பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Day: ஜூன் 27, 2016

தமிழ்த் தேசிய சுவடுகள் -4 தமிழ்த்தேசிய இனமும், தேசிய இன உருவாக்கமும்,

Karl_Marx

தேசிய இனம் என்ற சொல்லுக்கு சமகாலத்தில் பல விரிவான விளக்கங்கள் கிடைக்கின்றன. ஒரு பொது மொழி, பொதுவான வாழ்க்கை முறை, ஒரு வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு, ஒருபொதுவான பொருளியல் அமைவு, தனிப்பண்பாட்டின் சிறப்பியல்புகள் இவைகளால் அந்த இனத்திற்குள்ளாக ஏற்படுகின்ற பொதுவான உளவியல் உருவாக்கம் ஆகியவற்றைப் பெற்று வரலாற்றின் போக்கில் இணைந்த பல்வேறு இனக்குழுக்கள் இணைந்து  அமைந்த ஒரு நிலையான சமுதாய மக்களே தேசிய இனமென வரையறுக்கப்படுகிறது. ரஷ்யாவின் ஜே.வி. ஸ்டாலின் ஒரு மொழி வழி அமைந்த  ஒரு தேசிய இனத்தை (Linguistic Nationality) நான்கு முதனிலை பண்புக் கூறுகளால் வரையறுக்கிறார். அவையாவன. 1. பொதுமொழி 2. தொடர்ச்சியான ஆட்சி எல்லை 3. பொதுவான பொருளாதார வாழ்க்கை அமைவு 4. பொது பண்பாட்டின் வாயிலாக எழும் தாம் ஓரினம் என்கிற உளவியல். தேசிய இன வரையறையில் முதன்மை அம்சமாக மொழியை கருதுவது மார்க்சிய அணுகுமுறை ஆகும்.

 

மனித இனம் தோன்றிய காலம் தொட்டு பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதனின் சமூக வாழ்க்கை மொழி வாயிலாகவே நிகழ்ந்து இருக்கிறது. மொழியே மனித இனமொன்றின் முதன்மை அடையாளமாக திகழ்ந்து இருக்கிறது. மொழியற்ற மனித சமூகத்தை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க இயலாது. மொழியே மனித நாகரீக வளர்ச்சியின் போக்கினை தீர்மானித்தது. எனவே தேசிய இன வரையறையில் மொழியே முதன்மை கூறாக அறிஞர்கள் கருதுகிறார்கள்.

 

ஒரு மக்கட் கூட்டம் தேசிய இனமாக உருவாக்கம் கொள்ளுதலில் அயலார் படையெடுப்பு, இயற்கை சீற்றங்கள் போன்ற புறவெளி காரணிகளும் உதவி செய்கின்றன. எடுத்துக்காட்டாக இந்தியா ஒரு தேசம் அல்ல. பல்வேறு தேசிய இனங்கள், 200க்கும் மேற்பட்ட மொழிகளைப் பயன்படுத்துகிற மக்கள் கூட்டம் வாழுகிற மிகப்பரந்த கண்டம். இந்த நிலப்பரப்பை வெள்ளையர்கள் தாங்கள் ஆள்வதற்கு உகந்தவாறு ஒரு நாடாக மாற்றினார்கள்.  இந்திய நிலப்பரப்பு அதற்கு முன்னதாக ஒற்றையாட்சியின் கீழ் இருந்ததில்லை. பல்வேறு மன்னர்கள், குறுநில மன்னர்கள், 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் என பிளவுப்பட்டு கிடந்த ஒரு நிலப்பரப்பின் மக்கள் அக்காலத்தில் வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உண்டாக்கப்பட்ட செயற்கை தேசிய உணர்வின் மூலம் ஒன்று பட்டனர். அந்த செயற்கையான தேசிய உணர்வு வெள்ளையர்கள் நாட்டை விட்டு வெளியேறிய கணத்திலேயே நீர்த்துப் போய் விட்டது. மேலும் அந்த செயற்கை உணர்வு மேலும் நீட்சி கொள்வதற்கான அவசியமோ, தேவையோ அதற்கு பிறகு இல்லை. செயற்கை மயக்கம் வடிந்தவுடன் அவரவர் மொழி, நிலப்பரப்பு சார்ந்த இயல்பான தேசிய உணர்ச்சிக்கு முக்கியத்துவம் தர தொடங்கி விட்டனர்.  எனவே மொழி வழி சார்ந்த, நிலப்பரப்பினை சார்ந்த தேசிய இன உருவாக்கமே இயற்கையானது.

 

பட்டாளி வர்க்க இணைப்பால் உலகப்புரட்சியை ஏற்படுத்த கனவு கண்ட மாமேதை மார்க்ஸ் கூட பட்டாளிகளின் இணைப்பு தேசிய இன உணர்வின் அடிப்படையில் எழுவது என்பதே சாத்தியம் என்கிறார்.

 

தேசிய இன சிக்கல்களை மார்க்சிய அணுகுமுறை மூலம் தான் தீர்க்க வேண்டும் என்பதில் புரட்சியாளர் லெனின் தெளிவாக இருந்தார். அதற்கு அவர் மூன்று விதமான அளவுகோள்களை கொண்டிருந்தார். 1. வேறுபட்ட பல்வேறு தேசிய இனங்களைச்சார்ந்த உழைக்கும் மக்களிடையே புரிதல் அடிப்படையில் அமைகிற ஒற்றுமை அல்லது இணைவு 2. சமமான வாழ்வியல் மற்றும் பொருளியல் , அதிகாரங்களை கொண்டதுமான தேசிய இனங்களின் உழைக்கும் மக்களிடையே தோன்றும் சமத்துவம் 3. தனது இறையாண்மையை தானே முடிவு செய்து கொள்கிற தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை.

 

தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை குறித்து மார்க்ஸைப் போற்றுகிற, லெனினைக் கொண்டாடுகிற  மார்க்சிய கம்யூனிஸ்ட்களின் தத்துவ நிலைப்பாடு லெனின் கொண்டிருந்த கருத்துக்களுக்கு முற்றிலும் எதிரானது. ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை குறித்து கம்யூனிஸ்டுகளின் கருத்து என்ன என்கிற அண்ணன் சீமானின் கேள்விக்கு இறுதிவரை மார்க்சிய அறிஞர் அருணானால் பதில் சொல்ல இயலாமல் போனது இதனால் தான்.

 

1972-ல் தேசிய இன சிக்கல் குறித்து மார்.கம்யூனிஸ்ட் ஆராய்ந்து தீர்மானம் இயற்றிய போது அத்தீர்மான வாசகங்களில் “ 1947 இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் தேசிய இனச்சிக்கல் தீர்ந்து விட்டது “ என்ற சொற்றொடர் இடம் பெற்றது. இதுதான் கம்யூனிஸ்ட்டுகள் தேசிய இன விடுதலை சார்ந்து கொண்டிருக்கிற புரிதல்.

 

****

 

Mamallapuram_sculptures

இனி தமிழர் என்ற இனமானது எப்படி ஒரு தேசிய இனமாக உருக்கொள்கிறது என்பதை நாம் விரிவாக ஆராய்வோம். தேசிய இனம் என்ற சொல்லுக்கான அடிப்படைக் கூறுகளைப் பெற்று தகுதிவாய்ந்த தனித்த ஒரு தேசிய இனமாக தமிழ்த்தேசிய இனம் திகழ்கிறது. ஒரு தேசிய இனத்தின் அடிப்படை கூறான பொதுமொழி அடிப்படையில் நம் தாய்மொழியாம் தமிழ் தொன்மையான சிறப்பியல்பு வாய்ந்த தேசிய இனத்தின் தாய்மொழியாக விளங்குகிறது. தமிழ்மொழியின் தொன்மை குறித்து பல்வேறு ஆய்வுகள் வியக்கத்தக்க முடிவுகளை அறிவித்து வருகின்றன. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த மொழியான தமிழ்மொழி என்று சிறப்பு பெற்ற நம் தாய்மொழி ஒரு தேசிய இனத்தின் பொதுமொழி அடிப்படையில் தகுதிவாய்ந்த செவ்வியல்மொழியாக திகழ்கிறது.வரலாற்றின் பக்கங்களில் நீண்டகாலமாக தமிழர் என்ற தேசிய இனத்திற்கு சற்றே ஏறக்குறைய தொடர்ச்சியான தனித்த நிலப்பரப்பு இருக்கிறது.  சங்கக்காலம் தொடங்கி நவீன காலம்வரை இருக்கின்ற இலக்கிய தரவுகள் கொண்டே தமிழ்த்தேசிய இனத்தின் தொடர்ச்சியான ஆட்சிப்பரப்பு குறித்து நாம் தெளிவு பெறலாம். உலகத்தின் முதன்முதலாக இனம் தமிழினம் என்றும், முதன் முதலாக தோன்றிய மாந்தர் தமிழர் என்றும், அவர் பேசிய மொழி தமிழ்மொழி என்றும் நவீன அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தமிழ்த்தேசிய இனத்தின் மாபெரும் ஆய்வியல் அறிஞரான பாவாணர், தமிழர் முதன்முதலாக தோன்றியது இயற்கைசீற்றத்தால் அழிந்து கடலுக்கு அடியில் கிடக்கிற குமரிக்கண்டத்தில்தான் என தனது தரவுகள் மூலம் அறிவுலகத்திற்கு எடுத்துரைக்கிறார். எனவே, வரலாற்றின் போக்கில் ஒரு தொடர்ச்சியான நிலப்பரப்பு, ஒரு பொதுமொழி கொண்டு உருவான இனம் தமிழர் என்ற தேசிய இனம் என்பது உறுதியாகிறது. மேலும், தமிழர் தனது பொதுவான பொருளியல் வாழ்வியலை தனது தேசியத்தொழிலான விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள் கொண்டே உருவாக்கினர். மண் சார்ந்த விவசாயத் தொழிலே தமிழரின் தேசியத்தொழிலாக அறியப்பட்டிருக்கிறது. முப்போகமும் விளையக்கூடிய விளைநிலங்களும், ஒரு போகம் விளையக்கூடிய வானம் பார்த்த புன்செய் நிலங்களும்நிரம்பிய தமிழகம் விவசாயத்தை, அதுசார்ந்த பொருளியல் வாழ்வினை தனது உயிர்நாதமாகக் கொண்டு விளங்கியது .தமிழ்த்தேசிய இனத்திற்கென்று ஏறக்குறைய பொதுவான பண்பாட்டுக்கூறுகள் இருக்கின்றன. இன்னமும் மிஞ்சிக்கிடக்கின்ற ஜல்லிக்கட்டு, பொங்கல் திருவிழா, கபடி மற்றும் கரகாட்டம், வில்லுப்பாட்டு, குலதெய்வங்கள், உறவு முறைகள் போன்ற பல்வேறு பண்பாட்டு விழுமியங்களைத் தன்னகத்தே கொண்டு ஒரு பண்பாட்டு செழுமைமிக்க தனித்த தேசிய இனமாக தமிழ்த்தேசிய இனம் விளங்குகிறது. தன்னை ஒரு தேசிய இனமாக உணர்வதற்கான பொதுவான உளவியல் போக்கினை தங்களது பண்பாட்டு விழுமியங்கள் மூலமாக தமிழர்கள் பெற்றிருக்கின்றனர். இந்தியத் துணைக்கண்டத்தில் வரையறுக்கப்பட்ட நிலப்பரப்புகளில் தனித்த மொழி , பண்பாடு,வரலாறு, பண்பாட்டு விழுமியங்களோடு கூடிய 20க்கும் மேற்பட்ட தனித்த தேசிய இனங்கள் நிலைபெற்று வாழ்கின்றன. இந்தியப்பெருநிலத்தில் இருக்கின்ற தேசிய இனத்தில் மூத்தத்தேசிய இனமான, தனித்த பண்பாட்டு அடையாளங்களைப் போற்றிப் பாதுகாத்து வருகிற தனித்த தேசிய இனமாக தமிழர் என்ற தேசிய இனம் விளங்குகிறது. ஒரு சமூகம் தன்னைத் தேசிய இனமாக உணரும்போது அதன் மெய்யான தேசிய இன குணாதியங்களையும், முற்போக்கு மற்றும் பிற்போக்கு இடங்களையும் அறிந்துகொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகிறது. தேசிய இன உருவாக்கம் என்பது சில நாட்களுக்கு உள்ளாகவோ, சில வருடங்களிலோ அடையக்கூடியது அல்ல. தேசிய இன உருவாக்கத்தை, வளர்ச்சியை சார்ந்த  திறன்மிக்க தொடர் செயல்முறை என்கிறார் புரட்சியாளர் லெனின்.. அச்செயல்முறை தாம் ஒரு  தேசிய இனம் என்பதை உணர்ந்து தனது வாழ்வியல்,பண்பாட்டு விழுமியங்களைப் பற்றிய விழிப்புணர்ச்சியை அடைந்து, விடுதலை உணர்வினை சார்ந்து  அமைகின்ற எழுச்சி ஆகும்.

 

தமிழ்த்தேசிய இனமாக தன்னை ஒரு தனித்த தேசிய இனமாக அடையாளப்படுத்துதலில் மாபெரும் போராட்டங்களைச் சந்தித்து வருகிறது. ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன் தமிழர்களின் நிலப்பரப்பை பல்வேறு குறுநில மன்னர்கள் பிரித்து ஆண்டிருந்தாலும் தமிழர் என்ற உளவியல் உருவாக்கம் தமிழர் என்ற தேசிய இனத்திற்கு வரலாற்றின் போக்கிலேயே அமைந்திருந்தது. பிற்காலச் சோழர்கள், புகழ்பெற்ற பாண்டிய மன்னர்கள், வெற்றிபெற்ற சோழ மன்னர்கள் என்றெல்லாம் மன்னர்கள்வழி அமைந்த நிலப்பரப்பில் பிரிந்து வாழ்ந்திருந்தாலும் ஒவ்வொருவரும் தமிழர் என்கின்ற உளவியல் நெருக்கத்தினை உளவியல் பண்பாட்டு விழுமியங்கள் மூலமாகவும், வரலாற்றின் போக்கின் மூலமாகவும் பெற்றிருந்தார்கள். அதன்வாயிலாகவே, தமிழர் தேசிய நிலப்பரப்பிற்கு எதிராக அந்நிய படையெடுப்பு போன்றவை நிகழும்போது தமக்குள்ளாக இருக்கிற உளவியல் நெருக்கத்தை மூலதனமாகப் பயன்படுத்தி, தங்களது நிலப்பரப்புகளையும் தாண்டி தமிழர் என்ற ஒற்றுமையோடு அந்நியர் ஆதிக்கத்தை எதிர்த்து நின்று தமிழர்கள் போராடியிருக்கிறார்கள். ஈழத்தை ஆண்ட தமிழ் மன்னனுக்கு இங்குள்ள சோழ மன்னன் உதவியதாக வரலாறுகள் தெரிவிக்கிறது. இவ்வாறாக இப்பூமிப்பந்தில் தமிழர்கள் எங்கெல்லாம் வசிக்கத் தொடங்கினார்களோ, வாழ்ந்தார்களோ தாயகத்தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்மன்னர்கள் உதவிசெய்யும் போக்கினை நாம் வரலாற்றின் பக்கங்களிலே காண்கிறோம். எனவே தேசிய இன உருவாக்கத்தில் அந்த குறிப்பிட்ட மனித சமூகம் கொண்டிருக்கிற உளவியல் தன்மை (Phusicaligical Sense ) மிக முக்கியமானது.

 

தாம் ஓரினம் என்கிற தேசிய இன உளவியல் தன்மைதான் ஈழ விடுதலைக்கு ஆதரவான மனநிலையை இம்மண்ணில் எழுப்புகிறது. தமிழ்த்தேசிய இனத்தின் இரண்டு பெரும் தாய்நிலங்களாக ஈழமும், தாய்த் தமிழகமும் திகழ்கின்றன. எனவே வரலாற்றின் வீதியில் தமிழர் என்கிற தேசிய இனம் ஒரு தேசிய இனத்திற்கான அடிப்படைத் தன்மைகளைக் கொண்டு தனித்த தேசிய இனமாக உருக்கொண்டு நிற்கிறது.

 

இனி தமிழ்த்தேசிய இனத்திற்கான அடிப்படை உரிமை.. தம் மண்ணை தானே ஆள்கிற உரிமை.

 

-தொடர்ந்து கற்போம்..கற்பிப்போம்…புரட்சி செய்வோம்.

 

வாசிப்போம்..அறிவை யாசிப்போம்

—————————————————–

சாதியும், தமிழ்த்தேசியமும் –பெ.மணியரசன் ,(பன்மை வெளியீடு, எண் 1,இராசா வணிக வளாகம், நீதிமன்ற சாலை, தஞ்சாவூர்)
விலை80/-

சமீப மலையாளத் திரைப்படங்கள் -எளிமையின் அழகியல்.

Kali-Malayalam-Movie-Review-Rating-Public-Talk-Twitter-response-Critics-Reviewசமீப கால மலையாளத் திரைப்படங்களின் தரமும், திரைக்கதை அடவுகளும் நம்மைப் பொறாமைப்படுத்துகின்றன. ( நன்றி : துருவன் செல்வமணி, packiyarasan se) சமீப காலமாக வரிசையாக பல மலையாளப்படங்களை கண்டு வருதலில் நான் உணர்ந்தது மலையாளப்படங்கள் கொண்டுள்ள எளிமை.
 
இன்னமும் தன் பண்பாட்டு விழுமியங்களை தனது திரைமொழி மூலமாக ஆவணப்படுத்துகிற மலையாளிகளின் கவனம் பிரமிக்கத்தக்கது. புதியவர்களின் வருகையால் மலையாள திரையுலகம் புத்துணர்ச்சி அடைந்ததுள்ளது. துல்கர் சல்மான், நிவின் பாலி , பஹத் பாசில், சாவித்திரி என மலையாள திரையுலகம் கொண்டிருக்கும் இளைய நடிகர்கள் பிரமிக்க வைக்கிறார்கள்.
 
இங்கே தமிழ் படங்களில்..
 
துப்பாக்கிகளும், தாதாக்களும்,புளித்துப் போன அதே சத்தமும், பறக்கும் சுமோக்களும், வீசும் அரிவாள்களும், தெறிக்கும் ரத்தமும், அதே மதுக்கடைகளும், அதே குடிகார கதாநாயகர்களும், இக்காலத்திலும் பொறுக்கிகளையும், ரவுடிகளையும் விரும்பும் அதே லூசு கதாநாயகிகளும், பார்க்கிற நம்மை களைப்படைய செய்கின்றன. 10 நிமிடத்திற்கு ஒரு முறை கூட்டம் கூட்டமாய் ஆடுவதைதான் காதலிக்கிற உணர்வு என்றும், கத்தியால் குத்துபவன் தான் வீரன் என்றும் கற்பிக்கிற இவர்களால் தான் சுவாதிக்கள் பிணங்களாய் ரயில்வே மேடைகளில் கிடக்கிறார்கள்.
 
நாம் எவ்வளவு பின் தங்கி இருக்கிறோம் என்பதை அக்கம் பக்கம் பார்க்கும் போது புரிகிறது.
 
குறிப்பாக நான் விரும்பும் துல்கர் சல்மான். தமிழ்த்திரையுலகில் 90 களில் இருந்த கார்த்திக் போல பின்னுகிறார். சிறிய காட்சி என்றாலும் முக பாவனை, உடல்மொழி என அனைத்திலும் பட்டையை கிளப்புகிற துல்கரை யாராலும் விரும்பாமல் இருக்க இயலாது.
 
அவர் நடித்த சார்லி, பெங்களூர் டேஸ், 100 டேஸ் ஆப் லவ் , உஸ்தாத் ஹோட்டல், பச்சக் கடல் நீல ஆகாசம் செவ்வண்ண பூமி என பல படங்களை கண்டிருக்கிறேன். சமீபத்தில் நான் பார்த்த படம் களி.
 
பிரேமம் புகழ் சாய்பல்லவியும் ,துல்கர் சல்மானும் பின்னிருக்கிற அப்படத்தை வாய்ப்புள்ளோர் காண்க. எளிய சாதாரண திரைக்கதை.. அதை எவ்வளவு அழகாய் எடுத்திருக்கிறார்கள் என்பதுதான் இன்றைய மலையாள சினிமாவின் ஒரு பானை சோற்று ஒரு சோறு பதமாக இருக்கிறது.
 
நாம் குடிப்பதையும், சோரம் போவதையும் முற்போக்காக காட்டிக் கொண்டிருக்கிற இவ்வேளையில் தான் ..அவர்கள் மனிதனின் சின்னச்சின்ன குணாதிசியங்களையும்,பெருந்தன்மையையும், நில அழகியலையும் ,பண்பாட்டு சாரங்களையும் ஆவணப்படுத்திக் கொண்டே செல்கிறார்கள்.
 
இங்கே சினிமா அரசியலாகி வெகு நாட்கள் ஆகிறது. வெள்ளித்திரைகளில் தான் நமக்கு வருங்கால முதல்வர் கிடைக்கிறார்.
 
ஆனால் அங்கோ
 
சினிமா – எளிய வாழ்க்கையை அழகியலோடு பதிவு செய்யும் இன்னொரு இலக்கிய வடிவம்.
 
-மணி செந்தில்

எஸ்.ராமகிருஷ்ணனும் -தங்கம்மா வீடும்..

thijanakiraman
புத்தக வாசிப்பு போல உலகில் இன்பமானது ஏதுமில்லை. அதுவும் தேர்ந்த எழுத்தாளன் கரத்தில் ரசனை மிக்க வாசகன் சிக்கிக் கொள்ளுதல் போன்றதோர் மகிழ்ச்சிக்கரமான தருணம் ஏதுமில்லை. என்னையெல்ல்லாம் அடித்து துவைத்து காயப்போட்ட பல புத்தகங்கள் உண்டு. வாசித்தல் என்பது ஒரு வசீகரமான மாயச்சுழி. அச்சுழியில் சிக்கிக் கொண்டு மீளவே முடியாத பல அடிமை வாசகர்களில் அடியேனும் ஒருவன்.
 
தமிழ் இலக்கிய உலகில் தி.ஜா என்று அழைக்கப்படும் தி.ஜானகிராமன் எழுதிய மோகமுள் படித்து விட்டு அக்கதையில் வரும் யமுனாவை தேடி கும்பகோணம் வீதிகளில் நான் அலைந்திருக்கிறேன். அக்கதையில் தி.ஜா தன் எழுத்துக்கள் வாயிலாகவே யமுனாவை கண்,காது,மூக்கு, நிறம், மொழி என ஸ்தூலமாக உருவாக்கி விடுவார். இக்கதை திரைப்படமாக வந்த போது அதில் யமுனாவாக வந்த பெண்ணைப் பார்த்து சற்று ஏமாந்துப் போனேன் நான்.
Moohamul
 
பதின் வயதுகளில் காதலிக்கிறமோ இல்லையோ மோகமுள் வாசித்து இருக்க வேண்டும் என நம்புகிறவன் நான். தி.ஜாவின் எழுத்துக்கள் மிகவும் வசீகரம் ஆனவை. அவரது கதாநாயகிகளை அவர் நம் முன்னால் உருவாக்கி உலவ விடுவது இருக்கிறதே.. அது ஜகஜால வித்தை. அம்மா வந்தாள் நாவலில் வரும் அலங்காரம் அம்மாளையும், இந்துவையும் உருவப்படியாகவே நான் அறிந்திருக்கிறேன். அம்மா வந்தாள் நாவலைப் படித்த தனிமை இரவில் … எனது முதுகிற்கு பின்னால் இந்துவின் விசும்பல் கேட்டுக் கொண்டே இருந்தது போன்ற உணர்வு. அதே போல மோகமுள்ளில் வரும் யமுனாவின் கம்பீரத்தை நான் பார்க்கிற எல்லா முதிர்ப் பெண்களிடமும் தேடி இருக்கிறேன். நீதானா அந்த யமுனா..???
 
அதே போல எங்கள் ஊரைச் சேர்ந்த தஞ்சை ப்ரகாஷ்,எம்.வி.வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு,கு.பா.ரா, இவர்கள் அனைவருமே வாழ்வை வாழ்வாங்கு ரசித்தவர்கள். கும்பகோணம் டிகிரி காப்பியை துளித்துளியாக ரசித்து அருந்தி..காவிரியின் காற்றை நெஞ்சம் முழுக்க சுவாசித்து, குடந்தைக்கே உரிய இதமான பருவச் சூழலில் வாழ்ந்து.. அணு அணுவாக எம் மண்ணையும், மக்களையும் ஆவணப்படுத்தியவர்கள் அவர்கள்.. தஞ்சை மண்ணை, குடந்தைத் தெருக்களை போற்றியவர்கள். தனித்துவமான கதாபாத்திரங்களை உருவாக்கியவர்கள். ஒருமுறை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனோடு கும்பகோணம் வீதிகளில் சுற்றிக் கொண்டிருந்த போது.. நீங்கள் மோகமுள்ளில் வரும் தங்கம்மா வசித்து வந்த வீட்டை பார்த்திருக்கிறீர்களா..? என கேட்டார். விளையாட்டிற்காக தான் கேட்கிறார் என எண்ணி என்ன..சார் …கேட்கிறீங்க…? ..என்றேன். உண்மையாகதான் செந்தில் தங்கம்மா வீட்டை பார்த்திருக்கிறீர்களா.. நான் அழைத்து போகிறேன் என்றார்.
IMG_0850
உண்மையில் அது ஒரு விசித்திர தருணம். எங்கள் உரையாடலை யாராவது கேட்டால் மனம் பிழன்ற இரு நோயாளிகள் பேசிக் கொள்கிறார்கள் என நினைத்து விடுவார்களோ என்ற அச்சம் எனக்கு. இருக்காதே பின்னே..,ஒரு புனைவில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் வீட்டை காண்பிக்கிறேன் என்கிறாரே.. அப்படியென்றால் மோகமுள் உண்மைக் கதையா என்ற குழப்பம் எனக்கு. இதையெல்லாம் பொருட்படுத்தாத எஸ்.ராவோ.. வாங்க தங்கம்மா வீட்டை பார்க்க போகலாம் என்று கிளம்பி விட்டார். எனக்கென்ன பயம் என்றால்… யாராவது முதியவரை காட்டி இவர்தான் மோகமுள் பாபு என்று எஸ்.ரா அறிமுகம் செய்து விடுவாரோ என்றுதான்.
 
அது ஒரு மாலைநேரம். காவிரி அந்நேரத்தில் உண்மையாகவே நிரம்பி தளும்பி ஓடிக் கொண்டிருந்தது. எங்களது வாகனம் கும்பகோணம் பாலக்கரையில் இருந்து நீதிமன்றம் செல்லும் காவிரிக்கரையோர சாலையில் அமைதியாக சென்றுக் கொண்டு இருந்தது. நாங்கள் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. வேறு ஏதாவது சொல்லி விடுவாரோ என்று அச்சம் எனக்கு, சற்று தூரத்தில் வண்டியை நிறுத்தச் சொன்ன எஸ்.ரா அமைதியாக நடக்கத் தொடங்கினார். காவிரிக்கரை படிக்கட்டுகளில் சற்று இறங்கி நிரம்பி ஓடும் காவிரி நதியின் எழிலை அமைதியாக கவனித்துக் கொண்டே நின்றார். பின்னர் வாங்க போகலாம் என்றவாறே நடக்கத் தொடங்கினார். சற்றுத் தூரத்தில் உள்ள சற்று பழுதடைந்த வீட்டைக் காட்டி இங்கே தான் தங்கம்மா இருந்திருக்க வேண்டும். இந்த மாடியில் தான் பாபு தங்கியிருக்க வேண்டும் என்றார். நான் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தேன்.
 
மோகமுள் கும்பகோணம் தெருக்களைப் பற்றிய அழகிய சித்திரத்தை உருவாக்கியுள்ள நாவல் என்று எனக்குத் ஏற்கனவே தெரியும். எஸ்.ரா சொன்ன அத்தகவலை உறுதிப்படுத்திக்கொள்ள நாவலை மீண்டும் வாசித்தேன். கிட்டத்தட்ட 600 பக்கங்களுக்கு மேலான நாவல் அது. குறிப்பிட்ட தங்கம்மா,பாபு வருகிற அப்பக்கங்களை ஆழமாக படித்த போது. தி.ஜா விவரித்த விவரணைகளும், தெரு குறிப்புகளும், எஸ்.ரா அடையாளம் காட்டிய வீட்டிற்கு மிகச்சரியாக பொருந்தியது. நான் அதிர்ச்சியில் வியர்த்து விட்டேன்/.
 
பின்னர் எஸ்.ரா விடம் பேசிக் கொண்டிருந்த போது..சார் நீங்க சொன்னது சரிதான் சார்… அதுதான் தங்கம்மா வீடு என்றேன். அவர் மெலிதாக சிரித்துக் கொண்டார். அதிலிருந்து நான் அந்த வீட்டை கடந்து நீதிமன்றம் செல்லும் போதெல்லாம் என் முதுகுதண்டு சிலிர்க்கும். தங்கம்மா நின்று என்னை பார்த்துக்கொண்டிருப்பது போல தோற்றம். பாபு மாடியில் இருந்து பாடுவது போன்ற மெல்லிய மயக்கம்.
 
உண்மையில் ஒரு எழுத்தாளன் அவ்வளவு வலிமையானவனா..புனைவிற்கும், நிஜத்திற்கும் நடுவே இருக்கும் கோட்டை அழிப்பவனா என்றெல்லாம் எஸ்.ராவிடம் கேட்க வேண்டும் போல தோன்றியது.
 
அவரிடம் நான் கேட்க நினைத்து…கேட்டால் அதையும் சொல்லி விடுவாரோ என்ற பயத்தில் நான் மறைத்த கேள்வி ஒன்று இருக்கிறது.
 
சார்..யமுனா வீடு எங்கிருக்கிறது..?
 
-மணி செந்தில்

Powered by WordPress & Theme by Anders Norén