பன்முகத் தன்மை கொண்ட பல வகை நாட்டுப் புற இசை வடிவங்களையும் ,பறை போன்ற உணர்வினை உசுப்பி உள்ளுக்குள் எழுப்பிற இசைக் கருவிகளையும் தன் பண்பாட்டு விழுமியங்கள் மூலமாகவே அடைந்த தமிழர்களுக்கு மைக்கேல் ஜாக்சன் போன்ற மேனாட்டு இசை கலைஞர்களின் இசை வடிவங்கள் நெருக்கமில்லாமல் போனது வியப்பேதும் இல்லை. ஆஸ்கர் நாயகன் ஏ. ஆர். ரஹ்மானின் இசை நம்மிடையே உலவினாலும் இன்றளவும் 80 களின் இளையராஜா பாடல்கள் வெற்றிக்கரமாக அனைவராலும் உணர்வு மேலீட்டு கேட்க இயலுகிறது என்றால் அப்பாடல்களில் தொனிக்கும் மண் சார்ந்த நுணுக்கங்கள் தான். மண் சார்ந்த மரபிசையின் நுணுக்கங்களும்,திரை இசை வடிவங்களுக்கே உரிய உணர்வு உந்துதல்களும் நிரம்பிய இளையராஜாவின் இசை என்றென்றும் நம் மண்ணுக்குரியது. எனவே தன் மண் சார்ந்து வாழும் வாழ்க்கையைப் பெற்ற தமிழர்கள் பிற இசை வடிவங்களை விரும்புவதில் அதீத தன்னியல்பு காரணமாக விருப்பமற்று இருக்கிறார்கள். நானும் அப்படித்தான். மைக்கேல் ஜாக்சன் போன்ற ஒரு இசை கலைஞனை என்னைப் போன்ற எளிய தமிழன் நெருங்கையில் இனம் புரியாத அச்சத்துடன் நகர நேர்ந்தது.

ஜாக்சனின் வேக வேகமான நடனங்களும்., என்னிடத்தில் இருக்கும் சொற்ப ஆங்கில அறிவிற்கு எட்டாத வாக்கியங்களும் நொடிக்கு நொடி என்னை விரைவாக கடந்து போகையில் உண்மையில் நான் சற்றே அயர்ந்துப் போனேன். என்னைப் பொறுத்த வரையில் நான் இசை கேட்கும் ஒவ்வொரு முறையும் மழைக்கால மாலை ஒன்றில் ஜன்னலுக்கு அருகே அமர்ந்துக் கொண்டு ஒரு சுவையான தேநீர் அருந்துவதற்கு இணையான ஒரு அனுபவமாக அடைய விரும்புவேன். இசை ,இலக்கியம் போன்றவற்றில் என்னால் எளிதில் கடந்துப் போக இயலும் எதையையும் நான் அணுக விரும்புவதில்லை. அவ்வாறாகவே ஜாக்சனின் இசையும் அவரது மொழியும் எனக்கு சவாலாக இருந்தன.

மைக்கேலின் இசையை நெருங்க வேண்டுமானால் முதலில் நாம் மைக்கேலினை நெருங்க வேண்டும். பளபளப்பு மேடையில் லட்சக் கணக்கான வெறித்தன ரசிகர்களுக்கு மத்தியில் சுழன்று சுழன்று ஆடி குதித்து அசத்தும் மைக்கேலின் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் சோகமயமானது. தன் வாழ்நாள் முழுக்க மிகுந்த மன அழுத்தங்களுக்கு இடையே தான் அற்புதமான இசை வடிவங்களை மைக்கேல் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார். நான் முதலில் நெருங்கியது மைக்கேலின் த்ரில்லர் ஆல்பத்தில் உள்ள பீட் இட் ( beat it) என்ற பாடலைதான் . 1984 ஆம் வருடத்தில் ஏகப்பட்ட கிராமி விருதுகளைப் பெற்ற இந்த ஆல்பம் தான் மைக்கேலினை உச்சத்திற்கு கொண்டு சென்றது. இப்பாடலின் பரபரப்பான இசை மட்டுமே நான் மைக்கேலினை நெருங்குவதற்கு போதுமானதாக இருந்தது. இருந்தும் இன்னும் மொழி புரிந்து, வரிக்கு வரி தெரிந்து இசையை கேட்டால் இன்னும் சிறப்பானதாக இருக்கும் என நம்பினேன். மைக்கேல் ஜாக்சனின் டேஞ்சரஸ் தொகுப்பு 1991 ஆம் வருடம் ஆடீயோ கேசட்டுகளாக வெளிவந்த போது அதன் அட்டையில் அந்த தொகுப்பின் பாடல் வரிகள் இருந்தன. பிறகு பல்வேறு சந்தர்ப்பங்களில் இன்னும் பிற பாடல்களின் வரிகள் கிடைத்தன. ஜாக்சனின் பாடல் வரிகள் அசாத்தியமானவை.

“They Told Him Don’t You Ever Come Around Here


Don’t Wanna See Your Face, You Better Disappear


The Fire’s In Their Eyes And Their Words Are Really Clear


So Beat It, Just Beat It

எனத் துவங்கும் பாடலை மைக்கேல் இந்த வரியைத்தான் பாடுகிறார் என்பதை நான் பாடல் வரிகளினை கைகளில் வைத்துக் கொண்டு கேட்டப் பிறகே புரிந்தது. இத்தனைக்கும் திரில்லர் அவரது 6 ஆவது ஆல்பம் தான். 1958 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி மைக்கேல் பிறந்தார். தன்னுடைய 11 ஆவது வயதில் தன் சகோதரர்களோடு ஜாக்சன் 5 என்ற நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்ட மைக்கேல் ஜாக்சன் தந்தையின் கொடுமைக்கு உள்ளான குழந்தையாக வளர்ந்தார். மைக்கேலின் முகத்தினை மிக மோசமாக திட்டிய அவரது தந்தையின் நடவடிக்கைகளால் அவரது பால்யம் பறி போனது.

சிறு வயதில் ஏற்பட்ட உளவியல் அழுத்தங்கள் காரணமாக தன் முகத்தினை மாற்றிக் கொள்ள அறிவியலின் துணை நாடி முயன்றுக் கொண்டே இருந்தார் மைக்கேல். 1971 ஆம் ஆண்டு முதல் தனி நிகழ்ச்சிகள் நடத்திய மைக்கேல் தன் தனிப்பட்ட வாழ்க்கையில் பல விதமான குற்றச்சாட்டுகளுக்கும், சர்ச்சைகளுக்கும் ஆளாகி நீதிமன்றங்களுக்கு அலையும் நிலைக்கு உள்ளானார். குழந்தைகளிடம் பாலியல் உறவு போன்ற மிக மோசமாக குற்றசாட்டுகளுக்குள் அவர் சிக்கியும் அவரது இசை தனித்துவமானதாக நின்றது.

மைக்கேலின் இசை வடிவங்களை நம் ஊர் ஆட்கள் வரை ஏராளமனோர் நகலெடுத்து இருக்கின்றனர். பிரபுதேவா, லாரன்ஸ் போன்றோர் அவர் போல ஆடவும் முயன்று வருகின்றனர். தற்காலத்து மேற்கத்திய நடன கலைஞர்களில் மைக்கேலின் பாதிப்பு இல்லாதவர்கள் மிக குறைவு. தன்னுடைய கருத்த உடல் குறித்து மைக்கேல் மிகவும் குற்ற உணர்வு கொண்டிருந்ததாகவும் அதன் காரணமாகவே நிறம் மாற்ற பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகள் நிறைய செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாயின. இது குறித்து மைக்கேலிடம் கேட்ட போது தன்னுடைய இயல்பு மாறுவதற்கு காரணம் ஒரு வகை தோல் வியாதிதான் என விளக்கம் அளித்தார். அவரது மகனுக்கும் அவரைப் போன்ற வியாதி என்றெல்லாம் செய்திகள் வருகின்றன.

மைக்கேலின் ஆல்பங்கள் 75 கோடிகளுக்கும் மேலாக விற்று தீர்ந்திருக்கின்றன. இன்றளவும் விற்றுக் கொண்டிருக்கின்றன. இசை உலகின் மிக உயரிய விருதான கிராமி விருதினை 13 முறை வென்று பாப் உலகின் மன்னன் என்றெல்லாம் பட்டம் பெற்று ,ஒரு இசைக் கலைஞன் அடைய முடியாத சிகரங்களை தொட்டிருக்கிறார் மைக்கேல்.எம்.டிவி என்பதன் முழு வடிவம் மியூசிக் டிவி என்றாலும் அது மைக்கேல் ஜாக்சன் டிவியாக செயல்பட்ட காலங்களில் ஒவ்வொரு வீட்டின் வரவேற்பறைக்குள்ளும் மைக்கேல் சென்றடைந்து புகழடைந்தார்.

எனக்கு மைக்கேலின் இசை வடிவங்களில் beat it ( thriller), smooth criminal (bad),Jam (dangerous),heal the world( dangerous) , they don’t care about us ( history), black or white (dangerous) போன்ற பாடல்கள் மிக விருப்பமானவை.

தன் இசை இழைகளின் அனைத்துப் புள்ளிகளும் ஒர்மைப்பட்டு அது ஆகச் சிறந்ததாக விளங்க மைக்கேல் மிகவும் எடுத்துக் கொள்வார். அவரது இசை வடிவங்களைப் போலவே அவரது இசை சார்ந்த ஆல்பங்களும் உயரிய சிறப்பு தொழிற்நுட்ப நுணுக்கங்கள் வாய்ந்தவை. மைக்கேலின் பல பாடல்களை தமிழ் திரைப்படக்காரர்கள் நகலெடுத்திருக்கிறார்கள். they don’t care about us என்ற பாடலினை பாய்ஸ் திரைப்படத்தில் சங்கரும் , Remember The Time என்ற பாடலினை இந்தியன் திரைப்படத்திலும் ,சின்னக் கண்ணம்மா திரைப்படத்திலும் அப்பட்டமாக பயன்படுத்தி இருக்கிறார்கள். இன்னும் பல திரைப்படங்களில் மைக்கேலின் நுணுக்கமான கலை வடிவங்களை நகலெடுத்திருப்பதை நாம் நன்கு அறியலாம்.

மைக்கேலின் இசை பாப் உலகில் புதிய ஒளியினை பாய்ச்சியது. அவரது இசை உலகப் பொது இசையாக மாற்றப்பட்டு விட்டது. இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் உலகின் அனைத்து விதமான ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளான ஒரு மனிதனின் மனநிலையினை அவை உரத்துக் கூறுகின்றன.நிம்மதியற்ற ஒரு மனிதனின் உள்ளார்ந்த அழுகையின் சப்தம் மைக்கேலின் இசையில் சதா ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

நாம் மிகவும் அறிந்த ஒரு மனிதன் இசையாய் வாழ்ந்து பல வித கனவுகளோடு முடிவுற்றிருக்கிறான். மைக்கேல் இறக்கும் தருவாயில் அவரிடம் அடுத்த இசை பயணங்களுக்கான கனவுகளும், முன்னேற்பாடுகளும் இருந்தன. நிறைவேறாத ஆசைகளோடு மைக்கேலின் குரல் காற்றில் உலவும் பேரிசையாக விளங்குகிறது. ஒரு ஒடுக்கப்பட்ட கருப்பின கலைஞன் என்ற முறைமையில் மைக்கேல் நம் மனதிற்கு நெருக்கமானவனாக என்றும் இருப்பான். மைக்கேல் நம் மனதிற்கு நெருக்கமானவனாக என்றும் இருப்பான்.