21369170_340527796372095_3352100717578590891_n

 

அமைதியாய் நகர்ந்துக் கொண்டிருந்த எங்கள் மகிழுந்தில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள முடியவில்லை. அந்த நிலவியல் வெப்பமும், முந்திரிக்காடுகளும் எங்களுக்குள் ஏதோ பல செய்திகளை சொல்லி வந்தன.

சுடு வெயிலில் வெளுப்பேறி இருந்த அந்த நிலவியல் தமிழ் நாட்டுக்கு சற்றே வித்தியாசமானது. முந்திரிக்காடுகள் இரு புறமும் அடர்ந்திருக்க தமிழக வரைபடத்தில் இருந்தே தனித்திருக்கிறது அந்த சிற்றூர். அந்த நிலத்தில் நிலவும் அந்த வெப்பத்தை வெயில் என்றெல்லாம் அர்த்தப்படுத்தி விட முடியாது. ஒரு அடர் மழை போல அந்நிலத்தில் வெயில் அரூவ திரவமாய் ஊற்றிக் கொண்டிருந்தது.

அரியலூர் மாவட்டம். அதிகம் கல்வியறிவு அற்ற எளிய ஒடுக்கப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழ்கிற பகுதி. மழை காணா கரிசல் பூமி போல இது வறண்டுப் போன முந்திரிக் காடு. அரியலூர் மாவட்டம் செந்துறை என்கிற சற்றே பெரிய கிராமத்திற்கு அருகில் தான் குமிழுர் என்கிற அந்த சிற்றூர் ஒரு தனித்தீவிற்கு செல்வது போல தனிச்சாலையாக பிரிந்து தனித்துக் கிடக்கிறது.
அந்த வறண்ட பூமியில் தான் அனிதா பிறந்திருக்கிறாள். ஒடுக்கப்பட்ட குடும்ப பின்புலம். சிறுவயதிலேயே புற்று நோயால் தாயை இழந்த துயரம். வீட்டின் அனைத்து வேலைகளையும் செய்தே தீர வேண்டிய பெண்களுக்கே உரித்தான அனைத்து அழுத்தங்கள்.

ஓடு சரிந்த வீடு. கழிவறை கூட இல்லாத ,எவ்வித அடிப்படை வசதியும் இல்லாத வறுமை. அங்குதான் பூத்திருக்கிறது அனிதா என்கிற அந்த தேவ மலர்.

என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாத வறுமையும்,துயரமும் கொடும் கூரையென போர்த்தி இருக்கிற குடும்பச்சூழல்.

 

21314306_340528183038723_5780959351638067232_n

 

 

பிறந்த பிள்ளைக்கு ஊரில் பெரிய பள்ளியில் அட்மிசன் வாங்க பிறந்தநாள் அன்று முதல் அலைந்து, ப்ளே ஸ்கூலில் சிபாரிசு வாங்கி சேர்த்து, கேட்ட லட்சத்தை லட்சியம் செய்யாமல் செலுத்தி, டை கட்டி, முதுகில் பை மாட்டி ஏசி காரில் சென்று இறக்கி, டாடி மம்மியை மழலையாய் கேட்டு, ரெயின் ரெயின் கோ அவே பாட வைத்து, சிக் பஞ்ச் –ல் சிக்கன் சாப்பிட்டு, பாடத்திற்கு ஒரு டியூசன் என பயிற்றுவித்து நீட்டுக்கென நீட்ட ரூபாய் கட்டுக்களை இப்போதிலிருந்தே அடுக்கி வைக்கிற அடுக்குமாடி குடும்பம் அல்ல அது.

அனிதாவின் வீட்டைப் பார்த்தால் தான் தெரியும் அவளது அருமை.

 

 

 

21270793_340527833038758_7411614832373543784_n

 

 

21192796_340527903038751_1219323111100309993_n

அதுதான் சமையலறை. அதுதான் படிப்பறை, அது தான் படுக்கை அறை. அந்த எட்டுக்கு எட்டு இடம் தான் எல்லாமும். அனிதாவின் வீடு எங்கே கேட்ட எங்களுக்கு அடையாளம் காட்டிய ஒரு அம்மா சொன்னார். நாங்க அவள டாக்டரம்மா –ன்னு தான் கூப்பிடுவோம்.

அப்படி ஒரு வைராக்கியத்தை வைரமாய் தன் ஆன்மாவில் அழுத்தி பதிந்து வைத்திருந்து இருக்கிறாள் அவள். எந்த புற்றுநோயால் தன் தாயை இழந்தோமோ அந்த புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் ,தன் தாயைப் போல யாரும் சாகக்கூடாது, தன்னைப்போல யாரும் தவிக்கக்கூடாது என்கிற லட்சியம் எளிய வீட்டில் பிறந்த அவளுள் வலிமையாய் எரிந்துக் கொண்டு இருந்தது.

வலி தாங்கினாள். குடும்பத்தை சுமந்தாள். இரவுப் பகல் பாராது படிப்பு. அது ஒரு வகையான தவம் போல… தியானித்து கனவில் சுமந்த லட்சியத்தை மெய்யாக்க மெய் வருத்தி உழைத்தாள். இயற்கை அந்த எளிய பெண்ணிடம் இயல்பாகவே இனியவற்றை சேர்த்திருந்தது. களங்கமற்ற விழிகள், உழைப்பின் உறுதியால் கண்ட நினைவாற்றல், பொறுமையின் மொழி என அறியப்படாத ஊரில் தெரியாமல் பூத்திட்ட தேவதை அவள்.

தேசம் மாறி பிறந்ததால் தேகம் செத்து கிடக்கிறாள்.

சத்தற்ற உடல் என்றாலும் லட்சியத்தில் கொண்ட பற்றுதான் அவளை இன்று அவளை செத்து கிடக்க வைத்தது.

நம்பினாள். உழைப்பை நம்பினாள். உயிர் உருக்கி உழைத்துப் படித்தால் மண் மூடிய அன்னையை போல.. இன்னொருவரை இழக்காமல் காப்பாற்றலாம் என களங்கமற்று நம்பினாள். அவள் உழைத்தது போல கிடைத்தன மதிப்பெண்கள்.

1176/1200 என்பது சாதாரண எண்கள் அல்ல. சரிந்துப் போன கூரையில் இருந்து உறுதிக் கொண்ட உழைப்பால், கண் விழித்து, கனவு கண்டு நினைவாக்க தன்னையே உருக்கிக் அடைந்த ஒரு தனி மனித சரித்திரம்.

இயற்பியலில் 200, கணிதத்தில் 200, உயிரியியலில் 194,வேதியியலில் 199 என சிகரங்களைத் தொட்டு தனது கனவினை நிறைவேறி விட்டதாக பூரித்து நின்றாள்.
இந்திய வரைபடத்தில் வராத, தமிழக நிலவியலில் லென்சு வைத்து தேடினாலும் அகப்படாத சிற்றூரில் பிறந்து ,முந்திரிக்காடுகளில் பாம்பு கடிக்குமோ, பூரான் கடிக்குமோ, இல்லை.. ஏற்கனவே செத்துப் போனாளே நந்தினி போல நாசமாக்கப்பட்டு விடுவோமோ என்றெல்லாம் நடுங்கி, கழிவறைக்கு ஒதுங்க வழியற்று , எதுவுமே அற்று… உழைப்பை மட்டுமே கொண்டு அந்த எளிய பெண் பெற்றதை என்னால் மதிப்பெண்கள் என்றளவில் மட்டும் குறுக்க முடியவில்லை.

பெரும்பாலும் மின்சார வெட்டு, தண்ணீர் பற்றாக்குறை, மழையற்ற,வளமற்ற பூமி என எந்த தடைகளும் லட்சிய உறுதிக் கொண்ட அனிதாவின் விழிகளுக்கு முன்னால் நிற்க முடியவில்லை.

அப்போதுதான் இடி விழுந்தது போல வந்து விழுந்தது நீட் தேர்வு பற்றிய அறிவிப்பு. அதிர்ந்துப் போனது அந்த சின்ன இதயம். அதென்ன நீட், வேற சிபிஎஸ்ஸி பாடமாமே…அதெலிருந்து தான் கேள்வி கேப்பாங்களாம் என்றெல்லாம் தகவல் வர வர.. இடி விழுந்த மல்லிகைச்செடியாய் மனம் துவண்டு போனாள்.

கேள்வித்தாளுக்கும், படித்த படிப்பிற்கும் தொடர்பே இல்லையே ..மதிப்பெண் வரலையே .. என மனம் நொந்து கவலைப்பட்டவளுக்கு வந்தது சாத்தான் ஓதிய வேதமாய் வந்தது நிர்மலா சேதுராமனின் பொய் நாடக அறிவிப்பு. ஓராண்டாவது விலக்கு உண்டு என்று போகிறப் போக்கில் அள்ளி விட்டதில் ஆறுதலாகிப் போனாள் அனிதா. தமிழக அரசும் நாடக காட்சிகளை தொடர நம்பித்தான் இருந்தாள் தங்கை.

ஆனால் பணம் இருப்போரும், மருத்துவ தொழிலை பரம்பரையாக பணத்தை வைத்து விலைக்கு வாங்கியவர்களும் புகழ்பெற்ற காங்கிரசு தலைவர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் மூலம் வழக்குப் போட வாடிப் போனாள் . காட்சியில் தான் பாஜகவும்-காங்கிரசும் தான் எதிரி. ஆனால் பாஜக எடுக்கக்கூடிய நிலைப்பாட்டிற்கு ஆதரவாக சிதம்பரம் மனைவி நளினி. இங்கே எவனும் எதிரி அல்ல. பணமும் ,அதிகாரமும் இல்லாத நாம் தான் உதிரி என உணர்வதற்குள் உலர்ந்துப் போனாள் அனிதா.

இருந்தும் ஆன்மாவில் ஏதோ புள்ளியில் நம்பிக்கை ஊறிக் கொண்டே இருந்தது.
அத்தோடும் அவள் விட வில்லை. ஓடினாள்..டெல்லி உச்சநீதிமன்றம் வரை. அதிகாரமும், பணமும் பவனி வரும் உச்சநீதிமன்றத்தில் உள்ளங்களை தேடி அலைந்து சோர்ந்தாள் அனிதா .

உச்சநீதிமன்றமும் கை விட.. நாற்புறமும் கதவுகள் அடைக்கப்பட்ட சூழலில் நட்டாற்றில் விடப்பட்ட நலிந்த ரோஜா போல உடைந்தாள் தங்கை.

சோர்ந்து ஊர்த் திரும்பிய அவளை பிவிஎஸ்ஸி சேர சொல்லி அனைவரும் சொல்ல கனவு ரணமாய் சுமக்க பிணமாக மாறத் தொடங்கினாள்.

அதிகாரமும், சட்டமும் கைக் கோர்த்து தன் கழுத்தை நெறித்து கொலை செய்துக் கொண்டிருப்பதை தனது சலனமற்ற விழிகளால் அனுமதிக் கொண்டிருந்தாள் தங்கை.

நொடிக்கு நொடி ஒரு உடை மாற்றும் மோடிக்கு.. இங்கே ஒரு தேசிய இனத்தின் அறிவுப்பெட்டகமாய் உருவாக வேண்டியவள் உயிரை விட தயாராகி வருகிறாள் என தெரிந்திருக்காதுதான்.

கனவு கானலாகிப் போன பின்னர், உயிராய் சுமந்த லட்சியம் அலட்சியம் செய்யப்பட்ட பின்னர் இனி இருந்தும் பிணம் தானே என ரணம் தாங்கி தூக்கில் தொங்கினாள் தங்கை அனிதா..

என்னிடம் ஒரே ஒரு கேள்வி இருக்கிறது…
இதற்கு மேல் அவள் எவ்வளவு தாண்டா மதிப்பெண் வாங்க வேண்டும்…?

நாங்கள் சென்றிருந்த போது அவள் சவப்பெட்டியின் மீது அவள் கனவான ஸ்டெதஸ்கோப் வைக்கப்பட்டிருந்தது. குற்ற உணர்வும், அதிகாரத்தின் மீதான கோபமும் வெடித்து உடைய சென்ற நாங்கள் கதறி அழுதோம்.

யாருக்கும் அங்கே ஆறுதல் சொல்ல ஆளில்லை. ஏனெனில் ஒரு தேசிய இனத்தின் ஆறுதலும், தேறுதலும் தான் அனிதாவாய் அங்கு செத்துக் கிடந்தன.

அங்கே பல முகங்கள் தெரிந்தன. சொந்த தங்கையை இழந்த அண்ணனாய் வெடித்த சிதறிய அண்ணன் சீமானையும், அண்ணன் அமீரையும் எங்களால் யாராலும் தடுக்க முடியவில்லை. இயக்குனர் அண்ணன் கவுதமன் அதை போராட்டக்களமாக்கி அனிதாவின் கனவை காப்பாற்ற போராடிக் கொண்டிருந்தார். வரும் தலைவர்களை ஏற்று அதை ஒழுங்குப் படுத்திக் கொண்டிருந்தார் விசிக தலைவர் அண்ணன் திருமா. தினகரனும் குழப்பங்களுக்கு நடுவே வந்துப்போனார்.

இதற்கு நடுவே சில இளைஞர்கள் தண்ணீர் தொட்டியிலிருந்து கீழே குதிக்கப் போகிறோம் என்றெல்லாம் பீதி கிளப்பிக் கொண்டிருந்தார்கள்.

எதனால் எதை நியாயப்படுத்தப் போகிறோம்..அதுவும் அனிதாவின் மரணத்தை… மத்திய அரசும், அதன் எடுப்பிடி எடப்பாடி அரசும், உள்ளமற்ற நீதிமன்றமும் சேர்ந்து செய்த மாபாதக படுகொலை ஒவ்வொரு தமிழனின் உள்ளத்தையும் ரணமாக்கி வைத்திருக்கிறது. இனி எரியும் நெருப்பிற்கு யார் பொறுப்பு… இல்லையேல் இதுவும் கடந்துப் போகும்..இன்னமும் கடந்துப் போகும், கடைசியில் கடந்துப் போய் நாமும் பிணமாய் கிடந்து போவோமா என்றெல்லாம் ஏராளமான கேள்விகள் எங்களுக்குள்.

அந்நேரத்தில் இதில் மாபெரும் கொடுமை என்னவென்றால்.. கல்வி உரிமைக்காக களப்பலியான அனிதாவை ஒரு சாதியாக காட்ட முயல்வதும், அவளை சாதிப்பார்த்து சாவுக்கு கூட வராமல் ஒதுக்கி வைத்து அரசியல் செய்வதும் மனதை அறுக்கின்றன.

அனிதா எந்த சாதியும் அல்ல. அவள் அனைவராலும் வழக்கம் போல நம்ப வைக்கப்பட்டு வாக்குறுதிகளால் வஞ்சகம் செய்யப்பட்டு, கழுத்தறுக்கப்பட்ட முத்துக்குமார், செங்கொடி,விக்னேசு என்கிற ஏமாளித்தமிழர் வரிசையில் இன்னொரு தமிழச்சி. அவ்வளவே.

உலகையே பதற வைக்கும் ஒரு மரணம். பக்கத்து தெருவில் உரக்கப் பாட்டு போட்டு ஏதோ ஒரு விழா. வெறுத்துப் போனது மனம். சாதியாய் கிடந்து சாதியாய் அழிவானே தவிர ஒரு போதும் இனமாக திரள மாட்ட மாட்டானா தமிழன் என்கிற கேள்வி அனிதா போலவே தூக்கில் தொங்கிக் கொண்டு இருக்கிறது.

இறுதியாக.. பல களங்கள் கண்ட தளபதிகள்(?), தளகர்த்தர்கள்(?), வாழும் அண்ணாக்கள், என்றெல்லாம் கரை வேட்டி எல்லாம் மொடமொட வேட்டிச்சட்டையில் ..சட்டைப்பையில் கட்சிப்படம் வைத்து காட்சி காட்டும் நாடகக்காரர்கள் வர மறுக்கிற சோக முகத்தோடு வலம் வர தொடங்க ..களை கட்டியது அந்த எளிய அப்பாவி தங்கையின் மரணம்.

நீட் தேர்வு கொண்டு வந்தது காங்கிரசு அரசுதானே..அப்போது கூட்டணியில் குதுகலாமாய் கைகோர்த்து நின்றது நீங்கள் தானே.. நீங்களே முன்னால் போகிறீர்களே என எல்லாருடைய மனசாட்சியும் ஊமையாய் கேட்க… அமைதியாய் படுத்துப் ஊர்வலமாய் போகத் தொடங்கினாள் தங்கை.

நீட் தேர்வு ரத்தாகும் வரை தங்கையின் உடல் எடுக்கக்கூடாது என இளையோரும்,மாணவர்களும் கொதிக்க.. வழக்கம் போல் சாமர்த்தியமாய் வந்து குதித்தன சமரசங்கள்.

இறுதியில் கனவை சுமந்த உடல் இடுகாட்டை நோக்கி நகர…

வானம் மெல்லத் தூறிக் கொண்டிருந்தது.

போய் வா..தங்கையே..
உன் கனவுகளை தின்ற
சாத்தான்களை சரியான
நேரம் பார்த்து பழி தீர்ப்போம்.
அன்றைய தினம் தான்
உன் திரு உரு படத்தின்
முன்னால் மானத்தோடு
விழி திறப்போம்..