20882164_335942676830607_5908594693985192965_n

 

என் அம்மாவிற்கு…

எது நடந்தாலும்…எந்த தவறை செய்தாலும்..சீரணிக்கவே முடியாத என் முட்டாள் தனங்களால் உன் வாழ்வே செல்லரித்துப் போனாலும்…

என்னை வெறுக்க முடியாமல் நேசித்தே ஆக வேண்டிய பெருஞ்சாபம் உன் வாழ்நாள் விதியாக நேர்ந்தமைக்கு வருந்துகிறேன்.

நீதான் அம்மா இதற்கும் காரணம். உன் பேரன்பின் வானம் தாண்டி என் விழிகள் பயணித்ததில்லை.உன் கையை விட்டு நானாக நடக்க முயன்ற போதெல்லாம் தடுக்கி கீழே விழுந்திருக்கிறேன். உன் மடியில் தலை வைக்காமல் தூங்கிய போதெல்லாம் சாத்தான் கனவுகளால் சபிக்கப்பட்டு இருக்கிறேன்.

இருண்டக் குழிகளுக்குள் நானாக விழும் கணங்களில் எல்லாம் எனக்குத் தெரியும். உன் கரம் நீண்டு வந்து எனைக் காக்குமென.
அதற்காகவே…அந்த நம்பிக்கையிலேயே நான் குழிகளுக்குள் மீண்டும் மீண்டும் விழுகிறேன்.

இம்முறை கொஞ்சம் அதிகம் என நான் உணர்கிறேன். உன் மீது என் மன அழுத்தத்தை எல்லாம் கொட்டினேன். வார்த்தை வாணலியில் உன்னை வதக்கி சிதைத்தேன். எல்லாவற்றையும் விட நீ பார்த்து கனவு கண்டு உருவாக்கிய நான் நானாகவே அழிந்துக் கொண்டேன்

என் அழிவை உன்னால் தாங்க முடியாமல் தவித்தாய்.. ஆயுதங்கள் அனைத்தையும் பயன்படுத்தினாய்..பிறகு ஆயுதங்கள் அனைத்தும் தீர்ந்த கர்ணணாய் சரிந்து அமர்ந்தாய்.. அலுத்துப் போனாய்.

யாருமற்ற வெளியில்… தனித்து விடப்படும் நேரமும் வந்தது. சூன்ய வெளியில் தனித்து கண் மூடி அமர்ந்திருந்த போது தாங்க முடியா வலி. ஏமாற்றம்.

நடந்த சூதாட்டத்தில்…நம்பிக்கைகளை வைத்து விளையாடிய தருமனானேன். உன்மத்ததில் எல்லாவற்றையும் இழந்து மீண்டும் உன்னையே தேடி வந்தேன்.

நீயோ என் அழிவினால்.. ஏறக்குறைய அழிந்திருந்தாய். என் கண்களை கண்டாய். குற்ற உணர்வும், தாங்க இயலா இழப்பும் கண்ணீராய் அதில் தேங்கி நிற்க…ஒரு நொடியில் எழுந்து நின்றாய்..

என் தலை கோதி சரி செய்தாய்.

ஒரே ஒரு கேள்வி கேட்டாய்.

இந்த நிலைக்கு யார் காரணம்..எது காரணம்..

நான் தாம்மா காரணம். நான் மட்டுமே காரணம்.

என்னுடைய பேரன்பின் சூடு பல ரோஜாக்களை பொசுக்கின. எல்லாம் என்னை விட்டு போகக்கூடாது என்கிற அழுத்தம் எல்லாவற்றையும் அழித்தன..

மனதார மன்னித்து விடு…என

பேசிக்கொண்டே போன என் வாயை பொத்தினாய்…

நானிருக்கிறேன் …வா…போகலாம் என்றாய் மீண்டும்..

கலங்கிய கண்களுடன் நின்ற என் தலை கோதினாய்..

பெரு மழை பெய்யத் தொடங்கியது.

-மணி செந்தில்