அவருக்கு ஏதடா மரணம்..? 

நடு நிசியில் கரையும் கனவல்ல..
அவர்.

 எம் ஒவ்வொரு விடியலிலும் மேலெழும்பும்
 பறவையின் சிறகும் அவர்தான்..

சின்னஞ்சிறிய பறவைக்கான
சுதந்திர வெளி தந்த
 அந்த அதிகாலை வானமும் அவர்தான்..

அவர்தான்..
செங்கல்பட்டிலும்..
 நெய்வேலியிலும்..
இராமேஸ்வரத்திலும்..
நெல்லையிலும்..
இன்னும்..இன்னும்
தெருக்கள் தோறும்..
இங்கு உரத்தக் குரல்களில்
பொங்கும் முழக்கங்களாக…

அவர்தான்..
 இங்கு உயரும் கரங்களில்
 மிளிரும் துடிப்பாக…

 அவர்தான்..
கடற்கரை மணலில்
உறவுகளுக்காக ஒளிரும்
 தீபங்களாக..

அவர்தான்..
மூவர் உயிர்க் காக்க
மூண்டெழுந்த
 ஆவேச நெருப்பாக…

அவர்தான்..
முல்லைப் பெரியாற்று அணையின்
பலமாக பூத்திருக்கும்
 தமிழ் இன ஓர்மையாக..

 அவர்தான்..
கூடங்குளத்து அணு உலையை
அகற்ற சொல்லும் மக்கட் திரளாக..

அவர்தான்..
இங்கு… அனைத்துமாய்..

 சாதி திமிறுக்கு எதிராக..
 மத வெறிக்கு எதிராக…
ஒலிக்கும் குரல்களில்
 அவர்தான்
 ஒளிந்திருக்கிறார்..

 பிழைப்பினை அரசியலாக
வைத்து கிடப்போரின்
பித்தலாட்ட முகமூடி கிழிக்கும்
 எளியவனின் ஆவேசத்தில்
அவர்தான் மலர்ந்திருக்கிறார்..

 முத்துக்குமாராய்..
செங்கொடியாய்..
இன்னும்..இன்னும்…
அவர்தான் பரவுகிறார்..
பரப்புகிறார்..

அவர்தான்
இங்கு அனைத்துமாய்…

பிரளயமாய்…
பிரவாகமாய்…
பிரபாகரனாய்..

 உயிர்ப்பிற்கும்.. துளிர்ப்பிற்கும்..
என்றும் இல்லை மரணம்.