நீ அந்தியின்
கரைகளில்
நின்று கொண்டு 
வெளிச்சங்களை
தன்னுள்
புதைத்தவனைப்
பற்றி புறம் பேசுகிறாய்..

முதுகில் குத்தும்
கத்தி ஒன்றை
கொண்டு
உலகை
உள்ளத்தால்
வென்றவன் ஒருவனை
எளிதாக வெல்ல
முயல்கிறாய்..

உன்னால்
புனையப்படும்
பொய்மையின்
தோற்றங்களின்
எல்லைகளுக்கு
அப்பால் நிற்கிற
பேரன் பின்
ஆதிச்சுழியை
அவதூறு பேசுகிறாய்..

அவன்
ரதகஜபடைகளோடு
களத்திலே நிற்கிறான்..
நீ வெறும்
வீட்டுத் திண்ணையில்
உட்கார்ந்துக் கொண்டு
அவனை வென்று விட்டதாக
வாயை மெல்கிறாய்…

அவன் காற்றின்
அலைவரிசை கோர்த்து
புத்தம் இசையை
புவி மலர இசைப்பவன்.

நீயோ முனக கூட
அடுத்தவனை எட்டிப்
பார்த்து நகல் செய்யும்
போலிகளின் போதாமை
புலிகேசி.

நீ ஏதேனும்
ஒரு சந்தில்
4 திருடர்களோடு
அவனைக்
கொள்ளையடிக்க
குழுமிய போது…
அவன் யுகத்தின்
சரித்திரத்தை
தன் புன்னகைத்
தூரிகையால் எழுதிக்
கொண்டிருக்கிறான்..

அவன் தனித்தவன்
என்றெண்ணி
அவன் நிழலை
உன் குரைப்பினால்
சீண்ட முனைந்தப்
போது…
அவன் புலிகளின்
கூட்டத்தின் நடுவே
சிம்மாசனமிட்டு
அமர்ந்திருக்கிறான்..

அவனை வெல்ல
வேண்டுமெனில்..

ஒரே ஒரு வாய்ப்பு

நீ நிகரற்ற
அவனாகத்தான்
பிறக்க வேண்டும்.

ஏனெனில்..
அவனை மிஞ்ச
அவனாகத்தான்
ஆக வேண்டும்..