பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: சுயம் Page 2 of 6

எப்போதும் என் அம்மா.

❤️

இன்று கும்பகோணத்தில் மின் கட்டண உயர்வை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் என் அம்மா கலந்து கொண்டதை பற்றி என் தம்பி மருத்துவர் மு.முகம்மது சர்வத்கான் நெகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்தான்.

இந்த காட்சி எனக்கு புதிதல்ல. சிறுவயதில் இருந்து எனக்கு தோளுக்கு தோளாக மட்டுமல்ல , உயிராக இருப்பது எனது அம்மா தான்.

நோயால் பாதிக்கப்பட்ட என் பால்ய காலத்தில் என் அம்மா மட்டும்தான் எனது பால்யகால தோழி. காலில் கட்டு போட்டு அமர்ந்திருக்கும் என்னோடு என் அம்மா தான் கேரம்போர்டு விளையாடுவாள். டிரேடு என்று சொல்லக்கூடிய ஒரு விளையாட்டு. பரமபதம் சதுரங்கம் அமர்ந்து விளையாடக்கூடிய எல்லா விளையாட்டுகளிலும் அம்மா தான் அமர்ந்திருப்பாள். நான் கற்பனை காண்பது எதையாவது படித்து பரவசம் அடைவது என எனது எல்லா உணர்ச்சிகளையும் அம்மாவிடம் தான் கொட்டுவேன்.

அம்மாவிற்கு 16 வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது. 17 வது வயதில் நான் பிறந்து விட்டேன். 17 வயதில் நோயுற்ற ஒரு குழந்தையை தூக்கிக் கொண்டு வீதி வீதியாக மருத்துவமனைகளுக்கு அலைந்த இயல்பு வாழ்க்கையை மீறிய அவலமும், அலைகழிப்பும் கொண்ட வாழ்க்கையை அடைந்த ஒரு தாய் எனது அம்மா. இப்போதுள்ள கருத்தடை போன்ற அறிவியல் வசதிகள் பெரிய அளவில் இல்லாத காலகட்டத்தில் நோயுற்ற ஒரு குழந்தை பிறந்து விட்டானே என்ற ஒரே காரணத்திற்காக என் அம்மா அடுத்த குழந்தையை கூட பெற்றுக் கொள்ளவில்லை.

ஒரு மனிதனாக அது போன்ற தருணங்களை என்னால் இந்த வயதில் புரிந்து கொண்டு கண்கலங்க முடிகிறது.

தனிமை தரும் வலி என்னை வதைத்து விடக்கூடாது என்பதற்காக எப்போதும்‌‌ நான் சாய்வதற்கான தோள்களை அம்மா தயாராகத்தான் வைத்திருக்கிறாள். இன்றளவும் கூட அப்படித்தான்.

இன்றும் நான் காலையில் எழுந்து தேடும் முதல் முகம் என் அம்மா உடையது தான். என்னை மட்டுமல்ல என் பிள்ளைகளையும் அவள் தான் வளர்த்து ஆளாக்குகிறாள்‌ . என் மகன்களுக்கு அவர்களது தாய் தந்தையரை விட தாத்தா ஆத்தா தான் முதன்மையானவர்கள் என்பதில் எனக்கு எப்போதுமே பெருமிதம் தான்.

நான் படுத்து “பறக்கும் குதிரை” கதை கேட்ட அதே மடியில் தான் என் மகன்களும் படுத்து அதே “பறக்கும் குதிரை” கதை கேட்டார்கள்.

இன்றளவும் எனது சிறு அசைவுக்கு கூட அம்மாவிடம் ஏற்படும் மாற்றம் மிக வியப்பானது. அதை பதைபதைப்பு என்று சொல்வதா, தன் தயாராவதற்கான ஆயத்தம் என்று சொல்வதா என்றெல்லாம் எனக்கே குழப்பங்கள் உண்டு.

சமீபத்தில் தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நான் சற்றே தடுமாறி கீழே விழுந்து விட்டேன். இது போன்ற நூற்றுக்கணக்கான சூழ்நிலைகளை அம்மா தன் வாழ்வில் சந்தித்திருந்தாலும், இந்த முறை ஏனோ கொஞ்சம் தளர்ந்து விட்டாள். கொஞ்சம் காலில் அடிபட்டு இருந்தாலும் அம்மாவிற்காக அடுத்த நாளே நான் எழுந்து நடக்கத் தொடங்கி விட்டாலும் இந்த முறை அம்மாவை சமாதானப்படுத்துவது கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது.

கீழே விழுந்து கொஞ்சம் அடிபட்டு இருந்த என்னை பார்க்க

பெருந்தமிழர் கிருஷ்ணகுமாா் வந்திருந்த போது அம்மா உடைந்து அழ, அம்மாவிற்கு எந்தவித சமாதானமும் சொல்லாமல் ஐயா அவர்கள் அமைதியாக தலையை குனிந்தவாறு அமர்ந்திருந்தார்கள்.

பக்கத்தில் அமர்ந்திருந்த வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளர் சதீஷ் அம்மாவை சமாதானப்படுத்துங்கள் ஐயா எனக் கேட்டுக் கொண்ட பிறகும் கூட ஐயா அவர்கள் எதுவும் பேசாமல் தலையை குனிந்தவாறு அமைதியாக அமர்ந்திருந்தார்கள்.

அந்த நிலை எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அம்மாவிற்கு ஏதோ ஐயா ஆறுதல் சொல்வார்கள், அம்மா சமாதானம் அடைவாள் என நினைத்த எனக்கு ஐயாவின் அமைதி ஆச்சரியமாக இருந்தது.

கொஞ்ச நேரம் கழித்து கலங்கிய கண்களோடு ஐயா நிமிர்ந்து பார்த்தார். ஏன் ஐயா எதுவும் சொல்ல மறுக்கிறீர்கள் எனக் கேட்டதற்கு… “அந்தத் தாய்மை கொண்ட வலிக்கு ஆறுதல் கூற என்னிடத்தில் மொழி இல்லை, அப்படி மீறி கூறினாலும் அந்த மொழி பற்றாக்குறையாக தான் இருக்கும், எனவே அதுவே அழுது அதுவே ஓயட்டும்..” எனச் சொல்லிவிட்டு கண்களை துடைத்தவாறே சென்றார். தமிழ் மொழி மட்டுமல்ல உணர்வின் மொழியும் அறிந்த பெருமகன் அவர்.

அந்த நொடியில் நான் முடிவெடுத்துக் கொண்டேன். அம்மாவிற்காவது நான் நிறைய வேலைகளை என் சக்திக்கு அப்பாற்பட்ட பணிகளை எடுத்துக்கொண்டு செய்து என்னை இயல்பானவனாக காட்டிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்து சமீபத்தில் எங்கள் இல்லத்தில் ஒரு திருமணமும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

இன்றும் அப்படித்தான். நான் போராட்டத்திற்கு கிளம்பினேன். போராட்டத்திற்கு நிறைய ஆட்களை அழைப்பதற்காக பேசிக் கொண்டே இருந்தேன். அம்மா உடனே எதுவுமே சொல்லாமல் நானும் அப்பாவும் வருகிறோம் என்று என் காரில் ஏறிக் கொண்டார்கள்.

அவர்களைப் பொறுத்தவரையில் அவர்களது மகன் எதன் பொருட்டும் சங்கடப்பட்டு விடக்கூடாது. குறிப்பாக எனது நாம் தமிழர் முயற்சிகளில் அனைத்திலும் என் தாய் தந்தையரின் பங்கு உண்டு. அவர்களைப் பொறுத்த வரையில் அண்ணன் சீமான் இன்னொரு மகன்.

மூத்த மகன் எடுக்கின்ற முயற்சிகளுக்கு இளைய மகன் நிற்க வேண்டும் என்கிற தீவிரம் அவர்களுக்கு எப்போதுமே உண்டு.

போராட்டத்தில் நின்று நான் பேசி முடிக்கும் வரை அம்மா என் பக்கத்திலேயே நின்று கொண்டிருந்த தன் மிக முக்கியமான காரணம் தஞ்சை சாலையில் தடுமாறி விழுந்துவிட்ட தன் மகன் கும்பகோணத்தில் விழாமல் நின்று பேசி விடுவான் என்ற நம்பிக்கை.

அம்மா நம்பிக்கை என்று பலிக்காமல் இருந்திருக்கிறது..??

நானும் பேசிவிட்டு இருக்கையில் வந்து அமர்ந்தேன்.

அம்மா நான் நன்றாக பேசினேனா என்று என் கேள்விக்கு..

கலங்கிய விழிகளோடு என் அம்மா அளித்த பதில் ..

“நல்லா ஆயிட்ட.”

❤️

அம்மாவைப் போன்ற ஒரு தேவதை என் பக்கத்தில் இருக்கும் போது எனக்கு என்னதான் நேர்ந்து விடும்..??

“சேயோன்” வெல்வான்.

❤️

அவனை வாழ்த்த சென்று வாழ்த்தாக தெரிவித்தது ஒன்றே ஒன்றுதான்…

“இதையாவது வணிகமாக மட்டும் செய். “

….

உண்மையில் அவன் பெற்றிருக்கின்ற பலவற்றை வணிகமாக்க மறுத்ததை நானே பலமுறை எதிர்த்து இருக்கிறேன். வேதியியலில் முனைவர் பட்டம் பெற்று வெளிநாட்டில் லட்சக்கணக்கான ரூபாய் வருமானம் பெரும் வாய்ப்பினை, அறிவை வணிகமாக்க மறுத்து, வெளிநாட்டு வாழ்வு, பொருளாதார உயர்வு என பலவற்றை இழந்து விட்டு, சொந்த ஊரில் கடை திறக்கும் அவனைப் பார்த்தால் ஒரே நேரத்தில் கோபம் கொள்ளவும், ஆழமாக நேசிக்கவும் தோன்றுகிறது.

நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணியின் மாநில பொறுப்பாளர்களில் ஒருவரான தம்பி முனைவர் செந்தில்நாதன் எனக்கு 2007 2008 காலங்களிலேயே பழக்கம். ஆர்குட் பக்கங்களில் அப்போது அவர் மதிமுக ஆதரவாளர். நானோ திமுகவின் போர்வாள். எனவே அப்போதே அவரது நண்பராக இருந்த சக்திவேல் மற்றும் செந்தில்நாதனோடு எனக்கு கடுமையான மோதல் (?) உண்டு.

அதன் பிறகு தமிழ்த் தேசிய தளத்தில் அண்ணன் வழக்கறிஞர் நல்லதுரை மூலமாக தம்பியாக செந்தில்நாதன் மாறுகிறான். எதை எடுத்தாலும் இப்போது கடை தொடங்கி இருக்கும் நிகழ்வு வரை ஆர்வத்தின் உச்சத்தோடு அணுகும் அவனது மனோபாவம் ஆச்சரியகரமானது. குறிப்பாக தமிழ்த் தேசிய தளத்தில் அவனது பங்களிப்பு மகத்தானது. தொடர்ச்சியான பண்பாட்டு மீட்சிப் போராட்டங்களில் உச்சங்களை தொட்டு வரும் வீரத்தமிழர் முன்னணி யின் ஒவ்வொரு அசைவிலும் அவனது உழைப்பின் உதிரம் நிறைந்திருக்கிறது.இன்று நாம் தமிழர் அடைந்திருக்கும் பல எல்லைகளை அன்றே தொட முயற்சித்து எங்கள் பலரின் எதிர்ப்பினை அவன் அடிக்கடி சம்பாதிப்பான். ஆனாலும் உற்சாகம் குறைந்ததில்லை.

பல இடங்களில் அவனோடு நான் முரண்பட்டு இருக்கிறேன். முடிந்த அளவு மோதி இருக்கிறேன்.‌ அடுத்த நொடியே சமாதானமாகி இன்னொரு வேலையில் இருவரும் இணைந்திருப்போம். முரண்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டு கல்விப் புலத்தில் அவன் மேதமையைக் கண்டு நான் வியந்திருக்கிறேன். செங்கிப்பட்டிக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு சிறு கிராமத்தில் இருந்து புறப்பட்ட ஒரு ஏழை குடும்பத்து இளைஞன் தன் மேதமையால் ஜெர்மனி பிரான்ஸ் இத்தாலி நோபல் கமிட்டி என்றெல்லாம் உச்சத்தை தொட்டு விட்டு மீண்டும் செங்கிப்பட்டிக்கு திரும்பி வந்திருப்பது ஒரு திரைப்பட கதைக்கே உரிய சுவாரசியம் என்றாலும், அதற்குப் பின்னால் கொள்கை நேசிப்பு சார்ந்த, பிடித்த வேலையை செய்ய எண்ணி, பிடித்த பிடிவாதத்தால், ரத்தமாய் துயரம் கவிழ்ந்த ஒரு அசலான வாழ்க்கை இருக்கிறது.

ஆனாலும் அவன் ஜீவிதம் யார் முரண்பட்டாலும் அவனளவில் மிக நேர்மையானது. அவன் வாழ்வில் இருக்கும் மிகப்பெரிய உன்னதமே அதுதான். அதற்காக அவன் இழந்ததெல்லாம் மிக மிக அதிகம் என்றாலும் அதை துளித் துளியாய் ரசித்து விரும்பி இழந்திருக்கிறான்.

எத்தனையோ முயற்சிகளை சலிப்பில்லாமல் சங்கடமில்லாமல் தொடர்ந்து செய்ய முடிகிற அவனது ஆன்ம பலம் , எப்போதும் எல்லாவற்றிலும் இருந்து விலகிக் கொள்ள இடம் தேடும் எனது உளவியலுக்கு நேர் எதிரானது என்றாலும், நான் கற்றுக்கொள்ள

விரும்புவது.

இப்போதும் “சேயோன்”என்ற முயற்சியோடு நம் முன்னால் தம்பி செந்தில்நாதன் நிற்கிறான். தவிர்க்கவே முடியாத நம்பிக்கை கண்களோடு அவனை இன்று கடைவாயிலில் பார்த்த போது வாழ்கின்ற போராட்டத்திற்கான ஆழமான வேட்கையை வரும் எல்லோருக்கும் வழங்குகிற கருவியாக அவன் மாறி இருந்தான்.

பல இடங்களில் கிடைக்காத நல்ல புத்தகங்களை சேகரித்து வைத்திருக்கிறான். உடலுக்கும் மனதிற்கும் எப்போதும் கெடுதல் செய்யாத இயற்கை உணவு பொருட்களை எங்கெங்கோ அலைந்து திரிந்து வாங்கி வைத்திருக்கிறான். ஒவ்வொன்றிலும் சமூக நலம் சார்ந்து சிந்தித்து இருக்கும் அவனுக்காகத்தான் நான் இந்த பத்தியின் மூன்றாவது வரியில் சொன்ன அறிவுரை.

“இதையாவது வணிகமாக செய்..”

சமூக நலமும் வணிக வெற்றியும் முரண்பாட்டு புள்ளிகள் என்பதை அவனது வெற்றி தான் மாற்றி அமைக்க வேண்டும்.

…..

கடை திறப்பு விழாவிற்காக குழந்தைகளோடு குடும்பத்தோடு அவன் எங்கள் எல்லோரையும் வரவேற்று நின்று கொண்டிருந்த காட்சி நோபல் பரிசு கமிட்டியில் விவாதித்து உலகப் புகழ் அடைந்தவர்களோடு, ஒரே தகுதி இருக்கையில் அமர்ந்து உச்சம் தொட்டவனுக்கானது அல்ல என்றாலும், இந்த வாழ்வினை அசலாக வாழ விரும்பும் தமிழ்த்தேசியப் பற்றாளனுக்கானது என்ற வகையில் அவன் உறுதியாக வென்றாக வேண்டும் என நான் உளமார விரும்புகிறேன்.

ஏனெனில் அவனது வெற்றி என்பது இந்த களத்தில் நிற்கின்ற எண்ணற்ற இளைய புரட்சியாளர்களுக்கான வெற்றியாக கருதப்படும்.

வெளிச்சமாய் அவன் மாறட்டும்.

உள்ளம் நெகிழ அணைத்து வாழ்த்துகிறேன்.

அவசியம் அனைவரும் செல்லுங்கள்.

அவனை வாழ்த்துங்கள்.

சேயோன் வெல்வான்.

சேயோன் அங்காடி, கந்தர்வகோட்டை சாலை, செங்கிப்பட்டி.

தொடர்புக்கு..9442248351.

அண்ணன் சீமானுக்கு..

என் அண்ணனுக்கு…எனக்கு அந்த நாள் இன்னும் நினைவில் இருக்கிறது. நம் உயிர் தலைவர் அவர்களின் உடல் கிடைத்து விட்டதாக கூறி சிங்களன் செய்தி வெளியிட்டு மகிழ்ந்த நாள். அந்த செய்தி கிடைத்த போது நான் ஒரு முச்சந்தியில் நின்று கொண்டிருந்தேன். எந்த திசையும் தெரியாமல்.நான் மட்டுமல்ல. என்னைப் போன்ற இலட்சக்கணக்கான இளைஞர்கள் திசையற்றுப்போனதருணம் அது. எல்லா ஊர்களிலும் ஈழ விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்த எண்ணற்ற இளைஞர்கள் கண்கலங்கி , ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தப் போதும் கூட தலைகுனிந்து மௌனமாக கடந்த பொழுதுகள் அவை.

திசையழிந்தஇருள் வெளியில் நின்றுகொண்டிருந்த இனத்திற்கு பற்றிக்கொள்ள ஒரு நம்பிக்கை தேவைப்பட்டது. அவநம்பிக்கை மிகுந்த எங்களது விழிகளில் ஒளி மீண்டும் பிறக்க ஒரு பகலவன் தேவைப்பட்டான்.அப்போதுதான் நாங்கள் உங்களை தேடினோம். அப்போது நீங்களும் எங்களுக்கு கிடைக்கவில்லை.இரண்டு மாதம் கழித்து நீங்கள் என்னை அழைத்தீர்கள் அண்ணா.நான் மறுக்கவே முடியாத ஒரு அழைப்பு அது. அந்த நொடியிலிருந்து அக்குரலின் எந்த ஒரு அழைப்பிலிருந்தும் எக்காலத்திலும் நான் விலகியதில்லை.அறுத்தெறிவோம் வாரீர் என நீங்கள் அழைத்த போதுதான் குனிந்த எங்களது தலைகள் நிமிர்ந்தன. நாங்கள் பற்றிக் கொள்வதற்கு நம்பிக்கை மிகுந்த ஒளி உமிழும் ஒரு பற்றுக்கோடு கிடைத்துவிட்டது.

ஆம். எம் இருட் வாழ்வின் பகலவன் நீங்கள்தான்.ஆம் அண்ணா. நீங்கள் மட்டும் தான் எனது ஒரே நம்பிக்கை. எனக்கு மட்டுமல்ல என்னை போல பல லட்சக்கணக்கில் இருக்கும் ஊருக்கு ஊர் நீங்கள் அலைந்து திரிந்து அரும்பாடுபட்டு வேர்வை சிந்தி உருவாக்கி இருக்கும் உங்களைப் போன்றவர்களுக்கு நீங்கள் மட்டும்தான் ஒரே நம்பிக்கை.குறிப்பாக நான் நம்பிக்கை கொள்வது உங்களோடு மட்டும்தான்.இன்றளவும் நான் தட்டுத்தடுமாறி நடக்கும்போது கீழே விழுந்து விடுவேனோ என நினைக்கும் அந்த ஒரு நொடியில் உங்களது குரலோ அல்லது உங்களது முகமோ எனக்கு நினைவுக்கு வந்து நான் நிமிருவதற்கான‌ வலு எனக்கு பிறக்கிறது.

தனிப்பட்ட என் வாழ்விலும் , சமூக வாழ்விலும் எனக்கு எல்லாமே நீங்கள் தான். எனது ஆசிரியர், எனது அண்ணன், வழி தடுமாறும் நேரங்களில் வழியாகி கிடைக்கும் எனது விழி என எல்லாமுமே எனக்கு நீங்கள் தான். உங்களுக்கு எதுவும் ஆகாது அண்ணா. உங்களை மாவீரர் தெய்வங்கள் எப்போதும் பாதுகாப்பார்கள் என்பதை நான் அறிவேன். இந்த இனம் வாழ இந்த மொழி செழிக்க நீங்கள் காலத்தினால் உருவாக்கப்பட்ட மகத்தான கருவி அண்ணா.அந்தப் புனித மிக்க காலக் கருவியின் கடமை முடியாமல் எதுவும் உங்களுக்கு நடக்காது அண்ணா.

இன்று ஒரு நொடி நீங்கள் மயங்கிய அந்தத் தருணத்தில் என்னைப்போன்ற எத்தனையோ பேர் இறந்து பிறந்தோம் அண்ணா.உங்களை எவ்வளவு நேசிக்கிறோம் என்பதை கலங்கிக்கொண்டே எங்கள் விழிகள் எங்களுக்கே இன்றைய நாளில் உணர்த்தின.வலிமிகுந்த இந்த நாளில் நாங்கள் வெற்றிகரமாக சோழ மண்டல நிர்வாகிகளின் கலந்தாய்வு கூட்டத்தையும் நடத்தினோம் அண்ணா. வழக்கத்துக்கு மாறாக பெரும் கூட்டம் கூடியது. ஆனால் எல்லோரும் வலியால் அமைதியாக இருந்தார்கள். ஒருவருக்கு ஒருவர் நீங்கள் நலம் என்ற செய்தியை நம்பிக்கையோடு பகிர்ந்து கொண்டார்கள்.உங்களை உயிராக நேசிப்பவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்று கூடி உங்களுக்குப் பிடித்தமான கட்சி வேலையை உச்சபட்ச கவனத்தோடு செய்து கொண்டிருந்தோம்.

அதுதான் உங்களுக்கு நாங்கள் செய்கிற நேர்மையான பேரன்பின் பரிசு என்பதை நான் அறிவேன்.

விரைவில் தேறி வாருங்கள் அண்ணா.

இந்த இனத்தை, இந்த நிலத்தை தேற்ற வாருங்கள்.

உங்கள் தம்பி.

மணி செந்தில்.

( ஏப் 2-2022 அண்ணன் சீமான் அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் உடல் நலிவுற்றப் பொழுதில்..)

என் அன்பு மகன் சிபிக்கு..

19.03.2022 இரவு 12.01.

எனது அன்பு மகன் சிபிக்கு..

துளித்துளியாய் நகரும் இந்த இரவில், கண்கள் முழுக்க நெகிழ்ச்சியோடு, உள்ளம் முழுக்க பேரன்போடு உனக்காக எழுதுகிறேன்.முதலில் உன்னை உச்சிமோர்ந்து கண் கலங்க முத்தமிடுகிறேன்.கலீல் ஜிப்ரான் சொல்வதுபோல நீ என்னில் இருந்து வந்தவன் தான். ஆனால் நீ நான் அல்ல. என் கனவுகளை உன் மீது சுமத்தி நான் வளர்க்கும் ஒட்டகமாய் உன்னை திரிய வைக்க நான் எப்போதும் விரும்பியதில்லை. உனது சுதந்திரத்தையும், உனது தேர்வுகளையும் நான் பெரிதும் மதிக்கிறேன். அவற்றையும் எனக்கானதாய் கருதி நான் விரும்ப கற்றுக் கொள்கிறேன்.இவ்வளவும் நான் உன் மீது வைத்திருக்கிற பேரன்பினால் மட்டும் விளைந்தது அல்ல. மாறாக அப்பழுக்கற்ற நம்பிக்கையினால்.ஆம். நான் மட்டுமல்ல. இந்த கலையகத்தில் இருக்கும் ஒவ்வொரு துரும்பும் உன்னை நம்புகிறது. உனது புன்னகைக்காக ஏங்குகிறது.

18 வருடங்களுக்கு முந்தைய ஒரு மாலை நேரத்தில் அது வரை எதுவுமே அற்ற என் வாழ்க்கையில், ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் அள்ளிக்கொண்டு நீ வந்தாய் ‌.அந்த நொடி இன்னும் என் விழிகளுக்குள்ளாக பசுமையாக இருக்கிறது. உனது பிஞ்சு கால்களின் மென்மையை இப்பொழுதும் எனது உள்ளங்கை உணருகிறது.எந்த நொடியிலும் நீ கலங்கி விடக்கூடாது என்பதை என் வாழ்க்கையின் நோக்கமாக அன்றைய நாளில் தான் நான் மாற்றிக் கொண்டேன்.நான் அடைந்த எந்த இருண்மையும் உன்னைத் தொட்டு விடக்கூடாது என்பதற்காக எப்பொழுதும் உனக்காக துடிக்கும் என் ஆன்மா உன் மீது அன்பின் நிழல் வேய்ந்திருக்கிறது.நீ நடக்கும் போதும், ஓடும் போதும், மண்ணிலிருந்து விண்ணை நோக்கி பாய்ந்து தாவும் போதும் நானே நடப்பதாக ஓடுவதாக பறப்பதாக உணர்ந்தேன். எனக்கு இந்த உலகம் எதை எதை மறுத்ததோ , அவை அனைத்தையும் உன் மூலம் நான் அடைந்து விட்டேன். அதில் நான் இந்த உலகையே வென்று விட்டேன்.

❤️

தாத்தா ஆத்தா அம்மா தம்பி என்று ஒரு பாதுகாப்பான வேலிக்குள் ஒரு தோட்டத்து மல்லிகைச் செடி போல இதுவரை நீ இருந்து விட்டாய்.அதைத் தாண்டிய ஒரு உலகம் உன்னை இந்த நொடியில் கையசைத்து அழைக்கிறது. நீ அங்கு போய் தான் ஆக வேண்டும். ஒவ்வொரு நொடியும்விரிவடைந்துகொண்டே போகின்ற அந்த உலகம் இதுவரை வாழ்ந்த உன் வீடு போல எளிமையும் பாதுகாப்பும், முறைமையும் கொண்டது அல்ல.எல்லா திசைகளிலும் திருப்பங்களை கொண்ட அந்த உலகில் அலைந்து திரிந்து உனக்கு நீயே ஆசிரியனாய் அனுபவங்கள் வாயிலாக கற்று கொள்ள இதோ ஒரு வாசல் கதவு திறக்கிறது.ஒரு சிட்டுக்குருவியை போல நீ பறந்துப் போக ஒரு பெரிய வானம் காத்திருக்கிறது.

ஒரு வெண்புறா போல அகத்தூய்மை கொண்ட நீ அப்படியே இருந்து விடாதே.கழுகைப் போல பார்வையும், வல்லூறைப் போல வலிமையும் உனக்குத் தேவை.இனி நிறைய பயணப்படு. தனியே ஊர் சுற்று. தினந்தோறும் உடற்பயிற்சி செய். மிக சாதாரண எளிய மக்களோடு மிக எளிய வாழ்க்கை ஒன்றை வாழ பழகிக் கொள். கிடைத்தவற்றை, கிடைத்த நேரத்தில் சாப்பிட்டு செரித்துக்கொள்ள உறுதியான வயிறு ஒன்றினை பயிற்சியின் மூலம் கண்டடை. உடலை,மனதை கெடுக்கும் எதனையும் தீண்டாதே.எல்லோருக்கும் உதவு. இரக்கப்படு. நீதிக்காக உரத்துக் குரல் கொடு. அநீதியை ஒருபோதும் சகித்துக் கொள்ளாதே.புத்தகங்களோடு வாழப் பழகிக் கொள்.மற்றபடி இந்த வாழ்க்கை உன்னுடையது. உறுதியோடு நம்பிக்கையோடு வசீகரமான பயணம் போல இந்த வாழ்க்கையை வாழ்ந்து அனுபவி.‌ கொண்டாட்டங்களின் ஊடாக சக மனிதர்களை நேசி.இப்படித்தான் நீ இருக்க வேண்டும் என்பதற்கான சட்டக விதிகள் இவைகள் அல்ல. உனது பயணம் தங்கு தடையில்லாமல் வெற்றிகரமாக அமைய ஏற்கனவே பயணப்பட்ட ஒருவனின் அனுபவக் குறிப்புகள். முள் பட்ட கால்களின் முன் தீர்ப்புகள்.

உன்னை மகிழ்ச்சியோடு இறுக்க கட்டிப் பிடித்துக் கொள்கிறேன். மிகச்சிறந்த தோழனாய் இந்த நொடியில் உன்னை நான் உணருகிறேன். நமது பல ரசனைகள் ஒன்றாகவே அமைந்திருப்பது கண்டு நான் ஒருபோதும் வியந்ததில்லை ‌. உனது நிழலாக நானிருக்கிறேன் என்பதும், எனது நகலாக நீ இருக்கிறாய் என்பதும் நாம் அறிந்தவை தானே.மற்றபடி 17 முடிந்து 18 யை தொட்டுவிட்டாய். இனி புதிய உலகம். புதிய வாழ்க்கை. புதிய அனுபவங்கள்.சென்றுவிட்டு, வென்று விட்டு, எப்பொழுது ஆனாலும் வீட்டுக்கு வந்துவிடு‌.பரவசமாய் உனது வெற்றிகளை கேட்க, பார்க்க நாங்கள் எல்லோரும் காத்திருக்கிறோம்.அதோ தூரத்தில் கைதட்டல் ஓசை கேட்கிறது.

சென்று வா.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சிபி.

Missed call..

❤️

❤️

அந்தப் பாடல் ஒரு கருணை என்றாய். மழை போல. இளவெயில் போல.‌ எப்போதாவது உணரத்தக்க மனநிலையில் ‌ காலத்துளியின் நழுவத் துடிக்கும் ஒரு இழையில் அனிச்சையாக சிக்கிக்கொண்ட அபூர்வம் போல அந்தப்பாடல் ஒரு கருணை என விழிகள் மூடி மெய்மறந்து நீ சொல்லும் அந்தக் கணத்தில்…

நிச்சயமாக நீதான் அந்தக் கருணை என எனக்கு சொல்லத் தோன்றியது.

❤️

இப்போதும் எங்கேயாவது என்னையும் மீறி கேட்டு விடுகிற அந்த பாடல் விரைந்து செல்கிற நதி
குளிர்கால பனியால் கனத்து விடுவதுபோல‌ கனத்து விடுகிறது.

அந்தப் பாடல் ஒரு திடப்பொருள் போல உறைந்து விடுகிறது.

எல்லாவற்றையும் தாண்டி விலகி ஓடுகிற மணி நேர நொடிகளை இறுக்கி கட்டி அந்தப் பாடல் ஒரு இடத்தில் நிறுத்தி வைத்து விடுகிறது.

❤️

எங்கிருந்தோ கிடைத்த அந்தப் பாடலின் வசீகரமான துண்டு ஒன்றினை என் அலைபேசியின்
அழைப்பிசையாக பொருத்திய போது, யாரோ ஒருவர் அழைக்கும் போதெல்லாம் நீயே அழைப்பதாக எனக்குத் தோன்றியது.

ஒரு கட்டத்தில் நீ தான் அந்தப்பாடல்
என உணரத் தொடங்கிய போது
நானே வெவ்வேறு அலைபேசிகளின் மூலமாக என்னை அழைத்துக் கொண்டதும் நடந்தது.

இறுதியாக நீயே ஒரு பின்னிரவில் என்னை அழைத்தாய்.

உலகமே தன் இமைகளை மூடிக்கிடக்கும் அந்த சலனமற்ற
நள்ளிரவின் திறக்கப்படாத கதவுகளை அந்த அழைப்பிசை
திறந்ததாக நான் உணரத் தொடங்கினேன்.

காலதேச தூரம் கடந்து காற்றின்
சிறகை பிடித்துக் கொண்டு
நீயே அருகில் வந்து விட்டதாய் ஓர் உணர்வு.

அழைப்பினை எடுக்க துடிக்கிற
எனது விரல்களுக்கும்..
அழைப்பிசை தந்த மெய் மறத்தல்
உணர்வுகளுக்கும் இடையே..

நேரம் வழுவி அழைப்பு துண்டானது.

மீண்டும் அழைத்தாய்.

மீண்டும் அதே நிலை.

❤️

எதற்காக அழைத்து இருப்பாய் என எண்ணுவதற்கு முன்பாக அழைத்திருக்கிறாய் என்ற நிறைவில் நான் நிலைத்திருக்க..

“Missed call’ என்று உனது பெயர் மின்னிக் கொண்டிருந்தது.

❤️

அப்பாவின் பிறந்தநாளில்..

அப்பாவுக்கு இன்று 75 ஆவது பிறந்தநாள்.எப்போதும் அவருக்கு பிறந்த நாள் என்பது ஒரு சாதாரண நாளாக தான் கடந்து போகும் ‌. இன்றும் அவர் அப்படித்தான் அதை அவர் எடுத்துக்கொண்டார். அவரைப் பொறுத்தவரையில் நாட்களின் நகர்வு ஒன்று மட்டுமே மனிதனின் வாழ்நாள் அல்ல. அந்த நாட்களில் அவன் என்ன சாதித்து இருக்கிறான் என்பதே அவனது வாழ்நாள் என்கிறார்.

அவர் அப்படித்தான். இன்றளவும் தினந்தோறும் மூன்று மணிநேரங்கள் படிப்பதற்காக ஒதுக்குகிறார். நாம் தமிழர் காணொளிகள் அனைத்தையும் விடாமல் பார்த்து விடுகிறார். வாரத்திற்கு ஒரு முறை அண்ணன் சீமானோடு அலைபேசியில் பேசி விடுகிறார். அடுத்து வருகின்ற ஆன்றோர் அவைய கூட்டத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்.

வீட்டிற்கு வந்திருக்கும் இடும்பாவனம் கார்த்தியோடு சமகால அரசியல் குறித்து ஆர்வத்துடன் விசாரிக்கிறார்.ஒரு காலத்தில் முரசொலி படிக்காமல் அவருக்கு ஒருநாள் முடியாது. வீட்டில் கருணாநிதி என அழைக்கக் கூடாது கலைஞர் என்றுதான் அழைக்க வேண்டும் என வாதிட்டவர். எங்கெங்கெல்லாம் கருப்பு சிவப்பு கொடி பறக்கிறதோ அதுவெல்லாம் தன் ஊராக நினைத்தவர், 2009 இன அழிவிற்கு பிறகு தன்னை வெகுவாக மாற்றிக் கொண்டு விட்டார்.

இன்று இடும்பாவனம் கார்த்தியிடம் புதியதோர் தேசம் இதழை புத்தக வடிவில் கொண்டுவர முடியுமா எனக் கேட்கிறார். அண்ணன் சீமான் மீது அளவற்ற நம்பிக்கை அவருக்கு இருக்கிறது. உறுதியாக அவர் வெல்வார் என நம்புகிறார். நான் படிப்பது, இனத்திற்காக நிற்பது, மொழியை நேசித்து எழுதுவது எல்லாமுமே அவரை பார்த்து நகல் எடுத்தது தான். புத்தகங்கள் சூழ்ந்த ஒரு வாழ்க்கையை எனக்கு அளித்து நோயில் இருந்தும், தனிமையில் இருந்தும் என்னை விடுவித்தவர்.

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பது போகிற போக்கில் நம் முன்னோர்கள் உதிர்த்து விட்டுப் போன வார்த்தை அல்ல என்பதை பலமுறை எனக்கு உணர்த்தியவர்.அவருக்கு அருகில் நான் மிகப் பாதுகாப்பாக உணர்ந்திருக்கிறேன். உணருகிறேன். அவர் எனக்கு அளித்த அனைத்து நல்லவைகளுக்காகவும, நல்லவை களைத் தவிர வேறு எதுவும் எனக்கு அளிக்காத இந்த வாழ்விற்காகவும் அவருக்கு நெகிழ்வோடு நன்றி சொல்கிறேன்.

இன்றைய நாளில் அவருக்காக வந்திருந்து மகிழ்ந்த , சென்னை தவிர்த்து அப்பாவிற்காக என்னுடன் இருந்த என் தம்பி இடும்பாவனம் கார்த்திக் , குடும்பத்தோடு வந்து இருந்து நேசித்து மகிழ்ந்த என் உடன்பிறந்தவர்கள் வழக்கறிஞர் மோ.ஆனந்த் , பிரகாஷ் , அடுத்த வருடம் இந்நாளில் இருவராக மாற இருக்கும் என் தம்பி Lingadurai K , எனது அலுவலக இளையோர் வீர பிரபாகரன், பிரகாஷ் , தங்கை லட்சுமி , என் தங்கை மீனா உள்ளிட்ட அனைவருக்கும் எனது பேரன்பு.

இனிய அகவை தின வாழ்த்துக்கள் அப்பா.

363பிரகாஷ், இரா. கார்த்தி நிமலன் and 361 others104 comments5 sharesLikeCommentShare

10

காதல் என்பது யாதெனில்..

❤️

காதல் என்றால் என்ன..?இளமைத் தீ பற்ற வைத்த நெருப்பா, உணர்ச்சிகளின் விளையாட்டா, ஹார்மோன்களின் சதியா, வாழ்க்கை விதித்த தவிர்க்க முடியா விதியா‌.. என்றெல்லாம் யோசித்தால் குழம்பி விடுகிறோம்.”செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தான் கலந்தனவே” என்கிறது குறுந்தொகை.”விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவு” என்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.”காதல் கூட கடவுள் மாதிரி தான். காதல் என்னும் ஈர அலைகள் அடித்துக் கொண்டிருப்பதால் தான் இன்னும் இந்த பிரபஞ்சம் ஈரமாகவே இருக்கிறது” என்கிறார் இயக்குனர் இமயம் பாரதிராஜா.

சிறைச்சாலை திரைப்படத்தில் என்றோ சிறையிலேயே மரணித்துப் போன தன் கணவனுக்காக தொடர்வண்டி நிலையத்தில் காத்து நிற்கின்ற தபுவின் கதாபாத்திரம் , கபாலி திரைப்படத்தின் தன் கணவனுக்காக காத்திருக்கும் ராதிகா ஆப்தே கதாபாத்திரம் போன்றவை சுட்டுவது போல காதல் என்பது தீவிரமான காத்திருத்தலா என்றெல்லாம் வினாக்கள் நம் நெஞ்சாழத்தில் சிறகு விரிக்கின்றன.ரஷ்யப் புரட்சியாளர் லெனின் வாழ்க்கையில் நதேழ்தா குரூப்கயாவின் பங்கு பற்றி லெனின் விவரிக்கும் போது “அவர் என் ஈடு இணையற்ற தோழர்” என்கிறார்.சகல காலத்திலும் புரட்சியின் குறியீடாக மாறி இருக்கும் சேகுவேராவை பற்றி அவரது காதலி அலெய்டா குறிப்பிடும்போது .. “சே வின் மினுக்கும் கண்களில் தான் தான் வாழ்வதற்கான நம்பிக்கையை” பெற்றதாக சொல்கிறார்.

என்றோ ஊரை விட்டு ஓடிப்போன என் நண்பனின் சித்தப்பா ஒரு மன நோயாளியாக மும்பை தாண்டி புனே அருகில் கண்டுபிடிக்கப்பட்ட போது அவர் சேர்த்து வைத்திருந்த பெரும் குப்பைகளில் பள்ளியில் அவர் படித்த போது உடன் படித்த மாணவியின் புகைப்படம் ஒன்றை வைத்திருந்ததாக ஆச்சரியமாக சொன்ன செய்தி இன்னும் என் நினைவில் இருக்கிறது.மனப் பிறழ்வின் போது கூட மறக்காத நினைவுகள் காதல் என்ற தீவிரத்தால் மட்டுமே சாத்தியம் என நினைக்கும்போது சிலிர்ப்பாக இருக்கிறது.என்னோடு சட்டக் கல்லூரியில் உடன் படித்த வகுப்புத் தோழியின் திருமணத்திற்கு சென்றிருந்தபோது எப்போதும் அவளோடு திரிந்து அவள் அவனைத் தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறாள் என்று நாங்கள் எல்லாம் எதிர்பார்த்த அவளது மாமன் மகன் அங்கே இல்லாததை பார்த்த போது எங்களுக்கு மனம் என்னவோ போலிருந்தது.

சில காலத்திற்குப் பிறகு எங்கள் ஊருக்கு அருகே ஒரு கோவிலில் அவனை சந்தித்தபோது என்னை பார்த்தவுடன் தவிர்த்து விட்டு ஓடிய அவனை தடுத்து நிறுத்தி ஏன் என்னவாயிற்று எனக் கேட்டேன்.”அவள் நன்றாக இருக்கிறாள் சார் ..” என சொல்லிவிட்டு வேக வேகமாக போய்விட்டான்.அவனைப் பொறுத்த வரையில் அவன் காதல் என்பது .. “அவனது காதலி, இன்று இன்னொருவனின் மனைவியாக நன்றாக வாழ்கிறாள்..” என்பதுதான்.

❤️

என்னை மகனாகப் பெற்றெடுத்த போது என் அம்மாவிற்கு பதினேழு வயது.‌ பிறந்த பத்தாவது மாதத்திலேயே போலியோ வினால் நான் பாதிக்கப்பட்டபோது தன்னுடைய 18வது வயதில் இருந்து மருத்துவமனை மருத்துவமனையாக தன் நோயுற்ற மகனை தூக்கிக்கொண்டு அலைவது தான் என் தாய்- தந்தைக்கு வாழ்வாக மாறிப் போனது. அந்த காலகட்டத்தில் பெரும்பாலான தீபாவளி -பொங்கல் பண்டிகைகள் கூட எங்கள் மூவருக்கும் மருத்துவமனையில்தான். ஒரு கிராமத்தில் எந்த அறிமுகமும் இல்லாமல் வீட்டுக்குள்ளேயே வளர்ந்த ஏறக்குறைய வளர்ந்த சிறுமி போல இருந்த என் அம்மாவை, என்னோடு மருத்துவமனையில் தனியே விட்டுச் செல்லும் போது தனது கலங்கும் கண்களை காட்டாமல் வேறெங்கோ பார்ப்பது போல துடைத்துக்கொண்டே தளர்வாக ஜோல்னாப் பையோடு நடந்து சென்ற என் தந்தையை கண்டபோது இதுவும் காதல் தான் என்று அப்போது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அம்மாவின் உடல் நலம் ஒரு முறை கடினமாக பாதிக்கப்பட்டு உயிருக்கு அபாயம் ஏற்பட்ட தருணம் ஒன்றில் .. “அவள் என்னை விட்டு போய் விட மாட்டாள். அவளுக்கு என்னை ரொம்ப பிடிக்கும்.” என கனிந்த விழிகளோடு சொன்ன அப்பாவின் நம்பிக்கைதான் காதல் என்று அப்போது என்னால் வகைமைப் படுத்த முடியவில்லை.

சமீபத்தில் தீவிர கொரனா நோயால் என் தந்தை பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சேர்த்தாக வேண்டும். ஏறக்குறைய நினைவில்லை. அம்மா நானும் உடன் போகிறேன் என்று சொன்னபோது.. “எந்த மருத்துவமனையும் அனுமதிக்க மாட்டார்கள் அம்மா..” என்று நான் சொன்னதை அவர்கள் ஏற்கவே இல்லை.”இது உயிர் கொல்லும் நோய். கூட இருப்பவர்களுக்கும் பரவும் மிகு அபாயம் கொண்ட தொற்று ..” என்றெல்லாம் என் அம்மாவுக்கு எவ்வளவோ எடுத்து சொன்னபோதும் கூட, அம்மா பிடிவாதத்தை தளர்த்தவில்லை.பிறகு என் நண்பர்களிடம் விசாரித்து ஒரு மருத்துவமனையில் தனி அறையில் அம்மாவுக்கு உரிய பாதுகாப்போடு தங்க வைக்க முயன்ற மறுநாள் அம்மாவுக்கும் நோய் பரவியிருந்தது.

நான் மனம் வெறுத்துப் போனேன்.அம்மா புன்னகையோடு அப்பாவுடன் இணைந்து தங்கிக் கொண்டார்.அவரை கவனித்துக் கொள்வது, எங்களுகெல்லாம் வீடியோகால் மூலம் தகவல் சொல்வது போன்றவற்றை மகிழ்வாக செய்து வந்தார்.நம்பிக்கை சொற்கள் மூலம் என் அப்பாவை உயிர்ப்பித்து, பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்து வந்து இன்றளவும் ஒரு குழந்தையைப்போல பார்த்துக் கொள்ளும் அவருடைய அசராத தீவிரம் உண்மையிலேயே எனக்கு அச்சம் அளித்தது.

உயிர் கொல்லும் தொற்று நோயால், உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்ற போதும் கூட சாகத்தூணியும் அந்த பேதமை கூட காதல் தான் என உணரும் பக்குவம் இந்த வயதில் தான் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.

❤️

இப்போதும் அவர்கள் ஏதோ மாடியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். மெல்லிய புன்னகையோடு கசியும் கண்களோடு அவர்களை பார்த்துக்கொண்டே இருக்கிறேன்.இந்த முடிவற்ற உரையாடல் வாழ்வு முழுக்க ஒரு இசை போல இசைந்து கொண்டே இருக்கிறது.ஒருவருக்கொருவர் அதைக் காதல் என்றெல்லாம் அவர்கள் சொல்லிக் கொள்வதில்லை.அவர்களைப் பொறுத்தவரையில்இந்த வாழ்தல் என்பதே காதல் தான்.

❤️

காலமெல்லாம் காதல் வாழ்க.

❤️

அப்பா-அம்மாவிற்கு 47 ஆவது மணநாள் வாழ்த்துகள்

இளையராஜா – என்றொரு மீட்பர்.

சட்டென அந்தக் கேள்வியை என் மகன் கேட்டு விட்டான். “உனக்கு ஏன் இளையராஜாவை அவ்வளவு பிடிக்கிறது..?”உண்மையில் அந்தக் கேள்வியை நேர்மையாக எதிர்கொள்ள எனக்கு பயமாக இருந்தது. அதை அப்படியே வார்த்தைகளால் நான் விவரித்தாலும் அவனால் புரிந்துகொள்ள முடியாது.இளையராஜாவை கேட்பது என்பது எனது அந்தரங்க உணர்வு போல, நான் மட்டும் ஆத்மார்த்தமாக உணர்ந்து ரசித்து உள் வாங்குகிற சுய நிகழ்வு. அதை எப்படி இவனுக்கு விவரித்து உணர்த்துவது..?எல்லாவற்றையும் மகனிடம் கொட்டிவிட கொஞ்சம் கூச்சமாகவும் இருந்தது. மழை போல எப்போதும் இளையராஜா இசை அபூர்வமானது தான். சலிப்பற்றதுதான்.அவரின் 80, 90 களின் ஒவ்வொரு பாடலும் எனக்கு ஒவ்வொரு காலத்தை, நான் வாழ்ந்த வாழ்க்கையை மீண்டும் ஒரு திரைப்படக் காட்சியை போல நேரடியாக பார்த்துவிடுகிற அபாயத்தை கொண்டிருந்தாலும், அந்த மாய விளையாட்டை எப்போதும் நான் மறக்காமல் விளையாடிக் கொண்டே இருந்தேன். சில பாடல்கள் கேட்கும்போது அம்மாவின் மடி வாசனை நினைவுக்கு வருகிறது. சில பாடல்கள் கேட்கும்போது கழுத்தோரம் வியர்வை வடிய வடிய, ஒரு உச்சி வெயிலில் மாடிப்படி இடுக்கில் நழுவிய காலத்துளி ஒன்றில் கழுத்தோரம் பெற்ற முதல் காதல் முத்தம் ஒன்று நினைவுக்கு வருகிறது. பசித்திருந்த இரவுகளில் பாடல்களை மட்டும் புசித்திருந்த பொழுதுகள் இன்னும் நினைவில் இருக்கின்றன.

❤️

வலி ஏமாற்றம் காதல் நோய் பிரிவு துயர் காமம் பசி பிணி தனிமை கொண்டாட்டம் என என் வாழ்வில் எதை எடுத்துக்கொண்டாலும் அவரின் இசை அதில் கலந்தே இருக்கிறது. இப்போதுகூடஎத்தனையோ நள்ளிரவுகளில் அவரின் சில பாடல்களை கேட்கும் போது ஆளரவமற்ற சாலையை வெறித்துப் பார்த்துக்கொண்டே நின்று விடுகிறேன். “வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தேன்..” என பாடும் போது இந்த வாழ்வு ஒரு கொடும் சாபம் என கலங்கி விடுகிறேன். ” காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே, தேரு வரும் உண்மையிலே, சேதி சொல்வேன் கண்ணாலே..” என கேட்கும் போது இந்த வாழ்வு எப்படிப்பட்ட வரம் என சிலிர்த்து இருக்கிறேன்‌. சகல வாழ்வையும் கணக்கு,வழக்கோடு சரி பார்த்தால்..வரத்தையும், சாபத்தையும் அவர்தான் எப்போதும் தீர்மானிக்கிறார்.

❤️

ஒரு பாடல் கேட்கும் போதே அந்த காலத்திற்குள் உள்ளே நுழைந்து அக்காலத்து அனுபவத்தை இக்காலத்திலும் மீளப்பெறுவது என்பது அவரது இசையின் ஊடாக மட்டும்தான் என உணரும்போது அந்த இசை எக்காலத்திற்கும் நம்மை கடத்தி செல்லும் ஒரு பிரம்மாண்டமான கால இயந்திரம் என உணர்ந்து வியந்திருக்கிறேன்.

❤️

ஒரு பாட்டு நம்மை என்னவெல்லாம் செய்யும் என்பதை எல்லாம் தாண்டி இந்த உலகத்தில் இத்தனை கோடி நபர்களுக்கு மத்தியில் எனக்கான ஆறுதலையும் , எனக்கான வலியையும், எனக்கான அழுகையையும், எனக்கான ரகசியப் புன்னகையையும் வர வைக்கிற உள்ளீடு அப்பாடல்களில் எப்படி ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதையெல்லாம் யோசித்து யோசித்து கடவுள் நம்பிக்கை போல புரிந்தும் புரியாமலும் அறிந்தும் அறியாமலும் நகர்ந்து கொண்டே இருக்கிறேன்.

❤️

300க்கும் மேற்பட்ட கேசட்டுகளில் முழுக்க அவரது இசையாய் சேர்த்துவைத்து கொண்டாடிய காலகட்டங்களிலும் சரி, ஏறக்குறைய 4000 பாடல்களை ஹார்ட் டிஸ்கில் சேமித்து வைத்து நினைத்தபோதெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கின்ற இக்கால கட்டத்திலும் சரி, எத்தனையோ முறை மீண்டும் மீண்டும் கேட்ட பாடல்களில் அதே சரண அடுக்குகளில், ராக வளைவுகளில் அதே கிறக்கம்.. அதே மயக்கம்.. அதே தொலைதல்.

❤️

இத்தனை ஆண்டு வாழ்க்கையில் அவரது இசை போல நெருங்கிய துணை எதுவும் இல்லை. போகுமிடமெல்லாம் கைபிடித்து அழைத்துச் செல்லுகிற சகா போல அவரது பாடல்கள் நாற்புறமும் நம்மை அழைத்து சென்று கொண்டே இருக்கின்றன. வாழ்வெனும் ஏற்றத்தாழ்வு ஊசலாட்டத்தில் சிக்கி பல உளவியல் சிக்கல்களால் சிதைந்த என்னைப் போன்ற பலரை நிதானமாக்கி வாழ வைத்திருப்பது அவரது இசை தான். அந்த தூய விதியில் அவர் சிறிது பிசகி இருந்தாலும் பலரின் தற்கொலைஇங்கே தவிர்க்கப்பட்டு இருக்காது.

❤️

அந்த வகையில்.. அவர் ஒரு மீட்பர்.

❤️

காதுகளால் சுவாசித்து வாழ்ந்த ஒரு தலைமுறையை உருவாக்கித் தந்தஇசைஞானி இளையராஜாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

மருத்துவர் சித்தார்த்தன்-ஆயிரம் மலர்களில் மலர்ந்தவர்.

❤️

நாங்கள் மூணாறு சென்று சேர்ந்தபோது நடுநிசி ஆகிவிட்டது. இரவு உணவிற்கு முன் விடுதிக்குள் சென்று சேர்ந்துவிட வேண்டும் என்று நாங்கள் போட்டிருந்த திட்டம் கடுமையான மழைப் பொழிவினால் தாமதமாகிவிட்டது.அந்தக் காரை ஓட்டிக் கொண்டு வருபவர் பெரும் ரசனைக்காரர். பயணம் தொடங்கியதிலிருந்தே அருண்மொழியின் புல்லாங்குழல் களும், அலையலையாய் எழுந்த வயலின்களின் கூட்டு இசையும், பெண்களும் ஆண்களுமாய் கோரஸ் பாடிய சேர்ந்திசை பாடல்களும் , இளையராஜா என்கின்ற மாந்திரீகனால் எங்களுக்காக உருவாக்கப்பட்டதோ என சந்தேகிக்க வைக்கும் அளவிற்கு ஊடுருவிக் கொண்டிருந்த பாடல்கள் சதா அந்த காருக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தன. அடிக்கடி அவர் “இந்த வரிகளை கேளுங்கள், இந்த வயலின் பிட்டை கேளுங்கள்” என சொல்லிக்கொண்டே காரை ஓட்டி வந்தார்.

ஆங்காங்கே மலைச்சரிவுகளில் காரை நிறுத்திவிட்டு அமைதியாக மழை பொழிவதை நாங்கள் பார்த்துக்கொண்டே நின்றோம்.”மழையும், இளையராஜாவும் ஒன்று தானே..” என்றார். இரண்டுமே அலுப்பதே இல்லை என்று அவரே மெல்லியக் குரலில் சொல்லிக் கொண்டார். இப்படிப்பட்ட ரசிக மனப்பான்மை கொண்ட ஒருவர் வழித்துணையாக கிடைக்கும் அந்தப் பயணம்தான் எப்படி கவித்துவமானது..??…..அந்தக் கவித்துவ பயணத்திற்கு முன்னாலிருந்த பல நாட்கள் மிகப் பொல்லாதவை.

ஏறக்குறைய ஒரு சரிவில் நானே உருண்டு கொண்டிருந்தேன். பற்றி ஏற எதுவும் இல்லை என்ற நிலையில், ஒரு அதல பாதாளத்திற்குள் நான் விழுந்து கொண்டிருந்தேன். என்னை சேர்ந்தவர்கள் தவித்துப் போனார்கள். எப்படியாவது மீண்டும் எழுப்பி முன் நிறுத்தி விட வேண்டும் என என்னை விரும்புபவர்கள் அனைவரும் துடித்துக் கொண்டிருந்தார்கள். எவருடைய சொற்களும் என் காதில் ஏறவில்லை. அப்போதுதான் அண்ணன் சித்தார்த்தன் வீட்டுக்குள் கசங்கிப்போன துணி போல, மூலையில் சுருண்டு கிடந்த என்னை சலவை செய்ய ஒரு மலை பயணத்திற்கு அழைத்துப்போனார்…..திடீரென வீட்டிற்கு முன் ஒரு நாள் காரில் வந்து இறங்கினார். “வாருங்கள்.. போவோம்” என்றார். எங்கே என்று நான் கேட்கவுமில்லை. அவரும் திருச்சி தாண்டும் வரை சொல்லவும் இல்லை.

வருவதற்கு ஒரு வாரம் ஆகும் என வீட்டில் சொல்லிவிட்டு என்னை அழைத்து வந்தார். ஏற்கனவே பயந்திருந்த எனது வீடு அவர் அழைக்கிறார் என்று தெரிந்தவுடன் உடனே அனுப்பி வைத்தது……திண்டுக்கல்லை தாண்டியவுடன் மழைப்பொழிவு தொடங்கியது. நாங்கள் தேனி வழியாக மூணாறு செல்ல திட்டமிட்டிருந்தோம். வழியெல்லாம் மழை. ஆனால் அவரோ காருக்குள் பாடிக்கொண்டு இருந்த பாடல்களின் சேர்ந்திசையாக மழையையும் மாற்றிவிட்டார். அவர் ஒரு அற்புதமான ஓட்டுனர். எந்தச் சரிவிலும், எந்த திருப்பதிலும் வண்டியை லாவகமாக திருப்ப கவிதை குறிப்புகள் போல அவரிடம் சில பிரத்தியோக நெகிழ்வுகள் இருந்தன…..”அலைபேசியை அணைத்து போடுங்கள்” என்றார்.

“கடந்த காலத்தைப் பற்றி எதையும் யோசிக்காதீர்கள்,எதிர்காலம் என்ற ஒன்று இல்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள்,நிகழ்காலத்தில் இருப்பது ஒன்றே நிஜம் என்று நம்புங்கள்”.. எனச் சொன்னார். கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையிலான ஊசலாட்டத்தில் நிகழ்காலத்தை கவனிக்கத் தவறுகிற என் கண்களை அவர்தான் அந்த மழைப் பயணத்தில் திறந்துவைத்தார்…..சாதாரண நிலப்பரப்பில் பெய்யும் மழையை விட மலைப் பகுதிகளில் பெய்யும் மழை சற்றே உக்கிரமானது. இரு பக்கமும் தலைவிரித்து ஆடும் மரங்கள் மனதை ஏதோ செய்தன. ஆனாலும் இவர் ரசித்துக்கொண்டே வண்டியை ஓட்டிக் கொண்டு மூணாறு நகரத்தைத் தாண்டி ஒரு காட்டுக்குள் இருந்த “Rain Forest” என்ற பகுதியிலிருந்த ஒரு விடுதிக்கு என்னை அழைத்துப் போனார். அந்த விடுதியின் பெயரும் “Rain Forest” தான்……நான் கொஞ்சம் இலகுவாகி இருந்தேன்.

மழையும், இயற்கையும் ஒருங்கிணைந்து என் முடிச்சுகள் ஒவ்வொன்றையும் அவிழ்த்துக் கொண்டே இருந்ததை நானே உணர்ந்து கொண்டே இருந்தேன். அது அவருக்கும் புரிந்திருக்கும் போல.. “Better ஆ feel.. பண்றீங்க போல” ..என கேட்டு விட்டு புன்னகைத்தார்….இரவு முழுக்க பேசிக்கொண்டே இருந்தார். கனவுகள் நிறைய சுமக்கும் ஆன்மா அவருடையது. அவரது ரசனைகள், விருப்பங்கள், தேர்வுகள் என ஒவ்வொன்றையும் என்னிடம் ஆழமாக விவரித்துக் கொண்டே சென்றார்.

நான் ஏதோ கொட்ட முயன்ற போதெல்லாம் அதை அலட்சியப்படுத்தி விட்டு நான் எழுதிய சில கவிதைகளை அவர் படித்துக் கொண்டிருந்தார்….மழை இரவு. குளிர் பொழுது. பயணக் களைப்பு. அப்படியே தூங்கி விட்டேன். காலையில் விழித்து பார்க்கும் போது என் மீது கனமான போர்வை ஒன்று போர்த்தப்பட்டு இருந்தது. அவர் வெளியே சென்று விட்டு புதிதாக விளைந்த கேரட்டுகளை வாங்கி வந்திருந்தார்.‌ காலை உணவாக பச்சை காய்கறிகளை உண்ணுவது மிக மிக நல்லது என சொன்னார்….அப்போதுதான் நான் மெதுவாக கேட்டேன். “எதற்காக என்னை அழைத்து வந்து இருக்கிறீர்கள்.. ?, இவ்வளவும் செய்து கொண்டு இருக்கிறீர்கள்..?” என கேட்டேன். இந்த கேள்விகளுக்கெல்லாம் என்னிடத்தில் பதில் இல்லை என்றார் அவர். பிறகு அவரே மெல்லிய குரலில்..”நான் தனிமைப்பட்டு துவண்ட போது எனக்கு யாரும் இல்லை. அப்போது நான் ஒரு முடிவு செய்து கொண்டேன். யாராவது காயப்படும் போது நான் அவர்களோடு இருக்க வேண்டும் என முடிவு செய்து கொண்டுதான் உங்களோடு வந்திருக்கிறேன், காயப்படும் போது மருத்துவம் பார்ப்பது தானே மருத்துவன் கடமை…” என்றார்

….”ஊர் சுற்ற போவோமா..” என்று கேட்டேன். “வேண்டாம் ஒய்வெடுங்கள்” என்றார். “தோட்டத்தில் உட்கார்ந்து ஏதாவது எழுதிப் பாருங்கள்..” என்றார். நான் ஏதாவது எழுதுவோம் என நினைத்து அமரும்போது எழுத எனக்கு எதுவும் வரவில்லை. எதிரே அமர்ந்திருந்த அவர் சிரித்துக்கொண்டே சொன்னார் . “வந்த வேலை சரியாக நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் காலியாகி ( Empty) கொண்டிருக்கிறீர்கள்.” என்றார்

.‌‌…அண்ணன் மருத்துவர் சித்தார்த்தன் 2009 காலகட்டங்களில் எனக்கு பழக்கம். ஈழ ஆதரவு போராட்டங்களின் போது ஈழத்தில் மக்கள் படும் துயரங்களை, இனப் படுகொலைக் காட்சிகளை தாங்கிய சிடி தயாரிக்க எங்களுக்கு 1000 சிடி வாங்கிக் கொடுத்தார். மக்களிடம் பரப்புங்கள் என்றார். தஞ்சை வழக்கறிஞர் அண்ணன் நல்லதுரை “மாவீரன் முத்துக்குமார்” ஆவணப்படம் தயாரித்து விட்டு தவித்துக் கொண்டிருந்த போது படத்தை வெளியிட பெருமளவு பணம் தேவையாக இருந்தது. அண்ணன் நல்லதுரை என்னிடம் என்ன செய்யலாம் என கேட்டபோது.. “அண்ணன் சித்தார்த்தனுக்கு படத்தைப் போட்டுக் காட்டுவோம். அவர் மூலமாக மருத்துவர்களிடம் பணம் வசூலிப்போம்..” என்று சொன்னேன். எங்கள் வீட்டில் படம் திரையிடப்பட்டது. படம் பார்த்துக்கொண்டிருந்த அண்ணன் சித்தார்த்தன் மாவீரன் முத்துக்குமார் தீ குளிக்கும் காட்சியில் கலங்கி அழத் தொடங்கிவிட்டார்.

படம் முடியும் வரை அவர் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. படம் முடிந்த பின்னர் எங்கள் திட்டத்தை அவரிடம் சொன்னோம். “எந்த மருத்துவரிடமும் கேட்கத் தேவையில்லை, நானே முழு பணம் தருகிறேன்..” எனச்சொல்லி ஒரு பெரிய தொகையை அளித்து உதவி செய்தார். அதன் பிறகு நாம் தமிழர் உருவான காலகட்டங்களில் திமுக, திராவிட இயக்கம் என்றெல்லாம் பயணித்துக்கொண்டிருந்த அவர் நாம் தமிழரை மானசீகமாக நேசிக்கத் தொடங்கினார். அண்ணன் சீமான் மீது அளவற்ற அன்பு அவருக்கு. கும்பகோணத்தில் நடந்த ஒரு கலந்தாய்வு கூட்டத்தில் மேடையில் அண்ணனுக்கு பக்கத்தில் அமர்ந்து இருந்த அவர் அண்ணன் சீமானின் கரங்களை பற்றிக் கொண்டே இருந்த காட்சி இன்னும் என் நினைவில் இருக்கிறது.

சமூகத்திற்காக உழைக்க முன் வருபவர்கள் கொண்டாடப்பட வேண்டும் என்பதில் அவர் தீவிரமாக இருந்தார்….ஏதோ ஒரு விசித்திர அலைவரிசை என்னையும் அவரையும் இறுக்கி கட்டிப் போட்டு வைத்து விட்டது. என் வாழ்வின் ஒவ்வொரு துளியிலும் அவர் தானாக முன்வந்து இடம்பெறத் தொடங்கினார். எங்கே சென்றாலும் என்னையும் அழைத்துக் கொண்டு அலைவார்.என் எழுத்துக்கள் மீது அவருக்கு மிகுந்த விருப்பம். என் புத்தகங்கள் அனைத்தும் அவரிடம் இருக்கின்றன. படித்துவிட்டு அலைபேசியில் பல மணி நேரம் கொண்டாடித் தீர்ப்பார். நீங்கள் கொண்டாடும் அளவிற்கு அதில் எதுவும் இல்லை அண்ணா என சொன்னால்.. உனக்கு எழுத வருகிறது அதை விட்டு விடாதே என்றார்.திரைப்படத்திற்கு கதை ஒன்றை தயார் செய்து அவரிடம் காட்சி காட்சியாக நான் விவரித்தபோது ஆர்வமாக கேட்டவர் .. உடனே இதற்கு திரைக்கதையை தயார் செய்யுங்கள். ஒரு வருட காலத்திற்குள் நானே தயாரிக்கிறேன் என்றார்.

காரை ஓட்ட நான் கற்றுக் கொண்ட போது அவரை வைத்துக்கொண்டு கும்பகோணத்தை ஒரு வலம் வந்தேன். பெருமிதத்தால் என்னை கட்டிக்கொண்டு கண்கள் கலங்க “இது தான் நான் எதிர்பார்த்தேன்” என்றார். அந்த விழிகளின் ஈரம் தாய்மைக்கு நிகரானது

…..உடல்நிலையோ மன நிலையோ சரி இல்லையெனில் அவர் மருத்துவமனையில் போய் அமைதியாக அமர்ந்திருப்பேன். என்னைப் பொறுத்தவரையில் அது ஒரு கூடு. நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என என்னை நினைக்க வைக்கிற கூடு. அங்கே போனால் பேரன்பு சிறகுகளின் தாய்மை கதகதப்பு எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை எப்போதும் உண்டு. கடைசி சந்திப்பு வரை அந்த நம்பிக்கை பொய்த்ததே இல்லை….

எனக்காக மூணாறு வந்த அவர் ஐந்து நாட்களும் என்னை அமைதிப் படுத்துவதில், முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். தனிமையிலே என்னை சிந்திக்க அனுமதித்தார். தலைகுனிந்து அமர்ந்திருக்கும் என்னை உற்று நோக்கியவாறே பல மணி நேரம் அமைதியாக எதிரில் அமர்ந்திருந்தார். இயற்கையும் அவரது பேரன்பும் என்னை குணப்படுத்த தொடங்கின. நானும் சிரித்து பேசி வழக்கமான மனிதனாக மாற தொடங்கினேன்.கடைசி ஒரு நாள் மட்டும் நீர்வீழ்ச்சிக்கு அழைத்துப்போனார். தேயிலைத் தோட்டங்களின் நடுவே இருந்த ஒரு மலை முகட்டில் காரை நிறுத்தி வைத்துவிட்டு ஜென்சியின் “ஆயிரம் மலர்களே மலருங்கள்” பாடலை இருவரும் கண்கள் பனிக்க கேட்டுக் கொண்டே இருந்தோம்…

.ஒவ்வொரு எனது அரசியல் முயற்சியிலும் அவர் இருந்தார். பக்கபலம் என்கின்ற சொல் மிக மிகக் குறைவு. அவர்தான் பிரதான பலமாகவே இருந்தார். அழுத்தம் திருத்தமாக ஆலோசனைகள் சொல்வார். “எதன் பொருட்டும் துவண்டு விடக்கூடாது, வேலைகள் நின்றுவிடக் கூடாது” என்பார். “இனத்திற்கான பணி, 60 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தை விடுதலை செய்வதற்கான பணி, வெறும் பணத்திற்காக முடங்கி விடக்கூடாது, நான் உதவுகிறேன்.” என்பார்….

அவர் அறை முழுக்க புத்தர் சிலைகள் நிறைந்திருக்கும். கடவுள் மறுப்பாளர். சாதி எதிர்ப்பாளர். கெட்ட பழக்கங்கள் கிடையாது. நிறைய படிப்பார். எளிய மக்கள் தேடி வரும் போதெல்லாம் மருத்துவத்தை செய்துவிட்டு பணம் வாங்காமல் அனுப்பி வைத்து விடுவார். எதையும் வெளியே சொல்ல மாட்டார். விளம்பரம் இல்லாமல் சேவைகள் செய்து வெளிச்சம் பாய்ச்சிய மனிதநேய விளக்கு அவர்…..மூணாறில் இருந்து திரும்பி வரும்போது, திருச்சியை தாண்டுகையில் ஒரு பிளாட்பாரத்தில் சிலர் படுத்திருப்பதை பார்த்துவிட்டு வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கிப் போனார். சிறிது நேரம் கழித்து வந்தவரிடம் எங்கே போனீர்கள் என கேட்டேன். “நாம் வீட்டிற்கு தானே போகிறோம். கையில் 4000 பணம் இருந்தது. வண்டிக்கு எரிபொருளும் போட்டாகிவிட்டது. அதனால் அந்த பணத்தை அவர்களுக்கு கொடுத்து விட்டு வந்து விட்டேன். நாளைய தினம் அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்..” என்றார். எனக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது.

“ஏன் அண்ணா இப்படி..?” என்றேன்… “நமக்கு மனது சரியில்லை என்றால் மலைகளுக்கு சென்று சுற்றி வருகிறோம்.. அவர்கள் எல்லாம் எங்கே செல்வார்கள்..?” என கேட்டு விட்டு மீண்டும் இளையராஜா பாடல்களை கேட்டுக்கொண்டே வண்டி ஓட்ட தொடங்கிவிட்டார்……கடைசியாக அவரை நான் என் தம்பி ஆனந்தோடு கடந்த 07.05.2021 அன்று சந்தித்தேன். முகக் கவசம் எல்லாம் போட்டுக் கொண்டு மிகுந்த பாதுகாப்போடு இருந்தார்.நெஞ்சு பக்கமாக வலிக்கிறது என்றேன். இசிஜி எடுத்துப் பார்த்துவிட்டு “வலிமையான இதயம். ஒரு நோயும் இல்லை..” என்று சிரித்துக் கொண்டே சொன்னார். எதற்கும் பயப்படாதீர்கள். நான் இருக்கிறேன் என்றார்….அடுத்த சில நாட்களிலேயே கொரனா நோய்த்தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி வந்தது.

கடந்த 16.05.2021 நான் பதறிப்போய் அவருக்கு அலைபேசியில் அழைத்தேன். நீண்டநேரம் ஒலித்த அந்த அலைபேசியை எடுத்து சற்று இருமலோடு பேசினார். தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக சொன்னார். ஆக்சிஜன் உதவியோடு இருப்பதாக சொன்ன அவர், ” வேறு யார் அழைத்தாலும் இந்த சமயத்தில் எடுத்து இருக்க மாட்டேன், நீ அழைக்கிறாய். இனி பேச முடியுமோ முடியாதோ என தெரியவில்லை. அதுதான் பேசிவிட வேண்டும் என எடுத்தேன்..” என்றார். நான் கலங்கி விட்டேன். “அண்ணா உங்களுக்கு ஒன்றும் ஆகாது. நாம் மீண்டும் மூணாறு போகிறோம் , ஆயிரம் மலர்களே மலருங்கள் பாடலை மலைமுகட்டில் நின்று கேட்கிறோம்” என்று சொன்னேன். இருமலோடு அவர் சிரித்த ஒலி எனது காதில் கேட்டது. “நான் வராவிட்டாலும், நீயாவது போய்விட்டு வா..” என்று சொன்னார்.

“கண்டிப்பாக நீங்கள் வருவீர்கள்” என நான் சொல்லிக் கொண்டிருந்தபோது “என்னால் அதிகம் பேசமுடியவில்லை. உடலைப் பார்த்துக் கொள், எழுதுவதை விட்டு விடாதே..” என்று சொல்லி சொல்லிவிட்டு அலைபேசியை துண்டித்தார்.நான் கலங்கிய கண்களோடு அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்தேன்….இன்று காலை 10:45 மணிக்கு அவர் கொரனா நோய் முற்றி இறந்து விட்டார். மருத்துவமனையில் இருந்து அவரது உடல் இடுகாட்டிற்கு வரும்போது இடுகாட்டின் வாசலில் நானும் தம்பி ஆனந்தும், தம்பி சாமிநாதனும் நின்று கொண்டிருந்தோம்.

வேகமாக வந்த ஆம்புலன்ஸ் எங்களை கடந்து சென்றது. அவர் முகத்தை எல்லாம் பார்க்க முடியாது என்று சொல்லி எங்களை திருப்பி அனுப்பினார்கள்.

…..மகத்தான அந்த மனிதனிடமிருந்து ஒரு விடைபெறுதல் கூட பெற முடியாத சாபத்தை என்ன சொல்லி நொந்து கொள்வது..??

எதுவுமற்ற என்னிடம் இருந்தது இறுதியான ஒரே ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கையும் வீதியில் என்னை நிறுத்தி வைத்துவிட்டு, ஆம்புலன்சில் வேகமாக என்னை கடந்து இடுகாட்டிற்குள் சென்று விட்டது. …

கடைசியாக நாங்கள் மூணாறு போனபோது தேயிலை தோட்ட காடுகளின் நடுவே அந்த மலைமுகட்டில் ஒலித்த “ஆயிரம் மலர்களே மலருங்கள்..” என்ற அந்த காவியப்பாடல் காற்றில் கரையாமல் உறைந்திருக்கும். அந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டே இருக்கத்தான் அவர் மூணாறு சென்றிருக்கிறார் என நான் இந்த நொடியில் நினைத்துக் கொள்கிறேன்….

என்றாவது நான் மூணாறு சென்றால் .. தேயிலைத் தோட்ட காடுகளுக்கு நடுவே, பனி சுமக்கும் அந்த மலை முகட்டின் மீது நான் நிற்கும் அப்பொழுதில் “ஆயிரம் மலர்களே மலருங்கள்..” என்ற அந்தப் பாடல் தானே ஒலிக்கத் தொடங்கும், அவர் அருவமாய் என் அருகில் நின்று கொண்டு என் தோளை பிடித்திருப்பார் என்று உறுதியாக நம்புகிறேன்…..

(மருத்துவர் சித்தார்த்தன். குடந்தை நகரத்து எளிய மக்களின் மருத்துவர். வயது 53. சுருதி மருத்துவமனையின் நிறுவனர். ஆகச்சிறந்த தமிழ் உணர்வாளர். கும்பகோணம் ஜல்லிக்கட்டு போராட்டத்தை உணர்வுபூர்வமாக நடத்திட உயிராய் நின்றவர். கும்பகோணம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் மகத்தான வலிமையாக திகழ்ந்தவர்.24.05.2021 அன்று கொரனா நோய்த்தொற்றின் காரணமாக தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் மரணமடைந்தார்.)

….https://youtu.be/S5ZD5CDBTxA

ஏனெனில்.. எங்கள் உலகம் அழகானது.

❤️❤️❤️❤️❤️❤️❤️

தம்பி குடவாசல் மணிகண்டனின் திருமணத்திற்கு திருவாரூர் வரை என் அம்மா சென்று வந்தது குறித்து எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. அவர்களுக்கு இந்தத் திருமணம் குறித்து உள்ளூர ஆழ்ந்த விருப்பம் கொண்டிருந்தார்கள் என நான் அறிந்தே இருக்கிறேன். அவன் சக்கர நாற்காலியில் நாம் தமிழர் கூட்டத்திற்கு பாடுவதற்காக வரும் போதெல்லாம் அம்மா அருகில் சென்று நின்று கொள்வார்கள். ஒருபோதும் அவனுக்காக நான் எந்த சகாயமும் செய்ததில்லை. அவன் வருவான். பாட அனுமதி கேட்டு வற்புறுத்துவான். பிடிவாதம் பிடித்து பாடியும் விடுவான்.

கால் நடக்க முடியாதவர்களுக்கு , மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பெண் கிடைப்பதில்லை. உடல் குறைபாடுள்ள பெண்கள் நிலை இன்னும் மோசம். நானும், தம்பி மணிகண்டனும் கொஞ்சம் அதில் விதிவிலக்கு. மனதைப் பார்த்து காதலியுங்கள் என்றெல்லாம் புத்தகத்தில் வரிகள் மின்னும் போது நானெல்லாம் சிரித்துக் கொள்வேன். அப்படி எல்லாம் எந்த காதலும் பிறக்காது. அப்படி பிறந்தால் அது குறுகிய கால அனுதாபமாகத்தான் இருக்கும் என்பதை என்னை ஒத்த பலர் வாழ்வில் நான் நேரடியாகவே கண்டிருக்கிறேன்.

தம்பி மணிகண்டன் திருமண புகைப்படங்களை பார்க்கும் போது எனக்கு எனது கடந்த காலங்கள் நினைவுக்கு வந்தன. திருமணத்தன்று நான் தடுக்கி விழுந்து விடக்கூடாது என ‌ திருமணத்திற்கு முதல் நாள் நான் மண்டபத்திற்கு சென்று‌ என் அம்மா முன்னிலையில் ஒரு இரண்டு மணி நேரம் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

ராஜபார்வை என்ற ஒரு படம் உண்டு. கமலஹாசனின் 100வது திரைப்படம். கண்பார்வை திறன் அற்றவராக கமல் அதில் திறம்பட நடித்திருப்பார். எந்த அனுதாபத்தையும் எதிர்பார்க்காத கண் பார்வைத் திறனற்ற ஒரு வித்தியாசமான கதாபாத்திரம் அது. சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளிவந்த அந்த திரைப்படம் அந்த காலகட்டத்தில் சரியாக போகவில்லை என்பார்கள். அந்தப் படத்தின் தோல்வியில் தான் ‌ கமல் வெறுப்பில் சில வணிக திரைப்படங்களில் நடித்ததாகவும் சொல்வார்கள்.

அந்தத் திரைப்படத்தில் கண் பார்வைத் திறனற்ற கமலஹாசனின் வீடு அவர் புழங்குவதற்கு ஏற்ப திட்டமிட்ட அடிகளில் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும். சிறிது இடம்மாறி போனாலும்‌ அவர் தடுமாறி விடுவார். ஒருமுறை கதாநாயகி மாதவி வீட்டிற்கு வரும்போது சில பொருட்களை இடம் மாற்றி வைத்து விட, கமல் தடுமாறி விடுவார். இந்த நுட்பமான திரைப்படக் காட்சி எங்களைப் போன்றோரின் அனுதாபம் கோராத திட்டமிடலுடன் கூடிய ஒரு வாழ்வியலை ஆவணம் ஆக்கிய மிக முக்கியமான காட்சி. மாற்றுத்திறனாளிகளை போற்றுவதாக கூறிக்கொண்டு ராகவா லாரன்ஸ் போன்ற கோமாளிகள் எடுக்கின்ற முட்டாள்தனமான படம் அல்ல அது. படத்தின் முடிவு கூட மகிழ்ச்சியுடன் தான் இருக்கும். உடல் குறைபாடுள்ள சகமனிதனின் சுயமதிப்பை பற்றி ஆராய்கிற ராஜபார்வை தமிழின் மிக முக்கியமான ஒரு திரைப்படம்.

எந்த மாற்றுத்திறனாளியும் அனுதாபம்‌ கோருவதில்லை. அவர்களுக்குத் தேவை அவர்களை இடையூறு செய்யாத ஒரு உலகம். ஆனாலும் உலகம் அவ்வாறு இல்லை தானே..

அன்பின் மிகுதியால் சிலர் எங்களுக்கு உதவி செய்வதாக நினைத்துக்கொண்டு எங்களுடைய சமநிலை தவறுவது போல சில செயல்களை செய்து விடுவார்கள். குறிப்பாக எனக்கெல்லாம் வலது கையை பயன்படுத்தி இடதுகையை காலில் ஊன்றிக்கொண்டு நடந்து செல்லும் உடலமைப்பு. ஆனால் உதவி செய்ய வருபவர் இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் மாற்றி வேறு கையைப் பிடிக்கும் போது நான் தடுமாறி விடுகிறேன். அது அவர்களது பிழையல்ல. அது அன்பின் ஒரு பகுதி என்று‌ நானும் உணர்ந்திருக்கிறேன்.

எங்கள் அமைப்பில் புதிதாக சேர்ந்த நண்பர் ஒருவர் என நேரடியாக அதுவரை பார்த்திராத ஒருவர், தஞ்சை கலந்தாய்வுக் கூட்டத்தில் என்னை முதன்முதலாக பார்த்தார்.‌ இன்று அவர் அலைபேசியில் என்னை அழைத்து இந்த உடல் சூழ்நிலையிலும் நீங்கள் கட்சி வேலை செய்கிறீர்கள், யூ ஆர் கிரேட் என்றெல்லாம் அன்போடு பேசிக்கொண்டிருந்தார். அதுகுறித்து நீண் ட நேரம் சிந்தித்துக் கொண்டிருந்தேன். உண்மையில் அமைப்பில் வேலை செய்வதுதான் என்னை சமநிலையில் வைத்திருக்கிறது என்பதை எப்படி அவரிடம் விளக்கி புரிய வைக்க முடியும் என்பதை பற்றி நான் சிந்தித்துக் கொண்டே இருந்தேன்.

நான் உலகத்தில் அதிகம் விரும்பும்‌ அனைவருமே என்னிடம் அனுதாபம் காட்டாதவர்கள். குறிப்பாக என் அம்மா. பிறகு அண்ணன் சீமான். பின்னர் என் மனைவி உள்ளிட்ட சில பெண்கள் என இவர்கள் யாருமே என்னிடம் அனுதாபம் காட்டியதில்லை. என்னை வெகுவாக விரும்பிய (disclaimer: அது மிக நீண்ட காலத்திற்கு முன்னால்…) ஒரு பெண் என்னிடம் சொன்னது இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. நீண்ட பயணத்தைக் கொண்ட ஒரு பணிக்கு என்னை அவள் அழைத்த போது என் உடல் நிலையை சிந்தித்து தான் இதை கேட்கிறாயா என நான் கேட்டதற்கு “உன்னால் ஒரு விஷயம் முடியாது என்று நான் இதுவரை நினைத்துக் கூட பார்த்ததில்லை. என் பார்வையில் இயல்பான மற்றவர்களைப் போலத்தான் நீயும் இருக்கிறாய். கிளம்பி வாடா”என்று அலட்சியமாகச் சொன்னாள்.

திருமணத்திற்காக நான் பெண் பார்க்கும்போது .. என் மனைவியிடம் நான் ஏதோ அறிவுரை சொல்வது போல பெரியவர்கள் சொல்வதை கேட்க வேண்டாம் எனவும் பிடித்திருந்தால் மட்டும் திருமணம் செய்து கொள்ளலாம் எனவும், விளக்கமாக அறிவுரை கூறி என் உடல் இருக்கும் தகுதி குறித்து அவளிடம் விளக்கி பேசினேன்.

அதை எல்லாம் அமைதியாக கேட்டு விட்டு நான் பேசிய எதையும் பொருட்படுத்தாமல், அவள் அப்பாவிடம் போய் சென்று “எனக்குத் திருமணம் என்ற ஒன்று ஆனால் இவரோடு தான்” என்று பெரியோர்களால் பேசப்பட்ட சாதாரண திருமணத்தை ஒரு அழகான காதல் திருமணமாக என் மனைவி மாற்றி விட்டாள்.

இந்த வரிசையில் என்னை மிகவும் வெறுக்கும் என் அரசியல் எதிரிகளும் வருகிறார்கள். அவர்களை நான் மிகவும் விரும்புகிறேன். அவர்கள் வசவுகளை எத்தனையோ முறை நான் ரசித்து இருக்கிறேன். அவர்களுக்கு நான் இவ்வளவு தொந்தரவாக இருப்பது குறித்து மட்டுமே வருந்தி இருக்கிறேனே தவிர, என் உடல் குறைபாட்டினை குறித்து எதையும் பொருட்படுத்தாது, அனுதாபமோ, கருணையோ காட்டாது என்னை தீவிரமாக எதிர்க்கும் அவர்களது எதிர்ப்பு கூட நான் விரும்புகிற ஒன்றுதான்.

ஏனெனில் ஒரு உலகம் இவ்வாறு அமைய எங்களைப் போன்றோருக்கு மிக மிக அரிது. எனது மகன்களுக்கு என் அப்பாவால் எல்லாம் முடியும் என்கிற மகத்தான நம்பிக்கை இருக்கிறது. அது நான் கொடுத்தது இல்லை. அவர்களாகவே மனதில் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போதெல்லாம் பல இடங்களுக்கு எனது மூத்த மகன் சிபி தான் என்‌ உடன் வருகிறான். என் கட்சி உறவுகள் போலவே அவனும் கவனமாக என்னை அழைத்துச் செல்கிறான்.

அண்ணன் சீமான் எப்போதும் நான் மேடை ஏறும் போது பார்த்துக் கொண்டிருப்பதாக பலர் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். என்னை அவர் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் எனக்குத் தெரியும். நான் தடுமாறி விடக்கூடாது என்பதில் அவர் மிகுந்த கவனம் கொண்டு இருக்கிறார் என்பதும் எனக்குத் தெரியும். சில சமயங்களில் தடுமாறும் போது அவரது சிறிய கணைப்பு போன்ற ஒரு ஒலி என்னை எச்சரித்து சுதாரிக்க வைத்திருக்கிறது. ஒருபோதும் என் அண்ணன் சீமான் எனக்கு எவ்வித சார்பும் செய்தததில்லை. உன்னால் முடியாது என்று அவர் எப்போதும் சொன்னதில்லை. இன்னும் உன்னால் முடியும் என்றுதான் என்னை எப்போதும் திட்டிக் கொண்டே இருக்கிறார். அதனால்தான் அவர் என் அண்ணன்.

அந்த வகையில் என்னை மதிப்பு மிகுந்தவனாக இந்த உலகம் நடத்தியிருக்கிறது. தம்பி மணிகண்டனுக்கும் ஏறக்குறைய அப்படித்தான். நான் எல்லாம் அவனை கடுமையாக திட்டி இருக்கிறேன். அவனும் சளைத்தவன் அல்ல. கல்லூரி வாழ்க்கை தொடங்கி சகலத்திலும் அவன் சேட்டைக்காரன் தான். சிறந்த பாடகன். பாடிப் பாடியே காதலித்து மனதுக்குப் பிடித்தவளைக் கரம் பிடித்தும் விட்டான்.தம்பி குடவாசல் மணிகண்டனின் மணவாழ்க்கை என்னைப்போலவே மகிழ்ச்சியாகவும், வெற்றிகரமாகவும் அமைய நான் மனதார வாழ்த்துகிறேன்.

திருமணம் முடிந்து வீட்டிற்கு திரும்பிய என் அம்மாவிற்கு மிகவும் மகிழ்ச்சி. சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.

அந்த மகிழ்ச்சியின் ஊடே நெடுங்காலமாய் சுமந்துவரும் ஒரு பெரும் வலியை அவர்கள் கரைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மட்டும் நான் அந்த நேரத்தில் உணர்ந்தேன்.

அம்மா என்றால் அப்படித்தானே.. மணிகண்டனுக்கு திருமணம் நடந்தால் என்ன.. எங்களைப் போல வேறு யாருக்கு நடந்தால் என்ன..

அம்மாவுக்கு எல்லாம் ஒன்றுதான்.

ஏனெனில் உலகத்தில் அம்மாக்கள் ஒரே மாதிரிதான்.

❤️

Page 2 of 6

Powered by WordPress & Theme by Anders Norén