21192660_340527729705435_3007562946593908183_nஅந்த தூக்குக்கயிறு
கனவின் வெப்பத்தை
சுமந்து வாறே
இன்னும் ஊசலாடிக்
கொண்டு தான்
இருக்கிறது…

காற்றின் சிறகுகளோடு
பின்னி..
எரிதழலினுடாக கரைந்துப்
போன அனிதா இன்னும்
குரல் வளை நெரிய
இருமிக் கொண்டுதான்
இருக்கிறாள்..

துயர் மிக்க பின்னிரவின்
கடைசித் துளி கரைவதற்கு
முன்னால் சற்றே கவனித்துக்
கேளுங்கள்..

குரல் வளை ஒன்று
நொறுங்கி உடைந்து
கானலாகிப் போன
அவள்
கனவுகளின் கேவல் ஒலி
உங்கள் ஆன்மாவை
தீண்டலாம்..

நள்ளிரவுகளில் விழி எரியும்
வெப்பத்தை
சுமந்து புத்தகங்களின்
பக்கங்களை அவள்
மென் விரல்களால்
புரட்டும் ஒலி குளிர் காற்றால்
போர்த்திக்கிடக்கும்
உங்கள் செவிகளில்
முணுமுணுப்பாய் முனகலாய்
கேட்கக்கூடும்.

ஓடுகள் சரிந்த
வீட்டின் கூரையை
ஊடுருவி பாதரச
பிம்பமாய் மிதந்து
வருகிற
தேவதையின்
கண்ணீர் துளி
விழி மூடி உறங்கும்
உங்கள் விழிகளில் விழலாம்..

விழுந்த சூட்டினில் சுக
கனவுகளோடு கிறங்கிக்
கிடக்கிற உங்கள் இமைகளில்
தீ எரியலாம்…

ஆனால் நாம் இதற்கெல்லாம்
அசரப் போவதில்லை.

வலி மிகுந்த நினைவு
என்றொரு பாலையை
கடக்க மறதி ஒட்டகங்கள்
நம் முன்னால் காத்துக்
கிடக்கின்றன..

எதையும் கடப்போம்.
எதையும் மறப்போம்.
மீறி துளிர்த்தால்
பிக் பாஸ் உலகத்தில்
ஒளிந்துக் கொள்ள
நமக்கு ஓரிடம் உண்டு.

இன்னும் உறுத்தினால்..
எவனையாவது திட்டி
சமூகக் கடமை
ஆற்றி விட்ட அக திருப்தியை
முகநூலின் முட்டுச்சந்தில்
தேடி திரியலாம்..

இன்னும் ஏதேனும்
எட்டிப்பார்த்தால்
எடப்பாடி:தினகரன்
கமல்:, ரஜினி
என்றெல்லாம் யோசித்து
சரிந்துக் கொள்ள
சாக்கடைகள் நமக்குண்டு..

95 வயது முதியவர்
இன்னும் இருக்கிறரா
ஜெ இட்லி சாப்பிட்டாரா
என்கிற சரித்திரக்
கேள்விகளில் நமது மனதை
தொலைக்கலாம்….

என்ன செய்யலாம் ..
இன்றைய சூடான செய்தி
எங்கிருக்கிறது என நோண்டி
நொங்கெடுக்க..
இருக்கவே
இருக்கின்றன ஏற்கெனவே
முடிவுகள் தீர்மானிக்கப்பட்ட
விவாத அரங்குகள்.

இவர்கள் விவாதிக்க
வேண்டுமெனில்.
தினந்தோறும் அனிதா
தூக்கில் தொங்கியாக
வேண்டும்..

என்ன செய்வது..

கனன்று எரிந்து தணிந்திருக்கிற
சாம்பலின் ஊடாய் அனிதா
புன்னகைக்கிறாள்.

நம்மைப் பொறுத்த வரை
என்றோ அவள் மரித்துப் போனாள்..

அவளோ மரித்தது நானல்ல.
என்னை
மறந்து ..திரியும் நீங்களே
இறந்துப் போன பிணங்கள்
என புன்னகைக்கிறாள்.

இன்னும் தூக்குக் கயிறு
ஊசலாடிக் கொண்டே
சொல்கிறது..

பிணங்களே…நீங்கள்
என் மீதேறி தொங்கி
என்னை இழிவாக்காதீர்கள்..

நேரடியாக சுடுகாட்டில்
சென்று படுத்து விடுங்கள்..

ஏனெனில் அதுதான்
உங்கள் நாடு..
பிணங்களுக்கான வீடு.

ஹம்ரா தேஷ் கே…
குச்சு குச்சு ஹோத்தா ஹை..