மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

துளி-5

உங்களுக்கு பாபுவை தெரியுமா..??

உங்களில் பலர் பாபுவை அறிந்திருப்பீர்கள். அறிந்தவர்களில் பலருக்கு அதுதான் பாபு என்று தெரியாது. பலர் பாபுவாகவே வாழ்ந்திருக்கலாம். பலருக்கு அவர்கள் வாழ்க்கையில் பாபு வாக இருக்க வேண்டிய காலம் நிகழ்ந்திருக்கலாம் ‌.

யார் இந்த பாபு..?? நீங்களும்.. நானும்தான். இதைத்தான் அந்த நாவலை படிக்கின்ற ஒவ்வொரு வாசகனும் உணர்கிறான். சில நூறு பக்கங்கள் விரிகின்ற அந்த நாவலை படிக்கின்ற ஒவ்வொருவரும் தன்னை இரகசியமாக கண்டுவிட்டு வெட்கமுறுவதுதான் அந்த நாவலின் இலக்கிய உச்சம்.
…….

இந்த வாழ்வும், அது சமைத்த விதிகளும் அலை கழிக்காத பெரும் மனிதன் யாரையாவது நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா… வாய்ப்பில்லை. ஏனெனில் அவ்வாறு யாரும் இல்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் தான் நினைத்து பார்க்க விரும்பாத காலம் என்ற ஒன்று இருக்கும்தானே.. அவன் அடைந்த துயரம் அவமானம், காயம், அனைத்தையும் பூட்டி ஓரமாக வைத்துவிட்டு நிகழில் பயணிப்பதாக அவன் காட்டும் பாவனைதான் அவனது வாழ்க்கையாக அறியப்படுகிறது. எது வாழ்வில் அதிகம் மகிழ்ச்சியைத் தருகிறதோ அதுவே வாழ்வில் அதிக துயரத்தை தரும் என்பது இயற்கையின் மாறா விதி. அந்தக் கொடும் விதியின் சாபத்திலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள் யாரும் இல்லை.
……..

மீண்டும் பாபுவிற்கு வருவோம். பாபுவை நான் முதன்முதலில் எனது பதின் வயதுகளில் அறிந்தேன். அவனை அறிந்த உடனே கண்டு கொண்டேன். நான்தான் அவன் என. இதைத்தான் படித்தவர்கள் பலரும் சொன்னார்கள். அந்த மேஜிக்கை நம்முள் நிகழ்த்தியவர் மறைந்த எழுத்தாளுமை தி. ஜானகிராமன். அவர் எழுதிய மோகமுள் நாவலின் கதாநாயகனே பாபு. திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது ஆனால் இலக்கியப்பிரதி தந்த மன எழுச்சியை திரைப்படம் தர தவறிவிட்டது. இருந்தாலும் இளையராஜாவின் அருமையான பாடல்களும், இசையும் மோகமுள் என்ற இலக்கிய உன்னதத்தை இசையாகவும் உணரவைத்தது.

தமிழின் ஆகச்சிறந்த பத்து நாவல்களை பட்டியலிடும் எவரும் மறக்காமல் குறிப்பிடும் ஒரு நாவலாக மோகமுள் இன்றும் திகழ்கிறது. நான் அந்த நாவலை வெவ்வேறு காலகட்டங்களில் வாசித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் நான் வெவ்வேறு அனுபவங்களை அடைந்திருக்கிறேன். பதின் வயதுகளில் முதன்முதலாக படிக்கும்போது சில பக்கங்களை என்னால் கடக்கவே முடியவில்லை. என்னைவிட வயது மூத்த பெண்கள் சிலரைத் காணும்
போது எனக்கு யமுனா வாக தோன்றினார்கள். இதுபோன்ற வயது மயக்கங்கள் அனைத்தும் கரைந்த முப்பதுகளில் அந்த நாவலை மீண்டும் வாசித்தபோது உண்மையில் யமுனா என்றொரு பெண் வாழ்ந்திருக்கிறாள் என நம்பி கும்பகோணம் வீதிகளில் நான் அலைந்திருக்கிறேன். நீங்கள் சாதாரண கண்களில் பார்க்கும் கும்பகோணமும், மோகமுள் நாவலில் விவரிக்கப்பட்டிருக்கிற கும்பகோணமும் சற்றே நுட்பமான அளவில் மட்டுமே வேறானவை. ஏறக்குறைய புனைவின் சாத்தியங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு கும்பகோணத்தை ஒரு காட்சி சித்திரமாக நம் விழிகளுக்கு முன்னால் தி.ஜா மோகமுள்ளில் நிறுவி இருப்பார்.

வளைவுகளும், குறுகிய சந்துகளும், நெருக்கடியான வீடுகளும், பாரம்பரிய மனிதர்களும் இருக்கின்ற புராதன நகர் கும்பகோணம். ஊருக்கு மத்தியில் ஓடும் எழில் நதி காவிரி. இன்னொரு புறத்தில் அந்த ஊரின் சிறு இதயம் போல மகாமகக் குளம். ஊரைச் சுற்றிலும் , ஊருக்குள்ளும் திரும்பிய இடமெல்லாம் கோவில்கள். அதனால் நிறைய வெளியூர் ஆட்கள். வார இறுதி நாட்களில் தோன்றுகின்ற நெருக்கடி, மராட்டிய, சௌராஷ்டிர மக்களின் இயல்பான கலப்பு, பார்ப்பனர்களின் பூர்விகம், பக்கத்திலேயே திருவையாறு , அதனால் இயல்பிலேயே கரைந்திருக்கும் சங்கீதம், பசும்பாலும் டிகாஷனும் ஏதோ ஒரு மாயவிகிதத்தில் ஒன்றாக கலந்து காவிரி நீரோடு இணைந்து உண்டாக்கும் தேவ சுகம் தரும் மயக்கும் டிகிரி காப்பி.. என்றெல்லாம் விவரித்துக்கொண்டே போகின்ற சிறப்புகளைக் கொண்ட கும்பகோணம் நகரமே மோகமுள்ளின் கதைக்களம்.

அதில் கல்லூரியில் படித்துக்கொண்டு சங்கீதம் பயிலவரும் பாபு விற்கும் உரிய வயதாகியும் மணமாகாமல் இருக்கின்ற யமுனா விற்கும் ஏற்படுகிற நட்பு உறவு காதல் காமம் என சகலத்தையும் விவரிக்கின்ற நாவல் மோகமுள்.

இந்த நாவலின் கதையை பலரும் அறிந்திருப்பீர்கள். இந்நாவலில் காட்டப்பட்டிருக்கின்ற கும்பகோணம் பேரழகு வாய்ந்தது. ஏறக்குறைய யமுனாவின் சாயலை ஒத்ததாகவே , சற்றே வயதான ஆனால் கவர்ச்சி குறையாத ஒரு முதிர்கன்னி போல கும்பகோணமும் காட்டப்படுவது தி.ஜாவின் மேதமை.

ஊர்களைப் பற்றி எழுதப்பட்ட பல நாவல்களை தமிழ் கண்டிருக்கிறது. தென் மாவட்டங்களின் கிராமங்களை பற்றி நுட்பமாக எழுதப்பட்ட நெடுங்குருதி,மதுரை நகரத்தைப் பற்றி எழுதப்பட்ட காவல் கோட்டம், கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளைப் பற்றி எழுதிய ஜெயமோகனின் எழுத்துக்கள், தஞ்சாவூரை பற்றி பல நூறு பக்கங்களில் எழுதி குவித்த தஞ்சை பிரகாஷின் எழுத்துக்கள், பழைய தென்னாற்காடு மாவட்ட கிராமங்களைப் பற்றி எழுதிய தங்கர்பச்சானின் எழுத்துக்கள், இன்னமும் தன் ஊரின் அடையாளமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிற கி.ராஜநாரயணின் எழுத்துக்கள், என நீண்டு கொண்டே செல்லும் இந்தப் பட்டியல் முடிவில்லாதது.

அந்த வகையில் தி.ஜா எழுதிய கும்பகோணம் வசிஷ்டர் நிறுவிக் காட்டிய அஸ்தினாபுரத்தை காட்டிலும், கம்பன் எழுதிக் காட்டிய அயோத்தியை காட்டிலும் மிக அழகானது.

ஒரு முறை கும்பகோணம் வந்திருந்த எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணனோடு அலைந்து திரிந்த போது மோகமுள் கதாபாத்திரங்கள் இருந்திருக்கக்கூடிய சாத்தியப்பட்ட பகுதிகளை என்னிடம் சுட்டிக்காட்டினார். ஏறக்குறைய நாவல் விவரிக்கும் தெரு பகுதி வீடு ஆகியவையும் எஸ்ரா காட்டிய பகுதிகளும் ஒரே மாதிரி இருந்தது மிக ஆச்சரியமாக தோன்றியது. நிஜமும் புனைவும் இடைவெளி இல்லாமல் போனதை நான் அப்போது உணர்ந்தேன். ஒரு படைப்பாளனால் நிஜத்திலேயே ஒரு ஊரையும் மனிதர்களையும் உருவாக்க முடியும் என்பதை நான் அறிந்தேன்.

குறிப்பாக நாவலில் வரும் தங்கம்மாள் என்ற கதாபாத்திரம் வாழ்ந்ததாக மோகமுள் சித்திரிக்கும் வீடு ஒன்றினை கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரிக்கு அருகில் காவிரிக் கரையோரம் எஸ்ரா என்னிடம் காட்டினார். பின்னொரு நாளில் அந்த வீட்டைப் பற்றி நான் விசாரித்த போது பல வருடங்களுக்கு முன்னால் அந்த வீட்டில் ஒரு இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட விவரத்தை அறிந்தேன். அப்படி என்றால் அந்த இளம் பெண் தான் தங்கம்மாவா..

இந்த நாவலை எழுதிய தி.ஜா கூட கும்பகோணம் கல்லூரிக்கு அருகே காவிரி நதி ஓரம் அறை எடுத்து தங்கி இருந்ததாக கேள்விப்பட்டேன். அப்படி என்றால் தி.ஜா தான் அந்த பாபுவா..

இருக்கலாம். இல்லாமலும் போகலாம். ஆனால் பாபுக்களும், தங்கமாக்களும், யமுனாக்களும் இன்றும் நம்மிடையே , நாமாக இருக்கிறார்கள். அதுதான் மோகமுள் நமக்குக் காட்டிய நமது அகஉலகத்து உண்மை.

துளி- 4

தலைவர் வருகிறார். ஆயிரக்கணக்கில் கூடியிருக்கும் மக்களின் அழுகுரல்களால் அந்த வளாகமே முடங்கிக்கிடக்கிறது. எதற்கும் கலங்காத இரும்பை போல மனதை உடைய தலைவரும் சற்று பரிதவித்து தான் போயிருக்கிறார்.
தன் மகனை எதனாலும் இழக்கத்துணியாத ஒரு தாயின் பரிதவிப்பு அது. ஏதாவது பேசி அவனைக் கரைத்து கொல்லும் பசியிலிருந்து அவனை மீட்டு ஒரு பிடி சோற்றையாவது ஊட்டிவிட்டுத்தான் நகர வேண்டும் என அவர் கொண்டிருந்த உறுதி வேக வேகமாக நடக்க வைத்து இருந்தது. ஆயினும் அந்த வளாகத்தின் நுழைவாயிலிலேயே தலைவர் தடுக்கப்பட்டார். ஒரு இயக்கம் கடவுள் எனக் கருதும் தன் தலைவரையே தடுக்கும் வரலாற்று நிகழ்வு அதுவரை நிகழ்ந்ததில்லை. தலைவர் விரல் நீட்டும் இடத்தில் வெடித்துச் சாகும் புலிக்கூட்டம் தலைவரை தடுத்து நிறுத்தியது அவருக்கே வியப்பாகத் தான் தோன்றியது. ஒரு விசித்திரமான நிபந்தனை அவர் முன்னால் வைக்கப்பட்டது ‌. போராட்டத்தை தடுக்க வந்தவரை போராட்டத்தை தடுக்கக் கூடாது என நிபந்தனை. தலைவர் தவித்து தான் போனார். இயக்க கட்டளை தலைவருக்கும் பொருந்தும் என உணர்ந்த அறம் வழி நின்று மறம் பாடி வென்று தாய்நிலம் மீட்க வந்த தேவ மீட்பர் அவர்.
வேறுவழியின்றி ஒத்துக்கொண்டு விக்கித்த மனதோடு தளர்ந்து நடந்துபோனார் தலைவர். அவர் முன்னால் மெலிந்த உடலம் ஒன்று விடுதலைப் பசிக்காக உயிரைத் தின்று கொண்டிருந்தது. குழிவிழுந்த கண்களோடு.. ஒடுங்கிய வயிற்றோடு.. சுவாசத்தில் மட்டும் உயிரோடு படுத்துக்கிடந்தான் திலீபன்.
எதற்கும் கரையாத தலைவர் கலங்கி விடக் கூடாது என்ற கட்டுப்பாட்டில் இதயத்தை இறுக்கி வைத்திருந்தாலும் ..கட்டி வைத்திருந்த முடிச்சுகள் ஒவ்வொன்றும் அவிழத் தொடங்கின. நெற்றியில் உள்ளங்கை வைத்து தடவிக் கொடுக்கிறார் தலைவர். உடலில் சூடு இன்னும் இருக்கிறது. போகாத உயிரோடு போராடிக் கொண்டிருக்கின்ற திலீபனை காண சகிக்காது கலங்கி அமர்ந்திருக்கிற தலைவரைப் பார்த்து ஒப்பாரி வைத்து கதறி தீர்க்கிறது தீந்தமிழர் கூட்டம்.

பார்த்தீபா என்று முணுமுணுக்கிறார் தலைவர்.

ஒடுங்கியிருந்த விழிகளுக்குள் அசைவு தென்படுகிறது. உலர்ந்து போன உதடுகள் மெலிதாக உராய்ந்து பார்க்கின்றன. அதைத் தாண்டி எதையும் அசைக்க திலீபனால் முடியவில்லை. அது மரணமில்லாப் பெருவாழ்வை நோக்கி நடந்த பெரும் பயணம் என்பதை தலைவர் உணர்ந்துகொண்டு பெருமூச்செறிந்தார்.

பார்த்தீபன் பசித்துக் கிடந்தான்.

வெறும் சோற்றிலும்,
ஒரு அவுன்ஸ் தண்ணீரிலும்,
அடங்கி விடக்கூடிய சாதாரண பசி
அல்ல அது..

சரித்திர வீதிகளில் சாபமாய் தொடர்கிற
துப்பாக்கி முனைகளுக்கும் எதேச்சதிகார குரல் நெறிவுகளுக்கும்..
எதிராக எழுந்த ஓங்கார பசி.

தலைமுறை தலைமுறையாய் தொடரும் ஒரு அடிமைப் பட்ட இனத்தின் விலங்கொடிக்க எழுந்த புலிகளின் பசி..

துயர் இருட்டு சூழ்ந்த காரிருள் வனமாய் இருண்டு கிடக்கிற ஒரு இனத்தில் சூரிய தீபமாய் பிறந்துவிட்ட சிலர் தேக்கி வைத்த விடுதலைப் பசி..

மின்னும் கண்களில் லட்சிய வேகம் தெறிக்க.. சுடர்விட்டு எரியும் இதயத்தில் சுதந்திரதாகம் தகிக்க… மண்ணை நேசித்தவர்கள் மனதிற்குள் சுமந்த மகத்தான பசி.‌.

காந்தி பசித்து கிடந்தார்‌.
அவர் உலகத்திற்கே உதாரணமாய் போனார்.

எங்கள் திலீபன் பசித்து இறந்தான்..
அவன் அந்த காந்திக்கே
உதாரணமாய் போனான்.

துளி-3

உண்மையில் எளிமை என்பது என்ன.. அது ஒரு பண்பாடா.. அது ஒரு ஒழுங்கா.. அதுவரை கடைபிடித்து வந்த பழக்கவழக்கங்களின் நீட்சியா.. அது ஒரு அடையாள அரசியலா.. என்றெல்லாம் யோசிக்கும் போது எளிமை பற்றி பல்வேறு கதவுகள் நம் முன்னே திறக்கின்றன.
 
எளிமை பற்றி பல்வேறு சமய மரபுகள் விரிவாக ஆராய்கின்றன. புத்தமும், சமணமும் எளிமையை அடிப்படையாக கொண்டவை. இந்திய தத்துவ மரபில் எளிமைக்கென்று ஒரு தனித்த இடம் இருக்கிறது. ஏறக்குறைய ஜப்பானின் ஜென் மரபு கூட எளிமையை அடிப்படையாக கொண்டதுதான்.
 
ஆனால் எளிமை பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. எளிமை என்பது ஒருவித ஆடம்பரம் என்ற விமர்சனம் உண்டு. எளிமை என்றாலே நம் கண்முன்னால் வருவது காந்தியின் தோற்றம்தான். ஆனால் அந்த காந்தியின் எளிமையை பராமரிப்பதற்கு காங்கிரஸ் கட்சி அக்காலத்தில் பல லட்ச ரூபாய் செலவு செய்தது என்ற விமர்சனங்கள் உண்டு. ஏனெனில் அந்த எளிமை குறியீடுதான் அக்காலத்து காங்கிரசின் அரசியல் மூலதனம்.
 
என் தந்தையின் தாய் என் ஆத்தா ராஜாம்பாள் 84 வயது வரை உயிருடன் இருந்து மறைந்து போனார். தன் மகன்கள் நன்கு சம்பாதிக்கும் காலத்திலேயே தான் இளமையில் உணர்ந்த அனுபவித்த , வறுமை நிலையை தன் இறுதிக்காலம் வரை மிக கவனமாக அவர் பாதுகாத்து வந்தார். செருப்பு அணிய மாட்டார். விலை உயர்ந்த புடவை வாங்கிக் கொடுத்தால் வாங்கிக் கொள்ள மறுப்பார். நூல் புடவைகளே அவரது அடையாளம்.காரில் ஏற அவ்வளவு தயங்குவார். நடமாட்டம் இருக்கும் வரை எங்கு சென்றாலும் அவர் வெறுங்காலோடு நடந்தே தான் போவார். அவரைப் பொறுத்தவரை எளிமை என்பது அவரது அன்றாட வாழ்வியல் முறைமை . அவரைப் போலவே என் மாமா வழக்கறிஞர் சீனு ஜெயராமன் அவர்களின் தந்தையார் மறைந்த சீனுவாசன் அவர்கள் தன் மகன் புகழ் பெற்ற வழக்கறிஞராகி , சம்பாதித்து காரில் செல்லும் போதும் தான் நடத்தி வந்த டீக் கடையை விடாமல் நடத்தி வந்ததும், வரும் வாடிக்கையாளர்களுக்கு டீ தயாரித்து ஆற்றிக் கொடுப்பதையும் நான் கண்டிருக்கிறேன். தன் மகன் புகழ்பெற்ற ஒரு அரசியல் தலைவராக , திரைப்பட இயக்குனராக இருந்த போதும் இன்னமும் வயல்வெளியில் வேலை பார்த்து வருகிற அண்ணன் சீமானின் பெற்றோர்களை நான் நேரடியாக கண்டு வியந்திருக்கிறேன்.எளிமையாக இருப்பதே தனது அடையாளமாக கொண்ட பெருமக்கள் அவர்கள்.
 
அரசியலில் இடதுசாரிகளின் எளிமை மிகப் புகழ் வாய்ந்தது ‌. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டெல்லி தலைமை அலுவலகம் ஒரு நவீன கார்ப்ரேட் அலுவலகத்தை விட மிக ஆடம்பரமாக இருக்கும் என நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
 
இளம் வயதில் கம்யூனிஸ்ட் ஆக முயல்வதும், சிவப்பின் பின்னால் திரிவதும் என்பது ஒரு லட்சிய வாழ்வின் மகத்தான கனவு. நானும் சில காலம் அவ்வாறு திரிந்திருக்கிறேன். நான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தபோது தோழர் ஆர் என் கே என்று அழைக்கப்பட்ட அய்யா நல்லக்கண்ணு அவர்களே எனக்கு அரசியல் ஆதர்சம். அவர் பற்றிய பிம்பங்களை என்னுள் பதிய வைத்து அவரை ஒரு லட்சிய புருஷராக என்னுள் பதித்தவர் எனது ஆசான் தோழர் சிஎம் என்று அழைக்கப்பட்ட மதிப்பிற்குரிய சி.மகேந்திரன் அவர்கள்.
 
ஒருமுறை எங்கள் தஞ்சை மாவட்ட சிபிஐ கட்டிடப்பணிகளை பார்வையிடுவதற்காக தோழர் ஆர்என்கே அவர்கள் தஞ்சை வருவதாக அறிந்தேன். அவரை நேரில் சந்திக்க வேண்டுமென நான் நீண்ட நாட்களாக ஆவல் கொண்டிருந்தேன். அவர் வருவதற்கு முன்பாக நாம் சென்றுவிட வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக தஞ்சை கிளம்பி சென்றேன். சற்று நேரமாகிவிட்டது. அலுவலக வாசலில் யாரும் இல்லை. நல்ல வேளை.. ஐயா நல்லக்கண்ணு வரவில்லை போலும். வந்துவிட்டிருந்தால் கூட்டம் கூடியிருக்கும் என நினைத்துக்கொண்டு அலுவலகத்திற்குள் நுழைந்தேன். அலுவலகத்திலும் யாரும் இல்லை. அந்த வளாகத்தில் இருந்த ஒரு கிணற்றில் இடுப்பில் துண்டை கட்டிக் கொண்டு குளித்துக் கொண்டிருந்த ஒரு பெரியவரிடம் ஐயா நல்லகண்ணு அவர்கள் வந்து விட்டார்களா என்று வினவினேன். அவர் என்னை காத்திருக்கும்படி சொல்லிவிட்டு குளித்துக் கொண்டிருந்தார். நானும் அங்கே ஒரு நாற்காலியில் அமர்ந்து அருகில் இருக்கிற ஜனசக்தி நாளிதழை புரட்டிக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து குளித்துக் கொண்டிருந்த அந்தப் பெரியவர் தலையைத் துவட்டியவாறே சொல்லுங்க தோழர்.. என்றார் ‌. நான் மீண்டும் ஐயா நல்லகண்ணு அவர்கள் எப்போது வருவார்கள் என கேட்டேன். அதற்கு அவர் நான் தான் நல்லகண்ணு ‌‌. சொல்லுங்க தோழர்‌.. என்றார்.
 
ஒரு நொடியில் எனக்கு உலகமே அதிர்ந்தது போல தோன்றியது. தீவிரமான ஒரு அசட்டுத் தனமும் வெட்க உணர்ச்சியும் என்னை ஆட்கொண்டன. ஒருவகையில் அந்த எளிமை என்னை அச்சுறுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும்.
 
பிறகு அவரிடம் உரையாடத் தொடங்கினேன். என் அறிவுஜீவி தனத்தை அவரிடம் காட்ட நான் அது வரை படித்து வந்த ரஷ்ய கம்யூனிஸ்ட் மொழிபெயர்ப்பு நூல்களை சார்ந்து சில கேள்விகளை அவர் முன் வைத்தேன்‌‌. விஞ்ஞான கம்யூனிசம், மார்க்சிய பொருளாதாரம் போன்ற தலைப்புகளில் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினேன். அவர் பொறுமையாக எளிய மொழியில் தெளிவான பதில்களை அளித்துக் கொண்டே வந்தார். உண்மையில் அவர் மொழியில் இருந்த எளிமை என் மேதமைத்தனத்தை சுக்குநூறாக நொறுக்கியது என்றுதான் சொல்ல வேண்டும். நீ எல்லாம் ஒரு அறிவாளியா என்று நம் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்பது போல அவரது எளிமை அந்த அளவு வலிமையாக இருந்தது..
 
கொஞ்ச நேரத்தில் மௌனமாகிப் போனேன். ஐயா நல்லக்கண்ணு அவர்களும் கட்சித் தோழர்கள் வரவே கூட்டத்திற்கு கிளம்பினார். அப்போது தான் அய்யா நல்லக்கண்ணு அவர்களின் செருப்பு அறுந்துவிட்ட விபரமும், தைத்து தைத்து பயன்படுத்தியதால் அது மீண்டும் பயன்படுத்த முடியாத அளவிற்கு சென்று விட்ட விபரமும் என்னை வந்து சேர்ந்தன ‌. கொஞ்ச நேரத்துக்கு முன்னால் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு சம்பாதித்துக் கொண்ட கெட்டப் பெயரை இச்சூழ்நிலையை பயன்படுத்தி சரிசெய்து கொள்ள வேண்டுமென ஆர்வக்கோளாறாக திட்டமிட்டேன். அவரது செருப்பின் அளவை அறிந்து கொண்டு அருகில் இருந்த பேட்டா கடையில் நல்ல தோல் செருப்பாக பார்த்து வாங்கிக்கொண்டு போனேன். அட்டையை பிரித்து பார்த்தவர் தான் இதுபோன்ற செருப்புகளை தான் பயன்படுத்துவதில்லை எனவும் சாதாரண சிலீப்பர் செருப்புகளைத்தான் பயன்படுத்துவதாகவும் கூறி செருப்பினை மாற்றச் சொன்னார். மேலும் கட்சித் தோழர்கள் இது போன்ற ஆடம்பர செலவுகளை செய்யக்கூடாது எனவும் பொதுவாக கடிந்து உரைத்தார். செருப்பை மாற்றி வாங்கி வந்த பிறகு அதற்கான ரசீதை பார்த்து அதற்கான தொகையை மறக்காமல் என்னிடம் வழங்கிவிட்டு என் தோளைத் தட்டி.. கட்சி வகுப்புக்குப் போங்க தோழர் ..என்று சொல்லியவாறே நகர்ந்து போனார்.
 
அதுவரை நான் கொண்டிருந்த அனைத்து அரசியல் கருத்தாக்கங்களையும் தனது எளிமை வாழ்வின் மூலம் தகர்த்தெறிந்துப் போனார் ஐயா நல்லகண்ணு. எளிமை என்பது நான் மேற் சிந்தித்த எதுவும் இல்லை, அது ஐயா நல்லக்கண்ணு போன்றோரின் இயல்பான வாழ்வியல் என்பதை உணர்ந்துக் கொண்டேன்.
 
நான் திராவிட இயக்க குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவன். பெரியார் பார்த்து பார்த்து செலவு செய்தவர் என்பார்கள். ஆனால் அவர் வழி வந்தவர்களாக சொல்லிக்கொள்பவர்கள் இருக்கும் பெரியார் திடல், அண்ணா அறிவாலயம் போன்ற ஆடம்பர அரண்மனைகளைப் பார்த்து வியந்திருக்கிறேன். சாதாரண திராவிட கட்சிகளின் நகர , ஒன்றிய நிர்வாகிகளே ஆடம்பரமாக வெள்ளையும் சொள்ளையுமாக வலம் வரும்போது அவர்களுக்கு மத்தியில் சாதாரண சிலீப்பர் செருப்பு போட்டு , அலைந்து திரியும் அய்யா நல்லகண்ணு போன்றவர்கள் மானுட வாழ்வின் மகத்தான அதிசயங்களே..
 
இச்சம்பவம் குறித்து நான் ஒரு முறை தோழர் சி மகேந்திரனிடம் வியந்து சொல்லிக் கொண்டிருந்தபோது.. அவர் என்னைப் பார்த்து புன்னகைத்தவாறு எழுந்து சென்றார். அப்போது அவர் தோளில் மாட்டியிருந்த அவரது ஜோல்னா பை கூட தையல் விட்டு கிழிந்து இருந்தது எனக்கு இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது.

துளி-2

 

 

இன்று தம்பி துருவனிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஆரண்ய காண்டம் திரைப்படத்தைப் பற்றி பேச்சு வந்தது. அந்தப்படத்தைப் பற்றி மிக சுவாரஸ்யமான பல தகவல்களை துருவன் சொல்லிக்கொண்டே போனான். உண்மையில் ஆரண்யகாண்டம் எனக்கும் பிடித்த படம் தான். தமிழில் வெளிவந்து இருக்கிற சில அபூர்வமான திரைப்படங்களில் ஆரணிய காண்டம் ஒன்றாக திகழ்கிறது. தமிழின் முதல் Neo noir வகை திரைப்படம். Neo noir வகை என்பது குற்றங்கள் அதன் பின்னணிகள் குறித்த தனித்துவ பார்வையோடு புனையப்படும் வகைமை. சென்சாரில் 52 கட் வாங்கி வெளியான இத்திரைப்படத்தின் காட்சி ஓட்டத்தில் வெட்டப்பட்ட காட்சிகளால் உறுத்தும் jumb கிடையாது. தியாகராஜன் குமாரராஜா என்ற புதுமுக இயக்குனர். தான் எடுத்த ஒரே ஒரு திரைப்படத்தின் மூலமாக இதுவரை வழமையாக எழுதப்பட்ட தமிழ் சினிமாவின் விதிகளை மாற்றி எழுதினார். சீரான/புதுமையான திரைக்கதை வடிவத்திற்கு ஆரண்ய காண்டம் ஒரு மாபெரும் உதாரணம். ஆரண்யம் என்றால் காடு. அப்படத்தின் கதாபாத்திரங்கள் அனைத்திற்கும் விலங்குகளின் பெயர்களை ஒட்டிய பெயர்கள். ஏறக்குறைய no country for old man என்கின்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கும்.. ஆரண்ய காண்டத்திற்கும் பல்வேறு ஒற்றுமைகள் இருப்பதை நாம் காணும் போது உணரலாம். துருவன் குறிப்பிட்டுச் சொன்னது அந்த படத்தின் தொடக்கம் மற்றும் அந்தப் படத்தின் முடிவிலும் வருகின்ற ஒரு வாசகம்.

அது ஒரு உரையாடல்.

ஏறத்தாழ கிமு 400 நடந்ததாக சொல்லப்படும் ஒரு உரையாடல். நாக நந்தனுக்கும் விஷ்ணுகுப்த சாணக்கியனுக்கும் இடையே நடந்த உரையாடல்.

கேள்வி எளிது தான். பதிலும் எளிமையானது தான்.

தர்மம் என்றால் என்ன..??

எது தேவையோ அதுவே தர்மம்.

அது பற்றிய சிந்தனையிலேயே இந்த நாள் முழுக்க கழிந்தது. ஒரு ஒற்றை வரி எவ்வளவு அலைகழிக்கிறது பாருங்கள். அது ஒரு உறுத்தல். கழுத்தோரம் ஏதோ ஊர்ந்துக் கொண்டிருப்பது போல..

உண்மைதானே.. பசித்தவனுக்கு உணவே தர்மம். விழித்தே கிடப்பவனுக்கு உறக்கமே தர்மம். வேலையில்லாமல் அலைபவனுக்கு வேலையே தர்மம். காதலுற்று திரிபவனுக்கு காதலே தர்மம்.

அவனவன் தேவையே அவன் தர்ம எல்லைகளை நிர்ணயிக்கிறது என்பது தான் இதன் பொருள். நாமாக வரைந்து கொண்ட எவ்வித கோடுகளிலும் மனிதனின் தர்மம் அடங்காது. எழுதி வைத்துக் கொண்ட எந்த சட்டகங்களிலும் அது பொருந்தாது. தன் தர்மத்தை நிறைவேற்றிக் கொள்ள ஒவ்வொரு உயிரினமும் ஏதேனும் மீறலை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது. இன்னும் ஆழமாக சொல்லப்போனால் தர்மத்தின் குணம் மீறல்.

தமிழில் அறம் என்ற ஒரு சொல் உண்டு. அறம் என்பதற்குப் பொருள் நல்லவை என தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் வெளியிட்டு இருக்கிற இரண்டாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகம் சொல்கிறது. தர்மமும் அறமும் ஒன்றுதானா என்றால் ஏறக்குறைய ஒரே பொருளைத் தான் இரண்டு சொற்களும் பிரதிபலிக்கின்றன.

அப்படியென்றால் நல்லவை என்பதற்கான பொருள் தான் என்ன…பொதுவாக நல்லவை என் தீர்மானிக்கப்பட்டதை எல்லாம் எங்கே பொருத்துவது..??

உண்மையில் .. என் பார்வையில் எதுவெல்லாம் சரியெனப்/நல்லவையாக படுகிறதோ அது அடுத்தவன் பார்வையில் தவறாக/பிழையானதாக தோன்றக்கூடும்.

அப்படியெனில் வகுத்து வைத்த கட்டமைக்கப்பட்ட எல்லா தர்மங்களும் /நியாயங்களும் ஒவ்வொரு வித மாயைதான்.. மாயத் தோற்றங்கள் தான் ‌‌..

அதைத்தான் பாரதி அழகாக சொன்னார்.

கானல் நீரோ ..காட்சிப் பிழை தானோ ..என்று..

சுருங்கச் சொல்லின்..

அவரவர் தேவையே தர்மம்.

துளி-1

யாருடைய பிறப்பிற்காகவும் ,இறப்பிற்காகவும் காத்திருப்பதில்லை உலகம். யாருடைய வருகைக்காகவும், யாருடைய விலகலுக்காகவும் அது நிற்பதில்லை. பூமி சுழன்று கொண்டுதான் இருக்கிறது. எந்த இடமும் வெற்றிடமாக இல்லை‌. காற்று இல்லாத இடங்களில் கூட இன்மை நிறைந்திருக்கிறது.

நீரை ஒத்திருக்கிறது மனிதனின் மனம். எந்த இடங்களிலும் எந்த சூழ்நிலைகளிலும் அது பொருந்திக்
கொள்கிறது அல்லது பொருந்திக்கொள்ள போராடுகிறது. அவனை அவனாக தோற்கடிக்க வில்லையெனில்… எவனும் எவனையும் தோற்கடிக்க முடியாது.

சுருங்கச் சொன்னால் உலகம் நாம் நினைப்பதைக் காட்டிலும் மகத்தானது . பெரியது. பல வாசல்கள் கொண்ட இந்த உலகத்தில்.. தனக்கு முன்னால் எதிர்படும் ஏதோ ஒரு வாசலில் நுழைந்து இன்னொரு வாசல் வழியாக தொலைந்து போய்க் கொண்டே இருக்கிறான் மனிதன்.

காலநதி ஓட்டத்தில் நடந்தவை அனைத்தும் நினைவுகளே…

அதைத் தவிர சிந்திக்கவோ.. கண்கலங்கவோ..கொண்டாடுவோ..குழம்பவோ..எதுவும் இல்லை ‌. நதியின் ஓட்டம் போல பயணம் நகர்ந்து கொண்டே இருக்கட்டும். எங்கும் தேங்காமல் குப்பையாக .. குட்டையாக.. நிற்காமல்..

போய்க் கொண்டே இரு. just move on.

பெரியார்- என் புரிதலில்..

 

 

தமிழ்ச் சமூகம் தனது நீண்ட நெடிய பாதையில் எத்தனையோ தலைவர்களை கண்டிருக்கிறது. ஆனால் பெரியார் போன்ற ஆளுமையை இந்த நிலம் அதுவரை பார்த்ததில்லை. பெரியார் எழுதியிருக்கிற /பேசியிருக்கிற அனைத்தும் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறது. நம் நிலத்தில் வேறு எந்த தலைவருக்கும் இப்படிப்பட்ட முறை வகை ஒழுங்கு நிகழ்ந்ததில்லை.

பெரியார் இருந்த காலகட்டத்தில் அவர் உரைத்த கருத்துக்களில் பலவற்றில் குறிப்பாக அவரது மொழிக் கொள்கையில் ,மொழி பற்றிய அவரது நிலைப்பாட்டில் எனக்கு கடுமையான முரண்கள் உண்டு. எல்லை மீட்பு போராட்டம், கீழ்வெண்மணி படுகொலை , 60 களின் இந்தி எதிர்ப்புப் போராட்டம் உள்ளிட்ட பல அரசியல் நடவடிக்கைகளில் அவரது செயல்பாடுகளில் எனக்கு தீவிரமான எதிர்ப்பு நிலை உண்டு.

பெரியாரால் தான் படித்தோம் பெரியாரால் தான் வளர்ந்தோம் பெரியாரால் தான் இங்கு அனைத்தும் நிகழ்ந்தது என்றெல்லாம் ஒரு காலக்கட்டத்தில் நானே பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன். ஆனால் ஒரு காலகட்டம் வந்தது. பெரியாரின் கருத்துக்களை பெரியார் வழி வந்தவர்களாக சொன்னவர்களே மதிக்காமல் கடந்தபோது ..
பெரியார் என்னைப் போன்ற பலரால் மறுவாசிப்புக்கு உட்படுத்தப்பட்டார். வரலாறு முழுக்க பல்வேறு முரண்கள், ஏற்றத்தாழ்வுகள் என அவர் கருத்துக்களில் ஏராளமான குழப்பமும், முன்னுக்குப் பின்னான மாறிய காட்சிகளும் புலப்பட்டன. இன அழிவிற்குப் பிறகு பெரியாரைப் பின்பற்றுகிறவர்கள் மீதான கடும் எதிர்ப்பு நிலை, விமர்சனங்கள் எழும்போதெல்லாம் பெரியாரை கேடயமாகப் பயன்படுத்தும் தந்திரம் போன்றவை பெரியாரை மீண்டும் மீண்டும் வாசிக்க வைத்தன.

என்னைப் பொறுத்தவரையில் பெரியார் கடவுள்- மதம்- சாதி போன்ற நிலைகளுக்கு எவ்வாறு எதிராக நின்றாரோ அதே அளவு நிலம் – இனம் -மொழி ஆகியவைகளுக்கும் எதிராக நின்றார். தேசிய இன பெருமிதங்களை கற்பிதம் என அவர் தவறாக புரிந்து கொண்டார் ‌. வரலாறு பல்வேறு தேசிய இனங்களின் பயணங்களால் நிகழ்ந்தது என்பதை அவர் மறுத்தார். எல்லாவித பிற பெருமிதங்களுக்கு அப்பால் மனிதனே மேலானவன் என அவர் நம்பினார். ஆனால் அந்த மனிதனே ஒரு தேசிய இனத்தின் அடிப்படை அலகு என்பதை அவர் மறுத்தார்.

இது போன்ற பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் நான் பெரியாரை தொடர்ந்து வாசித்துக் கொண்டேயிருக்கிறேன். அவர் பற்றி நான் முழுவதுமாக புரிந்து கொள்ள விரும்புகிறேன். முரண்களும் கருத்துக்களில் முன்னும் பின்னான குழப்பங்களும் உடைய அம்மனிதரை பெரியாரை கடவுளாக்கியவர்கள் மத்தியில் ஒரு கால கட்டத்தில் தோன்றிய சிந்தனையாளராக , சமூகத்தில் நிலவிய பல்வேறு மூடத்தனங்களுக்கு எதிரான கருத்துக்களை துணிச்சலாக உரைத்த ஒரு துணிச்சல்காரராக உணர்ந்து அவரை வாசித்து வருகிறேன்.

பெரியாரை படிக்காமல் அவர்தான் சர்வரோக நிவாரணி என்று பேசுவதும் அவர்தான் அனைத்திற்கும் காரணம் என இகழ்வதும் ஏறக்குறைய சரி சமமானதுதான். பெரியாரைப் பற்றி இருதரப்பினருமே அவரவர் பங்குக்கு பெருமிதங்களை, கற்பிதங்களை , விமர்சனங்களை கட்டி வைத்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் அப்பால் பெரியார் என்ற சிந்தனையாளரின் கருத்துக்கள் தமிழ் நிலத்தில் நிகழ்த்திய மாற்றங்கள் செலுத்திய ஆதிக்கங்கள் ஆகியவை மிக நுட்பமானவை. ஆனால் இவற்றையெல்லாம் தர்க்கரீதியில் உரையாடாமல் பெரியாரை கடவுள் ஆக்குவதிலும் , பெரியார் பெயரைச் சொல்லி வசூல் செய்வதிலும் அவரது வாரிசுகள் மும்முரமாக இருப்பதால் அவர் பற்றிய தீவிர அறிவுப்பூர்வமான உரையாடல்கள் தமிழ் மண்ணில் ஆரோக்கியமாக நிகழாமல் போனது தமிழ் அறிவுலகில் ஏற்பட்டிருக்கிற மாபெரும் குறையாகவே நான் கருதுகிறேன். அளவுக்கு மிஞ்சிய போற்றலும் இகழ்தலும் நிகழ்ந்த மனிதனாக பெரியார் திகழ்கிறார்.

இன்று தமிழ் தேசிய சிந்தனைகள் பரவலாக பரவிக்கொண்டிருக்கின்ற காலகட்டத்தில் பெரியார் பற்றிய பெருமித கதையாடல்களை சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு அவரை மறு வாசிப்புக்கு உட்படுத்துவதே தற்கால இளையோருக்கு சரியான ஒன்றாக இருக்க முடியும் என நான் நம்புகிறேன். பெரியாரை வாசிக்காமல் இகழ்வது எப்படி அபாயமோ பெரியாரை வாசிக்காமல் புகழ்வதும் அவ்வாறு அபாயகரமானது. இந்த இரு நிலைகளுக்கும் அப்பால் பெரியாரை ஒரு காலகட்டத்தின் மனிதர் என்ற வகையில் கருதி மெளனமாக கடந்து செல்பவர்கள் எத்தனையோ மடங்கு மேலானவர்கள்.

ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் தமிழ் நிலத்தில் தீவிரமான தாக்கத்தை செலுத்திய/ பல முற்போக்கு ,பெண்ணீய, மூடத்தன எதிர்ப்பு, சாதி மத எதிர்ப்பு என்கிற பல்வேறு சிந்தனை முறைமைகளுக்கு வலு சேர்த்த ஐயா பெரியார் அவர்களுக்கு எனது புகழ் வணக்கம்.

இளையராஜா என்கிற கால இயந்திரம்.

 

 

சன் தொலைக்காட்சியில் சற்று நேரத்திற்கு முன்பாக இசைஞானி இளையராஜாவின் சிங்கப்பூர் இசை நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

அந்தப் பாடல்களை நாம் எத்தனையோ முறை கேட்டு இருக்கிறோம். அதே பாடல்கள்தான்.. அதே இசைதான். ஆனாலும் முதல் முறை கேட்ட போது எந்த உணர்ச்சியை நாம் பெற்றோமோ.. அதே உணர்ச்சியை நாம் ஒவ்வொரு முறை அந்த பாடலை கேட்கும் போதும் வருமே ..அதுதான் இளையராஜா.

எனக்கெல்லாம் இளையராஜா பாடல்களை கேட்கும்போது அந்த பாடலை நான் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நான் கேட்ட பொழுதுகள் என் நினைவுகளில் நின்றாடுகின்றன..

ஆதி தாய் கிராமத்திற்கு திரும்பிய ஒரு ஊர் சுற்றி போல .. இளையராஜா பாடல்கள் என் நினைவுகளை எங்கெங்கோ இழுத்துச் செல்கின்றன. அந்தப் பாடல்களின் கரம்பிடித்து ஒரு கை குழந்தை போல நான் நினைவின் வீதிகளில் அலைந்து கொண்டே இருக்கிறேன்.

என் வாழ்க்கையின் விசித்திரப்புள்ளிகளை நான் இளையராஜாவின் இசை கொண்டே கோர்த்து முடிக்கிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன் கல்கத்தா விமான நிலையத்தில் சென்னை வரும் விமானத்திற்காக காத்துக் கொண்டிருந்தபோது அலைபேசியில் ஒரு இளையராஜா பாடலை கேட்டுக் கொண்டிருந்தேன். ஒரு நொடியில் என் கண் முன்னால் தெரிந்த அனைத்து காட்சிகளும் மறைந்துவிட்டன. அந்நொடியில் நான் இளமையில் வசித்த மன்னார்குடியில் இருந்தேன். மன்னார்குடியில் நான் வசித்து வந்த ஹவுசிங் யூனிட் வீட்டில் ஜன்னல் கம்பிகளை பிடித்துக் கொண்டு மழை பொழுதொன்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். என் வீட்டின் சமையலறையில் என் அம்மா சமைத்துக் கொண்டிருந்த உணவின் வாசனையைக் கூட அந்த நொடியில் நான் உணர்ந்தேன். ஒரு நுட்பமான பேரனுபவம் அது. சிறு சிறு அசைவுகளையும் கூட உணர்கிற கடந்த காலத்தை நோக்கிய விசித்திர பயணம் அது.

அந்தப் பாடல் முடிவடைந்த பிறகே நான் கல்கத்தா திரும்பினேன்.

இளையராஜாவின் பாடல்கள் பயணிப்பது என்பது திக்குத் தெரியாத காட்டில் கண் தெரியாத ஒருவன் மாட்டிக்கொண்ட திகைப்பினையும், பொங்கி பிராவகித்து பொத்துக்கொண்டு ஊற்றுகிற அருவி ஒன்றில் தலை நுழைத்து மெய் நனைத்து அடைகிற சிலிர்ப்பினையும் ஒருங்கே அடைகிற அனுபவமாக.. கால நகர்வுகளை கடந்த ஒரு பயணமாகவே நான் கருதுகிறேன்.

அவருடைய இசைக்கு எந்த பாடகரின் உதவியும் அவருக்கு தேவைப்பட்டது இல்லை. சொல்லப்போனால் வரிகள் கூட இரண்டாம் பட்சம் தான். அவர் நம் ஆன்மாவின் மொழி அறிந்து அதன் அலைவரிசைக்கு ஏற்ப ஒருங்கிணையும் வித்தைக்காரர்.

சுருக்கமாக சொல்ல வேண்டும் எனில்..

காதுள்ளவன் கேட்கக் கடவன். உணர்வுள்ளவன் உருகக் கடவன். மனது உள்ளவன் மயங்கக் கடவன்..

இளையராஜாவை உணர்பவன் இந்த மூன்றையும் எளிதாக அடையக் கடவன்.

*****தனி ஒருவன்******

நீ அந்தியின்
கரைகளில்
நின்று கொண்டு 
வெளிச்சங்களை
தன்னுள்
புதைத்தவனைப்
பற்றி புறம் பேசுகிறாய்..

முதுகில் குத்தும்
கத்தி ஒன்றை
கொண்டு
உலகை
உள்ளத்தால்
வென்றவன் ஒருவனை
எளிதாக வெல்ல
முயல்கிறாய்..

உன்னால்
புனையப்படும்
பொய்மையின்
தோற்றங்களின்
எல்லைகளுக்கு
அப்பால் நிற்கிற
பேரன் பின்
ஆதிச்சுழியை
அவதூறு பேசுகிறாய்..

அவன்
ரதகஜபடைகளோடு
களத்திலே நிற்கிறான்..
நீ வெறும்
வீட்டுத் திண்ணையில்
உட்கார்ந்துக் கொண்டு
அவனை வென்று விட்டதாக
வாயை மெல்கிறாய்…

அவன் காற்றின்
அலைவரிசை கோர்த்து
புத்தம் இசையை
புவி மலர இசைப்பவன்.

நீயோ முனக கூட
அடுத்தவனை எட்டிப்
பார்த்து நகல் செய்யும்
போலிகளின் போதாமை
புலிகேசி.

நீ ஏதேனும்
ஒரு சந்தில்
4 திருடர்களோடு
அவனைக்
கொள்ளையடிக்க
குழுமிய போது…
அவன் யுகத்தின்
சரித்திரத்தை
தன் புன்னகைத்
தூரிகையால் எழுதிக்
கொண்டிருக்கிறான்..

அவன் தனித்தவன்
என்றெண்ணி
அவன் நிழலை
உன் குரைப்பினால்
சீண்ட முனைந்தப்
போது…
அவன் புலிகளின்
கூட்டத்தின் நடுவே
சிம்மாசனமிட்டு
அமர்ந்திருக்கிறான்..

அவனை வெல்ல
வேண்டுமெனில்..

ஒரே ஒரு வாய்ப்பு

நீ நிகரற்ற
அவனாகத்தான்
பிறக்க வேண்டும்.

ஏனெனில்..
அவனை மிஞ்ச
அவனாகத்தான்
ஆக வேண்டும்..

தற்கால மருத்துவ நல விவாதங்களும்….தமிழர் மரபு மருத்துவமும்

 

 

 

சமீப காலமாக மரபு வழி மருத்துவத்திற்கும், ஆங்கில மருத்துவத்திற்குமான முரண் உரையாடல்கள் நடந்து வருகின்றன. மரபு வழி மருத்துவம் பிற்போக்குத்தனமானது, அறிவியல் தன்மையற்ற கையாளல்   என்றும் , ஆங்கில வழி மருத்துவம் அறிவியல் பூர்வமானது என்றும் ,நவீனமானது என்றும் அவரவர் பார்வைகளுக்கேற்ப ,அரசியல்- சமூக சிந்தனைகளுக்கேற்ப ஒருவருக்கொருவர் ஊடகங்களிலும், சமூக வெளி தளங்களிலும் விவாதித்து வருகின்றனர்.  ஆங்கில மருத்துவம் தான் அகில உலகையும் காக்கவும் மீட்கவும் வந்த இறுதி மீட்பர் போல சில முற்போக்கு முட்டுச்சந்துகள் கதறுவதையும் நம்மால் கவனிக்க முடிகிறது. சிறிய சிறிய நோய்களுக்குக் கூட ஆயிரக் கணக்கில் செலவு செய்தே தீர வேண்டும் என்கிற ஆங்கில மருத்துவம் தன் முறையைத் தவிர இதர மருத்துவ முறைகளை கடுமையாக நிராகரிப்பதன் நோக்கம், அதன் வணிகமயமும், லாப நோக்கமும் தானே தவிர வேறில்லை.

மனித உடல் குறித்தும், மருத்துவம் குறித்தும் சங்க காலம் தொட்டே தீவிர விழிப்புணர்வில் தமிழ்ச்சமூகம் இருந்தது என்பதற்கான இலக்கியச் சான்றுகள் பரவலாக காணக்கிடைக்கின்றன.

அற்றால் அளவறிந் துண்அ அகுதுடம்பூ

பெற்றான் நெடிதுய்க்கு மாறு

என்கிறது மருந்து என தனி அதிகாரம் கண்ட தமிழர் மறையான திருக்குறள். அளவறிந்து உண்பது குறித்து அன்றே சிந்தித்திருக்கிற தமிழர் மரபு முழுக்க முழுக்க அறிவியல் தன்மைகளை தனது பண்பாட்டு விழுமியங்கள் மூலம் கண்டடைந்து சிறந்திருக்கிறது.

மேலும்

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று

அப்பால் நாற் கூற்றே மருந்து

என்கிறது குறள். அதாவது நோயுற்றவன், அந்த நோயை தன் ஆலோசனை மூலம் தீர்க்கும் மருத்துவர், மருந்து, அருகிலிருப்பவரின் அன்பும், பராமரிப்பும் இந்த நான்கும் ஒரு நோய்க்கு மருந்து என சொல்கிறது குறள். இதில் கவனமாக பார்க்க வேண்டியது நோயுற்றவனே மருந்துகளில் ஒரு வகை. என்கிறது திருக்குறள். ஒவ்வொரு மனிதனுள்ளும் இயற்கையாக இருக்கக் கூடிய நோய் எதிர்ப்பு உணர்வு, மருந்துகளை மிகச்சரியாக காலம் தவறாமல் எடுக்கக்க்கூடிய ஒழுங்கு என நோயுற்றவன் கூட மருந்தாக விளங்குகிறான் என்கிறது தமிழர் மறை.

இவ்வளவு நுட்பமாக மனித உடலை, நோயை, நோய் எதிர்ப்பு உணர்ச்சியை ஆராய்ந்திருக்கிற தமிழரின் மருத்துவ மரபை ஒரே அளவு கோலில் வைத்து பிற்போக்குத்தனமானது என பொங்கும் உளறல்களை எதிர்த்து நாம் தீவிரமாக எதிர்வினையாற்ற வேண்டிய கடமை இருக்கிறது.

ஒரு நோயாளியை கையாளுவதில் மருத்துவரின் கடமை என்ன என்பதை எளிமையாக இரண்டே வரிகளில் விளக்குகிறது தமிழர் மரபு.

நோய்நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச்செயல்

நோயை இன்னதென்று ஆராய்ந்தறிந்து, அதன் மூலக் காரணத்தை கண்டறிந்து , அந்த நோயை தணிக்கின்ற வழியையும் கண்டறிந்து, அதை உடலுக்கு பொருந்தும் படியாக மருத்துவர் மருத்துவம் அளிக்க வேண்டும் என்கிறது குறள்/

மண்டுஅமர் அழுவத்து எல்லிக் கொண்ட

      புண்தேர் விளக்கின் தோன்றும்” (அகநானூறு-111)

என்ற சங்கப்பாடல் போர்களத்தில் காயம் பட்ட வீரனின் காயத்தின் அளவறிந்து மருத்துவம் பார்க்கிற மருத்துவ காட்சியினை விளக்குகிறது.

சுரையம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர் தம்

      உள்நீர் வறப்பப் புலர்வாடு நாவிற்குத்

      தண்ணீர் பெறாஅத் தடுமாற்று அருந்துயரம்

      கண்ணீர் நனைக்கும் கடுமைய காடுஎன்றாள்

(கலித் தொகை)

போர்க்களத்தில் காயம் ஏற்பட்டு உதிரப்போக்கு அதிகம் நிகழும் போது நா வறட்சி ஏற்படும் என்றும் நீர் தாகத்தால் தடுமாற்றம் ஏற்பட்டு துயரம் நேரிடும் என்றும் இக் கலித்தொகைப் பாடலில் மருத்துவ குறிப்புகள் காணப்படுகின்றன.

சித்தர் மரபு வழித் தொடங்கி, இயற்கை மருத்துவ செறிவுடன் இணைந்து தமிழர் மருத்துவம் பல சிறப்புகளைக் கொண்டது.

ஆனால் காலப் போக்கில் காணக்கிடைக்காத  அறிவுச்சுவடிகளை எல்லாம் யாகத்தில் போட வேண்டும் என ஆரியச் சதிக்கு ஆட்பட்டு தீக்கு தின்ன கொடுத்ததும் தமிழர்களே..

இன்றைய ஆங்கில மருத்துவமுறை உலக மயமாக்கலின், வணிகமயமாக்கலின் ஒரு அங்கமாக மாறிப் போய்விட்டது . இந்தியாவில் செயல்படுகிற மருத்துவர்களில் 50 % தகுதியற்ற, அடிப்படை தகுதியற்ற ,பயிற்சியற்ற மருத்துவர்கள் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. ஒரு எம்.பி.பி.எஸ் படிப்பு என்பது மருத்துவத்திற்கான பட்டமே ஒழிய அதுவே மருத்துவரின் தகுதியல்ல.ஒரு மருத்துவ படிப்பிற்கு தனியார் கல்லூரிகள் கோடிக்கணக்கில் வாங்கி பொருளீட்டும் இந்த வணிகச் சூழலில் தரமான மருத்துவர்கள் எவ்வாறு உருவாக முடியும் என்பதற்கு எவரிடத்திலும் பதில் இல்லை. இந்திய பெருநாட்டில் இன்றைய மாபெரும் வணிகமே மருத்துவம் தான் என்பதும், நாட்டின் மக்களை பெருங்கடனுக்கு ஆழ்த்துவதில் மருத்துவச் செலவுகளே முதலிடம் பிடிக்கின்றன என்பதும் புள்ளி விபரங்கள் காட்டுகிற அபாய சமிக்கைகள்.

குறிப்பாக உலக மயமாக்குதல் என்கிற பேராபத்து 1990-ல் தான் வேகமெடுக்க ஆரம்பித்தது. தொடர்ச்சியாக இந்தியாவை ஆண்டுக் கொண்டிருந்த ஆட்சியாளர்கள் அமெரிக்கா போன்ற பன்னாட்டு வல்லரசு நாடுகளின் நிர்பந்தத்திற்கு ஆட்பட்டு எளிய மக்களின் உயிரில் விளையாடத் தொடங்கினார்கள்.ஊருக்கு ஊர் கார்ப்பரேட் தனியார் மருத்துவமனைகள் தோன்றத் தொடங்கின. அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுப்பது கேவலம் என்றும், மீறி எடுத்தால் நோய் முற்றி இறந்து விடுவோம் என்பதுமான உளவியல் பரப்புரைகள் வலிந்து பரப்பப்பட்டன. அரசியல்வாதிகள் கூட உடல் நலம் சரியில்லை என்றால் மிகப்பெரிய மருத்துவமனைகளில் மருத்துவம் எடுத்துக் கொள்ளும் செய்திகள் திட்டமிட்டு பெரிதாக்கப்பட்டன.  மருத்துவ நிறுவனங்கள் தங்கள் மருந்துகளை விற்க பல்வேறு சலுகைகளை, உல்லாச சுற்றுலாக்களை, பரிசுப்பொருட்களை மருத்துவர்களுக்கு வாரி இறைக்கின்றன. பெரும்பாலான மருத்துவர்களும் இவற்றை எல்லாம் துய்ப்பதற்கு இல்லாத நோய்களுக்கு இரண்டு பக்கம் சீட்டெழுதி எதற்கெடுத்தாலும் ஸ்கேன் என்றும் பரிசோதனை என்றும் நோயாளிகளை பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாக கருதத்தொடங்கி விட்டார்கள்.  கார்ப்பரேட் மருத்துவமனைகளில் பணிபுரிகிற மருத்துவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு பண இலக்கு வைத்து ,மீட்டிங் வைத்து கேள்வி கேட்கிற நிகழ்வுகளும் இயல்புகளாகி விட்டன. சந்தைப் பொருளாதாரத்தில் மனித உயிரும், அது குறித்தான அச்சமும் தான் தற்காலத்தில் நடைபெறும் வணிகத்திற்கு கச்சாப் பொருட்களாக விளங்குகின்றன.

இந்த ஆங்கில மருத்துவ கொள்ளைகளுக்கு மாற்றாக பல்வேறு மருத்துவ முறைகள் இருந்தாலும் , ஆங்கில மருத்துவத்தின் பரப்பும், விளம்பரமும் ,பகட்டும் மற்ற மருத்துவ முறைகளை நாடாமல் மக்களை கண்கள் கட்டிய குதிரையாய் ஓட வைத்திருக்கின்றன.

நமது பாரம்பரிய மருந்துப் பொருளான மஞ்சளுக்கு கூட காப்புரிமை நம்மிடத்தில் கிடையாது. காலங்காலமாக நாம் பயன்படுத்திய நம் பூர்வீக மருத்துவ அறிவினை இன்று ஏகாதிபத்திய கொள்கைகளுக்கு பலிக் கொடுத்து விட்டு சிறிய தலைவலி என்றாலும் ஸ்கேன் இயந்திரத்தில் தலைகளை நுழைத்துக் கொண்டிருக்கிறோம். காசில்லாதவர்கள் தாங்களே கல்லறையில் சென்று படுத்துக் கொள்ள வேண்டும் என்கிற  நிலையை ஆங்கில மருத்துவமும், பன்னாட்டு மருந்து நிறுவனங்களும் இன்று ஏற்படுத்தி இருப்பதை எவராலும் மறுக்க இயலாது.

மாற்று மருத்துவமுறைகளான ஹோமியோபதி, அக்குபஞ்சர்,சித்தா, ஆயுர்வேதிக் போன்ற முறைகளில் பல நோய்கள் குணமாவதை பல மருத்துவர்கள் வெற்றிக்கரமாக நிருபித்து இருந்தாலும் அச்செய்திகள் வெளிவராமல் மிகக் கவனமாக பாதுகாக்கப்படுகின்றன. இச்சூழலில் மாற்று மருத்துவத்தை பயின்ற மருத்துவர்கள் கூட நோய்கள் உடனே குணமாக வேண்டும், நோயாளிகள் தங்களை விட்டு போய் விடக்கூடாது என்கிற இலாபநோக்கத்திற்கு பலியாகி ஆங்கில மருத்துவத்தை உபயோகிப்பதையும் நம்மால் காண முடிகிறது.

இந்துத்துவ மத நம்பிக்கையாளர்களும், அடிப்படைவாதிகளும் முன் வைக்கிற மூட நம்பிக்கை மருத்துவ முறைகளை போன்றதல்ல தமிழரின் மரபு மருத்துவம். காலங்காலமாய் தமிழர் தனது வாழ்வியலில் கடைப்பிடித்து அறிந்த அறிவின் செழுமை. வேத காலத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தார்கள், சிசரியன் செய்தார்கள் என்றெல்லாம் கதை கட்டி இன்று பதஞ்சலி,ஹிமாலாயா போன்ற இந்துத்துவ வணிக நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையாக போட்டிப் போடும் இச்சூழலில் எப்போதும் இல்லாத நெருக்கடிகளை தமிழரின் மருத்துவ மரபு எதிர்க்கொண்டுள்ளது.

ஒரு தனிநபர் யூ டியூபில் பார்த்து தனது மனைவிக்கு பிரசவம் பார்த்ததால் அதிக உதிரப் போக்கினால் அப்பெண் இறந்தார் என்கிற தனிநபர் முட்டாள் தனத்தைக் கொண்டே பாரம்பரிய மரபு மருத்துவமுறைகளை தடுக்க கோருவது மிகவும் கொடுமையானது. சுகப்பிரசவத்தைக் கூட சிசரியன் பிரவசங்களாக மாற்றி மனித உயிரை மூலதனமாகக் கொண்டு பணம் பறிக்கும் கொள்ளைக் கூடங்களாக தனியார் மருத்துவமனைகள் மாறி விட்ட பின்னர்… இக்கொள்ளைகளுக்கு எதிராக எந்த சிந்தனை முளைத்தாலும் கொள்ளைக்காரர்களுக்கு கோபம் வரத்தானே செய்யும்…?

எத்தனையோ தலைமுறைகளாக கிராம மருத்துவச்சிகளால் சுகப்பிரசவம் கண்ட நம் மரபு சார்ந்த பிரசவ முறைகள் இன்னும் ஆய்வுக்குட்படுத்தி, நவீன முறைகளுக்கேற்ப மரபு சார் மருத்துவகல்விமுறைகள் மாற்றப்பட்டு ஆங்கில அலோபதி மருத்துவ முறைகளுக்கு மாற்றாக நவீன தமிழர் மருத்துவம் எழ வேண்டும் என்பதுதான் இம்மண்ணைச்சேர்ந்த நமக்கான விருப்பாக இருக்கிறது.

ஒரு பெண் செத்து விட்டாள். இனி சுகப்பிரசவத்தையே நினைத்துப் பார்க்க கூடாது . தனியார் மருத்துவமனையில் சிசரியன் தான் செய்துக் கொள்ள வேண்டும் என நிர்பந்திக்கிற இந்த முற்போக்கு வெங்காயங்களுக்கு தனியாருக்கு அள்ளிக் கொடுக்க கொள்ளையடித்த கோடிகள் இருக்கலாம். ஆனால் நமக்கு..?

ஆங்கில மருத்துவம் தான் அதி உன்னதமும் இல்லை. மற்ற மாற்று மருத்துவமுறைகளில் உண்மைகள் இல்லாமலும் இல்லை. உண்மையில் பல நோய்களுக்கு அலோபதியில் மருந்தே கிடையாது. அனைத்திற்கும் ஒரு வகையான ஆண்டிபயாடிக் என அழைக்கப்படும் எதிர் உயிரி மருந்துகளை வைத்துக் கொண்டு எளிய மக்களை சுரண்டிக் கொழுக்கும் ஆங்கில மருத்துவ முறைகளுக்கு மாற்றாக மாற்று மருத்துவ முறைகளும் உருவாக வேண்டும்.

பேரா. அ.மார்க்ஸ் எழுதிய மருத்துவ நல சிந்தனைகள் என்ற ஒரு நூல் இருக்கிறது. ஆங்கில மருத்துவ நிறுவனங்களின் கொள்ளை மற்றும் இந்தியாவில் பயன்படுத்தப்படும் அலோபதி மருந்துகள் (பல நாடுகளில் தடை செய்யப்பட்டவை ) எத்தகைய கொடும் விளைவுகளை ஏற்படுத்தும், இம் மருந்துகள் பின்னால் இருக்கக்கூடிய அரசியல் என்ன என்பது குறித்து எழுதப்பட்ட விரிவான நூலை அனைவரும் வாசிக்க வேண்டும். அதே போல மருத்துவர் கு.சிவராமன் மற்றும் ம. செந்தமிழன் மரபு மருத்துவ சிந்தனைகள் குறித்த பல்வேறு முக்கியமான கட்டுரைகளை,நூல்களை எழுதி வருகிறார்கள். மருத்துவத்திற்கும், உணவிற்கும் உள்ள நெருங்குய தொடர்பை உணவு யுத்தம் என்கிற நூலில் விரிவாக எழுத்தாளர். எஸ்.இராமகிருஷ்ணன் எழுதியுள்ளார்.

எந்த ஆங்கில மருத்துவ நிறுவனமாவது தன் மாத்திரை,மருந்துகள் தயாரிக்கிற உற்பத்தி விலையை வெளிப்படையாக அறிவிக்குமா என்கிற கேள்வியில் இருக்கிறது ஆங்கில மருத்துவமுறையின் வணிகக் கொடூரம்.

நவீன காலத்தில் மருத்துவ நல சிந்தனைகள் மேலோங்கி இருக்கின்றன.அலோபதி மருத்துவமுறையின் பணம் பிடுங்கும் கொள்ளை, அம்மருத்துவ முறையின் பின் விளைவுகள் ஆகியவற்றை கண்டு,அனுபவித்த மக்கள் பாரம்பர்ய,இயற்கை மருத்துவ முறைகளுக்கு திரும்பத் தொடங்கியுள்ளார்கள். மீண்டும் தங்களை மரபு சார் வாழ்வியல் முறைகளுக்கு ஆட்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள். இவ்வித மாற்றங்களே ஆங்கில மருத்துவத்தை மூலதனமாகக் கொண்டு கொள்ளையடித்து வரும் கொள்ளைக் கூட்டத்திற்கு பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.

ஆங்கில மருத்துவ முறை மேற்கொள்ளும் மருத்துவர்களிலும் நேர்மையான மருத்துவ சிந்தனையாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். சளி பிடிக்கிறது என்று போனால் வீட்டில் மிளகு ரசம் வைத்து குடி என சொல்லும் சில அலோபதி மருத்துவர்களும் இருக்கிறார்கள். எனது குடும்ப மருத்துவர் ஆண்டிபயாடிக் மருந்துகளை எனக்கு எப்போதும் எழுதி தர மறுப்பார். காய்ச்சலா ..அது நான்கு நாளைக்கு இருக்கும். குணமாகி விடும், இது மாத்திரையா என கேட்பார். ஆனால் இப்படி உள்ளோர் மிகச்சிலர் தான் என்பதுதான் வேதனைக்கரமான உண்மை.

தற்காலத்தில் அலோபதி, ஹோமியோபதி,சித்தா, ஆயுர்வேதிக், உணவு முறைகள், உடற்பயிற்சி என பல்வேறு மருத்துவ முறைமைகள் இணைந்த கூட்டு மருத்துவ முறைகளே பயனளிக்கிறது என சமீபத்திய மருத்துவ நல சிந்தனைகள் வெளிப்படுத்தி வருகின்றன.

எனவே அலோபதி ஆங்கில மருத்துவம் தான் அனைத்திற்குமான தீர்வு என கதறும் முற்போக்கு அறிவுசீவிகளை இடது கையால் ஒதுக்கித்தள்ளி விட்டு, பல்வேறு மாற்று மருத்துவமுறைமைகளின் சிறப்பு அம்சங்கள் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும். மேலும் பாரம்பரிய தமிழர் மரபு சார்ந்த மருத்துவ முறைகள் குறித்து ஆராய அரசே ஆய்வகங்களை உருவாக்கி, நம் மரபு சார்ந்த மருத்துவத்தை மீண்டும் செழுமைப்படுத்திட வேண்டும்.

ஆம் ..இதையெல்லாம் யார் செய்வது.. எது செய்யும்..

இம்மண்ணை, இம்மக்களை நேசிக்கக்கூடிய ஒரு மண்ணின் மகனிடத்து அதிகாரங்கள் ஒரு நாள் கிடைக்கும் பொழுது..மக்களின் துயர்களுக்கு மாபெரும் விடுதலைப் பொழுது துளிர்க்கும்.

இ.த.ச பிரிவு 377 நீக்கம்- தேவைப்படும் சில புரிதல்கள்..

இன்றைய தினம் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இரண்டு வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்புகளில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் ஏழு தமிழர்களை விடுவிக்க அதிகாரம் தமிழக அரசுக்கு பிரிவு 161 ன் வாயிலாக உண்டு என்கின்ற முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு.

மற்றொன்று இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 யை ரத்து செய்த வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பு. 1860 ஆம் ஆண்டு மெக்காலே பிரபு அந்த கால சூழலுக்கு ஏற்ப இங்கிலாந்து ராணி குடும்ப விசுவாசத்திற்கு உட்பட்டு இங்கிலாந்து நாட்டின் அதிகாரம் ஆட்சி செய்யும் நிலங்களில் நீக்கமற பரவ வேண்டும் என்ற நோக்கத்தோடு இயற்றப்பட்ட மிகப் பிற்போக்குத்தனமான சட்டம் தான் இந்திய தண்டனை சட்டம். இந்த சட்டம் காலப்போக்கில் ஏற்பட்ட பல மாறுதல்களை உள்வாங்கி பல திருத்தங்களை கண்டு வருகிறது. ஆனாலும் நீண்ட நெடிய நாட்களாக பிரிவு 377 யை தடை செய்யக் கோரும் போராட்டங்கள் இந்திய அறிவுலக சமூகத்தினராலும் ,முற்போக்குச் சிந்தனையாளர்களாலும்,மாற்று பாலினத்தவர்களாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முதலில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 என்ன சொல்கிறது என்பதை நாம் ஆழமாக கவனிக்க வேண்டும்.

அது இயற்கைக்கு மாறான பாலுறவை தடை செய்யும் சட்டமாக மேலோட்டமாக கருதப்பட்டாலும் அது சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் மிகக் கொடுமையானவை. இதன்படி மாற்றுப் பாலினத்தவர்கள் இணைந்து வாழ முடியாத நிலைமையும், மாற்று பாலினத்தவரோடு பிறர் இணைந்து வாழ முடியாத நிலைமையும் நீடிக்கிறது. மேலும் சாதாரண மனிதர்களின் சில பாலுறவு முறைமைகளையும் இது தடை செய்கிறது. பாலுறவு தேர்வு என்பது தகுதி வாய்ந்த வயதையும் , விருப்பத்தையும் சார்ந்ததாக இருக்க வேண்டுமே தவிர இந்திய தண்டனைச் சட்டத்தின் பக்கங்களில் தீர்மானிக்கக் கூடிய ஒன்றாக அமைந்து விடக்கூடாது என்பதுதான் காலம் காலமாக பிரிவு 377 யை எதிர்த்து போராடி வருகிற முற்போக்காளர்கள் மற்றும் மாற்றுப் பாலினத்தவர்களின் கருத்து.

மேலும் ஒரே பாலின திருமண முறையான தன்பாலின உறவு திருமணத்துக்கு இதுவரை 25-க்கும் மேலான நாடுகள் அனுமதி அளித்துள்ளன. குறிப்பாக அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரேசில், கனடா, கொலம்பியா, டென்மார்க், பின்லாந்த், பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, லக்சம்பெர்க், மால்டா, மெக்சிகோ, நெதர்லாந்து, நியூசிலாந்து, நார்வே, போர்ச்சுகல், தென் ஆப்பிரிக்கா, ஸ்பெயின், ஸ்வீடன், இங்கிலாந்து, அமெரிக்கா, உருகுவே போன்ற நாடுகள் அனுமதி அளித்துள்ளன.இந்நிலையில் இந்திய உச்சநீதிமன்றம் வழங்கிய இத்தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது.

இப்பிரிவின் கீழ் நேரடியாக பாதிக்கப்படுபவர்கள் திருநங்கைகள் என்று அழைக்கப்படுகின்ற மாற்று
பாலினச் சொந்தங்கள். காலம் காலமாக அவர்கள் மீது சுமத்தப்படுகிற இழிவிற்கும், நிகழ்த்தப்படுகிற அடக்குமுறைகளுக்கும் இன்றைய தினம் ஒரு விடிவு பிறந்திருக்கிறது என்றே கொள்ளலாம்.

இந்த பிற்போக்குத் சட்டப்பிரிவை கொண்டுவந்த இங்கிலாந்து அரசு கூட பிரிவு 377 யை 60 களிலேயே திரும்பப் பெற்றுக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா உள்ளிட்ட மத ஆதிக்கங்கள் உடைய சில நாடுகளில் மட்டுமே இச் சட்டம் போன்ற சில பிரிவுகள் இன்னும் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்திய தண்டனைச் சட்டத்தை எழுதிய மெக்காலே மத நம்பிக்கைகள் அதிகம் உடைய இங்கிலாந்து அரச குடும்பத்திற்கு மிக விசுவாசமானவர். அவர் கடவுளின் விருப்பத்திற்கு மாறானது என மத நம்பிக்கைகளை சார்ந்து இப்பிரிவை ஏற்படுத்தினார்.அதனாலேயே மத நிறுவனங்கள்,மத ஆதரவு அமைப்புகள் போன்றவை பிரிவு 377 யை தடை செய்ய எதிராக இருக்கின்றன. இதில் இந்து,கிருத்துவம், இஸ்லாம் என்றெல்லாம் பேதமில்லை.

ஆனால் நவீன உலகில் ஒடுக்கப்பட்ட மாற்றுப் பாலினத்தவர்களுக்கு ஆதரவாக பல உரிமைக் குரல்கள் எழுந்து வருகின்றன. நாம் தமிழர் கட்சி கூட சென்ற முறை சட்டமன்றத் தேர்தலில் திருநங்கை ஒருவருக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்து வரலாற்றின் பொன்னேடுகளில் தன் பெயரை பதித்துக் கொண்டது.மேலும் தன் உறுப்பினர் சேர்க்கையில் ஆண்/பெண் என்பதோடு மட்டும் நில்லாமல் மூன்றாம் பாலினத்திற்கும் உரிய இடத்தை நாம் தமிழர் கட்சி வழங்கி இருக்கிறது.

பிரிவு 377 என்பது ஓரினச்சேர்க்கையை தடை செய்த சட்டம். அது நீக்கப்பட்டு விட்டதால் இனி நாடு முழுக்க ஓரினச்சேர்க்கை பரவும் என்பதான விடலைத் தன சிந்தனைப் பதிவுகளை நம்மால் காண முடிகிறது. சமூக தளங்களில், கல்வியறிவு கொண்ட மட்டங்களில் கூட மாற்றுப் பாலினம் அல்லது மூன்றாம் பாலினம் குறித்து இன்னும் பிற்போக்குத் தனமான சிந்தனைகள் நிலவுவது வேதனையானது. பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு நாஸ் பவுண்டேஷன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடுத்த மனுவின் அடிப்படையில் நீதியரசர் தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய இந்திய அரசியலமைப்பு சட்ட அமர்வு பிரிவு 377 யை தடைசெய்து இன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

அவமானத்திலும், இழிவிலும் ,கூனிக் குறுகி நின்று ..கூனிக்குறுகி ..இத்தனை ஆண்டு காலம் பிச்சை எடுத்து ,பாலியல் தொழில் செய்து ..காவல்துறைக்கு கப்பம் கட்டி.. இழிபிறவிகளாக கேலி செய்ய படுபவர்களாக நடத்தப்படும் மாற்றுப் பாலின உறவுகளின் வாழ்வில் இத்தீர்ப்பு புதிய நம்பிக்கைகளை உண்டாக்கி இருக்கிறது. வலியும்,மானக்கேடும் இல்லாத ஒரு சகதர்ம வாழ்வு அவர்களுக்கு அமையட்டும்.

வாழ்த்துகள்.

Page 24 of 53

Powered by WordPress & Theme by Anders Norén