getimageசம கால திரைப்படங்களில் வணிகப் படங்கள்-கலையம்சம் பொருந்திய படங்கள் என்ற இடைவெளியை தேடும் யாரும் மிகப் பெரிய ஆச்சர்யங்களுக்கு உள்ளாகாமல் இருக்க இயலாது. ஏனெனில் அந்த இடைவெளி மிக நுட்பமானவைகளாக சம கால திரைப்படங்கள் மாற்றி இருக்கின்றன. திரைப்படத்திற்கு கதை எழுதுவதே ஒரு திரைப்படமாக மாறி விட்ட சூழலில் பார்வையாளனின் ரசனைகளும் சட்டகங்களுக்குள் பொருத்த இயலா கணக்குகளோடு மாறி வருகின்றன.  இந்த படம் ஓடும்-ஓடாது என்றெல்லாம் யாராலும் சொல்ல முடியாத சூழலில்  அச்சறுத்தும் பேயும்,பிசாசும் நகைச்சுவை கதா பாத்திரங்களாக, கதாநாயகியாக மாறி விட்ட ஒரு காலக் கட்டத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் இசை வெளிவந்துள்ளது.

கதாபாத்திரங்களுக்கிடையிலான உளவியல் சிக்கல்களை திரைமொழியாக வடிப்பதில் எஸ்.ஜே.சூர்யா திறமையானவர். அவரது முந்தைய படங்களான வாலி,குஷி,நியூ,அ..ஆ என அனைத்துப்படங்களும் கதாபாத்திரங்கள் எதிர்க்கொள்ளும் உளவியல் முரண்களைப் பற்றிதான் பேசுகின்றன. அவ்வகையில் இசையும்  ஒரே துறையில் திறமைப் படைத்த இரு பெரும் தனி மனிதர்களுக்கு இடையிலான போட்டி,பொறாமை,வஞ்சகம், சூழ்ச்சி போன்ற  உளவியல் முரண்களைப் பற்றி பேசுகின்றன.

எஸ்.ஜே.சூர்யாவின் திரைமொழி சற்றே வித்தியாசமானவை. அதிகமான Close-up காட்சிகள், நீண்ட நேர உரையாடல்கள், கவர்ச்சி ததும்பும் காட்சியமைப்புகள் என தனித்தே தெரியும் அவரது திரைமொழி வடிவத்திற்கு இசை திரைப்படமும் விதிவிலக்கானதுஅல்ல. இரு பெரும் இசையமைப்பாளர்களுக்கு இடையிலான முரண்களை பேசும் திரைப்படம் ஆதலால் சமகாலத்தில் இருக்கும் இசையமைப்பாளர்கள் பார்வையாளருக்கு நினைவிற்கு வந்துதான் ஆகிறார்கள்.\

30 ஆண்டுகளாக அசைக்கவே முடியாத இசை சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த வெற்றிச்செல்வன் தனது செருக்கால் ஒரு இயக்குனரை அவமானப்படுத்த , அந்த இயக்குனர் வெற்றிச்செல்வனின் உதவியாளராக இருக்கிற ஏ.கே.சூர்யாவை அறிமுகப்படுத்தி மாபெரும் வெற்றியை அடைகிறார். சூர்யாவின் தொடர்ச்சியான வெற்றிகளால்  வெற்றிச்செல்வன் தனது பிழைப்பு,வருமானம்,பேர்,புகழ் என அனைத்தையும் இழக்கிறார். மீண்டும் வெற்றியை அடையத்துடிக்கும் வெற்றிச்செல்வன் பல வித சூழ்ச்சிகளால் சூர்யாவை வெல்ல முயல்கிறார். தன்னைச்சுற்றி  பின்னப்படுகிற சூழ்ச்சி வலைகளில் இருந்து அந்த இளம் இசையமைப்பாளர் மீண்டாரா ,இல்லையா என்பதுதான் கதை.

இத்திரைப்படத்திற்கு எஸ்.ஜே.சூர்யா முதன் முதலாக இசையமைத்துள்ளார். முதல் திரைப்படம் என்பதால் பூங்கொத்து மட்டுமே. அடுத்தடுத்த முயற்சிகளில் சூர்யா தன்னை மேம்படுத்திக் கொள்வார் என நாம் வாழ்த்துவோம். இளம் இசையமைப்பாளர் ஏ.கே.சூர்யாவாக எஸ்.ஜே.சூர்யா கதையின் நாயகனாக நடித்துள்ளார். வரிசையாக வருகிற சிக்கல்களால் உளவியல் முரண்களுக்கு உள்ளாகி தடுமாறுவதை நன்றாகவே செய்திருக்கிறார். அதிலும் கழிவறைக்குள் உட்கார்ந்து வாய் பொத்தி அழும் காட்சியில் …எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் முன்னேறி இருக்கிறார் என்பதை உணர்த்துகிறார் .  களைப்படைந்த கண்களோடு தன்னைச்சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்துக்கொள்ள முடியாத குழப்பமான சூழலில்…சோர்வான மனிதனாக உலா வரும் சூர்யாவிற்கு அக்கதாபாத்திரம் சரியாக பொருந்துகிறது.

இக்கதையினை தனது பண்பட்ட நடிப்பால் தூக்கி நிறுத்தி இருப்பவர்  மூத்த இசையமைப்பாளர்,இசைவேந்தன் வெற்றிச்செல்வனாக  நடித்துள்ள  உங்கள்-எங்கள்-நமது சத்யராஜ். அவர் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் கைத்தட்டல்கள் திரையரங்குகளை நிறைக்கின்றன.  அதுவும் தோற்றுப் போன மனிதனாக, வேலையற்று ..தாழ்வு மனப்பான்மையில் சிக்கிக்கொண்டு தவிக்கும் மனிதனாக சத்யராஜ் அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். தனது பணியாளராக வரும் கஞ்சா கருப்புவினை அவர் கையாளும் காட்சிகள் …சத்யராஜ் என்கிற மாபெரும் கலைஞனை அடையாளம் காட்டுகின்றன. ஓரக்கண்ணால் பார்ப்பது,குத்தலும், நையாண்டியாக பேசுவது, தனது வெற்றிக்காக எந்த எல்லைக்கும் செல்வது என தோன்றும் காட்சிகளில் எல்லாம் தன்னை மாபெரும் கலைஞனாக நிருபித்துக் கொண்டே இருக்கிறார் சத்யராஜ். அவர்தான் கதையின் முதுகெலும்பாக இருந்து…ஒட்டுமொத்த திரைப்படத்தையுமே சுமக்கிறார் .

கதாநாயகியாக நடித்திருக்கும் சாவித்திரி(அறிமுகம் ) கவர்ச்சி காட்சிகளில் அதிகம் தென்படுகிறார். செளந்தர்ராஜனின் ஒளிப்பதிவு காடுகளில் மின்னுகிறது. அந்த அருவியோர அமைப்பு மிலன் கலை ஆக்கத்தில்..அற்புதமாக படமாக்கி உள்ளார்கள்.

சாதாரணமாக வனத்தில் திரியும் ஒரு வண்டின் இசை அறிவுக்கு முன்னால் நாமெல்லாம் ஒண்ணுமே இல்ல சார் என்று சத்யராஜிடம் எஸ்.ஜே.சூர்யா பேசும் காட்சிகளில் வசனகர்த்தா  எஸ்.சூர்யா கைத்தட்டல் பெறுகிறார் .

படத்தின் முடிவாக எஸ்.ஜே சூர்யா ஒரு பரிசோதனை முயற்சியை மேற்கொள்வது அவரது துணிச்சலை காட்டுகிறது. ஒட்டு மொத்த படத்தையுமே ஒரு கனவாக நிலைநிறுத்த சூர்யா முயலுவது பார்வையாளர்களை அசதிக்குள்ளாக்குகிறது.

படத்தில் பல குறைகள். இருந்தாலும் ..நீண்ட காலத்திற்கு பிறகு எஸ்.ஜே.சூர்யாவின் மறு வருகையும், சத்யராஜ் என்கிற மாபெரும் கலைஞனின் நடிப்புத்திறமையும் இசையை ஒரு தவிர்க்க இயலா திரைப்படமாக மாற்றுகின்றன.

இசை – உளவியல் முரண்களால் எழுகிற புதிய திசை.