8057ef23-89a7-49f6-9544-c6778411eec9

நாம் தமிழர் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே தமிழ்த்தேசிய இனத்திற்கான ஒரு வெகுசன அரசியல் கட்சியாகதான் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். ஏனெனில் இங்கே தமிழ்த்தேசியம் பேச கூடிய அமைப்புகள் உண்டு. இயக்கங்கள் உண்டு. ஆனால் ஒரு பெரும் திரள் தமிழ்த்தேசிய கொள்கை சார்ந்த அரசியல் கட்டமைப்பு நாம் தமிழர் வருகைக்கு முன்னால் நிகழவில்லை.
 
ஒரு பேரழிவு கற்பித்த பாடங்களுக்கு பிறகு உயிரிழந்த உடலங்களுக்கு மத்தியில் கருக் கொண்டு உருவான சிந்தனை வெளியில் தான் நாம் தமிழர் பிறந்தது. தனக்கு கிடைக்கக் கூடிய அனைத்து விதமான சாத்தியங்களையும் பயன்படுத்தி எளிய மனிதர்களுக்கான வலிமையான அரசியல் அமைப்பாக உருவாக இலட்சிய நோக்கமுடைய பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் உழைத்து வருகிறார்கள்.
 
சீமான் என்கிற அதிமனிதன் வீதிவீதியாய் அலைந்து.. வியர்வை உதிரமாய் சிந்த ..உழைத்து உருவாக்கும் வெகுசன பேரமைப்பு வரலாற்றில் நிகழ்ந்த ஒரு பெரும் பாய்ச்சல்.
 
முகநூலில் இடும் சில வரி விமர்சனங்களால் ஒரு அமைப்பை உருவாக்கவோ, சிதைக்கவோ முடியாது. இணைய வெளி தாண்டி நாம் வெற்றிக் கொள்ள பல கோடி இதயங்கள் இருக்கின்றன. கணிணித் திரைக்கு வெளியே உலகம் இருக்கிறது. முகநூல் என்பது ஒரு ஊடகம். முகம் காட்ட தேவையில்லாது கருத்தை மட்டுமே பதிய முடிகிற வசதி இந்த ஊடகத்தின் பலம்.
ஆனால் முகநூலில் மட்டும் முக்கிக் கொண்டு இருப்பதுதான் சமூகப் பணி என்று நினைத்தால் அதை விட கோமாளித்தனம் எதுவும் இல்லை.
 
எனவே முகநூல் ஆர்குட் போல ஒரு நாள் அழிந்துப் போனாலும் நாம் தமிழர் இருக்கும். அது அன்று புதிதாக வரும் ஊடகத்தையும் கவர்ந்து இழுந்து வென்றவாறே தன் பயணத்தை தொடரும்.
 
ஒரு வெகுசன அரசியல் கட்சிக்கென்று பல்வேறு இயல்புகள் இருக்கின்றன. அரசியல் ரீதியாக அண்ணனும், வைகோவும் நேர் எதிரானவர்கள். ஆனால் செங்கொடி மரணத்தில், பல விழாக்களில், அக்கா நளினி அவர்களின் புத்தக வெளியீட்டில் இணைந்து நிற்க வேண்டி இருக்கிறது. வைகோ கூட நம் தம்பி விக்னேஷ் மரணத்திற்கு வந்து விட்டுப் போனார். அரசியல் ரீதியில் நமக்கு நேர் எதிரியான ஈவிகேஎஸ்.இளங்கோவனின் தாயார் சுலோச்சனா சம்பத் மறைவிற்கு அண்ணன் சென்று வந்தார். அது கொள்கைகள் சார்ந்ததோ, அரசியல் நிலைகளை மாற்றிவிடக் கூடியதோ அல்ல. இது நாகரீக மரபும், மாண்பும் சார்ந்த வெகுசன அரசியலின் குணாம்சம்.
 
கருணாநிதி எம் இனம் அழிகையில் வேடிக்கைப் பார்த்தவர்தான். இக்கருத்தை அண்ணன் சீமானின் மருத்துவமனை சந்திப்பு மாற்றப்போவதில்லை. அன்று மக்கள் கொத்து கொத்தாய் கொல்லப்படுகையில் போர் என்றால் மக்கள் சாவத்தான் செய்வார்கள் எனப் பேசிய ஜெயலலிதா மரணத்திற்கு புலிகளின் சார்பில் இரங்கல் அறிக்கை வெளியிட்டார்கள். அந்த அறிக்கை ஜெயலலிதாவின் ஈழ எதிர்ப்பு கருத்துக்களை மாற்றப்போவதில்லை. அது ஒரு சம்பிரதாய சடங்கு. இது போன்ற சடங்குகளை அரசியலாக அணுகும் போது அது எதிரியாக இருந்தாலும்.. அவர் குறித்த சாதக புகழுரைகள் வழங்குவதும் இயல்பு.
 
ஒரு உடல் நலிவோ, ஒரு மரணமோ ஒருவரது குற்றங்களை மறைக்கப் போவதில்லை. ஆனாலும் உடல் நலிவுற்ற மனிதரை பார்க்கப் போவது கொள்கை வெளிகளுக்கு அப்பால் துலங்கும் மனித மாண்பு மிக்க நடவடிக்கை. மரண தண்டனை ஒழிப்பு குறித்து அண்ணன் சீமான் பேசுகையில் எம்மினத்தை கொன்று குவித்த ராஜபக்சேவிற்கு கூட மரணதண்டனை கொடுப்பதை நான் எதிர்ப்பேன் என்றார். இந்த நாகரிகத்தையும் நாங்கள் எங்கள் தேசியத்தலைவரிடமிருந்தே கற்கிறோம்.
 
மிகச்சரியான பாதையில் துளியளவும் சமரசமின்றி அண்ணன் சீமான் பயணித்துக் கொண்டு இருக்கிறார். அரசியல் ரீதியான சந்திப்புகள் அவரது அரசியல் வாழ்வில் மறுக்க முடியாத, தவிர்க்க முடியாத ஒரு அங்கம். அவர் அறிவார் பாதையை. அவரை அறிந்தோர் தொடர்வார் அவரது பயணத்தை. கருத்து என்ற பெயரில் அவரவர் எண்ணத்திற்கேற்ப முகநூலில் முழக்கமிடுபவர்…கொஞ்சம் முச்சந்திக்கும் வாருங்கள் . அங்குதான் மக்கள் இருக்கிறார்கள்.
 
நான் நேற்றே சொன்னதுதான்..
 
நம் மாலுமி சரியான திசையில் தான் செல்கிறார். அவரது பணியை அவர் செய்யட்டும்.
 
இந்த புரிதலில் இருந்துதான் நாம் நமக்கான அரசியலை அணுகவேண்டும் என நான் கருதுகிறேன்.