மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

சொல்ல முடியாதவைகளின் சொற்கள்..

 

 

 

யாருக்காவது எதையாவது சொல்ல விரும்பி சொல்லமுடியாமல் தவித்திருக்கிற அனுபவம் உங்களில் யாருக்கேனும் இருக்கிறதா…

சொல்ல முடியாத அன்பு.. காட்ட முடியாத காதல்.. நிறைவேறாத கனவு.. முடிவுறாத பற்று… பூர்த்தியடையாத ஆசை ..என நீண்டு கொண்டே செல்லும் பட்டியலில் உங்களின் உணர்ச்சியும் இருக்கக்கூடும்.

தாய் மடி வாசம் போல சில உணர்ச்சிகள் வார்த்தை வடிவங்களுக்கு உட்படாதவை. சொற்களின் விவரிப்பு எல்லைக்கு அப்பால் நின்று நம் தவிப்பை வேடிக்கை பார்ப்பவை. அப்படித்தான் நானும் இப்பொழுதில் தவித்துக் கொண்டிருக்கிறேன் எனது ஆகச்சிறந்தவனுக்காக…

ஏனெனில் அவன் ஒரு விசித்திரன். சொற்களின் சூட்சமங்களுக்குள் அவ்வளவு எளிதாக அகப்படாதவன். அவன் செவியோடு பிறந்த அலைபேசியும் .. எப்போதும் முகத்தோடு தங்கிய புன்னகையும்.. மட்டும் தான் அவன் என்று நினைத்தால் நீங்கள் ஏமாந்து போவீர்கள். கரும் பசுமை போர்த்திய நேச வனமொன்று அவனுள் உண்டு. உற்சாக மலையில் இருந்து கொட்டும் களங்கமற்ற களிப்பின் மலையருவியும் அவனுள் உண்டு.

அவன் எனது மீட்பர். நான் புதைகுழிகளில் விழுந்து இருக்கிறேன். காலத்தின் கோர இருளில் கரைந்து இருக்கிறேன். பலவீனங்களின் உச்சத்தில் நின்று பயந்து இருக்கிறேன். அதே நேரம் பரவசமும் பட்டிருக்கிறேன். எதனாலும் நிறைவுறாத கொந்தளிப்பு மனநிலை உடைய என்னைப்போன்ற ஒருவனை அருகிலேயே கொண்டிருப்பது மாபெரும் சாபம்தான்.

அந்த சாபம் கொண்ட ஒருவனைத்தான்.. இந்த இரவில் நான் நன்றியோடு கண்கள் கசிய நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

இந்த உலகமே என்னைக் கைவிட்ட போது… உற்றார் உறவினர்.. நண்பர்கள் ,நம்பி நின்றோர் ..என அனைவரும் என் கரங்களை காற்றிலே நிராதரவாய் அலையவிட்டு.. துரோகச் சூடுகளால் உயிர் ஆவியாக தவிக்கவிட்டு இவன் தனித்தவன், அதனாலேயே இறந்தவன் என ஊர் உலகத்துக்கு அறிவித்து விட்டு அகன்ற பிறகு..

அவன் பேரன்பின் மெழுகுவர்த்தி யோடு… நம்பிக்கை தென்றலை கையில் பிடித்துக் கொண்டு நான் புதைக்கப்பட்ட சுடுகாட்டிற்குள் நுழைந்தான். நிராசைகளால் நானே கட்டிக்கொண்ட அந்தப் புதைமேட்டிலிருந்து என்னைத் தோண்டி எடுத்தான்.விழிகளுக்கு ஒளியூட்டினான்.

நான் இறந்து விட்டேன் என்றேன். நீ பிறந்திருக்கிறாய் என்றான் .

இதுதான் அவன்.

என் விழிகளில் படிந்திருந்த கடந்த கால மயக்கங்களை ..அர்த்தமற்ற குருட்டுத்தனங்களை .. அகற்றி முன் செல்ல என் பாதைகளில் முளைக்கத் துடித்த முட்களை அகற்றியவன்.

சொல்லப்போனால் இன்று என் முகத்தில் உயிர்த்திருக்கும் புன்னகைக்கு அவனே காரணமானவன்.

பைபிளில் ஒரு வசனம் வரும்

நீங்கள் பிரார்த்தனையை கைவிடாது இருங்கள். இறைவன் உங்களை கைவிடாது இருப்பார்.

இறைவன் கைவிடுகிற பொழுதுகளும் மனித வாழ்க்கையில் உண்டு. பிராத்தனைகளும் தவறுகிற பொழுதுகள் உண்டு அப்போதும் கூட நம்மை கைவிடாது நடுங்கும் நம் விரல்களை பற்றிக் கொள்கிற அளவற்ற அன்பின் விரல்கள் அவனுடையது.

இதையெல்லாம் படிக்கும் உங்களுக்கு அவனோடு பழக ஆசை பிறப்பது இயல்புதான்.

நீங்களும் பழகலாம். எப்போதுமே மூடப்படாத கதவுகள் கொண்ட இதயம் கொண்ட அவனோடு ..நட்பின் கதகதப்பு மினுக்குகிற விழிகள் கொண்ட அவனோடு…

நீங்களும் பழகலாம்.

ஆனால் அவனை உயிருக்குள் வைத்து உணர ஒரு நிபந்தனை இருக்கிறது.

அதற்கு நீங்கள் மணி செந்திலாகத்தான் பிறக்க வேண்டும்.

அப்படி சக உயிரை மாசற்ற அன்பின் வெப்பத்தினால் உருக்கி விழி கசிய உணர வைக்கவும் ஒரு நிபந்தனை இருக்கிறது.

அதற்கு நீங்கள் சே.பாக்கியராசனாகத்தான் பிறக்க வேண்டும்.
………..

நான் என் தங்கை மீராவோடு , என் மருமகள் அகநகையோடு.. இன்னும் என் இளைய மைத்துனர் பிரபுவோடு மற்றும் … மதுரையில் இருக்கும் எங்கள் அம்மா அப்பாவோடு.. எங்கள் குடும்பத்தோடு..

எல்லாவற்றிற்கும் மேலாக அவன் உயிராக நேசிக்கும் அண்ணன் சீமானோடு…

நாங்கள் கொண்டாடிக் கொள்ள.. எங்களை நினைத்து நாங்களே பெருமைப்பட்டுக் கொள்ள.. எங்களுக்கு பொதுமையாக இருக்கும் மகத்தான காரணம்…

நாங்கள் அவனோடு இருக்கிறோம். அவனோடு வாழ்கிறோம்.

………..

இன்னமும் எழுத நிறைய இருக்கிறது. நன்றியோடு அழுது தீர்க்க கண்ணீர் இருக்கிறது. உணர்ச்சி ததும்ப கலங்கியவாறே கட்டித்தழுவ தோள்கள் இருக்கின்றன. கைகோர்த்து பயணிக்க பயணங்கள் இருக்கின்றன. சேர்ந்திசைக் குரலில் முழங்க முழக்கங்கள் இருக்கின்றன.

ஆனால் இவற்றையெல்லாம் விவரிக்க சொற்கள்தான் இல்லை.

வாழ வாழ்க்கை இருக்கிறது.

வாழ்வோம் தல..

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

நிலாக்காலம்..

 

நாங்கள் ஒரு
காலத்தில்
நிலாவில்
இருந்தோம்.

உண்மையாகவே
எங்கள் ஆத்தா
அந்த
நிலாவில் தான்
வடை சுட்டார்..

எப்போதும் வெளிச்சம்
இருக்கிற நிலாவில்
நாங்கள் பகலிரவு
தெரியாமல்
வளர்ந்தோம்.

பிணைக்கப்பட்ட
விரல்களோடும்..
எங்களை சுமந்த
7 தோள்களில் தான்
நாங்கள் முதற்
கனவு கண்டோம்.

நம்ப மாட்டீர்கள்.

அந்த கனவிலும்
நிலா வந்தது.
..

நம்ப மாட்டீர்கள்.
நாங்கள் கூட
நம்ப முடியாமல்
தவிக்கிறோம்..

ஆம்.
நாங்கள்
ஒரு
காலத்தில்
நிலாவில்
இருந்தோம்

————–

அன்பின் சூட்டினால்..
நினைவுகளை கிளறிய
Jayaprakash Raj க்கு.

இமைக்கா நொடிகள்- ஒரு பார்வை.

ஆல்பர்ட் ஹிட்சாக் திரைப்படங்களைப் பார்த்திருப்பவர்கள் ஒரு சம்பவத்தை ஏதோ ஒரு புள்ளியில் தொடங்கி திரைப்படம் முடியும் போது அதை தொடங்கிய புள்ளியிலிருந்து முற்றிலுமாக வேறுபடுத்தி வேறொரு புள்ளியில் முடிக்கின்ற யுக்தி குறித்து அறிந்திருப்பார்கள். ஒவ்வொரு சம்பவத்தைப் பற்றியும் ஒவ்வொருவருக்கும் வேறுபட்ட கண்ணோட்டங்கள் இருக்கக்கூடும். மனித உளவியலுக்கேயுரிய இயல்பாக இருக்கின்ற இந்த முரணை மூலதனமாகக் கொண்டுதான் சஸ்பென்ஸ் திரில்லர் என்ற வகையிலான திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன.

தமிழில் இதுபோன்ற பல முயற்சிகள் நடந்திருக்கின்றன. எனக்குத் தெரிந்து தமிழில் வெளிவந்த சிறந்த சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம் அதே கண்கள் (1967).

ஆனால் நவீனகால சினிமா அறிவியலுடன் நேரடியாக தொடர்புடைய காரணியாக மாறி இருப்பதால் திரைக்கதைகள் கடுமையான உழைப்பை கோரி வருகின்றன.

செல்போன் உரையாடல்களை ஒட்டுக் கேட்பது, ஹேக் செய்வது, மனிதனை கட்டுப்படுத்தும் அறிவியலை மனிதன் தன் அறிவால் கட்டுப்படுத்துவது ..போன்ற பல யுத்திகளை தனது திரைக்கதையில் பயன்படுத்தி பார்வையாளர்களை கவர இயக்குனர்கள் முயற்சித்து வருகிறார்கள்.

அப்படி ஒரு முயற்சிதான் இமைக்கா நொடிகள். உண்மையில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இம் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடுகின்ற திரைப்படம். திரைக்கதையின் சுவாரசியத்தால் அந்த மூன்று மணி நேரத்தை மிக எளிதாக இயக்குனர் கடக்க வைத்திருக்கிறார். இது பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஒரு விறுவிறுப்பு சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம். வெகு நாட்களுக்குப் பிறகு திரை அரங்கம் நிரம்பி வழிகிற காட்சி இமைக்கா நொடிகளில் தான் நான் காண நேர்ந்தது.

சமூகத்தில் உயர்வான பொருளாதார வசதியோடு இருக்கின்ற ஹை க்ளாஸ் குடும்பத்தின் வாரிசுகள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். கொலைகாரன் எல்லா பெற்றோர்களிடமும் 2 கோடி கேட்டு மிரட்டி வாங்கிக்கொண்டு கொலையும் செய்து விடுகிறான். அடுக்கடுக்காக நிகழும் இந்த கொலையை விசாரிக்கும் சிபிஐ அதிகாரியாக அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் உச்சநட்சத்திரம் நயன்தாரா. இந்தப் படம் அவருக்கானது. ஏறக்குறைய அவருக்கு இணையான கதாபாத்திரத்தில் அவரது தம்பியான அதர்வா. இந்த இருவரையும் தாண்டி படம் முழுக்க ஆக்கிரமிப்பது வில்லனாக வருகின்ற புகழ்பெற்ற இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப். படத்தில் இருக்கின்ற அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஒரு பிளாஷ்பேக் இருக்கிறது. புகழ்பெற்ற நடிகர் முரளியின் மகன் அதர்வா இப்படத்தில் தன்னை மிகவும் மெருகேற்றி இருப்பது ஆச்சரியமான ஒன்று. வில்லன் விடுக்கிற சவால்களை கதையின் நாயகி எதிர்கொண்டு சமாளிக்க முயல்கிறார். பலமுறை அதில் தோற்கிறார். வில்லனுக்கும் நயன்தாராவுக்கும் நடக்கிற அந்த கழுதைப்புலி -சிங்கம் உரையாடல் மிக சுவாரசியமாக இருந்தது. சின்ன சின்ன அசைவுகளிலும் வில்லன் அனுராக் காஷ்யப் மிரட்டியிருக்கிறார் ‌. நயன்தாரா தமிழ்நாட்டின் ஏஞ்சலினா ஜூலி. அதை நிரூபித்தும் இருக்கிறார். குறிப்பாக அவருக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையிலான உறவில் நெகிழ்ந்து உருகுவது அழகாக இருக்கிறது. ஏறக்குறைய அனைவருமே சரிசமமான பங்கு இருப்பது போன்ற திரைக்கதை வடிவமைப்பு இயக்குனரின் திறமை.

படத்தில் நிறைய லாஜிக் மீறல்கள். ஆனாலும் அனுராக் காஷ்யப், நயன்தாரா ,அதர்வா ஆகியோர் தங்களது மேம்பட்ட திறமையால் இமைக்கா நொடிகளை இமைக்காமல் பார்க்க வைக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் ஆர் டி ராஜசேகர் இரவு நேர காட்சிகளில் தான் யார் என காட்டியிருக்கிறார். ஹிப்ஹாப் தமிழா இரண்டு பாடல்களில் தெரிகிறார். வேகமெடுத்து ஓடும் திரைக்கதையால் படத்தின் குறைகள் எதுவும் அதிகம் உறுத்தாமல் கவனித்துக் கொண்டது இயக்குனரின் திறமையே.. பாராட்டுக்கள் அஜய்.

இப்படத்தின் தயாரிப்பில் என் தம்பிகள் அருண்குமாரும் அரவிந்தும் பங்கு பெற்றிருக்கிறார்கள். அருமைக்குரிய சகோதரர் விஜய் சார் இப்படத்தினை உருவாக்குவதில் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறார். படம் வெற்றியடைந்து விட்டது. புன்னகை தவழ இருக்கிற அந்த முகங்களை காண விரைவில் சென்னைக்கு செல்ல வேண்டும்.

இமைக்கா நொடிகள் குடும்பத்துடன் ஒரு மாலையை பொழுதுபோக்காக , விறுவிறுப்பாக கழிப்பதற்கு உத்தரவாதம் அளிக்கின்ற திரைப்படம் .

அவசியம் காணுங்கள்.

மேற்குத் தொடர்ச்சி மலை- யதார்த்த அழகியலின் திரைமொழி.

 

 

ஒரு நாள் இலக்கிய நணபர்கள் சிலரோடு பேசிக் கொண்டிருந்தபோது விடுதலைப்புலிகள் பற்றி பேச்சு வந்தது. அப்போது என் பக்கத்தில் இருந்த ஒரு மூத்த எழுத்தாளர் வெகு சாதாரணமாக விடுதலைப் புலிகளிடம் இருந்த பணத்திற்கு ஏதேனும் ஒரு தீவை விலைக்கு வாங்கி கொண்டு தங்களுடன் வரும் மக்களோடு அங்கே சென்று ஒரு நாட்டை கட்டியிருக்கலாமே என்று கேட்டார். கேள்வி மிக எளிதுதான். அவர் என்னிடம் கேட்க விரும்பியது ஏன் அதே நிலத்தை தக்கவைக்க பிடிவாதமாக உயிரை விடுகிறார்கள் என்பதுதான்.

அவர் ஒரு முற்போக்கு பிராமணர். பூணூலெல்லாம் அணிந்துக் கொள்ள மாட்டார் . மார்க்சிய சித்தாந்தத்தில் நாட்டமுடையவர். அவர் கேட்ட கேள்வி அங்கு இருப்பவர்கள் அனைவரையும் ஒரு நிமிடம் நியாயம்தானே என்று யோசிக்கும் அளவிற்கு குழப்பியது.

நிலத்திற்காக உயிரையா இழப்பார்கள்.. என்ற கேள்விக்கு ஒரு பூர்வக்குடி மனிதனால் என்ன பதில் சொல்ல முடியும் என நீங்கள் நினைக்கிறீர்கள்..?

ஆம். நிச்சயம் உயிரை விட தாய்நிலம் மகத்தானது. அதைத்தான் நானும் சொன்னேன். ஆனால் அந்த அறிவு ஜீவி பார்ப்பனரால் என் பதிலை புரிந்து கொள்ள முடியவில்லை. அது அவரது தவறும் இல்லை. பெரும்பாலும் பார்ப்பனர்களுக்கு தாய் நிலப் பற்று இருப்பதில்லை. ஏனெனில் அவர்களுக்கு என தாய்நிலம் என்று எதுவும் இல்லை. தாய்நில நேசிப்பதென்பது பூர்வ குடிகளின் தனித்துவக் குணம். எந்த தாய்நிலத்தில் ஒரு பூர்வக்குடி பிறந்தானோ அதே தாய் நிலத்தில் தான் இறக்கவும் அவன் விரும்புகிறான். அந்த மண்ணோடு அவன் மண்ணாக மட்கி மாறுகையில் தான் அவன் நிறைவுறுகிறான்.

ஒரு பூர்வக்குடியின் இந்த மகத்தான தாய் நில நேசிப்பு உலகமயம், தாராளமயம், முதலாளித்துவம் , அரசியல் ஆகியவைகளால் எவ்வாறு சூறையாடப்பட்டது என்பதை ஒரு புனைவிற்கு அப்பாற்பட்ட எதார்த்த அழகியலோடு சொல்லப்பட்டிருக்கிற திரைப்படம்தான் மேற்குத் தொடர்ச்சி மலை.

திரைப்படம் என்பது ஒரு புனைவிற்கு முடிந்தளவு நேர்மை செய்கிற காட்சி அழகியல் ஊடகம். தன் முன்னால் விரிகிற அந்தக் காட்சியில் பார்வையையும் ஒரு பாத்திரமாக உணரவைத்து அவனையும் உயிரோடு அதில் உலவவைத்து… திரையோடு ஒன்றிட வைக்கும் மகத்தான ஒரு வித்தை தான் திரைப்படம். அந்த வித்தையை மேற்குத் தொடர்ச்சி மலை மிகவும் உணர்வுபூர்வமாக எதார்த்தமாக நிகழ்த்தி இருக்கிறது.

அந்த மலை வனம். பூச்சிகளின் ரீங்காரம். பறவைகளின் ஓசை. பசும் ஈரம் நிறைந்த ஏற்ற இறக்கமான வழித்தடங்கள். எப்போதும் வீசிக் கொண்டிருக்கிற ஊதற்காற்று, என திரையரங்கு குள்ளேயே நம்மை மலை வனம் ஒன்றின் பசுமை மணத்தை உணர வைத்திருக்கிறார் இயக்குனர் லெனின் பாரதி. அவருக்குப் பக்கபலமாக ஒளிப்பதிவாளர் தேனீ ஈஸ்வரும், இசைஞானி இளையராஜாவும் செயல்பட்டிருக்கிறார்கள்.

கால்வலியும் , களைப்பும் நேர வைக்கிற ஓங்கி உயர்ந்த நெடிய மலை. அதில் தன்னந்தனியனாக தகவல் சொல்பவனாக திரியும் ரங்கசாமி. அவனுடனேயே அலையும் அந்த மலை படுகையில் ஒரு சிறு நிலம் வாங்கும் அவனது கனவு. படம் முழுக்க மலைகளில் வாழுகிற எதார்த்த மனிதர்கள் . மூட்டை தூக்கி தூக்கியே ரத்தம் வருமளவிற்கு இருமிச் சாகும் அந்த முதியவர், மனநிலை பாதிக்கப்பட்ட அந்தப் பெண்மணி, தன் கணவனுக்கு மிகுந்த ஆறுதலாக இருக்கிற அந்த எளிய மலை கிராமத்து பெண், கோபமும் எரிச்சலும் இறுதியில் கண்ணீரும் நிரம்பிய அந்த கங்காணி, ஆவேசமும் கொள்கைப்பிடிப்பும் நிறைந்த அந்த செங்கொடி சகா, என படம் முழுக்க உலவுகிற நிஜ மனிதர்களின் உணர்ச்சிக் குவியலே இப்படத்தின் திரைமொழி.

கதையை சில வரிகளில் நம்மால் சொல்லிவிட முடியும். ஆனால் அந்த வாழ்க்கை தருகிற வலியை யாரால் விவரிக்க முடியும்… கதை இதுதான். சிறிய நிலம் வாங்க ஆசைப்படுகிற மலை வாழ் இளைஞன் ரங்கசாமி. வீட்டில் உள்ள அனைத்தையும் விற்று ..மனைவியின் தாலியையும் அடமானம் வைத்து ,நிலம் வாங்க ஏலக்காய் முட்டையை சுமந்து செல்லும் போது அதைச் சற்றே வைத்துவிட்டு நிலத்தை குடும்பத்தோடு வேடிக்கை பார்க்கும் ஒரு பொழுதில் மூட்டை சரிந்து பாதாளத்தில் விழ அவனது கனவு நொறுங்குகிறது. பிறகு தந்தைக்கு வேண்டிய ஒருவரால் அந்த நிலம் வாங்கும் கனவு கடனாக சாத்தியப்பட.. அந்நேரத்தில் எஸ்டேட்டை மூடி தொழிலாளிகளின் வயிற்றில் அடிக்கிறான் முதலாளி. தொழிலாளி வர்க்கத்திற்காக நேர்மையாக குரல் கொடுக்கும் உண்மையான ஒரு கம்யூனிஸ்ட் இளைஞனுடன் அந்த முதலாளியையும் அவனுக்குத் துணை போன போலி கம்யூனிஸ்டு தலைவர் ஒருவரையும் கொன்றுவிட்டு சிறை படுகிறான் ரெங்கசாமி. சில வருடங்கள் கழித்து திரும்பி வந்து பார்க்கும்போது தன்னிடத்தில் இருந்த ஒரே சொத்தான நிலத்தை விவசாயம் செய்வதற்காக மனைவி வாங்கிய கடனுக்காக அந்த நிலமும் பறிபோக.. என்ன ஆனது ரெங்கசாமியின் கனவு என்பது தான் மேற்குத் தொடர்ச்சி மலை.

பூர்வ குடிகள் நிலங்களை விட்டு வெளியேற முடியாது. ஏனெனில் நிலத்திற்கும், இயற்கைக்கும் ,காடுகள் ,மலைகள் ,சோலைகள் ,தாவரங்கள் என தன்னைச் சூழ்ந்திருக்கும் அனைத்திற்கும் உயிர் இருக்கிறது என நம்பி அந்த வனத்தையும் அந்த மலையையும் மட்டுமே உயிராக நினைத்து வாழ்கின்ற எளிய மக்கள் அவர்கள்.

அந்த மலையைத் தவிர.. வனத்தை தவிர வேறு எதுவும் தெரியாத அவர்களை பலி கொடுத்தே இங்கே நவீன இந்தியா கட்டப்படுகிறது. வலிமையான பாரதத்தை உருவாக்க பல எளிய மனிதர்களின் வாழ்வும் , கனவும் பலி கொடுக்கப்படுவதை தான் நாம் மேற்குத் தொடர்ச்சி மலையில் கண்ணீர் மல்க பார்க்கிறோம்.

இப்படத்திற்கு உயிரே இப்படம் கொண்டிருக்கும் கனத்த மௌனம் தான். அதை இளையராஜா முற்றிலும் உணர்ந்திருக்கிறார். மகத்தான அந்தக் கலைஞனுக்கு எங்கெங்கே இசைப்பது என்பதைத் தாண்டி எங்கெங்கே மெளனிப்பது என்பது மிக நுட்பமாக கைவந்த கலையாக இருக்கிறது. சமீபத்திய நம்பிக்கை வரவு ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர். முழு மலையையும் அப்படியே திரைக்குள் கொண்டு வந்து இயற்கை வெளிச்சங்களோடு படத்தின் அழகியலை மெருகேற்றிருக்கிறார்.

மலையாள திரைப்படங்களில் மட்டுமே நாம் கண்டுணர்ந்த எதார்த்த அழகியல் தமிழ் திரையிலும் ஒளிரத் தொடங்கி விட்டது என்பதற்கான நம்பிக்கைக் கீற்று தான் இந்த மேற்கு தொடர்ச்சி மலை. இந்த உலகமயமும் , சுயநல அரசியல் முறைமைகளும் ஒரு மலை வனத்தின் மென் காற்றாய்.. நிலத்தின் உரிமையாளனாய் .. திரிந்துகொண்டிருந்த ஒரு இளைஞனுக்கு யூனிபார்ம் மாட்டி வாட்ச்மேன் ஆக்கிய கொடும் கதை தான் வீதிக்கு வீதி , ஊருக்கு ஊர் நம் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. அதை ஆவணப்படுத்தியதில் மேற்குத் தொடர்ச்சி மலை முழு வெற்றி அடைந்திருக்கிறது.

இயக்குனர் லெனின் பாரதிக்கு கை நிறைய மலை வனப் பூக்களும்..வாழ்த்துகளும்..

இப்படிப்பட்ட படத்தை தயாரித்த நடிகர் விஜய் சேதுபதிக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

சமரசம் இல்லா சமரன்..

ஒரு முறை நீண்ட பயணத்தின் போது அண்ணன் சீமானிடம் ஒரு கேள்வியை கேட்டேன்.

சமரசம் என்றால் என்ன.. என்னை உற்று நோக்கியவாறு அவர் சட்டென்று பதிலளித்தார்

அது ஒரு சாவு.

உண்மையில் சமரசம் செய்து கொள்ளுதல் என்பது மானுட வாழ்வின் ஒரு அங்கமாக மாறி போனபின் சமரசம் என்பதே மரணத்திற்கு சமமானது என நினைக்கும் அண்ணன் சீமான் தான் தனித்துவமானவர் என்பதை ஒவ்வொரு முறையும் நிருபிப்பவர்.

எத்தனையோ முறை தன்னை நோக்கி வருகின்ற கனிவான அழைப்புகளை தவிர்ப்பது குறித்து அவர் பலமுறை சிந்தித்து இருக்கிறார். சட்டென ஏற்படும் சலனம் கூட தன் கொள்கைக்கான மரணம் என்பதை அவர் மறந்துவிடாமல் நிதானித்து இருக்கிறார்.

நெருங்கிய நண்பர்கள் நலம்விரும்பிகள் ஆகியோர் மூலம் வருகின்ற இந்த அழைப்புகள் தன்னை தவிர்க்கமுடியாத சமரசத்திற்கு உட்படுத்தி விடும் என்று எண்ணி தவிர்த்திருக்கிறார்.

ஊரே அம்மணமாக அலைகிறது.‌ உனக்கு என்ன..என்று பலரும் கேட்டபோது என் மனதிற்கு எது சரியானதோ அதை நோக்கியே போவேன் என்று சொல்லி.. அவர் தனியே சென்று கொண்டிருக்கிறார்.

சமரசமற்ற அரசியல் என்பது சற்றே கடினமானது. அதுவும் வெகுஜன தேர்தல் அரசியலில் சமரசம் என்பது மறுக்க முடியாத அவசிய குணம். சென்ற சட்டமன்றத் தேர்தலில் ஏதோவொரு கூட்டணியில் இணைந்து நாலைந்து சீட்டுகள் வாங்கி இரண்டு மூன்று வெற்றி பெற்று அரசியல் அங்கீகாரம் பெற்றுவிடலாம் என்று சில பெரியவர்கள் ஆலோசனை சொன்னபோது, நான் இரண்டு மூன்று சீட்டுக்காக வந்தவன் அல்ல ..இரண்டு நாட்டிற்காக வந்தவன் என்று சொல்லி தவிர்த்ததை நாங்களெல்லாம் அருகிலேயே இருந்து கவனித்தோம்.

தெரியும். தேர்தல் யுத்தம் கடினம்தான். அதில் உண்மையின் சத்தம் இன்னும் கடினம். எவ்வித சாதிய பின்புலமும் பொருளாதாரப் பின்புலமும் இல்லாத எளிய குடும்பத்தில் பிள்ளைகள் ஒரு மாற்று அரசியலை முன்வைத்து தேர்தல் களத்தில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவது என்பது முதலைகள் வாழும் ஆற்றில் முயல்கள் நீந்தி போவது போல.

ஆனாலும் அந்த நெருப்பாற்றில் இன்முகத்துடன் நீந்த அவர் தயாராகவே இருந்தார். தன் தம்பிகள் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தனி ஒரு மனிதனாய் ஓடி ஓடி பிரச்சாரம் செய்தார். தனித்திருக்கும் இரவு வேளைகளில் கூட ..உளவியலாய் சோர்ந்து இருக்கும் யாரோ ஒருவரை அலைபேசி வாயிலாக அழைத்து வலிமைப் படுத்திக் கொண்டிருந்தார்.

அது அவருக்கென்றே, அவருடன் பிறந்த , அவரது பிடிவாதம். மரணம் எல்லா தவறுகளையும் கழுவி ஒருவரை புனிதர் ஆக்கிவிடும் என்றால்.. இங்கே நீரோ மன்னர்கள் கூட புனிதர்களே என்பதில் அவர் தீர்மானமாக இருந்தார்.

ஏனெனில் அவர் கடந்து வந்த பாதை ஏமாற்றங்களும் துயரங்களும் நிரம்பியது. இனம் அழிந்த காலத்தில்
… பிணம் பிணமாய் விழுந்த பொழுதில் யாராவது தன் மக்களுக்காக போராட வரமாட்டார்களா என ஏங்கித் தவித்து ஒவ்வொரு மேடையாக ஏறி அனைவருடனும் கைகோர்த்து ஏதாவது நல்லது நடக்காதா என்று ஏங்கி ஏமாந்தவர் அவர்.

அந்த வலி தான் அவர் ஆழ்மனதிற்குள் அப்படியே இருக்கிறது. தன் கண் முன்னே தனது உடன் பிறந்தார்கள் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிர்விட்ட பெரும் துயர் கதை அவரை எப்போதும் நிம்மதியுடன் இருக்க விடுவதில்லை. கவிதையும் ,பாடலும் ,இசையும் ,கதையும் பொங்கிய சீமான் என்ற இளைஞன் உறைந்துப் போனான். பெரும் கோபமும், சீற்றமும் ,ஆற்ற முடியாத காயமும், உடைய தலைவரின் தம்பி சீமான் எழுந்து நின்றார்.

எனவேதான் ஊர் உலகமே திமுக தலைவரின் மரணத்தை புனிதப்படுத்தி துயர இசை வாசித்துக் கொண்டிருக்கும் போது.. இவர் அமைதியாக இருந்தார். இதுவரை உலகத்திலேயே நிகழாத ஒன்று நம் உள்ளூரில் நிகழ்ந்து விட்டது போல ஆளாளுக்கு துடிக்கும் துடிப்பை பார்த்து.. நடிக்கும் நடிப்பை பார்த்து.. நாங்களெல்லாம் மிரண்ட போது.. அண்ணன் தடுமாறாமல்.. தடம் மாறாமல் .. அமைதியாக இருந்தார்.

அது ஒரு வித்தியாசமான ஒரு அமைதி. எதனாலும் அச்சுறுத்த முடியாத.. அபகரிக்க முடியாத.. ஆழ்கடலின் சலனமற்ற நிலை போன்ற அமைதி. இந்த மரணம் மட்டுமல்ல ..எந்த மரணமும் எங்களை ஒன்றும் செய்து விட முடியாது .ஏனெனில் நாங்களே மரணத்தின் தொட்டில்களில் பிறந்தவர்கள் என்ற புரிதலில் ஏற்பட்ட அமைதி.

இதோ ..இவர்கள் அடுத்த மீட்பரை தயார் செய்துகொண்டு எங்கள் முன்னால் களத்தில் நிற்கிறார்கள். வழிவழியாய் பரம்பரை பரம்பரையாய் தொடரும் சங்கர மட வாரிசுகளாய் வரிசை கட்டி நிற்கிறார்கள். நேற்றுவரை ஏசியவர்கள் இன்று.. புதிய தலைவரை புனிதராக்கி விடுவதில் மும்முரமாய் இருக்கிறார்கள். வாரிசு அரசியல் தகுதியற்ற தலைமை என்றெல்லாம் தாறுமாறாக பேசிவிட்டு சிலபல சீட்டுகளுக்காக ஒரே மேடையில் தமிழை அடமானம் வைக்க தயாராகிவிட்டார்கள்.

நாங்கள் இதையும் புன்னகையோடு ரசித்துக் கொண்டிருக்கிறோம்.

ஏனெனில் எதையும் சமரசமில்லாத சமரர்களாக அணுகி சமர் செய்வது எப்படி என்பதை சரித்திரம் எங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது.

மேலும் அந்த சரித்திரமே எங்களுக்கு சரியான ஒருவனை அண்ணனாக அளித்திருக்கிறது.

கம்பீர விழிகளோடு. ஒரு இளைய தலைமுறையின் பயணம் தொடர்கிறது.

செங்கொடி… தீயில் உறைந்திருக்கும் கனவு.

 

 

ஜன்னல்களை கடந்து நான் நகரும்போது …
என் அரவம் கேட்டு
கண்களை உயர்த்தி
கேட்கிறார்கள்..
“நான் கடலைச் சென்று அடைவது எப்படி..?”

அப்போது
கடலின் நட்சத்திர எதிரொலிகளை .. நுரையின் சிதறல்களை..
மணற் சுழல்களின் சிதறலை..‌
பின்னொதுங்கும் உப்பின் முனகலை ….
கரையில் ஒதுங்கும் கடற்பறவைகளின் கூக்குரலை…
எதுவும் பேசாமல் ஒலிபரப்புவேன்.

அவ்வாறு என்னில் ஊடே..‌
சுதந்திரமும் கடலும்
மூடப்பட்ட இதயத்திற்கு
பதில் அளிக்கும்.

-பாப்லோ நெருடா (தமிழில் சுகுமாரன்)

நிறமற்ற பல நிறங்களின் அடர்த்தியே இருட்டு. அதுவும் சிறைச்சாலை கொண்டிருக்கின்ற இருட்டு இன்னும் தனித்துவமானது. பகலிலும் சூழ்ந்திருக்கும் இருட்டு. விழிகளிலும் படர்ந்திருக்கும் இருட்டு. அடைப்பட்டிருக்கும் ஒவ்வொரு மனதிலும் அடி ஆழ ஏக்கமாய்.. விடுதலை விம்மலாய் விரிந்திருக்கும் இருட்டு. அந்த இருட்டு ஒரு திரவம் போன்றது. ஏறக்குறைய பாதரசம் போல. சிறைபட்டு கிடக்கின்ற அவர்களின் உடலில் அந்த இருட்டு கொடிய அமில மழையாய் தூறிக் கொண்டு இருக்கின்ற வடிவம் கொண்டது.

சிறையின் நோக்கம் குற்றம் செய்தவர்களை சமூகத்தில் இருந்து அப்புறப்படுத்தி தடுத்து வைப்பதல்ல. மாறாக அவர்களை உளவியலாக சிதைப்பது .நீ சமூகத்திற்கான மனிதன் இல்லை என்பதை அவர்களுக்கு அறிவித்துக் கொண்டே இருப்பது. நீ உயிருள்ள பிணம். உனக்கென்று உணர்ச்சிகளோ எண்ணங்களோ இல்லை என்று அடைப்பட்டு கிடப்பவரின் ஆன்மாவில் சதா அலறிக் கொண்டே இருப்பது.

உடையிலிருந்து ..உணவிலிலிருந்து ..
இயல்பான பழக்கவழக்கங்களில் இருந்து.. ஒரு மனிதனை அப்புறப்படுத்தி நீ அதிகார கரங்களால் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு கைதி ஒரு அடிமை என அவருக்கு நினைவூட்டிக் கொண்டே இருப்பது.

இன்னமும் ஜனநாயக முறைமைகளுக்கு உட்படாத இந்திய சிறைச்சாலைகள் சர்வாதிகாரத்தின் வடிவமாக ஆங்கில ஏகாதிபத்தியத்தின் மிச்சமாக இருக்கின்றன. வெட்டவெளி வானத்தையும்.. எப்போதாவது வீசி தழுவி பார்க்கும் காற்றையும் மட்டுமே அனுமதிக்கின்ற சிறை வளாகங்கள் சிறைப்பட்டவரின் கனவினை காயப்படுத்தும் கத்தி முனைகளாக இருந்து வருகின்றன.

27 வருடங்கள். ஒரு முடிவடையாத வழக்கு. செய்யாத குற்றம். ஆதாரங்களை புறக்கணித்த தண்டனை. இன்னும் முழுமையான உண்மை வெளிவராத சூழல். தண்டனை அளித்த நீதிபதிகளுக்குள்ளாகவே மாற்றுக் கருத்துக்கள் கொண்டிருக்கிற விசித்திரம். இதுதான் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு.

“அடி தளரும்போது ..
பேச்சு தடுமாறும்போது..
மனம் கஷ்டத்தை விழுங்குகிறது.
மௌனம் இருப்பாகிறது.”

(சிறைப்பட்ட கற்பனை என்ற நூலில் வரவர ராவ்))

அப்படி மௌனத்தையே இருப்பாக.. மன வலியையே உடையாக.. எதிர்காலம் குறித்த ஏக்கத்தையே வாழ்வியல் இயக்கமாக 27 வருடங்களாக கொண்டிருக்கின்ற ஏழு தமிழர்களின் விடுதலை தமிழர்களின் கையாலாகாத காரணத்தினால் இன்னும் கானல்நீராகவே காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.

உலகில் வேறு எந்த இனத்திற்கும் நேராத துயரம். இதை ராஜீவ் காந்தி கொலையை காரணம் காட்டி தான் நமது தாய் மண் முற்று முதலுமாக அழிக்கப்பட்டது. இதே ராஜீவ்காந்தி கொலையை காரணமாக காட்டிதான் நம் உடன் பிறந்தார் லட்சக்கணக்கில் கொலை செய்யப்பட்டு
உயிர் துறக்கும் போது நம் உதடுகள் கூட அசையாமல் கவனமாக கண்காணிக்கப்பட்டு ..தடை செய்யப்பட்டது.

ராஜீவ் காந்தி கொலை தமிழர்கள் மீது கவிழ்ந்து இருக்கிற குற்ற உணர்வாக இந்திய அரசு கட்டமைத்து வருகிறது. எந்த உரிமைக்கு குரல் எழுப்பினாலும் நீங்கள் ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்கள் என்று ஏகாதிபத்தியத்தின் விரல்கள் நம்மை நோக்கி நீண்டு கொண்டிருக்கின்றன. எவ்வளவு மனித உரிமைகள் பேசுகிறவர்கள் மனித உரிமைகளுக்காக போராடுபவர்கள் ராஜீவ் காந்தி கொலையில் கைது செய்யப்பட்டு 28 வருடங்களாக சிறைபட்டு கிடைக்கின்ற அந்த ஏழு தமிழர்களைப் பற்றி பேச மறுக்கிறார்கள். இன்னமும் நம் தமிழ்நாட்டிலேயே கூட ராஜீவ் காந்தியைக் கொன்று விட்டு விடுதலை கேட்கிறார்கள் என்றெல்லாம் குரல்கள் எழுவதை நம்மால் வேதனையுடன் கவனிக்க முடிகிறது.

ஏனெனில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு என்பது மிக நுட்பமாக கட்டமைக்கப்பட்ட ஒரு பெரும் கதை. கதை எழுதி அவர்களே கதைக்கான கதாபாத்திரங்களை உருவாக்கினார்கள் . கதைக்கான வில்லன்களை தயார் செய்தார்கள் . வில்லன்களாக சித்தரிக்கப்பட்டவர்களுக்கு அவர்களே தண்டனையும் வழங்கினார்கள். இந்தப் பெரும் கதையை புனைவு செய்யப்பட்ட காட்சியை நம்பியே தீர வேண்டுமென நாம் அனைவரும் கட்டாயப்படுத்தப்பட்டு இறுதியில் நம்பியும் இருக்கிறோம்.

இந்த வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரிகளான கார்த்திகேயன் ரகோத்தமன் ஆகியோர் எழுதிய நூல்களிலேயே ஒருவருக்கு ஒருவர் முரண்பட்டு நிற்கின்ற விசித்திரமான காட்சியை நாம் பார்க்கிறோம்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தடா சட்டம் இவ்வழக்கிற்கு பொருந்தாது என்றும் ராஜீவ் காந்தி கொலை என்பது தனிப்பட்ட பகையின் காரணத்தால் ஏற்பட்ட கொலையே தவிர அது பயங்கரவாத செயல் இல்லை என்றும் ராஜீவ் கொலை இந்திய நாட்டிற்கு இந்திய மக்களுக்கு எதிரானது இல்லை என்றும் தெள்ளத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இவ்வழக்கினை உச்சநீதிமன்றத்தில் விசாரித்த நீதியரசர்களான வாத்வா மற்றும் தாமஸ் ஆகியோர் இடையே தீர்ப்புரையில் பெரும் முரண்கள் இருந்ததை இந்திய நீதி சமூகமும் சட்ட வல்லுனர்களும் கவனிக்காதது போல கள்ள மௌனம் காத்தது இந்த வழக்கில் நிகழ்ந்திருக்கிற இன்னொரு கொடுமை.

பூந்தமல்லி தடா நீதிமன்றம் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருக்க 26 தமிழர்களுக்கும் தூக்கு தண்டனை அளித்தது. இந்தத் தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டில் இன்று சதைப்பற்று இருக்கிற 7 தமிழர்களை தவிர மற்ற 19 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை இவர்களை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் சொன்ன காரணம் இவர்கள் யாரும் கொலையில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் அல்ல. உதவி செய்தவர்கள் மட்டுமே அந்த உதவிக்கான தண்டனையும் கூட இவர்கள் ஏற்கனவே அனுபவித்து விட்டார்கள் என்று தெளிவாக அறிவித்தது.

ஆனால் இதில் என்ன மாபெரும் கொடுமை என்றால்.. இப்போது சிறைபட்டிருக்கிற ஏழு தமிழர்களும் கூட கொலையில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் அல்ல. அதற்கான ஆதாரமும் யாரிடத்திலும் இல்லை. வழக்கை ஜோடித்த சிபிஐ கூட இன்று சிறைபட்டு இருக்கிற இந்த ஏழு தமிழர்கள் ராஜீவ் கொலையில் நேரடியாக தொடர்பு கொண்டதற்கான ஒழுங்கான சாட்சியம் எதையும் முன்வைக்கவில்லை. பிறழ் சாட்சிகள், முரண் ஆதாரங்கள் ,கவனக்குறைவான வாக்குமூலங்கள், என்றெல்லாம் மிக தகுதிகுறைவான ஒரு வழக்கை சிபிஐ தாக்கல் செய்து இன்று ஏழு தமிழர்கள் வாழ்வினை முடக்கிப் போட்டு வைத்திருக்கிறது.

காவல்துறையின் பிடியில் இருக்கக்கூடிய ஒருவர் அளிக்கும் வாக்குமூலத்தை நீதிமன்ற சாட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என இந்திய சாட்சிய சட்டம் தெளிவாக கூறுகிறது. ஆனால் இவ்வழக்கிலோ காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான அடி உதை களுக்கு நடுவே பெறப்பட்ட வாக்குமூலங்கள் தான் இவ்வழக்கின் அடிப்படை ஆதாரங்களாக பயன்படுத்தப்பட்டன ‌.

இதுவரை இந்திய நீதி முறைமை கொண்டிருந்த அனைத்து மரபுகளையும் இந்த வழக்கு காற்றில் பறக்க வைத்தது. செத்துப் போனவன் யாரோ ..சிக்கியவனை சிறைப்படுத்து என்பதுபோல ஏதோ காரணங்களால் சிக்கியவர்களை 27 வருடங்களாக அநியாயமாக சிறைபடுத்தி வைத்திருப்பது என்பது ஒட்டுமொத்த மானுட தன்மைகளுக்கு எதிராக இழைக்கப்பட்டிருக்கிற பெரும் கொடுமை.

27 வருடங்களை இந்த மனிதர்கள் எவ்வாறு கடந்திருப்பார்கள் என்று நினைக்கும் போது .. நம்மால் வேதனை படாமலும்.. அதேசமயம் நம்பிக்கை கொண்ட குறிப்பாக தமிழர்கள் மீது தமிழர்களின் போராட்ட உணர்வின் மீது நம்பிக்கை கொண்ட அவர்களின் மன உரம் குறித்து நம்மால் வியக்காமலும் இருக்க முடியாது.

நான் அண்ணன் ராபர்ட் பயஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலான விடுதலைக்கு விலங்கு எழுதியபோது சிறையில் அவரை சந்தித்து பல மணி நேரம் பேசிக்கொண்டிருக்கின்ற வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவரோடு அண்ணன் பேரறிவாளனும் வருவார். இருவரும் இணைந்து அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட துயரங்களை ,புன்னகை தவழும் முகங்களோடு.. ஆழமான சொற்களோடு .. ஏதோ கிண்டலாக பேசுவது போல துயரத்தையும் நகைச்சுவையாக மாற்றி என் தோளில் கை போட்டவாறே கதைசொல்லி முடிப்பார்கள். கேட்கும் நமது விழிகள்தான் கலங்குமே ஒழிய, அவர்கள் விழிகள் எவ்வித உணர்வுமற்று.. சலனமற்று அமைதியாக இருக்கும்.

ஏனெனில் அவர்கள் அழுவதற்கு இனி அவர்களது கண்களில் கண்ணீரும் இல்லை . உள்ளுக்குள் ஊறிக்கொண்டிருக்கும் சோகத்தை வார்த்தைகளில் வடித்தெடுக்க அவர்களுக்கு வலிமையும் இல்லை.

அண்ணன்கள் முருகன் சாந்தன் ஜெயக்குமார் ஆகியோரோடு நான் மிக நெருக்கமாக பழகியிருக்கிறேன். அண்ணன் ரவிச்சந்திரன் மதுரை சிறையில் இருப்பதாலும் ,அண்ணி நளினி அவர்கள் மகளிர் சிறையில் இருப்பதாலும் பார்க்க வாய்ப்பில்லாமல் போனது.

குறிப்பாக அண்ணன்கள் ராபர்ட் பயஸ் மற்றும் பேரறிவாளன் ஆகிய இருவரும் என் குடும்பத்தின் உறுப்பினர்களாக மாறிப் போனவர்கள். எம் அம்மா அற்புதம் அவர்கள் தன் மகனை மீட்க வயதான தன் கால்களால் நடந்து நடந்து..அடைக்கப்பட்டிருக்கிற கதவுகளை எல்லாம் தட்டி தட்டி ..எங்கெங்கெல்லாம் விடுதலைக்கான குரல்கள் எழும்புகிறதோ அங்கெங்கல்லாம் ஓடிப்போய் உடன் நின்று சோர்ந்தவர். தனது வயதான காலத்திலாவது தனது ஒரே மகன் வீடு திரும்ப மாட்டானா என்று அழைப்பு மணியை ஏங்கி பார்த்துக் கொண்டிருக்கின்ற அந்த தாயின் கண்ணீருக்கு இங்கு எவரிடத்திலும் பதில் இல்லை.

அண்ணன் ராபர்ட் பயஸ் மிகுந்த மனவலிமை கொண்டவர். எதையும் புன்னகையால் வென்று விட முடியும் என்று நம்புகிறவர். அவர் கட்டி அணைக்கும் போதே தெரியும் அவர் பேரன்பின் முகவரி என.. என் தம்பி இடும்பாவனம் கார்த்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது அண்ணன் இராபர்ட் பயஸையும், அண்ணன் பேரறிவாளனையும் பார்க்க நான் சென்ற போது…அப்பொழுதுகளில் மிக இளையவனான தம்பி கார்த்தியை அண்ணன்கள் வயசும் பேரறிவாளனும் செழுமைப்படுத்திக் கொண்டே இருந்ததை என்னால் கண்ணால் காணமுடிந்தது. சிறை மீண்டு வந்த தம்பியும் அதைத்தான் பிரதிபலித்து கொண்டிருக்கிறான்.

ஆகச் சிறந்த மனிதர்கள். விடுதலையாகி வெளியே இருந்தால் நாட்டை வழி நடத்தும் திறன் கொண்ட தலைவர்கள். அண்ணன் பேரறிவாளன் பெயருக்கு ஏற்றாற் போல மிகுந்த வாசிப்பறிவு கொண்டவர். பயஸ் அண்ணன் சிறை வளாகத்தில் புறா வளர்த்து ஓவியங்கள் வரையக்கூடிய மயிலிறகு மனது கொண்ட கலைஞன்.

இப்படி ஒவ்வொருவரும் தனித் திறன்கள் கொண்ட தனிப்பெரும் ஆளுமையாக திகழ்பவர்கள். ஆனால் காலம் அவ்வளவு கருணையானதல்ல. வாழ்வு ஒன்றும் வசந்த பூக்களால் நிரம்பிய பூக்கூடை அல்ல. பெரும் சாபமே கொண்ட ஆழ்கிணறு என்பதனை அவர்களது 27 வருட சிறை வாழ்க்கை உணர்த்துகிறது.

அவர்கள் பட்டிருக்கும் சிறை என்பது தமிழ்த் தேசிய இனம் பட்டிருக்கும் கடன். நம் ஒவ்வொருவரின் மீது சுமத்தப்படுகின்ற சுமை. உறக்கத்தின் போது கூட நம் கனவிலும் நம்மை வெறிநாய் போல துரத்துகின்ற கொடும் நினைவு.

அவர்களைச் சந்தித்த பிறகு மகிழ்ச்சியான பொழுதுகளில் கூட குற்ற உணர்வோடு நான் இற்றுதான் போய் இருக்கிறேனே ஒழிய… இயல்பானவனாக இருந்ததில்லை.

இதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என நீங்கள் கேட்கலாம். இருக்கிறது.

அதை உணர்ந்துதான் தங்கை செங்கொடி தீக்குளித்தாள். உடன் பிறந்த அண்ணன்கள் எவ்வித ஆதரவும் மற்றும் தூக்கில் தொங்க விடக்கூடாது.‌ நீதி செத்து விடக்கூடாது… அநியாயமாக கைது செய்யப்பட்ட 7 தமிழர்களுக்கு ஆதரவாக 12 கோடி தமிழ்த்தேசிய இனத்தில் ஒருவர் கூட இல்லை என்ற பழிச்சொல் இந்த இனத்தின் மீது விழுந்து விடக்கூடாது என்ற பரிதவிப்பில் தான் எம் தங்கை செங்கொடி தீக்குளித்தாள். அவள் காலம் காலமாக தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறாள். விடுதலை என்ற கனவு நிறைவாகும் வரை அவள் எரிந்து கொண்டுதான் இருக்கிறாள். அவள் எரியும் தீயில் உறைகிறது விடுதலைக் கனவு.

ஒரு ராஜீவ் காந்தி இறந்தற்காக இன்னும் எத்தனை தமிழச்சி தாலி அறுக்க வேண்டும் ..???
இன்னும் எத்தனை தமிழர் கொல்லப்பட வேண்டும்..???
ஈழம் போல இன்னும் எத்தனை தேசங்கள் அழிய வேண்டும்..???
இன்னும் எத்தனை விழிகள் கண்ணீர் விட வேண்டும்..???

உண்மையான குற்றவாளிகளை உலகத்திலே உலவ விட்டு விட்டு.. தமிழர்களாகப் பிறந்த ஒரே காரணத்தினால்.. ஏழு தமிழர்கள் அநியாயமாகச் அடைபட்டுக் கிடப்பது என்பது ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய இனத்தின் மீது விடுக்கப்பட்டிருக்கிற சவால்.

இதை உணர்ந்துதான் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 7 தமிழர் விடுதலையில் உறுதியாக நின்றார். காரியங்களை நகர்த்தினார். அவரது வழியில் ஆட்சி செய்வதாக கூறும் எடப்பாடி பழனிச்சாமி உண்மையில் ஜெயலலிதாவுக்கு கட்ட வேண்டியது மணிமண்டபம் அல்ல ….அவரது பெரும் கனவான 7 தமிழர் விடுதலையை சாத்தியப்படுத்துவது.

7 தமிழர் அடைப்பட்டு இருக்கின்ற ஒவ்வொரு நொடியும் தமிழர்களின் இயலாமை உலகிற்கு உரத்த குரலில் அறிவிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது.

இனத்தின் பெருங்கடன் 7 தமிழர் விடுதலை.

கடனை அடைக்க களத்தில் கூடுவோம்.

ஏழு தமிழர் விடுதலையே.. இனத்தின் விடுதலை.

தங்கை செங்கொடிக்கு வீரவணக்கம்.

அன்றாடிய அலைப்பொழுது..

 

கலைத்துப்போட்ட
கடலலை
கோப்புகளிலிருந்து
எனக்கு பிடித்தமான
அலை ஒன்றை
தேர்ந்தெடுத்தேன்.

வெளிர் நீலமும்…
குமிழ் நுரையும்
கொண்ட
சிறு அலை அது.

ஒரு சிறுமிக்கே
உரிய துடுக்கோடு
துள்ளிக்
கொண்டிருந்த
அதை
உள்ளங்கையில்
ஏந்தினேன்.

விரல்கள் மடிப்பினை
கரைகளாக நினைத்து
அலை அடித்து
கொந்தளித்தது.

கைகளை மூடி
காதுகளில்
கேட்டால்..
மீனின் சிறகுகள்
நீந்தும் ஓசை.

கடலையே
உள்ளங்கைக்குள்
வைத்திருக்கிறோம்
என்ற மதர்ப்பில்
நின்ற நொடியில் தான்..

காலை தழுவிய
கடலலை ஒன்றை
கணிக்க தவறினேன்.

இழுத்துப் போட்டது.
தடுமாறி விழுந்ததில்
தவறி விழுந்தது
சிறு அலை..

பேரலை ஒன்றின்
விழுங்கலில்
அடங்கிற்று சிறு அலை.

கடல் ஒரு முறை
சிலிர்த்து அடங்கியது.

ஆனாலும்…

அருகில் விளையாடிய
சிறுமியின் பாதத்தை
தற்போது தொட்டு
விளையாடிப்
போனது..

அந்த சிறு
அலையாகத்தான்
இருக்கக்கூடும்.

… ? ? ?

விசுவாச குருட்டுத்தனம் இழைக்கும் விபரீதங்கள்..

 

 

திமுக தலைவர் கருணாநிதி நினைவேந்தல் நிகழ்விற்கு பாஜக தலைவர் அமித் ஷா வரவேண்டுமென திமுக செயல் தலைவர் ஸ்டாலினும், கனிமொழியும் வேண்டிக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவரது வருகை உறுதி செய்யப்பட்டு இருப்பதாக செய்திகள் வரும் நிலையில் நமக்கு கண்முன் சில காட்சிகள் நிழலாடுகின்றன.

சென்ற வாரத்தில் தமிழகத்தின் புகழ்ப்பெற்ற எழுத்தாளர்கள் இலக்கிய ஆளுமைகள், கவிஞர்கள் பங்கேற்ற மறைந்த திமுக தலைவர் மு கருணாநிதி அவர்களுடைய நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது .அதில் பேசிய பலரும் திராவிட இயக்கம்தான் இந்துத்துவாவிற்கு எதிராக செயல்பட்டிருக்கிறது ,இனியும் செயல்பட இருக்கிறது, எனவே திமுகவை காப்பாற்ற வேண்டும் என்றெல்லாம் உணர்வு பொங்க பேசினார்கள்.

திமுக தலைவர் மு கருணாநிதி உயிருடன் இருந்தபோது கூட அவர் மேடையில் ஏற மறுத்தவர்கள் அவர் இறந்த பிறகு அவரைப் பற்றி புகழ்ந்து பேசியது இலக்கிய முறைகளுக்கு ஏற்புடைய பண்புநலன் என்றும்.. திரு மு கருணாநிதி வெறும் அரசியல் தலைவராக செயல்பட்டது மட்டுமில்லாமல் அவர் ஒரு எழுத்தாளராகவும் இயங்கியிருக்கிறார் எனவே இலக்கியத்துறை அஞ்சலி செலுத்துவது என்பது முறையானது என்றெல்லாம் ஆயிரத்தெட்டு சமாளிப்புகள் சொல்லப்பட்டன.

இது குறித்து நமக்கு எவ்வித அக்கறையோ கவலையோ இல்லாவிட்டாலும் கூட.. எப்போதும் இந்துத்துவாவோடு நேரடியான கூட்டில் இருக்கும் திமுகவை இந்துத்துவ -பார்ப்பனிய கோட்பாடுகளுக்கு எதிரான ஒன்றாக நிறுவத் துடிக்கும் .. அறிவுஜீவித்தனம் தான் நம்மை வியக்க (?) வைக்கிறது.

முதன்முதலாக பாஜக என்ற கட்சியை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியது இதே திராவிட இயக்கத்தினர்தான். அவர்கள் மந்திரிசபையில் இடம் பிடித்து மருமகனுக்கு ஒரு பதவி.. தன்னுடன் மாங்காய் பறித்தவருக்கு ஒரு பதவி என பலருக்கும் பதவி வாங்கி கொடுத்து ,பதவி சுகம் அடைந்து பல்லாயிரக்கணக்கான கோடி ஊழலில் பங்கு போட்டதும் இதே திராவிட இயக்கத்தினர் தான். குஜராத் மதவெறி படுகொலையின் போது பாராளுமன்றத்தில் இதே ஆரிய பார்ப்பனிய இந்துத்துவ பாஜகவுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததும் இதே திராவிட இயக்கத்தினர் தான்.

இதில் எந்த லட்சணத்தில் ஆரிய பார்ப்பன தனத்திற்கு எதிரானவர்கள் இந்த திராவிட இயக்கத்தினர் என்று நீண்ட நாட்களாக கற்பிதம் செய்யப்பட்டு வருகிறது என்பது புரியவில்லை.

இன்று திராவிட இயக்கத்தின் ஒப்புயர்வற்ற தலைவர் , திராவிட இனத்தின் அடையாளம்..மு.க விற்கு புகழுரை உரைக்கவும், கலைஞர் கானா பாடவும் பாஜக தலைவர் அமித்ஷா வருவது பற்றி நமக்கெல்லாம் எவ்வித ஆச்சரியமும் இல்லை. இதுதான் அவர்களது குணம் .இதுதான் அவர்களது நிறம். இதுவரை காவியை கருப்பாக எண்ணிக்கொண்டிருந்தது நமது கண் குருடு.

ஆனால் கண் குருட்டினை கண் குருடாக ஒப்புக்கொள்ளாமல் அதை பார்வை வெளிச்சமாக மாற்றி பேசுவதுதான் அறிவுஜீவித்தனம் போல. என்ன விலை கொடுத்தேனும் திராவிட இயக்கத்தை காப்பாற்ற வேண்டும் என முழங்கியவர்கள் இன்று அமித்ஷா வருகை பற்றி என்ன சொல்லப் போகிறார்கள்..??

எதுவும் சொல்ல மாட்டார்கள். ஆனால் நாம் தமிழர் என்றால் அது இனவாதம் , இந்துத்துவத்திற்கு ஆதரவானது , காவி அரசியலின் மறைமுக வடிவம் , சாதி பயங்கரவாதத்தை சாடாதது என்றெல்லாம் சரமாரியாக பேசி எழுதி தாக்கியவர்கள் இன்று வாய் மூடி மன்னிப்பது தான் உலகத்திலேயே ஆகப்பெரும் கள்ளத்தனம். வழக்கம் போல இது ஒரு இரங்கல் நிகழ்ச்சி தானே.. அகில இந்தியத் தலைவர்கள் பலர் கலந்து கொள்ளும் அந்த நிகழ்வில் அமித்ஷாவும் கலந்து கொள்கிறார் அதில் என்ன வந்தது.. திமுக என்ன கூட்டணியா வைத்து விட்டது.. என்றெல்லாம் சமாளிபிகேஷன்களை நாம் எதிர்பார்க்கலாம் ஆனால் இந்த சமாளிப்புகள் சொல்லும் உதடுகள் தங்கள் ஆன்மாவிற்கு நேர்மை செய்கிறார்களா என்று அவர்களுக்குள்ளாகவே கேட்டுக் கொள்ளலாம். அதுசரி. பெரியார் – ராஜாஜி நட்புக்கே நாம் பெருமை பட்டவர்கள் தானே..

நல்ல வேளை.. இவர்களெல்லாம் நம்மையும் புகழவில்லை . மாறாக ஏசி இகழ்கிறார்கள் என்பது நமக்குள்ள ஒரே தகுதி. நாம் சரியாகத்தான் இருக்கிறோம் என்பதற்கான அளவீடு.

இனிமேலும் திராவிடம் என்பது ஆரியத்திற்கு எதிரானது, கலைஞர் என்பவர் பார்ப்பனர்களுக்கு எதிரானவர் , அவர் தத்துவம் பார்ப்பனியத்திற்கு எதிரானது என்றெல்லாம் விசுவாச வரலாறு எழுதாமல்… செஞ்சோற்று சொற்கள் பேசாமல்.. நேரடியாக அமித்ஷா மேடையிலும், ஆர்எஸ்எஸ் மேடையிலும் இடம்பிடித்து தங்களுக்கென ஒரு சாகித்ய அகாதமி விருதையோ ,ஒரு பத்மபூஷன் விருதையோ பெற போட்டி போடுவது மேலானது. நேர்மையானது. அப்படி வந்தால் கூட ஜெயமோகன் போல மறுத்து வேண்டாம் என சொல்லி சீன் காட்டலாம்.

திராவிடம் என்பதே திருட்டுத்தனம் தான். இனிமேலும் அதை ஆரியத்திற்கு இந்துத்துவத்திற்கு எதிரான ஒன்றாக கட்டமைப்பது குருட்டுத்தனம்.

கூடிய விரைவில் அண்ணா அறிவாலயத்தில் இருந்து பிள்ளையார் சதுர்த்திக்கு ஊர்வலம் தொடங்கும் என்கின்ற செய்திக்காகவும் நாம் காத்திருப்போமாக.

அப்போதும் சில எழுத்துக்கள் இது ஒரு அரசியல் தந்திரம் என்றெல்லாம் பேசுவதையும் நாம் கண்டு களித்திருப்போமாக.

ஜெய் ஸ்ரீராம்.

ராஜீவ்- உள்ளொளி கொண்ட மானுடன்.

 

 

 

அன்றொரு நாள் சன் தொலைக்காட்சியில் படித்த செய்தி ஒன்று என்னை மிகவும் ஈர்த்தது

ப.சிதம்பரத்தை எதிர்த்து ராஜீவ்காந்தி போட்டி.

ஈழ அழிவு உச்சத்தில் இருந்தபோது நம் இனத்தை அழிக்க சிங்கள பேரினவாத அரசிற்கு ஆயுதம் கொடுத்து ஆலோசனை கொடுத்து எல்லாமுமாய் இருந்த இந்திய ஏகாதிபத்திய அரசிற்கு பாடம் புகட்ட கல்லூரி மாணவர்கள் தமிழ் இன உணர்வாளர்கள் உள்ளிட்டோர் முடிவெடுத்தார்கள். ஒரு தமிழனாய் பிறந்து தமிழின அழிப்புக்கு துணை போகிற இந்தியாவின் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் தோற்கடிக்க ஒரு ஆயுதத்தை அவர்கள் கண்டெடுத்தார்கள்.

அதன் பெயர் ராஜீவ் காந்தி. அந்த ராஜீவ் காந்தி ….ராஜீவ் காந்தியைக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவிக்க போராடும் என பெயர் வைத்த போது எங்கள் தந்தையார் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

தம்பி அருண் ஷோரி மூலமாய் அவனை என் அலைபேசியில் பிடித்தேன். சிக்கன மொழி. மெல்லிய குரல். தோழர் என்ற அறிவுஜீவி உரையாடல்.

.

பிறிதொரு நாள் மதுரையில் அண்ணன் சீமான் நடத்திய அறுத்தெறிவோம் வாரீர் என்ற நிகழ்வின் மேடையில் மெல்லிய உருவமாய் ஏறக்குறைய சிறுவனாய் ஓடியாடி கொண்டிருந்த அவனை மீண்டும் சந்தித்தேன். தோழனாய் அறிமுகமானவன் தம்பியாகி இருந்தான்.

எனது மனைவி ஊர் திருமயம் . சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டது. இதைச் சொல்லி அவனிடம் …தம்பி உன் அண்ணிகிட்ட சொல்லி இருந்தேன் அவ கூட உனக்கு தான் ஓட்டு போட்டாளாம்.

அட போங்கண்ணே ஒரு ஓட்டை வீணாக்கிட்டீங்களே.. கண்ணப்பனுக்கு ல ஓட்டு போட்டு இருக்கணும். என்று சிரித்தவாறு சொன்ன அவனை குழப்பமாக பார்த்தேன்.

அது ஒரு மாய சிரிப்பு. கண்கள் மினுக்கும் பூக்கும் புன்னகை.வேறெங்கும் காண முடியாத அந்த முகத்திற்கே உரிய வசீகர தனித்துவம்.

அண்ணா.. நான் வெல்ல தேர்தலில் நிற்கவில்லை. ப.சிதம்பரத்தை தோற்கடிக்கவே நான் தேர்தலில் நின்றேன். போங்கண்ணே…ஒரு ஓட்டை வீணாக்கிட்டீங்க. என்று சொன்ன அவனை யாராலும் விரும்பாமல் இருக்க முடியாது.

ஏறக்குறைய ஒரு கரும்புலிக்கான மனநிலை அது. இன அழிவு அவனை
உன்மத்தனாக ஆகியிருந்தது. விழிகளில் கனலேறி இருந்தது. மொழிகளில் அனல் ஏற்றி மேடையிலே கொட்டத் தொடங்கினான். புதுக்கோட்டை பாவாணன் போல உணர்ச்சி மொழி. மறைந்த அறிஞர் வலம்புரிஜான் போல வார்த்தைகளின் ஊடே வரிசையில் வரும் புள்ளிவிபரங்கள்.
அறிவும் , உணர்ச்சியும் ஒரே புள்ளியில் இணைகிற அதிசயக்காரன் அவன் தான்.

இப்படியாக ராஜீவ். என்னுள் நுழைந்தான்.

…….

கட்சி மேடையிலேயே அடுக்குமொழி வசனத்தோடு தொடர்ச்சியான முடிவுறாத வாக்கியங்களோடு ஆவேச மொழி மழை பொழியும்.. வழக்கறிஞர் அறிவுச்செல்வன் எல்லோருக்கும் அறிமுகமானவன்.

எனக்குத் தெரிய இன்னொருவன் இருந்தான். ஒரு மழைக்காலத்தில் தேநீரோடு புலர் காலைப் பொழுதை தொடங்கி பிடித்த புத்தகத்தின் வாசிப்பு மயக்கத்தில் கிறங்கி… அலையலையாய் வருகின்ற அலைபேசியை அணைத்து போட்டுவிட்டு… தலையணையை அணைத்து கிடக்கிற ராஜீவ் என்கிற வாசிப்புக் காரனை எனக்குத் தெரியும்.

எளிய சுமையோடு.. கண்கள் மின்ன ..கால்கள் கடுக்க.. தன்னந்தனியாய் வனாந்தரங்களில் சுற்றியலைந்து ..சிகரங்களில் ஏறி , நிலவை ரசித்து.. சட்டென எதிர்படும் அருவியில் தலையை நுழைத்து..
கூழாங்கற்களை தழுவி ஓடும் நதிக்கரைகளில் கால்களை நனைத்து..
இயற்கையை பனிக்கால கதகதப்பு தேநீராய் பருகும் ராஜீவை நான் அறிவேன்.

இந்த அலைகழிக்கும் வாழ்க்கை பொழுதுகளிலிருந்து சட்டென ஒரு நொடியில் தன்னை துண்டித்துக் கொண்டு..
அலைபேசி அலைவரிசையில் சிக்காமல்.. யாருக்கும் அகப்படாமல் துறவியின் மனநிலையோடு ஏரிக்கரைகளில் சுற்றித் திரியும் ராஜீவை நான் அறிவேன்.

ஏதோ ஒரு வறண்ட நாளில்.. நீர் பார்த்து வருடங்கள் ஆன அந்த ராமநாதபுரத்தின் காய்ந்த குட்டை ஒன்றில் பச்சை தேடி அலையும் ஆட்டு மந்தை ஊடே தானும் ஒரு ஆடாய் ..நம்பிக்கைகளோடு நகரும் அந்த கீதாரி ராஜீவை நான் அறிவேன்.

…..

திடிரென ஒரு நாள் அவனிடம் இருந்து அலைபேசி வரும். மகிழ்ச்சியோ துக்கமோ வலியோ, கோபமோ ,எதுவாக இருந்தாலும் முதலில் பகிரப்படும் மனிதனாக.. அவன் என்னை வைத்திருந்தான். இரண்டு மணி நேரம் பேசிக்கொண்டு இருப்பான். படித்த புத்தகங்களை, பார்த்த திரைப்படத்தை என நீளூம் அந்த உரையாடல் எப்போதும் முடிவுறாத திருப்தியின்மையை முடிவாக கொண்டது. பேசி அலுக்காத காதலர்களைப் போல நாங்கள் மாறி இருந்தோம். உச்ச மகிழ்ச்சியில் உண்மையாக அவன் சொல்வான் என் மனைவியை விட ..ஏன் இந்த உலகத்தில் இருக்கின்ற எல்லாரையும் விட ..உன்னை தான் அதிகம் நேசிக்கிறேன் அண்ணா ..

இந்த நேசிப்புக்கு நான் நேர்மை செய்திருக்கிறேனா என்றெல்லாம் எனக்கு தெரியாது. ஆனாலும் அவனது அன்பு மாசு மருவில்லாத புனிதம்.

அதுதான் ராஜீவ். என்னிடம் உள்ள பிரச்சனையை மிக நேர்மையாக கண்டறிந்தவன் அவன். முடிவில் தெளிவாக சொன்னான் ‌. கடந்துப்போக கற்றுக் கொள்.
…just go ahead.

இன்னொருமுறை சொன்னான் எல்லாவற்றிற்கும்.. எப்போதும் அழுது கொண்டே இருக்க முடியாது என. அப்போது எனக்கு ஒரு புத்தகத்தை பரிசளித்தான் . வையத் தலைமைகொள்.

வசந்தத்தை மட்டுமே பரிசளித்துக் கொண்டு.. வரங்களை மட்டுமே வாரி இறைத்துக்கொண்டு.. எப்போதும் பசுமையாய் ஒளிர வாழ்க்கை ஒன்றும் தேவதைகளின் முகத்தில் மின்னும் விழிகள் அல்ல. அது சாத்தானின் பாம்பு.
வசீகரமானது தான் .ஆனால் வலிக்கக்கூடியது. அழகானதுதான். ஆனால் அழிக்கக்கூடியது. எனவேதான் பூமியில் எது நடந்தாலும் அதை உயரத்திலிருந்து கவனித்து விட்டு .அனைத்தையும் அலட்சியமாக கடக்கின்ற மேகம் போல ஒரு மனநிலை தேவைப்படுகிறது. இந்த மனநிலை சாதாரணமாக வாய்க்கக்கூடியது அல்ல. அது அருகிலிருந்து நமது தோளைப் பற்றிக்கொள்ளும் விரல்களின் அன்பிலும் நம்பிக்கையிலும் பூப்பது.

அப்படி ஒரு பூத்தலை தான் ராஜீவ் என்னுள் நிகழ்த்தினான். ஒரு பெரு மழைக் காலம் முடிந்து வரும் அமைதி போல வாழ்வில் அலைக்கழிக்கப்பட்டு தடுமாறி கீழே விழுந்து.. பிறகு எழுந்து.. அலைந்து திரிந்து ஒரு நிதானத்திற்கு வரும் போது உள்ளுக்குள்ளாகவே ஊறும் ஒரு அமைதி ..
போல.. நிதானமானவன் ராஜீவ்..
எனக்கு நிரந்தரமானவன்.
.
இந்த வானவில் யுகத்தின் வல்லாண்மை பேரரசர்கள் நாம். நம் முன்னால் நுரையோடு கொப்பளித்து கொண்டு இருக்கிற வாழ்வெனும் அமுதத்தை நம் அன்பெனும் வைர கோப்பைக் கொண்டு பருகி தீர்ப்போம்.பருகிய அலுப்புத் தீர ஆதி வனம் தேடி பெரும் பயணம் போவோம். காற்றாய் திரிவோம். கடலாய் மிதப்போம்.

சியர்ஸ் ராஜீவ்.

ஒரு சிறிய விளக்கம்…

தான் அடிமை என உணர்ந்த ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்கான விழிப்பும், எழுச்சியும் நீங்களெல்லாம் நினைப்பது போல அவ்வளவு நாகரீகமாகவும்,நாசூக்காகவும் இருக்காது தான்.

இதுவரை மொட மொட வெள்ளைச்சட்டைப் போட்டுக் கொண்டு சட்டைப்பையில் கட்சித் தலைவன் படத்தை வைத்துக்கொண்டு பெரிய பெரிய கார்களில் பவனி வந்து, பிளக்ஸ் அடித்து,போஸ்டர் அடித்து வட்டம்,நகரம்,ஒன்றியம் ,கட்டம், சதுரம் என பொறுப்பு வாங்கி பஞ்சாயத்து பண்ணுவதுதான் அரசியல் என்பதை தலைகீழாக மாற்றத் துடிக்கும் படித்த இளைஞனின் அரசியல் அவ்வளவு பரவசமாக இருக்காது தான்..

வீழ்ந்த கதையை அறிந்து,. வீழும் நிலையை உணர்ந்து,இனி எழ வேண்டிய நிலை அறிந்து பதவி,பட்டம்,பணம் என எதையும் எதிர்பாராமல் உடல் முழுதும் வியர்வை வழிய வீதி தோறும் அலைந்து எளிய மக்களின் புரட்சியை வரலாற்றின் பொன்னேடுகளில் பொறிக்க உழைப்பவர்களின் உழைப்பு அவ்வளவு உவப்பானதாக இருக்காது தான்.

உள்ளன்போடு தாய் மண்ணை நேசித்து, உதிரம் வழிய இறந்த உடன் பிறந்தவர்கள் நினைவை சுமந்து, இனம் அழிய உடன் நின்ற துரோகிகளுக்கு இனி எழ முடியாத வீழ்ச்சியை அளித்து, எதிரிகளின் பகை முடிக்க விலை தலையே ஆனாலும் தரத்துடித்து, இனம் அழிந்த வலி ஈந்த கடும் சினத்தையே அரசியல் மூலமாகக் கொண்டு ,மூர்க்கமாக நிற்கும் எங்களின் எழுத்தோ,கருத்தோ,பேச்சோ, மூச்சோ நீங்கள் நினைக்குமளவிற்கு அவ்வளவு மென்மையானதாக இருக்காது தான்.

இதுவரை இருந்ததே இனிமேலும் இருக்க வேண்டும்.. அதே துருப்பிடித்த உங்களது தகர தத்துவம்,
அதே நீர்த்துப் போன உங்களது வாய்க்கரிசி வாக்குறுதிகள், அதே யாருக்கும் பயன் படாத பட்டுப்போன வசனங்கள்,அதே காலத்தை கடத்தும் உங்களது தவறுகள் இன்னும் இனி வரும் தலைமுறைக்கும் நீடிக்க வேண்டும் என்ற உங்களது ஆத்மார்த்த பிராத்தனைகளுக்கு வெடிகுண்டு வைக்கும் எங்களை உங்களால் சற்றும் சகிக்க முடியாதுதான்..

முடியாது தான்..முடியாது தான்

எங்களது உடையும்,எங்களது படையும் உங்களை வெறுப்பேற்றும் தான்..

எங்களது மொழியும்,எங்களது வழியும்
உங்களை உறங்க விடாது தான்..

எங்களது தர்க்கமும்,எங்களது தத்துவமும்
உங்கள் கோட்டைகளை தகர்க்கும் தான்..

ஆமாம் . திட்டமிட்டுதான் நகர்கிறோம்.

வன்மம் கொண்டுதான் வளர்கிறோம்.

முடிந்தால் எதிருங்கள்.

இல்லையேல் நகருங்கள்.

எதுவும் முடியவில்லை யா..

இப்படியே உங்கள் மனதிற்குள்ளாகவே
பதறுங்கள்.கதறுங்கள்.

ஏனெனில் நாங்கள் வானையே உரச
வளரும் சிகரங்கள்.

நாம் தமிழர்.

Page 25 of 53

Powered by WordPress & Theme by Anders Norén