மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

கோப்பைகளின் இரவு..

8

அந்த சிவப்பு
மேசையில்..

இரவு என்ற
பொல்லாத
மிருகமும்..
நானும்..
தனித்திருந்தோம்..

நினைவுகளை
கடித்துக் குதறிய
செந்நிற பற்களோடு
சிரித்த இரவோடு..

வாழ்வை ஒரு
மதுவாக்கி குடிக்க
நானும் தயாரானேன்..

இரவின் விரல்
இடுக்கில்
சிகரெட்டாய்
புகைந்துக்
கொண்டிருந்த
என் ஆசைகளின்
கங்கொன்றின்
நுனியில் மின்னியது
ஒரு நட்சத்திரம்.

கனவுகளும்..
நிராசைகளும்..
சம விகிதத்தில்
கலக்கப்பட்டு
கோப்பைகள்
தயாராகின..

தத்துவச்சாரங்களும்
மெளனமாக்கப்பட்ட
சொற்களும்..
இரண்டு பீங்கான்
தட்டுகளில் நிரம்பி
இருந்ததை
முரண்களே நமது
இன்றைய
side dish என
குதுகலித்தது
இரவு.

சியர்ஸ்
என்றவாறே
உரசிய
கோப்பைகளின்
அதிர்வில் சிந்தி
சிதறிற்று
ஆன்மாவில்
என்னையும் மீறி
ஒட்டியிருந்த
முத்தமொன்றும்..
அதிகாலை
அணைப்பொன்றும்..

செந்நிற திரவமாய்
என் கடந்த காலம்
அந்த கோப்பையில்
கொப்பளித்ததை
பார்த்ததை கண்ட
இரவு தன் மினுக்கும்
கண்களின் அலட்சியப்
மொழியில் சொன்னது.

தண்ணீய ஊத்துடா…

..அடங்கியது காலம்.

 

 

https://youtu.be/j-kKJKlufBQ

வேண்டுவன..மயக்கம்.

 

IMG_19700130_041755

 

எனது இரவே…

நீ துளித்துளியாக
நகர்வது …

யாரோ கழுத்தை
பொறுமையாக
அனுபவித்து
அறுப்பது போல…

ரண வேதனையாக
இருக்கிறது..

என்
விழிகளே..

சிவந்த
உங்களது
விழிப்பை மறந்து
சற்றே பொசுங்கி
எரிந்துப்
போங்கள்..

அது கொஞ்சம்
ஆறுதலானது.

உயிர்த்திருந்து
ரணம் கொள்ளும்
மனமே…
கொஞ்சம் மயங்கிப்
போ..

உன் நிலை மறந்து
கிறங்குவது மிக
நலம்.

ஆழ கொதித்து
துயர
வியர்வையால்..
எரியும் உடலமே…

நீ மரத்துப்போ.

அது மரித்துப்
போவதற்கு நிகராக
இருந்தாலும் கூட..

இறுதியாக சொல்வது
இதை தான்..

ஆற்ற முடியா
கொந்தளிப்பினை
கொல்ல…

அது உறக்கமாக
கூட இருக்க
தேவையில்லை…

சிறிது நேர
மரணமாக இருந்தாலும்..

இறுதிவிருந்தின் அவசியம்

 

18342769_294633877628154_5684090597137973115_n

அந்த சாலையின்
முனையில் அவனை
நீ சந்திக்கக் கூடும்..

நிலைக்காத பார்வைகளோடும்..
குழறிய சொற்களோடும்..
கலைந்த கவனத்தோடும்..
கசங்கிய ஆடையோடும்..

முணுமுணுப்புகளோடு
திரியும் அவனை
நீ நிராகரித்து கடக்கலாம்.

நேர்த்தியான உன் ஆடைக்கு..
மின்னுகிற உன் ஆபரணங்களுக்கு..
இன்பம் மிதக்கும் உனது
பயணத்திற்கு..
உண்மையின் கண்களோடு
காத்திருக்கும் அவன்
ஒரு உறுத்தல் தான்..

உன் விழி அசைவுகள்
அவன் மீது படாதவாறு
லாவகமாக கடப்பதில்
இருக்கட்டும் உன் கவனம்..

இன்று நீ
அணிந்திருக்கிற
புனைவுகளின் அடவு
தெரிந்த அவன் சற்று
ஆபத்தானவன் தான்..

எதிர்பாராமல் சந்தித்து
விட்டால் கூட..
அந்த நொடியை
உடைத்துப் போட்டு
யாரிவன் என்கிற
அலட்சியத்தை மட்டும்
உன் ஆன்மாவில்
சேமித்துக் கொள்.

சொற்கள் ஏதேனும்
மிச்சப்பட்டிருந்தால்
உச்சரித்துப் போவதில்
கூட..
ஒன்றும் ஆகி விடப்
போவதில்லை..

எங்கிருந்தோ
யாரோ உன்
மீது கொட்டிய..
உன் அடி
நாக்கில் சேமித்து
வைத்திருக்கும்
கசப்பினை
அவன் மீது
காறி உமிழ்தல்
மிக நலம்.

அக்கணத்தில்
சட்டென உன்
நினைவில் பூக்கும்
அவன் பொழிந்த
நேச மழையை
கவனிக்காமல்
மிதித்துக்
கடந்துப் போக
கண நேர
வெப்பம்
சுமக்கும் காலணிகளை
தயாரித்து வை.

உன்னிடம்
இல்லாவிட்டாலும்
கவலையில்லை ..
உன் மீது யாரேனும்
எக்கணத்திலாவது
துப்பிய வெறுப்பினை
கடன் வாங்கியாவது
அவன் மீது கக்கு..

காரணங்களை
ஒரு
விருந்தினைப் போல
நேர்த்தியாய்
தயாரி.

விதவிதமான
கதைகளோடும்..
உன் விழிகளில்
இதற்கென
ப்ரத்யோகமாக
தயாரித்திருக்கும்
துளிகளோடும்..

அந்த விருந்தினை
உனக்கு நீயே
பரிமாறிக் கொள்..

ஏனெனில்
அவனை நீதான்
கடவுள் என்றாய்..
அவன் சாத்தானாக
உனக்குள் மாற்றிக்
கொள்ள இந்த
இறுதி விருந்து
அவசியம்…

ஆனால்…
அவனுக்கோ..
இவையெல்லாம்
தேவையே இல்லை.

ஏற்கனவே
நிராகரிப்பின்
சொற்கள்
நஞ்சாய்
தடவிய கத்தி
ஆழ பின்
கழுத்தில்
குத்தப்பட்டிருக்கும்
அவனுக்கு
தேவை…

அவன் ஆன்மா
மட்டுமே உணரத்தக்க..
நேர்மையான..
கண்களின் ஈரம்
மினுக்கும்
மதிப்பு மிகுந்த

ஒரு மரணம்.

அன்பின் இழைகளினால் நெய்யப்பட்ட தஞ்சைப் பட்டு- அண்ணன் ஹீமாயூன்.

18300938_294063457685196_4340868929837052457_n

அவரை நான் முதன் முதலில் சந்தித்தப் போது வெக்கை நிறைந்த பாலையின் நடுவே நின்ற கள்ளிப் போல கடுகடுவென முள்ளாய் தெரிந்தார்.
அடுக்கடுக்காய் தெறித்து விழுந்த வார்த்தைகள், வேகமான நடை, உணர்ச்சிப் பிரவாகமான மொழி என எல்லாமே சற்றே தூக்கலாக தெரிந்ததால் நான் கொஞ்சம் அசெளகரியமாகதான் உணர்ந்தேன்.

மின்னல் தெறித்து விழுந்த ஒரு நொடியில் அவர் என்னைக் கவனித்து விட்டார். அய்யாவின் மகனா…என்ற கணத்தில் தம்பி என தாவி அணைத்தார். சட்டென அக்கைகளுக்குள் சிக்கிக்கொண்ட நான் அதன் பிறகு மீளவே இல்லை.

பல பொழுதுகள்..நிறைய சொற்கள்…அனுபவங்கள்…பயணங்கள் என லயிப்பு நிரம்பிய மதுக்கோப்பையாய் அவர் எனக்குள் இறங்கிக் கொண்டே இருந்தார். சின்னஞ்சிறு சொற்களிலும், சில வரி பத்திகளிலும் விவரிக்க முடியா வாஞ்சை மிக்க உறவு வெளியொன்றில் இருவருமே அகப்பட்டு போனோம். சில சிக்கலான பொழுதுகளில் மென்மையாய் நல்ல மாற்றங்களை என்னுள் ஏற்படுத்தி அமைதியாய் என்னை கவனித்தார். மேடைகளில் ஏற்றினார். நிறைய பேச வைத்தார். அதற்காக என்னை தயாரித்தார்.

மாணவர்கள் மத்தியில் அவர் ஒரு கதாநாயகன். பேரை சொன்னால் போதும் …கைத்தட்டல்கள் வானைப்பிளக்கிற அளவிற்கு ஒலிக்க வைக்கத்தெரிந்த இதயம் கவர்ந்த வசீகரன். அண்ணன் சீமானை அச்சு அசலாக நகலெடுக்க தெரிந்த அழகன்.

அவரிடம் என்ன தான் நான் பேசவில்லை…அம்பேத்கரியம், பெளத்தம், இஸ்லாம், இளையராஜா, சூஃபி ஞானம்,மெளனராகம் கார்த்திக் ,என விரிந்துக் கொண்டே போகிற விசித்திர விண்ணகம் அவர்.

என் மகிழுந்து கல்லூரிக்குள் நுழையும் போதெல்லாம் அதன் கதவை திறந்து விடும் அவரின் எளிமை பொங்கும் அன்பை கணிக்கத்தவறிய தம்பி ஒருவன் சொன்னான்..

”என்ன அண்ணே… இவர் தான் 8 கல்லூரி உரிமையாளரா…. அப்படி நடந்துக்க மாட்டறாரே…”

இல்லடா இவர் அதுக்கும் மேலானவர் என்றேன் .

எப்படி..

அங்கே பயிலுகிற… பணிபுரிகிற… அவருடன் பழகுகிற.. நாம் தமிழராய் அவருடன் பயணிக்கிற பல்லாயிரம் இதயங்களின் உரிமையாளர்.

அதனால் தான் அவர் அப்படி இருக்கிறார் என..

ஒவ்வொரு முறையும் அவர் தோள் பிடித்துதான் நான் படியேறுகிறேன். அவரும் சொல்கிறார். இதை சீக்கிரம் சரி செய்யணும் டா…உனக்கு டீரிட்மெண்ட் எடுத்து காலிபர் போட்டு நடக்க வைக்கிறது என் வேலைடா …என கம்மிய குரலில் சொல்லும் அவரது கவலை எனக்கு புரிகிறது.

எனக்கென்னவோ அதெல்லாம் வேண்டாம் எனத் தோன்றுகிறது.

உங்கள் தோள் பிடித்து நடக்க …நான் இப்படியே இருந்து விடுகிறேனே..அண்ணா..

ஆகச்சிறந்த அன்பானவனுக்கு…
அண்ணன் ஹீமாயூனுக்கு…

அன்பு நிறைந்த முத்தங்களுடன்..இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

https://www.youtube.com/watch?v=Wh_v9SZSTJA

 — 

நினைவின் தனிமை..

 

17992209_289848791439996_7020550986337600879_n

 

இரவுப் பொழுதின்
மலை அருவி
போல …
யாரையும் நனைக்காமல்
போகிறது..
தனிமை
இசைக்கும்
என் நினைவு…

மரணம்- தீராத் துயர் நீங்க சிறுபுன்னகை..

 

 

15726679_234535580304651_6748961008342597201_n

எப்போதும் என் இரவுகளில் தனிமை தகர வாளியின் மீது சொட்டிக்கொண்டிருக்கும் மழைத்துளிகள் போல அமைதியற்றது. விரிந்த வானில் தனித்து பறக்கும் ஒரு பறவை போல ஆழ் தனிமையை என் இரவுகள் போற்றுகின்றன. கண் மூடி அமைதிக் கொண்டிருக்கிற இமைகளுக்குள் அமர்ந்து தனிமை வயலின் வாசிப்பதை என் இரவுகள் உணர்ந்திருக்கின்றன. ஆதி வனத்தின் விடியற்காலைப் பொழுதைப் போல களங்கமற்ற தனிமையைத் தான் மரணமும், பிறப்பும் சதா நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன.

ஒரு சிறு புன்னகை, இடது கையை இறுக்கி பற்றி தோளில் ஆழப் புதையும் முகம், தீரா அன்பினால் வெம்மைக் கொண்டிருக்கும் அந்த விழிகள் என தனிமைத் தேநீரை ருசிக்க விடாமல் துரத்தினாலும், குளிர்காலப் போர்வைப் போல தனிமையை இறுக்கப் போர்த்திக்கொள்ளவே என் இரவுகள் விரும்புகின்றன.

அப்படி ஒரு பனிக்கால தனிமை இரவில் தான் நான் இத்திரைப்படத்தை காண நேர்ந்தது. என் விழிகளுக்கு முன்னால் விரிந்த காட்சிகளால் நான் உள்ளிழுக்கப்பட்ட போது ..நானும் அத்திரைப்படத்தின் ஒரு அங்கமாகி இருந்ததை உணர்ந்தேன். ஒரு படைப்பில் பார்வையாளனும் ஒரு அங்கமாகி துடிப்பதைதான் படைப்பூக்கத்தின் உச்சம் சாதிக்க விரும்புகிறது என்று நினைத்தால்…அந்த நினைப்பிற்கு இத்திரைப்படம் நேர்மை செய்திருக்கிறது. ஏனோ மிகுந்த தனிமை உணர்ச்சியையும், விழிகள் முழுக்க கண்ணீரையும் தந்து …கூடவே சிறு புன்னகையும் பரிசளித்துப் போனது இப்படைப்பு.

அந்த அரண்மனை..மின்சாரம் இல்லாத பொழுதுகளில் கைவிளக்கு ஏந்திய காரிகையாய் ஐஸ்வர்யா ராய், தன் வாழ்வின் துயர் முடிய கருணைக்கொலை வேண்டி காத்திருக்கும் ரித்திக், அவருக்காக வாதாடும் அந்த பெண் வழக்கறிஞர், ரித்திக்கின் மருத்துவர், அவருக்கு சேவகம் செய்யும் இரண்டு பெண்கள், அவரின் மாணவனாக வரும் அந்த இளைஞன் என…மிகச்சில பாத்திரங்களைக் கொண்டு வலிமையான திரைப்படத்தை சஞ்சய் லீலா பன்சாலி வழங்கி இருக்கிறார்..

ஐஸ்வர்யாவைப் பற்றி ரித்திக்கின் வழக்கறிஞர் விவரிக்கும் போது.. அவள் தோழிக்கு மேலானவள், அவள் காதலியை மிஞ்சியவள், சொல்லப்போனால் அவள் மனைவியையும் தாண்டியவள்.. என்று விவரிக்கிற காட்சியாகட்டும், கொடுமைக்கார கணவனால் முடியாத ரித்திக்கின் முன்னால் ஐஸ்வர்யா தாக்கப்பட்டு இழுத்துச்செல்லப்படும் காட்சியிலும், அவரை பிரிந்து ரணமாகி ரித்திக் துயர்க் கொள்ளும் காட்சியிலும் சொல்லப்படும் உணர்ச்சியலைகளாட்டும், இப்படம் எந்த அலைவரிசையிலும் பொருந்தாமல் தனித்து மிளிர்கிறது.

Guzaarish -ஒரு திரைப்படம் என்றெல்லாம் சுருங்க வைக்க முடியாது. அது ஒரு விவரிக்க முடியா அனுபவம். படம் முழுக்க அரூவ கதாபாத்திரமாய் இடம்பெற்றிருக்கும் தனிமையுணர்ச்சியே இத்திரைப்படத்தின் ஆழமான அழகியல். மரணம் கூட ஒருவகை புன்னகைதான்..அது ஒரு ஆறுதல் தான்..என்பதை விவாதிக்கும் இத்திரைப்படம் தரும் அனுபவம் உண்மையில் அபூர்வமானது.

மரணத்தை மிஞ்சவும் வாழ்தலின் துயர் கொடியது என்பதைதான் வாழும் போதே உணரும் ஒவ்வொருவரும் பெற தகுந்த மாபெரும் அனுபவம்..

…………..

சொல்லில் மறைந்த செய்திகள் ..

 

15873112_240184553073087_4173025362634729673_n

 

வெளிச்சப்புள்ளிகள்
முளைக்காத
காட்டில்
கண்களிரண்டையும்
பிடுங்கி யாருக்கும்
தெரியாமல்
புதைத்து விடு..

கால்கள் இரண்டையும்
கட்டி.
கைகள் இரண்டையும்
வெட்டி..
ஒலி படா வண்ணம்
செவிகளை அறுத்து
புதை..

மறக்காமல்
என்
ஆணுறுப்பினை
வெட்டி
ஓநாய்களுக்கு
மத்தியில் வீசியெறி..

ஆழமாக புதை..
இன்னும் தோண்டு..

தப்பித்தவறி
முளைத்து விட
கூடாது என்ற கவனம்
உன் அறிவினை
பதட்டத்திலேயே
வைக்கட்டும்..

ஆழ புதைத்து..
உன் கால்களால்
மண்ணை மிதித்து
உறுதிச்செய்து
கொள்..

ஆழ புதைத்து
விட்டு மேலே
ரோஜா பதியம்
இட்டு விடாதே..

நாளை முட்கள்
கூட முனகக்கூடும்..

செய்து விட்டாயா..

சற்றே
கம்பீரமாக
உன் வெற்றியை
முழங்கிக்
கொள்..

அடிமையே செத்து ஒழி
என்று வாய் விட்டு
சிரி..

சிரித்துக் கொள்..

அதுவே உன்
இறுதிப் புன்னகையாக கூட
இருக்கலாம்.

வெட்டிய வாளின்
நுனியில் மிச்சமிருந்த
உதிரத்துளி கூட
இன்னும் உயிரோடு
இருக்கலாம்..

யார் கண்டது..???

அது மழையோடு கலந்து
ஆற்றில் ஓடி..
என்னைப் போலவே
இருக்கும் இன்னொரு
அடிமையின் உடலில்
கூட சேரலாம்..

அவனின்
அடித்தொண்டையில்
இருந்து மீண்டும்
நான் பிறப்பேன்..

அதற்காகவே …
என்னை அடிமையாகவே
வைத்து அழித்தொழி.

 

* எம் பண்பாட்டு உயிர் நிகழ்வான பொங்கல் திருநாளை இந்தியத்தேசியம் மறுத்து எம்மை அடிமைகள் என உணர்த்திய ஒருநாளில்….*

இப்போதைய நிலை குறித்த சில தகவல்கள்…

 

 

15972645_242421829516026_2504605351533441783_o

 

தழும்பாக
மிஞ்சுவதும்
வலியாக
எஞ்சுவதுமாக

கனன்று எரியும்
காயம் நீ…

பயப்படாதே..

ஒரு போதும்
என் காயங்கள்
ஆறுவதில்லை..

நானும்
ஆற்ற
நினைப்பதில்லை..

உன்னால்
நகராத
ஆற்றின்
சுழி
மையத்தில்
விசையற்றும்
திசையற்றும்
ஆழ்ந்திருக்கின்றேன்..

அந்த
மோனநிலையில்
நானாகவே
உணர்ந்தது

எதுவும்
உன்னால் இல்லை
எனவும்…

அது
என்னால்
தான் எனவும்..

சொல்லப்போனால்
நீ கூட
நானாக
வரைந்துக் கொண்ட
கனவு ஓவியம்
எனவும்…
………………….

இதை பார்த்து
உன்னால்
மெலிதாக
புன்னகைக்கூட
முடியும்..

ஆனால்
புன்னகைக்கு
பின்னால்
கசியும்
உதிர
வாடையையும்
என்னால்
இப்போதே
இங்கிருந்தே
உணரமுடிகிறது
என்பதே
இப்போதைய
என் துயர் நிலை..

– மணி செந்தில்

பனித்துளிகளின் வியாபாரி

 

 

16298627_248346298923579_4402940604851716045_n

 

நீல ஆகாயத்தின் கீழ் பச்சைப் போர்வை என விரிந்திருந்த பசும் புற்களின் நுனியில் சேகரித்த பனித்துளிகளை விற்பவன் நேற்று வந்திருந்தான்.

கண்ணாடிக்குடுவையினுள் மின்னிக் கொண்டிருந்த அந்த பனித்துளிகள் இதுவரை பார்த்தறியாத தூய்மையால் ஏரிப்பரப்பில் படர்ந்திருந்த நிலவொளியை ஒத்திருந்தன.
மெல்ல நெருங்கி பார்க்கும் போது அந்த பனிக்குமிழியை பார்ப்பவரின் பால்ய முகம் தெரிந்து பரவசப்படுத்தியது.

பனித்துளிகளை சுமக்கும் அந்த கண்ணாடிக்குடுவைவினை அப்படியே ஏந்தி முகத்தில் வைத்து மகிழ்ந்தவர் கன்னத்தில் முதல் முத்தம் தந்த இதழ்களின் தடம் பதிந்தது.

என்ன விலை..என்ன விலை

என கேட்பவர்களிடத்து பச்சை விழிகளைக் கொண்ட அந்த செவ்வண்ண சட்டைக்காரன் சொன்னான்.

உங்கள் ஆன்மாவின் அழியாத நினைவுகளில் முதல் மூன்றினை தாருங்கள். கூடவே உங்களின் ஈரம் அடர்ந்த முத்தம் ஒன்றினையும்.

விசித்திர விலையை கேட்டவர்கள் விக்கித்துப் போனார்கள். அழியாத நினைவுகள் காலத்தின் கலையாத ஓவியம் அல்லவா..அதை விற்று வெறும் பனித்துளிகள் வாங்குவதா…முத்தம் என்பது நம் அந்தரங்கத்தின் நுழைவாயில் அல்லவா..அதை கொடுத்து பசும் புற்களின் ஈரம் அடைவதா.. என்றெல்லாம் குழுமி இருந்தோர் மத்தியிலே குழப்பம் ஏற்பட்டது.

என்னிடத்தில் முத்தம் இருக்கிறது. ஆனால் என் நினைவுகளை வாழ்வின் எதிர்பாராத தருணங்களின் வண்ணம் கொண்டு வெறுப்பின் தூரிகையால் ஏற்கனவே அழித்து விட்டேன் ..எனக்கு பனித்துளிகளை தருவாயா என்று இறைஞ்சியவளை பனித்துளி விற்பவன் விரக்தியாக பார்த்தான்..

அவனே மீண்டும் சொன்னான்.

வெறும் முத்தம் எச்சில் ஈரம் மட்டுமே..உள்ளே சுரக்கும் நினைவுகளின் அடர்த்திதான் முத்தத்தை உணர்ச்சியின் வடிவமாக்குகிறது. உணர்ச்சியற்ற முத்தம் என்பது கழுத்தில் சொருகப்பட்ட கத்திப் போல கொடும் துயர் கொண்டது. உணர்ச்சியற்ற வெறும் இதழ்களின் ஈரத்தை வைத்துக் கொண்டு என்னை விஷத்தை முழுங்க சொல்கிறாயா என எரிந்து விழுந்தான்.

என்னிடத்தில் நினைவுகள் இருக்கின்றன. அதில் படர்ந்திருக்கும் கசப்பின் நெருப்பு என் முத்தங்களை எரித்து விட்டன ..முத்தங்கள் இல்லாத நினைவுகள் மதிப்பற்றவையா.. எனக்கு பனித்துளிகள் இல்லையா என்று புலம்பியவனை பார்த்து பனித்துளி வியாபாரி அமைதியாக சொன்னான்.

முத்தங்கள் இல்லாத நினைவுகள் இதழ்கள் எரிந்த முகம்.
இதழ்களற்ற முகம் சுமக்கும் நினைவுகள் எப்போதும் பனித்துளிகளை சுமக்காது என்றான்.

நேரம் ஆக ஆக சிரித்துக் கொண்டிருந்த பனித்துளிகள் வாடத்தொடங்கின. பனித்துளி விற்பவன் பதட்டமடைய தொடங்கினான்.

கூடியிருந்த கூட்டம் மெதுவாக கலையத்தொடங்கியது.

இந்த உலகில் நினைவுகளை சுமந்து..கனவுகளின் ஈரத்தோடு முத்தமிடுபவர் யாருமில்லையா… முத்தமிடும் போது நினைவுகளை விலக்கியும், நினைவின் நதியில் தொலையும் போது முத்தத்தை அழித்தும் தான் இவர்கள் வாழ்கிறார்கள்.

என்று மனம் வெறுத்து பனித்துளிக்குடுவைகளை அருகே சலசலத்து ஓடிக் கொண்டிருந்த நிலவாற்றில் வீசியெறிந்து விட்டு அந்த கிராமத்தை விட்டு அகன்றான் பனித்துளி விற்பவன்.

அன்றைய பெளர்ணமி இரவில் ஆற்று நீரை அள்ளிப் பருகிய எவரும்..நினைவுகள் கொப்பளிக்க..எதையோ முணுமுணுத்தவாறே நதிக்கரையில் இறந்துக் கிடந்தனர்.

தப்பிப் பிழைத்து எழுந்த சிலர் கண்கள் வெறிக்க நடைப்பிணங்களாக திரிந்தனர்.

நம்மைப் போன்று.

….யார்..யார்..

16640712_255200901571452_3504575587698011278_n

 

 

வெம்மை பூக்கும்
இப்பாலையில்..
தனிமை யார்..
அனலேறிய
நினைவு யார்…

துளித்துளியாய்
வடியும் இந்த
இரவில்..
இருள் யார்..
குளிர் யார்..

அலை அலையாய்
தழுவி எழும்
இக் கடலில்
படகு யார்..
தத்தளிப்பு யார்..

நிலவொளி
சிலையாய்
உறைந்திருக்கும்
இந்தக் குளத்தில்
நீர் யார்..
மெளனம் யார்..

வானமே வழிந்து
ஓடுவதாய்
உணர வைக்கும்
இந்த அருவியில்
ஓசை யார்..
பாய்ச்சல் யார்..

மேகமாய் திரண்டு
வந்து பொழியும்
மழை மாலையில்..
தேநீர் யார்..
கவிதை யார்..

வியர்த்து அடங்கும்
நடுங்கும் நடுநிசிக்
கனவில்..
பிம்பம் யார்….
சொற்கள் யார்…

சலனங்கள்
தொலைத்த
என் விழிகளில்
காதல் யார்..
பிரிவு யார்..

தடுமாறுகிற
உன் சொற்களில்..
வலி யார்..
மொழி யார்…

முடிவாய்..
முடிந்தால்..
சொல்.

யார் ..
யார்..

நம்மில்

யார்..
யார்..

நீயும்
நானும்..

Page 31 of 53

Powered by WordPress & Theme by Anders Norén