தீர்மானித்து விட்டேன்.

உன்னை நான் கண்டு
கொள்ளப் போவதில்லை.

சொல்லப்போனால்
நாம் இனி
சந்திக்கக்கூட
போவதில்லை.

நான் உள்ளே நுழைகிறேன்.

நீ கால் மீது
கால் போட்டு
அமர்ந்திருக்கிறாய்.

உன்னை ஏறெடுத்துக் கூட
நான் பார்க்கவில்லை.

நீ ஒரு ராஜ விழிகளுடன்
ஒரு அலட்சிய பார்வை
பார்க்கிறாய்.

எதனாலும் மாறாத
உறைந்து போன
என் விழிகளில்
நேசத்தின் சாயல்
படராது கவனம்
கொள்கிறேன்.

நான் எந்த சலசலப்பிற்கும் அஞ்சப்போவதில்லை.

ஆனாலும்
ஏதோ ஒரு நொடி
அசைவில்
உன் ஜிமிக்கிகள்
ஆடிக்கொண்டிருந்தன..

நான் மேல்புற
விதானத்தை
பார்ப்பதாக
பாவனை செய்கிறேன்.

என் கழுத்தோரம்
மேய்ந்து
கொண்டிருக்கும்
உன் விழிகளை
தூசியென
தட்டி விடுகிறேன்.

உன்
அருகில் உள்ளவரை
உற்றுப்பார்த்து
பதிலளிக்கிறேன்.

நீ முணுமுணுத்தது நிச்சயம்
ஒரு இளையராஜா பாடல் தான்.

நான் வேக வேகமாக
அவ்விடத்தை விட்டு நகர்கிறேன்.

நெற்றியில் தவழுகிற
ஒற்றை முடியை நாசுக்காக நீ நகர்த்துகிறாய்.

வெளியே வந்து பெருமூச்சு
விடுகிறேன்.

இருந்தும் லேசாக
புன்னகைக்கிறேன்.

உள்ளே
இந்நொடியில்
மெலிதாய் நீ சிரிக்கிறாய்.

இப்போது கூட
நீ ஒரு இளையராஜா பாடலை
நிச்சயம் நினைத்திருப்பாய்.

ஏனென்றால் அதே பாடலை
தான் நானும் நினைத்தேன்..

 

[youtube]https://youtu.be/YYQzBQ5axec[/youtube]