கலைத்துப்போட்ட
கடலலை
கோப்புகளிலிருந்து
எனக்கு பிடித்தமான
அலை ஒன்றை
தேர்ந்தெடுத்தேன்.

வெளிர் நீலமும்…
குமிழ் நுரையும்
கொண்ட
சிறு அலை அது.

ஒரு சிறுமிக்கே
உரிய துடுக்கோடு
துள்ளிக்
கொண்டிருந்த
அதை
உள்ளங்கையில்
ஏந்தினேன்.

விரல்கள் மடிப்பினை
கரைகளாக நினைத்து
அலை அடித்து
கொந்தளித்தது.

கைகளை மூடி
காதுகளில்
கேட்டால்..
மீனின் சிறகுகள்
நீந்தும் ஓசை.

கடலையே
உள்ளங்கைக்குள்
வைத்திருக்கிறோம்
என்ற மதர்ப்பில்
நின்ற நொடியில் தான்..

காலை தழுவிய
கடலலை ஒன்றை
கணிக்க தவறினேன்.

இழுத்துப் போட்டது.
தடுமாறி விழுந்ததில்
தவறி விழுந்தது
சிறு அலை..

பேரலை ஒன்றின்
விழுங்கலில்
அடங்கிற்று சிறு அலை.

கடல் ஒரு முறை
சிலிர்த்து அடங்கியது.

ஆனாலும்…

அருகில் விளையாடிய
சிறுமியின் பாதத்தை
தற்போது தொட்டு
விளையாடிப்
போனது..

அந்த சிறு
அலையாகத்தான்
இருக்கக்கூடும்.

… ? ? ?