15972645_242421829516026_2504605351533441783_o

 

தழும்பாக
மிஞ்சுவதும்
வலியாக
எஞ்சுவதுமாக

கனன்று எரியும்
காயம் நீ…

பயப்படாதே..

ஒரு போதும்
என் காயங்கள்
ஆறுவதில்லை..

நானும்
ஆற்ற
நினைப்பதில்லை..

உன்னால்
நகராத
ஆற்றின்
சுழி
மையத்தில்
விசையற்றும்
திசையற்றும்
ஆழ்ந்திருக்கின்றேன்..

அந்த
மோனநிலையில்
நானாகவே
உணர்ந்தது

எதுவும்
உன்னால் இல்லை
எனவும்…

அது
என்னால்
தான் எனவும்..

சொல்லப்போனால்
நீ கூட
நானாக
வரைந்துக் கொண்ட
கனவு ஓவியம்
எனவும்…
………………….

இதை பார்த்து
உன்னால்
மெலிதாக
புன்னகைக்கூட
முடியும்..

ஆனால்
புன்னகைக்கு
பின்னால்
கசியும்
உதிர
வாடையையும்
என்னால்
இப்போதே
இங்கிருந்தே
உணரமுடிகிறது
என்பதே
இப்போதைய
என் துயர் நிலை..

– மணி செந்தில்