பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Day: ஜூன் 18, 2016

தமிழரின் வரலாற்றுப் பயணம் – தமிழ்த்தேசியச் சுவடுகள் 3

 

4853487286_8a81f5ba7f_z

 

 

பின்னே திரும்பி பார்க்காதவன் முன்னே பார்க்கும் பார்வையை இழக்கிறான் என்கிறார் மாவீரன் அலெக்சாண்டர். நம்முன்னே விரிந்துக்கிடக்கும் கடந்த காலங்களின் சுவடுகளை கவனிக்காது, அறியாது எதிர்காலத்தின் பாதையை நம்மால் தீர்மானிக்க முடியாது. எனவே தமிழன் எவ்வாறு ஒரு தேசிய இனமாக உருவாக்கம் கொண்டான் என்பதற்கான பயணத்தில், தமிழரின் வரலாற்றுப் பாதையையும் நம் அறிவு வெளிச்சம் கொண்டு ஒரு பார்வை பார்த்து விட்டு வருவோம்.

ஆற்றங்கரையோரம் பிறந்தான் மனிதன். ஆற்றங்கரைகளே மனித இனத்திற்கான தொட்டில்களாக அமைந்தன . சுமார் 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன் அறிவாய்ந்த  குரங்கினம் பரிணாம வளர்ச்சியினால் மனி்த சாயலை அடைகின்றன. 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்  ஹோமோ செப்பியன்ஸ் என்ற அழைக்கப்பட்ட சற்றே மேம்பட்ட மனித குரங்கினம் தற்கால மனிதனின் மூதாதை எனக் கொள்ளலாம் என அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். குரங்கிலிருந்து உருமாறிய மனித இனம்  சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக தனக்குள்ளாக தகவல்களை பரிமாறிக் கொள்ள ஒரு வலிமை வாய்ந்த ஊடகத்தை தனது அறிவாற்றல் மூலம் அடைந்தது. அந்த தகவல் பரிமாற்ற கருவியே மொழியாகும்.

மொழியே மனித இனத்தை தனித்துவப்படுத்தும் வலிமை வாய்ந்த அடையாளமாகும்.  அதுவே மனித இனத்தை வளர்த்தெடுத்தது. விலங்காக திரிந்த மனித இனம் தனக்கென ஒரு மொழியை அடைந்த பிறகு அதன் பரிணாம வளர்ச்சி பன்மடங்கு அதிகரித்தது. மொழி மூலமாகவே மனிதன் சிந்தித்தான். மொழி மூலமாகவே அவன் உரையாடினான். மொழி மூலமாகவே அவன் பலவற்றை கண்டறிந்தான். மொழி மூலமாகவே மற்ற விலங்குகளை காட்டிலும் மேம்பட்டவனாக மனிதன் மாறினான்.

எனவே தான் ஒரு தேசிய இனத்தின் தலையாய அடையாளமாக மொழி வகுக்கப்படுகிறது.  மனித இனம் கண்டறிந்த முதன் மொழியாக தமிழ் மொழி இருந்தது என்பதை பல ஆய்வுகள் மூலம் தமிழறிஞர்கள் நிறுவி உள்ளார்கள். கல் தோன்றி,மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் என்கிறார்கள்.  முதன் முதலாக மாந்த இனம் தோன்றியது ஆப்பிரிக்கா தொடங்கி தற்போது மடகாஸ்கர் இலங்கை,தென்னிந்தியா உள்ளீட்டு நீண்ட பரவிக் கிடந்த பெருநிலத்தில்தான் என நம்மினத்தின் மாபெரும் அறிஞர் பாவாணர் பல ஆய்வுகள் மூலம் நிறுவி உள்ளார். அந்த பெரு நிலமே லெமூரியா என்றும் கொந்துவானா என்றும் அழைக்கப்படுகிற குமரிக் கண்டமாகும்.  கால ஓட்டத்தில் விளைந்த பல்வேறு கடற்கோள்களால் குமரிக் கண்டம் அழிந்தது. ஒரே நிலமாக சேர்ந்திருந்த இலங்கை, தமிழ்நாடு ,ஆப்பிரிக்கா போன்ற பகுதிகள் படிப்படியாக பிரிந்து தனித்தனி நிலங்கள் ஆயின. இன்றும் இலங்கையில் கண்டெடுக்கப்பட்டு வருகிற பழம் பொருட்களில் தாயக தமிழகத்தின் வரலாற்று நிழல் படிந்துள்ளதை சிங்கள அறிவுலகம் திட்டமிட்டு இந்திய அரசுடன் கூட்டுச்சேர்ந்து மறைத்து வருகின்றன. “ பஃறுளியாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள “ என இந்நிகழ்வுகளுக்கு சான்றளிக்கிறது தமிழரின் முதுபெரும் காப்பியமான சிலப்பதிகாரம்.

தமிழ் மொழியே உலகின் மூத்த முதற் மொழி என்பதற்கு உலக மொழிகளில் பரவிக் கிடக்கும் தமிழின் வேர்ச் சொற்களே சாட்சி. உலகின் பெரும்பாலான மொழிகளின் எழுத்து முறையில் தமிழ் எழுத்துக்களின் வடிவங்கள்  நீக்கமற நிறைந்துள்ளதாக மொழியியல் அறிஞர்கள் தொடர்ச்சியான தனது ஆய்வுகள் மூலம் நிறுவி இருக்கிறார்கள். மொழியியல் ஆய்வின் பெரும் வித்தகராக விளங்கும் பெருந்தமிழர். அய்யா. அருளியார் அவர்கள் தனது ஆய்வுகளில் பலவற்றில் உலக மொழிகளில் பரவிக் கிடக்கும் தமிழ் மொழியின் வேர்ச் சொற்களை கண்டறிந்து பதிவு செய்து இருக்கிறார்.

கி.மு.3500 முதல் கி.மு.2700 வரை நாகரீக வளர்ச்சியில் உச்சம் பெற்றிருந்த சிந்து சமவெளி நாகரீகமும் தமிழரின் நாகரீகமே என அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  சிந்துசமவெளி நாகரீகத்தில் காணப்படும் எழுத்து வடிவங்களுக்கும், பண்டைய தமிழ் எழுத்துக்களுக்கும் நெருங்கிய வடிவ தொடர்பு இருப்பது ஏற்கனவே நிறுவப்பட்டு விட்டது. சமீபத்தில் பழனி அருகே தி.கூடலூரில் சுமார் 4500 ஆண்டுகளுக்கு முந்தைய சிந்து சமவெளி நாகரீக எழுத்துக்களுடன்  கூடிய பழமையான கற்கால கருவி கிடைத்துள்ளது   இக்கருவியில் காணப்படும் எழுத்து வடிவம் சிந்துசமவெளி பகுதியில் பயன்படுத்தப்பட்ட 396 ஆவது எழுத்துடன் ஒத்துப் போவதாக இக்கருவியை கண்டுபிடித்த தொல்லியல் ஆய்வாளர் நாரயணமூர்த்தி மற்றும் ஆர்வலர் வெங்கடேசன் தெரிவிக்கிறார்கள்.(தினமணி 22-1-2015 )

சிந்துசமவெளி காணப்படும் சுட்ட களிமண்ணால் தயாரிக்கப்பட்ட செங்கற்களால் கட்டப்பட்ட வீடுகளின் அமைப்பும், அதன் ஒழுங்கும் தமிழர் நாகரீக வளர்ச்சிப் போக்கிற்கு மிக நெருக்கமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிந்துவெளி மக்கள் சிவ வழிபாடு நம்பிக்கை உடையவர்களாக விளங்கியதற்கும் சான்றுகள் இருக்கின்றன. மேலும் சிந்துசமவெளி நாகரீகத்தில் காணப்பட்ட பல பொருட்கள் ,தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களுடன் ஒத்துப்போவதையும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள். சிந்துவெளி நாகரீகத்தின் மீது படையெடுத்த சுரா பானம் அருந்தும் ஆரியர் சுரா பானம் அருந்தாத அசுரர் என அழைக்கப்பட்ட தமிழர் வாழ்ந்த சிந்துவெளி நாகரீகத்தினை வென்று இந்திய துணைக்கண்ட பெருநிலத்தில் நுழைந்தனர் என்பதை ஆரியர்களின் பாடல்களை உள்ளடக்கிய ரிக் வேதம் தனது பாடல்களின் மூலம் அடையாளப்படுத்துகிறது.

ஏறக்குறைய சிந்து சமவெளி நாகரீகத்திற்கு முன்பே  இன்றிலிருந்து 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தற்போதைய பூம்புகாருக்கு கிழக்கே கடலுக்கு அடியில் புதைந்து கிடக்கும் உலகின் பழம் பெரும் நகர நாகரீகம் தமிழர்களுடையது.

எனவே மற்ற மாந்த இனங்கள் காட்டுமிராண்டிகளாய்,விலங்குகளாய், காட்டில் விலங்குகளாய் திரிந்துக் கொண்டிருந்த காலத்திலேயே தமிழர்கள் நகர நாகரீகம் கண்டு வாழ்வாங்கு வாழ்ந்திருக்கிறார்கள் .

தாய்மொழிக்கென சங்கம் வைத்து அதன் மூலமாக தன் மொழி விழுமியங்களை காப்பாற்ற தமிழர் படைத்தவைதான் சங்க இலக்கியங்களாக ,மாபெரும் வரலாற்றியல் ஆவணங்களாக நம் முன்னால் காணக்கிடைக்கிறது. தொல்காப்பியம் தொடங்கி, எட்டுத்தொகை,பத்துப்பாட்டு என விரிந்துக் கிடக்கின்றன பண்டைத்தமிழரின் வாழ்வும்  அறிவும் . அகமும்,புறமும் என காதலும்,வீரமும் கொண்டு “யாதும் ஊரே,யாவரும் கேளீர்” என உலகம் தழுவி நேசித்த மாபெரும் இனம் தமிழினம்.

 

1414923376319297_430844540292273_1507862722_n download (1)

குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை என ஐவகை நிலங்கள் ஐந்திணைகளாக பிரிக்கப்பட்டு ,ஒவ்வொரு திணைக்குமாக தனித்தனி பண்பாட்டியல் சுவடுகளோடு வாழ்ந்தான் தமிழன். கி.மு 500 முதல் கி.பி 600 வரையிலான காலக்கட்டத்தில் சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் கடல் கடந்து சென்றும், வடவரை வென்றும் தமிழர் பெருமைகளை நிலைநாட்டினர். கரிகாற் சோழன் சிங்களம் மீது படையெடுத்து  சிங்களர்களை பிடித்து வந்து காவிரிக்கு கரை எழுப்பினான். கல்லணை கட்டி ஆற்று நீரை பாசனத்திற்கு பயன்படுத்த முடியும் என உலகத்திற்கே நீர் மேலாண்மை அறிவியலை முதன்முதலாக அறிமுகம் செய்தவன் கரிகாற்பெருவளசோழ மன்னன்.  வடவரான ஆரியனை வென்று ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனாய்  பாண்டியன் மிளிர்ந்தான். சேரன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயம் வரை படையெடுத்து சென்று இமயமலையில் வில் கொடியை பொறித்து திரும்பினான்.  கனக விசயர் என்ற வட மன்னர்களை வென்று அவர்கள் தலையில் கல் சுமக்க செய்து, கண்ணகிக்கு கோவில் கட்டினான் சேரன் செங்குட்டுவன்.

பண்டைய தமிழ் மன்னர்களை களப்பிரர்கள்,பல்லவர்கள் ஆகிய பிற இன மன்னர்கள் படையெடுப்பினால் வீழ்த்தி தமிழ்ப்பெரு நிலத்தின் ஆட்சி அதிகாரத்தினை ஆண்டனர். இவற்றில் களப்பிரர்கள்,பல்லவர்கள் பிற இனத்தவர் இல்லை ..அவர்களும் தமிழர்களே என சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

களப்பிரர்,பல்லவர் வீழ்ச்சிக்கு பிறகு பிற்கால சோழர் ஆட்சியிலும், பிற்கால பாண்டியர் ஆட்சியிலும் தமிழர் மாபெரும் புகழ் வாழ்க்கையை வாழ்ந்தனர். உலகம் முழுக்க படையெடுத்து வெல்லும் திறன் உடையவராக புலிக்கொடி ஏந்திய தமிழர்கள் விளங்கினார்கள் என்பதற்கு பிற்கால சோழர் வரலாறு சான்று பகிர்கிறது. பிற்கால சோழர் வரலாற்றினை ஆய்வு செய்த பெருந்தமிழர் சதாசிவ பண்டாரத்தார் பிற்கால சோழர் குறித்து பல முக்கிய ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார்.

இன்று நமக்கு  கிடைத்துள்ள பல தரவுகளும், ஆவணங்களும்,கல்வெட்டுகளும்,நூல்களும் இவற்றின் அருமை உணர்ந்து பாதுகாத்து  வைத்த பல அறிஞர்களின் உழைப்பால் விளைந்தவை என நாம் நினைத்து பார்க்க வேண்டும்.

-தொடர்ந்து கற்போம்..கற்பிப்போம்…புரட்சி செய்வோம்.

 

வாசிப்போம்..அறிவை யாசிப்போம்

ஏன் வேண்டும் தமிழ்த்தேசியம் … கோவை ஞானி வெளியீடு –புதுப்புனல்.  பக்கங்கள் -64 விலை:ரூ.50/-

 

 

தேசிய இனங்களும்- தமிழ்த்தேசிய இன உருவாக்கமும்- தமிழ்த்தேசியச் சுவடுகள் 2

 

lemuriaவரலாறு என்பது கால வீதிகளில் தடம் பதித்து,புகழ் மணக்க வாழ்ந்த பெரு மன்னர்களின்,புகழ் மனிதர்களின் வாழ்க்கை கதையாகவே பதியப்பட்டிருக்கிறது.  அப்படியென்றால்..காலங்காலமாக சாதாரணமாக வாழ்ந்த எளிய மக்களைப்பற்றி, அவர்களின் வாழ்வியலைப்பற்றி தெரிந்துக் கொள்ள,ஆய்வு செய்ய எழுதப்பட்டுள்ள வரலாறு அனுமதிக்கிறதா என்றால் கசப்பான உண்மை இல்லை என்பதே..

மக்களின் வரலாறு எழுதப்பட வேண்டும் என புதிய வரலாற்றுத்துறை நிபுணர்கள் விருப்புகிறார்கள்.மனித சமூகங்களின் வரலாறு நேர்மையாக எழுதப்பட்டிருந்தால், நிகழ்காலத்தில் நடக்கிற எத்தனையோ பிரச்சனைகளுக்கான,முரண்களுக்கான தொடக்கப்புள்ளியை நாம் கண்டறிந்திருக்க முடியும் . மனித சமூகம் தொடக்கத்திலிருந்தே தனது அடையாளங்களை,தனது நிலப்பரப்பை, தனது பண்பாட்டை காத்துக்கொள்ள தனது உயிரையும், உதிரத்தையும் சிந்திப்போராடி வந்திருக்கிறது.  எப்போதும் தனது நிலையை விட ஒரு உன்னதமான நிலையை நோக்கியே மானுடச்சமூகம் நகர்வதை, நகரத்துடிப்பதைதான் நாம் வரலாற்றின் ஏடுகளில் தொடர்ச்சியாக வாசித்து வருகிறோம்.

தனக்குரிய அடையாளங்களான மொழி,நிலம்,பண்பாடு போன்ற விழுமியங்களை காத்துக்கொள்ள,அவற்றையே தனது முகவரியாக,முகமாக கொள்ள மானுடச் சமூகம் தயாரானப் புள்ளிகளில் இருந்துதான் தேசிய இனங்கள் தோன்றுகின்றன. கடந்த 15 ஆம் நூற்றாண்டு தான் தேசிய இனங்களுக்கான தொடக்கத்தை நிகழ்த்திய காலக்கட்டமாக நாம் கருதலாம். அக்காலக்கட்டத்தில் தான் ஐரோப்பா கண்டத்தில் பல தேசிய இனங்களை சார்ந்த அரசுகள் உருவாகத்தொடங்கின.  சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்றவற்றை முழக்கங்களாக கொண்டு  18 ஆம் நூற்றாண்டில் உருவான பிரெஞ்சு புரட்சியும், 19 ஆம் நூற்றாண்டில் உருவான பல்வேறு தேசிய இனங்களின் எழுச்சியும்,உலகம் தழுவிய தேசிய இனங்களுக்கான விழிப்பினை தந்தன. ஒரே ஒரு தேசிய இனம் மட்டும் வாழ்கிற நாடுகளும், பல்வேறு தேசிய இனங்கள் வாழக்கூடிய நாடுகளும் தோன்ற தொடங்கிய பிறகு, உலகில் வாழும் பல்வேறு தேசிய இன மக்களும் தங்களது நிலம்,மொழி,பண்பாடு போன்ற அடிப்படை விழுமியங்களை காக்க போராடத்தொடங்கின.

இந்தியா போன்ற பல்வகை தேசிய இனங்கள் வாழக்கூடிய நாடுகளில் அந்தந்த தேசிய இனங்கள் தங்களது அடிப்படைத்தன்மைகளை இழந்து விடாமல் ,கடுமையான போராட்டங்களை சந்திக்கின்றன. மண்ணின் ஆதிக்குடிகளான தேசிய இன மக்கள் தங்கள் உரிமைகளுக்காக,விடுதலைக்காக குரல் கொடுப்பதும், போராடுவதும் அவற்றை இத்தேசிய இனங்களை அடிமைப்படுத்தி ஆண்டு வருகிற ஆளும் வர்க்கம் தனது அதிகாரத்தின் முனை கொண்டு நசுக்குவதும் இந்நாடுகளில் இயல்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் நாம் தேசிய இனம் அல்லது தேசம் என்ற சொல்லுக்கும், நாடு என்கிற சொல்லுக்கான வேறுபாட்டை தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும்.

தேசம் அல்லது தேசிய இனம் என்பதற்கு ஆங்கிலத்தில் Nation என்ற சொல் இருக்கிறது. இதன் மூலச்சொல் Natio என்கிற இலத்தீன் மொழி சொல்லாகும்.  Natio என்றால் பிறந்த இடம்,பிறந்தது எனப் பொருள். இச்சொல்லும் கூட Natus என்கிற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்ததாக அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள்.  Natus என்கிற சொல் கூட நாடு என்கிற தமிழ்ச்சொல்லில் இருந்து பிறந்ததாக  சிந்தனைச்செம்மல் கு.ச. ஆனந்தன் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஒரு தேசம் அல்லது தேசிய இனம் நான்கு அடிப்படைத்தன்மைகளை பெற்றிருக்க வேண்டும் என தோழர்.ஜே.வி.ஸ்டாலின் குறிப்பிடுகிறார்கள். அதன் பொருள் இந்த நான்கு தன்மைகளை பெற்றிருந்தால் தான் ஒரு இனம் தேசிய இனமாக வரையறுக்க முடியாது. அவையாவன. 1. பொது மொழி 2. தொடர்ச்சியான ,வரலாறு மூலமாக வரையறுக்கப்பட்ட நிலப்பகுதி 3. சற்றே ஏறக்குறைய ஒரு பொதுவான பொருளாதார வாழ்க்கை, 4. பண்பாட்டு விழுமியங்களில் வெளிபடுகிற ஒரே இனம் என்பதற்கான மனநிலை. இந்த 4 அடிப்படை தன்மைகளையும் கொண்டு வரலாற்றில் கால ஓட்டத்தில் உருவான மக்கள் கூட்டமே அல்லது மக்கள் சமூகமே ஒரு தேசிய இனம் அல்லது தேசமாகும்.

வரலாற்றின் கால ஒட்டத்தில் உருவான மக்கள் கூட்டம் என்றால்  பல்வேறு காலக்கட்டங்களில் ஒன்று சேர்ந்த சேர்ந்த பல இன மக்கள் ஒரு தேசிய இனமாக மாறி விடுதல் என்பது பொருள். உலகத்தில் இருக்கின்ற தமிழ்த்தேசிய இனம் உள்ளீட்டு எந்த ஒரு தேசிய இனமும் காலங்காலமாக இருந்து வரும் தூய, பிற இனங்கள் கலக்காத, மரபினம் அல்ல. படையெடுப்பு,இடம் பெயர்வு போன்ற காரணங்களால் வரலாற்றின் போக்கில் வந்து சேர்ந்த பல இன மக்கள்  ஆனால் தன்னை ஓரினமாக உணர்கிற மைய உளவியல் தான் ஒரு தேசிய இன உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இக்கருத்தினை 20 ஆம் நூற்றாண்டின் இந்திய வரலாறு என்ற கட்டுரையில் பேரா.முனைவர்.த.செயராமனும் உறுதி செய்கிறார். இவ்வாறாக சேர்கிற பல இன மக்களில் குறிப்பிட்ட இனமக்கள் மட்டும் தங்களது தனித்த அடையாளங்களை,மொழியை,பண்பாட்டு கூறுகளை,நலன்களை  காப்பாற்றிக்கொண்டு தொடர்ந்து வாழ்வாராயின் அவர்கள் தேசிய இன வரையறைக்குள் அடங்க மாட்டார்கள் என்பதையும் நாம் நினைவுப் படுத்திக் கொள்ள வேண்டும்.

பல தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இந்தியா திகழ்கிறது. இந்தியா /இந்தியர் ஒரு தேசம்/ தேசிய இனம் அல்ல. பல்வேறு தேசிய இனங்கள் வாழ்கிற ஒரு நாடே இந்தியா.இந்தியா ஒரு தேசம் என்பதும், இந்தியர் ஒரு தேசிய இனம் என்பதும் அடிப்படையில்லாத, வரலாற்று அரசியல் புரிதலற்ற வார்த்தைகளாகும்.

ஒரு நாடு என்பது வரம்பற்ற அதிகாரத்தோடு (இறைமை ) ஒரு மக்கள் கூட்டம் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழ்வதை குறிக்கும்.  ஒரு நாட்டில் பல்வேறு தேசிய இனங்கள் /தேசங்கள் இருக்கலாம். எடுத்துக்காட்டாக இந்தியாவில் 14 க்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் இருப்பதாக ஒரு ஆய்வு பகர்கிறது.  ஒரு தேசம் ஒரு நாடாக இருக்கலாம்.ஆனால் ஒரு நாடு தேசமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.எடுத்துக்காட்டாக பங்களாதேஷ் என்பது வங்களம் மொழி பேசக் கூடிய ஒரு தேசிய இன மக்கள் வாழக்கூடிய ஒரு தேசம். இது நாடாகவும் இருக்கிறது. ஆனால் இந்தியா என்கிற நாடு ஒரு தேசமல்ல. ஏனெனில் இந்தியர் என்கிறவர்கள் ஒரே மொழி பேசக்கூடிய மக்கள் கூட்டம் இல்லை. இந்தியர் என்பது தேசிய இனம் இல்லை. பல தேசிய இன மக்கள் வாழக்கூடிய நாடு இந்தியா.

ஆனால் தொடர்ச்சியாக இந்தியாவை ஒரு தேசமாக உருவாக்கி விட ஆதிக்க வாதிகளும், இந்தியா ஒரே நாடாக இருப்பதால் பலனடையும் மாபெரும் முதலாளிகளும் முயன்று வருகிறார்கள். அதன் வெளிப்பாடுதான் இந்தியா முழுக்க ஒரே மொழி- சமஸ்கிருதம்,இந்தி ,இந்தியா முழுக்க ஒரே மதம் –இந்து மதம்  போன்றவற்றை நடைமுறைப்படுத்த அரசுகள் தொடர்ச்சியாக முயன்றுவருகிற முயற்சிகள். இந்துக்கள் தவிர வேறு யாருக்கும் ஓட்டுரிமை இல்லை என பாஜக எம்பி பேசுவதும் இத்தகைய தன்மை கொண்டதுதான். இவற்றிக்கிடையே தான் தனித்தே பல சிறப்புகளை கொண்ட தமிழ்த்தேசிய இனம் தனது அடையாளங்களை தக்க வைக்க இம்முயற்சிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக போராடி வருகிறது.

தமிழர்கள் ஒரு தனித்த தேசிய இனமாக விளங்குகிறார்கள். அவர்களுக்கு என்று உயரிய புகழ்வாய்ந்த, வரலாற்று நீட்சிக் கொண்ட தமிழ் மொழி என்கிற தாய் மொழி இருக்கிறது.

வரலாற்றிலேயே  புகழ்பாடும்”வடவேங்கடம்-தென் குமரி” என அவ்வப்போது மாறினாலும் நிரந்தர,பொதுவான நிலப்பரப்பு இருக்கிறது.  ஏறக்குறைய ஒரு பொதுவான பொருளாதார வாழ்வை தமிழர்கள் கொண்டிருக்கிறார்கள். தாய்த் தொழிலாக விவசாயம் விளங்குகிறது. தமிழருக்கென தனித்தே இருக்கிற பொதுவான பண்பாட்டு அடையாளங்களில் தாம் ஒரினம் எனபது வெளிப்படுகிறது. சாதீய முரண்கள் இருந்தாலும் தமிழரின் தேசியத் திருவிழாவாக பொங்கல் திருநாள் விளங்குகிறது. ஜல்லிக்கட்டு,கபடி,பறை இசை இன்னும் பல்வேறு நுட்பமான அடையாளங்களில் தமிழ்தேசிய இனம் ஓரினம் என்பதை வெளிப்படுத்தி, வரலாற்றின் போக்கில் ஒரு தேசிய இனமாக உருவாகி இருக்கிறது.

ஆனால் இந்தியா என்கிற தேசிய இனங்களின் சிறைக்கூடத்தில் தமிழர் என்கிற தேசிய இன மக்கள் தங்கள் மொழியை காக்க, பண்பாட்டு அடையாளங்களை காக்க பெரும் போராட்டத்தை மேற்க்கொள்ள வேண்டி உள்ளது. அவ்வாறு எழும் தமிழ்த்தேசிய இன உணர்வினை பிளக்க,முறிக்க வெளிச்சதிகளும், உட்முரண்களும் காரணங்களாக அமைகின்றன.

தமிழர்மரபும், நாம் தமிழர் அமைக்க முயல்கிற சமூகநீதியும்..

ayouth_2217504f

வெகு காலமாகவே சமூக நீதி இயக்கங்களுக்கும், தமிழ்த்தேசிய இயக்கங்களுக்கும் உள்ள இடைவெளி வரலாற்றுப் பூர்வமானது. தமிழகத்தின் வரலாற்றில் சமூக நீதிக்கான குரல்கள் வெகுகாலத்திற்கு முன்பே ஒலிக்கத் தொடங்கி விட்டன . ஆனால்  20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நீதிக்கட்சி சமூகநீதி தளங்களில் ஏற்படுத்திய அதிர்வுகள் கவனிக்கத்தக்கவையாக அமைந்தன. தமிழ்த்தேசிய உரிமைக்கான வரலாறும் இத்தகைய தன்மை உடையதுதான்.  தமிழ்த்தேசிய இனம் வரலாற்றின் போக்கில் உருவான தருணத்தில் இருந்தே அதற்கான உரிமைக்குரல்களும் தோன்றின. பழந்தமிழ் இலக்கியங்களும்,ஒலைச்சுவடிகளும் ஏற்படுத்திய இலக்கியச் செழுமை தமிழ்த்தேசிய இன ஒர்மைக்கு அடிப்படையாக திகழ்ந்தன.  தமிழ்த்தேசிய இயக்கங்களுக்கும், சமூக நீதி இயக்கங்களுக்கும் இடையிலான  அடிப்படை முரண்களை புரிந்துக் கொள்ள வேண்டும். சமூக நீதி இயக்கங்கள் சமூகத்தின் ஊடாக சமநிலை பராமரிப்பினை கோருபவை. தமிழ்த்தேசிய இயக்கங்கள் தேசிய இனமொன்றின் உரிமைகளுக்காக போராடுபவை. சமூக நீதி இயக்கங்களின் அடிப்படை அம்சங்களான சாதீய மறுப்பு,மூடநம்பிக்கை ஒழிப்பு,பெண்ணடிமை தகர்ப்பு போன்றவைகளின் விழுமியங்களை தமிழ்த்தேசிய இயக்கங்கள் இயல்பாகவே தன் மரபின் மூலமாகவே உள்வாங்கி இருக்கின்றன.

 

இனம் குறித்த வரலாற்று பெருமிதத்தால் கட்டமைக்கப்படும் தேசிய இன உணர்வே தமிழ்த்தேசியர்களின் அடிப்படையான, ஆன்ம உண்ர்வாக இருக்கிறது. தமிழர் மரபு  காலத்தாற் நீண்ட வரலாறு உடையது . இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு.. முன்பிலிருந்து,நாளது தேதிவரை எழுத்துப்பூர்வமான ஆக்கங்களான  தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள், ஐம்பெரும் காப்பியங்கள், நீதி நூல்கள் போன்ற ஆவணங்கள் தமிழர் மரபினை அடையாளப்படுத்தும் பணியினை செய்வதோடு.. தமிழ்த்தேசிய இனப் பெருமிதம் கொள்வதற்கான உளவியல் நியாயங்களை கற்பிக்கின்றன..

 

இவ்வாறாக வரலாற்றின் அடிப்படையில் இருந்து கட்டமைக்கப்படும் தமிழர் மரபு இயல்பிலேயே இயற்கை வழிபாடு, விவசாயம், பெண்களை போற்றுதல், சாதியற்ற சமூக வாழ்வு போன்ற பல்வேறு முற்போக்கு அம்சங்களை கொண்டிருக்கிறது.

’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று தமிழரால் பாட முடிந்த உளவியல் அம்சம்தான் அக்கால வாழ்வியலாக  இருந்திருக்கிறது. நாடாளும் மன்னனின் அவைக்கு சென்று அவனை ”தேரா மன்னா..” என்று எளிய பெண்ணொருத்தி ஏசும் அளவிற்கு சமூக ஒழுங்கில் பெண்களுக்கான இடம் இருந்திருக்கிறது. ஒளவையார் போன்ற பெண்பாற் புலவர்கள் அரசனுக்கு ஆலோசனை சொல்லும் இடத்திலும், நெருக்கமான தோழியாகவும் இருந்திருக்கிற மதிப்பு சார் தகுதி பெண்களுக்கு இருந்தது.

 

ஆரியர் படையெடுப்பிற்கு முன்பே ஆசீவகம் போன்ற நெறிகள் தமிழக மண்ணிலே இருந்திருக்கின்றன..இயற்கை வழிபட்டு, ஏற்றத்தாழ்வு இல்லாத மெய்யியல் கொள்கை தமிழனுக்கு இருந்திருக்கிறது. முன்னோர் வழிபாடு, நடு கல் மரபு என நீளும் தமிழரின் மெய்யியல் வரலாறு செழுமை மிக்கது. சாதியற்ற,ஏற்றத்தாழ்வற்ற தமிழர் மெய்யியல் அம்சங்களில், ஆரியர் படையெடுப்புக்கு பிந்திய பண்பாட்டு தாக்குதல்களினாலேயே தமிழரின் சமூகம் சாதீய சமூகமாக பிளவுப்பட்டு கிடக்கிறது.

 

எனவே தான் தமிழ்த்தேசிய இயக்கங்கள் தமிழர் மரபின் மூலம் தமிழ்த்தேசிய ஓர்மை உணர்வினை மீட்டெடுக்க கடுமையான சவால்களை சந்திக்க வேண்டி இருக்கிறது.குறிப்பாக 2009 க்கு பிறகான தமிழ்த்தேசிய முழக்கங்கள் வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு வலிமையும்,மூர்க்கமும் அடைந்திருக்கின்றன.அதில் முதன்மையான தமிழ்த்தேசிய அமைப்பாக நாம் தமிழர் கட்சி களங்களில் செயல்பட்டு வருகிறது.

 

பார்ப்பனீய ,சாதீய அரசியல் முனைகளால் பலமாக தாக்கப்படுவதும், கடுமையான விமரசனங்களை எதிர்க்கொள்ளுவதுமான முதன்மை தமிழ்த்தேசிய அமைப்பாக நாம் தமிழர் செயல்பட்டு வருகிறது என்பதை பல வித சான்றுகளுடன் நிரூபிக்க முடியும்.சமீபத்தில் ஹெச்.ராஜா அண்ணன் சீமானைப் பற்றி தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்ததும், பல வருடங்களுக்கு முந்தைய பேச்சு ஒன்றினை வைத்துக்கொண்டு வன்மம் குறையாமல் இந்துத்துவா அமைப்புகள் நாம் தமிழரை எதிர்த்து சமீபத்தில் போராடியதும்..இதற்கு சான்றுகள். மேலும் தமிழ்நாட்டில் இருக்கும் பல அரசியல் அமைப்புகளில் நாம் தமிழர் கட்சி மட்டும் தான் தேர்தலில் பாஜக கட்சியினை தனது முதன்மை எதிரியாக அறிவித்து, அதனை எதிர்த்து அது போட்டியிட்ட அத்தனை இடங்களிலும் தேர்தல் பணி ஆற்றியதும் இதில் குறிப்பிடத்தக்கது. பொதுவாகவே தமிழ்த்தேசிய அமைப்புகள் மீது வைக்கப்படும் தலையாய குற்றச்சாட்டு சாதீய முரண்களில் தனது கூர்மை அரசியலை நிலைநாட்ட முடியாமை. அதற்கு காரணம் சாதீய அமைப்புகள் மீதான பரிவு அல்ல. மாறாக சாதீய அமைப்புகளில் சிக்கிக் கொண்டிருக்கும் தமிழர்களை தமிழர் என்கிற ஓர்மை உணர்வில் ஒன்றிணைப்பதற்கான முனைப்பே அன்றி, வேறொன்றும் அல்ல.இன்றளவும் கொங்குப் பகுதிய சாதீய அமைப்பு ஒன்றினாலும், தலித்திய அறிவு சீவி வட்டத்தினாலும் சமமாக தாக்கப்படுகின்ற அமைப்பாக நாம் தமிழர் இருப்பதன் காரணம் வெவ்வேறான இரண்டும் தனது அரசியலுக்கு ஒரே எதிரியாக கருதுவது நாம் தமிழரை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவ்வாறாக வரலாற்றின் போக்கில் தமிழ்த்தேசிய உணர்வு தமிழர் மரபின் வாயிலாக கட்டமைக்கப்படுவதன் மூலம் தான் சாதீய மறுப்பு, பெண்ணடிமை தகர்ப்பு ,மூட நம்பிக்கைகள் ஒழிப்பு போன்ற பல்வேறு முற்போக்கு கொள்கைகளை இம்மண்ணில்

நடைமுறைப்படுத்தப்படும் என நாம் தமிழர் கட்சி நம்புகிறது. 2009 க்கு பிறகான தமிழ்த்தேசிய அமைப்புகளின் நவீன வடிவமாக நாம் தமிழர்  நிலைநிறுத்தப்படுவதற்கும், மத சாதீய உணர்வாளர்களால் கல்லெறியப்படுவதற்குமான மிக முக்கிய காரணமாக  இவ்வகையான நம்பிக்கைகளே என்பது குறிப்பிடத்தக்கது.images

சமூகநீதி இயக்கங்களுக்கும், தமிழ்த்தேசிய அமைப்புகளுக்கும் இடையே நீண்ட காலமாக பராமரிக்கப்பட்டு வரும் இடைவெளியை தனது நடைமுறை சாத்தியங்கள் மூலம் நாம் தமிழர் நிரப்ப முயல்கிறது. இன்னும் ஆழமாக சொல்லப்போனால் இரண்டிற்குமான மாற்றாக..புது வெளி ஒன்றினை..மாற்று அரசியலை நாம் தமிழர் நிறுவ முயல்கிறது. வெகுசன அரசியல் வெளியில் அதிகம் கண்டுக்கொள்ளப்படாத அயோத்திதாசர், இரட்டைமலை சீனுவாசன் போன்ற தலைவர்களின் விழாக்களை தனது கட்சி அமைப்பியல் நிகழ்வுகளாக நாம் தமிழர் கொண்டிருப்பதும்  இது போன்ற சிந்தனைகளால் தான்.. வெகுசன அரசியல் இயக்கங்கள் என்றாலே சமரசம் கொண்டு,பிழைப்புவாத அரசியல் நிலைகளை எடுப்பன போன்றதான பிம்பங்களை உடைப்பதில் நாம் தமிழர் தனது முழு கவனத்தைக் கொள்கிறது. ஒரு வெகுசன அரசியல் கட்சி சமூக இயக்கங்களுக்கான நுண்ணரசியல் தன்மைகளை பெறுவது எனபது தமிழக அரசியல் வெளியில் புதிதான ஒன்று. இயற்கை விவசாயம், மீத்தேன் எதிர்ப்பு, காட்டுக் கருவை ஒழிப்பு. ஆற்று மணல் கொள்ளை எதிர்ப்பு போன்றதான மண்சார்ந்த போராட்டங்களையும் நாம் தமிழர் மேற்கொண்டு வருவது  குறிப்பிடத்தக்கது.

 

தமிழர் மரபினை மீட்டெடுத்து..இனப் பெருமித உணர்வில்..தமிழ்த்தேசிய ஒர்மையை படைக்க விரும்பும் நாம் தமிழர் கட்சி சமூகநீதி இயக்கங்களின் அடிப்படை அம்சங்களை உள்வாங்கி  தமிழர்களுக்கான ஒருவெகு சன அரசியலை கட்டமைப்பதில் துடிப்பாக  இருப்பது தமிழின அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய போக்காகவே நாம் கருதலாம்.

ஷிண்டர்ஸ் லிஸ்ட்(1993 )- இன அழிப்பின் வலி நிறைந்த திரைமொழி

schindlers-list-17523-hd-wallpapers

 

உலக வரலாற்றில் மாபெரும் மனித அழிவு காட்சியாக 1939-45 வருடக் காலங்களில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போர் நம் கண் முன்னால் தோன்றுகிறது . மனித குலத்தில் 3 ல் ஒரு பங்கு உயிர்களை பலிவாங்கிய இரண்டாம் உலகப் போர் மனித மனங்களில் நிகழ்த்தி இருக்கிற உளவியல் மாற்றங்கள் மிக முக்கியமானவை. மனித குலத்தின் பாற் நேசமும், சமநீதியும் போதிக்கிற கம்யூனிச கொள்கைகளின் பாற் உலகம் தழுவிய ஈர்ப்பும், எழுச்சியும் இரண்டாம் உலகப் போரின் அழிவிற்கு பிந்தைய காலக்கட்டங்களில் தான் நிகழ்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்வதற்கான போராட்டம் என்பது மனித இனத்தின் தலையாய இயல்பு. உயிரோடு வாழ்ந்திருத்தல் என்கிற ஒரே ஒரு காரணிக்காக மனித இனம் எத்தகைய துன்பங்களையும் ,இழிவுகளையும் தாங்கிக் கொள்கிறது??

அப்படி..உயிர் வாழ்தலின் பொருட்டு மனித இனம் படும் பாடுகளைதான் Schindler’s List (1993) என்ற புகழ்ப்பெற்ற உலகத்திரைப்படம் பேசுகிறது..  இன அழிப்பிற்கு உள்ளான இன்னொரு இனமான தமிழினத்தை சேர்ந்தவர்கள்  என்ற முறைமையில் தமிழர்கள் தேடிப்பிடித்து இத்திரைப்படத்தை காண வேண்டிய அவசியம் இருக்கிறது.

இத்திரைப்படத்தின் பல காட்சிகள் ஈழப்பெருநிலத்தின் வன்னி வதை முகாம்களையும் ,முள்ளிவாய்க்கால் போர்க்கள காட்சிகளையும் நினைவூட்டுகின்றன.

 

 

Schindler's List

 

 

புகழ்ப்பெற்ற ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் ஆஸ்திரேலியாவின் எழுத்தாளுமை தாமஸ் கென்னலி 1982 ஆம் வருடத்தில் எழுதிய ஷிண்ட்லர்ஸ் ஆர்க்[ Schindler’s Ark ] என்ற நாவலை தழுவி இயக்கிய Schindler’s List என்கிற இத்திரைப்படம் ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லரால் இன அழிவிற்கு உள்ளாகிற யூன இனம் படுகிற பாடுகளை அணுஅணுவாய் சித்தரித்து இருக்கிறது. 1939 ஆம் வருடம் போலந்து இரண்டாம் உலகப்போரில் தொல்வியுற்ற தருணத்தில் இருந்து 1945 ஆம் ஆண்டு செக்கஸ்குலோவியா நாட்டினை நாஜிப்படைகளின் வசமிருந்து சோவியத் படைகள் மீட்கும் வரையிலான 6 வருட வாழ்க்கையினை ஜெர்மானிய வதை முகாம்களில் யூத இனம் படுகிற துயர் வழியே காவியமாய் படைக்கிறது.  தனது வயதான தாய் தந்தையரை உயிர்கொல்லி முகாமான ஆஸ்ட்விச் வதைமுகாமில் இருந்து மீட்டுத்தரும் ஆஸ்கர் ஷிண்டலரின் அலுவலகத்தை நன்றிப் பெருக்கோடு கண்ணீர் மல்க பார்க்கும் ஒரு இளம் பெண், குழந்தைகள் நாஜிப்படைகளிடம் சிக்கிக் கொள்ளாமல் ஒளிந்துக்கொள்ளும் காட்சிகள், சிவப்பு நிறந்தில் காட்டப்படும் சிறுமி ஒருத்தி தனியே அந்த கொலைக்களத்தில் நடந்து செல்வது போன்ற காட்சி என இத்திரைப்படம் முழுக்க காட்சிகளால் நிரம்பிய உணர்ச்சிக் காவியமாக விளங்குகிறது. தொடக்கத்தின் ஆஸ்கர் ஷிண்டலர் என்கிற ஜெர்மானிய நாஜிக்கட்சியை பிரதான கதாபத்திரம் சுயநலமாக, சம்பாதிக்க யூதர்களின் உழைப்பினை சுரண்ட வந்தாலும், அங்கே நடக்கிற கொடுமைகளை ஒரு மலை உச்சியின் மேல் இருந்து மனம் மாறுவது திருப்புமுனை. நிர்கதியான குழந்தைகள், உணர்வும், உடலும் மரத்துப்போன முகங்கள், இறுதியில் அனைத்தையும் இழந்து உயிரை மட்டும் இழக்கமுடியாமல் வாழ்வதற்கான போராட்டத்தில் தன்னிலை மறங்கும் மனிதர்கள் என பல்வேறு பட்ட கதாபாத்திரங்கள் நம் ஈழ மண்ணை நினைவூட்டிக் கொண்டே இருந்தார்கள்.

 

ஆஸ்கர் ஷிண்டலர் என்கிற நாஜிக் கட்சி சின்னத்தை பெருமையோடு தனது கோட்டில் அணிந்திருக்கிற ஜெர்மானியர் தொழில் வளர்ச்சி, ஊதியம் தர தேவையற்ற யூத அடிமைகளின் உழைப்பு ஆகியவற்றை முன் வைத்து போர்கோட்சே என்று அழைக்கப்பட்ட யூத முகாமிற்கு வந்து சேர்கிறார். பெரும் செல்வந்தரான அவர் தனது பணபலத்தைமுன் நிறுத்தி அங்கே இருக்கும் அதிகாரிகளிடம் பலவிதமான முறையில் சிகரெட்டுகள்,சாக்லெட்டுகள்,விலையுயர்ந்த பொருட்கள் ஆகியவற்றை கையூட்டாக அளித்து செல்வாக்கு உடைய நபராக திகழ்கிறார். அந்த வதை முகாமில் தலைமை நாஜி ராணுவ அதிகாரியாக இருக்கிற ஆமன் கோத் பல கொடுமைகளை செய்து யூத மக்களை கருணையற்ற முறையில் கொலை செய்து வருகிறார்.  தன்னிடம் பணிபுரிகிற இஸ்தக் ஸ்டெரன் என்கிற யூத இனத்தை சேர்ந்த கணக்காளரின் உறவினால் ஆஸ்கர் ஷிண்டலர் மனம் மாற தொடங்குகிறார். ஒரு மலை உச்சியின் மீது நின்று அந்த அந்த யூத முகாமில் தன் மனைவியோடு பார்த்துக் கொண்டிருந்த ஆஸ்கர் ஷிண்டலர் மனம் மாறுகிறார். அந்த கொடுமை நிலையில் இருந்து யூத இன மக்கள் 1100 பேரை எப்படி காப்பாற்றினார் என்பதை தான் 3 மணி நேரத்திற்கும் அதிகமான காட்சிகளாக இத்திரைப்படம். ஆஸ்கர் ஷிண்டலராக லியம் நிசனும்,அவரிடம் மனமாற்றம் ஏற்பட வைக்கும் யூத கணக்காளராக காந்தி திரைப்படத்தில் நடித்த பென் கிங்க்ஸ்லியும், கொடுமையான நாஜிப்படைஅதிகாரி ஆமன் கோத் கதாபாத்திரத்தில்  இரால்ப் பியன்சும் நடித்துள்ளனார்.  1993-ல் வெளியான இத்திரைப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை வென்றது. படம் முழுக்க கருப்பு வெள்ளையில் படமாக்கப்பட்டு இருந்தாலும் ஆஸ்கர் ஷிண்டலரால் காப்பாற்றப்பட்ட அந்த 1100 யூத மக்களும் 6000 பேராக விரிவடைந்து ஷிண்டலர் சந்ததியினர் என உலகத்தினரால் அழைக்கப்பட்டு ஆஸ்கர் ஷிண்டலர் சமாதிக்கு அஞ்சலி செலுத்த வரும் அந்த இறுதி காட்சி வண்ணத்தில் படமாகப்பட்டுள்ளது ஏகப் பொருத்தமானது.  

 

இத்திரைப்படத்தின் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க். இவரும் ஒரு யூதரே. இத்திரைப்படத்தை இயக்க அவர் ஏதும் ஊதியம் வாங்கவில்லை என்கிறார்கள். யூதப்படுகொலைகள் குறித்து நிறைய திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. நிறைய காணொளிக் காட்சிகள் இணைய வெளிகளில் காணக்கிடைக்கின்றன. இவற்றின் உருவாக்கத்தில் யூத இனத்தை சேர்ந்தவர்களின் பங்கு மிகுதியாக இருக்கிறது. யூத இன அரசியல், அதன் பரவலாக்கம், இஸ்ரேலிய அரசு உருவாக்கம் ஆகியவற்றின் மீது நமக்கு கடுமையான விமர்சனங்கள் உண்டு. இன்றளவும் பாலஸ்தீன பூர்வக்குடிகள் சிந்துகிற உதிரத்தில் இஸ்ரேலின் கைரேகை படிந்துள்ளது. ஆனால்  தன்னினம் அடைந்த துயரை ஒரு காயமாக ஆன்மாவில் தேக்கி வைத்து, அக்காயத்தையே மூலதனமாகக் கொண்டு தங்களுக்கான ஒரு நாட்டை உருவாக்கியதில் யூத இனம் வெற்றியடைந்து இருப்பது, இன அழிவிற்கு உள்ளான தமிழ்த்தேசிய இனம் போன்ற இனங்களுக்கு பாடமாக இருக்கிறது.

சக மனிதனை நேசிக்கும் உள்ளம் இறைவனுடையது என்பார்கள். அத்தகைய இறைவனாக Schindler என்ற ஜெர்மானியர் பல யூதர்களின் உயிரை காக்க அனைத்தையும் இழக்க துணிகிறார். திரைப்பட முடிவில் தன்னிடம் இருக்கிற தங்க பொத்தானை காட்டி ..இதனையும் விற்றிருந்தால் இன்னும் 2 யூதர்களை காப்பாற்றி இருப்பேனே என கலங்கித்துடிக்கும் போது…மனித குணத்தில் சக மனிதனை காரணமில்லாமல் நேசிக்கும் மனித நேயமே மகத்தானது என்கிற உண்மையை நாம் நமக்குள் உணர தொடங்குகிறோம். துளித்துளியாய் கசியும் தேன் துளி போல..நமக்குள்ளாக சக மனிதன் மீது,மனித இனத்தின் மீது நேசிப்பை சுரக்க வைப்பதுதான் இந்த உலகத்திரைப்படம் நமக்குள்ளாக நிகழ்த்தும் வித்தை.

உலகம் அழகானதுதான். நாம் தான் உலகத்தை நரகமாக்கி வைத்திருக்கிறோம்.

உயிர் வாழுகிற விலங்கினத்தில் மிகப்பெரிய அபாயகரமான விலங்காக மாறி அனைத்தையும் வேட்டையாடி புசிக்கிற மனிதன்..தனக்குள் இருக்கிற நேச ஊற்றை தோண்டிப்பார்க்க…அவசியம் இத்திரைப்படத்தை காணவேண்டும்.

ஆஸ்கர் ஷிண்டலர் யூத மக்களால் உருவாக்கப்பட்ட இஸ்ரேலிய நாட்டிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். அன்று ஜெருசலம் அருகே அவர் நட்ட மரமொன்று இன்றளவும் இனம் ,மொழி,சாதி, பிரிவுகள் கடந்த உலகம் தழுவிய மனித நேயத்திற்கு சாட்சியாக விளங்குகிறது.

இத்திரைப்படத்தை பார்த்து விட்டு..இறுதியில் நமக்குத் தோன்றுவது இதுதான்.

மனித அவஸ்தைகளை தாண்டி உலகில் வலிமைமிக்க துயர் எதுவும் இல்லை.அத்துயரை தீர்க்க முனையும் ஒரு கனிவு மிக்க இதயத்தை விட இறைவன் எங்கும் இல்லை.

Powered by WordPress & Theme by Anders Norén