20664930_332227397202135_5946565845759023935_n

அந்த மங்கிய
ஒளி அறையில்..

தலைக்குனிந்து
அழுதுக்கொண்டிருந்த
அவனது விழிகள்
கனன்று..
தகித்த ஆன்மாவின்
சொற்களை சொல்ல
முடியாமல் சிவந்திருந்த
வேளையில் தான்..

அவனை சந்தித்தேன்.

எதிலும் நிலைக்
கொள்ளாமல்
அலைக்கழிந்து
சிவப்பேறிய அவன்
விழிகளுக்குப் பின்னால்
இருந்த காயம்
புரையோடி இருந்ததை
அவன் விழிகளை
நேரிட்டு பார்க்கும்
எவரும் அறியலாம்.

காயத்தின் தர்க்க,
நியாயங்களை..
பற்றி சிந்திக்க
ஏற்கனவே பல
இரவுகளை தின்று
பசியாறி இருந்தான்..

அவன் விரல் இடுக்கில்
சாம்பல் தட்டாமல்
நடுங்கிக்கொண்டிருந்த
சிகரெட்டின் புகை
வளைய வடிவங்களில்..
இறந்தக்கால லயிப்புகளை
தேடிக் கொண்டிருந்தான்..

இசைத்தட்டின் மீது உரசும்
முள்ளாய் ..
நினைவுச்சுழலில்
சில நிலாப்பொழுதுகளை
கத்தியாக்கி ..
தன் ஆன்மாவில்
உதிரம் வழிய கீறி
ஒரு முடிவிலிக் கவிதை
ஓன்றை எழுத முயன்றுக்
கொண்டிருந்தான்.

நீ வாழ்வை விட
நரகத்தை
மேலானதாக்கி
வருகிறாய்
என்று முனகிய
என்னை
பார்த்து வெறுமையாய்
சிரித்தான்..

எதிரே இருந்த கோப்பையில்
நிராசையின்
அடையாளமாய்
இருந்த மதுவை
பொறுமையாய்
குடித்தான்.

பிறகு அவனே சொன்னான்.

நரகம் என்ற ஓன்றே
வாழ்வின் ரணத்திற்கு
மேலான சொல் இருக்கிறது
என்ற உம் ஆறுதலுக்காகவே..

மற்றபடி.
நரகமே வாழ்வின்
பிறிதொரு
சொல்..

நரகம் எப்போதும்
காலியாகத்தான்
இருக்கிறது..
ஏனெனில் எல்லா
தண்டனைகளும்
வாழ்விற்குள்ளாகவே
வந்தமர்ந்து இருக்கின்றன..

சாத்தான்களின்
நிழலில் தான்
பூமி இளைபாறுகிறது..

தெய்வங்கள்
பூமியை விட்டு
விலகி விட்டன.

பரிசுத்த
நம்பிக்கைகளை
கொல்வது எப்படி
என அறிதலில்
தேர்ந்த
பின்னரே சக தோளில்
கரம் பதிக்கின்ற
உலகில்…
கழுத்தறுக்கப்பட்டு கிடக்கிறது..
தூய அன்பின் உடல்..

பேசிக் கொண்டே போனான்..

இறுதியில் அவனே..

என்
நம்பிக்கைகளை
கொன்ற சொற்களை..
பொழுதுகளை…
நான் உடைக்கத்
துடிக்கும்
அந்த துரோகக்
கோப்பையில்
சேகரித்துக் கொடு..

அதை அருந்தி
நான் இறக்கிறேன் என..

இல்லையேல்..

மனதார அன்பின்
வழி பிறந்த
பொழுதுகளை..
என் நினைவில் வைத்துக்
நிராயுதபாணியாய்
நிற்க வைத்துக்
கொல்லக்
கூரிய ஆயுதம் ஒன்றினை
உன் பொய்களால்..
தயாரித்துக்
கொடு.

கொன்று தீர்க்கிறேன்.

என்று வலியோடு கத்தினான்..

சரி வா ..

காலாற நடந்து விட்டு வருவோம்..
புதிய கடலலைகள்
கால் தழுவ காத்திருக்கின்றன
என்றேன்.

மறுத்தான்.

என்னால்
உன்னை..
உன் வலியை..
சகிக்க முடியவில்லை.
நான் கிளம்புகிறேன்..

என்றவாறே
வெறுப்புடன்
நடக்கத்தொடங்கினேன்.

என்னை இப்படியே விட்டு
போகிறாயா..
ஏதாவது பொய்யான
மழுப்பல்களோடு
என் நெற்றியை
வருடிக் கொடுத்து
விட்டுதான் போயேன்..
என்ற அவனது
கத்தலும்..
கதறலும்..
கலந்த
இறைஞ்சலை ..
இடறியவாறே
சென்றேன்.

நள்ளிரவு வரை
அவனது இறைஞ்சல்
வெறி நாய்க்கடியாய்..
ரத்தக்கசிவாய்..
என்
தொண்டைக்கடியில்..

*********************†
காலை…
கழுத்தறுக்கப்பட்ட
நிலையில் அவன் பிணமாக
கடற்கரை ஓரத்தில்
கிடக்கிறான் என யாரோ
சொன்னார்கள்.

உதிர உலர்வோடு
என்
தலையணைக்கு
அடியில்
மறைந்திருந்த
கத்திக்கு மட்டுமே
தெரியும்.

அந்த கழுத்தை
அறுத்த நொடியில்
வழக்கத்திற்கு மாறாக
அவனது விழிகள்
தேவ சாந்தம் கொண்டன
என்பதும்…

நன்றியோடு அவன்
என்னை நேசித்தான்
எனவும்.

இறுதியாக அவன்
உகுத்த நீர்
விடுதலைக்கான
ஆதி உணர்வு எனவும்..

ஆம்..

அவனை நான்தான்
கொன்றேன்.
…,

இன்றாவது..
இனிமேலாவது..

நான்
உறங்குவதற்காக..