ithu_eppadi_irukku
சமீப காலமாக இணைய வெளிகளில் தி(ருக்குவளை குடும்ப) முன்னேற்றக்கழகத்தின் இணைய எழுத்தர்கள் செத்துப் போன பிணமாய் தங்கள் ஆட்சி அதிகார கனவு ஆகிவிட்டதே என்ற ஆற்றாமையில்.. தமிழ்த்தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் குறித்து தரம் குறைந்த வசவுகளை.. முக்கிக் கொண்டும், முனகிக் கொண்டும் இருப்பதை நாம் பார்க்கிறோம்.
 
தலைவர் பிரபாகரன் குறித்து தமிழ்நாட்டில் இருமுறைமைகளாக மட்டுமே பேச உரிமையிருக்கிறது என கருதுகிறவன் நான். ஒன்று அவரின் வீரம், ஈகை , அளப்பரிய உழைப்பு, அதன் வாயிலாக ஏற்பட்டிருக்கிற கம்பீரம் ஆகியவை குறித்தான பெருமித கதையாடல்கள். மற்றொன்று புலிகளின் ஆயுத மெளனித்தலுக்கு பிறகான தமிழீழ விடுதலையில் தமிழ் நாட்டின் பங்கு.
இந்த இரண்டு வகையான முறைமைகளை தாண்டி புலிகளை விமர்சிக்க, ஏச, தூற்ற , ஈழப் பெருநிலத்தின் இறையாண்மையை சீண்ட இங்கிருக்கும் எவருக்கும் எந்த வித உரிமையுமில்லை. அவர்களது தியாகவெளியில் பங்கேற்று தன்னுயிர் தந்த முத்துக்குமார் போன்ற தமிழ்நாட்டு சீலர்களைத் தவிர வேறு எந்த சில்லரைகளுக்கும் ஈழ விடுதலைப் பற்றியும், தலைவரைப் பற்றியும் வில்லங்கம் பேச, எழுத எவ்வித யோக்கியதையும் இல்லை.
 
இராசீவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டு 25 வருடங்களுக்கு மேலாக சிறைக் கொட்டடியில் சிக்குண்டு கிடக்கும் ஏழு தமிழர் விடுதலைப் பற்றி நமக்குத் தெரிந்த திமுக இணைய எழுத்தர் ஒருவர் தன்னாலான பதிவொன்றை உருக்கமாக எழுதி இருந்தார். என்னடா சாத்தான் வேதம் (?) தானே ஓதும்..இம்முறை சங்கீதம் இசைக்கிறதே என்று பார்த்தால் அதில் தலைவர் பிரபாகரனைப் பற்றி கீழ்த்தர வசவுகள்.
 
தலைவர் பிரபாகரன் துரோகியாம்..அவர்தான் ராசீவ் காந்தியை கொன்றாராம்.. சிறையில் இருக்கிற எழுவர் பற்றி எதுவும் பேசாமல் அது ஒரு துன்பியல் சம்பவம் என ஏசி அறையில் பேசி விட்டு போய் விட்டாராம்.
பாவம். திமுக தம்பிக்கு கோபாலபுரத்து கோயபல்ஸ்களின் கோல்மால் வரலாறு தெரிந்திருக்கும். தலைவரைப் பற்றி, அங்கு நடந்த தியாக வரலாறைப் பற்றி கோபாலபுரத்தின் முட்டுச்சந்திலும், சிஐடி காலனியின் சிக்னலிலும் முற்போக்கினை தேடும்
தம்பிக்கு எங்கே தெரியும்…?
 
தமிழின அகராதியில் துரோகம் என்ற சொல்லுக்கு பல்வேறு அர்த்தங்கள் இல்லை. ஈழம், தமிழ்நாடு என்கிற இரு பெரு நிலங்களிலும் துரோகத்திற்கு பொதுவான ஒரே பெயர்தான். அது கருணா.
 
தியாகத்திற்கும், துரோகத்திற்கும் தொடர்பே இல்லாத வித்தியாசங்கள் உண்டு.
 
இராமச்சந்திரா மருத்துவமனையில்.. மல்லாக்கப் படுத்துக்கொண்டு முதுகுக்கு அறுவை சிகிச்சை செய்தது துரோகம். காலை உணவிற்கும், மதிய உணவிற்கும் இடையே சாப்பிடாமல் இருந்ததை சாகும் வரை உண்ணாவிரதம் என்று கதை கட்டியது துரோகம். காயம் பட்ட போராளிகளுக்காக சொட்டு சொட்டாய் சேர்த்த உதிரப் பொட்டலங்களை ஜாபர் சேட் ஷீ காலில் போட்டு மிதித்து அழித்தது துரோகம். இனத்தை அழித்த காங்கிரசின் காலை பதவிக்காக,பணத்திற்காக தழுவி கிடத்து சோனியா ..சோனியா சொக்கத் தங்கம் சோனியா என்று பாட்டு பாடியது துரோகம்.. 40 பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவி விலகல் கடிதங்களை வாங்கி தன் புட்டத்தின் பின் போட்டு விட்டு குடும்ப திட்டங்களுக்காக பேரம் பேசியது துரோகம். அய்யகோ…கொய்யகோ என்றெல்லாம் அழுகாச்சி தீர்மானங்களை பேருக்கு போட்டு விட்டு நேரு குடும்பத்திற்கு காவடி தூக்கியது துரோகம்.
நானே அடிமை ..இன்னொரு அடிமைக்கு எப்படி உதவுவது என்று உதவாக்கரை பேச்சு பேசி விட்டு ..அந்த அடிமைப்பதவிக்காக இந்த இறுதி மூச்சுவரை நாயாய்..பேயாய்..நரியாய் அலைவது துரோகம். இனத்தை அழித்த காங்கிரசோடு இனி ஒட்டும் இல்லை.உறவும் இல்லை .அவர்களுக்கு எங்கள் ஓட்டும் இல்லை என அறிவித்து விட்டு அடுத்த தேர்தலிலேயே காங்கிரசின் காலை கழுவிக் குடிப்பது துரோகம்.
செய்த துரோகங்களை அடுக்கடுக்காய் பட்டியலிட்டால் கோபாலபுரத்து சொத்துக் கணக்கு போல முடிவில்லாத கணக்குதான். ஆனால் அந்த தம்பி எளிமையாக சொல்கிறார் பிரபாகரன் துரோகி என்று.
 
இந்த சொல்லை சிறையில் இருக்கும் ஏழு தமிழரும் சொல்லட்டும். அற்புதம் அம்மா சொல்லட்டும். பெரியார் சிலைக்கு முன்னால், பெரியார் திடலில் வைத்து கைது செய்யப்பட்ட பேரறிவாளனை கைக்கழுவி விட நாங்கள் எல்லாம் திடலோ, கோபாலபுரத் திண்ணையோ அல்ல. பிரபாகரன் என்கிற தியாக நெருப்பினை ஆன்மாவில் சுமக்கிறவர்கள். இன்று ஏழு தமிழரின் விடுதலைக்காக திரண்டிருக்கிற அத்தனைத் தமிழர்களும் பிரபாகரனை தங்கள் தலைவராக மானசீகமாக ஏற்றுக் கொண்டவர்களே.. எங்களுக்கு எல்லாம் சென்னைக்கு ஒரு தலைமை..சிஐடி காலனிக்கு ஒரு தலைமை..மதுரைக்கு ஒரு தலைமை என்ற மானங்கெட்டத்தனங்கள் கிடையாது.
தான் பெற்ற பிள்ளைகளுக்கு பதவி கேட்டோ, உதவிக் கேட்டோ நின்றவர் எங்கள் தலைவர் அல்ல. எல்லாருக்கும் நேர்வது தன் வீட்டு பிள்ளைகளுக்கும் நேரட்டும் என்று களத்தில் நின்ற நேர்மையாளன். கட்சியில் குச்சி கட்டிய காலம் முதல் இருந்தவனை காலில் போட்டு மிதித்து விட்டு தன் மகனுக்கும், மகளுக்கும், பேரனுக்கும், பேத்திக்கும் பதவி கேட்டு டெல்லிக்கு அலைய எம் தலைவர் அண்ணா அறிவாலயத்துக்காரர் அல்ல. ஏசி அறையில் தூசி தட்டி..பேசி முட்டி நிற்பதற்கு எங்கள் தலைவர் காகிதத்தில் வசனம் எழுதி.. காற்றை 2 ஜியாக விலை பேசும் வில்லன் இல்லை.
 
எங்கள் தலைவர் களத்தில் நின்றார்.
 
மக்களோடு.. மக்களாக.தன் உதிரம் சிந்தி தாய்மண்ணை உயிர்ப்பிக்க நம்பிக்கைக் கொண்டு களத்தில் நின்றார்.
 
பேசுங்கள். தமிழ்நாட்டு அரசியலில் ஆளா..இல்லை..? திட்டிக் கொள்ள, ஏசி..பேசி ஒப்பிட்டுக் கொள்ள ஆளா இல்லை…? சாக்கடையில் நெளியும் புழுக்களுக்கா பஞ்சம்..? கடலிலே தூக்கிப் போட்டாலும் கூட கடலையே களவாடும் கட்டுமரங்களுக்கா இங்கு பஞ்சம்..?
சாக்கடைகளை பற்றி சலிக்காமல் பேசுங்கள். அதில் எங்களுக்கு சல்லிக்காசு அளவு கூட எதிர்ப்பில்லை. ஆனால் புனிதங்களைப் பற்றி பேச நரித்தனத்தின் நாவுகளுக்கு உரிமை இல்லை.
இந்திய முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி கொலைவழக்கில் இன்னும் வெளிவராத மர்மங்கள் ஏராளம் உண்டு. அது இன்றவும் முடிவடையாத விசாரணை. அதில் சிக்கி இருக்கிற 7 தமிழர்களை காப்பாற்றவே இந்த உணர்வுப் பூர்வ ஒன்று கூடல். பேரணி.
 
இராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டவர்களை விடுவிக்க தலைவர்.பிரபாகரன் எதுவும் செய்யவில்லை என்று பேசுவதே அபத்தமானது. ஏதாவது செய்திருக்க முடியுமா..செய்திருப்பார்களா என்பதெல்லாம் நம் அறிவிற்கு அப்பாற்பட்டது. அதைப்பற்றி அந்த ஏழு பேரைத் தவிர மற்றவரெல்லாம் பேசுவது அநாகரீகமானது.
 
எனவே துரோகத்தனத்தை எல்லாம் பேச அடிப்படை தகுதிகளை திமுக இழந்து பன்னெடுங்காலமாகி விட்டது. ஈழ உறவுகளின் இரத்தக்கறை படிந்த அவர்களின் அரசியல் பாதை எதனாலும் புனிதமாகி விடாது.
திராவிடம் என்ற பெயரில் மண்ணின் பூர்வக்குடிகளின் வாழ்வை,பண்பாட்டு விழுமியங்களை, அரசியலை, பொருளாதார சூழலை எல்லாம் விழுங்கி ஏப்பம் விட்டு விட்டு …ஆசியாவின் மூன்றாவது பணக்கார குடும்பமாக மாறியது எம் தலைவர் குடும்பம் அல்ல.
 
ஒப்பிட்டு யோசிக்கவே மனது கூசுகிறது. புனிதத்தின் உச்சிக்கும், வாயில் இருந்து உமிழும் எச்சிற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா..?
 
வந்தோமா…அரசியல் செய்தோமா..அடுத்தவன் காசை , அரசாங்க பணத்தை ஆட்டைய போட்டோமா என்கிற அரசியலைத் தாண்டி ..ஈழம் ,பிரபாகரன் என்கிற தியாகமும்,புனிதமும் நிறைந்த சுடர்மிகு இலட்சியங்களை அவர்கள் நினைக்க வேண்டியதில்லை.
நினைக்கவும் முடியாது. கூடாது.
 
எனவே எம் தலைவர் பிரபாகரனைப் பற்றி அவதூற்று கதையாடல்களை நிறுத்திக் கொண்டு..வழக்கம் போல பிழைப்புத்தனங்களை செய்து வர உங்களுக்கு தயாளு அம்மா ஸ்பெசல் சாய்பாபா அருள் அளிக்கட்டும்.
இக்கட்டுரையின் தொடக்கத்தில்  இருக்கும் ஒரு சுவரொட்டி போதும். சொல்லக்கூசும் இவர்களின் கதைகளைச் சொல்ல.
 
– மணி செந்தில்