பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Month: ஜனவரி 2020

அடர்பச்சை- வன்முறையின் அழகியல்


—————————————————————–

“நான் காட்டில் வாழ்ந்திராத காட்டு விலங்கு. என் பயத்தை மிஞ்சியும் கூட உன் இருப்பிற்குள் வந்தேன். நீ எவ்வளவு நல்லவளாக இருந்தாய்.. நான் உன் காலடியில் கிடந்து, உன் கைகளுக்குள் என் முகத்தை வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக உணர்ந்தேன். பெருமிதப் பட்டேன். சுதந்திரமாய் சக்திவாய்ந்து இயல்பாய் இருந்தேன். ஆனால் இது எல்லாவற்றுக்கும் அடியில் நான் ஒரு விலங்காகவே இருந்தேன். ஏனெனில் நான் காட்டுக்கு சொந்தமானவன்.”

பிரான்ஸ் காப்கா அவரது பெண் தோழி மெலினாவுக்கு எழுதிய கடிதம் ஒன்றில்..

துருவனின் எழுத்துக்களும் அப்படித்தான். ஏனெனில் அவைகளும் தொன்ம மனிதனின் அசுர மொழிகள் தான்.இதுவரை வெளிவந்திருக்கிற வழமையான எழுத்து சித்திரங்களை உதறி விட்டு வன்முறையின் பேரழகோடு அவனது அடர்பச்சை வெளியாகியிருக்கிறது. பிரதி முழுக்க கலைத்துப் போடப்பட்டிருக்கும் சொற்க்கோர்வை மிகவும் புதிரானவை. ஆழ்நிலை சிந்தனையை கோருபவை. இதுவரை உங்கள் வாழ்வின் எல்லா வித அனுபவச் சாரங்களின் ஊடாக நீங்கள் அடைந்திருக்கிற அனைத்து வித இறுக்க முடிச்சுகளையும் அறுத்துப் போட்டு விட்டு ஒரு கட்டவிழ்க்கப்பட்ட மனநிலையோடு அடர் பச்சையின் பக்கங்களை நீங்கள் தொடுவீர்களேயானால்.. இதுவரை நீங்கள் காணாத பெரும் களியாட்டத்துக்கு உங்களை நீங்களே ஒப்புக்கொடுக்கிறீர்கள் என அர்த்தம்.

புகழ்பெற்ற நோபல் பரிசு பெற்ற நாவலாசிரியர் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் எழுதிய ஒரு நூற்றாண்டின் தனிமை (one hundred years of solitude) மேஜிக்கல் ரியலிசம் (Magical realism) என்கின்ற பின்நவீனத்துவ இலக்கியக் கோட்பாடு வகையை சார்ந்து எழுதப்பட்ட புனைவாகும். மார்க்வெஸ்சின் நாவல்கள் மாக்கான்டோ என்கின்ற புனைவு வழி சித்தரிப்பு நகரத்தில் நிகழ்கின்றன. அவரது எழுத்துக்கள் நிஜத்திற்கும் புனைவின் விசித்திரங்களும் இடையிலான மெல்லிய கோட்டினை அழிக்க முயன்று கொண்டே இருக்கின்றன.

அடர்பச்சை யும் அப்படித்தான். கடவுள்-அசுரர்-தேவர்-சாத்தான் போன்ற புராண எதார்த்த புள்ளிகளை
கை கொண்டு , மறுக்கவே முடியாத மீள்புனைவு சாத்தியங்களை அடர்பச்சை தனக்குள் அடக்கி இருக்கிறது.

ஆழமாக உள்நோக்கி பார்த்தோமானால் அடர்பச்சை வார்த்தைகள் அற்ற ஒரு பிரதி. செந்நிற வானில் தனித்துப் பறக்கும் ஒரு பறவையின் பறத்தல் போல பொருத்தி வைக்கப்பட்ட காலச் சட்டகத்தினை மீறி அதன் இயக்கம் நிகழ்ந்துக் கொண்டே இருக்கிறது.

செவ்வக வெளிச்சப் பாய்ச்சல் மட்டுமே
உட்புகுந்திருக்கும் வெற்று வாசலைப் போல அடர் பச்சையில் ஊடுருவி பாய்ந்திருக்கிற தனிமை உணர்ச்சி வாசிக்கின்ற ஒவ்வொரு ஆன்மாவையும் பின்தொடர்ந்து தொற்றிக்கொள்கிறது.

“கவிதையானது வேற்றுக் குரல். அது வரலாற்றின் குரலோ அல்லது எதிர் வரலாற்றின் குரலோ அல்ல. எனினும் கவிதையில் வரலாறு எப்போதும் வேறுபட்ட ஒன்றையே சொல்லிக்கொண்டிருக்கும்” என்கிற மெக்சிகோ கவிஞன் ஆக்டேவியா பாஸின் குரலைப் போல அடர்பச்சையின் அடி இழை புராண இதிகாசங்களின் புனித பிம்பங்களுக்கு எதிரான குரலாக மட்டும் அடையாளப்படுத்தப்படுமேயானால் அது முழுமை அல்ல. மாறாக ஆக்டேவியா பாஸ் வரையறை செய்வது போல இது வேற்று குரல்.

கவிதை என்றெல்லாம் வகைமைப் படுத்தி விட முடியாத ஒழுங்கின்மை தான் அடர் பச்சையின் ஆகப் பெரும் வலிமை.கழுத்து நரம்பின் மையப்புள்ளியை அறுத்துவிட்டு செல்கிற ஒரு புராதான வாளின் கூர்மை போல கவித்துவப் புள்ளிகளின் கூர்மை அடர்பச்சை முழுக்க ஒளி விடுகிறது. ஆனாலும் கவிதை என்ற ஒழுங்கினில் எங்கும் அடைபடாமல் காற்றின் நழுவல் போல நழுவிக் கொண்டே போவதை இப்பிரதி முழுக்க தரிசிக்கலாம்.

ஆல்பெர் காம்யூ எழுதிய The plague (1948) என்ற நாவலில் Tarrou-டேரூ என்ற இளைஞன் வருவான். அவனுக்கு இருக்கின்ற மகத்தான சிக்கல் இதுதான்..

“கடவுளே இல்லாத ஒரு இடத்தில் ஒருவன் எவ்வாறு புனிதனாவது ..?”

என்கிற கேள்வியை அவன் எழுப்பிக் கொண்டே இருப்பான். அதேபோன்ற
கேள்வியைத்தான் அடர்பச்சையும் எழுப்புகிறது.

சாத்தானும் அசுரனும் இல்லையேல் கடவுள் ஏது.. கடவுளின் கட்டமைக்கப்பட்ட புனித நிழல்களைக் குறித்து சாத்தான் கேள்வி எழுப்பும் போது தான் கடவுள் உயிர்க் தொடங்குகிறான். அசுரன் கடவுளின் தலைக் கொய்ய வாளை உயர்த்தும் அந்த நுட்ப புள்ளியில்தான் கடவுள்
உயிர்க் கொள்ள தொடங்குகிறார். இதுபோல தத்துவ விசாரணை உள்ளீடு கேள்விகள் அடர்பச்சை முழுக்க விரவிக் கிடக்கிறது.

ஒரு கவிதை அல்லது ஒரு இலக்கிய வடிவம் மேம்பட மேம்பட மொழி கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்குகிறது. மொழியின் வசீகரங்கள் மறைந்து போய் ஒரு காட்சி ஊடகமாக அந்த இலக்கிய வடிவம் விரிய தொடங்குகிறது. ஆச்சரியகரமான வகையில் அடர்பச்சையில் அந்த மேஜிக் நிகழ்ந்துவிட்டது என்றே சொல்லலாம்.

தீரா வன்முறையின் படிமங்கள் ஒரு மையச் சரடு போல அடர்பச்சை முழுக்க பயணித்துக் கொண்டே இருக்கிறது. மீள்எழுதலுக்கான பெருவழி, இறுதியில் கூர்வாளின் நுனி கொண்டே எழுதப்படுகிறது.

பழைய Western classic cowboy படங்களில் காணப்படும் மரச் சட்டங்களால் வேயப்பட்ட கட்டிடங்கள் கொண்ட புராதன அமெரிக்க சிறு நகரத்தில் வெக்கை பூசும் வெயிலில் நட்ட நடு மணல் வீதியில் துப்பாக்கி எடுப்பதற்காக கரங்களை அசையாமல் காத்திருக்கும்
ஒரு அக்மார்க் கௌபாயின் கண்களில்
தோய்ந்திருக்கும் அதே வன்முறையின் அழகியல் அடர்பச்சை யிலும் காணப்படுவதுதான் இது இயல்பிலேயே கொண்டிருக்கும் உலகத்தரம்.

இந்தப் பதிவில் நான் எங்கும் அடர்பச்சையின் வரிகளை மேற்கோள் காட்டவில்லை என்பது திட்டமிட்ட ஒன்றே. நீங்களாக கண்டடைய வேண்டுகிற அந்த அனுபவம் எனது மேற்கோள்களால் நழுவக்கூடாது என நான் விரும்புகிறேன்.

விலக்கப்பட்ட கனி போல அடர்பச்சை தன்னியல்பில் ஈர்க்கும் சுவாரசிய ஆச்சரியங்கள் கொண்டது. நிலைநிறுத்தப்பட்டு இருக்கிற எல்லாவித புனித பிம்பங்களையும் ஒற்றை கோட்டில் நிறுத்தி வினா எழுப்புகிற அடர்பச்சையின் அரசியல்
காலம்காலமாய் புறக்கணிக்கப்பட்டு அடக்கி ஒடுக்கப்பட்ட குரல்களின் விம்மல்.

அடர்பச்சையை நான் முன்மொழிகிறேன்.

நீங்கள் வழிமொழியுங்கள்.

அழித்தொழிக்கப்பட வேண்டிய சுயசாதி பெருமிதம்..

 

 

 

சுய சாதியை குறித்து எந்தவித பெருமிதமும் கொள்ளாமல் அதை மிக இழிவான அடையாளமாக கருதுவதுதான் உண்மையான சாதிமறுப்பு.

மேலும் சாதியக் கட்டமைப்பினால் தாழ்ந்து வீழ்ந்து கிடக்கிற உனது சக மனிதனை கை தூக்கி விடுவது போல பிறக்கிற எந்த ஒரு இலக்கியமும், திரைப்படமும் கொண்டாடத்தக்கவையே..

பரியேறும் பெருமாள் பார்த்துவிட்டு நான் எல்லாம் தலைகுனிந்து இருக்கிறேன்.
எங்களது தாய்வழி பூர்வீக கிராமத்தில் எனது குடும்பத்து முன்னோர்கள் இந்த சாதி கட்டமைப்பினால் சக மனிதர்களை அடிமையாக நடத்திய விதம் குறித்து குற்ற உணர்வு கொண்டிருக்கிறேன். அருவருப்பு அடைந்திருக்கிறேன்.

என்னடா உங்கள் பெரிய மயிறு சாதி என்று செத்துப்போன எனது குடும்பத்து பெருசுகளை தோண்டி எடுத்து காறித் துப்பலாமா என்றெல்லாம் யோசித்திருக்கிறேன்.

பரியேறும் பெருமாள், அசுரன் போன்ற கலைப்படைப்புகள் எண்ணற்ற எளிய மனிதர்களின் மனசாட்சியை தொட்டு எழுப்பி சாதிமறுப்பு மனநிலையை உண்டாக்கி இருக்கின்றன. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஊடுருவி சாதி குறித்த கேள்விகளை அவை எழுப்புகின்றன. அசுரன் படம் பார்த்துவிட்டு எனது மகன் இரண்டு மணி நேரம் சாதிய கட்டமைப்பு களைப்பற்றி அதன் கொடுமைகளை பற்றி என்னிடம் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தான். இவை போன்ற படைப்புகள் தான் இப்போது தேவைப்படுவது.

பெற்றோர் பக்கத்திலிருந்து பார்ப்பதாக கூறி சாதி மறுப்பு திருமணங்களை மறுக்கிற அல்லது அவமானப்படுத்துகிற எந்த படைப்பும் தந்திரமாக சாதி நிலைகளுக்கு ஆதரவானதே.

அது என்ன ஒரு பக்கம் என்று கேள்வி கேட்பதே அவமானகரமானது. ஏனெனில் சாதிமறுப்பு நிலை என்பது நடுநிலையானது அல்ல. அது சாதி நிலைக்கு எதிரானது.பல்லாயிரம் ஆண்டுகளாக நுட்பமான சாதி கட்டமைப்பினால் இந்த சமூகம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இப்படித் தாழ்ந்து வீழ்ந்து கிடைக்கிற சகமனிதன் அதன் பிடியிலிருந்து வெளிவரத் துடிக்கும் போது உடனிருந்து கைப்பிடித்து தூக்கிவிட வேண்டியதும் ஆதரவாக நிற்க வேண்டியதும் மனிதனாக உணர்கிற ஒவ்வொருவரின் கடமை.

அதைவிட்டுவிட்டு மறுபக்கம் பேசுகிறேன், இன்னொரு பக்கம் பற்றி யோசியுங்கள் என்றெல்லாம் பேசுவது நேரடியாக சாதியை ஆதரியுங்கள் , அப்படித்தான் சகமனிதனை கீழ்மையாக நாங்கள் நினைப்போம் என்பதற்கு நிகரானது.

முதலில் வெளிவராத ஒரு திரைப்படத்திற்கு தந்திரோபாயமாக செய்யப்படும் இதுபோன்ற விளம்பர முயற்சிகளுக்கு நாம் பலியாகி விடக்கூடாது. இதை ஒரு விவாதமாக கூட மாற்றக் கூடாது. புறக்கணிப்பு மட்டுமே சரியான எதிர்வினை.

என்னைப் பொறுத்தவரையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ சாதி நிலைகளை ஆதரிக்கிற எந்த ஒரு திரைப்படமும் அல்லது இலக்கியமும் சமூகத்தால் தீண்டத்தகாத அருவருக்கத்தக்க படைப்புகளே..

வாழ்வின் பொருள் யாதெனில்..

 

வாழ்வின் மீதான சுவை மிக விசித்திரமானது. வாழ்வின் எந்த ஒரு கணத்திலும் அதன் சுவை தீர்ந்து போகலாம். சலிப்புற்ற அந்த கணத்தில் எதற்காக பிறந்தோம்‌ எதற்காக வாழ்ந்தோம் என்றெல்லாம் உள்ளுக்குள் கேள்விகள் எழலாம்.

பல தருணங்களில் நான் அவ்வாறு தான் உழன்று இருக்கிறேன். உறக்கமற்ற இரவுகளில் ஏதேனும் ஆழ்மனதில் நாம் எப்போதோ பெற்றுக்கொண்ட ஒரு முள் மெல்ல அசைந்து கீறத் தொடங்க.. கொடும் நரகம் என இரவுகள் நீளும். ஏன் இந்த கொடும் வாழ்க்கை.. என்ற கேள்வி எனக்கு மட்டும் தான் தோன்றுகிறதா.. என்ற சங்கடம் உள்ளுக்குள் சலித்து எடுக்கும்.

அப்படித்தான் கடந்த காலத்தில் மிகுந்த குற்ற உணர்ச்சியோடு நகர்ந்த பொழுதொன்றில் சென்னை மத்திய சிறையில் அண்ணன் ராபர்ட் பயஸ் அவர்களை சந்தித்தேன்‌. அவரை அதற்கு முன் பல முறை நான் சந்தித்து இருந்தாலும் அந்த சந்திப்பு சற்றே விசித்திரமானது. அந்த சந்திப்பிற்கு முன்னால் வாழ்வு குறித்த சில கேள்விகளை அவரிடம் கேட்க வேண்டும், என் பிரச்சினைகளுக்கான தீர்வினை அவர் மூலமாக அடைய வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருந்தேன்.

பல விஷயங்களை அவரிடம் பேசிவிட்டு உங்களிடம் எனக்கு ஒரு ஆலோசனை தேவைப்படுகிறது அண்ணா என்று சொன்னேன். ஆள் மிகவும் மெலிந்து விட்டு இருக்கிறீர்கள்‌.. என்ன பிரச்சனை என்று கேட்டார். அவரிடம் அந்த நொடியில் அனைத்தையும் கொட்டி விட வேண்டும் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் அவர் வாழ்கிற அந்த கொடும் நெருக்கடி மிகுந்த துயர வாழ்விற்கும் முன்னால் அபத்தமும் பலவீனமும் நிறைந்த எனது துயரங்களை எப்படி கொட்டுவது என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.

உண்மையில் வாழ்வு என்றால் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. அதன் அர்த்தம் புரியவில்லை. எதற்காக வாழ்கிறேன் என்று கூட எனக்கு தெரியவில்லை ..உண்மையில் இந்த வாழ்வில் நான் அடைந்தது என்ன அண்ணா என்று கேட்டேன்.
அவர் என்னை சற்று உற்றுப் பார்த்தார். பிறகு அவருக்கே உரிய அந்த ஈழத்துத் தமிழில் ‌.. நாம் நினைப்பது போல் எல்லாம் அமைவதற்கு வாழ்வென்பது நாம் வரையும் ஓவியம் அல்ல. பல சமயங்களில் ஓவியம் கூட நாம் நினைப்பது போல வருவதில்லை. அமைந்ததை அமைதியாக எதிர்கொண்டு விடு. எல்லாம் சரியாகி விடும் என்றார்.

அண்ணன் ராபர்ட் பயஸ் மிகச்சிறந்த ஓவியர். விடுதலைக்கு விலங்கு நூலை எழுதியதற்காக அவர் கையால் வரைந்த புகழ்பெற்ற ஓவியம் ஒன்றை எனக்கு பரிசாக வழங்கியிருக்கிறார். இந்த பதிலைக் கூட ஓவியக் கோடுகளை முன்வைத்தே விவரித்து விட முயன்றார்.

இதை கவனித்துக் கொண்டிருந்த அருகிலிருந்த அண்ணன் பேரறிவாளன் “ஏமாற்றங்களை எதிர்கொண்டு பழகிக் கொள்ளுதல் என்பது ஒரு கலை. எனது தந்தையார் சிறுவயதிலிருந்து ஏமாற்றங்களை பழகிக்கொள்ள சொல்லுவார். அனைவரும் வெற்றி பெற்றால் வெற்றி என்ற ஒன்றே கிடையாது. எனவே ஏமாற்றங்களை பழகிக்கொள். ஏற்றுக்கொள். சரியாகிவிடும்” என்றார்.

அந்த அண்ணன்களின் முகத்தை நான் பார்த்தேன். எப்படிப்பட்டவர்கள் இவர்கள்… வாழ்வதற்கான எல்லா தகுதியும் இவர்களுக்கு இருந்தும் வாழ்வதற்கான உரிமை மறுக்கப்பட்டவர்கள். நான்கு காம்பவுண்ட் சுவருக்குள் 28 வருடங்களாக ஒரு உலகை அமைத்துக்கொண்டு இரவும் பகலும் பேதம் அறியாத விசித்திரமான கால ஓட்டத்தில் தன்னை கரைத்து கொண்டிருப்பவர்கள். இப்போது கதவு திறக்கும்.., அப்போது கதவு திறக்கும் ..என்றெல்லாம் எதிர்பார்ப்பில் கசிந்து ஒழுகும் ஒவ்வொரு நொடிகளையும் கணக்கெடுத்துக் கொண்டு காத்திருப்பவர்கள் ‌.

ஒவ்வொரு முறையும் அவர்களை சந்திக்கும் போதும் சந்திப்பு நேரம் முடியும் அந்த கணத்தில் ஏதோ ஒரு சிறைத் துறை அலுவலர் வந்து சந்திப்பு நேரம் முடிந்துவிட்டதாக சாடை காட்டிவிட்டு செல்வார். அந்த கணத்தில் அண்ணன்களுக்கு முகம் இறுகும் துயரத்தை நானெல்லாம் கண்ணீர் மல்க அருகிலிருந்து கவனித்திருக்கிறேன். இறுகி அணைத்து விட்டு விடை பெற்று வரும்போது திரும்பி பார்க்கையில் அந்த கம்பிகளுக்கு பின்னால் அண்ணன்கள் நின்று கொண்டே இருப்பார்கள். அதை பார்க்கும்போது சட்டென நமது ஆன்மா உடைந்துவிடும்.

குறிப்பாக பயஸ் அண்ணன். விடைபெறும்போது இறுகி அணைக்கையில் நம் நெஞ்சம் விம்முவதை அவரே அறிந்து கொள்வார் ‌. கைகளை இறுக்க கோர்த்துக் கொள்வார். சரி போய் வா தம்பி. துணிவாய் இரு என்பார். ஈழத்தவர்கள் அப்படித்தான். எப்படிப்பட்ட துயர சூழ்நிலையிலும் கலங்காத மனம் தளராது இறுகிப் போய் இருப்பார்கள். நீண்டகால யுத்தம் சார்ந்த வாழ்க்கை அவர்களுக்கு அது போன்ற உளவியலை பரிசாக அளித்து இருக்கும்போல.

அன்றும் அப்படித்தான். எனக்குள் ஏற்பட்டிருந்த குழப்பங்களை பயஸ் அண்ணன் மூலம் தீர்த்துக்கொள்ள நான் சென்றிருந்தபோது.. அவர்கள் வாழ்க்கையை உணர்ந்து நான் எதுவும் கொட்ட முடியாமல் அமைதியாக திரும்ப தயாரானேன்.

அண்ணன் பயஸை நான் வழக்கம்போல விடைபெறுதலுக்காக இறுக்கி அணைக்க.. அண்ணன் ஒரு நிமிடம் என்னை விலக்கி.. என்னை நினைத்துக்கொள். எல்லா துயரமும் உன்னை விட்டு ஓடிவிடும் என்றார்.

நான் உடைந்து விட்டேன். சே.. எப்படிப்பட்ட வலிமிகுந்த வார்த்தைகள் அவை. அவர் அடைந்த துயரங்களுக்கு நாம் அடைந்த தெல்லாம் துயரம் என்ற சொல்லுக்குள் கூட வராதே என்று நினைத்துக்கொண்டேன்.

இப்போதும்கூட எனக்கு எப்போதெல்லாம் நெருக்கடிகள் வருகின்றனவோ அப்போதெல்லாம் அண்ணன் ராபர்ட் பயஸ் அவர்களைத்தான் நினைத்துக்கொள்கிறேன். அவரது வாழ்க்கை கதையான விடுதலைக்கு விலங்கு எழுதும்போது பல பக்கங்கள் அவரே எழுதிய குறிப்புகளை கொடுத்தார். அதில் அவர் அடிக்கடி குறிப்பிட்டிருப்பது.. தன் ஊருக்குத்தான் திரும்பவேண்டும் என்கின்ற விருப்பம். பலவிதமான சொற்களில் அதே விருப்பத்தை வெவ்வேறு விதமாக அவர் குறிப்பிட்டிருப்பார்.

ஊருக்கு திரும்பணும் தம்பி. என்று ஒருமுறை அவர் குறிப்பிட்டபோது.. திரும்பிப் போய் என்னவெல்லாம் செய்வீர்கள் என்று நான் கேட்டேன். அப்போது அவர் பேச்சு மொழியில் என்னிடம் விவரித்த உணர்ச்சிகள் தான்..
அனைவரும் குறிப்பிடும் விடுதலைக்கு விலங்கு நூலில் என்னால் எழுதப்பட்ட அந்தப் பத்தி.

“உங்களிடம் பகிர்ந்து கொள்ள
எனக்கு ஒரு கனவு இருக்கிறது.
ஒரு நாள் என் தாய் நிலத்திற்கு
நான் திரும்புவேன்..”

சமீபத்தில் அவரை சந்தித்தபோது இந்தக் குறிப்பிட்ட பத்திப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.
எப்போதெல்லாம் ராபர்ட் பயஸ் என்ற பெயர் உச்சரிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் மணிசெந்தில் என்கின்ற என்னுடைய பெயரும் உச்சரிக்கப்படும் என்று அப்போது சொன்னேன்.

அவர் தலையசைத்து சிரித்துக்கொண்டார்.

முன்னொரு பொழுதில் அவரிடம் வாழ்வின் அர்த்தம் பற்றி எல்லாம் கேட்டது நினைவுக்கு வந்தது.

ஒருவேளை என் வாழ்வின் அர்த்தம் இதுவாகத்தான் இருக்குமோ..??

வானவில் போராளிகள்..


—————————————-

அதோ
அவர்கள்
நடந்துப்
போகிறார்கள்..

உயிர் ஆழத்தில்
உதிரக்கனவாய்
உறைந்திருக்கும்
ஒரு தேசத்தின்
பாடலை
உரத்தக் குரலில்
பாடியவாறு
அவர்கள்
நடந்துப் போகிறார்கள்..

முன்னோர்
மூச்சடக்கி
புதைந்த மண்ணில்
இருந்து
மட்காமல்
துளிர்த்திருக்கும்
சேர்ந்திசைப்
பாடல் அது..

காரிருள் படர்ந்து
காலங்காலமாய்
நிலைத்த பனை
நின்ற படி எரிந்த
கந்தக நெடி
கருப்பையில்
கருவுற்ற பாடல்
அது..

பசும் ஈரம்
போர்த்திய
ஆதி வனத்தின்
முதிர் கொடி ஒன்று
முறிக்கப்பட்டப்போது
முதிர்ந்தெழுந்த
பாடல் அது..

மூதாதை
கால் சுமந்த
தாய்நிலம்
அப்பாடலை‌ கேட்கும்
போதெல்லாம்
தானாகவே
விம்முகிறது
என்றார்கள்..

அப்பாடல்
கேட்கும்
போதெல்லாம்..
வானெறி
குண்டுகளால்
இருட்புகை
மண்டிய
பொழுதுகளில்..
ஆதவன்
அதுவாகவே
உதித்து விடுகிறது
என்றார்கள்..

யுகயுகமாய்
அந்த இனத்தின்
மண் காக்க நின்று
விதையாய்
ஊன்றப்பட்ட
முதுமனிதர்களின்
பொருமிடும்
மூச்சுக்காற்று
அந்தப் பாடலைத்தான்
சுமந்து
உச்சி மலைகளில்
அலைகிறது
என்றார்கள்..

உற்சாகக் குரலோடு
சேர்த்து பிணைந்த
கரங்களோடு…
அதோ
அவர்கள்
பாடிக் கொண்டே
செல்கிறார்கள்..

குருதியாற்றின்
உதிரத்துளிகள்
தொல்குடி ஒன்றின்
விழிச்சிவப்பு
வெப்பத்தால்..
ஆவியாகி மேகமாய்
மிதக்க..

எந்த நொடியிலும்
உறுமி வெடிக்க
காத்திருக்கும்
அந்த
வானத்தின்
விளிம்பின்
உதித்திருக்கும்..

அந்த வானவில்
பாலத்தின் மீது
அதோ போகிறார்கள்..

அவர்கள் போகிறார்கள்.

மாவீரர்கள் போகிறார்கள்..

……..

வீரவணக்கம்.

 

https://youtu.be/qiiBJ3mpGtY

பயணங்கள் முடிவதில்லை..


————————————————–

ஒரு பொன் அந்திமாலையில் கரை ஓரத்தில் நின்றுகொண்டு அடர்ந்து படர்ந்து ஓடும் நதியைப் பார்ப்பதுபோல.. நான் இந்த வாழ்வை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

எதன் பொருட்டும் அந்த நதி நிற்பதில்லை. யாருக்காகவும் காத்திருப்பதில்லை. எதனாலும் திசை மாறுவதில்லை. தன் கடன் பயணிப்பதே என்பதுபோல அது ஓடிக் கொண்டே இருக்கிறது.

இந்த முடிவிலியான பயணத்தில் சட்டென நிகழ்ந்துவிடுகின்றன நம்மோடு உயிரென நின்றவர்களின் இழப்புக்கள். அப்படித்தான் சமீபகாலமாக என் இதயத்திற்கு மிக நெருக்கமானவர்களை நான் இழந்து விட்டு எதனாலும் கட்டுப்படாத வாழ்வின் குரூர ஓட்டத்தைப் பற்றி கண்கள் முழுக்க நீரோடு சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்.

உண்மையில் தம்பி கார்த்தி இறந்தபோது எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நேற்று வரையில் என்னோடு பேசிக் கொண்டிருந்தான். நான் அவன் தோள் பிடித்து நடந்துக் கொண்டிருந்தேன். பல நம்பிக்கைகளை என்னுள் விதைத்துக் கொண்டிருந்தான். இருவரும் சேர்ந்து பல கனவுகள் கண்டோம். சட்டென பற்றிருந்த என் கையை உதறிவிட்டு அவன் தனியே சென்றுவிட்டான். என் முன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் போல தம்பி டக்கீலோ மணி இருந்தான். அடிக்கடி காணாமல் போய் கடையில் நின்று கொண்டிருக்கும் அவனை நான் திட்டி கொண்டே இருப்பேன். சிரித்துக்கொண்டே என் முன்னால் அவன் நின்று கொண்டிருப்பான். திடீரென நிரந்தரமாக காணாமல் போய்விட்டான்.

தூங்கி விழித்த பிறகு கலைந்து போகின்ற கனவு போல என்னுள் கலந்துவிட்ட என் தம்பிகள் காணாமல் போவது என்னால் எதனாலும் சகிக்கமுடியாத துயரமாக மாறிப்போனது. அதுவும் என்னோடு வயது குறைந்தவர்கள். நன்கு வாழ வேண்டியவர்கள். சட்டென போய்விட்டார்கள்.

அவர்களை இழந்து நிற்கின்ற அவர்களது குடும்பங்களுக்கு எந்த வார்த்தையும் சொல்லி என்னால் ஆறுதல் படுத்த முடியவில்லை. ஏனெனில் நானே ஆறுதல்படுத்த வேண்டிய நிலையில்தான் இருந்தேன்.
உடன் பயணித்தவர்கள் மரணித்துப் போனால் ஒரு மாலையை வாங்கி போட்டுவிட்டு மறு நொடியே தன் வேலையை பார்க்கப் போகிற இயல்பான அரசியல் கட்டமைப்பாக கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சியை நாங்கள் உருவாக்கவில்லை.

தனியனாக அண்ணன் சீமான் நாம் தமிழர் கட்சியை உருவாக்க தொடங்கியபோது.. முதன்முதலாக தமிழ்நாட்டில் பிரம்மாண்டமான கலந்தாய்வுக் கூட்டத்தை கும்பகோணம் தான் நடத்தியது. இனம் அழிந்த வலியில் கண் சிவந்து மண்ணை மீட்கிற புனிதப் பணியில் இறங்கிய அண்ணனை பின் தொடர்ந்து பயணிக்க இளைஞர் கூட்டம் ஒன்று இங்கு உருவாகி நின்றது.

நாங்கள் ஒருவருக்கொருவர் கைகோர்த்துக்கொண்டோம். குடும்பமாக கூடி நின்று மகிழ நாம் தமிழர் என்ற பெயரில் கூட்டுக்குடும்ப வாழ்க்கை வாழ்வது என முடிவு செய்துவிட்டோம். இன்பத்திலும் துன்பத்திலும் பிரியக்கூடாது என மனதிற்குள் உறுதி ஏற்றுக்கொண்டோம். ஒருவருக்கொருவர் எதனாலும் விட்டுக் கொடுத்து விடக்கூடாது என்பதில் கவனம் கொண்டோம். அப்படியேதான் பயணித்தோம். ஆனாலும் பயணத்தின் முடிவு பிரிவு தானே என்பதை உணர்த்துவது போல எதிர்பாராத சில நிறுத்தங்களில் எதிர்பாராமல் சிலர் இறங்கிச் சென்றுவிட்டார்கள். ஒவ்வொருவரும் பிரிந்து செல்லும்போது நாங்கள் பலவீனப்பட்டதாக உணர்ந்தோம். ஆனாலும் கைகோர்த்துக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம். புதிதாக கைகோர்த்துக் கொண்ட பலரை இணைத்துக்கொண்டு எங்களது பயணம் தொடர்ந்தது.

அண்ணன் சீமான் ஓடிக்கொண்டே இருந்தார். அவரது வேகத்துக்கு நாங்களும் ஓட முயன்றோம். என்னோடு பயணித்து கொண்டிருந்த என் தம்பிகள் தங்களது கடும் உழைப்பினால் அண்ணன் சீமானிற்கு ஈடு கொடுக்கத் தொடங்கினார்கள்.

அப்படி ஓடியவன் தான் தம்பி மோ. கார்த்திக்.இரவு பகல் பாராமல் என்னோடு பயணித்தான். இருள் விலகா பொழுதுகளில் பனி அசையும் இரவுகளில் இளையராஜா பாடல்களோடு என்னோடு கண்கள் முழுக்க கனவுகளோடு பேசிக்கொண்டே வந்தான்.

திடீரென இறந்துவிட்டான். ஒருமாதிரியாக மனது வெறுத்துப் போய்விட்டது. வீட்டிலும் சூழ்நிலைகள் சரியில்லை. மனைவிக்கு உடல் நலம் இல்லாமல் போனது உண்மையில் மனதை பலவீனப்படுத்தி விட்டது. இனி என்ன செய்வது என்பது போல தேக்கம்.

அப்போதுதான் தம்பிகள் ஆனந்தும், கார்த்தியும், லிங்கதுரையும் சாமிநாதனும், பூபேஷ் குப்தாவும் ,விஜியும், பிச்சுவா மணியும் அவர்களோடு கூடிநின்ற தம்பிகளும் நாங்கள் இருக்கிறோம் அண்ணா என்பதுபோல உழைக்கத் தொடங்கினார்கள். இறந்துபோன தங்கள் உடன் பிறந்தார்களின் குடும்பத்தினரை கைவிடாமல் காப்பாற்ற வேண்டுமென என்னிடத்தில் வற்புறுத்தினார்கள். என்னை தூக்கி நிறுத்தினார்கள். மீண்டும் ஒரு லட்சிய பயணத்திற்கு தயாராவோம் என்றார்கள். குறுகிய காலத்தில் ஒரு மீள் எழுச்சி.

எப்போதும் உயிராக என்னை நேசித்து என்னை அழைத்துச் செல்கிற அண்ணன் சீமானிடம் எனது உணர்வுகளை எப்படியும் கொட்டி விடுவேன். அவரைப்போல ஒரு அண்ணன் கிடைப்பது மிக அரிது. சின்ன சின்ன உணர்வுகளை கூட மிகச் சரியாக புரிந்து கொண்டு தம்பிகளின் வலி தீர்க்க உயிர் கசிந்து வாழ்ந்து கொண்டிருக்கிற அண்ணன் அவர். கடுமையான பணிகளுக்கு மத்தியிலும் துணிவாக இரு அண்ணன் வருகிறேன் என்றார் அவர்.

அனைவரும் உழைத்தோம் .ஓடினோம். இது வெறும் அரசியல் கட்சியல்ல. எதனாலும் பிரிக்கமுடியாத ஒரு குடும்பம் என்பதனை ஊருக்கும் உலகத்திற்கும் காட்டுவதற்கு முன்பாக.. எங்களுக்குள்ளாகவே உறுதிப்படுத்திக்கொள்ள நினைவேந்தல் நிகழ்வினை தயார் செய்தோம். நிறைய பொருளாதார சிக்கல்கள். எதிர்பார்த்த இடங்களில் எல்லாம் உதவிகள் கிடைக்காத சூழல்கள். ஆனாலும் தம்பிகள் தளராமல் உழைத்தார்கள்.

தம்பி கார்த்தி வீட்டில் தனித்திருக்கும் அவனது தாய் தந்தையர் அருகில் சென்று அமர்ந்து கொண்டோம். அம்மாவின் கையை இறுகப் பற்றிக் கொண்டோம்.

நேற்றைய தினம் அண்ணன் வந்தார். எதனாலும் கலங்காத அவரது விழிகள் கலைந்து போன கூடாக மாறிவிட்ட அவரது தம்பிகளின் வாழ்வினை நினைத்து கலங்கி விட்டன. பிள்ளைகளை இழந்து வாடும் தாய் தந்தையரை தனது இரு கரம் கொண்டு அண்ணன் இறுக்கி அணைத்துக் கொண்டார். மூத்த மகனாக நான் இருக்கிறேன் என்றார்.

தம்பி கார்த்தியின் நினைவேந்தல் நிகழ்வில் அண்ணன் பேசியபோது அவரது குரல் உடைந்து போனது. பின்னாலும் முன்னாலும் நின்றுகொண்டிருந்த நாங்கள் அனைவரும் அழுது விட்டோம். இறுதியாக தன்னை உறுதிப்படுத்திக்கொண்டு.. தம்பி கார்த்தியின் இலட்சியக் கனவை நிறைவேற்ற உழைப்போம் என உறுதி கூறி புகழ் வணக்கம் செலுத்தினார்.

நிகழ்ச்சி முடிந்து.. கார்த்தி வீட்டின் முன்னால் ஒரு நாற்காலியில் நான் அமர்ந்து இருந்தேன். பக்கத்தில் கார்த்தியின் அம்மா மெலிதாக விசும்பி கொண்டிருந்தார். இப்படி ஒரு வாழ்வை என்மகன் வாழ்ந்திருக்கிறானே என்று தழுதழுத்த குரலில் என்னிடம் சொன்னார். உண்மையில் அந்த நொடியில் நான் பெருமிதப்பட்டு போனேன். எத்தனையோ உன்னதங்கள் யாருக்கும் தெரியாமல் கரைந்து போகின்ற கால நதியின் கோர ஓட்டத்தில்.. தம்பிகள் கார்த்தி , மணி வாழ்ந்த குறுகியகால லட்சிய வாழ்க்கையை குறைந்தபட்சம் அவர்களது குடும்பத்தினருக்காவது புரிய வைத்து விட்டோம் என்பதுபோல நிறைவு எனக்குள் ஏற்பட்டது.

கண்கலங்க அமர்ந்திருந்த நான் அருகே புகைப்படமாக உறைந்திருந்த தம்பி கார்த்தியின் முகத்தைப் பார்த்தேன்.என்னை பார்த்து அவன் புன்னகைத்தது போல எனக்குத் தோன்றியது.

…. லிங்க துரை என்னை அழைத்து செல்வதற்காக இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வந்து நின்றான். வண்டி புறப்பட்டது. தம்பிகள் ஆனந்த் கார்த்தி உள்ளிட்ட தம்பிகள் எதையோ நிறைவேற்றிய முகத்தோடு ஏதோ பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். நான் கை உயர்த்தி அவர்களுக்கு வணக்கம் சொல்லியபோது அவர்களும் கண்கலங்க புரட்சி வணக்கம் கூற கையை உயர்த்தினார்கள்.

உயர்ந்த கரங்களில் ஒளிரட்டும் வெளிச்சம்.

மணி செந்தில்.

Powered by WordPress & Theme by Anders Norén