—————————————-

அதோ
அவர்கள்
நடந்துப்
போகிறார்கள்..

உயிர் ஆழத்தில்
உதிரக்கனவாய்
உறைந்திருக்கும்
ஒரு தேசத்தின்
பாடலை
உரத்தக் குரலில்
பாடியவாறு
அவர்கள்
நடந்துப் போகிறார்கள்..

முன்னோர்
மூச்சடக்கி
புதைந்த மண்ணில்
இருந்து
மட்காமல்
துளிர்த்திருக்கும்
சேர்ந்திசைப்
பாடல் அது..

காரிருள் படர்ந்து
காலங்காலமாய்
நிலைத்த பனை
நின்ற படி எரிந்த
கந்தக நெடி
கருப்பையில்
கருவுற்ற பாடல்
அது..

பசும் ஈரம்
போர்த்திய
ஆதி வனத்தின்
முதிர் கொடி ஒன்று
முறிக்கப்பட்டப்போது
முதிர்ந்தெழுந்த
பாடல் அது..

மூதாதை
கால் சுமந்த
தாய்நிலம்
அப்பாடலை‌ கேட்கும்
போதெல்லாம்
தானாகவே
விம்முகிறது
என்றார்கள்..

அப்பாடல்
கேட்கும்
போதெல்லாம்..
வானெறி
குண்டுகளால்
இருட்புகை
மண்டிய
பொழுதுகளில்..
ஆதவன்
அதுவாகவே
உதித்து விடுகிறது
என்றார்கள்..

யுகயுகமாய்
அந்த இனத்தின்
மண் காக்க நின்று
விதையாய்
ஊன்றப்பட்ட
முதுமனிதர்களின்
பொருமிடும்
மூச்சுக்காற்று
அந்தப் பாடலைத்தான்
சுமந்து
உச்சி மலைகளில்
அலைகிறது
என்றார்கள்..

உற்சாகக் குரலோடு
சேர்த்து பிணைந்த
கரங்களோடு…
அதோ
அவர்கள்
பாடிக் கொண்டே
செல்கிறார்கள்..

குருதியாற்றின்
உதிரத்துளிகள்
தொல்குடி ஒன்றின்
விழிச்சிவப்பு
வெப்பத்தால்..
ஆவியாகி மேகமாய்
மிதக்க..

எந்த நொடியிலும்
உறுமி வெடிக்க
காத்திருக்கும்
அந்த
வானத்தின்
விளிம்பின்
உதித்திருக்கும்..

அந்த வானவில்
பாலத்தின் மீது
அதோ போகிறார்கள்..

அவர்கள் போகிறார்கள்.

மாவீரர்கள் போகிறார்கள்..

……..

வீரவணக்கம்.

 

https://youtu.be/qiiBJ3mpGtY