிக நெருக்கமான தொலைவில் எனது வீடு இருப்பதால் ..என் வீட்டிற்கு முன்னால் இருக்கின்ற சுருட்டுப் பேட்டையின் பெரும்பாலான குழந்தைகள் அங்குதான் படித்தார்கள். ரிக்சா, ஆட்டோ ஒட்டுனர்கள், கொத்தானார் ,சித்தாள் வகையாறாக்கள் , செருப்பு தைப்பவர்கள் என சமூகத்தின் அடித் தட்டு மக்கள் வசிக்கும் அப்பகுதியின் பெரும்பாலான குழந்தைகள் அப் பள்ளியில் தான் படித்தன.

கடந்த 2004 ஆம் வருடத்தில் நீதிமன்றத்தில் நாங்கள் இருந்த போதுதான் அருகில் இருந்த தீ அணைப்பு நிலையத்திலிருந்து வண்டிகள் மிக அவசர கதியில் பாய்ந்து வேகமெடுப்பதை கண்டோம். தொடர்ச்சியான பரபரப்பிற்கு நடுவே தீயைப் போல செய்தியும் பரவியது. உள்ளூர் தொலைக்காட்சிகள் அந்த விபத்தினை நேரடி ஒளிப்பரப்பு செய்ததுதான் இன்னும் வேதனையை அதிகப்படுத்தியது . நானும் என் வழக்கறிஞர் நண்பர்களும் பள்ளி விரைந்து சென்ற பார்த்த போதுதான் நடந்துக் கொண்டிருக்கும் விபரீதம் புரிந்தது. பள்ளியின் 2 ஆம் தள ஜன்னலிருந்து கரு கருவென புகை வந்துக் கொண்டிருந்தது. யாரோ யாரோ பள்ளிக்குள் புகுந்து தீயினில் எரிந்துக் கரிக்கட்டைகளாகிப் போன குழந்தைகளின் உடல்களை அலறியப்படி தூக்கி வந்தனர். அங்கு கூடியிருந்த மக்கள் அனைவருமே அலறிய வண்ணம் இருந்தார்கள். பல தாய்மார்கள் என் குழந்தையை காணோமே.. என கதறிக் கொண்டிருந்தனர். அங்கு நின்ற காவல்துறையினர் தங்கள் சீருடைகளை கழற்றி எறிந்துவிட்டு உள்ளே பாய்ந்து குழந்தைகளை அள்ளிக் கொண்டு கத்திக் கொண்டே ஓடியதை நான் கண்டேன் . என்னோடு வந்த என் வழக்கறிஞர்கள் நண்பர்கள் அனைவரும் உள்ளே கத்திக் கொண்டு ஓடினார்கள். கும்பகோணம் அரசு மருத்துவமனையில் கூட்டம் பிதுங்கிற்று. கும்பகோணம் நகரம் முழுக்க விதவிதமான செய்திகள் பரவி மக்களை மென்மேலும் பீதியடையச் செய்தன. 200 க்கும் மேற்பட்ட குழந்தைகளை காணவில்லை என்றும் , குழந்தைகளை இழந்த பெற்றோர் பலர் தற்கொலை செய்துக் கொண்டார்கள் என்றெல்லாம் வதந்திகள் பரவிக் கொண்டே இருந்தன.

ஒரு நகரம் தான் மீளவே முடியாத உச்சக்கட்ட சோகத்திற்கு உள்ளாகி வெறுமையானது. நகரத்தில் கடைகள் அடைக்கப்பட்டு ஓட்டு மொத்த நகரமே தன்னையே மயானமாக்கி நின்றது.தெருக்களில் எதிரெதிர் கடந்துப் போனவர்களின் கண்கள் கலங்கி இருந்தன. இறுதியில் என் தெருவினைச் சேர்ந்த 11 குழந்தைகள் உள்ளீட்டு தீ விபத்தில் 94 குழந்தைகள் எரிந்துப் போனார்கள் . குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகமானதற்கு காரணமாய் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைதான் அனைவரையும் உலுக்கியது. தீ பிடித்தவுடன் அவசர கதியில் ஓடி வந்த பல குழந்தைகள் தங்களுடைய புத்தகப் பையை விட்டு விட்டு சென்றால் வீட்டில் பெற்றோர் அடிப்பார்களே என்று நினைத்துக் கொண்டு புத்தகப் பையையும், டிபன் பாக்ஸையும் எடுக்க மீண்டும் பள்ளிக்குள் ஓடிய போதுதான் தீக்கு பலியாகிப் போன கொடுமை நடந்தேறியது. தன் வறுமையான ஏழைப் பெற்றோரிடம் பல முறை சொல்லி போராடி வாங்கி ஆசை ஆசையாய் பாதுகாத்து வந்த புத்தகங்களும், நோட்டுகளும் காணாமல் போனால் எங்கே அப்பா, அம்மா அடிப்பார்களோ, மீண்டும் வாங்கி தர மாட்டார்களோ என்ற அச்சத்தில் அப்பாவியாய் இறந்தன குழந்தைகள்.

தினம் தோறும் பள்ளிக்கு ஒழுங்காக போகும் என் தெருவினைச் சேர்ந்த 2 ஆவது படித்த வெங்கடேஷ் அன்றைய தினம் உடல் நலம் இல்லை எனக்கூறி பள்ளிக்கு செல்ல மறுத்ததை குழந்தைகள் கூறும் வழக்கமான பொய்யாக நினைத்து குழந்தையை அடித்து தரதரவென இழுத்து வந்து பள்ளியில் கொண்டு விட்ட வெங்கடேஷின் அப்பா முருகானந்தத்தின் கதறல் இன்றளவும் என்னை நிம்மதியிழக்க செய்கிறது.

தீ விபத்து நடந்து 6 வருடங்களுக்கு மேலாகியும் அவ் வழக்கு வாய்தாவிற்கு வாய்தா நடந்துக் கொண்டிருக்கிறது. தற்போது வழக்கு தஞ்சைக்கு மாற்றப்பட்டுள்ளது. கொடிய அந்த தீ விபத்திற்கு பிறகு கும்பகோணம் நீதிமன்றத்திற்கு வந்த அப்பள்ளியின் தாளார் பழனிச்சாமியை வழக்கறிஞர்கள் அடிக்க பாய்ந்ததும் நடந்தது. இந்த விபத்தில் குழந்தைகள் தான் செத்தனரே ஒழிய அப்பள்ளியின் ஒரே ஒரு ஆசிரியர் கூட தீயிற்கு பலியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றளவும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் சீர்கெட்ட கல்விக் கொள்கைகளுக்கு சாட்சியாக இருக்கிறது அந்த எரிந்துப் போன கட்டிடம். தனது பணத்தாசையால் குறுகிய கட்டிடத்திற்குள் அளவுக்கதிமான குழந்தைகளை அடைத்து கொலை செய்த பள்ளி தாளாளரையும் அவருடைய அனைத்து மோசடிகளுக்கும் துணைப் போன கல்வித் துறை நிர்வாகிகளையும் இன்றளவும் கூட சட்டத்தினால் எதுவும் செய்ய இயலாமல் வாய்தாவிற்கு மேல் வாய்தா வழங்கிக் கொண்டிருக்கிறது. எல்லா விதிகளுக்கும் முரணாக குறுகிய இடத்தில் கட்டிடம், அனுமதிக்கப்பட்ட அளவினைக் காட்டிலும் அதிகமான குழந்தைகளை சேர்த்தது.., விபத்து நடந்த நேரத்தில் குழந்தைகளை மீட்க போதிய பணியாளர்கள் இல்லாதது போன்றவை காரணங்களாக இருக்கின்றன. மேலும் மதிய உணவிற்காக பற்ற வைத்த அடுப்பின் நெருப்பு பள்ளியின் கீற்று மேற்கூரைக்கு பரவி பிள்ளைகளை காவு வாங்கி இருக்கிறது. 94 பிள்ளைகளை பலி கொடுத்த பிறகே தமிழ்நாடு அரசு கீற்றுக் கொட்டகை வகுப்பறைகளுக்கு கெடுபிடி காட்டியது.

வழக்கு கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து தஞ்சாவூர் விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு இன்னமும் நடந்துக் கொண்டிருக்கிறது. குற்றப்பத்திரிக்கை இப்போதுதான் வழங்கி இருக்கிறார்கள். இன்னும் வழக்கின் விசாரணை துவங்கவில்லை.போபால் விஷ வாயு வழக்கில் நிகழ்ந்த தாமதக் கேடு இந்த வழக்கிலும் நிகழ்ந்து விடக்கூடாது என பதறி துடிக்கிறார்கள் குழந்தைகளின் பெற்றோர்கள். அரசாங்க தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் மதுசூதனன் என்ற ஆளுங்கட்சி வழக்கறிஞர் நியமிக்கப்பட்டிருக்கிறார். எது எதற்கோ டெல்லியில் இருந்து விமானத்தில் காசு கொட்டி கொடுத்து பிரபல வழக்கறிஞர்களை அழைத்து வரும் அரசு இந்த வழக்கில் மெத்தனமாக இருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது.

தீ விபத்து நடந்த பள்ளியில் வருடாவருடம் ஜீலை 16 ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்ச்சியினை நடத்துகின்றனர் இறந்துப்போன குழந்தைகளின் பெற்றோர்கள். இந்த நாளை குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க கோருகிறார்கள் இவர்கள். அங்கு இறந்த குழந்தைகளின் படங்களை ஒரே படமாக உருவாக்கி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அதில் ஒரு குழந்தை என்னை ஈர்த்தது. அக்குழந்தைக்கு புகைப்படம் இல்லை. புகைப்படம் இருக்க வேண்டிய இடத்தில் அக்குழந்தையின் பெயரான “ப்ரியா” என்று எழுதி வைத்திருக்கிறார்கள். இன்னொரு படமும் அப்படித்தான். புகைப்படம் இல்லாமல் உருவத்தினை வரைந்து வைத்திருந்தார்கள் எனக்கு கண்ணீரே வந்து விட்டது. ஒரு புகைப்படம் கூட எடுக்க இயலாத வறிய சூழலில் இருந்த அக்குழந்தைகள் கல்வி கற்பதற்காக வந்த இடத்தில் எரிந்து செத்திருக்கின்றன. குழந்தை பிறந்த நொடி முதல் ஹேண்டிகாமில் பதிவு செய்து பரவசப்படும் உலகில் தான் எவ்வித அடையாளமுமற்று இறந்து விட்டிருக்கிறாள் ப்ரியா.

மேலை நாடுகளில் குழந்தைகளை கொண்டாடுகிறார்கள். மிக சுகாதாரமான பள்ளியில் நல்ல வெளிச்சத்தில் ,சிறப்பான ஆசிரியர்களின் கற்பித்தலில் குழந்தைகள் வளருகின்றன. மிக சுகாதாரமான கழிவறைகளோடு , காற்றோட்ட வெளிச்சத்தில் வகுப்பறை என குழந்தைகளுக்கு சிறப்பான கல்வியோடு ,சூழலையும் இணைந்தே அளிக்கின்றன மேலை நாடுகள். ஆனால் நம் நாட்டிலோ தரமற்ற பள்ளியில் வெளிச்சம் இல்லாத வியர்வை புழுக்க அறையில் பிள்ளைகளை திணித்து, தகுதியற்ற ஆசிரியர்கள் கல்வி வழங்குகிறார்கள். பல பள்ளிகளில் கழிவறைகள் இல்லை.இருந்தாலும் பயன்படுத்த தகுதியற்று சுகாதரமற்று இருக்கின்றன.

இனிமேலும் கும்பகோணங்கள் உருவாக வேண்டாம் என்பதுதான் கும்பகோணத்துக்காரர்களின் வேண்டலாக இருக்கிறது. உலகின் மிகப்பெரிய தீமை மனிதனுக்குள் ஊறிக்கிடக்கும் சுயநலம் சார்ந்த சகிப்புத் தன்மை உணர்ச்சி. அந்த சகிப்பே வாழ்வின் எல்லா மட்டங்களிலும் சமரசங்களை தேடச் சொல்கிறது. வாழ்வதற்கான எவ்வித தகுதியும் இல்லாத சமூகத்தில் நாம் அனைத்தையும் சகித்துக் கொண்டு வாழ்கிறோம். குழந்தைகள் சாகின்றன.

குருட்டுக் கண்களைத்

திறந்துப்பார்த்தால் இருட்டுதான்

பிரகாசமாய்த் தெரிகிறது

செவிட்டுச் செவிகளை கூராக்கி முயற்சித்தால்

நிசப்தம்தான் கூச்சலாய் கேட்கிறது

நுகராத நாசியை நுழைத்துப் பார்த்தால்

சாக்கடை மணம் சுகந்தமாய் இருக்கிறது

உருமாறிப் போனவன்

உடல் மாறி

மனம் மாறினப் பின்.

ஆத்மநாமின் இரவில் பேய்கள் கவிதையிலிருந்து…


தமிழ் மணம் உறவுகளுக்காக தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் பெற்றோர் சங்க முதன்மையாளர் இன்பராஜ் அவர்களை நான் எடுத்த நேர்காணலின் ஒலி வடிவம்
(முதல் முயற்சி இது. அதனால் ஒலியை தரப்படுத்தி எடிட் செய்ய தெரியவில்லை.பொறுத்தருள்க)



போபால் பேரழிவு வழக்கு – அழிவினை மிஞ்சிய தலைகுனிவு.

மத்திய பிரதேச தலைநகர் போபாலில் கடந்த 1984 ஆம் ஆண்டு நடந்த உலக மகா பேரழிவுகளில் ஒன்றான விஷவாயு தாக்குதலில் சிக்கி தொழிலாளிகள், அப்பாவி பொதுமக்கள் என 20,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதும், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உடல் ,மனம் பாதிக்கப்பட்டு போனதும் உலக வல்லாதிக்க நாடுகளின் கைகளிலும், பன்னாட்டு நிறுவனங்களின் கைகளிலும் இந்தியா சிக்கி எவ்வாறு சீரழிந்து கிடக்கிறது என்பதனை அப்பட்டமாக காட்டுகிறது. 26 ஆண்டுகளாய் நடந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான விஷவாயு கக்கிய யூனியன் கார்பைடு ஆலையின் முன்னாள் தலைவர் வாரன் ஆண்டர்சனுக்கு எவ்வித தண்டனையும் இல்லை. கடந்த 1984 ஆம் வருடம் போபால் விஷவாயு பேரழிவிற்கு பிறகு சம்பவ இடங்களை பார்வையிட வந்த வாரன் ஆண்டர்சனை கைது செய்யப்பட்டு அவரது வீட்டிலேயே(?) சிறை வைக்கப்பட்டார். சிறைச்சாலைகளும், கைதுகளும் இல்லாத நாடு இது பாருங்கள் . அதனால் தான் ஆண்டர்சன் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார். எதன் காரணத்திற்காக ஆண்டர்சன் பொதுச் சிறைக்குள் வைக்கப்படாமல் வீட்டுச்சிறைக்குள் வைக்கப்பட்டார் என்பதற்கு யாரிடமும் எவ்வித விளக்கமும் இல்லை. அக்காலக்கட்டத்தில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. அப்போது மத்திய பிரதேசத்தின் முதல்வராக இருந்த காங்கிரஸின் மூத்த தலைவர்களுள் ஒருவரான அர்ஜீன் சிங் தன் அரசு விமானத்தில் உயரிய பாதுகாப்புகளோடு டெல்லிக்கு அனுப்பி வைத்தார். டெல்லியில் 20,000/- பேரைக் கொன்ற ஆலையின் தலைவர் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் உயரிய தலைவரான ஜனாதிபதியின் மாளிகையில் ஒரு நாள் விருந்தினராக தங்கி கூத்தடித்து விட்டு மறு நாள் அப்போதைய மத்திய அமைச்சர் நரசிம்மராவ் வழியனுப்ப உல்லாசப் பயணம் முடித்த திருப்தியில் அமெரிக்காவிற்கு பயணமானார் ஆண்டர்சன். இது குறித்து காங்கிரஸ் கட்சியினைக் கேட்டால் ஆண்டர்சனை விமானத்தில் ஏற்றி பறக்க விட்டது நாட்டு நலனை முன் நிறுத்தி தான் என சிரிக்காமல் விளக்கம் அளித்தது.

நாட்டு நலனை முன் நிறுத்தி காங்கிரஸ் கட்சி செய்து வருகிற செயல்களை பாருங்கள். இலங்கைக்கு ஆயுதம் வழங்கி தமிழனை கொன்றது ராஜ தந்திரம் என்றால்…போபால் மக்களை கொன்றது நாட்டு நலன். ஆண்டர்சன் தப்பித்து போனது கடந்த 2005 ஆம் ஆண்டு வரை எவருக்கும் தெரியாது. 20 ஆண்டுகள் கழிந்த விட்ட அரசின் ஆவணங்கள் ரகசியம் அப்புறப்படுத்தப்பட்ட ஆவணங்களாக வகைப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்ட பிறகே உண்மைகள் ஊருக்கு தெரிந்தன. இந்த லட்சணத்தில் அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியிடம் அப்போது இருந்த அமெரிக்க துணை தூதர் கார்டன் ஸ்டீரிப் மூலம் பேசி தப்பித்து போக உறுதிகள் வாங்கிக் கொண்டே ஆண்டர்சன் இந்தியா வந்ததாக தகவல் கூறுகின்றன. இதை விட வெட்க கேடு வேறு என்ன இருக்க இயலும்.? ஆண்டர்சனை இந்தியாவிற்கு கொண்டு வர கடும் முயற்சிகள் செய்வதாக சொல்லும் காங்கிரஸ் அரசுதான் அன்று ஆண்டர்சனை பாதுகாப்பாக அனுப்பி தப்பிக்க விட்டது. பொய் சொல்லுங்கள். ஆனால் பொய்யிலேயே வாழாதீர்கள் .

குற்றவாளிகளின் தோழனாக இந்தியா தன்னை எப்போதும் காட்டிக் கொண்டே வருகிறது. உலக மகா குற்றவாளியான ராஜபக்சே, வாரன் ஆண்டர்சன், டக்ளஸ் தேவனாந்தா, போர்பர்ஸ் ஊழலில் சிக்குண்ட இத்தாலிய தொழிலதிபர் குவாத்ரோச்சி என இந்தியாவின் குற்றவாளிகளின் பாசம் பரந்தது.

போபால் விஷ வாயு தாக்குதல் திடீரென ஏற்பட்ட விபத்தல்ல.1975 ஆம் ஆண்டில் யூனியன் கார்பைடு தொழிற்சாலை முன் மாதிரி உற்பத்திகளை செய்த போதே விஷவாயு தாக்குதலுக்கு காரணமான மீத்தைல் ஐசோ சயனைடு என்ற நச்சுத்திரவத்தினை இங்கு உற்பத்தி செய்யக்கூட்டாது என போபால் மாவட்ட தொழிற்சாலை ஆய்வாளர் ஆணை பிறப்பித்தார். அரசியல்வாதிகளின் நெருங்கிய நட்பைப் பெற்ற முதலாளிகளை பகைத்துக் கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு என்ன நடக்கும்..? நீங்கள் ஊகித்தது சரி. அது தான் நடந்தது. தொழிற்சாலை ஆய்வாளர் மாற்றப்பட்டார். 1979 ஆம் ஆண்டு முதல் மீத்தைல் ஐசோ சயனைடு உற்பத்தி தொழிற்சாலை வளாகத்திலேயே ஏகோபித்த அரசு ஆதரவோடு துவக்கப்பட்டது. பணத்திற்காக மனிதனை உண்ணும் வேலைக்கு அரசின் ஆதரவு கேட்காமலேயே வழங்கப்பட்டது. ஏனென்றால் தொழிற்சாலையின் முதலாளி ஆண்டர்சன் அமெரிக்காவினை சேர்ந்தவர். அமெரிக்கா கக்கூஸ் போனால் இந்தியா கால் அலம்பி விட வேண்டும் என்பது தான் எழுதப்படாத விதி.

1981 –ன் துவக்கத்தில் மீத்தைல் ஐசோ சயனைடின் கலத்தில் நச்சு வாயு கசிவு ஏற்பட்டது. அதனால் அங்கு பணிபுரிந்த பணியாளர் மரணமுற்றார். பிறகு ஒன்றிரண்டு மாதத்திற்குள்ளாகவே அங்கு பணிபுரிந்த வேதியியல் பொறியாளர் ஒருவருக்கு நச்சுவாயு பாதிப்பினால் கடுமையான காயங்கள். நச்சு வாயு கசிவினால் தொடர்ச்சியாக பணியாளர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வந்தார்கள்.இப்படி தொடர்ச்சியாக நச்சு வாயு கசிவுகள் ஏற்பட்டும் முதலாளி ஆண்டர்சன் இந்திய அரசியல்வாதிகளுக்கு இடையே இருந்த அபரிதமான செல்வாக்கினால் விஷ தொழிற்சாலை மிகச் சிறப்பாக ,எவ்வித தடையும் இல்லாமல் நடைப் பெற்று வந்தது. குறைந்தப்பட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளை கூட ஆண்டர்சன் தன் தொழிற்சாலையில் செய்யாததன் விளைவு போபால் தலைமுறை தலைமுறைகளாக சுடுகாடாய் மாறிப் போனது. திட்டமிட்டே இந்தியாவின் வறுமை மக்களை தன் பரிசோதனைக்கு பயன்படுத்தி பார்த்து விட்டு இப்போது வேடிக்கை பார்க்கும் அமெரிக்காவிற்கு அடிக்கடி போய் விருந்துண்டு வருகிறார் நம் மன்மோகன். சரி , சாப்பிட்டு ஏப்பம் விடும் நேரத்திலாவது ஆண்டர்சனைப் பற்றி ஓபாமாவிடம் ஏதாவது கூறி நடவடிக்கைகள் ஏதேனும் எடுப்பார் என்று எதிர்பார்த்து உட்கார்ந்தோமானால் நம் வாயில் நாமே மண்ணை அள்ளிப் போட்டு கொண்டதற்கு சமம். தன் சொந்த நாட்டு அப்பாவி மக்களை காப்பாற்ற வக்கில்லாத அரசு ஈழத்தமிழர்களை காப்பாற்ற கொலைகாரன் ராஜபக்சேவிடம் பணம் கொடுத்தனுப்புகிறது. இந்த சிக்னலை மிகச்சரியாக புரிந்துக் கொண்ட ராஜபக்சே கொடுத்த பணத்தினை அவனது தேர்தல் செலவிற்கு பயன்படுத்தி விட்டு தேர்தல் வந்தது, ஊர்வலம் வந்தது என சாக்கு சொல்கிறான் நலம் விசாரிக்கப் போன நம் நாட்டு எம்பிகளிடம்.

போபால் விஷவாயு வழக்கு 26 வருடங்கள் நடைப்பெற்று தண்டனைக்குள்ளான யூனியன் கார்பைடு முன்னாள் தலைவர் கேசவ மகேந்திரா உள்ளிட்ட 7 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்திரவிட்டுள்ளது போபால் நீதிமன்றம்.( 20,000 மக்களை கொன்றவர்களுக்கு ஜாமீன். மக்கள் செத்ததை பத்தி கேட்டா ஜாமீன் மறுப்பு. இது தான் சட்டமாய்யா ?-ன்னு என் கிட்ட கேக்காதீங்க. நாங்க சட்டத்தினை பாதுகாக்குற வழக்கறிஞர்கள் )

சரி . ஊழல் அரசியல்வாதிகளின் பணத்தாசைக்கும், வல்லாதிக்க முதலாளிகளின் பேராசைக்கும் பலியாகிப் போன மக்களுக்கு என்னங்க வழி..? இதுக்கு இன்னும் பல முறை அமைச்சரவை கூட்டங்கள் நடத்தி, ஆலோசனைகள் செய்து , ஏதோ கொடுக்கலாம் என்று அரசு யோசித்த யோசனையை பரிசீலித்து ..எப்படி மக்கள் செத்து 26 வருடங்கள் கழித்து குற்றவாளிகளுக்கு ஜாமீன் கொடுத்தோமோ…அதே போல மிக விரைவாக மக்கள் வாயில் அள்ளிப் போட இருக்கிறது மண் என முடிவு செய்துவிட்டனர் அரசியல் வாதிகள்.

போபால் அழிவினைக் காட்டிலும் தங்களது பேராசைகளுக்காக அப்பாவி மக்களை கொன்றவர்களை அரசும் ,நீதிமன்றமும் கையாளும் விதம் அதைவிட அழிவினை அளிக்கும் கொடுமைகள். தேர்தல் செலவுக்கு கோடானு கோடி ஒதுக்கும் அரசியல் வாதிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈடு அளிக்க தினந்தோறும் நடத்திக் கொண்டிருக்கின்றனர் அமைச்சரவை கூட்டங்கள். வேதனை.

மைக்கேல் ஜாக்சன் – காற்றில் உலவும் பேரிசை



பன்முகத் தன்மை கொண்ட பல வகை நாட்டுப் புற இசை வடிவங்களையும் ,பறை போன்ற உணர்வினை உசுப்பி உள்ளுக்குள் எழுப்பிற இசைக் கருவிகளையும் தன் பண்பாட்டு விழுமியங்கள் மூலமாகவே அடைந்த தமிழர்களுக்கு மைக்கேல் ஜாக்சன் போன்ற மேனாட்டு இசை கலைஞர்களின் இசை வடிவங்கள் நெருக்கமில்லாமல் போனது வியப்பேதும் இல்லை. ஆஸ்கர் நாயகன் ஏ. ஆர். ரஹ்மானின் இசை நம்மிடையே உலவினாலும் இன்றளவும் 80 களின் இளையராஜா பாடல்கள் வெற்றிக்கரமாக அனைவராலும் உணர்வு மேலீட்டு கேட்க இயலுகிறது என்றால் அப்பாடல்களில் தொனிக்கும் மண் சார்ந்த நுணுக்கங்கள் தான். மண் சார்ந்த மரபிசையின் நுணுக்கங்களும்,திரை இசை வடிவங்களுக்கே உரிய உணர்வு உந்துதல்களும் நிரம்பிய இளையராஜாவின் இசை என்றென்றும் நம் மண்ணுக்குரியது. எனவே தன் மண் சார்ந்து வாழும் வாழ்க்கையைப் பெற்ற தமிழர்கள் பிற இசை வடிவங்களை விரும்புவதில் அதீத தன்னியல்பு காரணமாக விருப்பமற்று இருக்கிறார்கள். நானும் அப்படித்தான். மைக்கேல் ஜாக்சன் போன்ற ஒரு இசை கலைஞனை என்னைப் போன்ற எளிய தமிழன் நெருங்கையில் இனம் புரியாத அச்சத்துடன் நகர நேர்ந்தது.

ஜாக்சனின் வேக வேகமான நடனங்களும்., என்னிடத்தில் இருக்கும் சொற்ப ஆங்கில அறிவிற்கு எட்டாத வாக்கியங்களும் நொடிக்கு நொடி என்னை விரைவாக கடந்து போகையில் உண்மையில் நான் சற்றே அயர்ந்துப் போனேன். என்னைப் பொறுத்த வரையில் நான் இசை கேட்கும் ஒவ்வொரு முறையும் மழைக்கால மாலை ஒன்றில் ஜன்னலுக்கு அருகே அமர்ந்துக் கொண்டு ஒரு சுவையான தேநீர் அருந்துவதற்கு இணையான ஒரு அனுபவமாக அடைய விரும்புவேன். இசை ,இலக்கியம் போன்றவற்றில் என்னால் எளிதில் கடந்துப் போக இயலும் எதையையும் நான் அணுக விரும்புவதில்லை. அவ்வாறாகவே ஜாக்சனின் இசையும் அவரது மொழியும் எனக்கு சவாலாக இருந்தன.

மைக்கேலின் இசையை நெருங்க வேண்டுமானால் முதலில் நாம் மைக்கேலினை நெருங்க வேண்டும். பளபளப்பு மேடையில் லட்சக் கணக்கான வெறித்தன ரசிகர்களுக்கு மத்தியில் சுழன்று சுழன்று ஆடி குதித்து அசத்தும் மைக்கேலின் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் சோகமயமானது. தன் வாழ்நாள் முழுக்க மிகுந்த மன அழுத்தங்களுக்கு இடையே தான் அற்புதமான இசை வடிவங்களை மைக்கேல் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார். நான் முதலில் நெருங்கியது மைக்கேலின் த்ரில்லர் ஆல்பத்தில் உள்ள பீட் இட் ( beat it) என்ற பாடலைதான் . 1984 ஆம் வருடத்தில் ஏகப்பட்ட கிராமி விருதுகளைப் பெற்ற இந்த ஆல்பம் தான் மைக்கேலினை உச்சத்திற்கு கொண்டு சென்றது. இப்பாடலின் பரபரப்பான இசை மட்டுமே நான் மைக்கேலினை நெருங்குவதற்கு போதுமானதாக இருந்தது. இருந்தும் இன்னும் மொழி புரிந்து, வரிக்கு வரி தெரிந்து இசையை கேட்டால் இன்னும் சிறப்பானதாக இருக்கும் என நம்பினேன். மைக்கேல் ஜாக்சனின் டேஞ்சரஸ் தொகுப்பு 1991 ஆம் வருடம் ஆடீயோ கேசட்டுகளாக வெளிவந்த போது அதன் அட்டையில் அந்த தொகுப்பின் பாடல் வரிகள் இருந்தன. பிறகு பல்வேறு சந்தர்ப்பங்களில் இன்னும் பிற பாடல்களின் வரிகள் கிடைத்தன. ஜாக்சனின் பாடல் வரிகள் அசாத்தியமானவை.

“They Told Him Don’t You Ever Come Around Here


Don’t Wanna See Your Face, You Better Disappear


The Fire’s In Their Eyes And Their Words Are Really Clear


So Beat It, Just Beat It

எனத் துவங்கும் பாடலை மைக்கேல் இந்த வரியைத்தான் பாடுகிறார் என்பதை நான் பாடல் வரிகளினை கைகளில் வைத்துக் கொண்டு கேட்டப் பிறகே புரிந்தது. இத்தனைக்கும் திரில்லர் அவரது 6 ஆவது ஆல்பம் தான். 1958 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி மைக்கேல் பிறந்தார். தன்னுடைய 11 ஆவது வயதில் தன் சகோதரர்களோடு ஜாக்சன் 5 என்ற நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்ட மைக்கேல் ஜாக்சன் தந்தையின் கொடுமைக்கு உள்ளான குழந்தையாக வளர்ந்தார். மைக்கேலின் முகத்தினை மிக மோசமாக திட்டிய அவரது தந்தையின் நடவடிக்கைகளால் அவரது பால்யம் பறி போனது.

சிறு வயதில் ஏற்பட்ட உளவியல் அழுத்தங்கள் காரணமாக தன் முகத்தினை மாற்றிக் கொள்ள அறிவியலின் துணை நாடி முயன்றுக் கொண்டே இருந்தார் மைக்கேல். 1971 ஆம் ஆண்டு முதல் தனி நிகழ்ச்சிகள் நடத்திய மைக்கேல் தன் தனிப்பட்ட வாழ்க்கையில் பல விதமான குற்றச்சாட்டுகளுக்கும், சர்ச்சைகளுக்கும் ஆளாகி நீதிமன்றங்களுக்கு அலையும் நிலைக்கு உள்ளானார். குழந்தைகளிடம் பாலியல் உறவு போன்ற மிக மோசமாக குற்றசாட்டுகளுக்குள் அவர் சிக்கியும் அவரது இசை தனித்துவமானதாக நின்றது.

மைக்கேலின் இசை வடிவங்களை நம் ஊர் ஆட்கள் வரை ஏராளமனோர் நகலெடுத்து இருக்கின்றனர். பிரபுதேவா, லாரன்ஸ் போன்றோர் அவர் போல ஆடவும் முயன்று வருகின்றனர். தற்காலத்து மேற்கத்திய நடன கலைஞர்களில் மைக்கேலின் பாதிப்பு இல்லாதவர்கள் மிக குறைவு. தன்னுடைய கருத்த உடல் குறித்து மைக்கேல் மிகவும் குற்ற உணர்வு கொண்டிருந்ததாகவும் அதன் காரணமாகவே நிறம் மாற்ற பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகள் நிறைய செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாயின. இது குறித்து மைக்கேலிடம் கேட்ட போது தன்னுடைய இயல்பு மாறுவதற்கு காரணம் ஒரு வகை தோல் வியாதிதான் என விளக்கம் அளித்தார். அவரது மகனுக்கும் அவரைப் போன்ற வியாதி என்றெல்லாம் செய்திகள் வருகின்றன.

மைக்கேலின் ஆல்பங்கள் 75 கோடிகளுக்கும் மேலாக விற்று தீர்ந்திருக்கின்றன. இன்றளவும் விற்றுக் கொண்டிருக்கின்றன. இசை உலகின் மிக உயரிய விருதான கிராமி விருதினை 13 முறை வென்று பாப் உலகின் மன்னன் என்றெல்லாம் பட்டம் பெற்று ,ஒரு இசைக் கலைஞன் அடைய முடியாத சிகரங்களை தொட்டிருக்கிறார் மைக்கேல்.எம்.டிவி என்பதன் முழு வடிவம் மியூசிக் டிவி என்றாலும் அது மைக்கேல் ஜாக்சன் டிவியாக செயல்பட்ட காலங்களில் ஒவ்வொரு வீட்டின் வரவேற்பறைக்குள்ளும் மைக்கேல் சென்றடைந்து புகழடைந்தார்.

எனக்கு மைக்கேலின் இசை வடிவங்களில் beat it ( thriller), smooth criminal (bad),Jam (dangerous),heal the world( dangerous) , they don’t care about us ( history), black or white (dangerous) போன்ற பாடல்கள் மிக விருப்பமானவை.

தன் இசை இழைகளின் அனைத்துப் புள்ளிகளும் ஒர்மைப்பட்டு அது ஆகச் சிறந்ததாக விளங்க மைக்கேல் மிகவும் எடுத்துக் கொள்வார். அவரது இசை வடிவங்களைப் போலவே அவரது இசை சார்ந்த ஆல்பங்களும் உயரிய சிறப்பு தொழிற்நுட்ப நுணுக்கங்கள் வாய்ந்தவை. மைக்கேலின் பல பாடல்களை தமிழ் திரைப்படக்காரர்கள் நகலெடுத்திருக்கிறார்கள். they don’t care about us என்ற பாடலினை பாய்ஸ் திரைப்படத்தில் சங்கரும் , Remember The Time என்ற பாடலினை இந்தியன் திரைப்படத்திலும் ,சின்னக் கண்ணம்மா திரைப்படத்திலும் அப்பட்டமாக பயன்படுத்தி இருக்கிறார்கள். இன்னும் பல திரைப்படங்களில் மைக்கேலின் நுணுக்கமான கலை வடிவங்களை நகலெடுத்திருப்பதை நாம் நன்கு அறியலாம்.

மைக்கேலின் இசை பாப் உலகில் புதிய ஒளியினை பாய்ச்சியது. அவரது இசை உலகப் பொது இசையாக மாற்றப்பட்டு விட்டது. இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் உலகின் அனைத்து விதமான ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளான ஒரு மனிதனின் மனநிலையினை அவை உரத்துக் கூறுகின்றன.நிம்மதியற்ற ஒரு மனிதனின் உள்ளார்ந்த அழுகையின் சப்தம் மைக்கேலின் இசையில் சதா ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

நாம் மிகவும் அறிந்த ஒரு மனிதன் இசையாய் வாழ்ந்து பல வித கனவுகளோடு முடிவுற்றிருக்கிறான். மைக்கேல் இறக்கும் தருவாயில் அவரிடம் அடுத்த இசை பயணங்களுக்கான கனவுகளும், முன்னேற்பாடுகளும் இருந்தன. நிறைவேறாத ஆசைகளோடு மைக்கேலின் குரல் காற்றில் உலவும் பேரிசையாக விளங்குகிறது. ஒரு ஒடுக்கப்பட்ட கருப்பின கலைஞன் என்ற முறைமையில் மைக்கேல் நம் மனதிற்கு நெருக்கமானவனாக என்றும் இருப்பான். மைக்கேல் நம் மனதிற்கு நெருக்கமானவனாக என்றும் இருப்பான்.

நீதிமன்றத்தில் தமிழ் – தமிழ் தேசிய இன தன்னெழுச்சி கோரிக்கை .


நம் கண் முன்னால் ஈழ மக்கள் வல்லாதிக்க நாடுகளால் கொத்து கொத்தாய் கொன்று குவிக்கப்படுகையில் உணர்வு உந்த ஆவேசமாய் போராடிய வழக்கறிஞர்கள், தன் தாய்மொழியை, தன் சொந்த நிலத்தின் நீதிமன்ற மொழியாக அறிவிக்க கோரி சாகவும் துணிந்திருக்கிறார்கள்.

நீதிமன்றத்தின் வரலாறு விசித்திரமானது. வல்லான் வகுத்ததே சட்டம் என்ற முது மொழிக்கேற்ப மன்னராட்சி காலத்தில் அரண்மனைகள்தான் அறம் கூறும் மனைகளாக திகழ்ந்தன. The king can do no wrong – என்றெல்லாம் அதிகாரத்தின் உச்சம் தெறிக்கின்ற துளிகளே நீதியாகவும், சட்டமாகவும் விளங்கிய காலத்தில் எளிய மனிதர்களுக்கு நீதி என்பது அவ்வப்போது எட்டிப் பார்க்கின்ற நிலவாய் நின்றது. நீதி பரிபாலனம், சட்ட விதிகள் ,நீதி பரிபாலன அலுவல் முறைகள் என அனைத்தையும் மேலை நாடுகளிடம் இருந்து உள் வாங்கிய இந்திய நீதி வழங்கல் தன்மை மிகவும் பழமைத் தன்மை உடையது. எடுத்துக்காட்டாக வெப்ப நாடான நம் நிலத்தில் வழக்கறிஞர்களின் உடை முற்றிலும் முரண் தன்மை உடையதாக விளங்குகிறது. ஆங்கிலேய வந்தேறிகளின் பல சட்டங்கள் இன்றளவும் நம் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

வழக்கறிஞர்கள் தொழிலும், நீதிபதிகளுக்கான தகுதிகளும் ஆரம்பத்தில் ஆங்கிலேயர்கள் வசமே சார்ந்து இருந்தன. உச்சமும், அதிகாரமும், எங்கு குவிகிறதோ அங்கு பார்ப்பன ஊடுருவல் உடனடியாக நடக்கும் என்ற வரலாற்று சமூக விதிக்கு ஒப்பாக வழக்கறிஞர் தொழிலையும் பார்ப்பனர்கள் கைப்பற்றி இந்த நாட்டில் 90 விழுக்காட்டிற்கும் மேலாக இருக்கின்ற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களிடம் இருந்து நீதித்துறையை மிகவும் அன்னியப் படுத்தி, கடவுளுக்கு நிகரான புனிதத் தன்மையை ஏற்படுத்தி உச்சாணிக் கொம்பில் உயரத்தில் வைத்தார்கள். 1862 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆங்கிலேயர்கள் மட்டுமே வழக்கறிஞராக முடியும். 1870 க்கு பிறகே ஆங்கிலேயர்கள் தவிர்த்த இந்தியரும் வழக்கறிஞராக ஆக முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அந்த காலக்கட்டத்தில் சரசுவதி குடியிருந்த நாக்காக விளங்கிய பார்ப்பனர்களே இந்த தொழிலை ஆக்கிரமிக்க துவங்கினர் . வழக்கறிஞர் சங்கம் என அழைக்கப்படும் வக்கீல் பார் 1888 ஆண்டு மயிலாப்பூரில் எஸ்.சுப்பிரமணிய அய்யர் என்ற பிராமணரால் துவக்கப்பட்டது. இவ்வாறெல்லாம் தமிழுக்கு முற்றிலும் தொடர்பில்லாத வந்தேறிகளிடம் சிக்கிய நீதித்துறை இன்றளவும் தமிழை ஏற்றுக்கொள்ள தடுமாறிக் கொண்டு நிற்கிறது. தந்தை பெரியார் என்ற மகத்தான மனிதனின் வருகைக்குப் பிறகுதான் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் கரங்களுக்கு கல்வி போய் சேர்ந்த்து. அதற்குப்பிறகுதான் வானுயர நின்ற வழக்கறிஞர் தொழிலும் எளிய மக்களின் கரங்களிடம் வசப்பட்டது.

மானுட இனத்தின் தனித்த அடையாளமாய் மொழி திகழ்கிறது. மொழியே ஒரு இனத்தின் பண்பாட்டு வரலாற்றின் அடிப்படையாகவும், தொடர்ச்சிக்கான ஆதாரமாகவும் விளங்குகிறது. சமூகத்தின் தகவல் பரிமாற்ற தேவையை பூர்த்தி செய்வது மட்டுமல்ல மொழியின் பணி. ஒரு இனத்தின் அனைத்து சமூக கூறுகளிலும் மொழியின் ஆதிக்கமும், அவசியமும் தொடர்கிறது. மனித நாகரீகத்தின் வளர்ச்சிப் போக்கினை மொழிதான் உறுதி செய்தது. எனவே தான் தேசிய இன வரையறைவியலின் அடிப்படை அலகாக மொழி திகழ்கிறது. தேசிய இனத்தின் உயரிய சின்னமாக விளங்கும் மொழிதான் அந்தந்த இனத்தின் பண்பாட்டு விழுமியங்களை தீர்மானிக்கிற காரணியாக விளங்குகிறது.உலக மொழிகளில் மிக தொன்மையான தமிழ் மொழியை பேசுகின்ற நாம் …நம் தாய்மொழியை வெறும் தகவல் பரிமாற்ற கருவியாக மட்டும் காணாமல் நம் தனித்த அடையாளமாய் போற்றி பாதுகாக்க முயன்று வருகிறோம். “வானம் அளந்ததனைத்தும் அளந்திடும் வண்மொழி” என பாரதி சிலிர்த்து , “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே,வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி” என புறப்பொருள் வெண்பாமாலை புகழ்ந்து, 3000 ஆண்டுகளுக்கு முன்பே இலக்கண வளமையையும், இலக்கிய செழுமையும் பெற்று உயர்த் தனி செம்மொழியாக திகழ்கிறது நம் தமிழ் மொழி.

இந்தியா போன்ற பல மொழிகளும், முரண்பட்ட பருவ காலங்கள் நிலவும் வெவ்வேறு விதமான நிலத் தன்மைகளும் நிரம்பிய ஒரு நாட்டில் அந்தந்த தேசிய இனங்களுக்கான அடிப்படை அடையாளமாக மொழியே திகழ்கிறது. இந்திய அரசியலைப்பு இந்த பரந்துப்பட்ட நிலவியலில் உலவும் மொழிகளில் அதனதன் வரலாற்று தன்மைகளுக்கு ஏற்பவும், மக்களின் உபயோகத் தன்மைகளுக்கு ஏற்பவும் 2003 ஆம் ஆண்டின் அரசமைப்பு 92 ஆம் திருத்தச் சட்டத்தின் படி தமிழ் உள்ளீட்ட 22 அலுவல் மொழிகளை அரசியலைப்பு எட்டாம் அட்டவணையில் அடையாளம் காட்டுகிறது. இந்த மொழிகள் அதனதன் அளவில் செழித்தோங்க உரிமையும், பயன்பாட்டு தன்மையில் விரிந்து பரவ உரிமையும் கொண்டு தன்னகத்தே தனித்த இறையாண்மை கொண்டும் விளங்குகின்றன. ஒரு நிலை நிறுத்தப்பட்ட முழு சனநாயகம் தேசிய இனங்களின் தாய்மொழியின் அடுத்தக்கட்ட வளர்ச்சியை ஆதரித்து உறுதி செய்கிறது.

இந்தியா சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து மத்தியில் ஆள்பவர்கள் இந்தியை தாய்மொழியாக கொண்டவர்களாக இருந்ததால் அவர்களின் தாய்மொழியை பெரும்பான்மை என்ற தட்டையான தகுதியை வைத்துக் கொண்டு பன் முக மொழிகள் நிலவும் ஒரு பரந்துப்பட்ட நிலத்தில் எவ்வித விவாதத்திற்கும் உட்படுத்தாமல் தேசிய மொழியாக தேவநாகரி வடிவத்துள்ள இந்தியை அறிவிக்க முடிந்தது.அதற்கு சட்ட ரீதியிலான பாதுகாப்பினை உறுதி செய்ய அரசமைப்பு சட்டம் உறுப்பு 343 வழிவகை செய்கிறது. மேலும் எவ்வித மனத்தயக்கமும் இல்லாமல் மற்ற தேசிய இனத்தவர் வாழும் நிலங்களில் இந்தியை புகுத்தவும் முடிந்தது. உறுப்பு 351 இந்தியை பரப்புவது யூனியனின் கடமை என அறிவித்துள்ளது. பல்வேறு பட்ட மொழி வாரி தேசிய இனங்கள் உள்ள நாட்டில் இந்தி மட்டும் பரப்ப வேண்டியது ஒரு கடமையாக அரசமைப்பு சட்டத்தினால் கூறப்பட்டிருப்பது முற்றிலும் ஒரு தலைச்சார்பானது. மேற்கண்ட உறுப்பு 351-ன் காரணமாகவே ஆர். ஆர். தளவாய் எதிர் தமிழ்நாடு மாநிலம் (AIR 1976 SC 1559) என்ற வழக்கில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டோர்க்கு ஒய்வூதியம் அளிக்கும் தமிழக அரசின் திட்டம் உச்சநீதிமன்றத்தினால் ஏற்க முடியவில்லை. தமிழினத்தின் தேசிய தன்னெழுச்சி உணர்வாக பற்றி பரவிய இந்தி எதிர்ப்பு போராட்டத்தினால் இந்தியின் ஆதிக்கம் ஒரளவு மட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் இன்றளவும் இந்திய நிலத்தின் ஆகச் சிறந்த ஒற்றை மொழியாக இந்தியை நிலைநிறுத்தும் முயற்சிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

தேசிய இனத்திற்கான தன்னுரிமைகளில் முதன்மையானதாக திகழும் மொழிக்கான உரிமை நீதித்துறையில் முழுவதுமாக மறுக்கப்பட்டு வருகிறது. இந்திய அரசியலமைப்பு அடையாளம் காட்டிய 22 அலுவல் மொழிகளில் இந்தியும், ஆங்கிலமும் மட்டுமே உச்ச நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் ஆட்சி மொழியாக , அலுவல் மொழியாக இருக்கின்றன. பீகார், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் இந்தி மட்டுமே நீதிமன்ற மொழியாக மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது. ஆனால் இந்திய அரசினால் அடையாளம் காட்டப்பட்ட 22 அலுவல் மொழிகளில் இந்தியை தவிர மற்ற மொழிகளை நீதிமன்ற அலுவல் மொழியாக அதனதன் மாநிலங்களில் மத்திய அரசு அறிவிக்காத பாரப்பட்சத் தன்மை இந்தியா அணிந்துக் கொண்டிருக்கும் சனநாயக முகமூடிக்கு ஏற்புடையதாக இல்லை. இத்தகைய பாரபட்ச மொழிக்கொள்கை இந்தியை தாய்மொழியாக கொண்ட மக்களுக்கு சாதகமாகவும், மற்ற மொழி சார் தேசிய இனங்களுக்கு விரோதமாகவும் இருக்கின்றது. மற்றொரு அலுவல் மொழியான ஆங்கிலம் தமிழின மக்களின் சமூக வாழ்வியலை மிக கடுமையாக நசிப்பதாக இருப்பதோடு மட்டுமில்லாமல் விளிம்பு நிலை மக்களின் பயன்பாட்டிற்கு எதிராக உள்ளது. இந்த பரந்து பட்ட நிலத்தில் இங்கு வசிப்பவர் யாருக்குமே தாய்மொழியாக ஆங்கிலம் இல்லை. ஆனால் ஆங்கிலம் நமக்கான நீதிமன்ற மொழியாக இருப்பது வெட்ககேடான ஒன்று.

எளிய மனிதனின் இறுதி நம்பிக்கை நீதிமன்றம். நீதிமன்றங்களின் அனைத்து கதவுளும் மூடப்பட்டு ..இருட்டு அறைக்குள் …புரியாத மொழியாய் வழிந்தோடும் நீதி எப்படி மக்களுக்கு எட்டும் ஒன்றாக இருக்கப் போகிறது என்பது புரியவில்லை. பரந்த எண்ணிக்கையில் வாழும் மக்களின் மொழியில் இல்லாத சட்டமும், நீதியும் எதன் பொருட்டு அன்னிய மொழியில் அமையவேண்டும் என்பதில் தான் அனைத்து வித சதிகளும் அடங்கி இருக்கின்றன. இந்திய அரசியலைப்பு உறுப்பு 348 நீதிமன்ற அலுவல் மொழியாக அந்தந்த மாநில மொழிகள் இருக்க தடை இல்லை என தெளிவாக உரைக்கின்ற போதும் கூட இன்றளவும் மத்திய ,மாநில அரசுகளின் கனத்த மெளனம் கள்ளத்தனமான ஒன்று என்பது வெளிப்படை.

மக்களுக்கான பயன்பாட்டு வெளியாக வெளிப்படையாக திகழ வேண்டிய நீதிமன்றம் யாருக்காக …எதன் பொருட்டு… மக்கள் மொழியில் இல்லாமல் போக வேண்டும் ? . சமூக தளத்திற்கு மிக நெருக்கமான வழக்கறிஞர்களின் வாதங்கள் மிக வெளிப்படையாக , மக்களின் தாய்மொழியில் அமைவதுதான் நேர்மையானதாக இருக்க இயலும். கடவுளின் இருக்கைக்கு நிகரானதாக புரியாத மொழி பீடங்களினால் நிர்மாணிக்கப்பட்ட நீதிபதிகளின் இருக்கையும்… மக்களுக்கு புரியாத ஆங்கிலத்தில் புரளும் சட்டத்தின் நாக்குகளும் ,மக்களின் மொழிக்கு எதிராக இருக்கும் போது…தகர்த்தெறியாமல் என்ன செய்வது..?

உயர் தனிச்செம்மொழியாக மத்திய அரசு தமிழ் மொழியை அறிவித்து விட்டதாக ஆடம்பரம் பொங்க…கொண்டாட்ட காட்சிகள் அரங்கேறுகின்ற இவ்வேளையில் …ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியால் ஒரு ஒற்றை சுற்றறிக்கை மூலம் கூட தமிழுக்கு அங்கீகாரம் தர இயலவில்லை. கேட்டால் வந்து பேசுங்கள்..நாங்கள் தடுக்க மாட்டோம் என்று தர்க்கம் வேறு. தமிழில் பேசினால் தடுக்காமல் இருப்பது எப்படி தமிழ்மொழிக்கான அங்கீகாரமாக நினைக்க முடியும்…? . தமிழில் பேசுவது மட்டுமே பயன்பாட்டின் மொத்த வடிவத்தினை உள்ளடக்காது. மாறாக நீதிமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளும் தமிழ் மொழியில் நிகழ்வதற்கு யாருமே வாய்மொழியாக கூட உத்திரவிட மறுக்கிறார்களே ஏன்..? எம் தமிழ் மொழிக்கான அங்கீகாரத்தினை ஒரு ஒற்றை சுற்றறிக்கையில் சுருக்கி வைத்து .. இந்தி பேசாதவர்களின் எண்ணிக்கை 50% விழுக்காட்டிற்கும் அதிகமாக இருக்கும் இந்த நாட்டில் இந்திக்கும், வந்தேறி மொழியான ஆங்கிலத்திற்கும் கொடுக்கும் குறைந்தப் பட்ச மதிப்பினை ..3000 ஆண்டுகட்கு முந்தைய எம் உயிருக்கு நிகரான எம் தாய்மொழிக்கு வழங்காத நீதிமன்றமும், அதன் சட்டங்களும் எதன் பொருட்டும் எமக்கு எதிரானவைகளே…நீதிமன்றத்தில் தமிழ் என்பது தமிழ் தேசிய இனத்தின் நியாயமான கோரல் மட்டுமல்ல . ஏற்கனவே ஒடுக்கப்பட்டு ,தோற்கடிக்கப்பட்டு நிர்கதியாய் நிற்கும் ஒரு இனத்தின் தன்னெழுச்சி முழக்கம்.

எனதருமை தமிழர்களே…

நம் பண்பாட்டின் ஆணி வேராக திகழும் ..நம் உயிருக்கு நிகரான நம் தாய்மொழியாம் தமிழினை இத்தனை ஆண்டு காலம் இருட்டில் வைத்து ஒதுக்கி வைத்தது போதும். தமிழர்களின் அடிப்படையான இக்கோரிக்கைக்காக உணர்வுள்ள வழக்கறிஞர்கள் உயிரை விடவும் துணிந்து இருக்கிறார்கள்.

இனி இழப்பதற்கு நம்மிடத்தில் ஏதும் இல்லை. நம் உயிரான மொழியை தவிர..

மொழியையும் இழந்து …சொற்கள் அற்ற ஊமைகளாய்.. உணர்வற்று திரிவதைதான் ஆள்பவர்கள் விரும்புகிறார்கள்..

நம் உயிருக்கு நிகரான தமிழினை உயர்நீதிமன்றத்தில் உயர்த்துவோம்.

விரல் கோர்த்து உயர்த்தும் கரங்களால் ..விண்ணையும் முட்டுவோம்.

வாருங்கள்.. மொழிப் போற்ற போரிடுவோம்.

“செந்தமிழைச் செந்தமிழ்நாட்டைச் சிறைமீட்க

நந்தமிழர் உள்ளத்தில் வையம் நடுநடுங்கும்

வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்ததென்று

குந்தி குரலெடுத்து கூவாய்” – பாவேந்தர் பாரதிதாசன்

முத்துக்குமாரும்…முடிவற்ற ஒரு கவிதையும்


நித்யானந்தாவை நித்தமும் பழிக்கும்

என் மனைவிக்கு இன்று வரை தெரியாது

முத்துக்குமார் என்றொருவன்

மரித்துப்போனது.

என்றாவது ஒருநாள்

எனது நாட்குறிப்பிலுள்ள

அவன் புகைப்படத்தைக் காட்டிக் கேட்பாள்

அப்போது சொல்லிக்கொள்ளலாம்…

நம்மையெல்லாம் ஏமாற்றினானே

ஒரு நித்யானந்தா

அவனைப்போல

நம் எல்லோராலும் ஏமாற்றப்பட்டவன்தான்

இந்த முத்துக்குமாரென்று!

– என் மனைவியும் ,நித்யானந்தாவும் – சொல்வனம் பகுதி- ஆனந்த விகடன் – முத்துரூபா



கடந்த வார ஒரு நள்ளிரவில் இக்கவிதையை நான் படித்தேன். பொதுவாக கவிதைகள் என்பவற்றை படைப்பாளனின் உச்சக்கட்ட உணர்வாக மட்டும் உணரும் என்னால் இக் கவிதையை மிக எளிதில் கடக்க இயலவில்லை. வலி மிகுந்த குற்ற உணர்வால் அந்த இரவில் நான் அழுத்தப்பட்டு கண்கலங்கி விழித்துக் கிடந்தேன்.

முத்துக்குமார் – நம் வாழ்நாள் முழுக்க ஏதோ தருணங்களின் மிச்ச சொச்சத்தில் ஒட்டிக் கொண்டே வரப் போகின்ற உணர்வாய் நம்முள் சுரந்துக் கொண்டே இருக்கின்றான். முத்துக்குமாருக்கு பின்னால் பல உணர்வுள்ள தமிழர்கள் அவனது பாதையை பின்பற்றினாலும் முத்துக்குமாரின் ஈகை தனித்துவ உணர்வாய் ஒவ்வொரு தமிழனின் மனசாட்சியையும் உலுக்கியது.

தான் சாகப்போகிறோம் என்பதை உணரும் தருணங்களில் அந்த இளைஞன் மிகவும் யோசித்து இருக்கிறான். தற்கொலை என்பது கோழைகளின் முடிவென்றாலும்…இது உணர்ச்சி வயப்பட்ட ஒரு இளைஞனின் தற்கொலையாக நம்மால் கணிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்திருக்கின்றான் அவன். காலநதியின் சீரற்ற ஓட்டத்தில் ஏதோ ஒரு நொடியில் சட்டென்று எடுக்கப்பட்ட ஒரு முடிவல்ல அது. மாறாக காலம் காலமாய் இறையாண்மை என்ற பெயரினால் அடக்கி வைக்கப்பட்ட தொன்மமிக்க ஒரு தேசிய இனத்தின் பொங்கி பாய்ந்த பிரவாகமாய் பிறீட்டு கிளம்பிய முத்துக்குமாரின் ஈகை நம்மை மிச்சம் இருக்கின்ற இந்த வாழ்நாட்களில் நிம்மதியாக இருக்கவிடாது.

என்னைப் பொறுத்தவரை நான் என் வாழ்நாளில் சுமக்கும் மிகப்பெரிய குற்ற உணர்வு முத்துக்குமார். அவனது தியாகம் நம்மைப் போன்றோர் சமூக இயல்பாக கொண்டிருக்கும் சுயநல, சுக நுகர்வு உள்ளத்தினை சுட்டுப் பொசுக்கிறது. நாம் தமிழர் கூட்டங்களில் கலந்துக் கொள்ளும் முத்துக்குமாரின் தந்தை , அப்பா குமரேசன் அருகில் அமரும் போது என்னால் இயல்பாக அமர இயலவில்லை. அவரின் கைகளினை நான் ஒரு சமயம் பற்றிய போது அக்கரங்கள் முத்துக்குமாரினை சுமந்திருக்கும் என்ற உணர்வே என்னை மிகவும் உணர்வு வயப்படுத்தியது.

நமக்கெல்லாம் வாய்க்காத ஒரு மனத்தினை பெற்றிருந்தான் முத்துக்குமார்.நமக்கெல்லாம் வாய்த்திருக்கின்ற சுக வாழ்விற்கான அனைத்து வாய்ப்புகளும் முத்துக்குமாருக்கும் கிடைத்து இருந்தன. ஆனால் நாமெல்லாம் பிழைப்பதற்காவும்,சோற்றுக்காகவும் ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து பொருளீட்டி , மனைவி மக்களுக்கு வீடு கட்டி , பிறக்க இருக்கின்ற பேரன் பேத்திகளுக்காக சொத்து சேர்த்து வாழ்கின்ற காலத்தில் தான் முத்துக்குமார் இவ்வாறு சிந்தித்தான்….முத்துக்குமாரால் இவ்வாறு சிந்திக்க முடிந்த கணத்தில் துவங்கி அவன் தமிழனின் மங்காப் புகழாய் மாறிப் போனான். வாழ்வதற்கான போராட்டம் தான் வாழ்க்கை என்பதை மறுதலித்து வாழ்வதற்கான புதிய இலக்கணத்தினை உரத்தக் குரலில் ஒவ்வொரு உணர்வு மிக்க தமிழனின் உள்ளத்தில் சொல்லிக் கொண்டு இருக்கின்றான் முத்துக்குமார்.

முத்துக்குமாரின் ஈகை தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களால் மூன்றாம் தர அரசியலாக மாற்றப்பட்ட அவலத்தினை கற்றது தமிழ் இயக்குனர் ராம் சாட்சியாக நின்று ஏற்கனவே எழுதி இருக்கிறார். தமிழீழ விடுதலைக்கான துருப்புச் சீட்டாக மாறி இருக்க வேண்டிய முத்துக்குமாரின் தியாக உடல் , அவனது இறுதி உள வேட்கைக்கு மாறாக மிக சாதாரண நிகழ்வொன்றில் எரியூட்டப்பட்டது.

இருந்தாலும்..முத்துக்குமார் இது நாள் வரை சாகவில்லை .

தமிழக வீதிகளில் திரிந்துக் கொண்டே இருக்கின்றான். ஈழ கனவிற்கான வெப்ப பெருமூச்சாய் புழுதியடிக்கும் தமிழக வீதிகளில் திரிகின்றான் அவன். எவ்விதமான அரசியல் லாபமின்றி.. உணர்வின் பெருக்கால் ..தேசியத் தலைவர் பிரபாகரன் நீடுழி வாழ்க என அடி வயிற்றில் இருந்து முழங்கும் எளிய தமிழின இளைஞனின் குரலில் தொனித்துக் கொண்டே இருக்கின்றான். தலைவர் உயிருடன் இருக்கிறார் என்ற செய்தியை ஆர்வமாகவும், ஆசையாகவும் பகிர்ந்துக் கொள்ளும் மனங்களாய் மாறிக் கிடக்கின்றான் முத்துக்குமார். இன துரோக அரசியலின் உச்சக்கட்ட கொடுமையாக நடக்க இருக்கும் ஆடம்பர மாநாட்டின் விளம்பரத்தினை கண்டு கூட காறி உமிழும் இளைஞனின் கோபத்தில் இருக்கின்றான் முத்துக்குமார். இனம் முள்வேலி கம்பிக்குள் அடிமைப்பட்டு கிடக்கையில் அம்பத்தூரில் கக்கூஸ் கழுவவில்லை போராட்டம் அறிவிக்கும் பித்தலாட்ட அரசியலினை இடது காலால் எட்டி உதைக்கும் இறுமாப்பு இதயங்களில் இருக்கின்றான் முத்துக்குமார்.ஒரு சீட்டுக்காக ஒற்றைக் கால் ஒடிய தவமிருந்து தள்ளாடிக் கொண்டிருக்கும் பதவி அரசியலின் பம்மாத்துத் தனத்தினை கண்டு பரிகசிக்கும் வார்த்தைகளில் வழிகிறான் முத்துக்குமார்.

முத்துக்குமாரின் ஈகை யாரும் கடக்க இயலா வெப்ப பாலைவனமாய் நம்முன் விரிந்து கிடக்கின்றது. அது பசித்த வேட்டை நாயைப் போல பின்னிரவு கனவுகளில் வேகமாய் துரத்துகின்றது. புரையோடிய புண்ணாய் …குத்திக் கிழிக்கும் வலியாய்.. சதா ஈழத்தினை நினைவூட்டி நிற்கும் அது.

Page 8 of 11

Powered by WordPress & Theme by Anders Norén