பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: அரசியல் Page 6 of 15

சூனா. பானா வின் பஞ்சாயத்து..

 

சமீபத்தில் காவிரி தொலைக்காட்சியில் பேட்டியாளர் மதன் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாதது குறித்து சுபவீ இன்று விளக்கம் என்ற பெயரில் வழக்கம் போல் வழ வழா கொழ கொழா பதிவு ஒன்றினை இட்டிருக்கிறார் . வழுக்கி விழந்ததை கூட இப்படி எண்ணை தடவி காட்டுவதற்கு சுப‌.வீயால் தான் முடியும்.

அது போகட்டும். பேட்டியாளர் மதன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் சுபவீ தடுமாறியது அவரது அரசியல் தோல்வி.
அத்திவரதரை பார்க்க ஏன் திமுக தலைவர்களின் குடும்பங்கள் படையெடுத்தார்கள் என்கிற கேள்விக்கும், தேசிய புலனாய்வு முகமை சட்டத்திருத்தத்திற்கு பாராளுமன்றத்தில் திமுக ஆதரித்த பித்தலாட்டத்தை குறித்த கேள்விக்கும் சுப வீயால் பதில் சொல்ல முடியவில்லை.

அங்கே பதில் சொல்லாமல் விழித்து விட்டு.. சமாளிபிகேஷன் செய்து ஒரு பதிவை போட்டிருப்பது என்பது ஆகப்பெரும் காமெடி.

தான் தொழுது கொண்டிருக்கிற… தனக்கு கஞ்சி ஊற்றிக் கொண்டிருக்கிற திமுகவின் தலைமை கொஞ்சம் கூட வருத்தப்பட்டு விடக் கூடாது என்பதற்காக பேட்டியாளர் மதன் கேட்ட கேள்விக்கெல்லாம்.. சம்பந்தமே இல்லாமல்.. பெரியார் ,அந்தக்காலம் இந்தக்காலம், என்றெல்லாம் உளறிக்கொட்டி விட்டு.. அதை சமாளிப்பதற்காக.. நான் தோற்றுத்தான் போய்விட்டேன்.. நாம் தமிழர் கட்சியினர் என்னை கிண்டல் செய்கிறார்கள்.. பாளையங்கோட்டையில் ஒருவர் திட்டினார்.. புதுக்கோட்டையில் ஒருவர் தும்மினார் என்றெல்லாம் காமெடி செய்திருப்பது உண்மையில் சுபவீ யைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது.

இதற்கும் அண்ணன் சீமானுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை.

சுபவீ இறந்து போக வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோமாம். சுபவீ இறந்துவிட்டார் என்று சொன்னது.. நாங்கள் பார்த்து வியந்த கொள்கைவாதி சுபவீ பிழைப்புக்காக தடம்மாறி புரண்டதை அவரது தற்கொலை என்ற அர்த்தத்தில் இறந்து விட்டார் என்று சொல்கிறோம். அது ஒரு கொள்கை சாவு. லட்சியமும் கொள்கையும் இல்லாத பிழைப்புத் தனத்தையே வாழ்க்கையாக கொண்ட மனிதன் பிணத்திற்கு சமம்.

மற்றபடி திமுக அதிமுக தலைமைகளோடு மோதிக் கொண்டிருக்கிற நாங்கள்.. இந்த லகுட பாண்டிகளின் லாவணியை கேட்பதில்லை.

வடிவேலு ஒரு படத்தில் ஆட்டினை திருடிவிட்டு பஞ்சாயத்தை கலைக்க படாத பாடு படுவது போல..

திமுக செய்கிற பிழைப்புத் தனங்களுக்கு முட்டு கொடுப்பதற்காக பேட்டியாளர் மதன் கேட்கின்ற கேள்விகளுக்கு சுபவீ படாதபாடு பட்டு உருண்டு புரண்டது.. காண சகிக்காத நாம் விரும்பிய ஒரு காலத்து தத்துவ வாதியின் தோல்விக் காட்சி.

மற்றபடி வடிவேல் சொல்வது போலத்தான்..

சூனா பானா இதை இப்படியே மெயிண்டன் பண்ணு. சுப்ரீம் கோர்ட்டே வந்தாலும் உன்னை ஒன்னும் பண்ண முடியாது..

மணி செந்தில்.

உதயநிதி போதும். நம்மாழ்வார் எதற்கு..??

நாம் தமிழர் கட்சியில் இன்று பயணிப்பவர்களில் நான் உட்பட 99% திமுக குடும்பத்தில் இருந்து பிரிந்து வந்தவர்கள் தான். திமுகவை கருப்பு-சிவப்பு கொடியை கலைஞர் கருணாநிதி அவர்களை முரசொலி நாளிதழை தங்கள் உயிராக நினைத்து நேசித்தவர்கள் தான் இன்று நாம் தமிழர் கட்சியில் இருக்கிறோம்.

திமுகவின் முதல் இணையதள தலைமுறையின் முக்கிய மானவர்களில் நானும் ஒருவன் ‌. ஆர்குட் காலத்திலேயே திமுக தலைவர் கருணாநிதியை விமர்சித்து எழுதியவர்களை பக்கம் பக்கமாக எழுதி விரட்டி அடித்தவர்களில் நானும் ஒருவன். அதனால் திமுக தலைவர் கருணாநிதி அவர்களாலும், திக தலைவர் வீரமணி அவர்களாலும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் பெற்றவன் நான். தம்பி டான் அசோக் போன்றவர்களுக்கு இந்த விவரங்கள் எல்லாம் நன்கு தெரியும்.

ஆனால் எதற்காக நாங்கள் திமுகவை விட்டு விலகினோம் என்பது தான் உங்கள் சிந்தனைக்கு உரியது. என் இனம் அழிந்த போது தனது பதவி முக்கியம், தன் மகள் மீதான வழக்கின் முடிவு முக்கியம் என அமைதி காத்து நின்ற திமுக தலைவரின் கள்ள மௌனம் எங்களுக்கு துரோகமாக பட்டது. அவரை மிகவும் நேசித்து நம்பி நின்ற எங்களால் அந்த துரோகத்தை ஜீரணிக்கவே முடியவில்லை.

சொல்லப்போனால் திமுக தலைமை மீது நாங்கள் வைத்திருந்த நம்பிக்கையும் உண்மையான நேசிப்பும் தான் இன அழிவுக்கு பின்னர் கடுமையான வெறுப்பாக மாறிப்போனது.

அதேபோலத்தான் நம்மாழ்வார் அவர்களும்.. மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முதன்முதலாக கையெழுத்துப் போட்டு தமிழ் நாட்டிற்குள் அனுமதித்தவர் அப்போதைய துணை முதல்வராக இருந்த மு க ஸ்டாலின் அவர்கள்.

பிறகு அவரே தெரியாமல் கையெழுத்து போட்டு விட்டதாக தெரிவித்தார். இன்று தஞ்சை மண் பாலைவனமாக மாறக் கூடிய அபாயத்தை அன்றே உணர்த்தி மக்களைத் திரட்டி போராடியவர் நம்மாழ்வார்.

அவர் திமுகவைச் சேர்ந்தவர் என்று சொல்லிக்கொள்வதில் திமுகவினர் பெருமைப்பட்டுக்கொள்ள ஏதுமில்லை. நம்மாழ்வார் இறந்தபோது திமுக இயற்றிய இரங்கல் தீர்மானத்தை இரங்கல் அறிக்கையை தற்போது வெளியிட முடியுமா..

அப்படி ஏதாவது ஒன்று இருக்கிறதா.. உண்மையில் தெரிந்துகொள்ளத்தான் கேட்கின்றேன். நம்மாழ்வார் எதிர்த்த மீத்தேன் திட்டத்தை முதன்முதலில் தமிழகத்திற்கு கொண்டு வந்தது அப்போதைய திமுக அரசு.

இப்போது நம்மாழ்வார் உங்கள் கட்சியை சேர்ந்தவர் என்று பெருமை பட்டுக்கொண்டு நம்மாழ்வாரையும் இணைத்தே இழிவு படுத்துகிறீர்கள் என்று எண்ணுகிறேன்.

நம்மாழ்வார் குறித்து மிக இழிவாக இணையதள திமுகவினர் எழுதிய பல்வேறு பதிவுகள் அனைவருக்கும் தெரிந்தது தான்.

இப்போது திடீரென நம்மாழ்வார் பாசம் வந்திருப்பதுதான் எங்களுக்கெல்லாம் பயமாக இருக்கிறது.

பாவம் நம்மாழ்வார். இந்த மண்ணிற்காக இனத்திற்காக உண்மையாக உழைத்த பெருமகன்.

தன் வாரிசுகளுக்கு பதவியையோ சொத்தையோ சேகரித்து வைக்காமல்.. மறைந்த நேர்மையாளர்.

திமுகவினர் அவரை விட்டு விடலாம்.

திமுகவிற்கு உதயநிதி போதும். நம்மாழ்வார் எதற்கு..??

மணி செந்தில்.

அவன் அப்படித்தான்..

 

நீங்கள் என்ன வேண்டுமானாலும் அவனை விமர்சித்து விட்டு போங்கள்.

ஆனால் அவன் அவனாகவே இருக்கிறான்.

அலை பாய்ந்து வரும் அவதூறுகளுக்கு அவனுடைய பதில் செயல்.

விஷம் தோய்ந்த அம்புகள் என எய்யப்படுகிற பொய்களுக்கு அவனுடைய பதில் உண்மை.

ஒதுக்கி வைத்து ஓரம் கட்டப்பட்டு
வளர்ச்சியை தடுத்து நிறுத்துகிற
சதிகளுக்கு அவனுடைய பதில்
அலட்சிய எக்காளத்துடன் கூடிய
சிறு புன்னகை.

காலம் காலமாய் கட்டி வைத்திருக்கிற
புராதன பழமை பஞ்சாங்கங்களுக்கு
நெருப்பு வைத்து விட்டு புத்துலகம்
படைக்க அவன் அடுத்த மேடையை நோக்கி விரைந்து கொண்டு இருக்கிறான்.

நெருப்பு சொற்களால் ஆன ஒரு கனவினை இளைய கரங்களின்
உள்ளங்கைகளுக்குள் புதைக்கிற கடமையில்.. அவன் வேர்வை சிந்தி
விரைந்து கொண்டிருக்கிறான்.

இதுவரை வரையப்பட்ட அனைத்து விதமான அவல தத்துவ கோடுகளை
அழித்துவிட்டு.. இயற்கையின் தாய்மடியில் கதகதப்பாய் வாழ
கனவுலகம் ஒன்றினை கட்டிக் கொண்டிருக்கிறான்.

சிட்டுக்குருவி களுக்காக சிந்திக்கிறான்.
சிங்கம் புலிகளுக்காக கதறுகிறான்.
யானை பூனைகளுக்காக யாசிக்கிறான்.
மொத்தத்தில் மானுடம் வாழ இந்த பூமியை தன் உயிரென நேசிக்கிறான்.

சாதிகளால் வரலாற்றின் வீதிகளில்
சரிந்து கிடப்போர் தோள் பிடித்து
எழுப்புகிறான்.

இது சரியல்ல. சதி என்று சரித்திரங்களால் தரித்திரங்கள் ஆனவர்களுக்கு சாட்டைகள் அளிக்கிறான்.

எதிரிகளால் கட்டமைக்கப்பட்ட எந்த கணக்குகளுக்குள்ளும் சிக்காமல்
அவர்களது கணிப்பினை பொய்யாக்கி
ஏமாற்ற சாலையின் புழுதியாக்கி
பறக்க விடுகிறான்.

நீரைப் போலவன். நீங்கள் நிரப்பும் பாத்திரங்களின் வடிவை உடுத்திக் கொண்டது
போலத் தெரிந்தாலும்..

சட்டென உங்களது கண்ணாடி கணிப்புகள் விரிசலடையும் ஒரு தருணத்தில்.. அவன் உடைந்து
பெருகி கடலின்
சாயல் கொண்டு விடுகிறான்.

எளிய ஆன்மாக்களின் தாகத்தை தணிக்கிறான். வலிய அதிகாரத்தின்
ஆதிக்க கோட்டைகளை ஆழிப் பேரலையாய் மாறி மூழ்கடிக்கிறான்.

ஒன்றில் தீர்மானமாய் நிற்கிறான்.

எங்கெங்கெல்லாம்
மனிதர்கள் தாழ்த்தப்பட்டு
வீழ்த்தப்பட்டு அடைபட்டுக்
கிடக்கிறார்களோ..

அவர்களோடு ஒருவராக தோள் சேர்த்து நிற்க.. அவன் தீர்மானமாய் நிற்கிறான்.

ஏனெனில்..

அவர்களில் தான் அவன் பிறந்தான். அந்த இயல்பிலேயே திரிந்தான்.

அதனை அரசியல் விருப்பங்களுக்காக அடகு வைப்பதில்லை அவன்.

அதிகார ஆசைகளுக்காக பிறந்தது முதல் அடைந்து வந்திருக்கிற இழிவுகளை மறந்துவிட்டு.. கிடைக்கிற இருக்கை களுக்காக வாக்குப் பருக்கைகள் பொறுக்குகிற.. சாதாரணன் அல்லன் அவன்.

அவன் அப்படித்தான்.

எதனிலும் தன்னியல்பு மாறாமல்..
அவன் அவனாகவே இருப்பதால்தான் அவன் அவருடைய தம்பி.

மணி செந்தில்.

காலமென்ற பொல்லாத மிருகம்

வைகோவிற்கு அன்றைய திமுக அரசு தொடுத்த தேசத்துரோக வழக்கு மீது இன்று ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் வழங்கியிருக்கிற தண்டனையை நாம் நினைக்கும் போது சில காட்சிகள் நம் மனதிலே எழுகின்றன.

வைகோ மீது தொடுக்கப்பட்ட வழக்கு போல.. அன்றைய இனத்துரோக திமுக ஆட்சியில் பல அநியாய வழக்குகள் தொடுக்கப்பட்டன.
இனப்படுகொலையில் சிக்கி அழிந்து கொண்டிருக்கும் ஈழத்திற்கு ஆதரவாக ஒரு சிறிய ஆதரவும் இந்த மண்ணில் எழுந்து விடக்கூடாது என்பதில் அன்றைய திமுக அரசு மிகுந்த கவனத்தோடு இருந்தது.

இனப்படுகொலை காட்சிகளை குறுந்தகடுகளாக தயாரித்துக்கொண்டு மக்களிடையே பரப்பி போராட்ட உணர்வினை உண்டாக்க முயன்ற எண்ணற்ற இளைஞர்கள் காவல்துறை மற்றும் உளவுத் துறை அதிகாரிகளால் கொடுமையாக மிரட்டப்பட்டு பொய் வழக்குகள் போடப்பட்டு முடக்கப்பட்டார்கள்.

அந்த அழிவு நேரத்தில்.. போரில் சிக்கி கொண்டு காயம் பட்டுக் கொண்டிருந்த தமிழர்களுக்கு இங்கிருந்து குருதி சேகரிக்கப்பட்டு உதிர பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட இருந்த வேளையில்.. அவை அனைத்தும் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்டு அப்போது காவல்துறை டிஜிபியாக இருந்த ஜாபர் சேட்டின் ஷீ கால்களால் மிதித்து அழிக்கப்பட்டது.

சட்டமன்றத்தில் இனி ஈழத்திற்கு ஆதரவாக யாரும் பேசவோ போராடுவோ கூடாது என அப்போதைய அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார்.

கொளத்தூர் மணி, ஐயா பெ மணியரசன், அண்ணன் சீமான் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்கள் மீது தொடர்ச்சியான பல வழக்குகள். பல மாதங்கள் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

ஈழ இன அழிப்பிற்கு எதிராக முத்துக்குமார் உள்ளிட்ட பல இளைஞர்கள் தங்களைத் தாங்களே தீ வைத்துக்கொண்டு தியாகம் செய்ய… அவர்களின் மரணத்தை காதல் தோல்வி, கடன் பிரச்சனை என்றெல்லாம் திசைமாற்றி அன்றைய அரசின் உளவுத்துறை கடுமையாக இழிவுபடுத்தியது.

போர்ச்சூழல் எவ்விதமான செய்தியும் இங்கே வந்து விடக் கூடாது என்று ஊடகங்கள் செய்தித்தாள்களுக்கு அறிவிக்கப்படாத நெருக்கடி கால தடைகள் விதிக்கப்பட்டன.

கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட கிளம்பியபோது ஒட்டுமொத்தமாக கல்லூரிக்கு விடுமுறை அறிவித்து கல்லூரி விடுதிகளை இழுத்து மூடி மாணவர்களின் போராட்டத்தை திமுக அரசு நசுக்கியது.

வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து போராட கிளம்பியபோது உயர்நீதிமன்றத்தில் தன் காவல்துறையை வைத்து வழக்கறிஞர்களையும் நீதிபதிகளையும் அடித்துத் துவைத்து… அதுவரை இனப்படுகொலைக்காக போராடிக்கொண்டிருந்த வழக்கறிஞர்களை.. தங்களுக்காக போராட வைத்து திசை மாற்றியது திமுக அரசு.

திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலரும் ஈழப் பிரச்சனை எல்லாம் இங்கே ஒரு பிரச்சனையே அல்ல என தொடர்ச்சியாக பேசி வந்தனர்.

மல்லாக்கப் படுத்துக் கொண்டு முதுகில் ஆப்பரேஷன், காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் இடையே நடந்த சாகும்வரை உண்ணாவிரதம், நானே ஒரு அடிமை என்பதான பம்மல்கள், அய்யகோ போன்ற நீலிக்கண்ணீர் தீர்மானங்கள், குப்பைத் தொட்டிக்கு தான் போகப் போகிறது என உறுதி செய்துகொண்டு எழுதப்பட்ட போலி கடிதங்கள், மக்களை ஏமாற்ற மனித சங்கிலி போராட்டங்கள் என சொக்கத்தங்கம் சோனியா விற்காக அப்போதைய முதல்வர் மறைந்த கருணாநிதி அந்த நேரத்தில் நடத்திய போலி நாடகங்கள் எண்ணற்றவை.

ஈழ இனப்படுகொலை சம்பந்தமாக அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியை யாராலும் சந்தித்து உரையாட முடியாது. சந்தித்துவிட்டு வரும் பல அல்லக்கைகள் தலைவர் வருத்தத்தில் இருக்கிறார், தலைவர் குப்புறப் படுத்துக் கொண்டு அழுது கொண்டிருக்கிறார் என்பதான பொய்மூட்டைகளை அழித்துவிடும். பிறகு தனியே பேசும்போது இவரைப் போன்ற மனிதனை நான் பார்த்ததே இல்லை என்றெல்லாம் உணர்வாளர்கள் மத்தியில் நடித்து அழும்.

அதை நம்புவதா இதை நம்புவதா என்று தெரியாமல் நாமெல்லாம் குழம்பிக் கிடப்போம்

போர் முடிந்த பிறகு மருத்துவ சிகிச்சைக்காக வயதான பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் இங்கே சென்னை விமான நிலையம் வந்தபோது அவரை தரை இறக்காமல் அப்படியே திருப்பி அனுப்புவதில் திமுகவும் காங்கிரசும் மிகக் குறியாக இருந்து நோக்கத்தில் வெற்றி பெற்றன.

அந்த நேரத்தில் வைகோ உரையாற்றிய பேச்சு இதோ

ஆனால் காலம் தான் இருப்பதிலேயே பொல்லாத மிருகம். அதன் வெறிபிடித்த ஓட்டத்தில் சில படிப்பினைகளை மிக எளிதாக நமக்குத் தந்து விடுகிறது.

அதே வைகோ இன்று காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருக்கிறார். திமுக தலைவர் கருணாநிதியின் மகன் ஸ்டாலினை முதல்வராக்குவேன் என்று சபதம் எடுத்து களத்தில் நிற்கிறார்.

அவரைப்போல அன்று எங்களுடன் இருந்த பலர் திசை மாறி இருக்கிறார்கள்.

ஆனால் ஒரு தலைமுறை இளைஞர்கள் இதையெல்லாம் மறக்காமல் அப்படியே அடி மனதிற்குள் புதைத்து வைத்து இருக்கிறோம். முத்துக்குமாரின் மூச்சுக்காற்றை இதுவரை வீசும் காற்றின் அலைவரிசையோடு கலந்துவிடாமல் காத்து வைத்திருக்கிறோம்.

ஈழ மண்ணில் அந்த காலகட்டத்தில் சிந்தப்பட்ட ஒவ்வொரு உதிரத்துளிக்கும் கண்ணீர் துளிக்கும் எங்கள் இடத்திலே கணக்கு உண்டு. காயம்பட்டு எழும்பிய கூக்குரல்களும்.. வன்புணர்வு கண்டு எங்கள் சகோதரிகள் கத்தித்தீர்த்த கதறல்களும், எங்கள் மகன் பாலச்சந்திரன் பார்த்த அந்த ஒற்றைப் பார்வையும்.. எங்களுக்குள் உறைந்துவிடாமல் இன்னும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது.

அந்த நேரத்தில் நான் எல்லாம் பல அண்ணன்களின் விரல் பிடித்து நடந்திருக்கிறேன். அந்த அண்ணன்மார்கள் பேசுகின்ற மொழிகளை தேவ வாக்கு எனக்கருதி நம்பி திரிந்திருக்கிறேன். அவர்களை எம் இனம் காக்க மொழி காக்க வந்த கடவுளர்களாகவே கருதி வழிபட்டு இருக்கிறேன்.

என்னைப் போல.. எங்களைப்போல.. எங்களோடு இன்னொருவரும் நம்பித் திரிந்தார். அவர் அண்ணன் சீமான்.

நாங்கள் நம்பவே முடியாத ஒரு தருணத்தில்.. நாங்கள் நம்பி நின்ற அண்ணன்மார்கள் எல்லாம்.. காலம் வரைந்த இந்த சிக்கலான கணக்குகளுக்கு முன்னால் அம்பலப்பட்டு நிற்கும்போது..
அவர்களை உண்மையாகவே ஒரு காலத்தில் நேசித்த எங்களது இதயத்திற்கு வலிக்கத்தான் செய்கிறது.

ஈழ விடுதலையே தங்கள் வாழ்க்கையின் லட்சியம் என்றெல்லாம் எங்கள் இளம் தோள்களை பிடித்து உணர்ச்சி உசுப்பேற்றிய பல அண்ணன்மார்கள் திமுகவிற்கு ஓட்டு கேட்டுக் கொண்டும் காங்கிரஸுக்கு வாக்கு கேட்டுக் கொண்டும் இன்று நிற்பதை எல்லாம் பார்க்கும்போது..

சே…
காலம்தான்
இருப்பதிலேயே பொல்லாத மிருகம்.

அதன் வெறிபிடித்த ஓட்டத்தில்
எதையும் மறக்காமல்
நாம் நினைவோடு
எதையும் மறக்காமல் இருப்பதுதான்
நாம் அடைந்த மகத்தான துயரம்.

மணி செந்தில்.

செத்துப் போன ஒரு திமுக காரனின் கடைசி முனகல்..

ராகு காலம் எமகண்டம் பார்த்து வளர்பிறை அமிர்த யோகத்தில் திமுக இளைஞரணி செயலாளராக பதவி ஏற்று இருக்கின்ற உதயநிதி ஸ்டாலினின் பதவி ஏற்பினை பற்றி விடுதலையில் வரப்போகும் வாழ்த்துக் கட்டுரையையும்..

இதேபோல ஒரு நாள் திகவின் தலைவராக ஆக இருக்கிற அன்புராஜ் வீரமணியின் பதவியேற்பினை பற்றி முரசொலியில் வரப்போகும் வாழ்த்துக் கட்டுரையையும்..

இதேபோல திமுகவின் தலைவராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்கும்போது பதவியேற்பினைப் பற்றி விடுதலையில் வர இருக்கின்ற வாழ்த்து கட்டுரையையும்..

அதேபோல திமுகவின் இளைஞரணி செயலாளராக இன்ப நிதி உதயா பதவி ஏற்கும்போது விடுதலையில் வர இருக்கின்ற வாழ்த்து கட்டுரையையும் ‌…

அதேபோல அன்புராஜின் மகன் தி.கவின் தலைவராக பதவி ஏற்கும்போது முரசொலியில் வர இருக்கின்ற வாழ்த்து கட்டுரையையும்..

ஆவலோடு எதிர் பார்க்கின்றேன்.

இதைவிட இன்னும் ஆவலோடு..

இந்த காண சகிக்காத கண்றாவியை எல்லாம் .. ஒரு சாண் வயிற்றுக்காக…திராவிடத்தின் எதிர்காலம், திராவிடம் 2.0 என்றெல்லாம்
முட்டுக் கொடுத்து முக்காப்பக்கம் முகநூல் பதிவு எழுதும் முற்போக்காளர்களின் பதிவுகளையும்…

பெரியாரை காப்பாற்றிட வேண்டுமே, திராவிட கொள்கைகளை காத்திட வேண்டுமே என்றெல்லாம் பேசி எழுதி பேமென்ட் வாங்கும் அறிவுஜீவி பதிவுகளையும்..

இனி கோபாலபுரத்தில் சாய்பாபாவின் ஆசிப் பெற்ற மஞ்சள் துண்டு மகானின் வீட்டில் பிறக்கப்போகிற சின்னக் குஞ்சும் பெரியாரை காக்க போகிற திராவிடப்பிஞ்சு என்று எழுதப் போகிற எழுத்து வல்லாண்மை மிக்க 200 ரூபாய் உ.பிக்களின் பாசப் பதிவுகளையும்..

ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

எனக்குள் ஒரு செத்துப் போன திமுக காரன் எப்போதும் உண்டு. அவ்வப்போது அவன் லேசாக முனகுவான்.அப்போதெல்லாம் என் தன்மான செருப்பை எடுத்து அவன் தலையிலேயே தட்டி அவனை மீண்டும் கொல்வேன்.

இந்தக் கண்றாவியை எல்லாம் பார்த்துவிட்டு எனக்கு ஒரு நிம்மதி. இனி அந்த செத்துப் போன திமுக காரன் மீண்டும் முனகப்போவதில்லை. அவன் தன்னைத் தானே காறி உமிழ்ந்து விட்டு காலமாகிவிட்டான்.

ஒரே ஒரு கேள்விதான்..
ஒரு செத்துப் போன திமுக காரன்
என்ற அளவில் என்னிடம் இருக்கிறது.

அயோக்கியர்களா…

உங்களைவிட பெரியாருக்கு எதிரி வேறு யார் இருக்க முடியும்..??
…..

மணி செந்தில்.

ஒரு வரலாற்றின் கதை.. ——————————–

 

அவன் முன்னால் கால்கடுக்க நின்றவாறு
அவனின் சொற்களுக்கு ஏற்றவாறு.. சிந்தித்தும் சிரித்தும் கோபப்பட்டும் கொந்தளித்தும் ஆர்ப்பரிக்கும் அந்த இளைஞர் கூட்டம் அரியணையில் அமர்ந்து அரசாண்ட ராஜவம்சத்தினர் அல்லர்.

மிக எளியவர்கள்.

அவர்களின் தந்தையர்
செய்திருந்த
வரலாற்றுப் பிழைகளுக்காக..
அவர்கள் அங்கே கூடியிருந்தார்கள்.

அவர்களின் தந்தையரும்
அவர்களைப் போலவே
எளியவர்கள்தாம்.

தவறான எஜமானர்கள் மீது
கொண்டிருந்த
அளவற்ற விசுவாசத்தால்
அவர்களுக்கு அவர்களாகவே
விதித்துக் கொண்ட
கொடும் விதியின் கரம் பற்றி
வாழ்ந்தவர்கள்.

ஒரு பொன்னான
ஐம்பது ஆண்டு காலத்தை
எங்கிருந்தோ வந்தவர்களின்
பளபளக்கும் சொல்லாட்சியிலும்
மினுமினுக்கும் வெள்ளைத் தோலிலும்
கவரப்பட்டு பறிகொடுத்தவர்கள்.

கரை படிந்த தங்களது வாழ்க்கையை பற்றி கவலைப்படாமல்..
கரைவேட்டி இடுப்பில் நின்றது குறித்து
கர்வப்பட்டவர்கள்.

வாழ்ந்து கெட்ட ஜமீன்தார்களாக
சாராயக் கடையில் சரிந்து கிடந்தவர்கள்.

….

அவர்களின் மகன்கள் தான் அவன் முன்னால் நின்று கொண்டிருக்கிறார்கள்.

அவன் பேசிக் கொண்டிருக்கிறான்.

வியர்வை படிந்த அவனது முதுகுப்புற சட்டை அவ்வப்போது அங்கே உலவிக் கொண்டிருந்த கோப பெருமூச்சுகளால்
உலர்ந்துக் கொண்டிருந்தது.

அவன் இம்மண்ணின் நிறத்தவன்.

விரல்களை இறுக்கி மூடி.. உயரும் அவரது கரங்களில்.. காலங்காலமாய் அழித்தொழிக்கப்பட்ட அவனது முன்னோர்களின் கனவுகள்
நட்சத்திரங்களாய் மின்னின..

இதுவரை அடுக்குமொழி ஆடம்பர வார்த்தைகளாலும்.. வரலாற்றை தன் திசைக்கு ஏற்றவாறு மாற்றி எழுதிய விரல்களாலும் அலுத்துப் போயிருந்த
ஒரு தலைமுறை..
வாழ நேர்ந்திட்ட அவல வாழ்வின் சினமேறிய அவனது சொற்களால் சிலிர்த்துப்போனது.

காற்றின் ரதமேறி கம்பீரமாய் மிதந்து வந்த அவனது சொற்களின் கருப்பை சுமந்த வெப்பத்தால்
அங்கே கூடியிருந்தவர்களின்
ஆன்மா தகிக்கத் தொடங்கியது.

முதலில் இது உணர்ச்சிகளின் கூடாரம் என உதாசீனப்படுத்தியவர்கள் பிறகு அஞ்சத் தொடங்கினார்கள்.

அவதூற்று ஆயுதங்கள் கொண்டு நிமிரத் தொடங்கிய பூர்வக்குடிகளின் தலைகளை தடுக்கப்பார்த்தார்கள்.

எகத்தாளமாக எழுதிப் பார்த்தார்கள். வார்த்தை வளைவுகளால் கலையா அவன் மன உறுதியை கலைக்கப் பார்த்தார்கள்.

மொத்தத்தில்..சலிப்பும் சங்கடமும் நிரம்பிய தங்கள் இரு கரங்களால்.. ஒரு வானத்தை மறைக்கப் பார்த்தார்கள்.

ஆனாலும்..
சினம் மறந்த இனத்தின் ஆதித் திமிர் பிடித்து பிறந்த அந்த அசுரர் குலத்து
மகன் இறுதியில் எழுதத் தொடங்கினான்.

முடிவில்..
ஒரு வரலாறு இவ்வாறாகத்தான்
பிறந்தது.

மணி செந்தில்.

ஒவ்வொரு வாரமும் குமுதம் ரிப்போர்ட்டரில் அண்ணன் சீமான் எழுதும் அரசியல் தொடர்
அடங்காப் பெருநெருப்பு.

வாசிக்கத் தவறாதீர்கள்.

உங்களோடு ஒரு நிமிடம்

 

உங்களோடு ஒரு நிமிடம

..

அந்த உணர்வை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள். அது இனவெறியாக, பாசிசமாக நாசமாக காட்டுமிராண்டித்தனமாக எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள்.

இந்தக் காற்று இந்த நிலம் இந்த மலை இந்த மண் இந்த செடி கொடிகள் இந்த மரம் என இங்கே இருக்கின்ற அனைத்தும் எங்களுக்குச் சொந்தம்.

நான் இம்மண்ணின் பூர்வகுடி.

நீங்கள் உங்கள் தத்துவ ஆயுதங்களை தூக்கிக்கொண்டு எங்களது வீதிகளில் வந்து இனிப்பு தடவிய வார்த்தைகளால் ஒரு எதிர்காலத்தை எங்கள் முன்னால் உங்களது மாய விரல்கள் மூலம் உருவாக்கி காட்டுகிறீர்கள்.

இந்த வயல்வெளிகளில் உலவும் காற்று எங்களுடையது. எங்களது முன்னோர்கள் காலம் காலமாய் சுவாசித்த காற்று அது.
அவ்வளவு எளிதாக உங்களுக்கு நாங்கள் கடன் கொடுத்து விட முடியாது.

எனக்கும் என் சகோதரர்களுக்கும் இடையே இருக்கின்ற மேடுபள்ளங்களை சமப்படுத்த வந்திருப்பதாக புன்னகையுடன் எங்களிடத்திலே பேசுகிறீர்கள்.

எங்களது சமமற்ற மண்ணில் நீங்கள் போட்டிருக்கும் உங்களது வல்லாதிக்க அதிகார குடிசையை இன்னும் சில தலைமுறைக்கு அகற்றாமல் நீட்டிக்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள்.

ஆம் இது சமமற்ற மண் தான்‌.

மேடு பள்ளமும் சேறும் சகதியுமாக இருந்தாலும் இது எங்கள் மண்‌.

எங்கள் தாய் மண்.

எங்களது மண்ணில் நாங்கள் எங்களது உரிமையை விட்டுத்தர மாட்டோம்.

எங்களை நீங்கள் இந்தியன் என்று மயக்கலாம். திராவிடன் என்று குழப்பலாம். ஆனால் இதையெல்லாம் தாண்டி என் உடம்பில் தவித்துக் கொண்டிருக்கும் ஏதோ ஒரு மரபணு என்னை தமிழனாக துடித்து உணர வைக்கிறது.

எனக்கு எனது இன்னொரு தாய் நிலமான ஈழம் அழிகையில் வலித்தது. உயிரே போனது போல ஒரு வலி அது. அந்தத் தோல்வியால் தனிப்பட்ட முறையில் நான் இறந்து விட்டதாக உணர்கிறேன். ஆனாலும் அந்தத் தோல்வியை வரலாற்றின் நிரந்தரமாக ஆக்கிவிடக் கூடாது என சுதாரித்து எழுகிறேன்.

இந்தப் பரிதவிப்போ வன்மமோ உங்களுக்கு இல்லை. ஏனெனில் நீங்கள் இந்த மண்ணை சேர்ந்தவர் அல்ல.
உங்களது இனத்தவர்கள் எல்லாம் அவரவர் மண்ணில் இறையாண்மை யோடு வாழ்ந்து கொண்டு வருகிறீர்கள்.

ஆனால் நாங்களும் எங்களது இரண்டு தாய் நிலங்களையும் இழந்துவிட்டு.. எங்களை நாங்களே ஏமாற்றிக்கொண்டு 50 ஆண்டுகளாக அடிமைகளாக வாழ்ந்து வருகிறோம்.

ஆனாலும் நாங்கள் இப்படியே இருக்கப் போவதில்லை. எங்கள் தலைமுறையில் எங்களது கரங்கள் உயர்ந்திருக்கின்றன. இதே தலைமுறையில் நாங்கள் வெற்றி பெற முடியவில்லை என்றால்.. எங்களது அடுத்த தலைமுறையின் விழிகளில் எங்களது விடுதலைப் போராட்டக் கதையை நம்பிக்கையோடு ஒளிர வைப்போம்.

ஆம். உங்களால் காட்டுமிராண்டிகள் என அழைக்கப்பட்ட நாங்கள் கம்பீரமாக சொல்கிறோம்.

ஆம்.. நாங்கள் காட்டுமிராண்டிகள் தான்.

ஆனால் காடு எங்களுடையது.

.

மணி செந்தில்

இதன் அடியில் பாலஸ்தீன மண்ணை ஆக்கிரமிக்க துடிக்கும் வல்லாதிக்க கரங்களோடு போராடிக் கொண்டிருக்கின்ற அந்த இளம் குழந்தைகளின் போராட்டக் காட்சிகள்.

ஒரு நாள்.. எங்கள் மண்ணிலும் இது நடக்கலாம். எங்கள் பிள்ளைகளும் இவ்வாறே நிற்கலாம்.

அதற்குள் தேவை
ஒரு விழிப்பு.

சிரித்து விட்டுப் போவோம்

ஆதித்தமிழர் தமிழ் இன உணர்வோடு தமிழ்த்தேசியப் பாதையில் திரளத் தொடங்குவதை மறுத்து..எதிர்த்து..இறுதிவரை அவர்களை ‘தலித் தாகவே வைத்து’ பராமரிக்க விரும்புவது …ஆதிக்கச் சாதி உணர்வாளர்கள் கொண்டிருக்கும் அதே ஆதிக்குடிகளை தனிமைப்படுத்தும் உளவியல் தான்..

இந்த நுட்பமான விசித்திர ஒற்றுமைதான் சாதிகளை காப்பாற்றும் முக்கிய கருவி.

சுய சாதியை மறுத்து.. தமிழர் என்ற இன அடையாளத்தில் திரளும் சாதி மறுப்பாளர்களையும்… சாதிதான் தமிழர் இன ஓர்மைக்கு எதிரான முக்கிய காரணி என தன் சுய சாதி பெருமிதத்தை அழித்து தமிழர் என்று இரண்டு இளைஞர்களையும்…

எதிரான சக்திகளாக காட்ட முனைவது..

ஆதிக்கசாதி உணர்வாளர்களுக்கு ஆதரவான செயல் மட்டுமல்ல… நேரடியாக இந்துத்துவ உணர்ச்சியை ஊக்குவிக்கிற செயலும் கூட.

வெளிப்படையாகப் பேசுவோம்.

நம் சமூகத்தில் சாதி நிலைகளை காப்பாற்றுவதில் முதன்மையாக திகழ்வது எது..?

கடந்த 50 ஆண்டு கால திராவிட அரசியலே சாதி நிலைகளை காப்பாற்றும் மகத்தான அரசியல் தத்துவமாக திகழ்கிறது. பார்ப்பனர்களுக்கு எதிரான பார்ப்பனரல்லாதோரின் அரசியல் கருத்தாக்கமான திராவிடத்தின் அரசியல் பார்ப்பனர் அல்லாதோரான தமிழர்களின் இடைநிலை சாதிக்க்குழுக்களை வளர்த்தெடுப்பதில் மிகுந்த கவனம் காட்டியதை வரலாற்றின் ஏடுகளில் நாம் பார்க்கலாம்.

ஒருபக்கம் பார்ப்பனரை சுட்டிக் காட்டிக் கொண்டு.. மறுபக்கம் தமிழரை சாதியாக பிரித்து வைத்துக்கொண்டு.. தான் பிழைப்பதற்கான நுட்பமான வேலையை திராவிடம் செய்து வருகிறது.

எல்லாத் திராவிட கட்சிகளும் சாதியை பார்த்தே நகர ,ஒன்றிய ,மாவட்ட ,மாநில பொறுப்புகளை வழங்குகின்றன. சாதியை பார்த்தே வேட்பாளர் தேர்வு நடைபெறுகிறது. சாதியை பார்த்தே உள்ளாட்சி மன்ற பொறுப்புகள் அளிக்கப்படுகின்றன.

இந்த சாதிக்கட்டமைப்புகளை எள்ளளவும் மீறிவிடக் கூடாது என்பதில் திராவிட அரசியல் கட்சிகள் மிகுந்த கவனம் கொண்டிருக்கின்றன. ஏனெனில் சாதி கட்டமைப்புகளை மீறினால் வெகுஜன அரசியல் வாக்கு தங்களுக்கு கிடைக்காது என்ற எண்ணத்தினால் சாதியை பாதுகாக்கின்ற மகத்தான அரணாக திராவிடம் திகழ்கிறது.

வட மாவட்டங்களில் பறையரும் வன்னியரும் இணைந்து மண்ணின் மைந்தர்கள் என்ற முழக்கத்தை முன் வைத்து திராவிட கட்சிகளை எதிர்த்து தேர்தலை சந்தித்தால்.. திராவிடக் கட்சிகள் அடையாளமின்றி அழியும்.
இதே நிலைதான் தென் மாவட்டங்களில் தேவேந்திரரும் தேவரும்.

எனவேதான் தமிழகத்தில் இருக்கக்கூடிய பெரும்பான்மை சாதிகளுக்கிடையிலான முரண்களை தன் அரசியல் அதிகாரம் மூலமாக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிடம் தக்க வைத்துக் கொண்டே இருக்கிறது.

தேவர் சிலைக்கு மாலை போடுகிற, அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்துகிற திமுக அண்ணா திமுக என்கின்ற கட்சிகளுக்கு தேவரும், அம்பேத்கரும் ஒரு பொருட்டே அல்ல.
அந்த சிலைகளுக்கு பின்னால் இருக்கக்கூடிய வாக்குகள் மட்டுமே அவர்களது தேவை. இந்நிலையில் இரண்டு குழுக்களும் அடித்துக் கொண்டால் தான்.. அந்த முரண்பாட்டை முன்னிறுத்தி தாங்கள் வாக்குப் பெற முடியும் என்கின்ற தெளிவு திராவிட கட்சிகளுக்கு என்றும் உண்டு.

இவ்வாறெல்லாம் சாதியை காப்பாற்றுகிற.. பல காரணிகளை வேண்டுமென்றே தவிர்த்து விட்டு..
தமிழர் என்கின்ற தேசிய அடையாளத்தின் மீது பாய்ந்து பிராண்டுவது எதன் பொருட்டும் நியாயமல்ல.

ராஜராஜ சோழன் நல்லவனாக இருந்தால் என்ன கெட்டவனாக இருந்தால் என்ன… வரலாற்றின் வீதியில் பின்சென்று அந்தப் பக்கங்களை மாற்ற நமக்கு வலிமை இருக்கின்றதா என்ன…

ராஜராஜ சோழனைப் பற்றி பல்வேறு ஆய்வுகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. ராஜராஜ சோழன் தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் கட்டும் போது அதற்கு இடம் தந்த இஸ்லாமிய தமிழனைப் பற்றி வரலாற்றில் பதிவு இருக்கிறது. ராஜராஜனைப் பற்றி பெருமிதமாகவும், குற்றம் சாட்டவும் சரிசமமான ஆதாரங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. இருதரப்பிலும் ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால் மறைந்துபோன தமிழரின் அடையாளமான ஒரு மாபெரும் மன்னனை இழிவு படுத்துவது என்பது தாழ்த்தப்பட்டு இருக்கிற மக்களின் விடுதலைக்கு எவ்வாறு உதவும் என்று தெரியவில்லை.

ஒரு மன்னனை எடைபோட வேண்டும் என்றால்.. அவன் வாழ்ந்து இருக்கின்ற காலகட்டம்.. அவன் கொண்டிருந்த வாய்ப்பு.. அவன் பெற்றிருந்த நம்பிக்கைகள்.. அவன் அடைந்த வெற்றி, புகழ்..அவன் மீதான விமர்சனங்கள் ஆகிய அனைத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டிய செயல். ஆனால் அதற்கெல்லாம் தற்போது என்ன தேவை இருக்கிறது என்பது இதையெல்லாம் கடந்த ஒரு கேள்வி.

குடிசை கொளுத்துபவர்களும், அரசியல் அதிகாரத்தால் நிலத்தை பிடுங்கிக் கொண்டவர்களும், சாதி பார்த்து அரசியல் செய்பவர்களும் உங்கள் கண் முன்னால் தான் இருக்கிறார்கள். அவர்களைப் பார்க்க நாசுக்காக தவிர்த்துவிட்டு..ராஜராஜ சோழன் ராஜேந்திர சோழன் என்றெல்லாம் நோண்டிக் கொண்டிருப்பது.. என்ன சொல்ல..??

ஆதி தமிழர்களின் நிலங்களை ஏற்கனவே பிடிங்கி இன்னுமும் பிடுங்கிக் கொண்டிருக்கிற திராவிட/தேசிய அரசியல்வாதிகளை சட்டையைப் பிடித்து உலுக்கி எடுத்து பஞ்சமி நிலங்களை மீட்டால்.. அது உண்மையான புரட்சி. செத்துப்போன ஒரு மன்னனைப் பற்றி பேசிக் கொண்டிருப்பது என்பது காலத்தைக் கடத்துகின்ற..தன் மீது வெளிச்சம் பாய்ச்சிக் கொள்கிற ஒரு சாதாரண தந்திரம் அவ்வளவே..

தமிழரின் ஒற்றை அடையாளமாக தஞ்சைப் பெருவுடையார் கோவில் திகழ்கிறது. இந்த உணர்ச்சி சாதி நிலைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட இன உணர்வு சார்ந்த மரபணு சார்ந்த பெருமித உணர்ச்சி… அதனால் தான் ஆளுக்கு ஆள் ராஜராஜ சோழன் தன்னுடைய சாதி எனக் கொண்டாடிக் கொள்ள போட்டி போடுகிறார்கள்.

ஆனால் தமிழ்த் தேசிய இன வரலாற்றில் நம் இனத்தின் பெருமைக்குரிய அடையாளங்களாக திகழ்கிற பல முன்னோர்களையும் நாம் அவர்கள் செய்த சமூக அறம் சார்ந்த செயல்களுக்காக நினைவு கூறுகிறோம். அந்த முன்னோர்கள் எந்த சாதியாக இருந்தாலும் சரி. அவர்கள் காலத்தில் அவர்களுக்குள் எப்படிப்பட்ட முரண் பட்டவர்களாக இருந்தாலும் சரி.. நாம் இருவரையும் சமமாக மதித்து வணங்குகிறோம்.

அவரவர்களுக்கு சொல்லக்கூடிய ஒரு நீதியும் ,ஒரு கதையும், ஒரு நியாயமும் எல்லோருக்கும் ,எல்லா இடத்திலும் உண்டு. அந்தக் கதையை வைத்துக்கொண்டு வரலாற்றின் வீதிகளில் பின் சென்று நியாயம் தீர்ப்பது நமது வேலையல்ல.

நமக்கு இரண்டு தாத்தாக்கள் இருந்தார்கள். இருவரும் அடித்துக் கொண்டார்கள். தற்போது இருவரும் இறந்து விட்டார்கள். சரி.. இருவரையும் வணங்கி விட்டுப் போவோமே…. என்பதான மனநிலை அது. அதைத்தாண்டி அவர்களுக்குள் இருக்கும் முரண்களில் நியாயம் பார்த்து தீர்ப்பு சொல்வது நமது வேலையல்ல.

நமது தாத்தாக்கள் காலத்து பகையையும் இப்போது கொண்டு வந்து அடித்துக் கொள்வதும், கொலை செய்து கொள்வதும் இருப்பதிலேயே ஆகப்பெரும் முட்டாள்தனமான மூடத்தனம்.

இதுவெல்லாம் ஒருபுறம் கிடக்கட்டும். சாதி மறுத்து வருகிற இளைஞர்களை ஒதுக்கி வைத்துவிட்டு.. சாதிக்கு எதிராக உயரும் கரங்களை மறுத்துவிட்டு..
நான் ஜாதியற்றவன். நான் தமிழன் என்கின்ற முழக்கங்களை மூர்க்கமாக எதிர்த்துவிட்டு…

தாழ்த்தப்பட்ட சமூகத்தின் விடுதலையை பேசுவது என்பது… அந்தந்த காலகட்டத்தில் நடக்கின்ற சாதாரண மேடை கூத்து.

உண்மையில் யார் சாதிக்கு எதிரானவர்கள்..

சுய சாதியை விட்டு வெளியேறி இன்னொரு சாதியில் திருமணம் செய்தவர்கள்.. தன் வீட்டுப் பிள்ளைகளுக்கு ஆதி தமிழர் வீட்டில் மணம் முடித்தவர்கள்.. தான் பெற்றெடுத்த பிள்ளைகளும் சாதிமறுப்புத் திருமணமே செய்வார்கள் என்று உறுதி ஏற்று வாழ்பவர்கள்..
இதனால் அவரவர் பிறந்த சாதியில் ஏற்படும் கலகத்திற்கும் முகம் கொடுத்து.. அந்தக் கலகமே தான் கொண்டு இருக்கின்ற சாதி எதிர்ப்பு உளவியலுக்கு கிடைக்க விருதாக கருதி வாழ்பவர்கள்தான் சாதிக்கு எதிரானவர்கள்.

ஏதேனும் ஒரு சாதியின் பக்கம் நின்று கொண்டு இன்னொரு சாதியை பற்றி பேசிக் கொண்டிருப்பதும் ‌.. சுயசாதி பெருமிதத்தில் .. தன் வாழ்வின் அனைத்துப் பக்கங்களையும் சாதி உணர்ச்சிகளால் நிரப்பி வைத்துக் கொள்வதும் சாதிய உணர்ச்சிகளை வளர்க்கவே செய்யும்.

மற்றபடி.. ராஜராஜன் ராஜேந்திரன் என்றெல்லாம் பேசி இகழ்வது திட்டுவது.. இது போன்றவை அந்தந்தக் காலத்திற்கேற்ற ஆகச் சிறந்த பொழுதுபோக்கு.

சிரித்து விட்டுப் போவோம்.

மணி செந்தில்.

இதற்கு யாரும் வர மாட்டார்கள்..

————————-+————————

தமிழக அரசியல் கட்சிகளில் வேறு எதுவும் நினைத்துக்கூட பார்க்க இயலாத மாபெரும் புரட்சிகர காரியம் ஒன்றை நாம் தமிழர் கட்சியின் இளையப் போராளிகள் நிகழ்த்தி வருகிறார்கள்.

உலகத்திலேயே அதிகம் நிலத்தடி நீர் பயன்படுத்துகிற நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவிலேயே அதிகம் நிலத்தடி நீர் பயன்படுத்துகிற மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டின் 85% நிலத்தடி நீர் பயன்படுத்தப்பட்டு விட்டது. 2020க்குள் நிலத்தடி நீர் முற்றும் அழிகிற நிலமாக தமிழ்நாடு மாறி வருகிறது.

இந்நிலையில் இந்தப் பெரும் அபாயத்திலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள நமக்குள்ள ஒரே ஒரு வழி இயற்கையாக அமைந்திருக்கும் நீர்நிலைகளை பராமரித்து வருகிற மழைக்காலத்தில் மீட்டெடுக்கப்பட்டு இருக்கிற நீர்நிலைகளில் நீரை சேகரித்து நமது நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்திக் கொள்வது தான்.

எனவேதான் இந்த மாபெரும் அபாயத்திலிருந்து இந்த மண்ணை காத்திட நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையைச் சேர்ந்த தம்பி தங்கைகள் இன்று வேளச்சேரி ஏரியினை சுத்தம் செய்கிற மாபெரும் புரட்சிகரப் பணியில் இறங்கி இருக்கிறார்கள்.

இதை எந்த ஊடகமும் காட்டப் போவதில்லை ‌.எந்த முற்போக்கு சிந்தனையாளர் வெங்காயமும் பாராட்ட போவதில்லை.

அரசியல் என்றாலே மக்களிடம் ஓட்டு கேட்டு ஆட்சி அதிகாரத்திற்கு வருகின்ற விவகாரம் மட்டுமல்ல. மாறாக இந்த நிலத்தின் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து இம் மண்ணை காத்திட மக்களைக் காத்திட தமிழகத்தின் இன உணர்வு மிக்க இளையோர் புறப்பட்டிருக்கிறார்கள் என்பதே புரட்சிகர நடவடிக்கை தான்.

இதில் எந்த திராவிட கட்சியாவது எங்களோடு போட்டி போடுங்களேன்.

சமூகநீதி பல்லாங்குழி விளையாடி, தலைவர்களையும் தத்துவங்களையும் மண்ணாக்கி.. இந்த இனத்தையும் நிலத்தையும் நாசமாக்கிய திராவிடக் கட்சிகளே… இந்தியத்தின் பெயரால் தமிழகத்தை சுரண்டிக் கொழுக்கிற தேசிய கட்சிகளே.. சாதி பெருமிதத்தை ஊட்டி தமிழ்நாட்டை துண்டாடிக்கொண்டிருக்கும் சாதியக் கட்சிகளே..

வாருங்கள்.. இதில் நாம் தமிழர் கட்சியோடு போட்டி போடுங்கள்.

தமிழர்களை குடிநோயாளிகளாக்கிய டாஸ்மாக் பார் எடுக்க, குண்டும் குழியுமாக ஒரு பாதையை உருவாக்க தார் ரோடு காண்ட்ராக்ட் எடுக்க, வரிசையில் நின்ற கருப்பு சிவப்பு, கறுப்பு சிவப்பு வெள்ளை என பல்வேறு கரை வேட்டி கட்டிய பெரியோர்களே..

வாருங்கள்.‌ இதில் எங்களோடு போட்டி போடுங்கள்.

இதற்கு எந்த திராவிட கட்சியும் எதிர்வினையாற்ற மாட்டார்கள். நவ துவாரங்களையும் பொத்திக் கொண்டு அமைதியாக இருப்பார்கள்.

ஆற்று மண்ணையெல்லாம் திருடித் தின்று விட்டு.. இல்லாத மண்ணை பெரியார் மண் என்று பீற்ற வரிசையில் வருவார்கள்.

இதற்கு வரமாட்டார்கள்.

இந்த 50 வருட அயோக்கியத்தனத்தால்
ஒரு தலைமுறை இளைஞர்கள் வீதியில் நிற்கிறார்கள்.

வேளச்சேரி ஏரியை காப்பாற்ற வீதிக்கு வந்து வேர்வையில் நனைந்து.. செயலில் இறங்கி இருக்கிற.. நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்.

மணி செந்தில்.

 

வயிற்றெரிச்சல் கும்பல்களின் வன்ம எரிச்சல்

என்னடா தேர்தல் முடிந்து விட்டதே.. நாம் தமிழர் குறிப்பிட்ட சதவீத ஓட்டை வாங்கிவிட்டதே.தனது எழுச்சியான வளர்ச்சியை பதிவு செய்துவிட்டதே.
ஆனாலும் இன்னும் வயிற்றெரிச்சல் கும்பல்களிடமிருந்து வன்ம இருமல் வரவில்லையே என்று நினைத்தேன்.

வரத் தொடங்கியிருக்கின்றன.அதிலும்
சிலதுகள் புலம்பியே ரத்த வாந்தி எடுக்க
தொடங்கி இருக்கின்றன.

வழக்கம்போல் அதே புலம்பல்தான்.

ஆனால் இம்முறை கூடுதலாக பொய் 2 டீஸ்பூன் அதிகம்.

சரி.. நாமும் வழக்கம்போல் இடது கையால் இக்னோர் செய்யலாம் என்று நினைத்தால் கக்கிய அவதூறுகள் சமூக வலைதளங்களில் கத்த தொடங்கியிருக்கின்றன.

எனவே தான் இந்த பதிவு.

…..‌

ஒவ்வொரு முறையும் சாதி கருத்தியலுக்கு எதிராக நாம் தமிழர் முழங்கிக் கொண்டே வருகிறது. பொதுத் தொகுதிகளில் ஆதித்தமிழரை நிறுத்துவது, தேர்தல் அரசியலில் சாதி பார்க்காமல் வேட்பாளரை களம் இறக்குவது என ஒவ்வொரு முறையும் சாதிக்கு எதிராக தனது தடத்தை அழுத்தமாக நாம் தமிழர் பதிவு செய்து வருகிறது.

ஆனால் மீண்டும் மீண்டும் நாம் தமிழர் குறித்து ஒரு திட்டமிட்ட அவதூறு பரப்பப்படுகிறது. அது என்னவென்றால்.. தமிழர் என்கிற இன வரையறை செய்ய சாதி கேட்கிறோம் என்கின்ற மிக இழிவான மலிவான பிரச்சாரம் எங்களை நோக்கி செய்யப்படுகிறது.

எங்களது தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களது பேச்சுக்கள் இணையதளம் முழுக்க பரவிக் கிடக்கின்றன. சாதிக்கு எதிராக அவர் முழங்கிய முழக்கங்கள் காற்றோடு கலந்து ஒவ்வொரு தமிழர் காதுகளிலும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் மீண்டும் மீண்டும் எங்களைப் பற்றி இப்படிப்பட்ட அவதூறு.

முதலில்…

நாங்கள் சாதி உணர்வுக்கு எதிரானவர்கள் என்பதை நிரூபிக்கவே நாம் தமிழர் என்று முழங்குகிறோம். நாம் தமிழர் என்கின்ற முழக்கமே சாதி உணர்விற்கு எதிரான கலகச் சொல் தான்.அதுவரை சாதியாகப் பிரிந்து நின்ற தமிழன் நாம் தமிழர் என்ற முழக்கத்தினால் தான் சாதியை கடந்து, மதத்தை மறந்து இன அரசியலின் மீது ஈர்க்கப்பட்டு ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய இனத்திற்கான அரசியலை நோக்கி நகர்கிறான்.

சாதி உணர்வை சாகடித்துவிட்டு தான் 16 லட்சம் தமிழர்கள் நாம் தமிழராய் உணர்ந்து வாக்களித்திருக்கிறார்கள். அவர்கள் சாதியை ஆதரிப்பவர்களாக இருந்தால்.. அந்தந்த சாதி கட்சிகளுக்கு வாக்களித்திருப்பார்கள்.இல்லையேல் திராவிட கட்சிகள் சாதி பார்த்து நிறுத்தியிருந்த தங்கள் சாதி வேட்பாளர்களுக்கு வாக்களித்து இருப்பார்கள். இதையெல்லாம் கடந்து இனம் மொழி என நேசித்து நாம் தமிழருக்கு வாக்களித்திருக்கிறார்கள்.

நாம் தமிழரை சேர்ந்த ஒவ்வொரு இளைஞனும் சாதி மறுப்பினை உளப் பூர்வமாக ஏற்றுக் கொண்டு களத்தில் நிற்கிறான். சாதிய விரும்புகிறவனாக இருந்தால் அவன் இணைய ஆயிரம் அமைப்புகள் இங்கே இருக்கின்றன.

இனத்திற்கான மாபெரும் போர் படையாய் நாம் தமிழர் வளர்வதை பொறுக்காத திராவிடக் கூட்டம் சாதி மறுப்பாளர்களான எங்களை தவறாக சித்தரிக்க முயன்று வருகின்றது..

சாதி குறித்து கேள்வி எழுப்பி முற்போக்காளர்கள்…தங்கள் அருகிலேயே நிற்கின்ற கருப்பு துண்டுகளையும், அவை ஆதரிக்கின்ற கருப்பு சிவப்பு துண்டுகளையும் சற்றே ஏறெடுத்து சாதி பார்த்து வேட்பாளர்களை நிறுத்தி.. தமிழர்களை 50 வருடங்களாக சாதியாகப் பிரித்து வட்டச் செயலாளர் தொடங்கி பகுதி செயலாளர் நகரச் செயலாளர் ஒன்றிய செயலாளர் மாவட்டச் செயலாளர் என அனைத்துக் கட்சி பதவிகளிலும் சாதி பார்த்து இடம் கொடுத்து சாதியை காப்பாற்றுகின்ற இழிநிலை குறித்து எந்தவித கேள்வியும் எழுப்ப மாட்டார்கள்.

ஏனெனில் அவர்களுக்கும் தெரியும். திராவிடம் என்பதே சாதியை காப்பாற்றுகிற சாதியை போற்றுகிற மாபெரும் சூழ்ச்சி என..

ஒரு பக்கம் ஈழத்திற்கு ஆதரவாக போராடுவதாக காட்டிக்கொள்வார்கள். மறுபக்கம் காங்கிரசுக்கு வாக்கு கேட்டு தெருத்தெருவாய் அலைந்தவர்களோடு கைகோர்த்து நிற்பார்கள்.

இந்த லட்சணத்தில் எம்மினத்தின் உதிரம் படிந்த அந்த கைகளோடு நாங்களும் கைகோர்க்க வேண்டும் என கேட்பது தான் மாபெரும் கொடுமை.

உன் நண்பனைக் காட்டு.. உன்னை யாரென்று சொல்கிறேன் என்பார்கள். அவர்களது நண்பர்கள் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர்களும் தொடர்ந்து அம்பலப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

ராகுல் காந்தி வயநாடில் வந்து நிற்கலாம் வெல்லலாம். ஆனால் சட்டமன்றத் தொகுதியில் நிற்க சொல்லுங்களேன் பார்ப்போம். ராகுல் காந்தி மாபெரும் கட்சியின் தலைவராக இருக்கலாம். எம்பியாக வெல்லலாம். ஆனால் ஒரு போதும் கேரளா நாட்டின் முதலமைச்சராக ஆக முடியாது.

மீண்டும் உறுதியாகச் சொல்கிறோம்

தமிழரே தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்பது தமிழரின் அடிப்படை அரசியல் உரிமை.

நாங்கள் கேட்பது எம் இனத்திற்கான இறையாண்மை.

எம் இனத்தின் வரையறை என்பது… தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட அனைவரும் தமிழர்கள்.

அதில் சாதிக்கும் மதத்திற்கும் இடமில்லை.

எங்களுக்கென்று ஒரு நிலம் இருக்கிறது. எங்களுக்கென்று ஒரு மொழி இருக்கிறது. எங்களுக்கென்று ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சி இருக்கிறது.அந்தப் பண்பாட்டு தொடர்ச்சியையும் செழுமைப் படுத்திக் கொள்கிற வரலாற்றுத் தெளிவு எம் இனத்திற்கு இயல்பாகவே இருக்கிறது.

எனவே தன் ஊக்கம் கொண்ட தமிழின இளையோர் தன் மண்ணிற்கான, தன் இனத்திற்கான அரசியலை ஒரு வெகுஜன அரசியலாக கட்டமைக்க நாம் தமிழர் என்ற அமைப்பினை உருவாக்கி வளர்த்து வருகிறார்கள்.

எங்களது அரசியல் தெளிவு/சாதிய மறுப்பு ஆகியவை திராவிட கட்சிகளுக்கு இயக்கங்களுக்கு உறுத்தலாகதான் இருக்கும்.

அதை ஆதரித்து கைப்பிடித்து நிற்பவர்களுக்கும் உறுத்தலாகத்தான் இருக்கும்.

அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது.

நான் பலமுறை சொல்லியிருக்கிறேன்.

உன் முதுகிலேயே ஓராயிரம் அழுக்கு. நீ அடுத்தவர் மீது சாட்டுகிறாய் பொய் வழக்கு.

தொடர்ந்து உண்மையினை உரக்கச் சொல்லி.. சுயசாதி பெருமித உணர்ச்சி யை சாகடித்து புலிக்கொடி உயர்த்துவோம்.

விடியும் கிழக்கு.

மணி செந்தில்.

Page 6 of 15

Powered by WordPress & Theme by Anders Norén