வைகோ -சரிந்த அரண்மனையின்
பாசிப் படர்ந்த விதானம்
——————————————————–

ஒரு காலத்தில் பாராளுமன்றத்தை நடுநடுங்க வைத்தவர் அவர்.இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை நேருக்கு நேராக நின்று மோதியவர்.எந்த ஒரு வரலாற்றையும் புள்ளிவிவரத்தோடு விவரித்து நினைவாற்றலால் வியக்க வைத்தவர். இசைஞானி இளையராஜாவின் திருவாசகம் வெளியீட்டுவிழாவில் இசை நுட்பங்களை பற்றி, தமிழர் இசை பற்றி இவர் பேசிய காலங்களை நினைக்கும் போது காலம் தான் எவ்வளவு கொடிய அரக்கன் என நினைக்கத் தோன்றுகிறது.

உண்மையில் இன்றைய வைகோவின் நிலைமை பரிதாபகரமானது. பாராளுமன்றத்தில் பெரும் பெரும் விவாதங்களை எல்லாம் எதிர்கொண்ட வைகோவால் ஒரு சாதாரண தொலைக்காட்சி நெறியாளரை எதிர்கொள்ள முடியாமல் போனது என்பது வரலாற்றில் நாம் காணுகின்ற அபத்தக் காட்சி..

கழுத்தைப் பிடித்து ஸ்டாலின் வெளியே தள்ளினாலும், அவர் காலைப்பிடித்து கதறுகின்ற வைகோவின் நிலைமை எந்த ஒரு அரசியல் தலைமைக்கும் வந்துவிடக்கூடாது. அவரின் இந்த நிலைமைக்கு வேறு யாரும் காரணம் அல்ல. அவரை தவிர.

கொள்கையில் உறுதி ,அரசியலில் நேர்மை ,பொதுவாழ்வில் தூய்மை என்றெல்லாம் தொடங்கிய வைகோ யாரை எதிர்த்து அரசியல் கட்சியைத் தொடங்கினாரோ அவரை நம்பியே பிழைக்க வேண்டிய பரிதாப நிலை.

இந்தப் பரிதாப நிலையும் இந்த கேவலமும் வைகோவுக்கு மிக எளிதாக ஏற்பட்டதில்லை. சொல்லப்போனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் கூட அவமானங்கள் ஏற்படவில்லை. தொடர்ச்சியான அவரது அரசியலின் சமரசங்கள், பிழையான முடிவுகள் , சுயநலமான பித்தலாட்டக்கார நடிப்பு அரசியல் இதுவே அவரது அரசியல் வாழ்க்கைக்கு முடிவுரையாக போனது.

அவரது ஆவேசம் ,கோப உணர்ச்சி , எல்லாம் காமெடியாக பார்க்கப்படுவதை அவர் இன்னும் உணரவில்லை என்பதையே இன்றைய புதிய தலைமுறையின் அக்னிப்பரிட்சை பேட்டி காட்டுகிறது. குறிப்பாக நாம் தமிழர் மீது அவர் காட்டும் ஒவ்வாமை அவருக்கே எதிர்மறையாக மாறிப்போய் என்பதுதான் காலத்தின் கோலம்.

ஏனெனில் காலம் என்பது மிக விசித்திரமானது. ஒரு காலத்தில் கொண்டிருக்கின்ற மதிப்பீடுகள் இன்னொரு காலத்தில் எவராலோ முறியடிக்கப்பட போகிறது என்கின்ற நிதானம் வாழும் காலத்தில் ஒவ்வொருவருக்கும் தேவையாக இருக்கிறது. இது நிரந்தரம்.. நம்மை மிஞ்ச ஆள் இல்லை.. என்றெல்லாம் எவரேனும் கனவு கண்டால் எதிரே வரும் சிறுவன் சின்ன இடைவெளியில் நம்மை மிஞ்சி சென்று விடுவான் என்பதற்கு வைகோவின் வாழ்க்கை ஒரு சரியான உதாரணம்.

நாம் தமிழரை வைகோ எதிர்க்க எதிர்க்க.. வைகோ பரிதாபமாக அம்பலப்பட்டு கொண்டே போகிறார். இந்த மாவீரர் நாளில் தஞ்சையில் மிக எழுச்சியாக நாம் தமிழர் கட்சி மாவீரர் நாளை நிகழ்த்திக் கொண்டிருக்க ..தன்னந்தனியாக கடலில் இறங்கிக் கொண்டு வைகோ ஏதோ புலம்பிக் கொண்டிருந்ததை பார்த்த போது.. இவரா இந்திரா காந்தி ராஜீவ் காந்தி போன்ற பெரும் தலைவர்களை எதிர்த்து அரசியல் செய்த தலைவர் என்று நினைக்கத் தோன்றுகிறது.

ஒரு காலத்து மனிதராக வைகோ மாறிப்போனதுதான் நிகழ்காலத்தின் மீது அவர் கொண்டிருக்கின்ற வெறுப்பாக இன்று மாறிப் போயிருக்கிறது.

வைகோ கொண்டிருக்கின்ற திராவிடக் கொள்கை ஏற்கனவே அம்பலப்பட்டு நவீன அரசியல் தளத்தில் புறக்கணிக்கப்படுகிற ஒன்றாக மாறிவிட்டது. திராவிட இயக்கங்களின் முக்கிய கொள்கைகளான சாதி மறுப்பு, பகுத்தறிவு, இந்துத்துவ பார்ப்பன எதிர்ப்பு ஆகியவைகளை திராவிட இயக்கங்களே கைவிட்டு விட்ட சூழலில்.. நவீன தமிழ் தேசியர்கள் சாதிமறுப்பு ,இந்துத்துவ பார்ப்பன எதிர்ப்பு ,பகுத்தறிவு, சூழலியல், போன்ற பன்முக கொள்கை சட்டகங்களால் தங்களை செழுமைப்படுத்திக் கொண்டு களத்தில் வலிமையாக நிற்கிறார்கள்.

எனவேதான் வைகோ போன்றவர்கள் பயப்படுகிறார்கள். கோபப்படுகிறார்கள் .எழுந்து ஓடுகிறார்கள்.

ஈழத் தமிழர்களைக் கொன்ற கருணாநிதிக்கு என் வாழ்நாளில் மன்னிப்பே கிடையாது என்று முழங்கிய வைகோ இன்று கருணாநிதி மகன் காலில் விழுந்து கிடப்பது என்பது அரசியல் தடுமாற்றம் மட்டுமல்ல. திராவிட இயக்கங்களுக்கே உரிய தத்துவ நிலை நீர்த்துப்போதல்.

அது ஒரு வகையான மரணம். திராவிடக் கட்சிகளின் தலைமைகள் தங்கள் தத்துவத்தின் மரணத்தை மறைக்க முடியாமல் கோபப்படுவதை தான் நிகழ்கால காட்சிகள் அம்பலப்படுத்துகின்றன.

வைகோ தன் வாழ்வில் சொன்னது போல இப்போது சுவர் ஏறி தப்பித்து ஓட முடியாத நிலைமையில் தற்போது நிற்கிறார்.

வைகோவால் அன்று துரைமுருகன் அடிவாங்கினார். பிறகு ஜெயலலிதா, விஜயகாந்த் என நீளூம் அப்பட்டியலில் இடம் பெறாமல் தப்பிக்க ஸ்டாலின் முயல்கிறார். ஆனாலும் வைகோ ஸ்டாலினின் வேட்டியை விட மறுக்கிறார்

அண்ணன் சீமான் போன்றவர்கள் வைகோவின் படத்தை தன் சட்டைப்பையில் வைத்திருந்தவர்கள். இன்று அவரே ஒரு கட்சி ஆரம்பித்து வைகோவை கடந்து எங்கோ சென்றுவிட்டார்.

ஆனால் வைகோ இன்னமும் கோபாலபுரத்தில் ஸ்டாலினின் கருணைக்காக காத்திருப்பது என்பது தடுமாற்றம் நிறைந்த அவரது அரசியல் வாழ்வில் உச்சக்கட்ட தோல்வியாக அமைய இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அவருக்கும் தெரியும்.ஆனால் வேறு வழியில்லை.

திராவிட இயக்கத்தைக் காப்பாற்ற வேண்டும் என்கிறார். மூச்சற்ற பிணம் என்ன முக்கினாலும் உயிர் வரப்போவதில்லை.

ஒருகாலத்தில் நாங்களெல்லாம் நேசித்த வைகோ என்றோ தொலைந்துவிட்டார். இன்று இருப்பவர் தோற்றுப்போன ஒரு வயதான நடிகர். பழங்கால நினைவுகளை மட்டுமே வைத்துக் கொண்டு நிகழ்காலத்தில் அதை வைத்துக் கொண்டே ஓட்டிவிடலாம் என நினைத்து பரிதாபமாக தோற்பவர்.

ஒரு காலத்தில் அவரது பெருமைமிக்க நினைவுகளே அவரை இன்று கொலை செய்கின்ற மாபெரும் ஆயுதங்களாக மாறி துன்புறுத்திக் கொண்டிருக்கின்றன என்பதை தான் அவர் கோபமாக வெளிப்படுத்திக் காட்டிக் கொண்டிருக்கிறார். அந்தப் பெருமை சித்திரத்தை வைகோ என்றோ தனது அரசியல் தவறுகளால் மாற்றி கோமாளி சித்திரமாக வரைந்து விட்டார்.

இனி வைகோ என்ற மனிதர் ஒரு காலத்தில் வாழ்ந்தார் என்பதை வைகோவே சொன்னால் கூட யாரும் நம்பப் போவதில்லை.

ஆழ்ந்த அனுதாபங்கள்.