தமிழனின் பண்பாட்டு வேர்களை அடையாளப்படுத்தி அதன் மூலமாக எளிய மக்கள் கதையை உணர்வுத்தளத்தில் சொல்வதில் வழக்கம்போல் தங்கர்பச்சான் வெற்றிப் பெற்றுள்ளார். நம் கதையை, நம் மண்ணில் நிகழ்கிற நிகழ்வுகளை
அசல் மாறாமல் மண்ணின் மணத்தோடு தங்கர் திரைமொழியாக மாற்றி திரையில்
விவரிக்கும் போது நம் கண்கள் இயல்பாக கலங்கத்தான் செய்கின்றன…..தனது களவாடிய பொழுதுகளை நம் விழிகளில் நிகழ்த்துகிறார் தங்கர்..

திரைத்துறை முழுக்க இன்று பணம் செய்யும் தொழிலாக மாறிப்போய் விட்டது..
பெரிய நிறுவனங்கள் கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்து பிரம்மாண்ட அரங்குகளில் பெரிய நடிகர்-நடிகையரை ஆடவிட்டு ஒரு வரிகதையில் சமூக மாற்றத்தை நிகழ்த்துவதாக மாயங்கள் காட்டுகின்றன.நம் தமிழனுக்கும் அண்ணாந்து வேடிக்கை பார்த்து பார்த்தே கழுத்து வளைந்து விட்டது.இதனால் நிகழ்ந்தது என்ன என்பதை யோசிக்கும் போதே அடுத்த பிரம்மாண்டம் வந்து விடுகிறது….இதுப் போன்ற சங்கடங்கள் இல்லை தங்கர் பச்சானின் பள்ளிக்கூடத்தில்…

நம் பண்ருட்டி தமிழ் பேசும் எளிய மனிதர்கள் படம் முழுக்க காணப்படுகின்றனர்.
மல்லாக்கொட்டை பையோடு எண்ணெய் பூசிய முகத்தோடு அய்யோடி மாவட்ட
ஆட்சியர் வெற்றியை பார்க்க வரும் காட்சி படம் பார்க்கும் அனைவரையும் ஈர்க்கிறது..அதிரசம் கொண்டுவந்திருக்கியா?…..கேட்கும் நண்பனிடம் அவர் இல்லாம நான் வருவேனா என்று வெள்ளந்தியாய் பேசும் அய்யோடி நம்மை படம் முழுக்க கட்டிப் போட்டு விடுகிறார்…இலங்கை தமிழர்களை அக்கறையோடு விசாரித்து சேர்ந்து உணவு உண்ணும் காட்சி ஈழம் குறித்தான நம் மதிப்பீடுகளை உயர்த்துவதோடு மட்டுமில்லாமல் நம்மிடையே உள்ள ஈழம் குறித்தான அக்கறையின்மை சார்ந்த கேள்விகளை முன் வைக்கிறது..

பள்ளிக்கூடம் படத்தை தமிழர்கள் அணுகுவதில் எவ்வித சங்கடங்களோ, உறுத்தலோ இல்லை.திரையரங்கில் படம் ஒடும் போது ஆங்காங்கே விசிம்பல்
ஒலிகள் கேட்கத்தான் செய்கின்றன.. திரைப்பட இயக்குனர் முத்து-ஜெயந்த்தாக வரும் சீமான் பக்குவமான நடிப்பில் மனதைக் கவர்கிறார்.முத்து வீட்டில் பழைய
துணிகளை அய்யோடி ஆசையாய் எடுத்து வைத்து கொண்டு, எடுத்துட்டு போக
ஒரு பை இருந்தா குடுடா என்று கேட்கும் போது நாகரீகம் கருதி கட்டி வைத்திருக்கும் நம் மனது உடைந்து போய் கலங்கி விடுகிறது..

காட்சியமைப்பில் உணர்வுகளை மேலீட வைக்கிற சாதூர்யம் தங்கருக்கு நன்றாகவே கைவருகிறது.அதிக ஒப்பனை இல்லா நடிகர்கள் அதிகமாக பேசாமல்
உணர்வு தளத்தில் செயல் படுவது ஆறுதல் அளிக்கிறது. இடிந்தப் பள்ளிக்கூடத்தின் ஆசிரியையாக வரும் சிநேகா கண்களால் பேசி கவர்கிறார்.
நிராசை மிகுந்த ஏமாற்றத்தையும் ,காதல் குதூகலத்தையும் அவர் சிரமமின்றி
அழகாக கையாள்வது பாராட்டுதலுக்குரியது.அதேப் போல் ஸ்ரேயாவும்
சிறிய வேடம் என்றாலும் அசத்துகிறார்…

சீமான் மிகையில்லாத நடிப்போடு இயல்பாக வந்து அனைவரையும் கவர்கிறார்.
இனிமேல் சீமான் எவ்வித தயக்கமும் இன்றி நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கலாம் என்ற அனுமதி சீட்டை இப்படம் அவருக்கு பெற்று தந்திருக்கிறது.

அனைவருக்கும் மேலாக தங்கர் பச்சான் இயல்பான தன் நடிப்பில் முத்திரை பதிக்கிறார்.நேசம் மிக்க அவரது தமிழ் உணர்வு ஒவ்வொரு காட்சியமைப்பிலும்
வெளிபடுகிறது….எனக்கு கிழங்கு உரிக்க தெரியாதா…? என்று தன் மண் பாசத்தோடு கேட்கும் நரேன் உணர்வில் தன் சொந்த ஊரை விட்டு வந்த மனிதர்களின் நினைவில் எப்போதும் ஊறும் சுனைப்போல ஊறிக் கொண்டிருக்கும் ஊர்ப்பாசம் தெரிகிறது….

தமிழர்களுக்கான தமிழர்களால் உருவாக்கப்பட்ட படம் இதுவென்று காட்சியமைப்புகளில் நன்கு புலப்படுத்தி விடுகிறார் தங்கர்.
முக்கியமாக பள்ளி விழாவின் போது அப்பள்ளியில் படித்த வயதானவர்கள்
தங்கள் நினைவுகளால் தங்கள் இளமைக் காலத்தை மீட்டெடுப்பது காட்சியமைப்புகளால் கவிதையாக்கப் பட்டிருக்கிறது….

இடிந்த பள்ளியை எழுப்ப உலகம் முழுவதிலிருந்தும் முன்னாள் மாணவர்கள் உதவ
துடிக்கும் போது நமக்கு தன் தேசத்தை எழுப்ப துடித்துக் கொண்டுருக்கும் உலகமெங்கும் வாழும் ஈழத்தமிழர்கள் நினைவுக்கு வருவது சிறப்பு…
அவரவர் கூடு அவரவருக்கு உயிர் என்ற கருவோடு கவிதையாய் பயணிக்கிறது படம் . இசை எந்த இடத்தில் மெளனமாக வேண்டும் என்று நன்கு புரிந்து
படத்திற்கு ஒத்திசைவாக செயல்படும் வகையில் பயன் படுத்தப்பட்டிருப்பது
சிறப்பு…மிகையில்லாத இயல்பான ஒளியில் ஒளிப்பதிவின் நேர்த்தி தெரிகிறது.

கோடிக்கணக்கில் செலவு செய்து தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்களை இழிவு
செய்து, தமிழ்நாட்டில், தமிழர்களின் பொருளாதாரத்தை சுரண்டி கொழுப்பெடுத்து படம் என்ற பெயரில் குப்பைகளைக் கொட்டும் குப்பைத்தொட்டியாக தமிழகத்தை மாற்ற முயலும் விஷக்கிருமிகளின் ஊடக நச்சுகளுக்கு நடுவில் எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி , மேற்கண்ட ஆபாச குப்பைகளுக்கு மாற்றாக எம் தமிழர் படம் வெளிவந்து உள்ளது..

தென்றல் படத்தில் தமிழ் குடமுழுக்கை வலியுறுத்தி காட்சிகள் வைத்த தங்கர் இந்த
படத்தில் தமிழர்களின் நிலங்களை மீட்டெடுக்க நடக்கும் போராட்டத்தை காட்டுகிறார். சமூக உணர்வு உள்ள தங்கர் பச்சான்,சீமான் போன்றவர்கள் மிகுந்த நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சமரசம் ஆகாமல் கொள்கைவாதிகளாக இருப்பது பெருமை அளிக்கக் கூடிய நிகழ்வாகும்.

சிற்சில குறைகள் தெரிகின்றன.அவை என்னவென்று இந்நேரம் உணர்ந்திருக்கும் வல்லமைப் பெற்றவர் நேர்த்தியான நெறியாளர் தங்கர் பச்சான்…

எது எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்.சீமான்,தங்கர் பச்சான் போன்றவர்களின் படங்கள் நம் தமிழகத்தில் நன்கு பெரிய வெற்றியை பெற வேண்டும். இவர்கள் போன்ற கலைகள் மூலம் தமிழ் உணர்வையும்,எளிய வாழ்வையும் வலியுறுத்துகிற கலைஞர்கள் தோற்கவே கூடாது..

தமிழர்களின் படம் வெல்ல வேண்டும்……..

தமிழர்களை தலை நிமிரச் செய்யும் பணியில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து
கொண்டிருக்கும் கலையுலப் போராளிகள் தங்கர் பச்சான் ,சீமான் ஆகியோருக்கு
எங்கள் வாழ்த்தும், அன்பும்……