பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Month: டிசம்பர் 2018

நூல் அறிமுகம் : மார்லன் பிராண்டோ -அஜயன் பாலா

நீ ஒளித்துவைத்திருக்கும் கத்திகளை கூராக்கு..
 புதையுண்ட சிறுத்தைகளின் அமேசான் நதியாக
அந்த கத்திகளை என் மார்பில் பாய்ச்சு.. மணிக்கணக்காக
நாட்கணக்காக
ஆண்டுக்கணக்காக
இருண்ட யுகங்களாக
 நட்சத்திர நூற்றாண்டுகளாக
என்னை அழ விடு.
-பாப்லோ நெரூதா.
*
இறுக்கமும் நினைத்துப் பார்க்கவே மறுக்கவும் கூடிய பால்யத்தை கொண்டவர்கள் நிகழ்காலத்தில் வாழ்வின் விதிகளுக்கு கட்டுப்படாத ஒரு கட்டற்ற காற்றைப்போல திரிவார்கள். பால்யத்தின் பசி என்பது வாழ்வு முழுக்க அடங்காத நீட்சியை கொண்ட பெரும் பயணம். துன்பமும் துயரமும் கொண்ட இளம் வயது வாழ்வினுடையவர்களின் விழிகளை என்றாவது உற்று கவனித்து இருக்கிறீர்களா.. எதையும் சற்றே நிமிர்ந்து பார்க்க தயங்கும் அவர்களின் பார்வையில் எதனாலும் ஆற்றுப்படுத்த முடியாத துயரத்தின் நிழல் படிந்திருக்கிறது என்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா..
அப்படியானால் நீங்கள் மார்லன் பிராண்டோவை புரிந்து கொள்வது மிக எளிது.
.
சில நாட்களாக அவரைப்பற்றி தேடி வாசித்து வருகிறேன். அவருடைய திரைப்படங்கள் பலவற்றை தேடிக் கண்டெடுத்து பார்த்து வருகிறேன். ஒரு திரைப்பட நடிகனின் வாழ்க்கையில் கற்றுக்கொள்ள அல்லது தரிசிக்க  என்ன  இருக்க முடியும் என்கிற கேள்விக்கு.. மார்லன் பிராண்டோவின் வாழ்க்கை தரும் அசத்தலான பதில்.. அசலான மனிதன் எப்போதும் சமூகத்தின் சட்டகங்களை மீறுபவனாகவே இருந்து வருகிறான்.
.
மார்லன் பிராண்டோவை பற்றி பல்வேறு செய்திகள் நமக்கு நூலாகவும் கட்டுரைகளாகவும் புத்தகங்கள் வடிவத்திலும் இணையத்திலும் கிடைக்கின்றன. அவரே தன் வாழ்க்கையை பற்றி “Songs my mother rought me” என்கிற சுயசரிதையை எழுதி உள்ளார். மார்லன் பிராண்டோவை பற்றி தமிழில் அஜயன் பாலா ஒரு சிறப்பான நூலை எழுதியிருக்கிறார் .எதிர் வெளியீடாக வெளிவந்திருக்கிறது. எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய உலக சினிமாவில் மார்லன் பிராண்டோவின் புகழ்பெற்ற பேட்டியின் மொழிபெயர்ப்பு வெளியாகியிருக்கிறது
 தன்னை தீவிரமான அமெரிக்கா எதிர்ப்பாளராக காட்டிக் கொண்ட அவர் பூர்வகுடி மக்களுக்காக தீவிரமாக இயங்கியவர். அவரது எழுத்துக்களில் முழுக்க நிறத்தால் இனத்தால் பேதம் காட்டப்பட்டு சுரண்டப்பட்ட பூர்வகுடி மக்களின் உரிமைகள் பற்றிய ஆவேசமே காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. .
.
எப்போதும் மீறல்களும், கோபமும் நிறைந்த மனிதனாக மார்லன் பிராண்டோ திகழ்ந்திருக்கிறார். சிறுவயதில் கோபக்கார தந்தைக்கும் குடிகார தாய்க்கும் மகனாகப் பிறந்த அவரது பால்யம் துயர நினைவுகளாலும் அலைகழிப்புகளாலும் நிறைந்தது. குடித்துவிட்டு எங்கோ மதுபான கடையில் விழுந்து கிடக்கிற தாயை தூக்கி வருகிற வேலையை இவரும் இவரது மூத்த சகோதரியும் தொடர்ச்சியாக செய்து வந்திருக்கிறார்கள். சிறுவயதில் தன்னை கவனித்து கொள்ள வந்த பணிப்பெண்ணான எர்மி என்ற இளம் பெண்ணிடத்தில் தீவிரமாக ஈர்ப்புக் கொள்கிறார் மார்லன். அந்தப் பெண் சில மாதங்களில் காதலனுடன் ஓடிப்போக மிகுந்த தனிமை உணர்ச்சிக்கு உள்ளாகிறார். அந்தத் தனிமை உணர்ச்சி அவர் வாழ்நாளெல்லாம் நிழலென தொடர்ந்து வருகிறது. தான் பழகும் எல்லாப் பெண்களிலும் எர்மியை தேடி கண்டடைய முடியாமல் சோர்வதுதான் அவரது வழக்கமாக இருந்திருக்கிறது.
.
அவரது வாழ்க்கை முழுக்க பெண்களை தேடுவதும் அவர்களில் கொதித்துக் கொண்டிருக்கிற தனது உணர்ச்சி அலைகளை ஆற்றுப்படுத்த வழி தேடுவதுமாகவே மார்லன் இருந்திருக்கிறார். பெண்களை நீக்கி அவரது வாழ்வில் கண்டடைய கற்றுக்கொள்ள எதுவும் இல்லை என்று அவரே சொல்லிக் கொண்டாலும் சகமனிதனின் பால் ஒடுக்கப்பட்ட மக்களின் பால் அவர் கொண்டிருந்த அளவற்ற நேசம் ஆச்சரியகரமானது.
.
அமெரிக்க இந்தியர்களின் போராட்ட இயக்கங்களில் தன்னையும் ஒருவனாக அவர் இணைத்துக் கொண்டிருக்கிறார். மார்டின் லூதர் கிங் பேச்சை கேட்டு உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார். ஆகச்சிறந்த திரைப்பட நடிகன், ஆஸ்கர் விருதிற்கு பலமுறை பரிந்துரைக்கப்பட்ட திறமைசாலி என்றெல்லாம் அவருக்கு ஒரு புகழுச்சிகள் இருந்தாலும்.. பூர்வகுடி மக்களுக்காகப் போராடுவதை தான் தனது வாழ்நாள் கடமையாக அவர் கருதியிருக்கிறார். அமெரிக்காவை கண்டு பிடித்ததாக உலகவரலாற்றில் போற்றிக் கொண்டாடப்படும் கொலம்பஸ் ஸை மனிதநேயமற்ற கொலைகாரன் என்று மார்லன் வெளிப்படையாக குற்றம் சாட்டினார்.
இந்தியாவிற்கு பீகார் பஞ்சத்தை பற்றி ஆவணப்படம் எடுப்பதற்காக வந்திருக்கிறார். இந்த நிலத்தில் காணப்படும் சாதிய ஏற்றத்தாழ்வுகளே உலகத்தில் நடக்கிற அனைத்து விதமான கொடுமைகளை விட ஆகப்பெரும் கொடுமை என்று வருந்துகிறார்.இந்திய நிலத்தின் மாபெரும் திரைப்பட ஆளுமை சத்யஜித்ரே யோடு நெருங்கி பழகி இருக்கிறார். அவரது மிக நெருக்கமான இன்னொரு நண்பன் மைக்கேல் ஜாக்சன்.
ஆஸ்கர் விருதுக்காக இயங்குகிற இயங்குகிற நடிகர்களை பார்த்து ஏளனம் செய்கிறார் மார்லன்.தி காட்பாதர் படத்தில் நடித்ததற்காக அவர் ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்.அந்த விருதைப் பெறும் நிகழ்ச்சியை அமெரிக்க பூர்வகுடிகள் அடைந்திருக்கிற துயரங்களை உலகம் முழுக்க கொண்டு செல்கிற ஒரு வாய்ப்பாக பயன்படுத்த மார்லன் பிராண்டோ முடிவு செய்தார். தனக்கு பதில் அந்த விருதைப் பெற சச்சின் லிட்டில் வெதர் என்கிற ஒரு பூர்வகுடி பெண்ணை அனுப்பி இதுவரை அமெரிக்க பூர்வகுடிகள் அடைந்திருக்கிற துயரங்களை உலகறிய செய்தார்.
தனித்த தீவு ஒன்றை விலைக்கு வாங்கி வசிக்க முயன்ற மார்லன் பிராண்டோ தனது தனிப்பட்ட வாழ்க்கையில் மிகப்பெரிய சோதனைகளை தி காட்பாதர் படத்தின் நாயகன் மாஃபியா கிங்   டான் கார்லியோன் போலவே அனுபவித்தவர். தனது மகளின் காதலனை தனது மூத்த மகன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று 10 வருட சிறை தண்டனை அனுபவிக்க மகள் தற்கொலை செய்து கொள்ள தீரா மனவேதனையில் ஆழ்ந்து போனார் மார்லன் பிராண்டோ.
தனது 47வது வயதில் 70வயது கிழவனாக காட்பாதர் இல் நடித்து உலகப் புகழ் அடைந்த மார்லன் பிராண்டோ தனது வாழ்க்கையை மூடி வைத்த ஒரு புத்தகமாக கருதவில்லை. கேமரா முன் நின்றவுடன் தன்னை அந்த கதாபாத்திரத்திற்குள் உட் செலுத்துவதில் மார்லன் பிராண்டோ ஒரு ஜீனியஸ். அவர் நடித்த தி லாஸ்ட் டாங்கோ இன் பாரிஸ் என்கிற திரைப்படத்தில் மிகு காம உணர்வு கொண்ட ஒரு மிருகம் போல வாழ்ந்து காட்டி இருப்பார். காட்பாதர் படத்தில் நடிப்பதற்காக தனது தாடையை மாற்றி அமைத்துக் கொண்டு ஒவ்வொரு அசைவிலும் ஒரு டான் போல வாழ்ந்திருப்பார். அவருக்கு எலிசபெத் டெய்லர் மர்லின் மன்றோ போன்ற புகழ்பெற்ற நட்சத்திரங்களோடு நெருக்கமான உறவு இருந்தது. கூட நடிக்கும் பல நடிகைகளோடு அந்தரங்க உறவு வரை வைத்துக்கொள்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இளம் வயதில் தன்னை ஏமாற்றிய எர்மி என்ற அந்தப் பணிப்பெண் தன்னை விட்டு போனதிலிருந்து வேறு எந்தப் பெண்ணிடமும் ஏமாந்து விடக்கூடாது என்கின்ற எண்ணத்தினாலேயே ஒரே சமயத்தில் பல பெண்களோடு.. ஒன்று போனால் இன்னொன்று என்ற வகையில் நெருக்கமான தொடர்பில் இருந்ததாக அவரே ஒத்துக் கொள்கிறார்.
.
ஏறத்தாழ என்பது வருடங்கள் வாழ்ந்த அவரது வாழ்க்கை துயரங்களும் ஏமாற்றங்களும் நிறைந்த கொடும் பாதை என்றாலும் அவர் அந்த உணர்ச்சிகளின் நெருக்கடி தீண்டாத திறன்மிக்க பெரும் ஆளுமை கொண்ட நடிகராக திகழ்ந்தார். திரையில் அவர் தோன்றிவிட்டால் அவரது ஆளுமை படாத சக கதாபாத்திரங்கள் இருக்க இயலாது. திரை முழுக்க தனது திறமையால் கட்டுப்பாட்டில் வைத்திருக்க தெரிந்த அந்தப் பெரும் கலைஞனுக்கு வாழ்வின் சூட்சமங்கள் குறித்து இதுவரை தெரியவில்லை என்பதுதான் பெரும் சோகம்.
புகழ்பெற்ற இயக்குனர் பெர்னாண்டோ பெர்ட்டோலூச்சி இயக்கிய தி லாஸ்ட் டாங்கோ இன் பாரிஸ் என்கின்ற திரைப்படத்தில் மார்லன் பிராண்டோ நடித்த போது  கேமிராவின் வியூ பைண்டர் மூலம் அவரை பார்க்க முடியவில்லை .. கால்கள் உதறல் எடுக்கிற அளவிற்கு நடிப்பில் ஆளுமை செலுத்துகிறார் என்று அந்த திரைப்படத்தின் கேமராமேன் மிரண்டு போனார். அதேபோல  பியூஜிடீவ் மைண்ட் என்ற திரைப்படத்தின் இயக்குனர் சிட்னி லூமட் மார்லன் பிராண்டோ நடிக்கும்போது ஒரு பறவை சத்தமிட்டால் கூட அதனை வெறுமனே தன் ஒற்றைப் பார்வையால் அடங்க செய்துவிடுவார் என்று பிரமிக்கிறார். அந்த அளவிற்கு நடிப்பில் ஆளுமை செலுத்திய மாபெரும் கலைஞனாக மார்லன் பிராண்டோ திகழ்ந்தார்.
இதையெல்லாம் தாண்டி அவர் அரசியலாக ஏற்றத்தாழ்வுக்கு எதிராக , அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அழுத்தமான தனது குரலை பதிவு செய்திருக்கிறார் என்ற காரணத்தினாலேயே ஒவ்வொரு மனிதனும் உணர்ந்து கொள்ள வேண்டிய , அறிந்துகொள்ள வேண்டிய பெரும் இலக்கியமாக மார்லன் பிராண்டோ வரலாற்றில் உறைந்திருக்கிறார்.
இந்த மாபெரும் கலைஞனை தனது அசாத்திய எழுத்து மூலமாக தமிழுக்கு மொழிபெயர்த்துள்ள அஜயன்பாலா விற்கு மனமார்ந்த பாராட்டுக்கள். ஒரு சுய சரிதை நூலுக்குரிய வெறும் தகவல் களஞ்சியமாக இல்லாமல் குறைகளையும் நிறைகளையும் சொல்லி ஆராய்ந்து கொள்கிற ஒரு மனிதனின் குரலாக அஜயன் பாலாவின் இந்நூல் விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுமைகளைப் பற்றிய வாழ்வியல் சுயசரிதை அறிமுகங்களை தமிழில் தனி வகைமையாக எழுதி வருகிற அஜயன் பாலாவின் இந்த நூல்  தமிழ் மொழிக்கான அவரது மிகச்சிறந்த கொடை.
(மார்லன் பிராண்டோ – தன் சரிதம் தமிழில் அஜயன்பாலா எதிர் வெளியீடு ,விலை ரூ 250)
Attachments area

துளி-22

விலங்கம்ச மிச்சங்கள்..
—————————————–

அந்த சாதி பெண்ணை திருமணம் செய்வோம் ..இந்த சாதிப் பெண்ணை திருமணம் செய்வோம்.. என்றெல்லாம் முழங்குவது சமூக அறிவு சிறிதும் அற்ற ஒரு கேடுகெட்ட மூர்க்கத்தனமான மூடத்தனம் என்பது ஒரு புறம்..

தான் நினைத்தால் எளிதில் களவாட முடிகிற கடைச்சரக்காக ஒரு பெண்ணை நினைப்பது என்பது அனைத்திலும் காட்டிலும் ஆகப்பெரும் அயோக்கியத்தனம்.

இந்த அயோக்கியத் தனம் தான்.. ஒரு பெண் மீது ஆசிட் ஊற்ற வைக்கிற, கழுத்தை கொலை செய்ய வைக்கிற நோயாக மாறுகிறது.

இவன் நினைத்தால் போதும். ஒரு பெண்ணை திருமணம் செய்து விடலாம் என்கிற சிந்தனை கொடுங்கோன்மையான ஆணாதிக்க வன்முறை உணர்வின் தொடர்ச்சி.

முதலில் பெண் என்பவள் நம் சக மனுஷி. சக பாலின் மீது நேசம் ஏற்பட்டு ஈர்க்கப்படுவதென்பது உலகத்து இயற்கை. அது காதலாக மாறும் புள்ளியில் மற்றவருடைய விருப்பம் என்பது மிக முக்கியமானது. ஒரே அலைவரிசையில் பொருந்தும் விருப்பங்கள் திருமணம் வரை நீள்கிறது. அவ்வாறு திருமணம் வரை நிகழ்கின்ற அந்த உறவு வாழ்நாள் வரை மதிப்பு மிகு தோழமையாக.. சகல உணர்ச்சிகளும் கண்டுகொள்ளப்படுகிற மாசற்ற அக்கறையாக தொடரும் பட்சத்தில் தான் அந்த காதல் பரிபூரணத்துவம் அடைகிறது. இதில் சாதி மதம் போன்ற சமூக முரண்கள் குறுக்கிடும் போது ஏற்படும் தடைகள் தகர்க்கப்பட வேண்டியவை.

இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் நினைத்த உடனேயே ஒரு பெண்ணை திருமணம் செய்து விட இயலும் என்கிற ஒரு இளைஞன் சிந்தனை சாதி ஒழிப்பிற்கான புரட்சி முழக்கம் அல்ல.

அது முற்றிலும் மூளைச்சலவை செய்யப்பட்ட மூர்க்கமான மனநோய்.

இதுபோன்ற மூர்க்க மனநோய்களுக்கு அண்ணல் அம்பேத்கரின் படத்தை உபயோகிப்பது என்பது அபத்தமானது . ஆபத்தானதும் கூட.

சாதி மறுத்து சாதி வேண்டாம் என திருமணம் செய்தவர்கள் இன்ன சாதி பெண்ணை தான் காதலிக்க வேண்டும் என்றெல்லாம் கணக்குப் போட்டு காதலிப்பதில்லை. அவ்வாறு திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டால் அது காதல் அல்ல . அது மாபெரும் சமூகத் தீங்கு. நிகழும்
சாதி ஆணவக் படுகொலைகளுக்கு இணையான மாபெரும் கொடுமை ‌.
பெண்ணையும் வீட்டில் இருக்கிற அண்டா ,குண்டா போல ஒரு சொத்தாக ,பார்க்கிற ஆணாதிக்க வல்லாண்மை உணர்ச்சி.

இதுபோன்ற முட்டாள்தனமான மூர்க்கத்தனமான முழக்கங்கள் முன்வைக்கும் எதுவும் சாதி மறுப்பும் அல்ல. சாதி ஒழிப்பும் அல்ல.

மனநல மருத்துவமனைகளில் சேர்த்து உரிய சிகிச்சை தர வேண்டிய தீவிரமான மன நோய்.

முதலில் பெண்ணை களவாட முடிகிற பொருளாகப் பார்க்காமல் சக உயிரியாக பார்க்க கற்றுக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள். குறிப்பாக ஆண் குழந்தைகளுக்கு. நம்மைப் போன்ற சக உயிரியை தோழமையாக,சகாவாக நினைக்காமல் களவாட நினைப்பதும் ஆக்கிரமிக்க நினைப்பதும் இருப்பதிலேயே ஆகப் பெரும் தீங்கு என்பதை குழந்தையில் இருந்து நாம் கற்பிக்க வேண்டும்.

இதுபோன்ற காணொளிகள் நாம் இன்னும் நாகரீகத்தின் எல்லையை கூட தொடவில்லை என்பதையும்,
விலங்கம்சத்தின் மிச்சத்துடன் அலைந்து கொண்டிருக்கிறோம் என்பதையும் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

முதலில் பெண்ணை சக மனுஷியாக பார்க்க,பழக கற்போம்.
புரட்சி,புண்ணாக்கு எல்லாம் பிறகு பேசலாம்.

துளி-21

 

 

இடப்பிறழ்வு மொழி..
———————————–

பிரிவின்
இருள் நிழல்கள்
நம் வசந்தகால
முற்றத்தின் மேல்
போர்த்த முனையும்
இப்பொழுதை
முற்பொழுதொன்றின்
பேரன்பின்
மழைச்சாரல்
நனைக்க முயல்கிறது.

உனக்கென நீ
கோர்த்துக் கொண்ட
காரணச் சங்கிலிகளை
உன் கழுத்தில்
அணிந்துக் கொண்டு
கீழ்த்திசை நோக்கி நடக்க
தொடங்குகிறாய்..

ஒரு நள்ளிரவின்
அழுகுரல் போல
நம் பிரிவு
சுருதி பேதம்
காணாத தன்னியல்பாய்
நிகழத் தொடங்குகிறது.

நம் நேச வீணையின்
அறுந்து விட்ட
தந்திகள்
எங்கிருந்தோ வரும்
காற்றின் விரல்களால்
தீண்டப்பட்டு
அதிரத்தான் செய்கிறது.

தனிமையின் சுடர்
நினைவுகளின்
நிராதரவான
பக்கங்களை
ஒளியூட்டுகிறது.

வெறித்த
பார்வைகளோடும்
விழி நீர்
சிமிட்டல்களோடும்
வெற்றுச் சுவர்
மீதேறி
உறைகின்றன
விழிகள்..

பசுமையேறிய
பெருவனத்தில்
இலையுதிர்
பொழுதொன்றின்
நுழைவு போல
காலதிசை மாற்றமிது
என என்னால் நம்ப
முடியவில்லை.

ஆயினும்..
எனக்குள் நானே
உறுதிப்படுத்திக்
கொள்கிறேன்..

சகி..

நமக்கென ஒரு
நிலாக்காலம்
இருந்தது.

துளி-20

 

வைகோ -சரிந்த அரண்மனையின்
பாசிப் படர்ந்த விதானம்
——————————————————–

ஒரு காலத்தில் பாராளுமன்றத்தை நடுநடுங்க வைத்தவர் அவர்.இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை நேருக்கு நேராக நின்று மோதியவர்.எந்த ஒரு வரலாற்றையும் புள்ளிவிவரத்தோடு விவரித்து நினைவாற்றலால் வியக்க வைத்தவர். இசைஞானி இளையராஜாவின் திருவாசகம் வெளியீட்டுவிழாவில் இசை நுட்பங்களை பற்றி, தமிழர் இசை பற்றி இவர் பேசிய காலங்களை நினைக்கும் போது காலம் தான் எவ்வளவு கொடிய அரக்கன் என நினைக்கத் தோன்றுகிறது.

உண்மையில் இன்றைய வைகோவின் நிலைமை பரிதாபகரமானது. பாராளுமன்றத்தில் பெரும் பெரும் விவாதங்களை எல்லாம் எதிர்கொண்ட வைகோவால் ஒரு சாதாரண தொலைக்காட்சி நெறியாளரை எதிர்கொள்ள முடியாமல் போனது என்பது வரலாற்றில் நாம் காணுகின்ற அபத்தக் காட்சி..

கழுத்தைப் பிடித்து ஸ்டாலின் வெளியே தள்ளினாலும், அவர் காலைப்பிடித்து கதறுகின்ற வைகோவின் நிலைமை எந்த ஒரு அரசியல் தலைமைக்கும் வந்துவிடக்கூடாது. அவரின் இந்த நிலைமைக்கு வேறு யாரும் காரணம் அல்ல. அவரை தவிர.

கொள்கையில் உறுதி ,அரசியலில் நேர்மை ,பொதுவாழ்வில் தூய்மை என்றெல்லாம் தொடங்கிய வைகோ யாரை எதிர்த்து அரசியல் கட்சியைத் தொடங்கினாரோ அவரை நம்பியே பிழைக்க வேண்டிய பரிதாப நிலை.

இந்தப் பரிதாப நிலையும் இந்த கேவலமும் வைகோவுக்கு மிக எளிதாக ஏற்பட்டதில்லை. சொல்லப்போனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் கூட அவமானங்கள் ஏற்படவில்லை. தொடர்ச்சியான அவரது அரசியலின் சமரசங்கள், பிழையான முடிவுகள் , சுயநலமான பித்தலாட்டக்கார நடிப்பு அரசியல் இதுவே அவரது அரசியல் வாழ்க்கைக்கு முடிவுரையாக போனது.

அவரது ஆவேசம் ,கோப உணர்ச்சி , எல்லாம் காமெடியாக பார்க்கப்படுவதை அவர் இன்னும் உணரவில்லை என்பதையே இன்றைய புதிய தலைமுறையின் அக்னிப்பரிட்சை பேட்டி காட்டுகிறது. குறிப்பாக நாம் தமிழர் மீது அவர் காட்டும் ஒவ்வாமை அவருக்கே எதிர்மறையாக மாறிப்போய் என்பதுதான் காலத்தின் கோலம்.

ஏனெனில் காலம் என்பது மிக விசித்திரமானது. ஒரு காலத்தில் கொண்டிருக்கின்ற மதிப்பீடுகள் இன்னொரு காலத்தில் எவராலோ முறியடிக்கப்பட போகிறது என்கின்ற நிதானம் வாழும் காலத்தில் ஒவ்வொருவருக்கும் தேவையாக இருக்கிறது. இது நிரந்தரம்.. நம்மை மிஞ்ச ஆள் இல்லை.. என்றெல்லாம் எவரேனும் கனவு கண்டால் எதிரே வரும் சிறுவன் சின்ன இடைவெளியில் நம்மை மிஞ்சி சென்று விடுவான் என்பதற்கு வைகோவின் வாழ்க்கை ஒரு சரியான உதாரணம்.

நாம் தமிழரை வைகோ எதிர்க்க எதிர்க்க.. வைகோ பரிதாபமாக அம்பலப்பட்டு கொண்டே போகிறார். இந்த மாவீரர் நாளில் தஞ்சையில் மிக எழுச்சியாக நாம் தமிழர் கட்சி மாவீரர் நாளை நிகழ்த்திக் கொண்டிருக்க ..தன்னந்தனியாக கடலில் இறங்கிக் கொண்டு வைகோ ஏதோ புலம்பிக் கொண்டிருந்ததை பார்த்த போது.. இவரா இந்திரா காந்தி ராஜீவ் காந்தி போன்ற பெரும் தலைவர்களை எதிர்த்து அரசியல் செய்த தலைவர் என்று நினைக்கத் தோன்றுகிறது.

ஒரு காலத்து மனிதராக வைகோ மாறிப்போனதுதான் நிகழ்காலத்தின் மீது அவர் கொண்டிருக்கின்ற வெறுப்பாக இன்று மாறிப் போயிருக்கிறது.

வைகோ கொண்டிருக்கின்ற திராவிடக் கொள்கை ஏற்கனவே அம்பலப்பட்டு நவீன அரசியல் தளத்தில் புறக்கணிக்கப்படுகிற ஒன்றாக மாறிவிட்டது. திராவிட இயக்கங்களின் முக்கிய கொள்கைகளான சாதி மறுப்பு, பகுத்தறிவு, இந்துத்துவ பார்ப்பன எதிர்ப்பு ஆகியவைகளை திராவிட இயக்கங்களே கைவிட்டு விட்ட சூழலில்.. நவீன தமிழ் தேசியர்கள் சாதிமறுப்பு ,இந்துத்துவ பார்ப்பன எதிர்ப்பு ,பகுத்தறிவு, சூழலியல், போன்ற பன்முக கொள்கை சட்டகங்களால் தங்களை செழுமைப்படுத்திக் கொண்டு களத்தில் வலிமையாக நிற்கிறார்கள்.

எனவேதான் வைகோ போன்றவர்கள் பயப்படுகிறார்கள். கோபப்படுகிறார்கள் .எழுந்து ஓடுகிறார்கள்.

ஈழத் தமிழர்களைக் கொன்ற கருணாநிதிக்கு என் வாழ்நாளில் மன்னிப்பே கிடையாது என்று முழங்கிய வைகோ இன்று கருணாநிதி மகன் காலில் விழுந்து கிடப்பது என்பது அரசியல் தடுமாற்றம் மட்டுமல்ல. திராவிட இயக்கங்களுக்கே உரிய தத்துவ நிலை நீர்த்துப்போதல்.

அது ஒரு வகையான மரணம். திராவிடக் கட்சிகளின் தலைமைகள் தங்கள் தத்துவத்தின் மரணத்தை மறைக்க முடியாமல் கோபப்படுவதை தான் நிகழ்கால காட்சிகள் அம்பலப்படுத்துகின்றன.

வைகோ தன் வாழ்வில் சொன்னது போல இப்போது சுவர் ஏறி தப்பித்து ஓட முடியாத நிலைமையில் தற்போது நிற்கிறார்.

வைகோவால் அன்று துரைமுருகன் அடிவாங்கினார். பிறகு ஜெயலலிதா, விஜயகாந்த் என நீளூம் அப்பட்டியலில் இடம் பெறாமல் தப்பிக்க ஸ்டாலின் முயல்கிறார். ஆனாலும் வைகோ ஸ்டாலினின் வேட்டியை விட மறுக்கிறார்

அண்ணன் சீமான் போன்றவர்கள் வைகோவின் படத்தை தன் சட்டைப்பையில் வைத்திருந்தவர்கள். இன்று அவரே ஒரு கட்சி ஆரம்பித்து வைகோவை கடந்து எங்கோ சென்றுவிட்டார்.

ஆனால் வைகோ இன்னமும் கோபாலபுரத்தில் ஸ்டாலினின் கருணைக்காக காத்திருப்பது என்பது தடுமாற்றம் நிறைந்த அவரது அரசியல் வாழ்வில் உச்சக்கட்ட தோல்வியாக அமைய இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அவருக்கும் தெரியும்.ஆனால் வேறு வழியில்லை.

திராவிட இயக்கத்தைக் காப்பாற்ற வேண்டும் என்கிறார். மூச்சற்ற பிணம் என்ன முக்கினாலும் உயிர் வரப்போவதில்லை.

ஒருகாலத்தில் நாங்களெல்லாம் நேசித்த வைகோ என்றோ தொலைந்துவிட்டார். இன்று இருப்பவர் தோற்றுப்போன ஒரு வயதான நடிகர். பழங்கால நினைவுகளை மட்டுமே வைத்துக் கொண்டு நிகழ்காலத்தில் அதை வைத்துக் கொண்டே ஓட்டிவிடலாம் என நினைத்து பரிதாபமாக தோற்பவர்.

ஒரு காலத்தில் அவரது பெருமைமிக்க நினைவுகளே அவரை இன்று கொலை செய்கின்ற மாபெரும் ஆயுதங்களாக மாறி துன்புறுத்திக் கொண்டிருக்கின்றன என்பதை தான் அவர் கோபமாக வெளிப்படுத்திக் காட்டிக் கொண்டிருக்கிறார். அந்தப் பெருமை சித்திரத்தை வைகோ என்றோ தனது அரசியல் தவறுகளால் மாற்றி கோமாளி சித்திரமாக வரைந்து விட்டார்.

இனி வைகோ என்ற மனிதர் ஒரு காலத்தில் வாழ்ந்தார் என்பதை வைகோவே சொன்னால் கூட யாரும் நம்பப் போவதில்லை.

ஆழ்ந்த அனுதாபங்கள்.

துளி-19

 

ஒரு கருவறையின் காத்திருப்பு..
—————————————————–

சமீபத்தில் இயக்குனர் கௌதமன் அவர்களின் தந்தையார் மறைவுக்கு திட்டக்குடிக்கு அண்ணன் சீமானோடு சென்றிருந்த போது அம்மாவை பார்த்தேன். இந்த முறை இன்னமும் தளர்ந்திருந்தார்.அண்ணனோடு ஏதோ பேசிக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடன் இறுக கைகளைப் பற்றிக் கொண்டார்.

கூட்டம் அதிகமாக இருந்தது நான் நகர்ந்து வந்து விட்டேன். சில நேரம் கழித்து வழக்கறிஞர் அங்கயற்கண்ணி எனது நண்பர் திருமலை அக்கா அமுதா நம்பி ஆகியோரோடு அவர் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்.

என்னை பார்த்தவுடன் மீண்டும் வந்து என் கைகளை பற்றிக்கொண்டார். அவரது கண்களை நேரடியாக பார்ப்பது என்பது ஆறாத ரணம் ஒன்றை நேரடியாக காண்பது போன்றதான கொடுமை. அவரைப் பார்க்கும்போதெல்லாம் ஆழ்மனதிற்குள் ஒரு குற்ற உணர்வு. நாமெல்லாம் உண்டு களித்து உறங்கும் பொழுதுகளில் கூட வெறுமை வீடொன்றில் வாசலில் நிழலாடும் ஒரே ஒரு உருவத்திற்காக 28 வருடங்களாக அவர் காத்திருக்கிறார். அது ஒரு துயர்மிக்க நீண்ட காத்திருப்பு. பசுவதை குறித்து பாடம் எடுக்கும் இந்த நாட்டில் ஒரு தாய் 28 வருடங்களாக அனுபவித்து வரும் வதை குறித்து இந்த மானுடச் சமூகம் கண்டும் காணாமல் கடந்து போவது உலகின் மாபெரும் கொடுமை.

அந்த ஈர விழிகள் எப்போதும் உறங்கியதே இல்லை. வயதான அந்த தாய் தந்தையர் எழுதாத கடிதங்கள் இல்லை. போகாத போராட்டங்கள் இல்லை. கையில் ஒரு தட்டியோடு தமிழகத்தில் அவர்கள் நிற்காத வீதிகள் எங்கும் இல்லை.

இத்தனைக்கும் பிறகும் கூட உடல் நலிவுற்ற அவரும், அவரது கணவரும்.. தங்களைப் போலவே நீண்ட சிறை வாசத்தால் நோய்மையின் எல்லைகளை தொட்டு தவிக்கிற தங்கள் மகனை என்ன விலை கொடுத்தேனும் விடுதலை செய்யும் முயற்சியில் தளர்ந்தே இல்லை.

அவர்களுக்கென்று இந்த உலகில் எதிரிகள் யாரும் இல்லை. தங்கள் மகன் விடுதலைக்கு உயரும் ஒவ்வொரு கைகளும் அவர்களுக்கு உறவுகளே. தங்கள் மகன் விடுதலைக்கு உழைக்கும் ஒவ்வொரு முகத்திலும் அவர்கள் தங்கள் மகனை காணுகிறார்கள்.

வரப்போகின்ற ஒரு வசந்த நாளுக்காக.. 28 வருடங்களாக வாழ்க்கையை தொலைத்து விட்டு வாசலை நோக்கி அந்த ஈர விழிகள் காத்திருக்கின்றன. பிஞ்சுக் குழந்தை முதல் இளைஞனாக நின்ற பருவம் வரை அந்த வீட்டில் உலவிய அந்த வெண்ணிற கால்கள்.. மீண்டும் தங்கள் வீட்டு முற்றத்தில் தென்றலாக உலவாதா என்கின்ற உள்ளார்ந்த ஏக்கத்தில் அவர்கள் காத்திருக்கிறார்கள்.

அந்த ஒரே ஒரு மகன் வெறும் மகன் அல்ல.. அவர்களது உலகம்.. அவர்களது வாழ்க்கை..

அவன் உண்மையிலேயே பேரறிவாளன்.மரண வலியிலும் மகிழம்பு புன்னகை களை உதிர்க்கும் பேரழகன்.

28 வருடங்களாக அந்த உலகம் அவர்களுக்கு தொலைந்து இருக்கிறது. நம்மைப் போல ஒரு நாளும் அவர்கள் இயல்பாக உண்டு உறங்கி மகிழ்ந்து வாழ்ந்ததில்லை.

செய்யாத குற்றத்திற்கு.. புரியாமல் அறியாமல் 28 வருடங்களுக்கு மேலாக தண்டனை அனுபவித்துவிட்டனர் ஏழு தமிழர்கள். அவர்களைவிட இந்த 28 வருடங்களாக கொடும் தண்டனையை அவரது குடும்பத்தினர்கள் அனுபவித்து விட்டார்கள்.

இனிமேலும் அந்த தண்டனை நீடிப்பது எதனாலும் சகிக்க முடியாதது‌.

…….

அம்மா என் முன்னால் நின்று கொண்டு இருந்தார்கள்.”மணி செந்தில்.. இந்த முறையாவது உன் அண்ணன் வீட்டிற்கு வந்து விடுவானா.. ”

அந்தக் கேள்வியில் இருந்த வலிக்கு என்னிடம் மருந்து இல்லை. ஆனால் அந்தக் கேள்வியின் பதிலுக்கான வழி நம் ஒவ்வொருவரிடமிருக்கிறது.

தமிழர் ஒவ்வொருவரும் வீதிக்கு வர வேண்டும்.

7 தமிழர் விடுதலையை இந்த உலகமே தன் விழி உயர்த்தி கேட்கும் அளவிற்கு உரத்து கேட்க வேண்டும்.‌

இணையம் முழுக்க பரப்புவோம். இனி கரங்கள் இணைந்து இயங்குவோம்.

#28YearsEnoughGovernor

துளி-18

 

இராஜ விழிகள் கொண்ட பேரழகன்..
————————————————————–

முதன்முதலாக அந்தக் குரலை கேட்டப்போது நான் சற்றே ஆச்சரியம் அடைந்தேன்.அது ஒரு வகையான நெகிழ்வும்,குழைவும் கொண்ட குரல். அந்த இறுக்கமான பிம்பத்திற்கும் அந்த குரலுக்கும் சம்பந்தமில்லை என்றே கருத வேண்டி இருக்கிறது.

அவரைப் பற்றி ஆளாளுக்கு ஒரு கதை வைத்திருக்கிறார்கள்.அவரை சந்தித்தவர்கள் அவரைப் பற்றி நினைவுகளால் அவரவர் பங்கிற்கு ஒவ்வொரு சித்திரத்தை வரைகிறார்கள்.

எதிரிகளுக்கு கூட அவரைப்பற்றி கால தேச அபிமானங்களை தாண்டி ஆச்சர்யங்கள் மிகுந்த வியப்பு இருக்கிறது.

அவர் இல்லை என்கிறார்கள் சிலர். அவர் இருக்கிறார் என்கின்றார்கள் சிலர். ஆனால் அவரோ இந்த மிகை/குறைகளை எல்லாம் கடந்த காலநதியின் முடிவற்ற பயணம் போன்ற ஒரு முடிவிலி.

ஒரு முறை தலைவரைப்பற்றி மறைந்த ஓவியர் வீர சந்தானம் அவர்களோடு உரையாடிக் கொண்டிருக்கையில்.. இராஜ விழிகளோடு பிறந்த பேரழகன் டா அவர். அது அரச அம்சம். என்றார். எனக்கு மகிழ்வு கலந்த ஆச்சரியம்.புன்னகைத்துக் கொண்டேன்.

எனக்கு மிகவும் வேண்டிய நண்பர் ஒருவர் சமீபத்தில் இலங்கைக்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது ஒரு ஆச்சரியமான செய்தியை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

நமது நண்பர் ஒருபேருந்தில் பயணம் செய்து இருக்கிறார். அந்தப் பேருந்தில் ஒரு வயதான பாட்டியும் அவரது பேரனும் பயணம் செய்திருக்கிறார்கள். பேருந்தில் கூட்டம் நிரம்பி வழிகிறது. திடீரென அந்த பேருந்தில் பயணம் செய்வதற்காக சிங்கள ராணுவ வீரர்கள் சிலர் ஏறுகின்றனர். மற்ற பயணிகளை அவரவர் இருக்கைகளை விட்டு எழச் சொல்லி மிரட்டி கட்டாயப்படுத்தி அந்த இருக்கைகளில் அவர்கள் அமரத் தொடங்கினார்கள். ஆனால் பாட்டியால் மட்டும் எழ முடியவில்லை. தனக்கு மூட்டுவலி இருப்பதாகவும் தன்னால் நின்றுகொண்டு பயணம் செய்ய முடியாது எனவும் சிங்கள ராணுவ வீரரிடம் அந்த பாட்டி கெஞ்சவே அதைப்பார்த்து அந்த சிங்கள வீரன் அந்தப் பாட்டியை வலுக்கட்டாயமாக இருக்கையிலிருந்து பிடித்து கீழே தள்ளுகிறான். பாட்டி கீழே விழுந்தவுடன் அருகிலிருந்த மற்றொரு சிங்கள வீரன் அந்த பாட்டியை அடிக்க கையில் இருந்த லத்தியை ஓங்கியபோது அந்த லத்தியை தனது பிஞ்சு கைகளால் அவரோடு பயணித்து வந்த அந்த பேரன் தடுத்திருக்கிறான். அப்போது அந்த சிறுவனின் அச்சமற்ற விழிகளில் ஒரு வகை பிரபாகரனித்துவம் தென்பட்டதாக என் நண்பர் பிரமித்து கூறினார்.

அவரே மீண்டும் சொன்னார்.

அப்போதுதான் நானே நம்பத் தொடங்கினேன் .

தலைவர் உயிருடன் இருக்கிறார்.

அந்த பிஞ்சு விழிகளில் மட்டுமல்ல எங்கெங்கெல்லாம் அநீதி நடக்கிறதோ அங்கெல்லாம் உயரும் கரங்களில் ..ஒலிக்கும் முழக்கங்களில்.. தலைவர் உயிருடன் தான் இருக்கிறார்.

களங்கமற்ற அந்த புன்னகை மூலமாகவே நான் இந்த உலகில் வாழ்வதற்கான அனைத்து துணிவினையும் அடைகிறேன்.

எனது மூத்த மகன் சிபிக்கு ஒரு பழக்கம் உண்டு. ஏதேனும் கெட்ட கனவு காணும் போதெல்லாம்.. எழுந்து அமர்ந்து பெரியப்பா என்று தலைவரை அழைப்பான். மீண்டும் அவனாகவே உறங்கிவிடுவான். இது அவனது நம்பிக்கை.

அந்த நம்பிக்கை எப்போதும் பொய்த்ததில்லை. தலைவரும் எப்போதும் இறந்ததில்லை.

என் அண்ணனுக்கும்..
என் மன்னனுக்கும்..

இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

தலைவர் 64
நவ 26-2018

துளி-17

 

 

பிரிவொன்றின் வானம்
_________________________

உன்
மெளனப்பறவைக்கு
முன்னால்
என் பேரன்பின்
சொற்கள்
தானியங்களாய்
இறைந்து கிடந்தன.

நீயோ எதையும்
பொருட்படுத்தாது
பியோனோ
ஒவியத்தின்
உறைந்திருக்கும்
இசையானாய்..

நிராகரிப்பின்
சிறகுகளோடு
வலசை பயணப்பட
எத்தனிக்கும் உன்
பார்வை
ஏறக்குறைய கடலசைவில்
நின்றாடிய தனிமை
படகொன்றின் நிழலைப்
போர்த்தி இருந்தது.

ஏதேனும் ஒரு நொடி
உடைதலில்
ஏதேனும்
காரணங்கள் தட்டுப்படும்
என்கிற உனது
பரிதவிப்பை நான்
கண்ணாடி சன்னலுக்கு
வெளியே பெய்யும்
மழையை போல
அவதானித்திருந்தேன்.

நாமாகிப் போன
நம் குளத்தின்
அந்த அசைவற்ற
சலனத்தை கலைக்க
ஏதேனும் நினைவின்
கற்களை
வீசுவாய் என
நான் எதிர்பார்த்திருந்த
வேளையில்…

நீ மெளனமாக
தலை குனிந்தாய்..

நீ நிமிர்ந்த போது
உன் கண்கள்
கலங்கிருந்தன.

இனி ஒருபோதும்
உன்னை சந்தித்து
விடக்கூடாது என
அப்போதுதான்
முதன் முதலில்
நினைத்தேன்.

 

துளி-16

 

மழையாலானவனின்
மற்றுமொரு உரையாடல்..

——————————

நான் நிதானித்து
செய்கிற எதையும்
உனக்கான பாவனைகளாக
நீயே கற்பிதம்
செய்து கொள்கிறாய்..

என்னை எப்போதும்
ஒரு பியானோ வாசிப்பவனாக
நீ யோசிக்கிறாய்.

நானோ மூடிய
கைகளோடு
அலைபவன்.

அப்படி என்றால்
அந்த மூடிய கரங்களில்
உயிருடன்
துடிக்கும் நீல மீன்
குஞ்சு ஒன்று துடித்துக்
கொண்டு இருப்பதாக
நீ சொல்கிறாய்.

நான் வெற்றுக்கரங்களை
திறந்து காட்டுகிறேன்.

காற்றில் அந்த
நீல மீன் சிறு
தட்டானாய் மாறி
பறந்து விட்டதென
நீ பதைபதைக்கிறாய்.

முடிவாக
உன்னை நான்
கடலில்
தள்ளப்போவதாக
குற்றம் சாட்டுகிறாய்..

இல்லை.
அந்தக் கடலை
கூட
உனக்கென எழுதிய
சில வரிகளுக்கு
இடையே புதைத்து
வைத்திருக்கிறேன்
என்றேன்.

அப்படியென்றால்
நேற்று பெய்த மழையை
எங்கோ எடுத்துச்
சென்று அலட்சியமாக
தொலைத்து விட்டாய்
என விசும்பினாய்.

இல்லை இல்லை..
மழையை தான்
நான் சொற்களாக
மாற்றி உன்னோடு
உரையாடிக் கொண்டிருக்கிறேன்
என்றேன்.

கண்கள் கலங்க
என்னை
பார்த்த நீ
பார்வைகளால்
ஒரு கடலையும்..
மெல்லிய
சிரிப்பொன்றினால்
சிறு அலைகளையும்
அங்கேயே
உருவாக்கினாய்.

அந் நொடியில்..
நீ கொடுத்த
ஈர முத்தமொன்று
நீல மீன் குஞ்சாய்
அதே கடலில் நீந்திக்
கொண்டிருந்ததை
இறுதி வரை நீ
கவனிக்க வில்லை.

Powered by WordPress & Theme by Anders Norén