22008461_348378505587024_1053921957577664683_nஎரி வெயிலுக்கு

மத்தியிலும்..

நீண்ட தாழ்வாரத்தின்
முன்னால் படிந்திருக்கும்
இள நிழல் போல..

என் விழிகளில்
மென் குளிராய்
படர்கிறாய்.

உன்னை இமைக்காமல்
பார்க்கிற நொடிகளில்..
நான் காற்றாய் உருக் கொண்டு
மல்லிகைத் தோட்டங்களில்
பூக்களை உதிர்ப்பவனாக
மாறித் திரிகிறேன்..

காட்சிக்கும்…
பார்வைக்குமான
இடைவெளியில்..
எப்படியும்
இழையத் தொடங்கி
விடுகிறது..
மழை நாளொன்றில்
நாம் இருவரும

பகிர்ந்து பருகிய
ஒரு பாடல்.

ஓயாத தூறல் போல
இசை மொழியோடு
ஏதேதோ சொல்லிக்
கொண்டே போகிறாய்..

உன் சொற்களை தவிர்த்து
கொண்டே…
அசையா தேர் போல
என்னை நோக்கி இருக்கும்
உன் விழிகளின்
நீர் வீழ்ச்சியில்..
தலை நுழைத்து
மெய் நனைக்கிறேன்..

சட்டென என்னை
நோக்கி ..சலனமற்ற குளத்தில்
வீசப்பட்ட கல்லாய்..

இப்போ நான் என்ன
சொன்னேன்… எங்கே சொல்லு
என தேர்வு
கேள்வியொன்றினை
மொழி உறைந்திருக்கும்
என்னிடம்
கேட்கிறாய்…

மெளனித்து புன்னகைக்கும்
என்னிடத்தில் ..
நினைவுகளை ஸ்வரங்களாய்
தேக்கி இருக்கும் ஒரு
வயலின் இருக்கிறது…
வாசித்து காட்டவா என்கிறேன்..

முகம் சிவக்க
நீ ஒரு ராட்சஸன்
என்று சொல்லி ரகசியமாய்
புன்னகைத்ததில்
உன் பிம்பம்
படர்ந்திருந்த அந்த
கண்ணாடியில் பனி பூத்தது.

இப்போதும் சொல்வேன்.
நீ பேசிக்கொண்டே இரு…
நான் பார்த்துக் கொண்டே
இருக்கிறேன்..

ஏனெனில்..
நீ மழை.
கேட்பதை விட…..
பார்ப்பது சுகம்.
நனைவது அதை
விடவும்…

………

https://youtu.be/1gtGQc8Zm3M