திரும்ப வரப்
போவதே இல்லாத
ஒரு நாளில்
சந்திக்க வருவதாக
சொல்லி விட்டு
சென்று இருக்கிறாய்..

அன்றைய நாளில்
மழை பெய்யும் என்றாய்.

நீலக் கலர் சட்டையும்
கருப்பு ஜீன்ஸீம்
அணிந்து வா என்றாய்.

இளையராஜா பாடலை
கேட்டுக்கொண்டே
காத்திரு என்று
சிரித்துக் கொண்டே
சொன்னாய்.

நா உலரும் தருணங்களில்
தேநீர் குடித்துக் கொள்
என்றாய்…

காத்திருக்கும் தருணங்களில்
யாரையும் வேடிக்கை பார்க்காதே..
தப்பாக நினைப்பார்கள்
என்றாய்.

மிகவும் காலதாமதம்
ஆனால் பசியோடு இருக்காதே.
வரும் போதே எனக்கும் சேர்த்து
ஏதாவது வாங்கிக்கொண்டு
வா என்றாய்.

அடிக்கடி ஆழ மூச்சு
விட்டுக் கொள்.
அது நெஞ்சுப் படபடப்பை
குறைக்கும் என்றாய்.

முதல் நாள் இரவு
தூங்க Alprax போடாதே.
காத்திருக்கும் நேரத்தில்
தூங்கலாம் என்றாய்.

ஏதேனும் புத்தகம்
எடுத்துக் கொண்டு வா.
அது சில நாட்களாக
நீ படிக்க விரும்பும்
புத்தகமாக இருக்கட்டும்
என்றாய்.

எல்லாவற்றையும்
சொல்லி விட்டு
நான் தாங்குகிறேனா
என்பதையும் பார்த்து
விட்டு நீ போனாய்..

அன்றைய நாளும்
மழை பெய்தது.

மகிழம்பூ உதிரும்
மரத்தின் கீழே
அதே இரயில்வே
ஸ்டேஷனின் பழைய
பெஞ்சில் அமர்ந்து
இருக்கிறேன்.

வழக்கமாய் காலை
சுற்றி வரும்
நாயைக் காணோம்.

மரத்தில் அடையும்
பறவைகள் கூச்சல்
இன்று கொஞ்சம்
அதிகம்.

அடிக்கடி பார்க்கிற
பூ விற்கும் அம்மா
அன்று ஏனோ
வர வில்லை.

அந்த அம்மா
அமரும் இடத்தில்
காய்ந்த பூக்கள் சில
உதிர்ந்து கிடந்தன.

*