இன்று தம்பி துருவனிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஆரண்ய காண்டம் திரைப்படத்தைப் பற்றி பேச்சு வந்தது. அந்தப்படத்தைப் பற்றி மிக சுவாரஸ்யமான பல தகவல்களை துருவன் சொல்லிக்கொண்டே போனான். உண்மையில் ஆரண்யகாண்டம் எனக்கும் பிடித்த படம் தான். தமிழில் வெளிவந்து இருக்கிற சில அபூர்வமான திரைப்படங்களில் ஆரணிய காண்டம் ஒன்றாக திகழ்கிறது. தமிழின் முதல் Neo noir வகை திரைப்படம். Neo noir வகை என்பது குற்றங்கள் அதன் பின்னணிகள் குறித்த தனித்துவ பார்வையோடு புனையப்படும் வகைமை. சென்சாரில் 52 கட் வாங்கி வெளியான இத்திரைப்படத்தின் காட்சி ஓட்டத்தில் வெட்டப்பட்ட காட்சிகளால் உறுத்தும் jumb கிடையாது. தியாகராஜன் குமாரராஜா என்ற புதுமுக இயக்குனர். தான் எடுத்த ஒரே ஒரு திரைப்படத்தின் மூலமாக இதுவரை வழமையாக எழுதப்பட்ட தமிழ் சினிமாவின் விதிகளை மாற்றி எழுதினார். சீரான/புதுமையான திரைக்கதை வடிவத்திற்கு ஆரண்ய காண்டம் ஒரு மாபெரும் உதாரணம். ஆரண்யம் என்றால் காடு. அப்படத்தின் கதாபாத்திரங்கள் அனைத்திற்கும் விலங்குகளின் பெயர்களை ஒட்டிய பெயர்கள். ஏறக்குறைய no country for old man என்கின்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கும்.. ஆரண்ய காண்டத்திற்கும் பல்வேறு ஒற்றுமைகள் இருப்பதை நாம் காணும் போது உணரலாம். துருவன் குறிப்பிட்டுச் சொன்னது அந்த படத்தின் தொடக்கம் மற்றும் அந்தப் படத்தின் முடிவிலும் வருகின்ற ஒரு வாசகம்.

அது ஒரு உரையாடல்.

ஏறத்தாழ கிமு 400 நடந்ததாக சொல்லப்படும் ஒரு உரையாடல். நாக நந்தனுக்கும் விஷ்ணுகுப்த சாணக்கியனுக்கும் இடையே நடந்த உரையாடல்.

கேள்வி எளிது தான். பதிலும் எளிமையானது தான்.

தர்மம் என்றால் என்ன..??

எது தேவையோ அதுவே தர்மம்.

அது பற்றிய சிந்தனையிலேயே இந்த நாள் முழுக்க கழிந்தது. ஒரு ஒற்றை வரி எவ்வளவு அலைகழிக்கிறது பாருங்கள். அது ஒரு உறுத்தல். கழுத்தோரம் ஏதோ ஊர்ந்துக் கொண்டிருப்பது போல..

உண்மைதானே.. பசித்தவனுக்கு உணவே தர்மம். விழித்தே கிடப்பவனுக்கு உறக்கமே தர்மம். வேலையில்லாமல் அலைபவனுக்கு வேலையே தர்மம். காதலுற்று திரிபவனுக்கு காதலே தர்மம்.

அவனவன் தேவையே அவன் தர்ம எல்லைகளை நிர்ணயிக்கிறது என்பது தான் இதன் பொருள். நாமாக வரைந்து கொண்ட எவ்வித கோடுகளிலும் மனிதனின் தர்மம் அடங்காது. எழுதி வைத்துக் கொண்ட எந்த சட்டகங்களிலும் அது பொருந்தாது. தன் தர்மத்தை நிறைவேற்றிக் கொள்ள ஒவ்வொரு உயிரினமும் ஏதேனும் மீறலை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது. இன்னும் ஆழமாக சொல்லப்போனால் தர்மத்தின் குணம் மீறல்.

தமிழில் அறம் என்ற ஒரு சொல் உண்டு. அறம் என்பதற்குப் பொருள் நல்லவை என தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் வெளியிட்டு இருக்கிற இரண்டாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகம் சொல்கிறது. தர்மமும் அறமும் ஒன்றுதானா என்றால் ஏறக்குறைய ஒரே பொருளைத் தான் இரண்டு சொற்களும் பிரதிபலிக்கின்றன.

அப்படியென்றால் நல்லவை என்பதற்கான பொருள் தான் என்ன…பொதுவாக நல்லவை என் தீர்மானிக்கப்பட்டதை எல்லாம் எங்கே பொருத்துவது..??

உண்மையில் .. என் பார்வையில் எதுவெல்லாம் சரியெனப்/நல்லவையாக படுகிறதோ அது அடுத்தவன் பார்வையில் தவறாக/பிழையானதாக தோன்றக்கூடும்.

அப்படியெனில் வகுத்து வைத்த கட்டமைக்கப்பட்ட எல்லா தர்மங்களும் /நியாயங்களும் ஒவ்வொரு வித மாயைதான்.. மாயத் தோற்றங்கள் தான் ‌‌..

அதைத்தான் பாரதி அழகாக சொன்னார்.

கானல் நீரோ ..காட்சிப் பிழை தானோ ..என்று..

சுருங்கச் சொல்லின்..

அவரவர் தேவையே தர்மம்.