பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: என் கவிதைகள்.. Page 2 of 4

தேன் மொழி

நிறைவேறி விட்ட உறவில்

தேன்மொழி

மரணம் அடைகிறாள்.

நிறைவேறாத

ஏக்கத்தில் தான்

தேன்மொழி வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

உண்மையில்

தேன்மொழியை தேடி

அலைபவர்கள்

காணும் போது

தொலைத்து விடுகிறார்கள்.

சொல்லப்போனால் தொலைப்பதற்காகவே

கண்டெடுக்கப்படுகிறவள் தான்

தேன்மொழி.

மீண்டும்

மீண்டும்

அலைகள்

கரைகளை நோக்கி

வந்து கொண்டு தான்

இருக்கின்றன.

ஆனால்

செந்நிற அந்தி

ஒன்றில்

கைநழுவிப்போன

அந்த ஒரு அலை

திரும்பி வருவதே இல்லை.

நினைவின்

உயிர் கால்

நனைத்து

ஒருபோதும்

திரும்பி

வராமல் போன

அந்த அலை தான்

தேன் மொழி.

❤️

அல்லாஹு அக்பர்

நீ என்னை
ஆக்கிரமிப்பதற்காகவும்,
கட்டுப்படுத்துவதற்காகவும்
வீசும் ஆயுதங்களை
கம்பீரமான
எனது கலகக் குரல் மூலமாக
அடித்து நொறுக்குவேன்.

நான்
விடுதலையின் காற்று.
எதிர்ப்பின் ஏகாந்தம்.
உன் கட்டுபாட்டுக்
கம்பி வேலிக்குள்
அடங்கி விடமாட்டேன்.

ஓங்கி ஒலிக்கும்
எனது முழக்கம்
என்னைப்போலவே,
உன்னை எதிர்த்துப்
போராடி உன்னால்
உயிரோடு
கொளுத்தப்பட்ட
எனது முன்னோரின்
சாம்பலிலிருந்து
கிளர்ந்து எழுந்தது.

நான் யாராக இருக்க வேண்டும் என்பதை
நான் தீர்மானிப்பதை விட
நீ தீர்மானிக்கக் கூடாது
என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

நான் யார் என்பதை
நீ தீர்மானித்து
வைத்திருக்கும்
எல்லா வரையறை
சட்டகங்களையும்
கிழித்து எறிவேன்.

எனது உடை
உன் அதிகார
பாசிச உச்சங்களின்
உள்ளத்தை நடுங்கச் செய்கிறது என்றால்
அதை நான் ரசித்து
அணிவேன்.

எனது பண்பாட்டின்,
எனது வழிபாட்டின்,
கற்றைப் புள்ளிகளை
உன்
கைப்பிடி அதிகாரத்தால்
ஒற்றைப் புள்ளியாக
வரைய துடிக்கும்
உனது வரலாற்று
வன்மத்தை
எகிறி மிதிப்பேன்.

என்னை அச்சுறுத்துவதாக
எண்ணி
கூட்டம் கூடி முழங்கித்
தீர்க்கும் உனது அச்சம்
கம்பீரமான எனது
ஒற்றை அதட்டலால்
அடங்கி ஒடுங்கும்.

நீ கடவுளைச் சொல்லி
என்னை கலங்கச்
செய்வாய் என்றால்,
நானும் கடவுளை முழங்கி
உன்னை நடுக்கமுறச்
செய்வேன்.

இன்னும் மீறி
அழுத்தினால்,
எல்லோரும்
ஓர் குரலில்,
ஓர் உடையில் ,
உரக்கச் சொல்வோம்.

“அல்லாஹு அக்பர்”.

உறையாத நினைவோடை.

ஏதோ நகர்த்தலில் என்றோ , யார் பெயரிலோ

சேமித்து வைத்திருக்கும்

உன் அலை பேசி எண்ணை

கால நழுவலின் பிசகிய நொடி ஒன்றில்

என்னை அறியாது பார்த்துவிட்டேன்.

அது ஒரு குழந்தையைப் போல

ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தது.

எப்போது வேண்டுமானாலும் விழித்து விடுகிற அபாயத்துடனும்,

அலறி காட்டிக் கொடுத்துவிடும் ஆபத்துடனும்.

ஆனாலும் ஆழ்ந்து தூங்கும்

அந்த குழந்தையின் முகத்தில் தான் எத்தனை அழகு..??

❤️

ஆன்மாவின் வண்ணத்துப்பூச்சி

விடுபடவே முடியாத கால சுழற்சியின்

திடுக்கிடும் கணமொன்றில்

உலராது உறைந்திருக்கும்

உந்தன் முகம்..

ஒரு இசைக்குறிப்பு போல

என் இதயத்தில் ஆழ்ந்து கால நேர பேதம் அறியாமல்

ஒலித்து கொண்டே இருக்கிறது.

நிறைவேறாத கனவின்

தணியா தாகத்தை

பொன் மகரந்தங்களாக சுமந்து திரிகிறது

என் ஆன்மாவினுள் ஒரு வண்ணத்துப்பூச்சி.

❤️

மணி செந்தில்

35Raju Janu, மு.முகம்மது சர்வத்கான் and 33 others1 comment1 shareLikeCommentShare

1

குமிழி

வன் காற்றின் சிறகு மோதினாலும்

சிதையாமல்சற்றே விலகி

சிணுங்கிக் கொண்டே

உயர உயர பறக்கிறது

நம்பிக்கை முகத்தின்

புன்னகைக்குமிழி.

❤️

என்னிடம் ஒரு கதை இருக்கிறது.

❤️

என்னிடம் ஒரு கதை இருக்கிறது.

அந்தக் கதை என்னை பற்றி பேசும்

.உங்களையும் பற்றி பேசக் கூடும்.

உங்களுடையது என நீங்கள் உணரும்போது

கதை என்னுடையதாக இருப்பதை

நீங்கள் மறப்பீர்கள்..

என்னிடம் ஒரு கதை இருக்கிறது.

அந்தக் கதையில் ஒரு காடு இருக்கிறது.

அந்தக் காட்டில் தான் நான் இருக்கிறேன்

.நீங்களும் இருப்பீர்கள்.

அந்தக் காட்டில் நீங்கள் இருப்பதை உணரும்போது

நான் இருப்பதை மறப்பீர்கள்.

என்னிடம் ஒரு கதை இருக்கிறது.

அதில் வெளிறிய மதிய நேரம் ஒன்று இருக்கிறது.

அப்போது நான் எதுவும் செய்யாமல்

எனக்கு முன்னால் இருக்கின்ற

ஜன்னல் கண்ணாடிக்கு அப்பால் இருக்கிற

வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

நீங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

ஒருவேளை நான் பார்த்துக்கொண்டிருப்பது

உங்களுடைய வானம் என்று

உங்களுக்கு கோபம் வரக்கூடும்.

என்னிடம் ஒரு கதை இருக்கிறது.

அதில் சில நட்சத்திரங்களை கொண்ட

ஒரு இரவு இருக்கிறது.

இரவில் நிலவு இருக்கிறது.

நிலவில் ஒரு கனவும் இருக்கிறது.

அதே கனவு உங்கள் விழிகளில் மிதக்கும்போது

அந்த இரவு உங்களுடையது என்று நினைத்து

நான் எட்டிப் பார்த்ததாக நீங்கள் ஆவேசம் அடைவீர்கள்.

என்னிடம் ஒரு கதை இருக்கிறது.

அதில் நான் விலங்காக உலவி

சக ஆன்மாவை உலரா மாமிசமாக

குதறி இருக்கிறேன்.

அதே கதையில் கடவுளாக கண்ணீர் ததும்பி

கருணை கொண்டு காயம்பட்ட மனதிற்கு

மயிலிறகு தடவி இருக்கிறேன்.

அதே கதையில் நீங்களும் விலங்காக உலவி,

கடவுளாக கசிந்து இருக்கிறீர்கள்.

என்னிடம் ஒரு கதை இருக்கிறது.

பல தோல்விகள். மிகச்சில புன்னகைகள்.

பல முறிவுகள்.சில தோள்கள்.

பெரும்பாலும் தனிமை.

காலியான மேசை.

எதுவும் இல்லாத கண்ணாடி கோப்பை.

அந்த மேசையில் என் எதிரே

நீங்கள் அமர்ந்திருப்பதாக நான் உணர்கிறேன்.

உங்களுக்கும் அப்படித்தான்.

நான்தான் அமர்ந்திருப்பதாக

நீங்கள் நம்புகிறீர்கள்.

ஆக..

நம்மிடம் ஒரு கதை இருக்கிறது.

அந்தக் கதையில் நாமும் இருக்கிறோம்.

❤️

நினைவின் பக்கங்களில் மலரும் பூ..

தூசி படர்ந்த புத்தக அடுக்கில்

தவறி விழுந்த கதைப் புத்தகம் ஒன்றின்

சட்டென விரிந்த திறந்த பக்கம் ஒன்றில்

ஒட்டியிருந்த பழுப்பேறிய மல்லிகைப்பூ

அதுவாகவே எழுதத் தொடங்கியது.

நினைவின் பக்கங்களில்.

அதுவரை எழுதப்படாத

அழகிய கதை ஒன்றை.

❤️

மணி செந்தில்.

83தமிழ வேள், M.I. Humayun Kabir and 81 others29 comments2 sharesLikeCommentShare

29

கணக்கு-வழக்கு

 

நின்று நிதானித்து
திரும்பிப் பார்த்தால்
நிறைவொன்றுமில்லை.
குறையொன்றுமில்லை.

கண் கூசும் வெளிச்சங்களுக்கு,
உச்சுக் கூசும் உயரங்களுக்கு,
புகழ் வார்த்தை தளும்புகிற
போதைகளுக்கு,
அடிமையாகிப்
போன கணக்கினைத் தவிர
மிஞ்சியது ஏதுமில்லை.

கடந்தவை நடந்தவை எல்லாம்
கணக்கிட்டால் நிகழ்ந்தவை தானே
என பெருமூச்சுயன்றி வேறில்லை.

முதுகில் உரசும் கத்திகளுக்கு இடையே..
நெஞ்சில் உறுத்தும் புத்திகளுக்கு இடையே..
விளையாடித்தீர்த்தும் பலனில்லை‌.
ஆயிரம் சூழ போகித்திருந்தாலும்
சத்தியமாய் சொல்கிறேன் நலனில்லை.

இது தானா வாழ்வு என்பதிலும்..
இது நானா – தாழ்வு என்பதிலும்..
இடைவெளி இல்லா பேதமில்லை.

நிகழுலக நினைவுகள்..

 

எங்கிருந்தோ வீசி
என் பின்னங்கழுத்தை
உரசி செல்கிற
காற்றில் உன் மெல்லிய
விரல்கள் ஒளிந்திருக்கின்றன.

எதிர்பாராமல் சிந்துகிற
எதிர்ப்படும் குழந்தையின்
புன்னகை ஒன்றில்
பொன்னெழில் பூசிய
உனது கன்னக்கதுப்புகள்
மலர்ந்து இருக்கின்றன.

அடர்மழை குளிர் இரவில்
கண்ணாடிக் கூண்டினில்
அசையும் மெழுகுச்சுடரில்
நிலா இரவொன்றில்
கிறங்கிப் போயிருந்த
உன் நீல விழிகளின்
வெப்பம் தகிக்கின்றன.

பின்னிரவின் ஒத்திசைவு
லயிப்பில் கேட்கும்
இளையராஜாவின்
பியானோ வாசிப்பின்
இடையே மலரும்
மெளனங்கள்
அடர்த்தியாய்
என் முகம் போர்த்தும்
உன் கேசத்தின் வாசனையை
வாசித்து காட்டுகின்றன..

அசையும் பேருலகில்
சலனமில்லா ஒரு நொடி
திடுக்கிடலில் கழுத்தில்
முகம் புதைத்து நீ சிந்திய
கண்ணீர் துளிகள்
கனக்கின்றன.

எப்போதும் தோள் தழுவி
உறங்கும் என் பால்ய
மகனின் அமைதியில்
உன் மடியில்
நான் அடைந்த
அந்த முன் அந்தி‌
உறக்கத்தின் சாயல்கள்
இயல்பாய் நிகழ்கின்றன.

இப்படியாக
உன்னை தொலைத்தும்
உன்னை அடைந்துமாக
அலைந்து கழிகிறது
இந்த நிகழுலகு.

வானவில் போராளிகள்..


—————————————-

அதோ
அவர்கள்
நடந்துப்
போகிறார்கள்..

உயிர் ஆழத்தில்
உதிரக்கனவாய்
உறைந்திருக்கும்
ஒரு தேசத்தின்
பாடலை
உரத்தக் குரலில்
பாடியவாறு
அவர்கள்
நடந்துப் போகிறார்கள்..

முன்னோர்
மூச்சடக்கி
புதைந்த மண்ணில்
இருந்து
மட்காமல்
துளிர்த்திருக்கும்
சேர்ந்திசைப்
பாடல் அது..

காரிருள் படர்ந்து
காலங்காலமாய்
நிலைத்த பனை
நின்ற படி எரிந்த
கந்தக நெடி
கருப்பையில்
கருவுற்ற பாடல்
அது..

பசும் ஈரம்
போர்த்திய
ஆதி வனத்தின்
முதிர் கொடி ஒன்று
முறிக்கப்பட்டப்போது
முதிர்ந்தெழுந்த
பாடல் அது..

மூதாதை
கால் சுமந்த
தாய்நிலம்
அப்பாடலை‌ கேட்கும்
போதெல்லாம்
தானாகவே
விம்முகிறது
என்றார்கள்..

அப்பாடல்
கேட்கும்
போதெல்லாம்..
வானெறி
குண்டுகளால்
இருட்புகை
மண்டிய
பொழுதுகளில்..
ஆதவன்
அதுவாகவே
உதித்து விடுகிறது
என்றார்கள்..

யுகயுகமாய்
அந்த இனத்தின்
மண் காக்க நின்று
விதையாய்
ஊன்றப்பட்ட
முதுமனிதர்களின்
பொருமிடும்
மூச்சுக்காற்று
அந்தப் பாடலைத்தான்
சுமந்து
உச்சி மலைகளில்
அலைகிறது
என்றார்கள்..

உற்சாகக் குரலோடு
சேர்த்து பிணைந்த
கரங்களோடு…
அதோ
அவர்கள்
பாடிக் கொண்டே
செல்கிறார்கள்..

குருதியாற்றின்
உதிரத்துளிகள்
தொல்குடி ஒன்றின்
விழிச்சிவப்பு
வெப்பத்தால்..
ஆவியாகி மேகமாய்
மிதக்க..

எந்த நொடியிலும்
உறுமி வெடிக்க
காத்திருக்கும்
அந்த
வானத்தின்
விளிம்பின்
உதித்திருக்கும்..

அந்த வானவில்
பாலத்தின் மீது
அதோ போகிறார்கள்..

அவர்கள் போகிறார்கள்.

மாவீரர்கள் போகிறார்கள்..

……..

வீரவணக்கம்.

 

https://youtu.be/qiiBJ3mpGtY

Page 2 of 4

Powered by WordPress & Theme by Anders Norén