எங்கிருந்தோ வீசி
என் பின்னங்கழுத்தை
உரசி செல்கிற
காற்றில் உன் மெல்லிய
விரல்கள் ஒளிந்திருக்கின்றன.

எதிர்பாராமல் சிந்துகிற
எதிர்ப்படும் குழந்தையின்
புன்னகை ஒன்றில்
பொன்னெழில் பூசிய
உனது கன்னக்கதுப்புகள்
மலர்ந்து இருக்கின்றன.

அடர்மழை குளிர் இரவில்
கண்ணாடிக் கூண்டினில்
அசையும் மெழுகுச்சுடரில்
நிலா இரவொன்றில்
கிறங்கிப் போயிருந்த
உன் நீல விழிகளின்
வெப்பம் தகிக்கின்றன.

பின்னிரவின் ஒத்திசைவு
லயிப்பில் கேட்கும்
இளையராஜாவின்
பியானோ வாசிப்பின்
இடையே மலரும்
மெளனங்கள்
அடர்த்தியாய்
என் முகம் போர்த்தும்
உன் கேசத்தின் வாசனையை
வாசித்து காட்டுகின்றன..

அசையும் பேருலகில்
சலனமில்லா ஒரு நொடி
திடுக்கிடலில் கழுத்தில்
முகம் புதைத்து நீ சிந்திய
கண்ணீர் துளிகள்
கனக்கின்றன.

எப்போதும் தோள் தழுவி
உறங்கும் என் பால்ய
மகனின் அமைதியில்
உன் மடியில்
நான் அடைந்த
அந்த முன் அந்தி‌
உறக்கத்தின் சாயல்கள்
இயல்பாய் நிகழ்கின்றன.

இப்படியாக
உன்னை தொலைத்தும்
உன்னை அடைந்துமாக
அலைந்து கழிகிறது
இந்த நிகழுலகு.