[youtube]https://www.youtube.com/watch?v=i3p_5TTsZKM[/youtube]
[youtube]https://www.youtube.com/watch?v=ZgU3whHEbrE[/youtube]
[youtube]https://www.youtube.com/watch?v=i3p_5TTsZKM[/youtube]
[youtube]https://www.youtube.com/watch?v=ZgU3whHEbrE[/youtube]
[youtube]https://www.youtube.com/watch?v=SGkOiBMtatU&feature=youtu.be&fbclid=IwAR2JByq6aClRjFXnToLZVc9doUNsyFZmzV2mPiveKSblVqUOBC-xZX039R4&app=desktop[/youtube]
அண்ணன் மணி செந்தில் அவர்களின் இந்த படைப்பை,
ஆற அமர, உட்கார்ந்து படித்து ரசிக்க வேண்டி இருப்பதால் இப்பதிவெழுத அதிக கால அவகாசம் எடுத்துக் கொண்டேன்.
இப்படைப்பின் மீதான என் எண்ணங்களை மூன்று தலைப்பின் கீழ் பதிகிறேன்.
ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைகள்:
மிகச்சிறந்த எழுத்தாளுமைகளுக்கே உரிய குணங்கள் “ஆழம் உணர்தல்” மற்றும் “உணர்தலில் ஆழம்”. எந்தொவொரு உணர்வினையும் மதிப்பீடுகளுக்கு இடம் கொடுக்கும் முன் அதை முழுமையாக உள்வாங்கி எழுத்தில் வெளிக்கொணர்தல்.
அண்ணனுக்கு இவ்வரம் இயல்பாகவே வாய்க்கப்பெற்றுள்ளது என்று உறுதியாக நம்புகிறேன்.
அவரது நினைவுகளைக் கொண்டு அடுக்கிருக்கும் ஒவ்வொரு அத்தியாயமும், மென்மையான இசைப் போல நம்மீது படர்ந்து சூள்கிறது. இலக்கிய உலகில் உச்சாணிக்கொம்பில் அமர்ந்திருக்கும் பேராளுமைகளை அவர்களின் எளிமையான குணாதியங்களை பதிவு செய்து நம் பக்கத்து வீட்டு நண்பர் போல, நம் மனதில் பதிய வைத்து விடுகிறார். இதனால் அந்த மகத்தான மனிதர்களின் எழுத்தின் மீதுள்ள பற்று இன்னும் கூடுகிறது. அவர்களின் படைப்புகளைத் திரும்ப வாசிக்க தூண்டுகிறது.
ஓர் அழகிய சொல்லோவிய உதாரணம்
” பிரபஞ்சனும் அப்படிப்பட்டவர் தான். காற்றாக மாறினாலும், ஊஞ்சல் ஆடவும்.. காபி குடிக்கவும்.. கும்பகோணம் வந்தாலும் வந்துவிடுவார் என நினைத்துக் கொண்டிருக்கும்போதே காற்று மென்மையாக வீசியது..
ஊஞ்சல் மெல்ல அசையத் தொடங்கி இருந்தது.”
அரசியல் கட்டுரைகள்:
“Ethnic nationalism ” என்ற பூர்வக்குடி மக்களின் தேசிய அரசியல் போராட்டங்கள் பன்னெடுங்காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் உதிரம் வடியும் தொடர் வரலாறு. (முரண்).
முடிவுப்பெற்ற ஒரு வரலாற்று நிகழ்வின்போது, ஒரு பார்வையாளராக / பங்கு கொண்டவராக இருந்துக் கொண்டு அவருக்கே உண்டான தனித்துவமான எழுத்து நடையில் நம் கண்முன் நிறுத்தி விடுகிறார். இதற்கு அண்ணனின் செவ்விந்திய பூர்வக்குடிகளின் பாடல் மொழிப்பெயர்ப்பு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு
“ஆம்..
நாங்கள் காட்டுமிராண்டிகள்தான்
ஆனால் காடு
எங்களுடையது”
ஆம். நம் தமிழ்தேசிய அரசியலை ஒற்றைக் கட்டுரையில் உருவகித்து விட்டார்.
பொதுக்கட்டுரைகள்:
அண்ணன் , அவரின் பல ரசனைகளை கருப்பொருளாக்கி அதன் கீழ் நினைவலைகளை பதிவு செய்துள்ளார். ஆனால் ஒரு (perfect contextual foundation) , இதற்கான அடி நாதமாய் விளங்குவது அவருக்கு
வாழ்தலில் மீதுள்ள பற்றுதான் என்று நான் புரிந்துக் கொள்கிறேன். அதுவே அவருக்கே உரித்தான அவரின் அரசியல் கருத்தாக்கம். இதை ஒவ்வொரு வாசகருக்கும் தன் எழுத்தின் மூலமாக கடத்திவிட எத்தனிக்கிறார். அதில் வெற்றியும் பெருகிறார்.
எனக்கு வாழ்தலுக்கான பற்றுக் குறையும் நேரத்தில் அண்ணனின் எழுத்துக்கள் அரணாய் அரவணைத்து செல்லும் என்று உறுதியாக நம்புகிறேன்.
கட்சி தளத்திற்கு அப்பாற்பட்டு, உங்கள் இலக்கியத்திற்கு ஒரு தொடர் வாசகியாக என்னை மாற்றிய இந்த படைப்பைப் போல், நீங்கள் இன்னும் நிறைய எழுத வேண்டும். அதை நானும் கொண்டாடவேண்டும்.
உங்கள் படைப்பைப் பற்றிய என் எண்ணங்களையும் பகிர வேண்டும் என்று அன்புக் கட்டளையிட்ட அண்ணனுக்கு நன்றிகள் பல.
– சுனந்தா தாமரைச்செல்வன்.
இந்த ஆண்டு நான் படித்த மிகச்சிறந்த புத்தகம் என் அன்பு அண்ணன் Mani Senthil எழுதிய செவ்விந்தியனின் நடனம்.
ஒரு எழுத்தாளனின் வெற்றி என்பது கையில் எடுத்த புத்தகத்தை ஒரே மூச்சில் படிக்க வைப்பது. அது என் அண்ணனுக்கு இயல்பாகவே வாய்க்கப்பெற்றது.
தொகுப்பின் ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு உணர்வை தூண்டுகிறது.
குறிப்பாக ஒரு இரவில் எல்லையற்ற விடியல்களில் இளையராஜாவின் சோலை பசுங்கிளியே பாடல் எங்கள் மூவரையும் ஏதோ ஒரு திசையில் இழுத்துக்கொண்டு சென்றதாக அண்ணன் எழுதியிருப்பார் ஆனால் அவருடைய எழுத்தாளுமையால் அங்கே நாளாவதாக நாமும் ஒரு பார்வையாளனாக இடம்பிடித்திருந்தோம்.
செவ்விந்தியனின் நடனத்தில் ஒரு ஆசானாக நமது தோள்களில் கைபோட்டு பல புத்தகங்களையும் பல எழுத்தாளர்களையும், திரைப்படங்களையும் அறிமுகம் செய்துகொண்டே போகிறார். மோக முள் குறித்து ஏற்க்கனவே கேள்விப்பட்டிருந்தாலும் அதை படித்தே தீரவேண்டும் என்ற வெறியை. அண்ணன் மணி செந்தில் ஏற்படுத்திவிட்டார்.
அன்பும் நேசிப்பும் அண்ணா.
எவராலும் வெல்ல முடியாத
அவனது புன்னகைக்குப் பின்னால் ஒரு தேவதையின் காதல் நம்பிக்கையாக மின்னுகிறது.
சுற்றி வீசும் சொற்களின் அவதூற்று சூறைகாற்றுக்கெல்லாம் முகம் கொடுக்கும் அவனது அசாத்திய மனத்துணிவு, கனிவு மிக்க அவன் துணையின் தாய்மைக் கரங்களால் தயார் செய்யப்பட்டது.
அவள் அவனை தன் பேரன்பு கவசங்களால் போர்த்திக் களத்திற்கு
அனுப்புகிறாள்.
அவனோ தன்னை நோக்கி வரும் பொய்மையின் அம்புகளை தன் சிறு
புன்னகையால் தகர்த்து விடுகிறான்.
அவனது மகத்தான செயல்களுக்கும்,வசீகரப் புன்னகைகளுக்கும் பின்னால் அந்த மாதேவியின் தீரா உடனிருப்பு துணையெழுத்தாக தொடர்கிறது..
அந்த உயிர் எழுத்தின் வலிமையில் தான் அனைத்திற்கும் முகம் கொடுக்கிற ஆயுத எழுத்தாக அவன் மாறி நிற்கிறான்.
…….
…….
…….
எகிறி வரும் எல்லா வித சொற்களுக்கும் பதிலாய் பத்துக்கு நூறு மடங்காய் எதிர் வினை ஆற்றி விடலாம் தான்.. ஆனாலும் ஒரு நிதானம். ஒரு கண நேர அமைதி. பிறகு ஒரு புன்னகையோடு கிளம்பி விடுகிற எங்களது அசாத்தியங்களுக்கு பின்னால் தகர்க்கவே முடியாத ஆதி நேசப் பசுங் கொடிகள் நினைவுகளாய் போர்த்தி இருக்கிற ஒரு வனக் கோட்டை இருக்கிறது.
அந்த அரண்மனையின் மாதரசி, எம் சோழர்க்குல இளவரசி, என் தங்கை Meera Packiarajan க்கும், என் மைத்துனர் தலPackiarajan Sethuramalingam க்கும் இனிய மணநாள் வாழ்த்துகள்.
— with Meera Packiarajan.
எனக்கு முன்னால் கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கின்ற அந்தப் புத்தகம் மெதுவாக அசைகிறது. நான் தலை சாய்த்து படுத்திருந்த மகிழம்பூ மரத்தடியில் பூக்கள் அதிகம் உதிர தொடங்குகின்றன. உச்சி வேளை வெயில் பொழுதில் வயற்க் காட்டில் யாரும் இல்லை என உறுதி படுத்திக் கொண்டு அசைந்து கொண்டிருந்த அந்தப் புத்தகத்தையே நான் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
கவிழ்த்து வைக்கப்பட்ட அந்தப் புத்தகத்திலிருந்து அக்காக்கள் சொற்களாக கசிந்துக் கொண்டிருந்தார்கள். கசிந்த சொற்கள் உதிரா முதிர்எலுமிச்சை பழத்தின் வாசனையை காற்றில் பரப்பிக் கொண்டு இருந்தன. என் விழிகளில் நீலம் பாவியதை என்னால் உணர முடிந்தது.
அந்த புத்தகத்தை வாங்கி வந்த நாளில் இருந்து இதே பாடுதான். நள்ளிரவில் வாசித்துவிட்டு உறங்கத் தொடங்கும்போது தலையணைக்கு அருகில் யாரோ ஒரு அக்கா குத்துக்காலிட்டு அழுவது போன்ற உணர்வு. பொழுது சாயும் வேளையில் மாடியில் தன்னந்தனியாக சூரிய மறைவை கண்டு கொண்டிருக்கும் போது பின்னால் இருக்கும் தென்னை மர சலசலப்பில் யாரோ ஒரு அக்கா அணத்துவது போன்ற ஒரு சலசலப்பு.
அந்த நூலில் வெவ்வேறு பக்கங்களிலிருந்தும் அக்காக்கள் எழுந்து வந்து கொண்டே இருக்கிறார்கள். பல அக்காக்கள். வெவ்வேறு கதைகள் வெவ்வேறு சித்திரங்கள். அந்த அக்காக்களை நமது வீடுகளில் வீதிகளில் என எளிதில் சந்தித்து விடலாம். கழுத்தறுக்கப்பட்ட ஏதோவொரு அக்காதான் குலசாமியாக, மரப்பாச்சி பொம்மையாக, நினைவு பெயர்களாக, சுமைதாங்கி கற்களாக,நாள்களில் வணங்கும் வெவ்வேறு காரணங்களாக நம்மிடையே வாழ்ந்து கொண்டேயிருக்கிறார்கள்.
அக்காக்கள் மறைக்கப்பட்டதற்கும்,
மறக்கடிக்கப்பட்டதற்கும் பெரிய காரணங்கள் ஏதுமில்லை. அவர்கள் கழுத்தறுக்கப்பட்டதற்கான காரணங்களாக சாதியோ,வர்க்கமோ இன்னும் பிறவோ இருக்கக்கூடும். ஆனாலும் யாரோ ஒருவரின் நினைவில் சட்டென உதிர்ந்துவிடும் ஒற்றை கண்ணீர் துளியாகத்தான் வெய்யிலின் அக்காக்கள் உறைந்திருக்கிறார்கள்.
ஒரு பக்கம்/ சிலவரிகள்/ ஒரு வாழ்க்கையை ஒரு சித்திரமாக நம் கண்முன்னே நிகழ்த்திக் காட்டி வித்தை காட்டியிருக்கிறார் வெய்யில். எளிய சொற்களில் சட்டென கடக்க முடியாத திடுக்கிடல்களை நிகழ்த்தி விட்டு அக்காவின் இன்னொரு உலகிற்குள் சென்று புதைந்திருக்கிற அக்காக்களின் எலும்புகளில் ரத்தவாடை தேடி அலையும் சிற்றெறும்பாய் அலைந்துக் கொண்டி இருக்கிறார்.
ஒரு கவிதை..
“அக்கா ஆகாத வயதில் வயசுக்கு வந்தவள்.
ஏவல் கைகூடியவள்
சிறு செருமலில் பனம்பழங்களை விழச் செய்கிறவள்
குளவிக் கூட்டு மண்ணை விரும்பி உண்பவள்
செய்வினை செய்து கழித்த கண்ணாடியில்
முகம் பார்த்தவளை
பின்பு யாரும் பார்க்கவே இல்லை.
தவச நாளில் வைக்கும் தளுவை
பொங்கி வழியும்போது
குலவைச் சத்தத்துக்கு நடுவே அப்பா ரகசியமாய் அழுவார்.”
இப்பிரதியில் வருகின்ற அக்கா யாரையும் எவராலும் எதனாலும் கட்டுப்படுத்த முடியாது. திசைவழி பேதயறியா அவள் சன்னதம் வர வைக்கிற அம்மனாக கம்பீரமாக நம் முன்னால் அமர்ந்து இருக்கிறாள். நம் குற்ற உணர்வின் மீது நமது வியப்பின் மீது கட்டப்பட்டு இருக்கிற பெரும்அச்சக்கோட்டையின் மகாராணியாக வீற்றிருக்கிறாள்.
வரலாற்றின் வீதியெங்கும் வெறித்த பார்வையோடு பாம்பின் நாக்கு போல பிளவு உற்ற கழுத்து வெட்டு காயத் தழும்போடு உதிர கவிச்சை வாசனை உலராமல் அக்காக்கள் பல கதைகளாக,பல நினைவுகளாக கிடக்கிறார்கள் .
சட்டென வரும் ஒரு நேசத்தில் அவர்கள் உயிர் கொள்கிறார்கள். எதிரே வரும் சிறுமியின் முகத்தில் அவர்கள் வெட்க நிழலாய் மஞ்சள் பூசுகிறார்கள்.
இன்னொரு கவிதை
“மண முறிவுற்ற அக்கா குறிஞ்சிப் பூக்களை காண விரும்பினாள்; சூடவும்.
மிகத் தாமதமாகத்தான் புரிந்து கொண்டோம்.
நள்ளென் யாமமே தான்
துயில் கலைந்திடாது மெல்ல அரிந்து அவள் தலையை எடுத்துச் சென்றோம் அங்கே நிலைத்த விழிகளில் நீலம் திரும்புவதை புகைபிடித்தபடி அப்பா பார்த்துக் கொண்டிருக்கிறார்.”
அக்காக்களுக்கு கால வேறுபாடு இல்லை. சங்ககாலம் தொட்டு சாதி ஆணவக் காலம் வரை கழுத்தறுப்பட்ட அக்காக்களின் பெருமூச்சுதான் இந்த நிலப்பரப்பு முழுக்க ஊழி காற்றாய் அடித்துக் கொண்டிருக்கிறது.
அக்கா வெறும் நினைவாய் மட்டும்தான் நம்முள் தேங்கி இருக்கிறாளா.. சொல் வழி கதையாக மிஞ்சி இருக்கிறாளா என்றால்.. நிகழ்காலத்து அக்காவிற்கும் கவிதை இருக்கிறது. அதில் ஒன்று.
“ஆறு வருஷமாகிறது
புழங்காமல் பரணில் கிடந்த பித்தளைக்குடத்தை விளக்க
எடுத்துச் செல்கிறாள் அக்கா.
வம்படியாக உச்சிக்கிளையேறி
புளியம்பழங்களை பறித்துக் கொடுக்கிறார் அவர்.
ஆற்று நீரில் புளி கொண்டு அவள் விளக்குகிற குடத்தின் பொன்மினுக்கத்தில் சூரியன் மங்குகிறது.
குடவாய் நீர் வாங்கும் ஒலியில் ஊர் திகைக்கிறது”
அக்கா வெறும் பாடல் மட்டுமல்ல வெய்யில் சொல்வதுபோல அவளே வளரி சீவிய பாளையிலிருந்து தீராமல் சொட்டுகிற யாவருக்குமான கள்.
.
கண்மூடி படுத்து இருக்கின்ற என் இமைகளில் ஏதேதோ நினைவு வந்து அழுத்த.. அப்படியே தூங்கிப் போகிறேன். விழித்துப் பார்க்கையில் காற்றின் விரல்கள் அக்காளின் எலும்புகளைப் படித்துக் கொண்டிருக்கின்றன.
உள்ளங்காலில் பார்த்தால்.. கட்டெறும்பு கடித்தத் தடங்கள்.
அக்காக்களின் நினைவினால் / வெய்யில் மொழி தந்த வலியினால் மனம் பிசகி காலம் நழுவிப் போன அக்கணத்தில் தான்.
எனக்கு கத்தி அழ வேண்டும்போல இருந்தது.
அந்தப் புத்தகத்தை அப்படியே மூடி வைத்துவிட்டு திரும்பி பார்க்காமல் வரப்பு வழியே நான் வீட்டிற்கு நடக்கத் தொடங்கினேன்.
.
அக்காளின் எலும்புகள்/ கவிதைகள்/ ஆசிரியர் வெயில்/ கொம்பு வெளியீடு/ விலை 75.
நான் எழுதி களம் வெளியிட்டிருக்கிற “செவ்விந்தியனின் நடனம்” என்கின்ற நினைவோடை கட்டுரைத் தொகுதியினை எனது பெருமதிப்பிற்குரிய எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் வெளியிட.. களம் பதிப்பகத்தின் சார்பாக எனது மைத்துனர் பாக்கியராசன் சே அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
எழுத்துலகில் எனக்கு ஆசானாக இருக்கிற திரு எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எனது நூல் ஒன்று வெளியிடப்பட்டிருப்பது எனது வாழ்நாள் பெருமை.
விடுதலைக்கு விலங்கு, சீமான் உயர்த்தும் கரங்களில் ஒளிரும் வெளிச்சம் என்கின்ற எனது நூல் வரிசையில்” செவ்விந்தியனின் நடனம்” மூன்றாவது நூல்.
நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிற மறைந்திருக்கிற பல ஆளுமைகளின் அபூர்வ தருணங்களை, எளிய மனிதர்களின் கனிவினை, முரண்பாடுகளை, பற்றிப் பேசுகிற உண்மை மனிதர்களைப் பற்றிய நினைவோடை கட்டுரைத் தொகுப்பு இது.
இந்த நூல் எழுதப்பட்ட காலங்களில்..என்னைவிட இந்த நூல் வந்தே ஆகவேண்டும் என்று உழைத்த எனது எனது தம்பிகள் சிவராசன்,துருவன் செல்வமணி சோமு, துரைமுருகன், சேகர், லிங்க துரை, அஸ்வின் பத்மநாபன், இமயவரம்பன் ஆகியோருக்கு நன்றி.
இந்த நூல் வெளியிடப்படுவது குறித்து என்னை விட மிகவும் பதட்டமாகவும் ஆர்வமாகவும் இருந்த என்னுயிர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு நான் எழுதுகிற ஒவ்வொரு எழுத்தும் அர்ப்பணம்.
இதை படப்பிடிப்பு செய்த சாட்டை வலையொளி குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றி.
இதில் மிகுந்த ஆர்வம் காட்டிய எனது மைத்துனர் வழக்கறிஞர் பிரபு சேதுராமலிங்கம் அவர்களுக்கும், களம் வெளியீட்டகத்தின் தம்பிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றி.
வேறென்ன..
உங்கள் அனைவரின் கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்.
படித்து விட்டு சொல்லுங்கள்.
அரங்கு எண் 333
சென்னை 42 ஆவது புத்தகக் கண்காட்சி
நந்தனம்.
[youtube]https://www.youtube.com/watch?v=dh7M4UMEFNs&fbclid=IwAR36nvBdZCfAlqoUtZuiZi-BELGevHhgZAW1z5tlPMIcdGoDdZyrosuwSbw[/youtube]
ஒவ்வொரு மனிதனுக்கும் பெரிய ஆசையாக எது இருக்கக்கூடும் என நீங்கள் நினைக்கிறீர்கள்..?
அவனுக்கென்று சில வசந்த காலங்கள் இருந்திருக்கக்கூடும். வாலிபத்தின் மஞ்சள் பூவாக அவன் மலர்ந்து நிற்கையில்.. அவனது இளமையின் மகரந்தத்தாளை ஒட்டி உரச ஒரு வண்ணத்துப்பூச்சி வந்து போயிருக்கக்கூடும். கண்கள் முழுக்க கனவோடு, நெஞ்சம் முழுக்க இசையோடு , இதயம் முழுக்க கவிதையோடு, திரிந்த அந்த நிலா காலத்திற்குத்தான் ஒவ்வொரு மனிதனும் திரும்ப ஆசைப்படுவான்.
ஏனெனில் அதுதான் அவனாகவே அவனை உணர்ந்து மகிழ்ந்து திரிந்த காலம். அசலாக நின்ற காலம். எவ்விதமான பூடகமும் இன்றி நிஜத்தின் அருகே நின்ற காலம் .
ஏனெனில் ..அந்தக் காலம் தான் அவன்.
அப்படி நான் எனது கடந்த காலத்திற்குள் என்னை கடத்தி போகச் செல்ல விரும்பும் போதெல்லாம் எதிரே துருவன் நிற்பான்.
நான் எவ்வாறெல்லாம் இருந்தேனோ ,திரிந்தேனோ உணர்ந்தேனோ,. அதேபோல அதே லயத்தோடு..அதே தாளகதியில் அவனும் திரிகிறான்.
இந்த அலைவரிசை ஓர்மைதான் அவனுக்குள் என்னையும்.. எனக்குள் அவனையும் …ஒருங்கே பொருத்தி வைத்தது.
என் இளமைக்கால பெரும் கிளர்ச்சியின் நிகழ் வடிவம் அவன். எனவேதான் அவன் எப்போதும் என் இதயத்திற்கு அருகில் இருக்கின்ற இனிப்பாகிறான்.
எதிலும் கிளர்ச்சியின் உச்சம் தேடுகிற ஆகப்பெரும் கலகக்காரனாக தன்னை வடிவமைத்துக் கொள்வதில் அவன் ஒரு தேர்ந்த இசைஞன்.
யாராலும் நினைத்தே பார்க்க முடியாத வடிவங்களில் தன்னை தகவமைத்து ஒழுங்கமைத்துக் கொண்டே வருகிறான்.
எந்த உச்சத்தையும் ஒரு நொடியில் இழக்க துணிவான்.. அடுத்த நொடியில் அதைத் தாண்டி பறக்க முயல்வான்..
பறந்தும் விடுவான்.
பல சிகரங்களின் நுனி தொட.. பெரும் பசி கொண்ட ஒரு வேட்டை கழுகு போல அவன் அமைதியாக காத்திருக்கிறான்.
அந்த சிகரங்களும் இவன் சிறகுகளின் நிழல் தீண்ட சிலிர்த்து காத்திருக்கின்றன.
அந்த சில கணங்களுக்காக.. அவன் தோள் பிடித்து நிற்கின்ற நானும் காத்திருக்கிறேன்.
அவனுக்கென பிரத்தியேகமான வாழ்த்துக்கள் எதுவும் தேவையில்லை என்னிடத்திலிருந்து..
அவன் நன்றாகத்தான் இருப்பான்.
இந்த வாழ்வை வேட்கையும் ருசியும் நிரம்பிய ஒரு கள்ளாக கருதி அவன் அருந்தியே தீருவான்.
அவன் அடிக்கடி சொல்லும் ஒரு சொல்..
தட்டித் தூக்கிடணும் குருநாதா..
தட்டி தூக்குடா ..
[youtube]https://www.youtube.com/watch?v=2xYtsj7dz_U&fbclid=IwAR1Yko0oAfFEVz8BNYddopqxHxTNodTFbDbQwrDO6-hvRRBZ8fTG5f1kGJ0[/youtube]
Powered by WordPress & Theme by Anders Norén