மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

பூனை வளருங்கள்..

 

22405521_351864861905055_1599742958714680446_n

 

பூனை வளருங்கள்.

உங்களுக்கு
அடிமையாய் இருக்க..

உங்கள் வருகையை
எதிர்பார்த்திருக்க..

உங்கள் கால்களில்
பணிந்து நளிந்து
குழைய..

நள்ளிரவுகளில்
கதகதப்பாய்
உங்களோடு உறங்க..

நீங்கள் மிச்சம்
வைக்கும் எதையும்
நாசூக்கு பார்க்காமல்
நக்கித் தின்ன..

எதன் பொருட்டும்
உங்கள் அதிகாரத்தின்
மீது
சொல்லொன்றும்
உரைக்காமல்
மெளனிக்க..

ஏவும் பொழுதுகளில்
உங்கள் சுட்டு விரல்
காட்டுகிற…
எலிகளையும்
இன்னும் பிறவையும்
வேட்டையாட..

பூனை வளருங்கள்.

அது.
மனம் பிசகும்
தருணமொன்றில்
நம் கழுத்தை
கவ்வும் அபாயம்
இருப்பினும்…

தமிழ்த்தேசியம்- சில புரிதல்கள்.

 

22228191_351255648632643_1871345362821044997_n

தமிழ்த்தேசியம் என்பது தமிழ்த்தேசிய இன நலனிற்கான கருத்தியல். இத்தனை ஆண்டு காலம் உரிமைகள் மறுக்கப்பட்டு..அடிமை இனமாக ஆளப்பட்டு வருகிற ஒரு இனத்தின் மீள் எழுச்சிக்கான கருத்தியல்.

இது மற்ற இனங்களின் மீதான வெறுப்புணர்ச்சியில் கட்டமைக்கப்படும் கருத்தியல் அல்ல. மாறாக எம் இனத்தின் மீதான பற்றுணர்ச்சியில் உருவான கருத்தியல்.

அதுவும் வெறும் பற்றுணர்ச்சியில் உருவானது அல்ல.. ஒன்றரை லட்சத்திற்கும் மேலான எம் இனத்தாரை இழந்த போது..காக்க முடியாமல் போனது எதனால் என சிந்தித்ததன் விளைவு..புரிதல் .

தமிழ்நாட்டை நேசிக்கும் எவரும் தமிழ்நாட்டினை ஆள உரிமை உள்ளவர்கள் என பேசுபவர்கள் தன்னை தமிழ்த்தேசியர்களாக ஏன் காட்டிக் கொள்ள வேண்டும்… நீங்கள் சர்வ தேசியனாக காட்டிக் கொண்டு போக வேண்டியதுதானே..

ஆனால் தமிழ்த் தேசியராக அடையாளப்படுத்திக் கொண்டு..உலக தேசியம் பேசி கீழ்மைப் பட்டு அம்பலப்பட்டு நிற்கிற திராவிட கருத்தியலுக்கு காவடி தூக்குகிற வேலை.

தமிழ்நாடு தமிழருக்கே வா..இல்லை தமிழ் நாட்டை நேசிப்பவருக்கா… என்றால் வா..வாழ்..நேசி…நேசிக்கப்படு. ஆனால் இம் மண் அதன் பூர்வக்குடிகளுக்கானது என்ற புரிதலோடு நேசி.

என் மண் எனக்கானது என்பதை மறுத்து இங்கே வாழும் பிற மொழி சிறுபான்மை மக்களை இம் மண்ணின் பூர்வக்குடிகளுக்கான அரசியலை எதிர்ப்பு அரசியலாக காட்ட முனைவதுதான் தமிழ்த்தேசியமா..

பிறகு எதற்கு தமிழ்நாடு..தமிழர் உரிமை என்றெல்லாம் பேச வேண்டும்..

இதற்கு இந்தியத் தேசியம் பேசி காவிக்கொடி பிடிப்பவன் எவ்வளவோ மேலானவன். குழப்பாமல் நம்மை எதிர்க்கிறான்.

நாம் தெளிவாக இருக்கிறோம். எதிரிக்கும் இது புரிந்திக்கிறது.

நடுவே குழப்ப நங்கூரமிட்டு..குழப்பக் குட்டையில் திராவிட மீனை தேடும்
,”தோழர்கள் ” மீண்டும்..மீண்டும் அம்பலப்படுவார்கள்..

சாதி ஒழிப்பினை பிரதானப்படுத்துவதன் நுண்ணரசியல் இங்கே ஏற்கனவே வலிமையோடு திகழும் சாதீய உணர்வை இன்னும் வலிமைப்படுத்தவே..ஊரும் ,சேரியும் சேர ஓர்மைப்புள்ளிகளை பேசாது வெறுமனே சாதி ஒழிப்பு அரசியல் பேசுவது பலனற்றது..புனைவுகளுக்கு ஏன் பலன்..இன நலன்..?

வலிந்து கட்டப்படும் கதாநாயக பிம்பம் யாருக்காக..எந்த எழுச்சிக்கு எதிரானது என்றெல்லாம் நமக்கு புரியாமலில்லை..கண்டிருந்த வான் கோழிகளைப் பற்றி கான மயில்களுக்கு கவலை இல்லை.

இருந்தும் தமிழனின் வரலாற்றில் 50 வருடத்திய தவறுகள் மீண்டும் நிகழாமல் இருக்க..தூய்மை வாதி பட்டம் சுமப்பதில் தவறில்லை.

சொல்லப்போனால் அன்று சிங்கள பேரினவாத அரசிற்கு வால் பிடித்த..மிருதுவான..இவர்களைப் போலவே தமிழர் நலன் என்ற பெயரில் தமிழ் இன நுண்ணரசியல் பேசி குழப்பிய வரதராஜ பெருமாள் தான் நினைவிற்கு வருகிறார்.

ஆனால் வரலாறு வரதராஜ பெருமாள்களுக்கு உரித்தானது அல்ல..

அது பிரபாகரனுக்கானது.
தற்போது அவர் தம்பிக்கானது.

வேண்டுமென்றே வெளிச்சப் புள்ளிகள் செலுத்தி மின்ன வைக்க கட்டாயத்தில் நாங்கள் இருட்டில் திசைமாறிப் போன விட்டில் பூச்சிகள் அல்ல.

நாங்கள் பகலவன்கள்.

பற்றி எரிவோம். பற்றி பரவுவோம்.

தூக்குக் கயிற்றின் பாடல்..

 

 

21192660_340527729705435_3007562946593908183_nஅந்த தூக்குக்கயிறு
கனவின் வெப்பத்தை
சுமந்து வாறே
இன்னும் ஊசலாடிக்
கொண்டு தான்
இருக்கிறது…

காற்றின் சிறகுகளோடு
பின்னி..
எரிதழலினுடாக கரைந்துப்
போன அனிதா இன்னும்
குரல் வளை நெரிய
இருமிக் கொண்டுதான்
இருக்கிறாள்..

துயர் மிக்க பின்னிரவின்
கடைசித் துளி கரைவதற்கு
முன்னால் சற்றே கவனித்துக்
கேளுங்கள்..

குரல் வளை ஒன்று
நொறுங்கி உடைந்து
கானலாகிப் போன
அவள்
கனவுகளின் கேவல் ஒலி
உங்கள் ஆன்மாவை
தீண்டலாம்..

நள்ளிரவுகளில் விழி எரியும்
வெப்பத்தை
சுமந்து புத்தகங்களின்
பக்கங்களை அவள்
மென் விரல்களால்
புரட்டும் ஒலி குளிர் காற்றால்
போர்த்திக்கிடக்கும்
உங்கள் செவிகளில்
முணுமுணுப்பாய் முனகலாய்
கேட்கக்கூடும்.

ஓடுகள் சரிந்த
வீட்டின் கூரையை
ஊடுருவி பாதரச
பிம்பமாய் மிதந்து
வருகிற
தேவதையின்
கண்ணீர் துளி
விழி மூடி உறங்கும்
உங்கள் விழிகளில் விழலாம்..

விழுந்த சூட்டினில் சுக
கனவுகளோடு கிறங்கிக்
கிடக்கிற உங்கள் இமைகளில்
தீ எரியலாம்…

ஆனால் நாம் இதற்கெல்லாம்
அசரப் போவதில்லை.

வலி மிகுந்த நினைவு
என்றொரு பாலையை
கடக்க மறதி ஒட்டகங்கள்
நம் முன்னால் காத்துக்
கிடக்கின்றன..

எதையும் கடப்போம்.
எதையும் மறப்போம்.
மீறி துளிர்த்தால்
பிக் பாஸ் உலகத்தில்
ஒளிந்துக் கொள்ள
நமக்கு ஓரிடம் உண்டு.

இன்னும் உறுத்தினால்..
எவனையாவது திட்டி
சமூகக் கடமை
ஆற்றி விட்ட அக திருப்தியை
முகநூலின் முட்டுச்சந்தில்
தேடி திரியலாம்..

இன்னும் ஏதேனும்
எட்டிப்பார்த்தால்
எடப்பாடி:தினகரன்
கமல்:, ரஜினி
என்றெல்லாம் யோசித்து
சரிந்துக் கொள்ள
சாக்கடைகள் நமக்குண்டு..

95 வயது முதியவர்
இன்னும் இருக்கிறரா
ஜெ இட்லி சாப்பிட்டாரா
என்கிற சரித்திரக்
கேள்விகளில் நமது மனதை
தொலைக்கலாம்….

என்ன செய்யலாம் ..
இன்றைய சூடான செய்தி
எங்கிருக்கிறது என நோண்டி
நொங்கெடுக்க..
இருக்கவே
இருக்கின்றன ஏற்கெனவே
முடிவுகள் தீர்மானிக்கப்பட்ட
விவாத அரங்குகள்.

இவர்கள் விவாதிக்க
வேண்டுமெனில்.
தினந்தோறும் அனிதா
தூக்கில் தொங்கியாக
வேண்டும்..

என்ன செய்வது..

கனன்று எரிந்து தணிந்திருக்கிற
சாம்பலின் ஊடாய் அனிதா
புன்னகைக்கிறாள்.

நம்மைப் பொறுத்த வரை
என்றோ அவள் மரித்துப் போனாள்..

அவளோ மரித்தது நானல்ல.
என்னை
மறந்து ..திரியும் நீங்களே
இறந்துப் போன பிணங்கள்
என புன்னகைக்கிறாள்.

இன்னும் தூக்குக் கயிறு
ஊசலாடிக் கொண்டே
சொல்கிறது..

பிணங்களே…நீங்கள்
என் மீதேறி தொங்கி
என்னை இழிவாக்காதீர்கள்..

நேரடியாக சுடுகாட்டில்
சென்று படுத்து விடுங்கள்..

ஏனெனில் அதுதான்
உங்கள் நாடு..
பிணங்களுக்கான வீடு.

ஹம்ரா தேஷ் கே…
குச்சு குச்சு ஹோத்தா ஹை..

பயண மொழி..

 

road-trip-1

இப்படி ஒரு பயணம்.

தேநீர் கடைகள்.

இரவு ரசித்தல்..

இளையராஜா.

காலை விடியல் வான்
கண்டல்..

பல நினைவுப்புள்ளிகளோடு
கால நதியில் கல்லெறிந்து
பார்த்தல்..

சில துளி கண்ணீர்.

ஆங்காங்கே
பல சிறு புன்னகைகள்..

சாலையை கடக்கும்
முகம் அறியாத
வயதான தாய்
மீது காரணமின்றி
துளிர்க்கிற
மாசற்ற அன்பு..

பக்கத்து இருக்கையில்
நம்மோடு பயணிக்கிற
நமது நம்பிக்கை..

முடிவில் சில கவிதைகள்..

டாட் .

மழையாகிப் போன ஒரு பாடல்..

 

22008461_348378505587024_1053921957577664683_nஎரி வெயிலுக்கு

மத்தியிலும்..

நீண்ட தாழ்வாரத்தின்
முன்னால் படிந்திருக்கும்
இள நிழல் போல..

என் விழிகளில்
மென் குளிராய்
படர்கிறாய்.

உன்னை இமைக்காமல்
பார்க்கிற நொடிகளில்..
நான் காற்றாய் உருக் கொண்டு
மல்லிகைத் தோட்டங்களில்
பூக்களை உதிர்ப்பவனாக
மாறித் திரிகிறேன்..

காட்சிக்கும்…
பார்வைக்குமான
இடைவெளியில்..
எப்படியும்
இழையத் தொடங்கி
விடுகிறது..
மழை நாளொன்றில்
நாம் இருவரும

பகிர்ந்து பருகிய
ஒரு பாடல்.

ஓயாத தூறல் போல
இசை மொழியோடு
ஏதேதோ சொல்லிக்
கொண்டே போகிறாய்..

உன் சொற்களை தவிர்த்து
கொண்டே…
அசையா தேர் போல
என்னை நோக்கி இருக்கும்
உன் விழிகளின்
நீர் வீழ்ச்சியில்..
தலை நுழைத்து
மெய் நனைக்கிறேன்..

சட்டென என்னை
நோக்கி ..சலனமற்ற குளத்தில்
வீசப்பட்ட கல்லாய்..

இப்போ நான் என்ன
சொன்னேன்… எங்கே சொல்லு
என தேர்வு
கேள்வியொன்றினை
மொழி உறைந்திருக்கும்
என்னிடம்
கேட்கிறாய்…

மெளனித்து புன்னகைக்கும்
என்னிடத்தில் ..
நினைவுகளை ஸ்வரங்களாய்
தேக்கி இருக்கும் ஒரு
வயலின் இருக்கிறது…
வாசித்து காட்டவா என்கிறேன்..

முகம் சிவக்க
நீ ஒரு ராட்சஸன்
என்று சொல்லி ரகசியமாய்
புன்னகைத்ததில்
உன் பிம்பம்
படர்ந்திருந்த அந்த
கண்ணாடியில் பனி பூத்தது.

இப்போதும் சொல்வேன்.
நீ பேசிக்கொண்டே இரு…
நான் பார்த்துக் கொண்டே
இருக்கிறேன்..

ஏனெனில்..
நீ மழை.
கேட்பதை விட…..
பார்ப்பது சுகம்.
நனைவது அதை
விடவும்…

………

https://youtu.be/1gtGQc8Zm3M

 

நிலா சாட்சி..

moon-1404506_960_720 (1)

 

விண்ணில் இருந்து
இறங்கி..
பனி சுரக்கும் வனம் கடந்து…
சாத்தப்பட்டு இருக்கும்
சாளரத்தை மெல்ல திறந்து..

விழி மூடி இருக்கும்
நினைவேடுகளில்…
மெல்ல ஒளி பாய்ச்சி
குளிர வைத்து
செல்கிறது…

மறக்க முடியாத
அன்றைய இரவில்..

உன்னையும்..
என்னையும்..

ஒரு சேர தழுவி
நாசூக்காய்
நழுவி
விட்டுப்போன
நிலா.

போர்ஹேவின் சொற்கள்..

slide_363547_4103384_free
என் முதுகிற்கு பின்னால் உதிர்க்கபடும் வசவுகளையும்,தூற்றல்களையும் கண்டு புண்படவோ..புன்னகைக்கவோ எனக்கு நேரம் இல்லை.

ஏனெனில்..காயம் கொடியதென்றாலும்..உள்ளுக்குள் வெடிக்கக் காத்திருக்கும் கனவு பெரிது.

என்

முன்னால் நீளும் பாதையில்..

என் குதிரையின் கால்கள் பயணப்பட்டுக்கொண்டே இருக்கும்.

எனக்கு உறுதியாகத் தெரியும்.

இந்த கொடும் விதி சமைத்த பாதையில் காற்றின் வழியே கசிந்து வரும் ஏதோ ஒரு புல்லாங்குழல் என் ஆன்மாவிற்கான பிரத்யோகப் பாடலை இசைத்து என் கொந்தளிப்பை அடக்கும்.

ஏனெனில்..நான் என்னிலிருந்து விடுதலை பெற்றே தீருவதற்கான பாதையில் போவதாக மீண்டும் உறுதி செய்து கொண்டே இருட் பாதையின் ஊடே நம்பிக்கை சுரக்கும் களங்கமற்ற இலட்சிய தாகம் மினுக்கும் இலக்கினை தேடிப் பயணிக்கிறேன்.

மற்றபடி..நான் எதுவுமில்லை…

– போர்ஹே.

 

தமிழ்த்தேசிய உணர்வில் இடதுசாரி உணர்வின் பொருத்தப்பாடு

21686353_346482965776578_4072896911138594218_n
இடதுசாரி என்பது சொற்களின் கூட்டுக் கோர்வையல்ல.. உமிழ்வது போல உதிர்த்து விட்டு போவதற்கு.

அது ஒரு வகையான வார்ப்பு. மண்ணின் பூர்வக்குடிகளின் மீதான, மண்ணின் மீதான பற்றுறுதி, வர்க்க-சாதி-மத பேதமற்ற தொல்குடி வாழ்வொன்றின் மீதான மீள் பயணம். எந்த நோக்கமும் அற்று பண்பாட்டு விழுமியங்கள் குறித்து சிறிதும் அக்கறை அற்று ,தேசிய இனங்களுக்கான தனித்த குணாதிசியங்கள் மீதான அறிவற்று, மொழிப்பற்றினை அழித்து, ஒரு இனம் கடந்து வந்த பாதைகளை அழித்து அதன் மீது ஏற்கனவே இருந்ததை விட இழிவான ஒன்றினை இருக்க வைத்து செல்வதல்ல இடதுசாரித்தனம்.

இத்தனை ஆண்டு காலம் ஒரு தேசிய இனம் அடைந்த இழிவுகளுக்கும் , அழிவுகளுக்கும் என்ன காரணம் என உணராமல் …சாதி கடந்து தமிழராய் இணைய ஓர்மைப் புள்ளிகளை கட்டமைக்காமல், மீண்டும் மீண்டும் பிளவுப் புள்ளிகளை பிரதானப்படுத்தி அதன் மீது இடது சாரித்தனத்தை எழுப்ப முடியாது.

சாதி ஊடுருவி ரணமாய் ஆழ காயமுற்று இருக்கும் ஒரு சமூகத்தில் உடனடி தீர்வு சாதி ஒழிப்பல்ல. சாதியை ஒழிக்கிறோம், சாதியை ஒழிக்கிறோம் என்று முழங்கி ஆட்சியை பிடித்தவர்கள் தான் சாதிக்கு இத்தனை சீட்டு, நோட்டு என்றெல்லாம் அரசியல் செய்தார்கள். சுயசாதி மறுப்பு என்பது வரலாற்று-பண்பாட்டு தொடர்ச்சியின் பாற், நவீன உலகின் அரசியலின் பாற் அறிவும் தெளிவும் கொண்டு எழுகிற உளவியல். அதை தான் 2009 -ன் அழிவு நவீன தமிழ்த்தேசியர்களுக்கு வழங்கியது.

வர்க்க-சாதி-மத முரண்களுக்கு அப்பாற்பட்டு ஓர்மைப்புள்ளிகளை கண்டறிந்து அதன் மூலமாக எழுச்சியுற்று தனது சுய உரிமைகளுக்காக போரிடுவதன் மூலம் ஒரு தேசிய இனம் தனது வரலாற்றுப்பாதையில் தனது அடையாளங்களை, தனது நிலம்-மொழி-பண்பாடு அம்சங்களை தக்க வைக்கிறது எனலாம். அதனால் தான் தேசிய இனங்களுக்கான உரிமைகளை மறுக்கிற எந்த தத்துவமும் இடதுசாரி வண்ணம் கொண்டதல்ல.

குறிப்பாக திராவிடம். மொழியை நீக்கிய இடதுசாரித்தனம் எதுவுமில்லை. ஆனால் திராவிட சித்தாந்தம் தமிழ் மொழியின் விழிமியங்களை, இலக்கண-இலக்கியச்செழுமைகளை எள்ளி நகையாடியது. பகடி செய்தது. சைவமும்-வைணமுமாக பிரிந்திருந்ததை எப்படி ஆரியம் திட்டமிட்டு இந்துவாக கட்டமைத்ததோ, அதே போல அதை எதிர்ப்பதாகச் சொல்லி திராவிடமும் பல்வேறு இறை நம்பிக்கைகள், மூத்தோர் வழிபாடு,ஆசிவகம் என்றெல்லாம் சிதறி கிடந்த தமிழ்ச்சமூகத்தை இந்து என கட்டமைத்து அதில் ஆரிய ,சூத்திர சண்டைக்கு களம் அமைத்தது.

இதைதான் என் முன்னோர்களான பேராசான் ஜீவாவும்,சிந்தனை சிற்பி சிங்காரவேலரும் நுட்பமாக புரிந்துக் கொண்டு பல்வேறு தனது ஆக்கங்களில்,வெளிப்பாடுகளில் தனது மொழிப்பற்றினை வெளிப்படுத்தி நின்றிருக்கிறார்கள். அந்த உணர்வுதான் இடதுசாரியான ஜீவாவை கம்பனைப் போற்றி புகழ வைத்தது.

எங்கள் ஜீவாவைப் போல ஒரு இடது சாரியை காட்டுங்கள். அவர்தான் இடது சாரி தமிழ்த்தேசியர்.
இல்லாவிடில் அவரும் அப்போதைய திக,திமுகவில் இணைந்து அமைச்சராகி தலைவர் புகழ் பாடி தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்து இருப்பார்.

எனவே இடதுசாரி தமிழ்த்தேசியம் என்கிற புத்தகத்தை எழுதி விட்டு கோபாலபுரத்தில் கால்கடுக்க நின்று..எது செய்தாலும் தலையாட்டி வரும் எங்களது முன்னோர்களையும் நாம் அறிவோம்.

புதிதாக எழுந்து வரும் தமிழ்த்தேசிய இன உணர்வுகளை மடை மாற்ற எண்ணற்றப் பணிகளை பிராயத்தனப்பட்டு செய்து வரும் எங்களது பின்னோர்களையும் நாம் அறிவோம்.

நான் தமிழன் – சாதி,மத மறுப்பாளன் – வர்க்க பேத எதிர்ப்பாளன் என்பதே இடது சாரித்தனம் தான்.

வலது சாரி, இடது சாரி, வரதாச்சாரி என்பது எல்லாம் வெறும் சொற்களே…

கொண்ட தத்துவமும், தத்துவத்தின் படியான பயணமுமே இடதுசாரி யார் என தீர்மானிக்கும்.

அவ்வகையில் தமிழ்த்தேசியத்தில் வலதுசாரி தமிழ்த்தேசியம் என்ற வம்படி சொல்லாடல் ஒன்றே திராவிடத்திற்கு சால்ரா அடித்து எழும்பத்துடிக்கும் தமிழ்த் தேசிய உணர்ச்சிக்கு சாவு மணி அடிக்க அன்றே போடப்பட்ட திட்டம் தானே ஒழிய …

தமிழ்த்தேசியம் என்றாலே – அது இடதுச்சாரித்தனம் தான்.

பேராசான் ஜீவா புகழ் ஓங்குக…
சிந்தனை சிற்பி சிங்காரவேலர் புகழ் ஓங்குக..

செங்கொடி தனில் புலிக் கொடிப் பதித்து தமிழ்த்தேசியம் வெல்க..

மற்றபடி..

சிறை மீண்டு வந்திருக்கிற தோழர்கள் திருமுருகன் காந்தி, இளமாறன், டைசன் உள்ளீட்டவர்களுக்கு ஆகியோருக்கு எம் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

-மணி செந்தில்

பாக்யராசன் என்ற என் வாழ்க்கை…

21271236_341238972967644_8545662175495430546_n

 

ரணத்துக்
கனத்து
நிகழ்கிற
என்
நொடிகளை
எல்லாம்.
ஒரு.
இளையராஜா
பாடல் போல
நிலா மிதக்கும்
கனாக் காலமாக
மாற்ற அவனால்
முடிந்திருக்கிறது..

ஏதோ ஒரு திசையில்..
ஒரு அலைபேசி
உரையாடலோடு
சிரித்தவாறே
அவன்
நகர்கையில்…

எதிர்பாராமல்
சந்தித்து விட்ட
விழிகளோடு
விழிகளாலேயே
ஒரு புன்னகை
கைக்குலுக்கல்
மூலமாகவே
அன்பை நகர்த்தி
விடுவதில்
அவன் அசரா
அசுரன்…

எனக்கென
அவன்
தனித்து சேமித்து
இருக்கும்
ப்ரியங்களை
அவன் சொற்களால்
காட்டியதே இல்லை..

சில சமயங்களில்
சிக்கனமான கரம்
பற்றுதலில்..
தல என்று அழைக்கும்
குழைவில் என்றெல்லாம்
அடுக்கிக் கொண்டே
போனாலும்..

அதுவல்ல எனக்கான
அவன்
என அவனுக்கும் ,எனக்கும்
தெரியும்.

விவரிக்க முடியா
பேரன்பின் அக்கறையோடு
என்னை இழுத்துக்
கொண்டே திரிகிறான்..

கடும் சுமையாய்
நான் கனத்தப் பொழுதுகளில்
கூட..
அமைதியான காட்டில்
யாரும் அறியா பெய்யும்
மழை போல..
என்னை கரைத்து இருக்கிறான்..

கரை சேர்த்து இருக்கிறான்..

அவனுக்கென
என்னிடம் சொல்ல
இதற்கும் மேலும்..
வாஞ்சை சொற்கள்
நிரம்பிய
உணர்ச்சிக்குடங்கள்
உண்டு தான்..

உடைத்துக் கொண்டே
போகலாம் தான்..

ஆனால் வாழ்க்கை இருக்கிறதே…
அவனோடு வாழ..

என் தங்கை மீராவிற்கு..
என் மருமகள் அகநகைக்கு..
எனக்கும் …

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல..

அனிதா- சாத்தான் தேசத்தில் பிறந்த தேவ மலர்..

21369170_340527796372095_3352100717578590891_n

 

அமைதியாய் நகர்ந்துக் கொண்டிருந்த எங்கள் மகிழுந்தில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள முடியவில்லை. அந்த நிலவியல் வெப்பமும், முந்திரிக்காடுகளும் எங்களுக்குள் ஏதோ பல செய்திகளை சொல்லி வந்தன.

சுடு வெயிலில் வெளுப்பேறி இருந்த அந்த நிலவியல் தமிழ் நாட்டுக்கு சற்றே வித்தியாசமானது. முந்திரிக்காடுகள் இரு புறமும் அடர்ந்திருக்க தமிழக வரைபடத்தில் இருந்தே தனித்திருக்கிறது அந்த சிற்றூர். அந்த நிலத்தில் நிலவும் அந்த வெப்பத்தை வெயில் என்றெல்லாம் அர்த்தப்படுத்தி விட முடியாது. ஒரு அடர் மழை போல அந்நிலத்தில் வெயில் அரூவ திரவமாய் ஊற்றிக் கொண்டிருந்தது.

அரியலூர் மாவட்டம். அதிகம் கல்வியறிவு அற்ற எளிய ஒடுக்கப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழ்கிற பகுதி. மழை காணா கரிசல் பூமி போல இது வறண்டுப் போன முந்திரிக் காடு. அரியலூர் மாவட்டம் செந்துறை என்கிற சற்றே பெரிய கிராமத்திற்கு அருகில் தான் குமிழுர் என்கிற அந்த சிற்றூர் ஒரு தனித்தீவிற்கு செல்வது போல தனிச்சாலையாக பிரிந்து தனித்துக் கிடக்கிறது.
அந்த வறண்ட பூமியில் தான் அனிதா பிறந்திருக்கிறாள். ஒடுக்கப்பட்ட குடும்ப பின்புலம். சிறுவயதிலேயே புற்று நோயால் தாயை இழந்த துயரம். வீட்டின் அனைத்து வேலைகளையும் செய்தே தீர வேண்டிய பெண்களுக்கே உரித்தான அனைத்து அழுத்தங்கள்.

ஓடு சரிந்த வீடு. கழிவறை கூட இல்லாத ,எவ்வித அடிப்படை வசதியும் இல்லாத வறுமை. அங்குதான் பூத்திருக்கிறது அனிதா என்கிற அந்த தேவ மலர்.

என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாத வறுமையும்,துயரமும் கொடும் கூரையென போர்த்தி இருக்கிற குடும்பச்சூழல்.

 

21314306_340528183038723_5780959351638067232_n

 

 

பிறந்த பிள்ளைக்கு ஊரில் பெரிய பள்ளியில் அட்மிசன் வாங்க பிறந்தநாள் அன்று முதல் அலைந்து, ப்ளே ஸ்கூலில் சிபாரிசு வாங்கி சேர்த்து, கேட்ட லட்சத்தை லட்சியம் செய்யாமல் செலுத்தி, டை கட்டி, முதுகில் பை மாட்டி ஏசி காரில் சென்று இறக்கி, டாடி மம்மியை மழலையாய் கேட்டு, ரெயின் ரெயின் கோ அவே பாட வைத்து, சிக் பஞ்ச் –ல் சிக்கன் சாப்பிட்டு, பாடத்திற்கு ஒரு டியூசன் என பயிற்றுவித்து நீட்டுக்கென நீட்ட ரூபாய் கட்டுக்களை இப்போதிலிருந்தே அடுக்கி வைக்கிற அடுக்குமாடி குடும்பம் அல்ல அது.

அனிதாவின் வீட்டைப் பார்த்தால் தான் தெரியும் அவளது அருமை.

 

 

 

21270793_340527833038758_7411614832373543784_n

 

 

21192796_340527903038751_1219323111100309993_n

அதுதான் சமையலறை. அதுதான் படிப்பறை, அது தான் படுக்கை அறை. அந்த எட்டுக்கு எட்டு இடம் தான் எல்லாமும். அனிதாவின் வீடு எங்கே கேட்ட எங்களுக்கு அடையாளம் காட்டிய ஒரு அம்மா சொன்னார். நாங்க அவள டாக்டரம்மா –ன்னு தான் கூப்பிடுவோம்.

அப்படி ஒரு வைராக்கியத்தை வைரமாய் தன் ஆன்மாவில் அழுத்தி பதிந்து வைத்திருந்து இருக்கிறாள் அவள். எந்த புற்றுநோயால் தன் தாயை இழந்தோமோ அந்த புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் ,தன் தாயைப் போல யாரும் சாகக்கூடாது, தன்னைப்போல யாரும் தவிக்கக்கூடாது என்கிற லட்சியம் எளிய வீட்டில் பிறந்த அவளுள் வலிமையாய் எரிந்துக் கொண்டு இருந்தது.

வலி தாங்கினாள். குடும்பத்தை சுமந்தாள். இரவுப் பகல் பாராது படிப்பு. அது ஒரு வகையான தவம் போல… தியானித்து கனவில் சுமந்த லட்சியத்தை மெய்யாக்க மெய் வருத்தி உழைத்தாள். இயற்கை அந்த எளிய பெண்ணிடம் இயல்பாகவே இனியவற்றை சேர்த்திருந்தது. களங்கமற்ற விழிகள், உழைப்பின் உறுதியால் கண்ட நினைவாற்றல், பொறுமையின் மொழி என அறியப்படாத ஊரில் தெரியாமல் பூத்திட்ட தேவதை அவள்.

தேசம் மாறி பிறந்ததால் தேகம் செத்து கிடக்கிறாள்.

சத்தற்ற உடல் என்றாலும் லட்சியத்தில் கொண்ட பற்றுதான் அவளை இன்று அவளை செத்து கிடக்க வைத்தது.

நம்பினாள். உழைப்பை நம்பினாள். உயிர் உருக்கி உழைத்துப் படித்தால் மண் மூடிய அன்னையை போல.. இன்னொருவரை இழக்காமல் காப்பாற்றலாம் என களங்கமற்று நம்பினாள். அவள் உழைத்தது போல கிடைத்தன மதிப்பெண்கள்.

1176/1200 என்பது சாதாரண எண்கள் அல்ல. சரிந்துப் போன கூரையில் இருந்து உறுதிக் கொண்ட உழைப்பால், கண் விழித்து, கனவு கண்டு நினைவாக்க தன்னையே உருக்கிக் அடைந்த ஒரு தனி மனித சரித்திரம்.

இயற்பியலில் 200, கணிதத்தில் 200, உயிரியியலில் 194,வேதியியலில் 199 என சிகரங்களைத் தொட்டு தனது கனவினை நிறைவேறி விட்டதாக பூரித்து நின்றாள்.
இந்திய வரைபடத்தில் வராத, தமிழக நிலவியலில் லென்சு வைத்து தேடினாலும் அகப்படாத சிற்றூரில் பிறந்து ,முந்திரிக்காடுகளில் பாம்பு கடிக்குமோ, பூரான் கடிக்குமோ, இல்லை.. ஏற்கனவே செத்துப் போனாளே நந்தினி போல நாசமாக்கப்பட்டு விடுவோமோ என்றெல்லாம் நடுங்கி, கழிவறைக்கு ஒதுங்க வழியற்று , எதுவுமே அற்று… உழைப்பை மட்டுமே கொண்டு அந்த எளிய பெண் பெற்றதை என்னால் மதிப்பெண்கள் என்றளவில் மட்டும் குறுக்க முடியவில்லை.

பெரும்பாலும் மின்சார வெட்டு, தண்ணீர் பற்றாக்குறை, மழையற்ற,வளமற்ற பூமி என எந்த தடைகளும் லட்சிய உறுதிக் கொண்ட அனிதாவின் விழிகளுக்கு முன்னால் நிற்க முடியவில்லை.

அப்போதுதான் இடி விழுந்தது போல வந்து விழுந்தது நீட் தேர்வு பற்றிய அறிவிப்பு. அதிர்ந்துப் போனது அந்த சின்ன இதயம். அதென்ன நீட், வேற சிபிஎஸ்ஸி பாடமாமே…அதெலிருந்து தான் கேள்வி கேப்பாங்களாம் என்றெல்லாம் தகவல் வர வர.. இடி விழுந்த மல்லிகைச்செடியாய் மனம் துவண்டு போனாள்.

கேள்வித்தாளுக்கும், படித்த படிப்பிற்கும் தொடர்பே இல்லையே ..மதிப்பெண் வரலையே .. என மனம் நொந்து கவலைப்பட்டவளுக்கு வந்தது சாத்தான் ஓதிய வேதமாய் வந்தது நிர்மலா சேதுராமனின் பொய் நாடக அறிவிப்பு. ஓராண்டாவது விலக்கு உண்டு என்று போகிறப் போக்கில் அள்ளி விட்டதில் ஆறுதலாகிப் போனாள் அனிதா. தமிழக அரசும் நாடக காட்சிகளை தொடர நம்பித்தான் இருந்தாள் தங்கை.

ஆனால் பணம் இருப்போரும், மருத்துவ தொழிலை பரம்பரையாக பணத்தை வைத்து விலைக்கு வாங்கியவர்களும் புகழ்பெற்ற காங்கிரசு தலைவர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் மூலம் வழக்குப் போட வாடிப் போனாள் . காட்சியில் தான் பாஜகவும்-காங்கிரசும் தான் எதிரி. ஆனால் பாஜக எடுக்கக்கூடிய நிலைப்பாட்டிற்கு ஆதரவாக சிதம்பரம் மனைவி நளினி. இங்கே எவனும் எதிரி அல்ல. பணமும் ,அதிகாரமும் இல்லாத நாம் தான் உதிரி என உணர்வதற்குள் உலர்ந்துப் போனாள் அனிதா.

இருந்தும் ஆன்மாவில் ஏதோ புள்ளியில் நம்பிக்கை ஊறிக் கொண்டே இருந்தது.
அத்தோடும் அவள் விட வில்லை. ஓடினாள்..டெல்லி உச்சநீதிமன்றம் வரை. அதிகாரமும், பணமும் பவனி வரும் உச்சநீதிமன்றத்தில் உள்ளங்களை தேடி அலைந்து சோர்ந்தாள் அனிதா .

உச்சநீதிமன்றமும் கை விட.. நாற்புறமும் கதவுகள் அடைக்கப்பட்ட சூழலில் நட்டாற்றில் விடப்பட்ட நலிந்த ரோஜா போல உடைந்தாள் தங்கை.

சோர்ந்து ஊர்த் திரும்பிய அவளை பிவிஎஸ்ஸி சேர சொல்லி அனைவரும் சொல்ல கனவு ரணமாய் சுமக்க பிணமாக மாறத் தொடங்கினாள்.

அதிகாரமும், சட்டமும் கைக் கோர்த்து தன் கழுத்தை நெறித்து கொலை செய்துக் கொண்டிருப்பதை தனது சலனமற்ற விழிகளால் அனுமதிக் கொண்டிருந்தாள் தங்கை.

நொடிக்கு நொடி ஒரு உடை மாற்றும் மோடிக்கு.. இங்கே ஒரு தேசிய இனத்தின் அறிவுப்பெட்டகமாய் உருவாக வேண்டியவள் உயிரை விட தயாராகி வருகிறாள் என தெரிந்திருக்காதுதான்.

கனவு கானலாகிப் போன பின்னர், உயிராய் சுமந்த லட்சியம் அலட்சியம் செய்யப்பட்ட பின்னர் இனி இருந்தும் பிணம் தானே என ரணம் தாங்கி தூக்கில் தொங்கினாள் தங்கை அனிதா..

என்னிடம் ஒரே ஒரு கேள்வி இருக்கிறது…
இதற்கு மேல் அவள் எவ்வளவு தாண்டா மதிப்பெண் வாங்க வேண்டும்…?

நாங்கள் சென்றிருந்த போது அவள் சவப்பெட்டியின் மீது அவள் கனவான ஸ்டெதஸ்கோப் வைக்கப்பட்டிருந்தது. குற்ற உணர்வும், அதிகாரத்தின் மீதான கோபமும் வெடித்து உடைய சென்ற நாங்கள் கதறி அழுதோம்.

யாருக்கும் அங்கே ஆறுதல் சொல்ல ஆளில்லை. ஏனெனில் ஒரு தேசிய இனத்தின் ஆறுதலும், தேறுதலும் தான் அனிதாவாய் அங்கு செத்துக் கிடந்தன.

அங்கே பல முகங்கள் தெரிந்தன. சொந்த தங்கையை இழந்த அண்ணனாய் வெடித்த சிதறிய அண்ணன் சீமானையும், அண்ணன் அமீரையும் எங்களால் யாராலும் தடுக்க முடியவில்லை. இயக்குனர் அண்ணன் கவுதமன் அதை போராட்டக்களமாக்கி அனிதாவின் கனவை காப்பாற்ற போராடிக் கொண்டிருந்தார். வரும் தலைவர்களை ஏற்று அதை ஒழுங்குப் படுத்திக் கொண்டிருந்தார் விசிக தலைவர் அண்ணன் திருமா. தினகரனும் குழப்பங்களுக்கு நடுவே வந்துப்போனார்.

இதற்கு நடுவே சில இளைஞர்கள் தண்ணீர் தொட்டியிலிருந்து கீழே குதிக்கப் போகிறோம் என்றெல்லாம் பீதி கிளப்பிக் கொண்டிருந்தார்கள்.

எதனால் எதை நியாயப்படுத்தப் போகிறோம்..அதுவும் அனிதாவின் மரணத்தை… மத்திய அரசும், அதன் எடுப்பிடி எடப்பாடி அரசும், உள்ளமற்ற நீதிமன்றமும் சேர்ந்து செய்த மாபாதக படுகொலை ஒவ்வொரு தமிழனின் உள்ளத்தையும் ரணமாக்கி வைத்திருக்கிறது. இனி எரியும் நெருப்பிற்கு யார் பொறுப்பு… இல்லையேல் இதுவும் கடந்துப் போகும்..இன்னமும் கடந்துப் போகும், கடைசியில் கடந்துப் போய் நாமும் பிணமாய் கிடந்து போவோமா என்றெல்லாம் ஏராளமான கேள்விகள் எங்களுக்குள்.

அந்நேரத்தில் இதில் மாபெரும் கொடுமை என்னவென்றால்.. கல்வி உரிமைக்காக களப்பலியான அனிதாவை ஒரு சாதியாக காட்ட முயல்வதும், அவளை சாதிப்பார்த்து சாவுக்கு கூட வராமல் ஒதுக்கி வைத்து அரசியல் செய்வதும் மனதை அறுக்கின்றன.

அனிதா எந்த சாதியும் அல்ல. அவள் அனைவராலும் வழக்கம் போல நம்ப வைக்கப்பட்டு வாக்குறுதிகளால் வஞ்சகம் செய்யப்பட்டு, கழுத்தறுக்கப்பட்ட முத்துக்குமார், செங்கொடி,விக்னேசு என்கிற ஏமாளித்தமிழர் வரிசையில் இன்னொரு தமிழச்சி. அவ்வளவே.

உலகையே பதற வைக்கும் ஒரு மரணம். பக்கத்து தெருவில் உரக்கப் பாட்டு போட்டு ஏதோ ஒரு விழா. வெறுத்துப் போனது மனம். சாதியாய் கிடந்து சாதியாய் அழிவானே தவிர ஒரு போதும் இனமாக திரள மாட்ட மாட்டானா தமிழன் என்கிற கேள்வி அனிதா போலவே தூக்கில் தொங்கிக் கொண்டு இருக்கிறது.

இறுதியாக.. பல களங்கள் கண்ட தளபதிகள்(?), தளகர்த்தர்கள்(?), வாழும் அண்ணாக்கள், என்றெல்லாம் கரை வேட்டி எல்லாம் மொடமொட வேட்டிச்சட்டையில் ..சட்டைப்பையில் கட்சிப்படம் வைத்து காட்சி காட்டும் நாடகக்காரர்கள் வர மறுக்கிற சோக முகத்தோடு வலம் வர தொடங்க ..களை கட்டியது அந்த எளிய அப்பாவி தங்கையின் மரணம்.

நீட் தேர்வு கொண்டு வந்தது காங்கிரசு அரசுதானே..அப்போது கூட்டணியில் குதுகலாமாய் கைகோர்த்து நின்றது நீங்கள் தானே.. நீங்களே முன்னால் போகிறீர்களே என எல்லாருடைய மனசாட்சியும் ஊமையாய் கேட்க… அமைதியாய் படுத்துப் ஊர்வலமாய் போகத் தொடங்கினாள் தங்கை.

நீட் தேர்வு ரத்தாகும் வரை தங்கையின் உடல் எடுக்கக்கூடாது என இளையோரும்,மாணவர்களும் கொதிக்க.. வழக்கம் போல் சாமர்த்தியமாய் வந்து குதித்தன சமரசங்கள்.

இறுதியில் கனவை சுமந்த உடல் இடுகாட்டை நோக்கி நகர…

வானம் மெல்லத் தூறிக் கொண்டிருந்தது.

போய் வா..தங்கையே..
உன் கனவுகளை தின்ற
சாத்தான்களை சரியான
நேரம் பார்த்து பழி தீர்ப்போம்.
அன்றைய தினம் தான்
உன் திரு உரு படத்தின்
முன்னால் மானத்தோடு
விழி திறப்போம்..

Page 29 of 53

Powered by WordPress & Theme by Anders Norén