பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: சுயம் Page 1 of 6

2024 – சென்னை புத்தகக் கண்காட்சி-பெற்றதும்,கற்றதும்

இந்த வருடம் சென்னை புத்தகக் கண்காட்சி ஒரு வழியாக முடிந்து விட்டது. ஒரு நாள் மட்டுமே புத்தக கண்காட்சியில் செலவிட முடிந்தது உண்மையில் வேதனையை தந்தது. வழக்கமான சென்னை புத்தகக் கண்காட்சி கொண்ட சிறப்புகளை ஒருபுறம் இந்த புத்தக கண்காட்சியும் பெற்றிருந்தாலும், மறுபுறம் புத்தகக் கண்காட்சியில் இன்னும் சீர்படுத்தப்படாமல் தொடரும் தவறுகள் இந்த வருடமும் தொடர்வது கண்டிக்கத்தக்கது. தூய்மையற்ற கழிவறை, என்னை போன்றவர்கள் நடக்கவே முடியாத ஏற்றத்தாழ்வு உடைய மரப்பாதை, மிகச் சிறிய நூல் அரங்குகள் என கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் கவனம் செலுத்த வேண்டியவை நிறைய உள்ளன. சென்னை வெள்ளமும், ஊருக்கு ஊர் கண்காட்சி போடுகின்ற நிலையும் புத்தக விற்பனையை பெரிதும் இந்த வருடம் பாதித்ததாக விற்பனையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

நிறைய நல்ல புத்தகங்கள் இந்த வருடம் வெளியாகி இருக்கின்றன. எந்த புது புத்தகத்தை பார்த்தாலும் வாங்கிவிட வேண்டும் என மனம் தத்தளிப்பது புத்தகக் கண்காட்சியில் நாம் பெறுகின்ற மகிழ்வும் துயரும் ஒரே நேரத்தில் வந்தடைகிற மகத்தான அனுபவம். கையில் இருக்கின்ற பணம் புத்தகத்தின் விலை என்கிற இருபக்க தராசு தட்டுகளை வைத்து மனம் மேற்கொள்ளும் விசித்திர விளையாட்டு ஒவ்வொரு ஆண்டும் புத்தகத்தின் கண்காட்சியில் நிகழ்கிறது.

நீண்ட நாட்களாக ‘தமிழ்த் தேசியப் போராளி தமிழரசன்’ பற்றிய முழுமையான தொகுப்பு ஒன்றினை தேடிக்கொண்டிருந்தேன். அந்தக் கனவு இந்த வருடம் தமிழ்நேயன் தொகுத்தளித்த “தோழர் தமிழரசன் விடுதலை வீரன்” என்கிற தொகுப்பு நூல் மூலம் நிறைவேறியது.

அதேபோல் கான்சாகிப் யூசப் கான் மருதநாயகம் பற்றிய விடியல் பதிப்பகம் வெளியிட்ட “கிளர்ச்சியாளர் யூசுப் கான்” என்கின்ற விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலும் பார்த்தவுடனே வாங்க வேண்டும் என்கிற ஆவலைத் தோன்றியது.

எதிர் வெளியீடு வெளியிட்டுள்ள அலெக்ஸ் ஹேலியின் ” வேர்கள்” முழுமையான மொழிபெயர்ப்பு மற்றும் நற்றிணை பதிப்பகம் வெளியிட்ட கேசவமணி மொழிபெயர்ப்பில் லியோ டால்ஸ்டாயின் “அன்னாகரீனினா” போன்றவை இந்த வருடம் நான் வாங்கிய நூல்களில் முக்கியத்துவம் வாய்ந்தவை.

சமீபத்திய சாகித்திய அகாதமி விருது வாங்கிய தேவி பாரதி அவர்கள் எழுதிய “நீர்வழி படூஉம்” திருச்செந்தாழை எழுதிய ” ஸ்கெட்சஸ்” முனைவர் ப கிருஷ்ணன் அவர்கள் மொழி பெயர்த்து சிந்தனை விருந்தகம் வெளியிட்டிருக்கிற “கர்னல் ஜேம்ஸ் வெல்ஸ் ராணுவ நினைவலைகள்” அண்ணல் அம்பேத்கர் அவர்களின் மனைவி சவிதா அம்பேத்கர் எழுதியிருக்கிற “டாக்டர் அம்பேத்கருடன் என் வாழ்க்கை” ,நா. வீரபாண்டியன் எழுதியுள்ள “நேரு மேல் இவர்களுக்கு ஏன் இந்த கோபம்” நண்பர் காளி பிரசாத் பரிந்துரைத்து நான் வாங்கிய சாம்ராஜ் எழுதிய “கொடைமடம்” போன்றவை இந்த வருடம் புத்தக கண்காட்சியில் நான் கண்டடைந்த முக்கியமான படைப்புகள்.

எனது தம்பி எழுத்தாளுமை அகர முதல்வன் பரிந்துரையின் பேரில் இந்த வருடம் புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் கே ஆர் மீரா எழுதிய படைப்புகளின் மொழிபெயர்ப்புகளை வாங்கியுள்ளேன். வசீகரமான படைப்புலகம்.

இதன் நடுவே வைரமுத்துவின் “மகாகவிதை”, பரகால பிரபாகர் அவர்களின் கட்டுரை தொகுப்பான “புதிய இந்தியா எனும் கோணல் மரம்” போன்றவையும் படிக்க ஆர்வத்தை துண்டுபவைகளாக உள்ளன.

எப்போதும் சென்னை புத்தக் கண்காட்சியில் புத்தகங்கள் வாங்குவது என்பது எனது ஆசான் ‘எஸ்.ராமகிருஷ்ணன்’ அவர்களை சந்தித்த நாள் முதல் ஒரு தொடர் நிகழ்வாக மாறிவிட்டது. அவரை ஒவ்வொரு புத்தக கண்காட்சியிலும் தேசாந்திரி அரங்கில் சந்திப்பதும், இலக்கியம் பேசிக் கொண்டிருப்பதுமான நிகழ்வு இந்த வருடமும் இனிதே நடந்தது.

நான் வாங்க முடியாத சில புத்தகங்களை சென்னை புத்தகக் கண்காட்சியில் இறுதி நாளன்று என் அன்புத் தம்பி பிரபா மூலம் வாங்கிக் கொண்டு குளிர் இரவில் அதை சுமந்து தஞ்சையில் என்னிடம் பாதுகாப்பாக சேர்த்த என் உயிர் இளவல் தமிழம் செந்தில்நாதன் நன்றி. நான் கொடுத்த நூல் பட்டியலை வைத்து ஒவ்வொரு அரங்காக சென்று புத்தகம் வாங்கி அன்பு சேர்த்த நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலையத்தை சேர்ந்த என் தம்பி பிரபாவிற்கும் அன்பு முத்தங்கள்.

எனது அன்பு அண்ணன் பாலமுரளி வர்மன் எழுதிய “வீரப்பன் பெயரால் மனித வேட்டை” என்கின்ற நூலும் எனது அன்புத் தம்பி இடும்பாவனம் கார்த்திக் எழுதிய “யார் பிஜேபியின் பி டீம் ” என்கின்ற நூலும் புத்தக கண்காட்சியில் பெரும் வரவேற்பை பெற்றது பெரு மகிழ்ச்சியை தந்தது.

மானுடம் கொண்டிருக்கின்ற எல்லா விதமான கீழமை உணர்ச்சிகளில் இருந்து விடுதலை பெறவும், பயமும், குழப்பமும் நிறைந்த இருண்மையான எதிர்மறை எண்ணங்களிலிருந்து விடுபடவும், நமக்கு முன்னால் இருக்கின்ற ஒரே ஒரு வெளிச்ச வீதி புத்தகங்கள் படிப்பது தான். வெளிச்சத்தை தேடி கண்டறிவது தானே மனித வாழ்க்கையின் ஒரே ஒரு பொருள்..?!

காதலின் மொழி.

எப்படி
புரிந்துக்கொள்வது
மொழி தெரியாத
பாடல் ஒன்றை…
❤️
சரி. விடுங்கள்.
எல்லாவற்றுக்கும்
மொழி வேண்டுமா
என்ன…?

சீமான் அண்ணனின் பிறந்தநாள்.

பேரன்பினால் நெய்யப்பட்ட பேராற்றல்.

——————————————————————

ஒரு மீன் குஞ்சு தன் அம்மாவிடம் கேட்டது.

” நான் கடலைப் பற்றி எப்போதும் கேள்விப்படுகிறேன் கடல் என்றால் என்ன..? அது எங்கே இருக்கிறது..?”

“நீ வாழ்வதும், அசைவதும், உன் உயிர் இருப்பதும் கடலில் தான். கடல் உனக்குள்ளும் இருக்கிறது. நீ இல்லாமலும் இருக்கிறது. நீ கடலால் ஆனவள். நீ கடலில் தான் முடிவாய். கடல் உன் சொந்த உயிரைப் போல உன்னை சூழ்ந்துள்ளது. என்று அம்மா சொன்னாள்.

( நான் யார் ?.. 173 ஜென் கதைகள். அடையாளம் வெளியீடு.)

🛑

மிக எளிதாக இந்த ஜென் கதையை வெறும் கண்களால் படித்து, அகக் கண்களால் பார்க்கும் எவராலும் கடந்து விட முடியாது. ஏனெனில் அந்தக் கதை நம்மைப் பற்றியது. எப்படி அந்த மீன் குஞ்சு தான் மிதந்து கொண்டிருக்கின்ற கடலைப் பற்றி தன் அம்மாவிடம் கேட்டுக் கொண்டிருக்கிறதோ, அப்படித்தான் தமிழர் என்ற தேசிய இனம் அந்த ஒரு தனி மனிதனின் வருகைக்கு முன்னால் தான் யார் என்று தெரியாமல் திரைப்படங்களை பார்த்துவிட்டு நாம் இந்தியர் என்றும், திராவிட மேடைகளை பார்த்துவிட்டு நாம் திராவிடர் என்றும் குழம்பிக் கொண்டிருந்தது.

வன்னிக் காட்டில் கொழுந்து விட்டு எரிந்த ஒரு தீப்பந்தத்தில் உரசப்பட்டு, ஒரு அசலான எரியும் தீக்குச்சி போல அவன் வந்தான். இன அழிவு கோபத்தால் தகித்துக் கொண்டிருந்த ஆன்மாக்களில் சென்று சேர்ந்தான். பற்றி எரிந்தது வனம்.

வெந்து தணிந்தது காடு.

அண்ணன் சீமான் என்கின்ற அந்த அதி மனிதரின் இரு காட்சிகள்.

🛑

ஒரு காட்சி.

வெயிலேறி எரிந்து கொண்டிருந்த அந்தக் கனல் பொழுதில் நாங்கள் சென்று சேர்ந்த போது ஒரு வயதான முதியவரை தவிர அங்கே யாரும் இல்லை.

அவருக்குப் பின்னால் ஒரு சரிந்த லிங்கம் சாய்ந்து கிடந்தது.

சிறிது சலசலப்புடன் கூடி வந்த கூட்டத்தின் நடுவில் நின்ற அண்ணன் சரிந்து கிடந்த லிங்கத்தை பார்த்துவிட்டு அப்படியே உறைந்து நின்றார். ஒரு தீவிர மௌனத்தின் சுழல் அங்கே மெதுவாக சுழலத் தொடங்கியது.

அண்ணன் முகத்தில் உறைந்திருந்த உணர்ச்சி அலைகளை கண்ட அந்த இளைஞர் கூட்டமும் மௌனமாகிவிட்டது. அண்ணனின் கண்கள் கலங்கத் தொடங்கி இருந்தன. ‘ஏண்டா இப்படி..’ என்பது போல எங்கள் முகத்தை அண்ணன் பெரும் வலியோடு உற்று நோக்கினார்.

அங்கே இருந்த ஒரு பழைய கீற்று கொட்டகைக்கு கீழே வரலாற்றின் புகழ் வெளிச்சம் அனைத்தையும் ஒருங்கே அடைந்த தமிழ் இனத்தின் பேரொளி ஒன்று புதைந்து கிடக்கிறது. பெருவுடையார் கோவில் கண்ட பெருமை ஒன்று சிதைந்து கிடக்கிறது.

மாமன்னர் ராஜராஜ சோழன் அந்த உடையாளூர் மண்ணில் தான்

சிதிலம் அடைந்த லிங்கமாய் உடைந்து கிடந்தார்

வந்தவர் போனவருக்கெல்லாம் கடற்கரையில் கல்லறை கட்டி சில்லறை வீசும் ஒரு இனத்தின் மக்கள் தன் சொந்தவனை, உலகை ஆண்ட மன்னவனை உதறித் தள்ளிய வரலாற்றின் அவலக் காட்சி அது.

அந்த வயதான முதியவர் அண்ணனின் கைகளைப் பிடித்துக் கொண்டு தழுதழுக்க “உன் பாட்டனை காப்பாற்று, அவன் புகழ் போற்ற ஏதேனும் செய்..”

என்றார்.

அருகில் இருந்த நாங்கள் அரசின் கவனத்தை ஈர்க்க ஏதேனும் பெரிய போராட்டம் செய்வோம் என்று சொன்னோம்.

கண்கள் சிவந்து கலங்கிக் கொண்டிருந்த அண்ணன் தீர்க்கமாய் நிமிர்ந்து பார்த்தார்.

“இந்த திராவிடத் திருடர்கள் யாரும் என் பாட்டனுக்கு எதுவும் செய்ய வேண்டாம்.எந்த நினைவு மண்டபம் கட்ட வேண்டாம். கட்டவும் கூடாது. மீறி கட்டினார்கள் என்றால்.. ஒரு நாள் நான் ஆட்சிக்கு வருவேன். இவர்கள் கட்டியதை இடித்துவிட்டு நான் மாபெரும் நினைவாலயத்தை என் புலிக்கொடி பாட்டனுக்காக எழுப்புவேன்.

பல நூறு ஆண்டுகள் படுத்து கிடந்தவன் சில ஆண்டுகள் பொறுத்திருக்க மாட்டானா..??”

என்று சினம் கொண்டு கேட்ட அவரது உரம் மிக்க சொற்கள் கேட்டு புவியாழத்தில் புதைந்து கிடந்த அரசனுக்கு அரசன் அருண்மொழிச் சோழன் பெருமூச்செறிந்தான். சாய்ந்து கிடந்த லிங்கம் கூட சற்று நிமிர்ந்ததாய் ஒரு தோற்றம்.

.🟥

மற்றொரு காட்சி.

காவிரி செல்வன் விக்னேஷ் தீக்குளித்து விட்டான். அண்ணன் பதைபதைத்து ஓடி வந்து கொண்டிருக்கிறார். தம்பி விக்னேஷ் தாங்கி பிடித்திருந்த காவலர் தம்பி கண் மூடி விடாதே உன் தலைவர் வந்து கொண்டிருக்கிறார் என சொல்ல.. நெருப்பின் தழல் மேவிக் கிடந்த தம்பி விக்னேஷ் சிரமப்பட்டு விழிகளை திறந்தான். அவர் என் தலைவர் அல்ல. என் அண்ணன். என்று சொல்லிவிட்டு இறுதியாக விழி மூடினான்.

கண்கள் முழுக்க கண்ணீரோடு அந்த மருத்துவமனையின் வாசலில் நின்று கொண்டே இருந்த அண்ணனை பின்னிரவில் வாகனத்தில் சென்று அமர சொன்னோம். மறுத்துவிட்டு அவனது பெற்றோர்கள் வரும் வரை கலங்கிய கண்களோடு வலி தாங்கி நின்று கொண்டே இருந்தார். அவனது பெற்றோர்கள் முன் தம்பியை பறி கொடுத்துவிட்டு

கலங்கி நின்ற அவரின் தவிப்பு

எதனாலும் ஆற்றுப்படுத்த முடியாதது.

அன்று அவர் சிந்திய கண்ணீர் துளிகள் தாய்மையின் சாயல் கொண்டவை.

❤️

சிந்தித்துப் பாருங்கள்.

மரணப் படுக்கையிலும் கூட தன் அண்ணன் என்று ஒருவரை நினைவு படுத்தி அழைக்க முடிகிற தீவிரத்தை அண்ணனிடம் உள்ள

எது ஒருவனுக்கு தருகிறது..???

அண்ணன் என்பது வெறும் சொல்லா.. அல்லது உறவு முறையா.. அல்லது கூப்பிடும் வழக்கமா.. அல்லது மாண்போடு அழைக்கும் பண்பாடா… என்றால் இவை எதுவுமே இல்லை.

அது ஒரு வகையான தனித்துவம்.

வெவ்வேறு கருப்பைகளில் தோன்றினாலும் தொன்மத்தில் தோன்றிய, ஆதி இனத்தின் மரபணுவில் அழிவின் அழுத்தம் விளைவித்த

ஒழுங்கினால் நேர்ந்து விட்டிருக்கிற பெரும் அன்பின் அலைவரிசை. எதையும் அந்த மனிதனுக்காக இழக்கலாம் என துணிகிற மனநிலையை உள்ளுக்குள் துடித்துக் கொண்டிருக்கிற அந்த மரபணு தான் தீர்மானிக்கிறது.

அவரது மொழி கேட்டால் நம் உயிர் விழி அசைகிறதே.. அவர் வழி காட்டினால் நம் முன்னால் லட்சியப் பாதை ஒன்று விரிகிறதே..

என்றெல்லாம் நாம் வியந்து கொண்டிருக்கும் போதே, உயிர் வாழும் இறுதித் துளி வரை இணைந்திருக்கும் பேரன்பின் மொழியை அவர் நம் இதயத்தில் எழுதிக் கொண்டிருப்பார்.

அவரது மனநிலை அது.

கொஞ்சமும் ஒப்பனை இல்லாத, முன் தயாரிப்பு இல்லாத , அசலான அவரது இயல்பு அது. அந்த இயல்புதான் நாம் தமிழர் என்கின்ற மகத்தான குடும்பத்தை இயக்கிக் கொண்டிருக்கிற பேராற்றல்.

அந்தப் பேராற்றல் தான் ஒரு தேசிய இனத்தை விடுதலைப் பெற வைக்க கூடிய வலிமையாய், அவரது இயல்பாய் இணைந்திருப்பது காலக் கணிதத்தின் அதிசயமான கணக்கு தான்.

காலம் தனக்கான தேர்வுகளை அதுவாகவே செய்யும் என்பார்கள். முதல்முறையாக காலத்தை தானே தேர்ந்தெடுத்து தன் வரலாற்றை தன் இனத்திற்கான விடுதலை வரலாறாக மாற்ற உழைத்து வருகிற அண்ணன் நமக்காக மட்டுமல்ல, இந்த இனத்தில் பிறந்த ஒவ்வொருவருக்காகவும் பிறந்தவர்.

❤️

விடியலை நோக்கி விரைந்து கொண்டிருக்கின்ற இந்த இரவில் உன்மத்த அன்போடு என் உன்னத அண்ணனை கட்டி அணைக்கிறேன்.

அண்ணா.. நீங்கள் பிறந்ததால் நாங்கள் சிறந்தோம்.

உணர்ச்சி நிறைந்த

நன்றியும்,

முத்த வாழ்த்துகளும்.

#அடுத்து_நாமதான்ணே

❤️
❤️
❤️

தமிழ் முழக்க நினைவுகள்

தமிழ் முழக்கம் என் வாழ்வில் செலுத்திய ஆதிக்கம் கொஞ்சநஞ்சம் அல்ல. எழுத்து உலகில் மிக இளையவனான என்னை கண்டெடுத்து தன் பத்திரிக்கைக்கு துணை ஆசிரியராக நியமித்து ஒவ்வொரு இதழிலும் என் எழுத்துக்களை பதிவேற்றம் செய்து என்னை உருவாக்கிய பெருமகன் தமிழ் முழக்கம் சாகுல் அமீது என்ற திருமகன்.

நாகப்பட்டினத்தில் நடந்த‌ நாம் தமிழர் கட்சியின் மாபெரும் இளைஞர் பாசறை தொடக்க மாநாட்டில் எங்களை மேடையேற்ற அவர் உழைத்த உழைப்பு இன்னும் என் கண்களிலே நிற்கிறது.

எதற்கும் அயராத மனிதன். அவரது உருவம் போல அவரது நம்பிக்கையும் மகத்தானது. எதுவுமே இல்லாத அடையாளமற்ற எளியவர்களை அவராகவே தேர்ந்தெடுத்து அவர்களை உயரச் செய்கிற குணம் நம்மில் எத்தனை பேருக்கு வாய்க்கும்..??

அவருக்கு வாய்த்தது. அண்ணன் சீமான் தொடங்கி இன்னும் எத்தனையோ என்னை போன்ற எளியவர்களுக்கு உதவி செய்து மேல் ஏற்றிய அவரது கரங்கள் பொற்கரங்கள்.

எதிலும் அவர் பிரம்மாண்டம் தான். விருந்து வைத்தாலும் சரி.. கூட்டம் நடத்தினாலும் சரி, அவருக்கென்று ஒரு மகத்தான பிரம்மாண்டமான திட்டம் இருக்கும். அந்தத் திட்டத்தை நிறைவேற்ற அவர் இரவும் பகலும் ஆக உழைப்பதில் தான் அவர் நிறைவடைவார்.

ஒரு முறை தமிழ் முழக்கம் இதழில் நான் எழுதிய ஒரு கட்டுரை காரணமாக கடுமையான எதிர்ப்பு தமிழகம் எங்கும் ஏற்பட்டு அவரது பத்திரிக்கை அலுவலகமே தாக்கப்பட்ட போது, அதைப்பற்றி கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் அடுத்த மாதமே எனது அடுத்த கட்டுரையை பதிவேற்றி அதுவே அட்டைப்படமாக மாற்றிக் காட்டிய அந்த நம்பிக்கையை நான் எங்கே கண்டடைவேன்..??

அண்ணன் சீமான் சொற்கள் தான் அவருக்கு வேத மொழிகள். தன் மருமகனின் சொல்லைத் தாண்டி அவருக்கு எல்லை ஏதுமில்லை. சீமான் என்ற மனிதனுக்கு தாய் மாமனாக மாறியதால் உலகம் எங்கும் வாழக்கூடிய இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உயிர் மாமனாக மாறியவர் அவர்.

குறிப்பாக என்னை செதுக்கி, நம்பிக்கை ஊட்டி இயங்க வைத்ததில் அவருடைய பங்கு மிக மிகப் பெரிது. அவரது நினைவுகளை இன்னும் மனதிற்குள் சுமந்து கொண்டு தான் அதிலிருந்து தான் இயங்குவதற்கான ஆற்றலை எனக்குள்ளாக நான் தயாரித்து வருகிறேன்.

இறுதியாக தன் வாழ்நாளில்‌ அவர் கலந்து கொண்ட கடைசி கலந்தாய்வு கூட்டம் என் வீட்டு மாடியில் தான் நடந்தது. அப்போதே அவருக்கு கடுமையான காய்ச்சல் தொடங்கி இருந்தது. வாயெல்லாம் கசக்கிறது என்று சொல்லிக் கொண்டே இருந்தார். நிலவேம்பு கசாயம் எடுத்து வந்த என் தாயிடம் வேண்டாம் என மறுத்து சர்க்கரை நிறைய போட்டு காப்பி வேண்டும் எனக் கேட்டார். கூட்டத்தில் நானும் அண்ணன் ஹுமாயூன் உள்ளிடவர்களும் கலந்து கொண்ட போது துணிச்சலான பல முடிவுகளை அவர் தயங்காமல் எடுத்தார்.

அவரை என் வாழ்வில் சந்தித்ததும் அவரால் நான் சந்தித்ததும் நிறைய இருக்கின்றன. முடிவாக ஒன்றே ஒன்று. அவரால் நான் உருவாக்கப்பட்டு இருக்கிறேன். தன் மருமகன் சீமானை அவர் நேசித்தார் என்பது எங்களுக்கு ஏற்கனவே தெரியும். அது எந்த அளவு என்றால் தன் வாழ்வின் இறுதி நொடியில் கூட கட்சியின் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளும் அளவிற்கு உயிரளவு என்பது அவரது மறைவிற்குப் பிறகு தான் புரிந்தது.

அந்தப் பற்றுறுதி தான் அந்த இலட்சிய விருப்பு தான் எங்களுக்கு அவர் விட்டு சென்று இருக்கின்ற இறுதி செய்தி.

அதை வாழ்நாள் எல்லாம் நாங்கள் கடைபிடிக்க அவர் தெய்வமாக நின்று கருணையின் குடை பிடிக்கட்டும்..

கண்கள் கலங்க என் ஆசானுக்கு கண்ணீர் வணக்கம்.

மணி செந்தில்.

அண்ணனின் அன்பு.

மச்சானின் பிறந்தநாள் 2023

ஆதி காலமொன்றில்

அதுவாகவே தழைத்திட்ட

பெரும் அடர்வனக் காட்டின்

பசுமையேறி இருள் வெளியில்

கிறங்கிப் பறக்கும்

ஒற்றை மின்மினி போல..

எல்லையற்ற நேசத்தின்

மது அருந்தி காலமெல்லாம்

உனதன்பின் மேகத்தில்

மிதந்து கொண்டிருக்கிறேன்.

உனக்குப் பிடித்ததெல்லாம்

எனக்கும் பிடிக்கும் என்பது போக

எனக்குப் பிடித்ததெல்லாம்

உனக்கும் பிடித்தது என்பதாகி

உனக்கும் எனக்கும் பிடித்தது யாதெனில் உனக்கு என்னையும். எனக்கு உன்னையும் தான்.

இதற்கு மேல் இந்த கவிதையை விவரித்து சொல்ல முயன்றால்

அலைவரிசை பிசகக் கூடும். ஏனெனில் சொற்களுக்கு அப்பால்

நாம் மட்டுமே உணர்ந்து கொள்கிற

இந்த வாழ்க்கை வார்த்தைகளை எல்லாம் தாண்டிய நம் பேரன்பின்

சாரல் நனைந்தது.

நனைந்துக் கொண்டே

இருப்போம்.

எதனாலும் விலகாத

தனித்து தெரியாத

ஒற்றை ஆறு

வரையும் நீர் ஒழுங்கின்

இரு துளிகள் நாம்.

அடுத்தடுத்து மீட்டப்பட்டாலும்

அலைவரிசை தப்பா

அதிரும் வீணையின்

பிரிக்க இயலா

உதிரும் இசை வரிசை நாம்.

….

திரியும் ஞாலமெல்லாம்

திசை சேர்ந்திருப்போம்.

வாழும் காலமெல்லாம்

கை கோர்த்திருப்போம்.

….

அன்பு முத்தங்கள் தல.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

நந்தனின் கேள்வி.

தனக்குள் ஆழ்ந்திருந்த தியானத்திலிருந்து கால நழுவலின் ஒரு நொடியில் கண் விழித்த புத்தர் மௌனத்தின் உரமேறி இருந்த ஞானத்திலிருந்து சிந்தப்போகும் சொற்களுக்காக எதிரே தன் முன்னே காத்திருந்த சீடர்களைப் பார்த்து மென்மையாக புன்னகைத்தார்.

ஒரு இலை உதிர்தல் கூட அங்கே சூழ்ந்து இருக்கும் அமைதியின் ஒழுங்கை சிதைத்து விடுமோ என்ற சிந்தனையில் சீடர்கள் மௌனத்தில் ஆழ்ந்திருந்தார்கள்.

எங்கும் அமைதி . எங்கும் அமைதி.

முன்வரிசையில் அமர்ந்திருந்த நந்தன் எழுந்து நின்றான்.

புத்தரின் கனிவுமிக்க பார்வை தன் உச்சி முதல் பாதம் வரைக்கும் உடலில் ஒரு திரவம் போல படர்வதை உணர்ந்த அவன் ஞான உணர்வில் சிலிர்பேறினான்.

“நந்தா” என்று புத்தர் மென்மையாக அழைத்த போது கனிவேறிய அவரது சொல்லால் தனது பெயர் ஒலிக்கப்படுவதை எண்ணி மனம் உருகினான்.

என்ன வேண்டும் என புத்தர் சிரித்துக் கொண்டே கேட்டபோது… நீங்கள்தான், நீங்கள் சுமந்திருக்கும் அமைதி தான்.. என்று அவனால் வெளிப்படையாக சொல்ல முடியவில்லை.

உள்ளுக்குள் ஏதோ ஒன்றை சுமந்து கொண்டு அவன் துடிப்பதை பார்த்த புத்தர்…

“கேட்க வந்ததை கேட்டு விடு . இல்லையேல் கேட்க வந்தது தேங்கி ஒரு நாள் அதில் நீயே முழ்கி விடுவாய்..” என்றார்.

ஐயனே.. எனக்குள் அலைமோதும் எண்ண அலைகள் பலவற்றை ஒன்று சேர்த்து ஒரே ஒரு கேள்வியாக தயாரித்து வைத்திருக்கிறேன்.

நான் கேட்க விரும்பும் கேள்வி இதுதான்.

உலகத்தின் மகத்தான வலி எது..??

நந்தா கேள்வியை கேட்டுவிட்டு புத்தரின் முகத்தை பார்த்தான்.

புத்தர் மீண்டும் மென்மையாக சிரித்தார். தன் முன்னே குழுமி இருந்த சீடர்களை பார்த்து .. “இதற்கு என்ன பதில் உங்களுக்கெல்லாம் தோன்றுகிறது சொல்லுங்கள்..” என்றார்.

தலைமைச் சீடர்களில் ஒருவரான அசிதர் எழுந்து.. “மரணத்தின் போது ஏற்படுகிற வலி” என்றார்.

இன்னொரு சீடர் எழுந்து “சகிக்க முடியாத தனிமை” என்றார்.

பூரணர் எழுந்து நின்று “பிரிவு” என்றார்.

இப்படி ஆளாளுக்கு மழைத்துளிகள் போல பதில்களால் அங்கே அவரவர் ஆன்ம அறிவினை நிரூபித்துக் கொண்டிருந்தனர்.

சில நிமிடங்களுக்கு பிறகு அனைவரும் பதில் அளித்த சூழலில் மீண்டும் மௌனம் அங்கே சூழ்ந்து கொண்டது.

புத்தர் மீண்டும் தியானத்திற்குள் போனார்.

சில நிமிடங்களுக்குப் பிறகு கண்விழித்தவர் அமைதியாக சொன்னார்.

“மிகவும் நேசித்தவரின் துரோகம்.”

ஆழ்கடலின் அமைதி சீடர்களை சூழ்ந்தது.

????

அவனைப்போல வேறு யாருண்டு…??

????

முதன் முதலாக நாம் தமிழர் கட்சியில் மாணவர் பாசறை உருவாக்கப்பட்டபோது அதன் தொடக்க கூட்டத்தில் தான் அந்த இளைஞனை நான் பார்த்தேன். மிக ஒல்லியான உடல்வாகு. யாரிடமும் முன்வந்து எதையும் கேட்காத கூச்ச உடற் மொழி. அவன் பெயரை அழைத்து மேடையில் ஏற்றிய போது தயங்கியவாறே சென்று பின் வரிசையில் நின்று கொண்ட அந்த நொடியில் என்னை போன்ற பலரது இதயத்தில் முன் வரிசையில் வந்து அமர்ந்து கொண்டவன் அவன். தம்பி என்று அழைத்தாலும் மனதால் எங்கள் எல்லோருக்கும் மகனாகிப் போனவன் அவன்.

திருத்துறைப்பூண்டி பகுதி என்கிறார்கள். நம்ம ஊர் பகுதி ஆயிற்றே.. ஆனால் நாம் இந்த தம்பியை எதிலும் பார்த்ததில்லையே என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டிருந்தபோது சென்னையில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு நேரடியாக அண்ணன் சீமானை சந்தித்து தன்னை முழு நேர அரசியலுக்கு ஒப்படைத்து கொண்டுவிட்டவர் என்றார்கள்.

கூட்டம் முடிந்த பிறகு அவனை அழைத்து பேசியபோது நெருங்கியே அவன் வரவில்லை.கூச்சமும் தயக்கமும் எதிலும் முன்னிற்காத தன்மை போன்றவை எல்லாம் அரசியல் பாத்திரத்திற்காக அவன் பொருத்திக்கொண்ட ஒப்பனைகள் அல்ல. அவன் இயல்பிலேயே அவ்வாறாகத்தான் இருந்தான். எங்களைப் போன்று சுற்றி இருந்தவர்களுக்கு மிகப்பெரிய சவாலே அவன் இயல்பிலேயே கொண்டிருந்த அந்த தயக்கப் பூட்டுகளை எந்த பேரன்பின் சாவி கொண்டு திறப்பது என்பதுதான்..

அண்ணன் சீமான் மூலம் சிறிது சிறிதாக படிக்க கற்றுக் கொண்டவன் மேடையில் ஏறி பேசத் தொடங்கிய பிறகு மேடைகள் தீப்பற்றி எரியத்தொடங்கின. சில மாதங்களுக்கு முன் எங்களுக்கெல்லாம் பின்வரிசை பேச்சாளராக இருந்த அவன் ஒரு சில மாதங்களில் எங்களை எல்லாம் கடந்து முன்னணி பேச்சாளராக நிமிர்ந்து நின்ற போது யாருக்கும் அவனைப் பார்த்து பொறாமையோ போட்டியோ ஏற்படவில்லை. காரணம் அப்பழுக்கற்ற அவனது உழைப்பு. சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு இல்லாத நேர்மையான அவனது வாழ்க்கை.

மேடை ஏறி அவன் பேசுகின்ற மொழியில் அதிரடியாய் வந்து விழுகிற நகைச்சுவை தெறிப்புகளில், அனல் பொழியும் ஆக்ரோஷ மொழியில் கூடியிருந்தோர் கைத்தட்டி ஆர்ப்பரிக்கும் போது அண்ணன் சீமானின் கண்கள் பெருமிதத்தால் மிளிரும். உண்மையில் அண்ணன் சீமான் தயாரித்த இன விடுதலைக்கான கருவி அவன்.

இடும்பாவனம் கார்த்திக்.

காவிரிச்செல்வன் மன்னார்குடி விக்னேஷ் சென்னையில் நடந்த பேரணியில் தீக்குளித்த போது அண்ணன் சீமானுக்கு பிறகு அவன் தேடியது தம்பி கார்த்தியை தான்.
நானும் தம்பி கார்த்தியும் தான் விக்னேஷ் உடலை அடையாளம் காட்ட சென்றவர்கள். அன்று இரவு முழுக்க தனியே உட்கார்ந்து அழுத தீர்த்தவாறே இருந்த அவனது கண்கள் அதன் பிறகு எதற்கும் அப்படி கலங்கியதில்லை.

அண்ணன் சீமான் பார்த்து பார்த்து உருவாக்கிய தம்பிகள் சாட்டை துரைமுருகனும் துருவன் செல்வமணியும் இடும்பாவனம் கார்த்திக்கும் முன்னணி பேச்சாளர்களாக உருவாகி வருவதற்கு அப்போதைய முன் கள பேச்சாளராக திகழ்ந்த புதுக்கோட்டை ஜெயசீலன் போன்றவர்களின் ஊக்கமும் ஒரு மிக முக்கிய காரணம். போட்டியும் பொறாமையும் மிகுந்த இந்த உலகத்தில் தம்பிகள் வளர்வதற்கு உகந்த நேசமிக்க ஆன்மாவை கொண்ட அபூர்வ மனிதர்கள் அவர்கள்.

குறிப்பாக தம்பி கார்த்தி மேடையில் பேசி விட்ட அடுத்த நொடியில் பார்வையாளர் பகுதியில் நின்று கொண்டு புதியதோர் தேசம் செய்வோம் இதழை விற்றுக் கொண்டிருப்பான். மாணவர் பாசறை காலத்திலேயே தீ என்ற இதழை வெளியிட்டு அவன் நடத்திக் கொண்டிருந்தான். பெருந்தலைகள் நிரம்பி இருந்த எங்களது இளைஞர் பாசறை சார்பாக ஒரு இதழ் கொண்டு வர வேண்டும் என விரும்பி கடைசி வரை முடியாமல் போனது என்பதெல்லாம் வேறு கதை.

தனிநபராக இருந்து கொண்டு ஒரு பத்திரிக்கை நடத்துவது என்பது மிகச் சாதாரணமான வேலை அல்ல. அவன் நடத்திய தீ இதழாக இருக்கட்டும் இப்போது நடத்திக் கொண்டிருக்கின்ற புதியதோர் தேசம் செய்வோம் என்கின்ற இதழாக இருக்கட்டும் எல்லாமே அவனது தனிமனித உழைப்பு தான். எல்லாம் உழைப்பை சிந்திஒரு செயலை செய்வதற்கு எது மூலக்காரணமாக இருக்க வேண்டுமென கேள்விகள் எழுவது இயல்புதான்.

காரணம் பெரிதாக இல்லை. அது ஒரு மனநிலை. ஊதியம் அங்கீகாரம் மதிப்பு உயர்நிலை என எவ்விதமான கோரிக்கையும் இல்லாத மனநிலை அது. தன்னைத் தானே தன் இனத்திற்காக அர்ப்பணித்துக் கொண்ட எண்ணற்ற மாவீரர்களின் தியாகத்தில் இருந்து, முத்துக்குமார் விக்னேஷ் ஆகியோர் தங்களை எரித்துக் கொண்ட தீயின் நாவிலிருந்து எடுத்துக்கொண்ட உச்சபட்ச வெப்ப மனநிலை.கனன்று கொண்டிருக்கும் அந்த நெருப்பில் இருந்து தான் தனக்கான அர்ப்பணிப்பு வாழ்வு ஒன்றை அவன் சமைத்துக் கொண்டிருக்கிறான்.

என் மனம் திறந்து அவனை என்னால் மிக அதிகமாக நேசிக்க மட்டும் அல்ல, என்னை விட பன்மடங்கு அனைத்திலும் உயர்ந்தவன் என வெளிப்படையாக ஒத்துக் கொள்ள முடியும். ஐபிஎல் வழக்கிற்காக அவன் குண்டர் தடுப்பு சட்டத்தில் ஆறு மாதங்களுக்கு மேலாக சிறை கொட்டடியில் அடைக்கப்பட்டபோது அவனுக்காக யாராவது உறவினர் வந்து வாதாட வேண்டும் என நிலை ஏற்பட்ட போது எனது தங்கை மீரா பாக்கியராசன், எனது அம்மா கலையரசி பலரும் முன் வந்து நாங்கள் எம் பிள்ளைக்காக வாதாடுகிறோம் எனக் கூறியபோது அப்பழுக்கற்ற அந்த எளியவன் நாம் தமிழர் என்கின்ற குடும்பத்தில் அடைந்திருக்கின்ற உயரத்தை யாராலும் வியக்காமல் இருக்க முடியாது.

எத்தனையோ நள்ளிரவுகளில் சுகாதாரம் அற்ற பேருந்து நிலையங்களில் இருக்கும் பெஞ்சுகளில் கொசுக்கடியில் படுத்து கிடந்து இரவு பகலாக அரசு பேருந்துகளில் அலைந்து பேச வரைபடத்தில் இல்லாத கிராமங்களில் கூட சிறு மேடையில் ஏறி பேசி நாம் தமிழர் என்கின்ற விதையை நாடெங்கும் விதைத்து வருகிற அவனைப் போன்றவர்கள் தான் இந்தக் கட்சியின் மூலதனம்.

பாபர் மசூதி இடிப்பை கண்டித்து பேசியதற்காக நேற்றைய தினம் கூட ஒரு வழக்கினை பெற்று அரசியல் சமூக வாழ்வில் தனக்கான பதக்கங்களை அவன் அடைந்து கொண்டே அலைந்து கொண்டிருக்கிறான். இத்தனை அர்ப்பணிப்புகளுக்கும் மத்தியில் தனக்கான எந்த அங்கீகாரத்தையும் தேடாமல், தான்மை என்பதே துளி கூட இல்லாமல் தன் அடையாளத்தை இந்த இனத்தின் மீட்சிக்காக இழக்கத் துணியும் என் தம்பி இடும்பாவனம் கார்த்திக் போன்றவர்கள் தான் எம் இனத்தின் பெருமை.

சிறுவயதில் என் மகனிடம் சித்தப்பா கார்த்தி போல அப்பழுக்கு இல்லாத கொண்ட கொள்கைக்கு எதையும் இழக்க துணிந்து நேர்மையாக நீ வாழ வேண்டும் என்று அடிக்கடி நான் சொல்வதுண்டு.

இன்றும் அதைத்தான் நினைக்கிறேன்.

என்றும் அதைத்தான் நினைப்பேன்.

சி.ஆர்.7 -தன்னிகரற்ற வீரர்.

கால்பந்து ஆட்டங்கள் பார்க்கத் தொடங்கிய காலம் தொட்டு என்னுடைய அணி அர்ஜென்டினா. முதலில் மாரடோனா. தற்காலங்களில் என்னுடைய கதாநாயகன் மெஸ்ஸி. ஆனாலும் போர்ச்சுகல் நாட்டின் ரொனால்டோ ஆகச்சிறந்த கால்பந்து வீரனாக உருவாகி வந்த காலகட்டங்களில் ஒரு மெஸ்ஸியின் ரசிகனாக ரொனால்டோவை வெறுக்க முடியாதது ஒன்றுதான் ரொனால்டோவின் ஆகப்பெரும் வசீகரம். ஏனெனில் அந்தத் திறமை வெறுக்க முடியாத, பொறாமை கொள்ள முடியாத உயரம் கொண்டது.

ஒரு பேட்டியில் மெஸ்ஸி உலகின் தலைசிறந்த வீரர்களை பற்றி கூறும் போது ரொனால்டோவின் பெயரை கூறாதது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்புவார்கள். அப்போது மெஸ்ஸி சிரித்துக்கொண்டே “நான்தான் அவர். என்னில் இருந்து அவரைப் பிரிக்க முடியாது.. எனவே தான் அவரை நான் தனியே சொல்லவில்லை..” என்று சொல்வார்.

அதுதான் ரொனால்டோ. சிஆர் 7 என்று அவர் டீசர்ட் அணிந்து மைதானத்தில் இறங்கும்போது ஒவ்வொரு முறையும் ஆகச் சிறந்த ஆட்டக்காரரான அவர் தன்னைத்தானே மிஞ்சி காட்டுவதில ஒரு மந்திரக்காரன்.

தன்னை நோக்கி வரும் பந்தை உயரமாக எழும்பி கோலாக மாற்ற அவர் எழும்பும் உயரம் உலகில் இதுவரை யாராலும் முறியடிக்கப்படாதது மட்டுமல்ல, ஒரு கவிதை போல அவ்வளவு வசீகரமானது.

இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் முடியும்போது உலகின் ஆகச்சிறந்த வீரர்களான நெய்மர் , மெஸ்ஸி, ரொனால்டோ போன்ற ஜாம்பவான்கள் ஓய்வு பெற்று இனி விளையாட மாட்டார்கள் என செய்திகள் வெளியான போதே கால்பந்து ரசிகர்கள் பலருக்கும் நாடு இனம் கடந்து மனம் வலிக்க தொடங்கியிருந்தது.

இன்றும் அப்படித்தான்.

உலகக் கோப்பையின் கால் இறுதி போட்டியான இன்று போர்ச்சுக்கல் ஆப்பிரிக்க நாடான மொராக்காவை எதிர்கொண்டார்கள். ஆட்டத்தின் முதல் பாதியில் ஏனோ முதன்மை வீரரான ரொனால்டோவை போர்ச்சுக்கலின் கோச் இறக்காமல் பெஞ்சில் அமர வைத்து இருந்தது பார்வையாளர்களின் கடுமையான விமர்சனமாக இருந்தது.

இந்த உலகப் பந்தய போட்டிகளில் உலகின் மிகச்சிறந்த அணிகளை வென்று வருகிற மொரோக்கா ஆட்டத்தின் முதல் பாதியிலேயே கோல் அடிக்க இதுவரை போர்ச்சுக்களால் அதற்கு பதிலடி கொடுக்க முடியவில்லை.

இறுதியில் முதல்முறையாக ஒரு ஆப்பிரிக்க நாடு உலகக் கோப்பையின் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது மனதிற்கு ஆறுதலாக இருந்தாலும், கால்பந்து போட்டிகளின் கதாநாயகன் 37 வயது நிரம்பிய ரொனால்டோ தன் கடைசி போட்டியில் அழுது கொண்டே களத்தை விட்டு வெளியேறும் போது ,

மெஸ்ஸியின் பரம ரசிகனான என் இளைய மகன் பகலவன் கலங்கி அழுது கொண்டிருந்தான்.

அதுதான் ஒரு சிறந்த விளையாட்டு வீரன் தன் வாழும் காலத்தில் பெறுகிற உயர்வான வெகுமதி.

போய் வாருங்கள் சிஆர் 7.

உங்கள் கால்கள் உலவாத கால்பந்து மைதானங்கள் மெஸ்ஸியின் ரசிகர்களால் கூட விரும்பப்படாதவை தான்.

ஏனெனில் நீங்கள் விளையாடும் காலத்தில்…ஒரு காலத்தை உருவாக்கினீர்கள்.

எப்போதும் மெஸ்ஸியின் ரசிகனாக இருந்து சொல்வேன்..உங்கள் காலத்தில் தன்னிகரற்ற வீரர் நீங்கள் தான்.

❤️❤️❤️

நிலாப் பொழுதுகளின் நிழற்படங்கள்.

“நள்ளிரவு 12 மணிக்கு எங்கிருந்தாலும் வா. நிலா பொழுதுகளில் நாம் இணைந்திருக்கும் பழைய புகைப்படங்களை ஒரு இளையராஜா பாடல் பின்னணியில் ஒலிக்க சேர்ந்து பார்ப்போம்..” என்று அழைத்தாள் அவள்.

“வேண்டாம்.

புகைப்படங்கள் ஆழ்கடல் போன்றவை.

நினைவின் சுழல் கொண்டவை.

கால இயந்திரம் போல நிகழ்ந்த அந்த கணத்திற்கே நம்மை இழுத்துச் சென்று நிகழ்காலத்து தகவமைப்புகளுக்கு குழப்பம் ஏற்படுத்துபவை.

மீளவே முடியாத

ஆழத்தின் இருள் கொண்டவை. எப்போதோ அறுக்கப்பட்ட இறுக்கிக் கட்டி இருந்த கயிற்றின் தடம் போன்றவை.

வேண்டாம்..”

என அச்சத்துடன் மறுத்தேன்.

“இல்லை இல்லை..

தீரா மோகத்தின் வெப்பம் வீசும் விழிமயக்க புனைவு கதைகள்

அடங்கிய வசீகர புத்தகங்கள் நிறைய அடுக்கப்பட்டிருக்கும் புத்தக அலமாரிகளுக்கு பின்னால்

கனவின் கதவு

ஒன்று இருப்பது போல ..

ஒவ்வொரு புகைப்படத்திற்குப் பின்னாலும் ஒரு கனவின் மாயக்கதவு ஒன்று மறைந்து இருக்கிறது.

அதற்குள் சென்றால் ஆழ்மனதில் உறுத்தும் நம் ஆறாக் காயங்களை, சுகந்த நினைவின்

காற்று ஊதி ஊதியே குணப்படுத்தும் காதலின் தேவதை ஒருவள் காத்துக் கொண்டிருக்கிறாள்.

அவளைப் பார்த்துவிட்டு வரலாம் வா..” என்று அழைத்தாள்.

எனக்கு முன்னால் நட்சத்திரங்களை விண்ணை நோக்கி வீசிக்கொண்டிருக்கும் ஒன்றோடு ஒன்று பின்னிய நிறைவேறா கனவுகளின் கனலேறிய விசித்திர கிளைகள் கொண்ட ஒரு கொன்றை மரம் ஒன்று அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.

பார்க்கவே அச்சம் ‌. மேலும் அசைந்து கொண்டிருக்கும் கிளைகள் என்னை இழுத்து அந்தக் கனல் மரத்திற்குள் வைத்து கழுவேற்றிக் கொல்லுமோ என்கிற தீவிர பய உணர்ச்சி.

நடுங்கியவாறே என்னை நோக்கி மிதந்து வந்த அந்த அலைபேசி இணைப்பை துண்டித்தேன்..

….

விழிகளை மூடி அமர்ந்திருந்த அந்த கணத்தில் தான்.. நொடி பிசகிய திடுக்கிடலில் விழித்து பார்த்த போது..

நானாக உருவாக்கிக் கொண்ட காரணங்கள் துருவேறி இறுகிக் கிடக்கும் அந்தக் காலப் பூட்டு

அதுவாகத் திறந்து, என் முன்

என் வாழ்வில் இனி எப்போதும்

வாழ முடியாத, வசந்த காலத்தின் வண்ணப் புகைப்படங்கள்

கண்ணீர் கோர்த்திருக்கும் என் விழிகளுக்கு முன்னால் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தன.

❤️

Page 1 of 6

Powered by WordPress & Theme by Anders Norén