[youtube]https://www.youtube.com/watch?v=Gmmi2tP6Q2w&feature=youtu.be&fbclid=IwAR0ZKHKvN3DOmt8mPy-M_wyb9b6d2hc3W9XyxcvUZvWt3LKRaXlSZY0pyrA[/youtube]
நான் சற்று தாமதமாக சென்றுவிட்டதாக என்னை நானே நொந்துகொண்டேன் . குறித்த நேரத்தில் புறப்படுவது என்பது வாழ்நாளில் எப்போதும் எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருவது குறித்து மிகப்பெரிய கவலை இருக்கிறது. அதுவும் ஒரு முக்கியமான நபரை சந்திக்கச் செல்லும்போது ஏற்படும் காலதாமதம் அந்த சந்திப்பின் விளைவுகளை எதிர்மறையாக்கி விடும் என்பதில் நான் ஆழமான நம்பிக்கைக் கொண்டிருந்தேன். அப்படித்தான் அன்றும் எனக்கு காலதாமதம் ஆகிவிட்டது. விடுதியில் நுழைந்த போது அவர் எனக்காக விடுதியின் வரவேற்பறையில் காத்திருந்தார். பார்க்க ஏதோ ஒரு சங்கீத வித்துவான் போல தோற்றம்.நெற்றியில் சந்தனக்கீற்று. என்னை பார்த்தவுடன் அவர் எழுந்து நின்றார். எனது காலதாமதத்தால் அவர் சற்று எரிச்சல் அடைந்திருப்பதாக எனக்கு தோன்றியது. மன்னித்து விடுங்கள் சற்று நேரம் ஆகிவிட்டது என்று சொல்லியவாறு நான் அவரது கைகளை இறுகப் பற்றிக்கொண்டேன். சட்டென அவர் புன்னகைத்து விட்டார். அதுதான் பிரபஞ்சன்.
கும்பகோணத்தில் எங்கே டிகிரி காபி கிடைக்கும் மணி செந்தில்..? என்று கேட்ட அவரது கேள்விக்கு நான் சற்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். கும்பகோணம் டிகிரி காபி உலகப்புகழ் பெற்றதுதான்..ஆனால் அது எங்கு கிடைக்கும் என்று கும்பகோணத்தில் வசிக்கும் எனக்கே சற்று குழப்பமாகத்தான் இருந்தது. முடிவில் அவரை நகரின் மத்தியிலுள்ள வெங்கட்ரமணா ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றேன். காபி ஆர்டர் செய்துவிட்டு இருவரும் பேசிக்கொண்டிருந்தோம்.
காபி அருந்துவது என்பது ஏதோ தேவ அமிர்தத்தை அருந்துவதற்கு இணையான ஒரு செயல் போல பிரபஞ்சன் ரசித்து பேசிக்கொண்டிருந்தார். காபி எவ்வாறு தயாரிக்க வேண்டும்.. எந்த பதத்தில் பால் காய்ச்ச வேண்டும் .. டிக்காஷனில் கலவை எவ்வாறு இருக்க வேண்டும்..சிக்கரி எவ்வளவு சேர்க்க வேண்டும் என்றெல்லாம் அவர் விரிவாக பேசிக்கொண்டிருந்தார். ஒரு புகழ்பெற்ற எழுத்தாளரிடம் அவர் எழுதிய நூல்கள் பற்றி பேசலாம் என வந்திருந்த எனக்கு அவரது காபி பற்றிய உரையாடல் சற்று ஏமாற்றத்தை தந்தது. திடீரென கும்பகோணத்து எழுத்தாளர்களைப் பற்றி பேசத் தொடங்கினார். தஞ்சாவூர் காரங்க ரொம்ப கொடுத்து வெச்சவங்க. கோவில் காபி இலக்கியம் இசை என ரசனை பூர்வமா வாழ்வதில் அவர்களை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்றாலெல்லாம் உணர்ச்சி பூர்வமாக பேசிக்கொண்டே போனார். மறைந்த எழுத்தாளர் தி ஜானகிராமன் அவர்களைப் பற்றி அவர் பேசும்போது சில எழுத்துக்கள் மூலம் ஒரு பெண்ணை நம் கண்முன்னால் உருவாக்கி பேச வைத்து விடுவதில் தி.ஜா ஒரு மாயக்காரன் என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.
காபி வந்தது. ஒரு வீணையை வாசிக்கக்கூடிய ஒரு கலைஞன் போல அந்த காபியை அணுக அவர் தயாரானார். சூடாக வந்த அந்த காபியின் மணத்தை நுகர்ந்து சற்று சர்க்கரை போட சொன்னார். பிறகு துளித்துளியாக காபியை பருக தொடங்கினார். அது ஒரு ரசனையான பருகல். எவ்வித ஆரவாரமும் இன்றி பரபரப்புமின்றி மிகுந்த ஆர்வத்தோடு.. காபியின் இயல்பான வாசனையை நுகர்ந்தவாறு ரசித்துப் பருகிக் கொண்டிருந்தார். அந்தக் காபி அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். அருந்தி முடித்துவிட்ட பிறகு அருகில் நின்று கொண்டிருந்த சர்வரிடம் காபி போட்ட மாஸ்டர் எந்த ஊர் என விசாரிக்க தொடங்கினார். பிறகு என்னை திரும்பி பார்த்து வாங்க போகலாம் என்றார்.
எங்கள் அன்னைக்கல்லூரி விழாவிற்காக அவரை அழைத்துப் போக நான் வந்திருந்தேன். போகும் வழியெல்லாம் அவர் காவிரியை பற்றி.. அதன் அரசியலைப் பற்றி எல்லாம் என்னோடு விவாதித்துக் கொண்டு வந்தார். எதைக் கேட்டாலும் அவர் புதிதாக கேட்பது போன்ற ஆர்வத்தோடு கேட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கல்லூரிக்குள் எங்களது கார் நுழைந்தது. அதுவரை பேசி சிரித்துக்கொண்டிருந்த பிரபஞ்சன் சற்றே இறுக்கமாக மெளனமானார். இவர் வேறொரு மனிதரோ சற்று முன்பு நாம் சந்தித்தவர் இவர் இல்லையோ என்றெல்லாம் எனக்கு சந்தேகமாக இருந்தது. மேடையில் ஏறிய பிறகு ஒரு எழுத்தாளருக்குரிய எவ்விதமான இலக்கிய ஆடம்பர மொழிகள் இல்லாமல் நேர்த்தியாக பேசத்தொடங்கினார். சிறப்பாகப் பேசினார். தஞ்சை நிலத்தைப் பற்றி அவர் அறிந்தவற்றை வரலாற்றுக் குறிப்புகளோடு அங்கிருந்த மாணவ-மாணவியர்களுக்கு புரியக்கூடிய எளிய மொழியில் அழகாகப் பேசினார்.
கல்லூரியில் மதிய உணவு முடிந்தவுடன் நான் அவர் எனது வீட்டிற்கு அழைத்துச் சென்றேன். என் வீட்டின் கூடத்தில் மாட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் அவர் போய் ஆசையாய் அமர்ந்து கொண்டார். மெதுவாக ஆடிக்கொண்டே ஏதோ வாய்க்குள் முணுமுணுத்தார். அருகில் இருந்த என்னை பார்த்து ஊஞ்சலில் அமர்ந்த உடனேயே பாட்டு வருது.. ஊஞ்சலுக்கும் பாட்டுக்கும் ஏதோ முன்ஜென்ம தொடர்பு இருக்கும் போல. எனச் சொல்லி சிரித்துக் கொண்டார்.
அப்போதுதான் அவருக்கு அலைபேசி மூலம் ஒரு அழைப்பு வந்தது. அதை எடுத்துப் பேசியவர் சட்டென மௌனமானார். முகம் இறுகியது. பேசி முடித்து விட்ட பிறகு மௌனமாக ஊஞ்சலில் ஆடிக் கொண்டே இருந்தார். என்ன சார் என்ன ஆயிடுச்சு என்று நான் கேட்டேன். ஒண்ணும் பெருசா இல்ல மணி செந்தில் ..வீட்டில் திருட்டு போயிடிச்சி என்று கவலை தோய்ந்த குரலில் சொன்னார். நான் உடனே சென்னையில் இருந்த என் வழக்கறிஞர்கள் நண்பர்களுக்கு தொடர்புகொண்டு, அவரின் வீடு அமைந்திருந்த ராயப்பேட்டை காவல் நிலையத்தின் எண்ணைப் பெற்று காவல் ஆய்வாளரிடம் பேசினேன். அவரும் அந்த நேரத்தில் திருட்டு நடந்த பிரபஞ்சன் வீட்டில்தான் இருப்பதாகவும், விசாரித்து கொண்டிருப்பதாகவும் சொன்னார்.வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பக்கத்து வீட்டுக்காரர் பார்த்துவிட்டு தன்னிடம் தகவல் தெரிவித்ததாக அந்த காவல் ஆய்வாளர் தெரிவித்தார். எதுவும் பெரிதாக திருடு போய் விடவில்லை என்றும் அவர் கூறினார். இந்த உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்த பிரபஞ்சன் என்னுடைய ரேடியோ இருக்கிறதா என்பதைப் பார்க்கச் சொல்லுங்கள் எனக் கூறினார். காவல் ஆய்வாளரும் தேடிப் பார்த்துவிட்டு ரேடியோ உள்ளிட்ட சில பொருட்கள் திருடு போய் இருப்பதாக சொன்னார். பிரபஞ்சன் அமைதியாக இருந்தார். அதுதான் என்னுடைய மிகப்பெரிய சந்தோஷம். அதையும் திருடன் தூக்கி கொண்டு போய் விட்டானே என நொந்து கொண்டார்.
இது என் வீட்டில் இருந்த எல்லோருக்கும் மிகவும் வருத்தமாக ஆகிவிட்டது. நம் வீட்டிற்கு வந்த நேரத்திலா அவர் வீட்டில் திருடு போக வேண்டும்.. என்றெல்லாம் அனைவரும் வருத்தப்பட்டோம். இதை நுட்பமாக உணர்ந்துகொண்ட பிரபஞ்சன் அந்த இறுக்கமான சூழ்நிலையை மாற்ற என் அம்மாவிடம் ஒரு காபி போட்டு தருமாறு கேட்டுக்கொண்டார். சூடாக காபி வந்தது. வழக்கமான அதே ரசனையோடு பருகியவாறே என்னிடம் இலக்கியத்தைப் பற்றி தீவிரமாக உரையாட தொடங்கினார்.
அவருடைய வானம் வசப்படும் நாவலை நான் படித்திருந்தேன். புதுச்சேரியில் பிரெஞ்சு அதிகாரிகளிடம் துபாஷாக,மொழிப்பெயர்ப்பாளரா
திருட்டு நடந்த ஒரு வீட்டின் உரிமையாளர் அதை மறந்துவிட்டு எதிரே அமர்ந்திருக்கிற எளிமையான வாசகன் ஒருவனோடு இலக்கிய உரையாடலில் ஈடுபடுவது என்பதெல்லாம் இதுவரை எனக்கெல்லாம் புலப்படாத பிரபஞ்சனின் பிரபஞ்ச ரகசியம்.
அதற்குப் பிறகு ஒரு இரண்டு மணி நேரம் என்னோடு இலக்கியம், இசை ,எழுத்து, எம்.வி.வெங்கட்ராம், தஞ்சை ப்ரகாஷ் ..என அனைத்தையும் பேசிவிட்டு மிகுந்த மகிழ்ச்சியோடு கிளம்பிச் சென்றார்.
கிளம்பும்போது ஊஞ்சலை எப்போதும் கழற்றி விடாதீர்கள் எனக் கேட்டுக்கொண்டார். தான் மீண்டும் வருவதாகவும் அப்போது அந்த ஊஞ்சல் இருக்க வேண்டும் எனவும் உரிமையோடு கேட்டுக்கொண்டார்.அவர் வீடு திருடு போனது குறித்து ஏதேனும் சட்ட உதவிகள் தேவைப்பட்டால் நான் உதவுவதாக சொன்னபோது.. ஒரு எழுத்தாளன் வீட்டில் திருட புத்தகங்களும், இசையும் தவிர வேறு என்ன இருக்க போகிறது.. கண்டிப்பாக திருடன் ஏமாந்து இருப்பான்.. பாவம் அவன் என சிரித்துக்கொண்டே கிளம்பிச் சென்றார்.
இன்று அவர் இறந்துவிட்டதாக செய்தி வந்தபோது மனது ஒரு மாதிரியாக கனக்கத் தொடங்கியது. நான் என் வீட்டின் கூடத்திற்கு வந்தேன். அங்கே இருந்த ஜன்னலை எல்லாம் திறந்து வைத்துவிட்டு… அசைவில்லாமல் தனித்திருந்த அந்த ஊஞ்சலை மௌனமாக பார்த்துக் கொண்டே இருந்தேன்.
அந்த ஊஞ்சலை என்றும் கழட்டக் கூடாது.இன்று காற்றில் கலந்த பிரபஞ்சன்.. அந்த ஊஞ்சலில் ஆடுவதற்காக என் இல்லத்திற்கு என்றாவது ஒரு நாள் வரக்கூடும் என எண்ணிக் கொண்டேன்.
பிரபஞ்சனும் அப்படிப்பட்டவர்தான். காற்றாக மாறினாலும் ஊஞ்சல் ஆடவும்.. காபி குடிக்கவும்.. கும்பகோணம் வந்தாலும் வந்துவிடுவார் என நினைத்துக் கொண்டிருக்கும்போதே காற்று மென்மையாக வீசியது.
ஊஞ்சல் மெல்ல அசையத் தொடங்கி இருந்தது.
விலங்கம்ச மிச்சங்கள்..
—————————————–
அந்த சாதி பெண்ணை திருமணம் செய்வோம் ..இந்த சாதிப் பெண்ணை திருமணம் செய்வோம்.. என்றெல்லாம் முழங்குவது சமூக அறிவு சிறிதும் அற்ற ஒரு கேடுகெட்ட மூர்க்கத்தனமான மூடத்தனம் என்பது ஒரு புறம்..
தான் நினைத்தால் எளிதில் களவாட முடிகிற கடைச்சரக்காக ஒரு பெண்ணை நினைப்பது என்பது அனைத்திலும் காட்டிலும் ஆகப்பெரும் அயோக்கியத்தனம்.
இந்த அயோக்கியத் தனம் தான்.. ஒரு பெண் மீது ஆசிட் ஊற்ற வைக்கிற, கழுத்தை கொலை செய்ய வைக்கிற நோயாக மாறுகிறது.
இவன் நினைத்தால் போதும். ஒரு பெண்ணை திருமணம் செய்து விடலாம் என்கிற சிந்தனை கொடுங்கோன்மையான ஆணாதிக்க வன்முறை உணர்வின் தொடர்ச்சி.
முதலில் பெண் என்பவள் நம் சக மனுஷி. சக பாலின் மீது நேசம் ஏற்பட்டு ஈர்க்கப்படுவதென்பது உலகத்து இயற்கை. அது காதலாக மாறும் புள்ளியில் மற்றவருடைய விருப்பம் என்பது மிக முக்கியமானது. ஒரே அலைவரிசையில் பொருந்தும் விருப்பங்கள் திருமணம் வரை நீள்கிறது. அவ்வாறு திருமணம் வரை நிகழ்கின்ற அந்த உறவு வாழ்நாள் வரை மதிப்பு மிகு தோழமையாக.. சகல உணர்ச்சிகளும் கண்டுகொள்ளப்படுகிற மாசற்ற அக்கறையாக தொடரும் பட்சத்தில் தான் அந்த காதல் பரிபூரணத்துவம் அடைகிறது. இதில் சாதி மதம் போன்ற சமூக முரண்கள் குறுக்கிடும் போது ஏற்படும் தடைகள் தகர்க்கப்பட வேண்டியவை.
இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் நினைத்த உடனேயே ஒரு பெண்ணை திருமணம் செய்து விட இயலும் என்கிற ஒரு இளைஞன் சிந்தனை சாதி ஒழிப்பிற்கான புரட்சி முழக்கம் அல்ல.
அது முற்றிலும் மூளைச்சலவை செய்யப்பட்ட மூர்க்கமான மனநோய்.
இதுபோன்ற மூர்க்க மனநோய்களுக்கு அண்ணல் அம்பேத்கரின் படத்தை உபயோகிப்பது என்பது அபத்தமானது . ஆபத்தானதும் கூட.
சாதி மறுத்து சாதி வேண்டாம் என திருமணம் செய்தவர்கள் இன்ன சாதி பெண்ணை தான் காதலிக்க வேண்டும் என்றெல்லாம் கணக்குப் போட்டு காதலிப்பதில்லை. அவ்வாறு திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டால் அது காதல் அல்ல . அது மாபெரும் சமூகத் தீங்கு. நிகழும்
சாதி ஆணவக் படுகொலைகளுக்கு இணையான மாபெரும் கொடுமை .
பெண்ணையும் வீட்டில் இருக்கிற அண்டா ,குண்டா போல ஒரு சொத்தாக ,பார்க்கிற ஆணாதிக்க வல்லாண்மை உணர்ச்சி.
இதுபோன்ற முட்டாள்தனமான மூர்க்கத்தனமான முழக்கங்கள் முன்வைக்கும் எதுவும் சாதி மறுப்பும் அல்ல. சாதி ஒழிப்பும் அல்ல.
மனநல மருத்துவமனைகளில் சேர்த்து உரிய சிகிச்சை தர வேண்டிய தீவிரமான மன நோய்.
முதலில் பெண்ணை களவாட முடிகிற பொருளாகப் பார்க்காமல் சக உயிரியாக பார்க்க கற்றுக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள். குறிப்பாக ஆண் குழந்தைகளுக்கு. நம்மைப் போன்ற சக உயிரியை தோழமையாக,சகாவாக நினைக்காமல் களவாட நினைப்பதும் ஆக்கிரமிக்க நினைப்பதும் இருப்பதிலேயே ஆகப் பெரும் தீங்கு என்பதை குழந்தையில் இருந்து நாம் கற்பிக்க வேண்டும்.
இதுபோன்ற காணொளிகள் நாம் இன்னும் நாகரீகத்தின் எல்லையை கூட தொடவில்லை என்பதையும்,
விலங்கம்சத்தின் மிச்சத்துடன் அலைந்து கொண்டிருக்கிறோம் என்பதையும் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
முதலில் பெண்ணை சக மனுஷியாக பார்க்க,பழக கற்போம்.
புரட்சி,புண்ணாக்கு எல்லாம் பிறகு பேசலாம்.
இடப்பிறழ்வு மொழி..
———————————–
பிரிவின்
இருள் நிழல்கள்
நம் வசந்தகால
முற்றத்தின் மேல்
போர்த்த முனையும்
இப்பொழுதை
முற்பொழுதொன்றின்
பேரன்பின்
மழைச்சாரல்
நனைக்க முயல்கிறது.
உனக்கென நீ
கோர்த்துக் கொண்ட
காரணச் சங்கிலிகளை
உன் கழுத்தில்
அணிந்துக் கொண்டு
கீழ்த்திசை நோக்கி நடக்க
தொடங்குகிறாய்..
ஒரு நள்ளிரவின்
அழுகுரல் போல
நம் பிரிவு
சுருதி பேதம்
காணாத தன்னியல்பாய்
நிகழத் தொடங்குகிறது.
நம் நேச வீணையின்
அறுந்து விட்ட
தந்திகள்
எங்கிருந்தோ வரும்
காற்றின் விரல்களால்
தீண்டப்பட்டு
அதிரத்தான் செய்கிறது.
தனிமையின் சுடர்
நினைவுகளின்
நிராதரவான
பக்கங்களை
ஒளியூட்டுகிறது.
வெறித்த
பார்வைகளோடும்
விழி நீர்
சிமிட்டல்களோடும்
வெற்றுச் சுவர்
மீதேறி
உறைகின்றன
விழிகள்..
பசுமையேறிய
பெருவனத்தில்
இலையுதிர்
பொழுதொன்றின்
நுழைவு போல
காலதிசை மாற்றமிது
என என்னால் நம்ப
முடியவில்லை.
ஆயினும்..
எனக்குள் நானே
உறுதிப்படுத்திக்
கொள்கிறேன்..
சகி..
நமக்கென ஒரு
நிலாக்காலம்
இருந்தது.
வைகோ -சரிந்த அரண்மனையின்
பாசிப் படர்ந்த விதானம்
——————————————————–
ஒரு காலத்தில் பாராளுமன்றத்தை நடுநடுங்க வைத்தவர் அவர்.இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை நேருக்கு நேராக நின்று மோதியவர்.எந்த ஒரு வரலாற்றையும் புள்ளிவிவரத்தோடு விவரித்து நினைவாற்றலால் வியக்க வைத்தவர். இசைஞானி இளையராஜாவின் திருவாசகம் வெளியீட்டுவிழாவில் இசை நுட்பங்களை பற்றி, தமிழர் இசை பற்றி இவர் பேசிய காலங்களை நினைக்கும் போது காலம் தான் எவ்வளவு கொடிய அரக்கன் என நினைக்கத் தோன்றுகிறது.
உண்மையில் இன்றைய வைகோவின் நிலைமை பரிதாபகரமானது. பாராளுமன்றத்தில் பெரும் பெரும் விவாதங்களை எல்லாம் எதிர்கொண்ட வைகோவால் ஒரு சாதாரண தொலைக்காட்சி நெறியாளரை எதிர்கொள்ள முடியாமல் போனது என்பது வரலாற்றில் நாம் காணுகின்ற அபத்தக் காட்சி..
கழுத்தைப் பிடித்து ஸ்டாலின் வெளியே தள்ளினாலும், அவர் காலைப்பிடித்து கதறுகின்ற வைகோவின் நிலைமை எந்த ஒரு அரசியல் தலைமைக்கும் வந்துவிடக்கூடாது. அவரின் இந்த நிலைமைக்கு வேறு யாரும் காரணம் அல்ல. அவரை தவிர.
கொள்கையில் உறுதி ,அரசியலில் நேர்மை ,பொதுவாழ்வில் தூய்மை என்றெல்லாம் தொடங்கிய வைகோ யாரை எதிர்த்து அரசியல் கட்சியைத் தொடங்கினாரோ அவரை நம்பியே பிழைக்க வேண்டிய பரிதாப நிலை.
இந்தப் பரிதாப நிலையும் இந்த கேவலமும் வைகோவுக்கு மிக எளிதாக ஏற்பட்டதில்லை. சொல்லப்போனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் கூட அவமானங்கள் ஏற்படவில்லை. தொடர்ச்சியான அவரது அரசியலின் சமரசங்கள், பிழையான முடிவுகள் , சுயநலமான பித்தலாட்டக்கார நடிப்பு அரசியல் இதுவே அவரது அரசியல் வாழ்க்கைக்கு முடிவுரையாக போனது.
அவரது ஆவேசம் ,கோப உணர்ச்சி , எல்லாம் காமெடியாக பார்க்கப்படுவதை அவர் இன்னும் உணரவில்லை என்பதையே இன்றைய புதிய தலைமுறையின் அக்னிப்பரிட்சை பேட்டி காட்டுகிறது. குறிப்பாக நாம் தமிழர் மீது அவர் காட்டும் ஒவ்வாமை அவருக்கே எதிர்மறையாக மாறிப்போய் என்பதுதான் காலத்தின் கோலம்.
ஏனெனில் காலம் என்பது மிக விசித்திரமானது. ஒரு காலத்தில் கொண்டிருக்கின்ற மதிப்பீடுகள் இன்னொரு காலத்தில் எவராலோ முறியடிக்கப்பட போகிறது என்கின்ற நிதானம் வாழும் காலத்தில் ஒவ்வொருவருக்கும் தேவையாக இருக்கிறது. இது நிரந்தரம்.. நம்மை மிஞ்ச ஆள் இல்லை.. என்றெல்லாம் எவரேனும் கனவு கண்டால் எதிரே வரும் சிறுவன் சின்ன இடைவெளியில் நம்மை மிஞ்சி சென்று விடுவான் என்பதற்கு வைகோவின் வாழ்க்கை ஒரு சரியான உதாரணம்.
நாம் தமிழரை வைகோ எதிர்க்க எதிர்க்க.. வைகோ பரிதாபமாக அம்பலப்பட்டு கொண்டே போகிறார். இந்த மாவீரர் நாளில் தஞ்சையில் மிக எழுச்சியாக நாம் தமிழர் கட்சி மாவீரர் நாளை நிகழ்த்திக் கொண்டிருக்க ..தன்னந்தனியாக கடலில் இறங்கிக் கொண்டு வைகோ ஏதோ புலம்பிக் கொண்டிருந்ததை பார்த்த போது.. இவரா இந்திரா காந்தி ராஜீவ் காந்தி போன்ற பெரும் தலைவர்களை எதிர்த்து அரசியல் செய்த தலைவர் என்று நினைக்கத் தோன்றுகிறது.
ஒரு காலத்து மனிதராக வைகோ மாறிப்போனதுதான் நிகழ்காலத்தின் மீது அவர் கொண்டிருக்கின்ற வெறுப்பாக இன்று மாறிப் போயிருக்கிறது.
வைகோ கொண்டிருக்கின்ற திராவிடக் கொள்கை ஏற்கனவே அம்பலப்பட்டு நவீன அரசியல் தளத்தில் புறக்கணிக்கப்படுகிற ஒன்றாக மாறிவிட்டது. திராவிட இயக்கங்களின் முக்கிய கொள்கைகளான சாதி மறுப்பு, பகுத்தறிவு, இந்துத்துவ பார்ப்பன எதிர்ப்பு ஆகியவைகளை திராவிட இயக்கங்களே கைவிட்டு விட்ட சூழலில்.. நவீன தமிழ் தேசியர்கள் சாதிமறுப்பு ,இந்துத்துவ பார்ப்பன எதிர்ப்பு ,பகுத்தறிவு, சூழலியல், போன்ற பன்முக கொள்கை சட்டகங்களால் தங்களை செழுமைப்படுத்திக் கொண்டு களத்தில் வலிமையாக நிற்கிறார்கள்.
எனவேதான் வைகோ போன்றவர்கள் பயப்படுகிறார்கள். கோபப்படுகிறார்கள் .எழுந்து ஓடுகிறார்கள்.
ஈழத் தமிழர்களைக் கொன்ற கருணாநிதிக்கு என் வாழ்நாளில் மன்னிப்பே கிடையாது என்று முழங்கிய வைகோ இன்று கருணாநிதி மகன் காலில் விழுந்து கிடப்பது என்பது அரசியல் தடுமாற்றம் மட்டுமல்ல. திராவிட இயக்கங்களுக்கே உரிய தத்துவ நிலை நீர்த்துப்போதல்.
அது ஒரு வகையான மரணம். திராவிடக் கட்சிகளின் தலைமைகள் தங்கள் தத்துவத்தின் மரணத்தை மறைக்க முடியாமல் கோபப்படுவதை தான் நிகழ்கால காட்சிகள் அம்பலப்படுத்துகின்றன.
வைகோ தன் வாழ்வில் சொன்னது போல இப்போது சுவர் ஏறி தப்பித்து ஓட முடியாத நிலைமையில் தற்போது நிற்கிறார்.
வைகோவால் அன்று துரைமுருகன் அடிவாங்கினார். பிறகு ஜெயலலிதா, விஜயகாந்த் என நீளூம் அப்பட்டியலில் இடம் பெறாமல் தப்பிக்க ஸ்டாலின் முயல்கிறார். ஆனாலும் வைகோ ஸ்டாலினின் வேட்டியை விட மறுக்கிறார்
அண்ணன் சீமான் போன்றவர்கள் வைகோவின் படத்தை தன் சட்டைப்பையில் வைத்திருந்தவர்கள். இன்று அவரே ஒரு கட்சி ஆரம்பித்து வைகோவை கடந்து எங்கோ சென்றுவிட்டார்.
ஆனால் வைகோ இன்னமும் கோபாலபுரத்தில் ஸ்டாலினின் கருணைக்காக காத்திருப்பது என்பது தடுமாற்றம் நிறைந்த அவரது அரசியல் வாழ்வில் உச்சக்கட்ட தோல்வியாக அமைய இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அவருக்கும் தெரியும்.ஆனால் வேறு வழியில்லை.
திராவிட இயக்கத்தைக் காப்பாற்ற வேண்டும் என்கிறார். மூச்சற்ற பிணம் என்ன முக்கினாலும் உயிர் வரப்போவதில்லை.
ஒருகாலத்தில் நாங்களெல்லாம் நேசித்த வைகோ என்றோ தொலைந்துவிட்டார். இன்று இருப்பவர் தோற்றுப்போன ஒரு வயதான நடிகர். பழங்கால நினைவுகளை மட்டுமே வைத்துக் கொண்டு நிகழ்காலத்தில் அதை வைத்துக் கொண்டே ஓட்டிவிடலாம் என நினைத்து பரிதாபமாக தோற்பவர்.
ஒரு காலத்தில் அவரது பெருமைமிக்க நினைவுகளே அவரை இன்று கொலை செய்கின்ற மாபெரும் ஆயுதங்களாக மாறி துன்புறுத்திக் கொண்டிருக்கின்றன என்பதை தான் அவர் கோபமாக வெளிப்படுத்திக் காட்டிக் கொண்டிருக்கிறார். அந்தப் பெருமை சித்திரத்தை வைகோ என்றோ தனது அரசியல் தவறுகளால் மாற்றி கோமாளி சித்திரமாக வரைந்து விட்டார்.
இனி வைகோ என்ற மனிதர் ஒரு காலத்தில் வாழ்ந்தார் என்பதை வைகோவே சொன்னால் கூட யாரும் நம்பப் போவதில்லை.
ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஒரு கருவறையின் காத்திருப்பு..
—————————————————–
சமீபத்தில் இயக்குனர் கௌதமன் அவர்களின் தந்தையார் மறைவுக்கு திட்டக்குடிக்கு அண்ணன் சீமானோடு சென்றிருந்த போது அம்மாவை பார்த்தேன். இந்த முறை இன்னமும் தளர்ந்திருந்தார்.அண்ணனோடு ஏதோ பேசிக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடன் இறுக கைகளைப் பற்றிக் கொண்டார்.
கூட்டம் அதிகமாக இருந்தது நான் நகர்ந்து வந்து விட்டேன். சில நேரம் கழித்து வழக்கறிஞர் அங்கயற்கண்ணி எனது நண்பர் திருமலை அக்கா அமுதா நம்பி ஆகியோரோடு அவர் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்.
என்னை பார்த்தவுடன் மீண்டும் வந்து என் கைகளை பற்றிக்கொண்டார். அவரது கண்களை நேரடியாக பார்ப்பது என்பது ஆறாத ரணம் ஒன்றை நேரடியாக காண்பது போன்றதான கொடுமை. அவரைப் பார்க்கும்போதெல்லாம் ஆழ்மனதிற்குள் ஒரு குற்ற உணர்வு. நாமெல்லாம் உண்டு களித்து உறங்கும் பொழுதுகளில் கூட வெறுமை வீடொன்றில் வாசலில் நிழலாடும் ஒரே ஒரு உருவத்திற்காக 28 வருடங்களாக அவர் காத்திருக்கிறார். அது ஒரு துயர்மிக்க நீண்ட காத்திருப்பு. பசுவதை குறித்து பாடம் எடுக்கும் இந்த நாட்டில் ஒரு தாய் 28 வருடங்களாக அனுபவித்து வரும் வதை குறித்து இந்த மானுடச் சமூகம் கண்டும் காணாமல் கடந்து போவது உலகின் மாபெரும் கொடுமை.
அந்த ஈர விழிகள் எப்போதும் உறங்கியதே இல்லை. வயதான அந்த தாய் தந்தையர் எழுதாத கடிதங்கள் இல்லை. போகாத போராட்டங்கள் இல்லை. கையில் ஒரு தட்டியோடு தமிழகத்தில் அவர்கள் நிற்காத வீதிகள் எங்கும் இல்லை.
இத்தனைக்கும் பிறகும் கூட உடல் நலிவுற்ற அவரும், அவரது கணவரும்.. தங்களைப் போலவே நீண்ட சிறை வாசத்தால் நோய்மையின் எல்லைகளை தொட்டு தவிக்கிற தங்கள் மகனை என்ன விலை கொடுத்தேனும் விடுதலை செய்யும் முயற்சியில் தளர்ந்தே இல்லை.
அவர்களுக்கென்று இந்த உலகில் எதிரிகள் யாரும் இல்லை. தங்கள் மகன் விடுதலைக்கு உயரும் ஒவ்வொரு கைகளும் அவர்களுக்கு உறவுகளே. தங்கள் மகன் விடுதலைக்கு உழைக்கும் ஒவ்வொரு முகத்திலும் அவர்கள் தங்கள் மகனை காணுகிறார்கள்.
வரப்போகின்ற ஒரு வசந்த நாளுக்காக.. 28 வருடங்களாக வாழ்க்கையை தொலைத்து விட்டு வாசலை நோக்கி அந்த ஈர விழிகள் காத்திருக்கின்றன. பிஞ்சுக் குழந்தை முதல் இளைஞனாக நின்ற பருவம் வரை அந்த வீட்டில் உலவிய அந்த வெண்ணிற கால்கள்.. மீண்டும் தங்கள் வீட்டு முற்றத்தில் தென்றலாக உலவாதா என்கின்ற உள்ளார்ந்த ஏக்கத்தில் அவர்கள் காத்திருக்கிறார்கள்.
அந்த ஒரே ஒரு மகன் வெறும் மகன் அல்ல.. அவர்களது உலகம்.. அவர்களது வாழ்க்கை..
அவன் உண்மையிலேயே பேரறிவாளன்.மரண வலியிலும் மகிழம்பு புன்னகை களை உதிர்க்கும் பேரழகன்.
28 வருடங்களாக அந்த உலகம் அவர்களுக்கு தொலைந்து இருக்கிறது. நம்மைப் போல ஒரு நாளும் அவர்கள் இயல்பாக உண்டு உறங்கி மகிழ்ந்து வாழ்ந்ததில்லை.
செய்யாத குற்றத்திற்கு.. புரியாமல் அறியாமல் 28 வருடங்களுக்கு மேலாக தண்டனை அனுபவித்துவிட்டனர் ஏழு தமிழர்கள். அவர்களைவிட இந்த 28 வருடங்களாக கொடும் தண்டனையை அவரது குடும்பத்தினர்கள் அனுபவித்து விட்டார்கள்.
இனிமேலும் அந்த தண்டனை நீடிப்பது எதனாலும் சகிக்க முடியாதது.
…….
அம்மா என் முன்னால் நின்று கொண்டு இருந்தார்கள்.”மணி செந்தில்.. இந்த முறையாவது உன் அண்ணன் வீட்டிற்கு வந்து விடுவானா.. ”
அந்தக் கேள்வியில் இருந்த வலிக்கு என்னிடம் மருந்து இல்லை. ஆனால் அந்தக் கேள்வியின் பதிலுக்கான வழி நம் ஒவ்வொருவரிடமிருக்கிறது.
தமிழர் ஒவ்வொருவரும் வீதிக்கு வர வேண்டும்.
7 தமிழர் விடுதலையை இந்த உலகமே தன் விழி உயர்த்தி கேட்கும் அளவிற்கு உரத்து கேட்க வேண்டும்.
இணையம் முழுக்க பரப்புவோம். இனி கரங்கள் இணைந்து இயங்குவோம்.
இராஜ விழிகள் கொண்ட பேரழகன்..
————————————————————–
முதன்முதலாக அந்தக் குரலை கேட்டப்போது நான் சற்றே ஆச்சரியம் அடைந்தேன்.அது ஒரு வகையான நெகிழ்வும்,குழைவும் கொண்ட குரல். அந்த இறுக்கமான பிம்பத்திற்கும் அந்த குரலுக்கும் சம்பந்தமில்லை என்றே கருத வேண்டி இருக்கிறது.
அவரைப் பற்றி ஆளாளுக்கு ஒரு கதை வைத்திருக்கிறார்கள்.அவரை சந்தித்தவர்கள் அவரைப் பற்றி நினைவுகளால் அவரவர் பங்கிற்கு ஒவ்வொரு சித்திரத்தை வரைகிறார்கள்.
எதிரிகளுக்கு கூட அவரைப்பற்றி கால தேச அபிமானங்களை தாண்டி ஆச்சர்யங்கள் மிகுந்த வியப்பு இருக்கிறது.
அவர் இல்லை என்கிறார்கள் சிலர். அவர் இருக்கிறார் என்கின்றார்கள் சிலர். ஆனால் அவரோ இந்த மிகை/குறைகளை எல்லாம் கடந்த காலநதியின் முடிவற்ற பயணம் போன்ற ஒரு முடிவிலி.
ஒரு முறை தலைவரைப்பற்றி மறைந்த ஓவியர் வீர சந்தானம் அவர்களோடு உரையாடிக் கொண்டிருக்கையில்.. இராஜ விழிகளோடு பிறந்த பேரழகன் டா அவர். அது அரச அம்சம். என்றார். எனக்கு மகிழ்வு கலந்த ஆச்சரியம்.புன்னகைத்துக் கொண்டேன்.
எனக்கு மிகவும் வேண்டிய நண்பர் ஒருவர் சமீபத்தில் இலங்கைக்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது ஒரு ஆச்சரியமான செய்தியை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.
நமது நண்பர் ஒருபேருந்தில் பயணம் செய்து இருக்கிறார். அந்தப் பேருந்தில் ஒரு வயதான பாட்டியும் அவரது பேரனும் பயணம் செய்திருக்கிறார்கள். பேருந்தில் கூட்டம் நிரம்பி வழிகிறது. திடீரென அந்த பேருந்தில் பயணம் செய்வதற்காக சிங்கள ராணுவ வீரர்கள் சிலர் ஏறுகின்றனர். மற்ற பயணிகளை அவரவர் இருக்கைகளை விட்டு எழச் சொல்லி மிரட்டி கட்டாயப்படுத்தி அந்த இருக்கைகளில் அவர்கள் அமரத் தொடங்கினார்கள். ஆனால் பாட்டியால் மட்டும் எழ முடியவில்லை. தனக்கு மூட்டுவலி இருப்பதாகவும் தன்னால் நின்றுகொண்டு பயணம் செய்ய முடியாது எனவும் சிங்கள ராணுவ வீரரிடம் அந்த பாட்டி கெஞ்சவே அதைப்பார்த்து அந்த சிங்கள வீரன் அந்தப் பாட்டியை வலுக்கட்டாயமாக இருக்கையிலிருந்து பிடித்து கீழே தள்ளுகிறான். பாட்டி கீழே விழுந்தவுடன் அருகிலிருந்த மற்றொரு சிங்கள வீரன் அந்த பாட்டியை அடிக்க கையில் இருந்த லத்தியை ஓங்கியபோது அந்த லத்தியை தனது பிஞ்சு கைகளால் அவரோடு பயணித்து வந்த அந்த பேரன் தடுத்திருக்கிறான். அப்போது அந்த சிறுவனின் அச்சமற்ற விழிகளில் ஒரு வகை பிரபாகரனித்துவம் தென்பட்டதாக என் நண்பர் பிரமித்து கூறினார்.
அவரே மீண்டும் சொன்னார்.
அப்போதுதான் நானே நம்பத் தொடங்கினேன் .
தலைவர் உயிருடன் இருக்கிறார்.
அந்த பிஞ்சு விழிகளில் மட்டுமல்ல எங்கெங்கெல்லாம் அநீதி நடக்கிறதோ அங்கெல்லாம் உயரும் கரங்களில் ..ஒலிக்கும் முழக்கங்களில்.. தலைவர் உயிருடன் தான் இருக்கிறார்.
களங்கமற்ற அந்த புன்னகை மூலமாகவே நான் இந்த உலகில் வாழ்வதற்கான அனைத்து துணிவினையும் அடைகிறேன்.
எனது மூத்த மகன் சிபிக்கு ஒரு பழக்கம் உண்டு. ஏதேனும் கெட்ட கனவு காணும் போதெல்லாம்.. எழுந்து அமர்ந்து பெரியப்பா என்று தலைவரை அழைப்பான். மீண்டும் அவனாகவே உறங்கிவிடுவான். இது அவனது நம்பிக்கை.
அந்த நம்பிக்கை எப்போதும் பொய்த்ததில்லை. தலைவரும் எப்போதும் இறந்ததில்லை.
என் அண்ணனுக்கும்..
என் மன்னனுக்கும்..
இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
தலைவர் 64
நவ 26-2018
பிரிவொன்றின் வானம்
_________________________
உன்
மெளனப்பறவைக்கு
முன்னால்
என் பேரன்பின்
சொற்கள்
தானியங்களாய்
இறைந்து கிடந்தன.
நீயோ எதையும்
பொருட்படுத்தாது
பியோனோ
ஒவியத்தின்
உறைந்திருக்கும்
இசையானாய்..
நிராகரிப்பின்
சிறகுகளோடு
வலசை பயணப்பட
எத்தனிக்கும் உன்
பார்வை
ஏறக்குறைய கடலசைவில்
நின்றாடிய தனிமை
படகொன்றின் நிழலைப்
போர்த்தி இருந்தது.
ஏதேனும் ஒரு நொடி
உடைதலில்
ஏதேனும்
காரணங்கள் தட்டுப்படும்
என்கிற உனது
பரிதவிப்பை நான்
கண்ணாடி சன்னலுக்கு
வெளியே பெய்யும்
மழையை போல
அவதானித்திருந்தேன்.
நாமாகிப் போன
நம் குளத்தின்
அந்த அசைவற்ற
சலனத்தை கலைக்க
ஏதேனும் நினைவின்
கற்களை
வீசுவாய் என
நான் எதிர்பார்த்திருந்த
வேளையில்…
நீ மெளனமாக
தலை குனிந்தாய்..
நீ நிமிர்ந்த போது
உன் கண்கள்
கலங்கிருந்தன.
இனி ஒருபோதும்
உன்னை சந்தித்து
விடக்கூடாது என
அப்போதுதான்
முதன் முதலில்
நினைத்தேன்.
மழையாலானவனின்
மற்றுமொரு உரையாடல்..
——————————
நான் நிதானித்து
செய்கிற எதையும்
உனக்கான பாவனைகளாக
நீயே கற்பிதம்
செய்து கொள்கிறாய்..
என்னை எப்போதும்
ஒரு பியானோ வாசிப்பவனாக
நீ யோசிக்கிறாய்.
நானோ மூடிய
கைகளோடு
அலைபவன்.
அப்படி என்றால்
அந்த மூடிய கரங்களில்
உயிருடன்
துடிக்கும் நீல மீன்
குஞ்சு ஒன்று துடித்துக்
கொண்டு இருப்பதாக
நீ சொல்கிறாய்.
நான் வெற்றுக்கரங்களை
திறந்து காட்டுகிறேன்.
காற்றில் அந்த
நீல மீன் சிறு
தட்டானாய் மாறி
பறந்து விட்டதென
நீ பதைபதைக்கிறாய்.
முடிவாக
உன்னை நான்
கடலில்
தள்ளப்போவதாக
குற்றம் சாட்டுகிறாய்..
இல்லை.
அந்தக் கடலை
கூட
உனக்கென எழுதிய
சில வரிகளுக்கு
இடையே புதைத்து
வைத்திருக்கிறேன்
என்றேன்.
அப்படியென்றால்
நேற்று பெய்த மழையை
எங்கோ எடுத்துச்
சென்று அலட்சியமாக
தொலைத்து விட்டாய்
என விசும்பினாய்.
இல்லை இல்லை..
மழையை தான்
நான் சொற்களாக
மாற்றி உன்னோடு
உரையாடிக் கொண்டிருக்கிறேன்
என்றேன்.
கண்கள் கலங்க
என்னை
பார்த்த நீ
பார்வைகளால்
ஒரு கடலையும்..
மெல்லிய
சிரிப்பொன்றினால்
சிறு அலைகளையும்
அங்கேயே
உருவாக்கினாய்.
அந் நொடியில்..
நீ கொடுத்த
ஈர முத்தமொன்று
நீல மீன் குஞ்சாய்
அதே கடலில் நீந்திக்
கொண்டிருந்ததை
இறுதி வரை நீ
கவனிக்க வில்லை.