——————————————–

ஒரு தேசிய இனத்தின் விடுதலை என்பது நீண்ட காலமாய் உறைந்திருக்கும் அந்த தொன்மை இன மக்களின் கலையாத கனவு மட்டுமல்ல.. அது காலங்காலமாய் தொடரும் உயிர்த் தாகம்.

உலகத்தில் நம்மை விட நிலப் பரப்பிலும், மக்கள் தொகையிலும் குறைவான எண்ணிக்கை கொண்ட எத்தனையோ தேசிய இனங்கள் தங்களுக்கென ஒரு நாடு அடைந்து தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழும் இக்காலத்தில்.. தமிழர் என்கின்ற தொன்ம தேசிய இனத்திற்கு மட்டும் உள்ளங்கை அளவு கூட ஒரு நாடில்லை என்கிற நிலை வரலாற்றின் நீண்ட நெடிய பக்கங்களில் பெரும் சோகமாய் தொடர்ந்து வருவதென்பது எதனாலும் சகிக்க முடியாத ஒன்று.

அடிமைப்பட்டு தாழ்ந்து விழுந்து கிடக்கிற ஒவ்வொரு இனமும் தனது விடுதலைக்கான ஆயுதத்தை அதுவே தயாரிக்கும் என்பதுதான் இத்தனை ஆண்டு காலமும் இயற்கை நமக்கு போதித்த பெரும் பாடம். அப்படி தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலை ஆயுதமாக நம் இனத்தில் பிறந்த மாபெரும் தலைவர் எம் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.

எதிரிகளாலும் குறைகூற முடியாத கறைபடாத வாழ்விற்கு சொந்தக்காரர்.
எங்கள் தலைவர் பிரபாகரன் அவன் முருகனுக்கே நிகரானவன் என்ற அண்ணன் அறிவுமதியின் வார்த்தைகளில் நமக்கு காணக் கிடைப்பது.. தலைவர் பிரபாகரனின் பெருமைகள் மட்டுமல்ல.. மூத்தகுடி ஒன்றின் மரபின் வழி பிறந்த ஒப்பற்ற தலைவனாகவும் அவர் விளங்கி இருக்கிறார் என்பதுதான்.

அப்படிப்பட்ட தலைவர் பிரபாகரனை தன் ஆன்மாவில் சுமந்து.. அவரது சொற்களை.. அவரது கனவுகளை.. தன் நினைவோடு நிறுத்தி அவரின் தம்பியாக
தமிழர் என்கின்ற தேசிய இனத்தின் விடுதலையை நிகழ்காலத் தலைமுறைக்கு கடத்துகிற உன்னதப் பணியை அண்ணன் சீமான் அவர்கள் செய்து வருகிறார்.

ஆனால் நாங்கள் தான் தலைவருக்கு நெருக்கமானவர்கள்.. எங்கள் பேச்சை கேட்டு தான் தலைவர் நடப்பார்.. தலைவருக்கு மிகுந்த மதிப்பிற்குரியவர் நாங்கள்தான் என்றெல்லாம் பெருமைகள் பேசிக் கொண்டவர்கள்.. இனத்தைக் கொன்றவர்களோடு இன்முகம் காட்டி நிற்க.. அண்ணன் சீமான் மட்டும்தான் இந்த இனத்தையும், உயிரையும் தங்கள் உயிருக்கு மேலாக நேசிக்கின்ற எளிய இளைஞர்களோடு களத்தில் நிற்கிறார்.

எத்தனையோ தலைவர்கள் ஈழ விடுதலையை ஆதரித்தார்கள். ஆனால் சீமானோ ஆதரிக்க பிறந்தவர் அல்ல. ஈழ விடுதலை என் விடுதலை என்று முழங்கினார். ஈழம் என்பது எங்கோ தூர இருக்கின்ற தேசம் என அனைவரும் பேசிக்கொண்டிருக்கும்போது.. ஈழம் தமிழர்களின் மற்றொரு தாய் நாடு என்று சீமான் முழங்கினார். மற்றவரெல்லாம் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை ஆதரித்தார்கள். ஆனால் சீமான் பிரபாகரன் தலைவர் உடன் பிறந்த என் அண்ணன் என்று முழங்கினார்.

இதுதான் அண்ணன் சீமானுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.இந்த வித்தியாசத்தை விடுதலைப்புலிகளும் உணர்ந்திருந்தார்கள். அண்ணன் சீமான் அவர்கள் தலைவரை சந்திப்பதற்கு முன்பாகவே.. உலகத்தின் பல நாடுகளில் இன விடுதலைக்கு அவர் முழங்கிய முழக்கம் தலைவருக்கு சென்று சேர்ந்திருந்தது.

இவர்களெல்லாம் சொல்வதுபோல திரைப்படம் எடுக்கதான் சீமான் ஈழத்திற்கு சென்றாரெனில்.. கடற்புலிகளின் தலைவர் சூசை எதற்காக சீமானை கடைசி நொடியில் கை காட்ட வேண்டும்..??

ஆம்.. சீமான் எளியவன் தான்.. வயதில் மற்றவர்களைவிட இளையவன் தான்.. தலைவராக அறியப்படுகிற பலருக்கு கீழே தரையில் அமர்ந்து இருந்தவர்தான்..

ஆனாலும்… தனக்கு யார் உண்மையாக இருப்பார் என தலைவருக்கு தெரியாதா என்ன.. அதனால் தான் இனத்தின் பெரும் கடமை சீமான் கரங்களுக்கு வந்து சேர்ந்தது.

உண்மையில் சீமான் பிரபாகரனைச் சந்தித்தாரா.. அங்கு என்னதான் நடந்தது… எது பற்றி பேசப்பட்டது.. என்பது பற்றி தெரிவிக்க உலகத்தில் இருவருக்கு மட்டுமே உரிமை உண்டு.

அந்த சந்திப்பில் இடம்பெற்ற தலைவருக்கும், அண்ணன் சீமானுக்கும் மட்டுமே அந்த தகுதி உண்டு. அவரவர் கற்பனைக்கு ஏற்றார்போல்.. சீமானை பொறாமையால் சீண்டுகிற சில்லறை வேலைகளை சிலர் தொடர்ச்சியாக இங்கே பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.

எனவேதான் வெளிப்படையாக இது குறித்து பேச அண்ணன் சீமான் முதன்முதலாக குமுதம் ரிப்போர்ட்டர் மூலமாக ஒரு தளத்தை அமைத்திருக்கிறார்.

குமுதம் ரிப்போர்ட்டரில்.. அடங்கா பெரு நெருப்பு என்ற தலைப்பில் அண்ணன் சீமான் தன் நெருப்பு தமிழில் எழுதி வருகிற அந்த வரலாற்றுப் பெரும் தொடரில்… தலைவர் பிரபாகரனுக்கும் தனக்கும் உள்ள உறவை பற்றி.. அவர்களுக்குள் நடந்த சந்திப்பை பற்றி..
விரிவாக பேச இருக்கிறார்.

யார் பிரபாகரன் என தலைப்பிட்ட இந்த வாரத் தொடர்.. மறைந்திருந்த பல உண்மைகள் மீது பாய்ச்சப்பட்ட வெளிச்சமாய் ஒளிர்கிறது. பிரபாகரன் என்ற தனிமனிதன் ஒரு தேசிய இனத்தின் தலைவனாக எவ்வாறு அறியப்படுகிறார் என்பதைப்பற்றி பெருமித மொழியோடு அண்ணன் சீமான் அவர்கள் விவரிக்கும்போது.. நமது கண்கள் கலங்குகிறது.

தன் உயிராக நேசிக்கின்ற தன் அண்ணனைப் பற்றி.. தமிழ் தேசிய இனத்தின் மன்னனைப் பற்றி.. அண்ணன் சீமான் மிக ஆழமாக உணர்வுபூர்வமாக விவரித்து இருக்கின்ற அந்தக் கட்டுரை.. இவ்வார குமுதம் ரிப்போர்ட்டரில் இடம்பெற்றிருக்கிறது.

ஒவ்வொரு தமிழனும்.. வாசிக்கவேண்டிய
வரலாற்றுப் பெரும் தொடர்

அடங்கா பெரு நெருப்பு.

உண்மை என்பது ஊழித் தீ. அதை வெறும் குப்பைகளைப் போட்டு அணைத்து விட முடியாது.

அடங்கா பெரு நெருப்பு .. பற்றி எரிகிறது.
சுற்றி பரவுகிறது.

அவசியம் படியுங்கள்.

மணி செந்தில்.