நம் வாழ்நாள் ஏதோ ஒரு புள்ளியில் அர்த்தப்பட்டதாக உணர்ந்த தருணம் இன்று எனக்கு நிகழ்ந்தது.

எங்கள் பகுதியின் பழுத்த காங்கிரஸ்காரர் அவர். பாரம்பரிய காங்கிரஸ் குடும்பம். காங்கிரஸ் தலைவர்கள் இப்பகுதிக்கு வந்தால் அவர்களின் நேரடியாக சந்தித்து உரையாடும் அளவிற்கு செல்வாக்கு உடையவர்.

கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து நான் பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் பணிபுரிந்தபோது என்னை நேரடியாக அழைத்து தன் கட்சியை எதிர்த்து நான் வேலை செய்யக் கூடாது என அன்பாக சொல்வது போல கடுமையாக மிரட்டியவர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று என் அலைபேசியில் அவர் என்னை அழைத்தார். அவரது உரையாடல் இப்படி தொடங்கியது..

உண்மையில் நீங்கள் ராஜீவ் காந்தியை
விடுதலைப் புலிகள் கொல்லவில்லை என்று சொல்கிறீர்களா.. என்று கேட்டார்.

விடுதலைப் புலிகள் தான் கொன்றார்கள் என்று நிரூபிக்க வேண்டிய அரசு தரப்பு தனது வழக்கினை முழுமையாக நிரூபித்துவிட்டதா.. என்று கேள்வியை பதிலாக தந்தேன்.

இன்னும் என்ன நிரூபிக்க வேண்டும்..

என்ன நிருபித்தது..?

பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார். நாங்கள் தலைவரை இழந்து இருக்கிறோம் என்றார்.

அதனால் நாங்கள் ஒரு நாட்டையே இழந்து தவிக்கிறோம் என்றேன்.

யூட்யூபில் உங்கள் பேட்டி பார்த்தேன். நீங்கள் சொல்வதெல்லாம் சரியானதாக இருப்பது போல எனக்கு தோன்றியது. ஆனாலும் நீங்கள் சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்றார்.

சரியானதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். உங்கள் தலைவர் இறந்தபோது ஏன் அருகில் உங்கள் கட்சிக்காரர்கள் உங்கள் கட்சித் தலைவர்கள் யாருமே இல்லையென்பதை என்றாவது காங்கிரஸ்காரர்கள் யோசித்திருக்கிறீர்களா..? என்ற எனது கேள்விக்கு

இன்று வரை நான் அவ்வாறு யோசித்ததில்லை. ஆனால் உங்கள் பேட்டி பார்த்த பிறகு அவ்வாறு யோசிக்க தொடங்கினேன். அதனால் தான் உங்களுக்கு நான் அழைத்தேன் என்றார்.

அவரே தொடர்ந்து..

உண்மையில் அந்த ஏழு பேருக்கும் இந்த கொலைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றால்… நாங்களெல்லாம் மிகப்பெரிய பாவம் செய்தவர்கள் ஆவோம். என்றார்.

அந்த பேரறிவாளனின் தாய் அற்புதத்தை பார்க்கும் போதெல்லாம் எனக்கு என்னவோ போல இருக்கும். ஆனால் என் தலைவரை கொன்றவர்கள் தானே என்று என் மனதை இருக்கிக் கொண்டேன். ஆனால் தப்பு செய்து விட்டோமோ என்று இன்று என் மனது தவிக்கிறது என்றார்.

நீங்கள் மட்டும் இல்லை. ஒரு தேசிய இனமே தவறிழைத்து விட்டது. அவர்களை ராஜீவ் காந்தியை கொன்றவர்கள் என்று நினைத்துக் கொண்டு அவர்களின் விடுதலைக்கு குரல் கொடுக்காமல் ஒதுங்கி நின்றது. ராஜீவ் காந்தியை கொன்றவர்கள் என்றெண்ணி தமிழனின் மற்றொரு தாய்நாடு அழிய துணை நின்றது.

28 வருடங்களுக்குப் பிறகும் சிறையில் சிக்குண்டு ஒவ்வொரு நொடியும் வாழ்வதா சாவதா என்று தெரியாமல் திக்கற்று நிற்கிற அந்த அப்பாவி ஏழு தமிழர்களின் விடுதலைக்காக.. ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டம் போல கூடாமல்.. இன்னமும் எதற்காகவோ காத்துக் கொண்டிருப்பது காலக்கொடுமை.

மாட்டை மதித்த நமக்கு, மனிதர்களை … நம் உடன் பிறந்தவர்களை மதிக்க முடியாமல் போனதுதான் பெரும் சோகம். என்றேன்.

அவரும் பெருமூச்செறிந்து ..

உண்மைதான். நாளை ஒரு ஆள் அனுப்பி விடுகிறேன் உங்கள் விடுதலைக்கு விலங்கு புத்தகத்தை எனக்கு தர முடியுமா எனக் கேட்டார்.

கண்டிப்பாக.. உங்கள் ஒருவருக்காக தான் அந்த புத்தகத்தை நான் எழுதினேன் என்று இந்த நொடியில் நான் நினைத்துக் கொள்கிறேன் என்றேன்.

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவர் சரி நான் வைச்சிடுறேன் என்று போனை வைத்து விட்டார்.

ஒரு ஊடகத்தில் சில நிமிடங்கள் வருகிற ஒரு சின்னஞ்சிறிய உரையாடல் இத்தனை தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. தம்பி துரைமுருகன் சாட்டை தொடங்கிய போது நன்றாகத்தானே பேசிக்கொண்டு இருக்கிறான் இவனுக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை.. என்று நினைத்தவர்களில் நானும் ஒருவன்.

இந்த நொடியில் அந்த நினைப்பிற்காக சாட்டை என்னை வருந்த வைத்து விட்டது.

என் வாழ்வில் நான் செய்த மாபெரும் பணியாக கருதுவது அண்ணன் ராபர்ட் பயஸ் வாழ்க்கை வரலாற்று நூல் விடுதலைக்கு விலங்கு எழுதியதுதான்.

அக்காலகட்டத்தில் அந்த நூலுக்கான எந்த அறிமுக கூட்டமும் நடைபெறவில்லை. தொடர்ச்சியாக தமிழர்களுக்கென்று எழுந்து கொண்டே இருந்த பல்வேறு சிக்கல்களால் அந்த நூல் பெருமளவு சென்று சேராமல் போய்விட்டது. எழுதிய என்னாலும் தொடர்ச்சியான என் அரசியல் பணிகளால் இந்நூல் குறித்து பரவலான உரையாடலை எழுப்ப முடியாமல் போய்விட்டது.

அண்ணன் இராபர்ட் பயஸ் அவர்களுக்கு இதில் பெரும் வருத்தம். காலம் கடந்தாலும் அந்த நூலுக்கான தேவை இன்னும் இருக்கிறது என்பதுதான் எங்களுக்கு குறிப்பாக எனக்கு இன்று கிடைத்த மாபெரும் ஆறுதல்.

அதை சாத்தியப்படுத்திய தம்பி துரை முருகனுக்கும் , சாட்டை குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றி..

மணி செந்தில்.

https://youtu.be/t4qi1LfiVMw