மூடப்பட்ட கதவின்
மேல் கோபிக்காதே..

ஏனெனில் கதவுகள்
மூடுவதற்காகவே தான்
தயாரிக்கப்படுகின்றன.

மூடப்படுவதை
உன் நம்பிக்கை
கோபுரத்தின் மேல்
விழுந்த பேரிடியாக
கருதாதே..

அது..
இன்னொரு
திறப்பிற்கான வழி..

மூடப்படுவது உன்
முகத்தில்
உமிழப்பட்ட எச்சிலாக
கருதி உன்மத்தம்
கொள்ளாதே..

திறந்திருந்தால்
உன் கனவின் மீது
படியும் ஏமாற்ற
நிழலை எங்கே
கொண்டு புதைப்பாய்..??

மூடப்படுதல் ஓரு
வாக்கியத்தின்
முற்றுப்புள்ளி.

நீ எழுத இருக்கிற
காப்பியத்தின்
தொடக்கப்புள்ளி..

மூடப்படுதல்
ஒரு நிராசையின்
முடிவு.

இன்னொரு
விடியலுக்கான
துளிர்ப்பு..

ஒரு வேளை
மூடப்படாமலும்
திறக்கப்படாமலும்
காற்றின் திசைகளில்
கதவு அலைகின்றதா..??

யோசிக்காதே.
நீயே சாத்தி விட்டு நகர்.

ஏனெனில்
நகரும் உன்
காலடியில்தான்
உலகத்தின் கதவு
திறக்கிறது.