நேற்றிரவு
அவர்கள்
இருந்தார்கள்..

நேற்றிரவு
இந்த நொடியில்
அவர்கள்
உறங்கியும்
இருந்தார்கள்..

கண் மூடி
கதகதப்பாய்..
நாளையும்
இப்படிதான்
உறங்கப்
போகிறோம்
என்ற
நம்பிக்கைகளோடு..

நேற்றிரவு
குளிர்மையாய்
உறைந்திருந்த
சில தோட்டாக்கள்
அச்சமயம்
புன்னகைத்ததை
அவர்கள்
அறியவில்லை..

…….

புற்றில்லாத
உடலோடு
நஞ்சற்ற
நிலத்தில்
வாழ்தலென்ற
கனவோடு
அவர்கள்
காலை
விழித்தார்கள்..

அதிகாரத்தை
அரிதாரமாக
பூசி இருக்கும்
அரச துவக்குகள்
ஏற்கனவே
வேதாந்தா வீசிய
எலும்புத்
துண்டுகளுக்காக
நாய்களாக மாறிய
கதை தெரியாமல்..

எதிர்காலம்
என்பதை
இருத்த…
விதி ஒன்றை
மாற்ற அவர்கள்
வீதிகளிலே
போனார்கள்..

ரூபாய் நோட்டுகள்
செருகப்பட்ட
செவிகளில்
நெஞ்சடைத்து
அவர்கள் இடும்
முழக்கங்கள்
கேட்கட்டும் என
அவர்கள் நடந்தார்கள்..

ஏதோச்சதிகார
துவக்கின்
நாவிலிருந்து
உமிழப்பட்ட
தோட்டாக்களில்
அவர்களின்
பெயர்
எழுதப்பட்டிருப்பதை
அறியாமல்..
நெஞ்சத்தை
துளைக்கும்
முதல்
நொடி வரை
நம்பினார்கள்..

இது ஒரு நாடென..

பேய் அரசாண்டால்
மட்டுமல்ல..
பேயின் நாய்
அரசாண்டால் கூட
பிணம்தான்
தின்னும்
சாத்திரங்கள்..

நேற்றிரவு அவர்கள்
இருந்தார்கள்..

நாளை விடியும்
என்ற நம்பிக்கையோடு..

நேற்றிரவு அவர்கள்
இருந்தார்கள்..