❤️

வெகு நாட்களுக்குப் பிறகு என் அலைபேசியில் நான் மறைத்து வைத்திருந்த ஒரு பெயரில் அவள் வந்தாள். ஒளிர்ந்துக் கொண்டே இருந்த அலைபேசியை, அதில் புலப்பட்ட அவள் பெயரை சற்றே அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அது வெறும் அழைப்பல்ல. அது ஒரு சுழல்.

அந்த சுழலில் மீண்டும் சிக்கி சிதைந்து விடக்கூடாது என சுதாரித்தேன். சிதைந்தழிந்து மீண்டும் மீண்டும் மீள் எழுவதென்பது‌ பழங்கால விக்ரமாதித்தன்-வேதாளம் கதை போல முடிவிலி என அறிந்து இருக்கிறேன். சில நொடிகள் அமைதியாக ஒளிர்ந்து கொண்டிருந்த அந்த அலைபேசி திரையையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஏதோ ஒரு அனிச்சை போல, என்னையும் மீறிய ஒரு நொடியில் நான் அந்த அழைப்பை எடுத்து விட்டேன்.

எடுத்த ஒரு நொடியில் சட்டென சுதாரித்து விட்டு ஏதோ ஒரு வேலையில் இருப்பது போன்று காட்ட வேண்டுமென என்னை நானே தயாரித்துக் கொண்டு… குரலில் வலிந்து ஒரு பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டேன். கொஞ்சம் அவசரக் குரலில் நான் வேலை ஒன்றில் இருப்பதாக சொன்னேன். அவளோ.. அதை சற்றும் பொருட்படுத்தாமல் அலட்சியமாக.. “ஏன் நீண்ட நேரமாக ஒலித்துக்கொண்டே இருக்கும் அலைபேசியை பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருந்தாய்..” என கேட்டாள்.

என்னைச் சுற்றி ஏதாவது கேமிரா இருக்கிறதா என நான் சுற்றிமுற்றிப் பார்த்தேன். அந்த மௌனத்தையும் அவளே உடைத்து..” உன்னை பின் தொடர எனக்கு எப்போதுமே நினைவுகள் போதும். கேமிரா தேவையில்லை..” என்றாள் அலட்சியமாக.நான் பதட்டமானேன்.அவளே மேலும்.. “உன்னை உன்னையும் விட நான் அறிந்திருப்பதை நீ தெரிந்திருப்பது தான் உன்னை பதட்டம் ஆக்கிக் கொண்டே இருக்கிறது..” என்றாள்.

உண்மைகளின் எடை அதிகரித்துக் கொண்டே போவதும், நான் சுற்றியிருந்த பொய்த் திரைகள் ஒவ்வொன்றாய் அவிழ்ந்துக் கொண்டே போவதுமான சூழலில்..கொஞ்சம் கெஞ்சலான குரலில்..”இப்போது உனக்கு என்னதான் வேண்டும்..?” எனக் கேட்டேன்.”என் மின்னஞ்சலின் கடவுச்சொல் எனக்கு மறந்துவிட்டது. என்னவென்று சொல்.” எனக் கேட்டாள். “அதெப்படி எனக்குத் தெரியும்..?” என கேட்டேன். “என்னையும் விட அதிக நேரம் என் மின்னஞ்சலை நோண்டிக் கொண்டு இருப்பது நீதானே..” என்றாள் சற்றே கிண்டலோடு.திடுக்கிட்டேன்.

என் விஷயத்தில் மட்டும் எப்படி இவ்வளவு சுதாரிப்பாக இருக்கிறாள் என வியந்துக் கொண்டே மெளனித்தேன்.”சொல்லு”.. என அதட்டினாள்.கொஞ்சம் தயக்கத்தோடு நான் உன்னை முதலில் பார்த்த தேதிதான் என்றேன்.அதுதான் எந்த தேதி..? எனக் கேட்ட அவளிடம்.அது அவளுக்கே மறந்துவிட்டது என்ற ஒரு நொடியில் எனக்கும் மறந்து விட்டது என அவளுக்கு உணர்த்த‌ சற்றே மூர்க்கமான குரலில் “தெரியவில்லை” என கோபத்தோடு சொல்லி அழைப்பினை துண்டித்தேன்.

சில நிமிடங்கள் எனக்கு நரகமாக நகர்ந்தன. மாறி மாறி சுழன்ற கால அலைவரிசையில் ஏதோ ஒரு சின்ன புள்ளி மட்டும் பொருந்தாமல் எனக்கு உறுத்திக்கொண்டே இருந்தது.ஏதோ சிந்தித்தவாறே.. நான் அவசரம் அவசரமாக என் மடிக்கணினியை திறந்து அவளது மின்னஞ்சலை வழக்கமாக நான் பயன்படுத்தும் அவளை சந்தித்த அந்த நாளை கடவுச் சொல்லாக பதித்து திறக்க முயன்றேன்.ஏதோ தவறென கணினித் திரைகத்தியது.அந்த நொடியில் தான் அலைபேசியில் அவள் மீண்டும் ஒளிர்ந்தாள்.சின்ன சிரிப்போடு அவள் சொன்னாள்.”அந்த கடவுச்சொல்லை நான் மாற்றி விட்டேன்.”அழைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது.

❤️