அந்த கோபுரம்
அவ்வளவு
எளிமையானதல்ல..

விழி வழியே
அளந்து விட
விண்ணை
உரசும்
அதன் உயரம்
அனுமதித்ததில்லை..

மேனி முழுக்க
சிற்ப எழில்
பூசி நிற்கும்
திமிர்
பல உளிகளின்
வலி தாங்கி
உருவான வசீகரம்.

நிலாவை உடலில்
போர்த்தி
சுடர்விட்ட ஒரு
இரவில் தான்..
அந்த கோபுரத்தை
கண்டவர்கள்..
அது வெறும்
கற்களால் ஆனது
அல்ல..
கண்கள் முழுக்க
சுமந்த கனவின்
கனல் என
கண்டார்கள்..

வானெங்கும்
சிறகு விரித்து
இறகு கவிதை
எழுதும் பறவை
கவிஞர்களுக்கு
அந்த கோபுரம் தான்
இராஜ மாளிகை..

கால வீதியில்
கணக்கில் ஒன்றாய்
சட்டென
கடந்துப் போக
அந்த கோபுரம்
ஒற்றையடிப்பாதை
அல்ல..
பூரித்து நிற்கும் கடல்.

குப்பைகள்
காற்றில் மிதந்து
கலசத்தை உரசிய
போதும்..
ஆழ்ந்திருக்கும்
அதன் மெளனம்
சொற்கள் அற்று அல்ல..
உரசுபவை வெறும்
குப்பைகள் எனக் கற்று..

வார்த்தைகளை வார்த்து..
வாக்கியங்களை கோர்த்து..
இழி சொற்சங்கிலிகளால்..
அந்த கோபுரத்தை
சரித்து விடலாம் என
நினைப்பவர்களுக்கு..

தங்கப் பக்கங்களில்
எழுதப்படும் ஒரு
யுகத்தின் வரலாறு
கம்பீரமாக அறிவித்துக்
கொண்டே இருக்கிறது..

அந்த கோபுரம்
அவ்வளவு
எளிமையானதல்ல..