மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

அம்மாவிற்கு…

20882164_335942676830607_5908594693985192965_n

 

என் அம்மாவிற்கு…

எது நடந்தாலும்…எந்த தவறை செய்தாலும்..சீரணிக்கவே முடியாத என் முட்டாள் தனங்களால் உன் வாழ்வே செல்லரித்துப் போனாலும்…

என்னை வெறுக்க முடியாமல் நேசித்தே ஆக வேண்டிய பெருஞ்சாபம் உன் வாழ்நாள் விதியாக நேர்ந்தமைக்கு வருந்துகிறேன்.

நீதான் அம்மா இதற்கும் காரணம். உன் பேரன்பின் வானம் தாண்டி என் விழிகள் பயணித்ததில்லை.உன் கையை விட்டு நானாக நடக்க முயன்ற போதெல்லாம் தடுக்கி கீழே விழுந்திருக்கிறேன். உன் மடியில் தலை வைக்காமல் தூங்கிய போதெல்லாம் சாத்தான் கனவுகளால் சபிக்கப்பட்டு இருக்கிறேன்.

இருண்டக் குழிகளுக்குள் நானாக விழும் கணங்களில் எல்லாம் எனக்குத் தெரியும். உன் கரம் நீண்டு வந்து எனைக் காக்குமென.
அதற்காகவே…அந்த நம்பிக்கையிலேயே நான் குழிகளுக்குள் மீண்டும் மீண்டும் விழுகிறேன்.

இம்முறை கொஞ்சம் அதிகம் என நான் உணர்கிறேன். உன் மீது என் மன அழுத்தத்தை எல்லாம் கொட்டினேன். வார்த்தை வாணலியில் உன்னை வதக்கி சிதைத்தேன். எல்லாவற்றையும் விட நீ பார்த்து கனவு கண்டு உருவாக்கிய நான் நானாகவே அழிந்துக் கொண்டேன்

என் அழிவை உன்னால் தாங்க முடியாமல் தவித்தாய்.. ஆயுதங்கள் அனைத்தையும் பயன்படுத்தினாய்..பிறகு ஆயுதங்கள் அனைத்தும் தீர்ந்த கர்ணணாய் சரிந்து அமர்ந்தாய்.. அலுத்துப் போனாய்.

யாருமற்ற வெளியில்… தனித்து விடப்படும் நேரமும் வந்தது. சூன்ய வெளியில் தனித்து கண் மூடி அமர்ந்திருந்த போது தாங்க முடியா வலி. ஏமாற்றம்.

நடந்த சூதாட்டத்தில்…நம்பிக்கைகளை வைத்து விளையாடிய தருமனானேன். உன்மத்ததில் எல்லாவற்றையும் இழந்து மீண்டும் உன்னையே தேடி வந்தேன்.

நீயோ என் அழிவினால்.. ஏறக்குறைய அழிந்திருந்தாய். என் கண்களை கண்டாய். குற்ற உணர்வும், தாங்க இயலா இழப்பும் கண்ணீராய் அதில் தேங்கி நிற்க…ஒரு நொடியில் எழுந்து நின்றாய்..

என் தலை கோதி சரி செய்தாய்.

ஒரே ஒரு கேள்வி கேட்டாய்.

இந்த நிலைக்கு யார் காரணம்..எது காரணம்..

நான் தாம்மா காரணம். நான் மட்டுமே காரணம்.

என்னுடைய பேரன்பின் சூடு பல ரோஜாக்களை பொசுக்கின. எல்லாம் என்னை விட்டு போகக்கூடாது என்கிற அழுத்தம் எல்லாவற்றையும் அழித்தன..

மனதார மன்னித்து விடு…என

பேசிக்கொண்டே போன என் வாயை பொத்தினாய்…

நானிருக்கிறேன் …வா…போகலாம் என்றாய் மீண்டும்..

கலங்கிய கண்களுடன் நின்ற என் தலை கோதினாய்..

பெரு மழை பெய்யத் தொடங்கியது.

-மணி செந்தில்

உறுபசிக்கு பின்னால்…

 

 

20953734_335863913505150_1919002977959472517_n (1)

இந்த நாவல் எழுதப்பட்ட காலத்தில் தான் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களோடு சிலப்பதிகாரம் விவரித்துள்ள நிலவியல் குறிப்புகளின் படி கண்ணகி பூம்புகாரிலிருந்து மதுரை வரை நடந்துச் சென்ற பாதையை தேடி அப்பாதையை கண்டறிந்து பயணப்பட்டு கொண்டிருந்தோம் .எங்களோடு ஆனந்த விகடன் புகைப்படக்காரர், அன்பு நண்பர் திரு.பொன் காசிராஜனும் ஒளி ஓவியங்களாக எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தார்.

பெரும் பயணம் அது. குறிப்பாக எஸ்.ரா என்ற கதை சொல்லியோடு பெரும் பயணம் மேற்கொள்வது என்பது முழு நிலா நாளில் அடர் வனத்தில் திரிவது போல..

இந்த பயண நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அவர் எப்போது இந்த நாவலை எழுதினார் என்று எனக்கு இப்போதும் நினைவில்லை.

இந் நாவல் தமிழ் பயின்ற சம்பத் என்ற மனிதனின் வாழ்வையும், சரிவையும் பேசுகிறது. மனித உளவியல் சந்திக்கும் அறம் என்ற உணர்ச்சி தரும் சிக்கல்களை நுட்பமாக ஆராய்கிறது.

ஏன் சம்பத் அப்படி ஆனான்…என்ற கேள்விக்கு பின்னால் இருக்கும் பதில்கள் மொழியற்றவை. இருட்டு மூலையில் மறைந்திருக்கும் வெளவால்கள் போன்றவை. எப்போதும் மெளனம் என்பது இயலாமையால் விளைவது அல்ல. பேரன்பின் பாற் தனக்கு தானே தூக்கி கொண்டு சுமந்து திரிகிற சிலுவையாய் உண்மைகளை மறைத்து திரிகிற மெளனம் திகழ்கிறது.

என் தம்பி இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனர் வருங்கால திரை நம்பிக்கை Murali Manohar உறுபசி நாவலை எனக்கு எஸ்.ரா அர்ப்பணிப்பு செய்திருப்பதாக சொன்னார்.

ஒரு எளிய வாசகன் மேல் ஒரு மாபெரும் படைப்பாளன் கொண்டிருக்கும் ஆழ்ந்த அன்பின் சாட்சி யாக உறுபசி விளங்குகிறது..

இதற்கெல்லாம் அப்பாற்பட்டு இன்றளவும் என்னை உறுத்துகிற, எஸ்.ராவிற்கு மட்டும் பதில் தெரிந்த,இது வரை பதில் சொல்லாத,இனியும் பதில் சொல்ல மறுக்கிற கேள்வி..

என்னில் எது உறுபசி..?? உறுபசியில் நான் யார்..?!!

அண்ணன் முத்துக்குமாருக்கு..

 

20841183_333808420377366_8557206749707335513_n

அவன் இறந்து
ஒரு ஆண்டு
ஓடி விட்டது
என்றார்கள்..

மற்ற நதி எல்லாம்
மணல் அள்ளி
வறண்டு கிடக்க..

காலநதி மட்டும்
பெருக்கெடுத்த
வேகத்தோடு
வறளாமல் ஓடுகிறது..

அழுத கண்ணீர்த் துளி
காய்வதற்குள் அடுத்த
ஆண்டு வந்து விட்டது..

கால,தூர, தேசங்களை
கடந்து…

அலை நழுவும்
கடலாய்..
பரவிக் கொண்டே
இருக்கிறான்..

பேரன்பின்
ஆதி ஊற்றாய்
செவிகளில்
ஊறிக் கொண்டே
இருக்கிறான்..

அவனது

ஆனந்த யாழ்
இசைந்த வண்ணம்
இருக்கும்..

தமிழ் உள்ள வரை..

அவன் மொழி

பறவையாய்
அலைந்துக் கொண்டே
திரியும்…
இசை வானம்
இருக்கும் வரை..

அவன் மொழிப் பருகி
விழிகள் கசிந்துக்
கொண்டே இருக்கும்
நம்
உயிர் உள்ள வரை..

…….,..

அண்ணா..
உனது சிட்டன்
எழுதுகிறேன்.

தாங்காமல் சிட்டாய்
பறந்து ஓடி விடுவதால்
நீ எனை சிட்டன்
என்றாய்..

நானோ என்னை
உன் பித்தன்
என்றேன்.

அதற்கும் அந்த அளவெடுத்த
சிறு புன்னகை..

வாத்தியார் மகனெல்லாம்
இப்படியே பேசி பேசியே
ஊசிப்போக
வேண்டியதுதான் என்றாய்..

நீ மட்டும்
ஊசிப் போகவில்லை
அண்ணா..

மாறாக மொழியின்
விழியானாய்…

உன் உச்சிக்கிளையின்
மேலே
நானும்
ஒரு மழைத்துளியாய்
உன் மொழியை
தீண்டிக் கிடப்பேன்
அண்ணா…

இறந்தவனுக்கு
தான் அண்ணா
புகழ் வணக்கமெல்லாம்…

தமிழாய் வாழும்
உனக்கு என் முத்தங்கள்
அண்ணா..

நீ எப்போதும் என்னிடத்தில்
என் தோளைத்தட்டி
சற்றே கண்டிப்புடன்
சொன்னதை இந்த வருடம்
உறுதியாய்
செய்வேன்.. அண்ணா..

எனது முதல் கவிதை
தொகுப்பு.

உனக்கே அது…
உன்னால் அது..

கண்கள் முழுக்க
கண்ணீரோடும்..
நீ எனக்கு தந்த
கனவுகளோடும்…

 

https://youtu.be/H5EF0xBcq_g

ஒரு ஒப்புதல் வாக்குமூலம்..

20664930_332227397202135_5946565845759023935_n

அந்த மங்கிய
ஒளி அறையில்..

தலைக்குனிந்து
அழுதுக்கொண்டிருந்த
அவனது விழிகள்
கனன்று..
தகித்த ஆன்மாவின்
சொற்களை சொல்ல
முடியாமல் சிவந்திருந்த
வேளையில் தான்..

அவனை சந்தித்தேன்.

எதிலும் நிலைக்
கொள்ளாமல்
அலைக்கழிந்து
சிவப்பேறிய அவன்
விழிகளுக்குப் பின்னால்
இருந்த காயம்
புரையோடி இருந்ததை
அவன் விழிகளை
நேரிட்டு பார்க்கும்
எவரும் அறியலாம்.

காயத்தின் தர்க்க,
நியாயங்களை..
பற்றி சிந்திக்க
ஏற்கனவே பல
இரவுகளை தின்று
பசியாறி இருந்தான்..

அவன் விரல் இடுக்கில்
சாம்பல் தட்டாமல்
நடுங்கிக்கொண்டிருந்த
சிகரெட்டின் புகை
வளைய வடிவங்களில்..
இறந்தக்கால லயிப்புகளை
தேடிக் கொண்டிருந்தான்..

இசைத்தட்டின் மீது உரசும்
முள்ளாய் ..
நினைவுச்சுழலில்
சில நிலாப்பொழுதுகளை
கத்தியாக்கி ..
தன் ஆன்மாவில்
உதிரம் வழிய கீறி
ஒரு முடிவிலிக் கவிதை
ஓன்றை எழுத முயன்றுக்
கொண்டிருந்தான்.

நீ வாழ்வை விட
நரகத்தை
மேலானதாக்கி
வருகிறாய்
என்று முனகிய
என்னை
பார்த்து வெறுமையாய்
சிரித்தான்..

எதிரே இருந்த கோப்பையில்
நிராசையின்
அடையாளமாய்
இருந்த மதுவை
பொறுமையாய்
குடித்தான்.

பிறகு அவனே சொன்னான்.

நரகம் என்ற ஓன்றே
வாழ்வின் ரணத்திற்கு
மேலான சொல் இருக்கிறது
என்ற உம் ஆறுதலுக்காகவே..

மற்றபடி.
நரகமே வாழ்வின்
பிறிதொரு
சொல்..

நரகம் எப்போதும்
காலியாகத்தான்
இருக்கிறது..
ஏனெனில் எல்லா
தண்டனைகளும்
வாழ்விற்குள்ளாகவே
வந்தமர்ந்து இருக்கின்றன..

சாத்தான்களின்
நிழலில் தான்
பூமி இளைபாறுகிறது..

தெய்வங்கள்
பூமியை விட்டு
விலகி விட்டன.

பரிசுத்த
நம்பிக்கைகளை
கொல்வது எப்படி
என அறிதலில்
தேர்ந்த
பின்னரே சக தோளில்
கரம் பதிக்கின்ற
உலகில்…
கழுத்தறுக்கப்பட்டு கிடக்கிறது..
தூய அன்பின் உடல்..

பேசிக் கொண்டே போனான்..

இறுதியில் அவனே..

என்
நம்பிக்கைகளை
கொன்ற சொற்களை..
பொழுதுகளை…
நான் உடைக்கத்
துடிக்கும்
அந்த துரோகக்
கோப்பையில்
சேகரித்துக் கொடு..

அதை அருந்தி
நான் இறக்கிறேன் என..

இல்லையேல்..

மனதார அன்பின்
வழி பிறந்த
பொழுதுகளை..
என் நினைவில் வைத்துக்
நிராயுதபாணியாய்
நிற்க வைத்துக்
கொல்லக்
கூரிய ஆயுதம் ஒன்றினை
உன் பொய்களால்..
தயாரித்துக்
கொடு.

கொன்று தீர்க்கிறேன்.

என்று வலியோடு கத்தினான்..

சரி வா ..

காலாற நடந்து விட்டு வருவோம்..
புதிய கடலலைகள்
கால் தழுவ காத்திருக்கின்றன
என்றேன்.

மறுத்தான்.

என்னால்
உன்னை..
உன் வலியை..
சகிக்க முடியவில்லை.
நான் கிளம்புகிறேன்..

என்றவாறே
வெறுப்புடன்
நடக்கத்தொடங்கினேன்.

என்னை இப்படியே விட்டு
போகிறாயா..
ஏதாவது பொய்யான
மழுப்பல்களோடு
என் நெற்றியை
வருடிக் கொடுத்து
விட்டுதான் போயேன்..
என்ற அவனது
கத்தலும்..
கதறலும்..
கலந்த
இறைஞ்சலை ..
இடறியவாறே
சென்றேன்.

நள்ளிரவு வரை
அவனது இறைஞ்சல்
வெறி நாய்க்கடியாய்..
ரத்தக்கசிவாய்..
என்
தொண்டைக்கடியில்..

*********************†
காலை…
கழுத்தறுக்கப்பட்ட
நிலையில் அவன் பிணமாக
கடற்கரை ஓரத்தில்
கிடக்கிறான் என யாரோ
சொன்னார்கள்.

உதிர உலர்வோடு
என்
தலையணைக்கு
அடியில்
மறைந்திருந்த
கத்திக்கு மட்டுமே
தெரியும்.

அந்த கழுத்தை
அறுத்த நொடியில்
வழக்கத்திற்கு மாறாக
அவனது விழிகள்
தேவ சாந்தம் கொண்டன
என்பதும்…

நன்றியோடு அவன்
என்னை நேசித்தான்
எனவும்.

இறுதியாக அவன்
உகுத்த நீர்
விடுதலைக்கான
ஆதி உணர்வு எனவும்..

ஆம்..

அவனை நான்தான்
கொன்றேன்.
…,

இன்றாவது..
இனிமேலாவது..

நான்
உறங்குவதற்காக..

பகலவா.. நீ என்னை வளர்..

 

20431622_329200347504840_6044427662437589133_n

பகலவன்..
என்றொரு
மாயக்காரன்..

மயக்கும்
மந்திரக்காரன்..

சின்னஞ்சிறு
சொற்களால்
என்னை
மயிலிறகாய்
வருடும்
வசீகரன்..

அப்பா..
உன்னை தாம்பா
எனக்கு அவ்வளவு
பிடிக்கும்
என நேசத்தை
விவரிக்க தெரிந்த
வித்தைக்காரன்…

என்னால் தூக்கிக்
கொண்டு நடக்க
முடியாது என்பதால்…
கைப்பிடித்து
நடந்து வருவதை
இயல்பாக்கிக்
கொண்டவன்..

யாரோ ஒருவர் தன்
மகனை தூக்கிச்
செல்வதை..
நான் தான் ஏக்கமாக
பார்த்தேன்.

அதை சட்டென
உணர்ந்து
வாப்பா செல்பி
எடுப்போம்
தேற்றி விடுகிறான்..

பல நேரங்களில்
மகன்கள் தாயாகவும்.தந்தையாகும்
மாறி விடுவதும்..

நான் குழந்தையாய் அவர்கள்
முன்னால் நிற்பதும்..

எங்கள் வீட்டில் அடிக்கடி
நடக்கிறது..

பகல்..

உன் பிஞ்சுக்கரங்களில்
முகம் புதைத்து
நான் சொல்வது இதைத்தான்..

என்னை உன் மகனாக
வளர்..

மீண்டும் ..

637c68ba0dba902e1d117843e63c048a--trippy-quotes-acid-trip

 

அமில
மழைத்துளிகள்
கொட்டி சிதறும்
என்
எண்ண முற்றத்தில்..

எப்படியாவது
துளிர்த்திட
துடிக்கிறது
என் ரோஜா..

அமைதியான
ஒரு உதிர
சொரிதலுக்கு
பின்..

அமிலத்தை
மிஞ்சியும்..
முளைத்தே
விடுகிறது மலர்..

அமிலம்
முள்ளாய்..
ரோஜாவினடியில்
தேங்கி இருப்பதை
உணர்ந்தாலும்..

முள்ளை
பொருட்படுத்தாது
தீண்ட நீளுகின்ற
என் கனவின்
விரல்கள் தயாராகவே
இருக்கின்றன..

இன்னொரு உதிர
சொரிதலுக்கு..

தூரிகைப் போராளிக்கு புகழ் வணக்கம்.

 

19961232_322073331550875_5509818354733020721_n

அண்ணன் இராபர்ட் பயஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலான…
நான் எழுதிய விடுதலைக்கு விலங்கு நூலுக்கான அட்டைப்படம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதில் குழப்பம் ஏற்பட்ட போது..

சீமான் அண்ணன் தான் அய்யாவிடம் தர வேண்டும் என பிடிவாதமாக இருந்தார்.

எனக்கு டிராஸ்கி மருதுவின் மேலதான் மயக்கம்.

இருந்தாலும் அண்ணன் சொல்லி விட்டாரே என சற்று ஒவ்வாமையோடுதான் அவரை சந்திக்க போனேன்.

ஒரே ஒரு ஈர்ப்பு..மனுசன் எங்க ஊர்க்காரர்.

வைகறை என அழைக்கப்படும் அவரது வீட்டில் நிகழ்ந்தது எங்கள் முதல் சந்திப்பு.

ஒரு டிராயரோடு உட்கார்ந்து எனது புத்தகத்தை படிக்க தொடங்கினார்..

சில பக்கங்களை படித்த பிறகு..அவரது கண்கள் கலங்க தொடங்கின..

புத்தகத்தை மூடி வைத்து விட்டு நீ போய் வா.. என்று அனுப்பி வைத்து விட்டார்.

என்ன இவர் ஒன்றுமே சொல்லாமல் அனுப்பிட்டாரே என்று ஏமாற்றம்.

பிறகு மறுநாள் நான் சந்தித்த போது மனசே சரியில்லப்பா.. இரவெல்லாம் தூங்கல.. படிச்சி முடிச்ச உடனே வரைஞ்சிட்டேன் என அவர் அளித்த ஓவியம் தான் அந்நூலுக்கு உயிரானது.

அதன் பின்னர் தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றப் பணிகளில் சந்தித்த போது விடுதலைக்கு விலங்கு பற்றி பேசாமல் இருக்க மாட்டார்.

தலைவர் பிரபாகரன் பற்றி இது வரை வெளிவராத ஒரு புதிய கோணத்தில் நான் எழுத விருந்த திட்டத்தை அவரிடம் ஒரு முறை விவரித்தேன்.

கண்கள் மினுக்க சொன்னார்..

இதுக்கும் நான் தாண்டா அட்டைப்படம்.

கடைசியாக என் அண்ணன் அறிவுமதி மகள் எழிலின் திருமணத்தில் பார்த்தும் இதே பேச்சு.

நானும் எழுத வில்லை.

அவரும் போய்விட்டார்.

என்றாவது அந்த நூலை நான் எழுதும் போது..

காற்றோடு கரைந்து மிதந்து வரும் அவரது மாயக்கரம் சுமந்த மந்திரத் தூரிகை அந்த அட்டைப்படத்தை வரையும்.

போய் வா போராட்டக் கிழவா..

நாங்கள் இடும் முழக்கங்களில்லாம்..நீ ஊறிக்கொண்டே இருப்பாய்..

தூரிகைப்போராளி வீர.சந்தானம்
அவர்களுக்கு எம்
புகழ் வணக்கம்.

 

வேண்டாம் அண்ணா இது..வேண்டும் அண்ணா நீங்கள் ..

19424553_312465879178287_6778200899699480212_n

என்னுயிர் அண்ணனுக்கு..

கலங்கும் என் விழிகளுக்கு முன்னால் மங்கலாய் நீங்கள் தமிழக முதல்வருக்கு எழுதிய கடித வரிகள் இந்த கணிணித் திரையில் ஒளிர்ந்துக் கொண்டே இருக்கிறது. மீண்டும் ஒருமுறை எனக்குள் அழுத்தமாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த கடிதத்தை பயஸ் அண்ணா எழுதி இருக்க மாட்டார்.

ஏனெனில் நான் உங்களோடு வாழ்ந்திருக்கிறேன். உங்கள் வாழ்க்கையில்..உங்களில் ஒருவனாய்…சில சமயங்களாய் நீங்களாக கூட நான் வாழ்ந்திருக்கிறேன். விடுதலைக்கு விலங்கு எழுதப்பட்ட காலங்களில் இரவு-பகல் பேதமறியாது உள்ளூரிலேயே ஒரு விடுதி அறை எடுத்துக் கொண்டு உங்கள் வலிகளை எழுத்தாக மாற்ற முயன்ற காலத்தில்.. உங்களை அடிக்கடி என் மனக்கண்ணில் தரிசிக்க வேண்டிய சூழல்கள் உண்டு . உங்கள் வாழ்வில் நிகழ்ந்த ..வேறு எந்த சக மனிதனுக்கும் நடந்திருக்கக் கூடாத மானுட வாழ்விற்கு மிஞ்சிய கொடுமையான நிகழ்வுகளை உங்களது பார்வையிலேயே எழுத நேர்ந்த அக்காலக்கட்டத்தில் கூட நீங்கள் நம்பிக்கை மினுக்கும் விழிகளோடுதான் அண்ணா… எனக்கு தோன்றியிருக்கிறீர்கள்.காலையில் நான் கண் விழிக்கும் எனது பொழுது தூரிகையினால் நீங்கள் தொட்டு எழுதிய தலைவரின் ஓவியத்தில் இருந்துதானே தொடங்குகிறது..?

குறைந்த நேர சந்திப்புகளில், இறுக்கமான அணைப்புகளில், புன்னகைக்கும் விழிகளில் எங்குமே உங்களுக்குள் அவநம்பிக்கை நிழலை நான் சந்தித்ததில்லை. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. மூவர் தூக்கு உறுதி செய்யப்பட்ட நேரம் அது. பேரறிவாளன்,முருகன், சாந்தன் அண்ணன்களை சந்திக்க நான் வேலூர் சிறைக்கு வந்திருந்தேன். தங்கை செங்கொடி தீக்கு தன்னை தின்னக் கொடுத்து மூன்று அண்ணன்களை காத்திட உயிரை ஈந்து விட்டு அங்கே காஞ்சிபுரத்தில் வெந்த உடலோடு காத்திருந்த நேரம். எந்த நேரமும் அண்ணன்களை தூக்கில் போட்டு விடுவார்களோ என்ற அச்சம் நம் ஒவ்வொரு ஆன்மாவிற்குள்ளும் பேயாய் ஆட்டி வைத்துக் கொண்டிருந்த நேரத்தில் தான்.. மறுநாள் தூக்கிற்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகின்ற நேரம். அந்த நேரத்தில் தான் நான் வேலூர் சிறைச்சாலைக்குள் வருகிறேன். நான் அண்ணன்மார்களை சந்தித்து விட்டு அந்த பிரத்யோக பகுதியிலிருந்து வெளியேறுகையில் உணர்ச்சி வசப்பட்டு கதறித் தீர்த்த என்னை நம்பிக்கையூட்டும் சொற்களால் நலமுட்டினீர்கள்.
எதை எதையோ இழக்க கூடாதவற்றை எல்லாம் இழந்த இனம் டா தம்பி.இதற்கெல்லாம் கலங்கிடாதே.. என்று நீங்கள் சொல்லிய சொற்கள் இன்னமும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

அப்படி நம்பிக்கை விதைகளின் நாற்றாங்காலாய் இருந்த உங்களிடத்தில் தான் இப்படிப்பட்ட சொற்களோடு இந்த கடிதமா..?

மரண அவஸ்தையை விட கொடுமையான கால தாமதம் தான். நான் ஒத்துக் கொள்கிறேன். இரவு நேர சிறையில்..மங்கிய மேல் கூரையை பார்த்தவாறே உறங்காமல் கிடக்கிற உங்கள் பொழுதுகளை என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது அண்ணா..

பால்நிலா இரவில் உங்கள் தாய்மண்ணில் உங்களது உறவுகளோடு நிம்மதியாக படுத்து உறங்க துடிக்கும் உங்களின் 26 வருடக் கனவின் கனலை எங்களால் உணர முடிகிறது..

ஒரு நாள் வீடு திரும்புவேன் என்கிற பெரு நம்பிக்கை சாதாரண அரசியல் சாக்கடைகளால் கானல் நீராய் மாறி விடுமோ என்கிற உங்களது கவலை புரிகிறது..

வலி மிகுந்த கடந்த காலமும், கடக்க முடியா அனல் வெளி பாலையாய் எதிர்காலமும், புயல் வெளி தோணியாய் அல்லாடும் நிகழ்காலமும் உங்களுக்குள் ஒரு வெறுமையை உண்டாக்கி இருக்கக் கூடும் அண்ணா.. புரிகிறது.

வாழ்வோ, சாவோ ..ஒரு நிச்சயக்கப்பட்ட வாழ்வினை கோருகிற உங்களது நியாயம் அர்த்தமானது தான்.

ஆனால்.. நீங்கள் சராசரி இல்லை அண்ணா . எங்களைப் போல்.
.
எதனாலும் நியாயப்படுத்த முடியாத உங்களின் தனிமை உங்களுக்குள் விதைக்கிற வலி மிகுந்த ஆற்றாமையை எங்களாக ஆற வைக்க முடியவில்லை என்கிற எங்களின் இயலாமையும் உங்களுக்குள் ஒரு வலியாக மிஞ்சி விட்டது குறித்து நாங்கள் உண்மையில் வெட்கப்படுகிறோம்.

உங்களது எந்த கேள்விக்கும் எங்களிடத்தில் மெளனத்தை தவிர வேறு பதிலில்லை.

ஆனால்..

உங்கள் தோளினை தொட்டு, கரங்களைப் பற்றி இனப்பற்றினை, தாய்மண் நேசத்தினை, மானுட வாழ்வின் நம்பிக்கைகளை இடம் மாற்றிக் கொண்ட எங்களால்.. உங்களை எதனாலும் இழக்க முடியாது அண்ணா.

இது ஒரு வகையான சுயநலம் தான். ஆனாலும் நீங்கள் வேண்டும் எங்களுக்கு அண்ணா.

ஒரு நாள் விடியும் அண்ணா. இருள் கிழிந்த அந்த வானில் விடுதலையின் சுடர் ஒளிரும். அந்த நாளில் நாங்கள் உங்களோடும், நீங்கள் எங்களோடும், நாமெல்லாம் நம்மோடும் இருக்கிற நன்னாள் பிறக்கும்.

உங்களை பெரியப்பா என அழைக்கிற ஒரு இளம் தலைமுறையினர் எங்கள் வீட்டில் வளருகிறார்கள். அவர்களுக்கு நாங்கள் பதில் சொல்லியாக வேண்டும். இப்போது நீங்களும் கூட.

இந்த உலகிற்கு நீங்கள் எப்படியோ ..ஆனால் அவர்களுக்கு நீங்கள் தான் அண்ணா.. மானுட வாழ்வின் நம்பிக்கைகளுக்கும், தளரா மன உறுதிக்கும் எடுத்துக்காட்டு.

அவர்களது பிஞ்சுக்கரங்களை உங்களது
கரங்களோடு இணைக்கிற நாள் வரை நீங்கள் எங்களுக்கு வேண்டும் அண்ணா..

வேண்டும்.

வேண்டாம் அண்ணா இது.

வேண்டும் அண்ணா..நீங்கள்..

உங்களது தம்பி..

மணி செந்தில்
22-06-2017

(நிலாக் கால பக்கங்களில் இருந்து..)

 

 

19143414_307529129671962_6561639451854897152_n

இதய வீதியில் மலரென மலர்ந்திருக்கும் வேட்கைக்கும்…கனவில் ஒளிர்கிற நட்சத்திர ஆசைகளுக்கும் பிறந்த வாழ்வின் வானவில் பக்கங்களை தான் நான் எதார்த்த உலகின் அபத்தங்களுக்கு பலி இட்டு …கசிந்துருகிக் கொண்டிருக்கிற இப்பொழுதில் நிலா நாளொன்றில் நீ சொன்னது நினைவுக்கு வருகிறது..

கவிதையாய் விவரிக்க முடிகிற வாழ்வல்ல நாம் வாழ்ந்தது.. அது உயிரை உருக்கி வரையப்பட்ட காப்பியம்.

It s not just a life..we r lived together..it s an epic..

 

வாழ்வு- சபிக்கப்பட்ட வரம்.

 

18891713_305469093211299_1564591392787481116_o
நுரை ததும்பும்
அந்த ஒற்றைக்
கோப்பையின்
விளிம்பில்…

ஆலகாலமாய்
பூத்திருந்த
நஞ்சைக் கண்டு
சற்றே
சிரித்துக் கொண்டது..

சாத்தான்.

இதோ
வாழ்வெனும் அமிர்தம்.

காதலாகி
கசிந்துருகி..
மேனி துயர் கண்டு
மெலிந்து புண்பட..
ரணம் கண்டு
வதை பட்டு
சுகம் காண
வாழ்ந்து விட்டுப் போ
என்ற அலட்சியத்
தொனியில்
அறிவித்தவாறே..
பீடியை பற்ற
வைத்து இழுத்தான்
சாத்தான்.

புகைச் சுருள்
மேல் எழ
யாரோ ஒருவளின்
கூந்தல் நினைவு
எனக்கு வந்தது.

நட்சத்திரங்களில்
வசித்திருக்கிறாயா..
இல்லையெனில்
ஒரு இதயத்தை
வென்றெடு.

தோள்களில்
வானவில்
பூத்திருக்கிறதா…
இல்லையெனில்
சிறகடிக்கும்
விழிகளை தேடி
கண்டடை.

அதற்கு
இந்த அமிர்தத்தை
பருகு என்று பரவசம்
காட்டிய சாத்தானில்
கண்களில் பொய்யில்லை..

நடுங்கிய
கரத்தோடு
கோப்பையை
தழுவச் சென்ற
என் கரங்களை
கடவுள் சற்றே
பிடித்து இழுத்தார்.

வேண்டாம்..
இது உனக்கு பொருந்தாது..

கொந்தளிக்கும்
அலைகடலை
ஒரு கோப்பைக்குள்
அடக்கி வைத்து
அமிர்தம் என்கிறான்.

ஏமாறாதே..

எச்சரித்தார் இறைவன்.

இறைவனின் நிழலோடு
கரைந்து நழுவத்தொடங்கினேன்..

விசுவாசம் ஏற்ற
இறைவன் திரும்பி
நடக்க தொடங்கினார்.

சட்டென திரும்பி
ஒரே மடக்கில்
விழுங்கினேன்
கோப்பையில்
குடி இருந்ததை..

வாழ்வின்
வசீகரம்
சிறகுகளாய்
முளைத்த
தோள்களோடு..

பின் தொடர்ந்த
என்னில்
ஏற்கனவே அருந்தி
விட்டிருந்த நஞ்சு
மெல்லிய புன்னகையாய்
அதரத்தில் அமர்ந்திருந்தது..

காலியாய் இருந்த
கோப்பையை
உருட்டி விளையாடத்
தொடங்கி இருந்தான்
சாத்தான்..

இம்முறையும் ஏமாற்றப்பட்டான்
என விசனப்பட்டார் இறைவன்..

இனிமேல் தான் வாழப் போகிறான்
என குதூகலித்தான் சாத்தான்.

Page 30 of 53

Powered by WordPress & Theme by Anders Norén