பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Day: ஜூலை 15, 2010

பிரிவின் சாலை..

ஒற்றை இதழாய் உதிர்ந்து விட்டு போ.

நீரிலிருந்து பிரியும் தூண்டில் முள்ளைப் போல

என்னை சலனிக்காதே.

காற்றாய் கடக்க முயலாதே.

இரவின் புள்ளியில் இடமாறிய துயரம் போல

சின்ன பிசிறலாய் உணர்த்தி விட்டு செல்லாதே.

உந்தன் அசைவினை நான் உணராத கணத்தில்

கடந்து விடு.

உன் நிழலை என் மீது வரையாதே.

எதற்கும் உன்னை பரிசோதித்துக் கொள்

ஏதேனும் மிச்சம் இருந்தால் சுரண்டி எடுத்து விட்டுப் போ.

அது நானாக இருந்தாலும் கூட.

மிடறு விழுங்கி விரிந்த சொல்லில் துவங்காதே.

ஒரு யுக வாழ்க்கையை பிரிபடாத ஒற்றைச் சொல்லில் முடி.

குறுகிய பாதைகளில் ..இறுகிய தருணங்களில்..

எதிர்பட்டால் வலிக்காமல் இருக்க உதிர்ந்து விடு.

சிறகின் நுனி தீப்பற்ற பறந்து விடு.

உடைந்துப் போன ஒரு நொடியின் துளியில்

முடங்கட்டும் துளிர்த்தலுக்கான வேண்டல்.

முடிவிலியாய் தொடரும் பாதையில்

கண நேரத்து மெளனமாய் உறைந்து போ.

உறைவின் உறக்கத்தில் வாழட்டும் நம் பிரிவு.

கும்பகோணம் பள்ளியின் தீ விபத்து – நேர்காணல்களோடு ..நேரடி சாட்சியமாய் ஒரு பகிர்வு.


கடந்த 2004 ஆம் வருடம் ஜீலை 16 ஆம் நாள் கும்பகோணம் தீ விபத்தில் பலியாகிப் போன 94 குழந்தைகளின் நினைவு நாள் வழக்கம் போல விமரிசையாக நிகழ்த்தப்படுகிறது. அனைத்துக் கட்சி ஊர்வலம், பள்ளி வாரியாக குழந்தைகளை அழைத்து வந்து அஞ்சலி நிகழ்வுகள்.. கூட்டம் கூட்டமாக மக்கள் திரண்டு வந்து தீ விபத்து நிகழ்ந்த பள்ளியில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி எனஎப்போதுமே அமைதியாக இருக்கும் பள்ளி அமைந்துள்ள காசிராமன் தெரு இந்த ஒரு நாளில் மற்றும் போக்குவரத்து நெரிசல்களில் சிக்குகிறது. ஊரெங்கும் சுவர்களில் அரசியல் கட்சியினர், ரோட்டரி,லயன்ஸ் சங்கங்கள், மற்றும் வியாபாரிகள் சங்கம் ,தொழிலாளர்கள் சங்கம் என அனைத்து சங்கங்கள், அமைப்புகள் ஆகியவை சுவரொட்டி அடித்து ஒட்டி வைத்து தங்கள் சமூக உணர்ச்சியினை பதிவு செய்கிறார்கள். இதைத் தவிர வேறு எதுவும் இனிமேலும் இது போன்ற அவலம் நடக்கக்கூடாது என்ற இந்த நாளும் கழிகிறது மற்றொரு நாளாய்.

உண்மையில் வெட்கமாகத்தான் இருக்கிறது. தொழிற்நுட்பத்தின் உச்சக்கட்ட வளர்ச்சியினை உலகம் நுகர்ந்துக் கொண்டிருக்கும் போதுதான் ..விண்வெளி பயணம் என்பது பக்கத்து வீட்டிற்கு செல்வது போல என மிக சாதாரணமாகி விட்ட போதுதான்… எங்கிருந்தாலும் ஒரே நாளுக்குள் வந்து சென்று வந்து விடலாம் என உலகம் சுருங்கி விட்ட அதே காலக்கட்டத்தில் தான் .. கல்வி கற்கப் போன ஏழை வீட்டு குழந்தைகள் எவ்வித பாதுகாப்பும் இன்றி தீயினால் எரிந்துப் போனார்கள் . நாம் எவ்வளவு மோசமான ,புரையோடிப் போய் சீழ் பிடித்த ஒரு உலகில் வாழ்கிறோம் என்பதற்கு மிக நேரிடையான எடுத்துக்காட்டு கும்பகோணம் பள்ளி தீ விபத்து.

கும்பகோணம் பள்ளி தீ விபத்து நிகழ்ந்த கிருஷ்ணா பள்ளிக்கும் எனக்கும் நேரிடையான தொடர்பு உண்டு. நான் அந்தப் பள்ளியில் தான் என் 2 மற்றும் 3 ஆம் வகுப்புகளை படித்தேன். எனக்கு நன்கு நினைவில் இருக்கிறது. நான் படித்த காலக்கட்டத்தில் பள்ளியின் குறுகலான பாதையின் துவக்கத்தில் தலைமை ஆசிரியரின் அறை . பிறகு 5 ஆம் வகுப்பில் இருந்து தொடங்கி 1 ஆம் வகுப்பு வரை வலப்புறம் தமிழ் வழிக் கல்வி பயிலும் வகுப்புகள் . அதே போல அப்பாதை இடதுப் பக்கம் 5 ஆம் வகுப்பில் இருந்து தொடங்கி LKG வரை ஆங்கில வழிக் கல்வி. நான் தமிழ் வழிக் கல்வி 2 ஆம் வகுப்பு B பிரிவில் படித்தேன். அடர்த்தியான மீசை வைத்த வாத்தியார் ,எங்களால் முடியும் என்ற குழந்தைகள் திரைப்படம் , ஜெய்சங்கர் , கணேஷ் என்ற இரண்டொரு நண்பர்களின் பெயர்கள் என இவற்றினை தவிர வேறு எதுவும் நினைவில்லை. ஆனால் மறக்கவே முடியாமல் இருப்பது அப்பள்ளியின் நடுவே இருந்த மிக குறுகலான நடைபாதை. அந்த ஒரு பாதையில் தான் மாணவர்கள் சென்று வர இயலும்.

அதற்கு பிறகு அந்த பள்ளியை நான் பல்வேறு காலக் கட்டங்களில் பார்த்திருக்கிறேன். அந்த பள்ளி பல அடுக்குகளாக அச்சிறிய இடத்திற்குள் வளர்ந்தது. தீப்பெட்டி அடுக்குகள் போல வளர்ந்த அப்பள்ளியில் அப்பகுதியில் வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளும், பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களின் குழந்தைகளும் தான் படித்தன. அப்பள்ளிக்கு மிக நெருக்கமான தொலைவில் எனது வீடு இருப்பதால் ..என் வீட்டிற்கு முன்னால் இருக்கின்ற சுருட்டுப் பேட்டையின் பெரும்பாலான குழந்தைகள் அங்குதான் படித்தார்கள். ரிக்சா, ஆட்டோ ஒட்டுனர்கள், கொத்தானார் ,சித்தாள் வகையாறாக்கள் , செருப்பு தைப்பவர்கள் என சமூகத்தின் அடித் தட்டு மக்கள் வசிக்கும் அப்பகுதியின் பெரும்பாலான குழந்தைகள் அப் பள்ளியில் தான் படித்தன.

கடந்த 2004 ஆம் வருடத்தில் நீதிமன்றத்தில் நாங்கள் இருந்த போதுதான் அருகில் இருந்த தீ அணைப்பு நிலையத்திலிருந்து வண்டிகள் மிக அவசர கதியில் பாய்ந்து வேகமெடுப்பதை கண்டோம். தொடர்ச்சியான பரபரப்பிற்கு நடுவே தீயைப் போல செய்தியும் பரவியது. உள்ளூர் தொலைக்காட்சிகள் அந்த விபத்தினை நேரடி ஒளிப்பரப்பு செய்ததுதான் இன்னும் வேதனையை அதிகப்படுத்தியது . நானும் என் வழக்கறிஞர் நண்பர்களும் பள்ளி விரைந்து சென்ற பார்த்த போதுதான் நடந்துக் கொண்டிருக்கும் விபரீதம் புரிந்தது. பள்ளியின் 2 ஆம் தள ஜன்னலிருந்து கரு கருவென புகை வந்துக் கொண்டிருந்தது. யாரோ யாரோ பள்ளிக்குள் புகுந்து தீயினில் எரிந்துக் கரிக்கட்டைகளாகிப் போன குழந்தைகளின் உடல்களை அலறியப்படி தூக்கி வந்தனர். அங்கு கூடியிருந்த மக்கள் அனைவருமே அலறிய வண்ணம் இருந்தார்கள். பல தாய்மார்கள் என் குழந்தையை காணோமே.. என கதறிக் கொண்டிருந்தனர். அங்கு நின்ற காவல்துறையினர் தங்கள் சீருடைகளை கழற்றி எறிந்துவிட்டு உள்ளே பாய்ந்து குழந்தைகளை அள்ளிக் கொண்டு கத்திக் கொண்டே ஓடியதை நான் கண்டேன் . என்னோடு வந்த என் வழக்கறிஞர்கள் நண்பர்கள் அனைவரும் உள்ளே கத்திக் கொண்டு ஓடினார்கள். கும்பகோணம் அரசு மருத்துவமனையில் கூட்டம் பிதுங்கிற்று. கும்பகோணம் நகரம் முழுக்க விதவிதமான செய்திகள் பரவி மக்களை மென்மேலும் பீதியடையச் செய்தன. 200 க்கும் மேற்பட்ட குழந்தைகளை காணவில்லை என்றும் , குழந்தைகளை இழந்த பெற்றோர் பலர் தற்கொலை செய்துக் கொண்டார்கள் என்றெல்லாம் வதந்திகள் பரவிக் கொண்டே இருந்தன.

ஒரு நகரம் தான் மீளவே முடியாத உச்சக்கட்ட சோகத்திற்கு உள்ளாகி வெறுமையானது. நகரத்தில் கடைகள் அடைக்கப்பட்டு ஓட்டு மொத்த நகரமே தன்னையே மயானமாக்கி நின்றது.தெருக்களில் எதிரெதிர் கடந்துப் போனவர்களின் கண்கள் கலங்கி இருந்தன. இறுதியில் என் தெருவினைச் சேர்ந்த 11 குழந்தைகள் உள்ளீட்டு தீ விபத்தில் 94 குழந்தைகள் எரிந்துப் போனார்கள் . குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகமானதற்கு காரணமாய் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைதான் அனைவரையும் உலுக்கியது. தீ பிடித்தவுடன் அவசர கதியில் ஓடி வந்த பல குழந்தைகள் தங்களுடைய புத்தகப் பையை விட்டு விட்டு சென்றால் வீட்டில் பெற்றோர் அடிப்பார்களே என்று நினைத்துக் கொண்டு புத்தகப் பையையும், டிபன் பாக்ஸையும் எடுக்க மீண்டும் பள்ளிக்குள் ஓடிய போதுதான் தீக்கு பலியாகிப் போன கொடுமை நடந்தேறியது. தன் வறுமையான ஏழைப் பெற்றோரிடம் பல முறை சொல்லி போராடி வாங்கி ஆசை ஆசையாய் பாதுகாத்து வந்த புத்தகங்களும், நோட்டுகளும் காணாமல் போனால் எங்கே அப்பா, அம்மா அடிப்பார்களோ, மீண்டும் வாங்கி தர மாட்டார்களோ என்ற அச்சத்தில் அப்பாவியாய் இறந்தன குழந்தைகள்.

தினம் தோறும் பள்ளிக்கு ஒழுங்காக போகும் என் தெருவினைச் சேர்ந்த 2 ஆவது படித்த வெங்கடேஷ் அன்றைய தினம் உடல் நலம் இல்லை எனக்கூறி பள்ளிக்கு செல்ல மறுத்ததை குழந்தைகள் கூறும் வழக்கமான பொய்யாக நினைத்து குழந்தையை அடித்து தரதரவென இழுத்து வந்து பள்ளியில் கொண்டு விட்ட வெங்கடேஷின் அப்பா முருகானந்தத்தின் கதறல் இன்றளவும் என்னை நிம்மதியிழக்க செய்கிறது.

தீ விபத்து நடந்து 6 வருடங்களுக்கு மேலாகியும் அவ் வழக்கு வாய்தாவிற்கு வாய்தா நடந்துக் கொண்டிருக்கிறது. தற்போது வழக்கு தஞ்சைக்கு மாற்றப்பட்டுள்ளது. கொடிய அந்த தீ விபத்திற்கு பிறகு கும்பகோணம் நீதிமன்றத்திற்கு வந்த அப்பள்ளியின் தாளார் பழனிச்சாமியை வழக்கறிஞர்கள் அடிக்க பாய்ந்ததும் நடந்தது. இந்த விபத்தில் குழந்தைகள் தான் செத்தனரே ஒழிய அப்பள்ளியின் ஒரே ஒரு ஆசிரியர் கூட தீயிற்கு பலியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றளவும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் சீர்கெட்ட கல்விக் கொள்கைகளுக்கு சாட்சியாக இருக்கிறது அந்த எரிந்துப் போன கட்டிடம். தனது பணத்தாசையால் குறுகிய கட்டிடத்திற்குள் அளவுக்கதிமான குழந்தைகளை அடைத்து கொலை செய்த பள்ளி தாளாளரையும் அவருடைய அனைத்து மோசடிகளுக்கும் துணைப் போன கல்வித் துறை நிர்வாகிகளையும் இன்றளவும் கூட சட்டத்தினால் எதுவும் செய்ய இயலாமல் வாய்தாவிற்கு மேல் வாய்தா வழங்கிக் கொண்டிருக்கிறது. எல்லா விதிகளுக்கும் முரணாக குறுகிய இடத்தில் கட்டிடம், அனுமதிக்கப்பட்ட அளவினைக் காட்டிலும் அதிகமான குழந்தைகளை சேர்த்தது.., விபத்து நடந்த நேரத்தில் குழந்தைகளை மீட்க போதிய பணியாளர்கள் இல்லாதது போன்றவை காரணங்களாக இருக்கின்றன. மேலும் மதிய உணவிற்காக பற்ற வைத்த அடுப்பின் நெருப்பு பள்ளியின் கீற்று மேற்கூரைக்கு பரவி பிள்ளைகளை காவு வாங்கி இருக்கிறது. 94 பிள்ளைகளை பலி கொடுத்த பிறகே தமிழ்நாடு அரசு கீற்றுக் கொட்டகை வகுப்பறைகளுக்கு கெடுபிடி காட்டியது.

வழக்கு கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து தஞ்சாவூர் விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு இன்னமும் நடந்துக் கொண்டிருக்கிறது. குற்றப்பத்திரிக்கை இப்போதுதான் வழங்கி இருக்கிறார்கள். இன்னும் வழக்கின் விசாரணை துவங்கவில்லை.போபால் விஷ வாயு வழக்கில் நிகழ்ந்த தாமதக் கேடு இந்த வழக்கிலும் நிகழ்ந்து விடக்கூடாது என பதறி துடிக்கிறார்கள் குழந்தைகளின் பெற்றோர்கள். அரசாங்க தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் மதுசூதனன் என்ற ஆளுங்கட்சி வழக்கறிஞர் நியமிக்கப்பட்டிருக்கிறார். எது எதற்கோ டெல்லியில் இருந்து விமானத்தில் காசு கொட்டி கொடுத்து பிரபல வழக்கறிஞர்களை அழைத்து வரும் அரசு இந்த வழக்கில் மெத்தனமாக இருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது.

தீ விபத்து நடந்த பள்ளியில் வருடாவருடம் ஜீலை 16 ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்ச்சியினை நடத்துகின்றனர் இறந்துப்போன குழந்தைகளின் பெற்றோர்கள். இந்த நாளை குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க கோருகிறார்கள் இவர்கள். அங்கு இறந்த குழந்தைகளின் படங்களை ஒரே படமாக உருவாக்கி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அதில் ஒரு குழந்தை என்னை ஈர்த்தது. அக்குழந்தைக்கு புகைப்படம் இல்லை. புகைப்படம் இருக்க வேண்டிய இடத்தில் அக்குழந்தையின் பெயரான “ப்ரியா” என்று எழுதி வைத்திருக்கிறார்கள். இன்னொரு படமும் அப்படித்தான். புகைப்படம் இல்லாமல் உருவத்தினை வரைந்து வைத்திருந்தார்கள் எனக்கு கண்ணீரே வந்து விட்டது. ஒரு புகைப்படம் கூட எடுக்க இயலாத வறிய சூழலில் இருந்த அக்குழந்தைகள் கல்வி கற்பதற்காக வந்த இடத்தில் எரிந்து செத்திருக்கின்றன. குழந்தை பிறந்த நொடி முதல் ஹேண்டிகாமில் பதிவு செய்து பரவசப்படும் உலகில் தான் எவ்வித அடையாளமுமற்று இறந்து விட்டிருக்கிறாள் ப்ரியா.

மேலை நாடுகளில் குழந்தைகளை கொண்டாடுகிறார்கள். மிக சுகாதாரமான பள்ளியில் நல்ல வெளிச்சத்தில் ,சிறப்பான ஆசிரியர்களின் கற்பித்தலில் குழந்தைகள் வளருகின்றன. மிக சுகாதாரமான கழிவறைகளோடு , காற்றோட்ட வெளிச்சத்தில் வகுப்பறை என குழந்தைகளுக்கு சிறப்பான கல்வியோடு ,சூழலையும் இணைந்தே அளிக்கின்றன மேலை நாடுகள். ஆனால் நம் நாட்டிலோ தரமற்ற பள்ளியில் வெளிச்சம் இல்லாத வியர்வை புழுக்க அறையில் பிள்ளைகளை திணித்து, தகுதியற்ற ஆசிரியர்கள் கல்வி வழங்குகிறார்கள். பல பள்ளிகளில் கழிவறைகள் இல்லை.இருந்தாலும் பயன்படுத்த தகுதியற்று சுகாதரமற்று இருக்கின்றன.

இனிமேலும் கும்பகோணங்கள் உருவாக வேண்டாம் என்பதுதான் கும்பகோணத்துக்காரர்களின் வேண்டலாக இருக்கிறது. உலகின் மிகப்பெரிய தீமை மனிதனுக்குள் ஊறிக்கிடக்கும் சுயநலம் சார்ந்த சகிப்புத் தன்மை உணர்ச்சி. அந்த சகிப்பே வாழ்வின் எல்லா மட்டங்களிலும் சமரசங்களை தேடச் சொல்கிறது. வாழ்வதற்கான எவ்வித தகுதியும் இல்லாத சமூகத்தில் நாம் அனைத்தையும் சகித்துக் கொண்டு வாழ்கிறோம். குழந்தைகள் சாகின்றன.

குருட்டுக் கண்களைத்

திறந்துப்பார்த்தால் இருட்டுதான்

பிரகாசமாய்த் தெரிகிறது

செவிட்டுச் செவிகளை கூராக்கி முயற்சித்தால்

நிசப்தம்தான் கூச்சலாய் கேட்கிறது

நுகராத நாசியை நுழைத்துப் பார்த்தால்

சாக்கடை மணம் சுகந்தமாய் இருக்கிறது

உருமாறிப் போனவன்

உடல் மாறி

மனம் மாறினப் பின்.

ஆத்மநாமின் இரவில் பேய்கள் கவிதையிலிருந்து…


தமிழ் மணம் உறவுகளுக்காக தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் பெற்றோர் சங்க முதன்மையாளர் இன்பராஜ் அவர்களை நான் எடுத்த நேர்காணலின் ஒலி வடிவம்
(முதல் முயற்சி இது. அதனால் ஒலியை தரப்படுத்தி எடிட் செய்ய தெரியவில்லை.பொறுத்தருள்க)



போபால் பேரழிவு வழக்கு – அழிவினை மிஞ்சிய தலைகுனிவு.

மத்திய பிரதேச தலைநகர் போபாலில் கடந்த 1984 ஆம் ஆண்டு நடந்த உலக மகா பேரழிவுகளில் ஒன்றான விஷவாயு தாக்குதலில் சிக்கி தொழிலாளிகள், அப்பாவி பொதுமக்கள் என 20,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதும், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உடல் ,மனம் பாதிக்கப்பட்டு போனதும் உலக வல்லாதிக்க நாடுகளின் கைகளிலும், பன்னாட்டு நிறுவனங்களின் கைகளிலும் இந்தியா சிக்கி எவ்வாறு சீரழிந்து கிடக்கிறது என்பதனை அப்பட்டமாக காட்டுகிறது. 26 ஆண்டுகளாய் நடந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான விஷவாயு கக்கிய யூனியன் கார்பைடு ஆலையின் முன்னாள் தலைவர் வாரன் ஆண்டர்சனுக்கு எவ்வித தண்டனையும் இல்லை. கடந்த 1984 ஆம் வருடம் போபால் விஷவாயு பேரழிவிற்கு பிறகு சம்பவ இடங்களை பார்வையிட வந்த வாரன் ஆண்டர்சனை கைது செய்யப்பட்டு அவரது வீட்டிலேயே(?) சிறை வைக்கப்பட்டார். சிறைச்சாலைகளும், கைதுகளும் இல்லாத நாடு இது பாருங்கள் . அதனால் தான் ஆண்டர்சன் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார். எதன் காரணத்திற்காக ஆண்டர்சன் பொதுச் சிறைக்குள் வைக்கப்படாமல் வீட்டுச்சிறைக்குள் வைக்கப்பட்டார் என்பதற்கு யாரிடமும் எவ்வித விளக்கமும் இல்லை. அக்காலக்கட்டத்தில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. அப்போது மத்திய பிரதேசத்தின் முதல்வராக இருந்த காங்கிரஸின் மூத்த தலைவர்களுள் ஒருவரான அர்ஜீன் சிங் தன் அரசு விமானத்தில் உயரிய பாதுகாப்புகளோடு டெல்லிக்கு அனுப்பி வைத்தார். டெல்லியில் 20,000/- பேரைக் கொன்ற ஆலையின் தலைவர் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் உயரிய தலைவரான ஜனாதிபதியின் மாளிகையில் ஒரு நாள் விருந்தினராக தங்கி கூத்தடித்து விட்டு மறு நாள் அப்போதைய மத்திய அமைச்சர் நரசிம்மராவ் வழியனுப்ப உல்லாசப் பயணம் முடித்த திருப்தியில் அமெரிக்காவிற்கு பயணமானார் ஆண்டர்சன். இது குறித்து காங்கிரஸ் கட்சியினைக் கேட்டால் ஆண்டர்சனை விமானத்தில் ஏற்றி பறக்க விட்டது நாட்டு நலனை முன் நிறுத்தி தான் என சிரிக்காமல் விளக்கம் அளித்தது.

நாட்டு நலனை முன் நிறுத்தி காங்கிரஸ் கட்சி செய்து வருகிற செயல்களை பாருங்கள். இலங்கைக்கு ஆயுதம் வழங்கி தமிழனை கொன்றது ராஜ தந்திரம் என்றால்…போபால் மக்களை கொன்றது நாட்டு நலன். ஆண்டர்சன் தப்பித்து போனது கடந்த 2005 ஆம் ஆண்டு வரை எவருக்கும் தெரியாது. 20 ஆண்டுகள் கழிந்த விட்ட அரசின் ஆவணங்கள் ரகசியம் அப்புறப்படுத்தப்பட்ட ஆவணங்களாக வகைப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்ட பிறகே உண்மைகள் ஊருக்கு தெரிந்தன. இந்த லட்சணத்தில் அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியிடம் அப்போது இருந்த அமெரிக்க துணை தூதர் கார்டன் ஸ்டீரிப் மூலம் பேசி தப்பித்து போக உறுதிகள் வாங்கிக் கொண்டே ஆண்டர்சன் இந்தியா வந்ததாக தகவல் கூறுகின்றன. இதை விட வெட்க கேடு வேறு என்ன இருக்க இயலும்.? ஆண்டர்சனை இந்தியாவிற்கு கொண்டு வர கடும் முயற்சிகள் செய்வதாக சொல்லும் காங்கிரஸ் அரசுதான் அன்று ஆண்டர்சனை பாதுகாப்பாக அனுப்பி தப்பிக்க விட்டது. பொய் சொல்லுங்கள். ஆனால் பொய்யிலேயே வாழாதீர்கள் .

குற்றவாளிகளின் தோழனாக இந்தியா தன்னை எப்போதும் காட்டிக் கொண்டே வருகிறது. உலக மகா குற்றவாளியான ராஜபக்சே, வாரன் ஆண்டர்சன், டக்ளஸ் தேவனாந்தா, போர்பர்ஸ் ஊழலில் சிக்குண்ட இத்தாலிய தொழிலதிபர் குவாத்ரோச்சி என இந்தியாவின் குற்றவாளிகளின் பாசம் பரந்தது.

போபால் விஷ வாயு தாக்குதல் திடீரென ஏற்பட்ட விபத்தல்ல.1975 ஆம் ஆண்டில் யூனியன் கார்பைடு தொழிற்சாலை முன் மாதிரி உற்பத்திகளை செய்த போதே விஷவாயு தாக்குதலுக்கு காரணமான மீத்தைல் ஐசோ சயனைடு என்ற நச்சுத்திரவத்தினை இங்கு உற்பத்தி செய்யக்கூட்டாது என போபால் மாவட்ட தொழிற்சாலை ஆய்வாளர் ஆணை பிறப்பித்தார். அரசியல்வாதிகளின் நெருங்கிய நட்பைப் பெற்ற முதலாளிகளை பகைத்துக் கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு என்ன நடக்கும்..? நீங்கள் ஊகித்தது சரி. அது தான் நடந்தது. தொழிற்சாலை ஆய்வாளர் மாற்றப்பட்டார். 1979 ஆம் ஆண்டு முதல் மீத்தைல் ஐசோ சயனைடு உற்பத்தி தொழிற்சாலை வளாகத்திலேயே ஏகோபித்த அரசு ஆதரவோடு துவக்கப்பட்டது. பணத்திற்காக மனிதனை உண்ணும் வேலைக்கு அரசின் ஆதரவு கேட்காமலேயே வழங்கப்பட்டது. ஏனென்றால் தொழிற்சாலையின் முதலாளி ஆண்டர்சன் அமெரிக்காவினை சேர்ந்தவர். அமெரிக்கா கக்கூஸ் போனால் இந்தியா கால் அலம்பி விட வேண்டும் என்பது தான் எழுதப்படாத விதி.

1981 –ன் துவக்கத்தில் மீத்தைல் ஐசோ சயனைடின் கலத்தில் நச்சு வாயு கசிவு ஏற்பட்டது. அதனால் அங்கு பணிபுரிந்த பணியாளர் மரணமுற்றார். பிறகு ஒன்றிரண்டு மாதத்திற்குள்ளாகவே அங்கு பணிபுரிந்த வேதியியல் பொறியாளர் ஒருவருக்கு நச்சுவாயு பாதிப்பினால் கடுமையான காயங்கள். நச்சு வாயு கசிவினால் தொடர்ச்சியாக பணியாளர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வந்தார்கள்.இப்படி தொடர்ச்சியாக நச்சு வாயு கசிவுகள் ஏற்பட்டும் முதலாளி ஆண்டர்சன் இந்திய அரசியல்வாதிகளுக்கு இடையே இருந்த அபரிதமான செல்வாக்கினால் விஷ தொழிற்சாலை மிகச் சிறப்பாக ,எவ்வித தடையும் இல்லாமல் நடைப் பெற்று வந்தது. குறைந்தப்பட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளை கூட ஆண்டர்சன் தன் தொழிற்சாலையில் செய்யாததன் விளைவு போபால் தலைமுறை தலைமுறைகளாக சுடுகாடாய் மாறிப் போனது. திட்டமிட்டே இந்தியாவின் வறுமை மக்களை தன் பரிசோதனைக்கு பயன்படுத்தி பார்த்து விட்டு இப்போது வேடிக்கை பார்க்கும் அமெரிக்காவிற்கு அடிக்கடி போய் விருந்துண்டு வருகிறார் நம் மன்மோகன். சரி , சாப்பிட்டு ஏப்பம் விடும் நேரத்திலாவது ஆண்டர்சனைப் பற்றி ஓபாமாவிடம் ஏதாவது கூறி நடவடிக்கைகள் ஏதேனும் எடுப்பார் என்று எதிர்பார்த்து உட்கார்ந்தோமானால் நம் வாயில் நாமே மண்ணை அள்ளிப் போட்டு கொண்டதற்கு சமம். தன் சொந்த நாட்டு அப்பாவி மக்களை காப்பாற்ற வக்கில்லாத அரசு ஈழத்தமிழர்களை காப்பாற்ற கொலைகாரன் ராஜபக்சேவிடம் பணம் கொடுத்தனுப்புகிறது. இந்த சிக்னலை மிகச்சரியாக புரிந்துக் கொண்ட ராஜபக்சே கொடுத்த பணத்தினை அவனது தேர்தல் செலவிற்கு பயன்படுத்தி விட்டு தேர்தல் வந்தது, ஊர்வலம் வந்தது என சாக்கு சொல்கிறான் நலம் விசாரிக்கப் போன நம் நாட்டு எம்பிகளிடம்.

போபால் விஷவாயு வழக்கு 26 வருடங்கள் நடைப்பெற்று தண்டனைக்குள்ளான யூனியன் கார்பைடு முன்னாள் தலைவர் கேசவ மகேந்திரா உள்ளிட்ட 7 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்திரவிட்டுள்ளது போபால் நீதிமன்றம்.( 20,000 மக்களை கொன்றவர்களுக்கு ஜாமீன். மக்கள் செத்ததை பத்தி கேட்டா ஜாமீன் மறுப்பு. இது தான் சட்டமாய்யா ?-ன்னு என் கிட்ட கேக்காதீங்க. நாங்க சட்டத்தினை பாதுகாக்குற வழக்கறிஞர்கள் )

சரி . ஊழல் அரசியல்வாதிகளின் பணத்தாசைக்கும், வல்லாதிக்க முதலாளிகளின் பேராசைக்கும் பலியாகிப் போன மக்களுக்கு என்னங்க வழி..? இதுக்கு இன்னும் பல முறை அமைச்சரவை கூட்டங்கள் நடத்தி, ஆலோசனைகள் செய்து , ஏதோ கொடுக்கலாம் என்று அரசு யோசித்த யோசனையை பரிசீலித்து ..எப்படி மக்கள் செத்து 26 வருடங்கள் கழித்து குற்றவாளிகளுக்கு ஜாமீன் கொடுத்தோமோ…அதே போல மிக விரைவாக மக்கள் வாயில் அள்ளிப் போட இருக்கிறது மண் என முடிவு செய்துவிட்டனர் அரசியல் வாதிகள்.

போபால் அழிவினைக் காட்டிலும் தங்களது பேராசைகளுக்காக அப்பாவி மக்களை கொன்றவர்களை அரசும் ,நீதிமன்றமும் கையாளும் விதம் அதைவிட அழிவினை அளிக்கும் கொடுமைகள். தேர்தல் செலவுக்கு கோடானு கோடி ஒதுக்கும் அரசியல் வாதிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈடு அளிக்க தினந்தோறும் நடத்திக் கொண்டிருக்கின்றனர் அமைச்சரவை கூட்டங்கள். வேதனை.

Powered by WordPress & Theme by Anders Norén