விலங்கம்ச மிச்சங்கள்..
—————————————–

அந்த சாதி பெண்ணை திருமணம் செய்வோம் ..இந்த சாதிப் பெண்ணை திருமணம் செய்வோம்.. என்றெல்லாம் முழங்குவது சமூக அறிவு சிறிதும் அற்ற ஒரு கேடுகெட்ட மூர்க்கத்தனமான மூடத்தனம் என்பது ஒரு புறம்..

தான் நினைத்தால் எளிதில் களவாட முடிகிற கடைச்சரக்காக ஒரு பெண்ணை நினைப்பது என்பது அனைத்திலும் காட்டிலும் ஆகப்பெரும் அயோக்கியத்தனம்.

இந்த அயோக்கியத் தனம் தான்.. ஒரு பெண் மீது ஆசிட் ஊற்ற வைக்கிற, கழுத்தை கொலை செய்ய வைக்கிற நோயாக மாறுகிறது.

இவன் நினைத்தால் போதும். ஒரு பெண்ணை திருமணம் செய்து விடலாம் என்கிற சிந்தனை கொடுங்கோன்மையான ஆணாதிக்க வன்முறை உணர்வின் தொடர்ச்சி.

முதலில் பெண் என்பவள் நம் சக மனுஷி. சக பாலின் மீது நேசம் ஏற்பட்டு ஈர்க்கப்படுவதென்பது உலகத்து இயற்கை. அது காதலாக மாறும் புள்ளியில் மற்றவருடைய விருப்பம் என்பது மிக முக்கியமானது. ஒரே அலைவரிசையில் பொருந்தும் விருப்பங்கள் திருமணம் வரை நீள்கிறது. அவ்வாறு திருமணம் வரை நிகழ்கின்ற அந்த உறவு வாழ்நாள் வரை மதிப்பு மிகு தோழமையாக.. சகல உணர்ச்சிகளும் கண்டுகொள்ளப்படுகிற மாசற்ற அக்கறையாக தொடரும் பட்சத்தில் தான் அந்த காதல் பரிபூரணத்துவம் அடைகிறது. இதில் சாதி மதம் போன்ற சமூக முரண்கள் குறுக்கிடும் போது ஏற்படும் தடைகள் தகர்க்கப்பட வேண்டியவை.

இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் நினைத்த உடனேயே ஒரு பெண்ணை திருமணம் செய்து விட இயலும் என்கிற ஒரு இளைஞன் சிந்தனை சாதி ஒழிப்பிற்கான புரட்சி முழக்கம் அல்ல.

அது முற்றிலும் மூளைச்சலவை செய்யப்பட்ட மூர்க்கமான மனநோய்.

இதுபோன்ற மூர்க்க மனநோய்களுக்கு அண்ணல் அம்பேத்கரின் படத்தை உபயோகிப்பது என்பது அபத்தமானது . ஆபத்தானதும் கூட.

சாதி மறுத்து சாதி வேண்டாம் என திருமணம் செய்தவர்கள் இன்ன சாதி பெண்ணை தான் காதலிக்க வேண்டும் என்றெல்லாம் கணக்குப் போட்டு காதலிப்பதில்லை. அவ்வாறு திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டால் அது காதல் அல்ல . அது மாபெரும் சமூகத் தீங்கு. நிகழும்
சாதி ஆணவக் படுகொலைகளுக்கு இணையான மாபெரும் கொடுமை ‌.
பெண்ணையும் வீட்டில் இருக்கிற அண்டா ,குண்டா போல ஒரு சொத்தாக ,பார்க்கிற ஆணாதிக்க வல்லாண்மை உணர்ச்சி.

இதுபோன்ற முட்டாள்தனமான மூர்க்கத்தனமான முழக்கங்கள் முன்வைக்கும் எதுவும் சாதி மறுப்பும் அல்ல. சாதி ஒழிப்பும் அல்ல.

மனநல மருத்துவமனைகளில் சேர்த்து உரிய சிகிச்சை தர வேண்டிய தீவிரமான மன நோய்.

முதலில் பெண்ணை களவாட முடிகிற பொருளாகப் பார்க்காமல் சக உயிரியாக பார்க்க கற்றுக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள். குறிப்பாக ஆண் குழந்தைகளுக்கு. நம்மைப் போன்ற சக உயிரியை தோழமையாக,சகாவாக நினைக்காமல் களவாட நினைப்பதும் ஆக்கிரமிக்க நினைப்பதும் இருப்பதிலேயே ஆகப் பெரும் தீங்கு என்பதை குழந்தையில் இருந்து நாம் கற்பிக்க வேண்டும்.

இதுபோன்ற காணொளிகள் நாம் இன்னும் நாகரீகத்தின் எல்லையை கூட தொடவில்லை என்பதையும்,
விலங்கம்சத்தின் மிச்சத்துடன் அலைந்து கொண்டிருக்கிறோம் என்பதையும் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

முதலில் பெண்ணை சக மனுஷியாக பார்க்க,பழக கற்போம்.
புரட்சி,புண்ணாக்கு எல்லாம் பிறகு பேசலாம்.