மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

ஏமாற்றப் பிம்பம்.

cropped-anonymous-15061.jpg
எப்போதும்…
ஆர்வமாய்
தொடங்கி
ஏமாற்றப்
பிம்பத்தில்
ஆழ உறைகிறது..
 
ஞாயிறு
நாளொன்றின்
துயர் கவ்வும்
முடிவு.
 
– =

பர்கான் வானி- கனன்று ததும்புகிற காஷ்மீரிய விடுதலை உணர்வு..

ENCOUNTER-KUNZAR-PIX-5
 
என்னை அடக்கு.
என்னைக் கொல்.
என் மொழியை அழி.
என் நாவுகளை வெட்டு.
ஆனால் என் முன்னோர் வாழ்ந்து இறந்து,
மக்கிப் இன்று
மண்ணாகி இருக்கிற
என் தாய்நிலத்தை
என்ன செய்வாய்..??
என்ன செய்வாய்..??
 
எங்கே கொண்டு புதைப்பாய்..??
 
– மேகாலயா பூர்வக்குடிகளின் பாடல்
 
தேசிய இனங்களின் பெரும் சிறைக்கூடமாக இந்திய வல்லாதிக்கம் இருக்கிறது என்பதற்கு இந்த பெருநிலத்தின் இரத்தம் தோய்ந்த வரலாறு சாட்சியம் பகர்ந்துக் கொண்டே இருக்கிறது.
 
நன்கு வளர்ச்சியடைந்த 20க்கும் மேற்பட்ட தேசிய இனங்களின் தனித்தன்மையை ஒடுக்கி, அவர்களின் இறையாண்மையை மறுத்து, நிலத்தை சுரண்டி, வளங்களை அபகரித்து , ஆட்சி, அரசியல், கலை, பண்பாடு என அந்த இனம் கொண்டிருக்கிற தனித்துவ விழிமியங்களை அழித்து, இந்த பெருநிலத்தை 200 பணக்காரர்கள் ஆளுவதற்கான ஒரு நாடாக கட்ட கோடிக்கணக்கான பல்வேறு தேசிய இனங்களின் மக்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பதை தான்
இவர்கள்.. இந்திய ஒருமைப்பாடு, ஏக இந்தியா என்றெல்லாம் வர்ணப்பூச்சு பூசுகிறார்கள்.
 
இந்தியாவை பொறுத்தவரையில் ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே மாதிரியான மக்கள் என்பதான மந்தைக் கூட்டத்தை உருவாக்கவே இந்திய வல்லாதிக்கம் முயல்கிறது. தனித்துவ பண்பாடு, மொழி, வழிபாட்டு முறைகள்,வாழ்வியல் அம்சங்கள் கொண்ட பிறிதொரு இனத்தின் தனித்துவ அம்சங்களை அழித்து விழுங்கி ஏப்பம் விட இந்திய வல்லாதிக்க பூதம் திட்டமிட்டு காய் நடத்துகிறது என்பதைதான் சமஸ்கிருத கட்டாயத் திணிப்பு , கல்விப் பாடத்திட்டங்களில் இந்துத்துவ அம்சங்களை திட்டமிட்டு திணித்தல், தேசிய இனங்களின் தனித்துவ குணாதிசியங்களான ஜல்லிகட்டு போன்றவைகளுக்கு தடை போன்றவை காட்டுகின்றன.
 
எனவே தான் தமிழ்த்தேசியர்கள் தாங்கள் இந்துக்கள் என்கிற பொது அடையாளத்தை மறுக்கிற முதன்மை சக்திகளாக திகழ்கிறார்கள். இதை பஞ்சாபிகளின் போராளி பேராசிரியர் ஜக்மோகனும் வீரத்தமிழர் முன்னணி தொடக்க விழாவில் பேசிய போது தெரிவித்தார். “ தமிழர்களே.. நாங்களும் உங்களைப் போலவே.. நாங்கள் இந்துக்கள் அல்லர், நாங்கள் பஞ்சாபிகள் “ என்றார்.
 
அதைப் போலவே எம் சகோதரன் காஷ்மீரிய விடுதலைப் போராளி யாசின் மாலிக் நாம் தமிழர் கட்சியின் அழைப்பினை ஏற்று கடலூருக்கு வந்திருந்த போது சொன்னதை இவ்விடத்தில் நினைவுப்படுத்துகிறேன். “ காஷ்மீரிய நிலம் முஸ்லீம்களுக்கு மட்டும் சொந்தமான நிலமல்ல. அங்கு வசிக்கும் பார்சிக்கள் , பண்டிட்க்கள், பழங்குடி மக்கள் என வேறுவகையான பண்பாட்டு கூறுகளை கொண்ட மக்களுக்கு சொந்தமானது. இன்னும் சுருக்கமாக சொன்னால் காஷ்மீர் காஷ்மீரிகளுக்கு சொந்தமானது “.
ஆனால் இந்தியா காஷ்மீரிய விடுதலையை ஒரு மதம் சார்ந்ததாக, இஸ்லாமீய மார்க்கம் சார்ந்ததாக திட்டமிட்டு சித்தரித்துக் கொண்டு இருக்கிறது.
காஷ்மீர் என்கிற பேரழில் மிக்க அந்த நிலம் இந்திய வல்லாதிக்கத்தின் அதிகாரப் பசியால் இரத்தம் தோய்க்கப்பட்டு 60 ஆண்டுகளுக்கு மேலாகின்றது. இதுவரை அம்மக்கள் தங்களை இந்தியர்களாக பொருத்திக் கொள்ள தொடர்ந்து மறுத்து வருகிறார்கள்.
இந்திய- பாகிஸ்தான் அதிகார அரசியல் போட்டியில் தாங்கள் பகடைக்காய்களாக உருட்டி விளையாடப்படுவதை அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள்.
நாங்கள் பாகிஸ்தானியர்கள் அல்லர், இந்தியர்கள் அல்லர்., நாங்கள் காஷ்மீரிகள் என உரக்க முழங்கிப் போராடி வருகின்றனர். இந்திய அரசின் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் அங்கு வசிக்கும் ஒவ்வொரு குடும்பமும் தினம் தோறும் இழப்பினை சந்தித்து வருகின்றார்கள்.
 
தங்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக காஷ்மீரி சகோதரர்கள் வெகு நாட்களாக போராடி வருகிறார்கள். தங்கள் இறையாண்மையை காக்க உதிரம் சிந்தி, உயிரைக் கொடுத்து அவர்கள் நடத்துகிற தாய்நாட்டின் விடுதலைப் போராட்டம் இந்தியாவால் தீவிரவாதம், பயங்கரவாதம் என்றெல்லாம் திட்டமிட்ட பிரச்சாரம் மூலமாக வெளி உலகிற்கு காட்டப்பட்டு வருகிறது.
 
_97332cec-45a8-11e6-b0f4-7520104944f6
காஷ்மீரிகளின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாத குரலோசை ஒடுக்கப்பட்டு வாழ்கிற தமிழ்த்தேசிய இனம் போன்ற பல தேசிய இன மக்களுக்கு எல்லாம் உரிமைக்குரலாக ஒலிக்கிறது. தன் தாயக மக்களுக்காக, தன் தாய்நிலத்தின் விடுதலைக்காக பர்கான் வானி என்கிற அச்சகோதரன் உயிரைச்சிந்தி ..உணர்வினைப் பரப்பி இருக்கிறான். இந்தியாவின் ஒட்டுக் கூலிக் குழுவான ராஸ்டிரிய ரைபிள்ஸ் மூலமாக சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் பர்கான் வானியை தங்களது அடையாளமாக தூக்கி சுமக்கிறார்கள் காஷ்மீரிகள்.
 
அவனது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான காஷ்மீரி தேசிய இனமக்கள் கலந்துக் கொண்டு தங்கள் சுய நிர்ணய உரிமைக்காக குரல் கொடுத்த அந்த இளைஞனின் வீரச்சாவுக்கு பெருமை சேர்த்து இருக்கிறார்கள்.
13600273_132058630558408_8383952100426859512_n
இந்நேரத்தில்.. தனது தாய்மண்ணின் விடுதலைக்காக ஆயுதம் தாங்கிய பர்கான் வானியின் இளந்தோள்கள் தங்கள் களைப்பிலிருந்து நிரந்தமாக விடுப்பட்டிருக்கின்றன. தனது தாய்நிலத்தின் பனிப்படர்ந்த மலைகளை பார்த்து ரசித்த அந்த கண்கள் நிலைக்குத்தி நின்று இருக்கின்றன. சதா லட்சியக் கனவோடு உலவிய அவனது கால்கள் மரக்கட்டை போல மரத்து நீண்டு இருக்கின்றன.
அவனது விடுதலைக் கனலை சுமந்த சொற்கள் ஊமையாக்கப்பட்டு விட்டன. அவனைப் பற்றி மிஞ்சியிருக்கும் ஏதோ ஒரு நினைவுத்துளியைக் கூட வல்லாதிக்கத்தின் அதிகார நாவுகள் மிச்சம் வைக்காமல் உறிஞ்சி விடக் கூடும். அவன் பற்றி எதுவும் இல்லை என நிம்மதியில் கொன்ற கூட்டம் ஆழ உறைந்திருக்கையில்..
 
பனி படர்ந்த அந்த மலைச்சாரல்களில் அவன் சுவாசித்த காற்று மட்டும் அதே மூர்க்கத்துடன் உலவிக் கொண்டு இருக்கிறது..
 
அக்காற்றை சுவாசிக்கிற ஏதோ ஒரு காஷ்மீரி உரத்த குரலில் முழங்குவான்..
 
காஷ்மீர் எங்கள் நாடு. இந்தியர்களே வெளியேறுங்கள்.
 
– மணி செந்தில்

தற்கொலைப் பற்றிய சில குறிப்புகள்..

 

suicide-hanging-e1442464610195

 

மரியாதையென்பதை காசு பணத்தால் அளவிடும் இந்த மானம்கெட்ட சமூகத்தில் தற்கொலை நியாயமாகவே படுகிறது…

என்ன வாழ்க்கைடா…

– என் தம்பி ஒருத்தன்..

ஆனால் தற்கொலை என்பது இன்னும் மரியாதை கெட்டது. தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களின் கண்களை பார்த்து இருக்கிறாயா…. காயமும், வலியும் நிறைந்த அந்த விழிகள் எதனாலும் ஆறுதல் கொள்பவை அல்ல. ஒரு முறை தற்கொலை முயற்சி செய்து விட்டு வாழ நேருகிற துயரம் மரணத்தை விட கொடுமையானது. காயமானது. இன்னொரு செய்தி.. மற்றவர்களால் நமக்கு தர கோருகிற எதுவும் நமக்கு நேர்மை செய்யாது. ஈடு ஆகாது. மரியாதை என்பதும் அதற்கு விதிவிலக்கு அல்ல. உன் வாழ்க்கை . நீ வாழ். மற்றவர் மதிப்பதும், இகழ்வதும் அவரவர் பாடு. உன் வாழ்க்கையை உன் போக்கில் நீ வாழ யாரிடமும் அனுமதியோ, எதிர்பார்ப்போ கொள்ள தேவையில்லை. மதிப்பு என்பது நம் மீது நாம் கொள்வது. அது மற்றவர்களை சார்ந்திருக்க தொடங்கும் போதுதான் துயரம் சூழ தொடங்கிறது. எதுவும் மற்றவர்களை சார்ந்து பிறக்கவும் கூடாது. எழவும் கூடாது. நாம் தான் நமக்கு. வாழடா தம்பி. உன் போக்கில். அதுவே அழகானது. உண்மையானது. சொல்லப்போனால்… உனக்கு நீயே மதிப்பு செய்து கொள்வது.

உண்மையில் தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவனின் அம்முயற்சிக்கு முந்தைய நிமிடங்கள் விசித்திரமானவை. தன்னுடைய முயற்சிக்கான தர்க்கங்களை ,நியாயங்களை தனக்குள்ளாக ஏற்படுத்துகிற அந்த நிமிடங்களை கடப்பதென்பது ஆள் அரவற்ற ..வெக்கையும், தனிமையும் நிரம்பிய கொடும் பாலையை கடப்பதற்கான உளவியல் சவால்களை கொண்டது. வாழ முடியாததற்கான சூழல்களின் இறுக்கத்தினை நமது மனது கடும் துயராக கொண்டிருக்கும் போதுதான்.. இனி வாழ்வது என்பது எல்லா துயரைக் காட்டிலும் மேலான துயராக நீடிக்கும் என்கிற எண்ணம் ஆழப் பதியும் போதுதான்.. நமக்கு நாமே செய்து கொள்கிற நேர்மையாக தற்கொலை எண்ணம் எழும்பும்.

ஒரு சுவையான தேநீர் அருந்தும் போது ஏற்படும் ஆசுவாசம் போன்ற உணர்வோடு தற்கொலை உணர்ச்சியை எதிர்கொண்ட சிலரை நான் அறிவேன். ஆனால் அந்த முயற்சியில் தோல்வியுற்று சராசரி வாழ்க்கைக்கு திரும்பும் போது …உள்ளுக்குள் கவிழும் குற்ற உணர்ச்சியும், ஏமாற்றமும், சற்றே எதிர்காலம் குறித்த அச்சமும் மிஞ்சிய நாட்களை காயப்படுத்திக் கொண்டே இருக்கும்.

அவரவருக்கான நியாயங்களை கொண்டிருந்தாலும்.. தற்கொலை என்பது ஒரு போதும் கொண்டிருக்கும் காயங்களுக்கான நியாயம் ஆகாது. அந்நேரச் சூழலின் பொருட்டு தப்பித்தலுக்கான வழிதான்…என்றாலும் கூட ..

உயிர் விட்ட பிறகு தப்பித்து என்ன தான் ஆகப்போகிறது.. தப்பிக்கிற உணர்ச்சியை அனுபவிக்க யார் இருப்பார்கள்..??

– மணி செந்தில்

தமிழ்த் தேசிய சுவடுகள் -4 தமிழ்த்தேசிய இனமும், தேசிய இன உருவாக்கமும்,

Karl_Marx

தேசிய இனம் என்ற சொல்லுக்கு சமகாலத்தில் பல விரிவான விளக்கங்கள் கிடைக்கின்றன. ஒரு பொது மொழி, பொதுவான வாழ்க்கை முறை, ஒரு வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு, ஒருபொதுவான பொருளியல் அமைவு, தனிப்பண்பாட்டின் சிறப்பியல்புகள் இவைகளால் அந்த இனத்திற்குள்ளாக ஏற்படுகின்ற பொதுவான உளவியல் உருவாக்கம் ஆகியவற்றைப் பெற்று வரலாற்றின் போக்கில் இணைந்த பல்வேறு இனக்குழுக்கள் இணைந்து  அமைந்த ஒரு நிலையான சமுதாய மக்களே தேசிய இனமென வரையறுக்கப்படுகிறது. ரஷ்யாவின் ஜே.வி. ஸ்டாலின் ஒரு மொழி வழி அமைந்த  ஒரு தேசிய இனத்தை (Linguistic Nationality) நான்கு முதனிலை பண்புக் கூறுகளால் வரையறுக்கிறார். அவையாவன. 1. பொதுமொழி 2. தொடர்ச்சியான ஆட்சி எல்லை 3. பொதுவான பொருளாதார வாழ்க்கை அமைவு 4. பொது பண்பாட்டின் வாயிலாக எழும் தாம் ஓரினம் என்கிற உளவியல். தேசிய இன வரையறையில் முதன்மை அம்சமாக மொழியை கருதுவது மார்க்சிய அணுகுமுறை ஆகும்.

 

மனித இனம் தோன்றிய காலம் தொட்டு பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதனின் சமூக வாழ்க்கை மொழி வாயிலாகவே நிகழ்ந்து இருக்கிறது. மொழியே மனித இனமொன்றின் முதன்மை அடையாளமாக திகழ்ந்து இருக்கிறது. மொழியற்ற மனித சமூகத்தை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க இயலாது. மொழியே மனித நாகரீக வளர்ச்சியின் போக்கினை தீர்மானித்தது. எனவே தேசிய இன வரையறையில் மொழியே முதன்மை கூறாக அறிஞர்கள் கருதுகிறார்கள்.

 

ஒரு மக்கட் கூட்டம் தேசிய இனமாக உருவாக்கம் கொள்ளுதலில் அயலார் படையெடுப்பு, இயற்கை சீற்றங்கள் போன்ற புறவெளி காரணிகளும் உதவி செய்கின்றன. எடுத்துக்காட்டாக இந்தியா ஒரு தேசம் அல்ல. பல்வேறு தேசிய இனங்கள், 200க்கும் மேற்பட்ட மொழிகளைப் பயன்படுத்துகிற மக்கள் கூட்டம் வாழுகிற மிகப்பரந்த கண்டம். இந்த நிலப்பரப்பை வெள்ளையர்கள் தாங்கள் ஆள்வதற்கு உகந்தவாறு ஒரு நாடாக மாற்றினார்கள்.  இந்திய நிலப்பரப்பு அதற்கு முன்னதாக ஒற்றையாட்சியின் கீழ் இருந்ததில்லை. பல்வேறு மன்னர்கள், குறுநில மன்னர்கள், 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் என பிளவுப்பட்டு கிடந்த ஒரு நிலப்பரப்பின் மக்கள் அக்காலத்தில் வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உண்டாக்கப்பட்ட செயற்கை தேசிய உணர்வின் மூலம் ஒன்று பட்டனர். அந்த செயற்கையான தேசிய உணர்வு வெள்ளையர்கள் நாட்டை விட்டு வெளியேறிய கணத்திலேயே நீர்த்துப் போய் விட்டது. மேலும் அந்த செயற்கை உணர்வு மேலும் நீட்சி கொள்வதற்கான அவசியமோ, தேவையோ அதற்கு பிறகு இல்லை. செயற்கை மயக்கம் வடிந்தவுடன் அவரவர் மொழி, நிலப்பரப்பு சார்ந்த இயல்பான தேசிய உணர்ச்சிக்கு முக்கியத்துவம் தர தொடங்கி விட்டனர்.  எனவே மொழி வழி சார்ந்த, நிலப்பரப்பினை சார்ந்த தேசிய இன உருவாக்கமே இயற்கையானது.

 

பட்டாளி வர்க்க இணைப்பால் உலகப்புரட்சியை ஏற்படுத்த கனவு கண்ட மாமேதை மார்க்ஸ் கூட பட்டாளிகளின் இணைப்பு தேசிய இன உணர்வின் அடிப்படையில் எழுவது என்பதே சாத்தியம் என்கிறார்.

 

தேசிய இன சிக்கல்களை மார்க்சிய அணுகுமுறை மூலம் தான் தீர்க்க வேண்டும் என்பதில் புரட்சியாளர் லெனின் தெளிவாக இருந்தார். அதற்கு அவர் மூன்று விதமான அளவுகோள்களை கொண்டிருந்தார். 1. வேறுபட்ட பல்வேறு தேசிய இனங்களைச்சார்ந்த உழைக்கும் மக்களிடையே புரிதல் அடிப்படையில் அமைகிற ஒற்றுமை அல்லது இணைவு 2. சமமான வாழ்வியல் மற்றும் பொருளியல் , அதிகாரங்களை கொண்டதுமான தேசிய இனங்களின் உழைக்கும் மக்களிடையே தோன்றும் சமத்துவம் 3. தனது இறையாண்மையை தானே முடிவு செய்து கொள்கிற தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை.

 

தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை குறித்து மார்க்ஸைப் போற்றுகிற, லெனினைக் கொண்டாடுகிற  மார்க்சிய கம்யூனிஸ்ட்களின் தத்துவ நிலைப்பாடு லெனின் கொண்டிருந்த கருத்துக்களுக்கு முற்றிலும் எதிரானது. ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை குறித்து கம்யூனிஸ்டுகளின் கருத்து என்ன என்கிற அண்ணன் சீமானின் கேள்விக்கு இறுதிவரை மார்க்சிய அறிஞர் அருணானால் பதில் சொல்ல இயலாமல் போனது இதனால் தான்.

 

1972-ல் தேசிய இன சிக்கல் குறித்து மார்.கம்யூனிஸ்ட் ஆராய்ந்து தீர்மானம் இயற்றிய போது அத்தீர்மான வாசகங்களில் “ 1947 இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் தேசிய இனச்சிக்கல் தீர்ந்து விட்டது “ என்ற சொற்றொடர் இடம் பெற்றது. இதுதான் கம்யூனிஸ்ட்டுகள் தேசிய இன விடுதலை சார்ந்து கொண்டிருக்கிற புரிதல்.

 

****

 

Mamallapuram_sculptures

இனி தமிழர் என்ற இனமானது எப்படி ஒரு தேசிய இனமாக உருக்கொள்கிறது என்பதை நாம் விரிவாக ஆராய்வோம். தேசிய இனம் என்ற சொல்லுக்கான அடிப்படைக் கூறுகளைப் பெற்று தகுதிவாய்ந்த தனித்த ஒரு தேசிய இனமாக தமிழ்த்தேசிய இனம் திகழ்கிறது. ஒரு தேசிய இனத்தின் அடிப்படை கூறான பொதுமொழி அடிப்படையில் நம் தாய்மொழியாம் தமிழ் தொன்மையான சிறப்பியல்பு வாய்ந்த தேசிய இனத்தின் தாய்மொழியாக விளங்குகிறது. தமிழ்மொழியின் தொன்மை குறித்து பல்வேறு ஆய்வுகள் வியக்கத்தக்க முடிவுகளை அறிவித்து வருகின்றன. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த மொழியான தமிழ்மொழி என்று சிறப்பு பெற்ற நம் தாய்மொழி ஒரு தேசிய இனத்தின் பொதுமொழி அடிப்படையில் தகுதிவாய்ந்த செவ்வியல்மொழியாக திகழ்கிறது.வரலாற்றின் பக்கங்களில் நீண்டகாலமாக தமிழர் என்ற தேசிய இனத்திற்கு சற்றே ஏறக்குறைய தொடர்ச்சியான தனித்த நிலப்பரப்பு இருக்கிறது.  சங்கக்காலம் தொடங்கி நவீன காலம்வரை இருக்கின்ற இலக்கிய தரவுகள் கொண்டே தமிழ்த்தேசிய இனத்தின் தொடர்ச்சியான ஆட்சிப்பரப்பு குறித்து நாம் தெளிவு பெறலாம். உலகத்தின் முதன்முதலாக இனம் தமிழினம் என்றும், முதன் முதலாக தோன்றிய மாந்தர் தமிழர் என்றும், அவர் பேசிய மொழி தமிழ்மொழி என்றும் நவீன அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தமிழ்த்தேசிய இனத்தின் மாபெரும் ஆய்வியல் அறிஞரான பாவாணர், தமிழர் முதன்முதலாக தோன்றியது இயற்கைசீற்றத்தால் அழிந்து கடலுக்கு அடியில் கிடக்கிற குமரிக்கண்டத்தில்தான் என தனது தரவுகள் மூலம் அறிவுலகத்திற்கு எடுத்துரைக்கிறார். எனவே, வரலாற்றின் போக்கில் ஒரு தொடர்ச்சியான நிலப்பரப்பு, ஒரு பொதுமொழி கொண்டு உருவான இனம் தமிழர் என்ற தேசிய இனம் என்பது உறுதியாகிறது. மேலும், தமிழர் தனது பொதுவான பொருளியல் வாழ்வியலை தனது தேசியத்தொழிலான விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள் கொண்டே உருவாக்கினர். மண் சார்ந்த விவசாயத் தொழிலே தமிழரின் தேசியத்தொழிலாக அறியப்பட்டிருக்கிறது. முப்போகமும் விளையக்கூடிய விளைநிலங்களும், ஒரு போகம் விளையக்கூடிய வானம் பார்த்த புன்செய் நிலங்களும்நிரம்பிய தமிழகம் விவசாயத்தை, அதுசார்ந்த பொருளியல் வாழ்வினை தனது உயிர்நாதமாகக் கொண்டு விளங்கியது .தமிழ்த்தேசிய இனத்திற்கென்று ஏறக்குறைய பொதுவான பண்பாட்டுக்கூறுகள் இருக்கின்றன. இன்னமும் மிஞ்சிக்கிடக்கின்ற ஜல்லிக்கட்டு, பொங்கல் திருவிழா, கபடி மற்றும் கரகாட்டம், வில்லுப்பாட்டு, குலதெய்வங்கள், உறவு முறைகள் போன்ற பல்வேறு பண்பாட்டு விழுமியங்களைத் தன்னகத்தே கொண்டு ஒரு பண்பாட்டு செழுமைமிக்க தனித்த தேசிய இனமாக தமிழ்த்தேசிய இனம் விளங்குகிறது. தன்னை ஒரு தேசிய இனமாக உணர்வதற்கான பொதுவான உளவியல் போக்கினை தங்களது பண்பாட்டு விழுமியங்கள் மூலமாக தமிழர்கள் பெற்றிருக்கின்றனர். இந்தியத் துணைக்கண்டத்தில் வரையறுக்கப்பட்ட நிலப்பரப்புகளில் தனித்த மொழி , பண்பாடு,வரலாறு, பண்பாட்டு விழுமியங்களோடு கூடிய 20க்கும் மேற்பட்ட தனித்த தேசிய இனங்கள் நிலைபெற்று வாழ்கின்றன. இந்தியப்பெருநிலத்தில் இருக்கின்ற தேசிய இனத்தில் மூத்தத்தேசிய இனமான, தனித்த பண்பாட்டு அடையாளங்களைப் போற்றிப் பாதுகாத்து வருகிற தனித்த தேசிய இனமாக தமிழர் என்ற தேசிய இனம் விளங்குகிறது. ஒரு சமூகம் தன்னைத் தேசிய இனமாக உணரும்போது அதன் மெய்யான தேசிய இன குணாதியங்களையும், முற்போக்கு மற்றும் பிற்போக்கு இடங்களையும் அறிந்துகொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகிறது. தேசிய இன உருவாக்கம் என்பது சில நாட்களுக்கு உள்ளாகவோ, சில வருடங்களிலோ அடையக்கூடியது அல்ல. தேசிய இன உருவாக்கத்தை, வளர்ச்சியை சார்ந்த  திறன்மிக்க தொடர் செயல்முறை என்கிறார் புரட்சியாளர் லெனின்.. அச்செயல்முறை தாம் ஒரு  தேசிய இனம் என்பதை உணர்ந்து தனது வாழ்வியல்,பண்பாட்டு விழுமியங்களைப் பற்றிய விழிப்புணர்ச்சியை அடைந்து, விடுதலை உணர்வினை சார்ந்து  அமைகின்ற எழுச்சி ஆகும்.

 

தமிழ்த்தேசிய இனமாக தன்னை ஒரு தனித்த தேசிய இனமாக அடையாளப்படுத்துதலில் மாபெரும் போராட்டங்களைச் சந்தித்து வருகிறது. ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன் தமிழர்களின் நிலப்பரப்பை பல்வேறு குறுநில மன்னர்கள் பிரித்து ஆண்டிருந்தாலும் தமிழர் என்ற உளவியல் உருவாக்கம் தமிழர் என்ற தேசிய இனத்திற்கு வரலாற்றின் போக்கிலேயே அமைந்திருந்தது. பிற்காலச் சோழர்கள், புகழ்பெற்ற பாண்டிய மன்னர்கள், வெற்றிபெற்ற சோழ மன்னர்கள் என்றெல்லாம் மன்னர்கள்வழி அமைந்த நிலப்பரப்பில் பிரிந்து வாழ்ந்திருந்தாலும் ஒவ்வொருவரும் தமிழர் என்கின்ற உளவியல் நெருக்கத்தினை உளவியல் பண்பாட்டு விழுமியங்கள் மூலமாகவும், வரலாற்றின் போக்கின் மூலமாகவும் பெற்றிருந்தார்கள். அதன்வாயிலாகவே, தமிழர் தேசிய நிலப்பரப்பிற்கு எதிராக அந்நிய படையெடுப்பு போன்றவை நிகழும்போது தமக்குள்ளாக இருக்கிற உளவியல் நெருக்கத்தை மூலதனமாகப் பயன்படுத்தி, தங்களது நிலப்பரப்புகளையும் தாண்டி தமிழர் என்ற ஒற்றுமையோடு அந்நியர் ஆதிக்கத்தை எதிர்த்து நின்று தமிழர்கள் போராடியிருக்கிறார்கள். ஈழத்தை ஆண்ட தமிழ் மன்னனுக்கு இங்குள்ள சோழ மன்னன் உதவியதாக வரலாறுகள் தெரிவிக்கிறது. இவ்வாறாக இப்பூமிப்பந்தில் தமிழர்கள் எங்கெல்லாம் வசிக்கத் தொடங்கினார்களோ, வாழ்ந்தார்களோ தாயகத்தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்மன்னர்கள் உதவிசெய்யும் போக்கினை நாம் வரலாற்றின் பக்கங்களிலே காண்கிறோம். எனவே தேசிய இன உருவாக்கத்தில் அந்த குறிப்பிட்ட மனித சமூகம் கொண்டிருக்கிற உளவியல் தன்மை (Phusicaligical Sense ) மிக முக்கியமானது.

 

தாம் ஓரினம் என்கிற தேசிய இன உளவியல் தன்மைதான் ஈழ விடுதலைக்கு ஆதரவான மனநிலையை இம்மண்ணில் எழுப்புகிறது. தமிழ்த்தேசிய இனத்தின் இரண்டு பெரும் தாய்நிலங்களாக ஈழமும், தாய்த் தமிழகமும் திகழ்கின்றன. எனவே வரலாற்றின் வீதியில் தமிழர் என்கிற தேசிய இனம் ஒரு தேசிய இனத்திற்கான அடிப்படைத் தன்மைகளைக் கொண்டு தனித்த தேசிய இனமாக உருக்கொண்டு நிற்கிறது.

 

இனி தமிழ்த்தேசிய இனத்திற்கான அடிப்படை உரிமை.. தம் மண்ணை தானே ஆள்கிற உரிமை.

 

-தொடர்ந்து கற்போம்..கற்பிப்போம்…புரட்சி செய்வோம்.

 

வாசிப்போம்..அறிவை யாசிப்போம்

—————————————————–

சாதியும், தமிழ்த்தேசியமும் –பெ.மணியரசன் ,(பன்மை வெளியீடு, எண் 1,இராசா வணிக வளாகம், நீதிமன்ற சாலை, தஞ்சாவூர்)
விலை80/-

சமீப மலையாளத் திரைப்படங்கள் -எளிமையின் அழகியல்.

Kali-Malayalam-Movie-Review-Rating-Public-Talk-Twitter-response-Critics-Reviewசமீப கால மலையாளத் திரைப்படங்களின் தரமும், திரைக்கதை அடவுகளும் நம்மைப் பொறாமைப்படுத்துகின்றன. ( நன்றி : துருவன் செல்வமணி, packiyarasan se) சமீப காலமாக வரிசையாக பல மலையாளப்படங்களை கண்டு வருதலில் நான் உணர்ந்தது மலையாளப்படங்கள் கொண்டுள்ள எளிமை.
 
இன்னமும் தன் பண்பாட்டு விழுமியங்களை தனது திரைமொழி மூலமாக ஆவணப்படுத்துகிற மலையாளிகளின் கவனம் பிரமிக்கத்தக்கது. புதியவர்களின் வருகையால் மலையாள திரையுலகம் புத்துணர்ச்சி அடைந்ததுள்ளது. துல்கர் சல்மான், நிவின் பாலி , பஹத் பாசில், சாவித்திரி என மலையாள திரையுலகம் கொண்டிருக்கும் இளைய நடிகர்கள் பிரமிக்க வைக்கிறார்கள்.
 
இங்கே தமிழ் படங்களில்..
 
துப்பாக்கிகளும், தாதாக்களும்,புளித்துப் போன அதே சத்தமும், பறக்கும் சுமோக்களும், வீசும் அரிவாள்களும், தெறிக்கும் ரத்தமும், அதே மதுக்கடைகளும், அதே குடிகார கதாநாயகர்களும், இக்காலத்திலும் பொறுக்கிகளையும், ரவுடிகளையும் விரும்பும் அதே லூசு கதாநாயகிகளும், பார்க்கிற நம்மை களைப்படைய செய்கின்றன. 10 நிமிடத்திற்கு ஒரு முறை கூட்டம் கூட்டமாய் ஆடுவதைதான் காதலிக்கிற உணர்வு என்றும், கத்தியால் குத்துபவன் தான் வீரன் என்றும் கற்பிக்கிற இவர்களால் தான் சுவாதிக்கள் பிணங்களாய் ரயில்வே மேடைகளில் கிடக்கிறார்கள்.
 
நாம் எவ்வளவு பின் தங்கி இருக்கிறோம் என்பதை அக்கம் பக்கம் பார்க்கும் போது புரிகிறது.
 
குறிப்பாக நான் விரும்பும் துல்கர் சல்மான். தமிழ்த்திரையுலகில் 90 களில் இருந்த கார்த்திக் போல பின்னுகிறார். சிறிய காட்சி என்றாலும் முக பாவனை, உடல்மொழி என அனைத்திலும் பட்டையை கிளப்புகிற துல்கரை யாராலும் விரும்பாமல் இருக்க இயலாது.
 
அவர் நடித்த சார்லி, பெங்களூர் டேஸ், 100 டேஸ் ஆப் லவ் , உஸ்தாத் ஹோட்டல், பச்சக் கடல் நீல ஆகாசம் செவ்வண்ண பூமி என பல படங்களை கண்டிருக்கிறேன். சமீபத்தில் நான் பார்த்த படம் களி.
 
பிரேமம் புகழ் சாய்பல்லவியும் ,துல்கர் சல்மானும் பின்னிருக்கிற அப்படத்தை வாய்ப்புள்ளோர் காண்க. எளிய சாதாரண திரைக்கதை.. அதை எவ்வளவு அழகாய் எடுத்திருக்கிறார்கள் என்பதுதான் இன்றைய மலையாள சினிமாவின் ஒரு பானை சோற்று ஒரு சோறு பதமாக இருக்கிறது.
 
நாம் குடிப்பதையும், சோரம் போவதையும் முற்போக்காக காட்டிக் கொண்டிருக்கிற இவ்வேளையில் தான் ..அவர்கள் மனிதனின் சின்னச்சின்ன குணாதிசியங்களையும்,பெருந்தன்மையையும், நில அழகியலையும் ,பண்பாட்டு சாரங்களையும் ஆவணப்படுத்திக் கொண்டே செல்கிறார்கள்.
 
இங்கே சினிமா அரசியலாகி வெகு நாட்கள் ஆகிறது. வெள்ளித்திரைகளில் தான் நமக்கு வருங்கால முதல்வர் கிடைக்கிறார்.
 
ஆனால் அங்கோ
 
சினிமா – எளிய வாழ்க்கையை அழகியலோடு பதிவு செய்யும் இன்னொரு இலக்கிய வடிவம்.
 
-மணி செந்தில்

எஸ்.ராமகிருஷ்ணனும் -தங்கம்மா வீடும்..

thijanakiraman
புத்தக வாசிப்பு போல உலகில் இன்பமானது ஏதுமில்லை. அதுவும் தேர்ந்த எழுத்தாளன் கரத்தில் ரசனை மிக்க வாசகன் சிக்கிக் கொள்ளுதல் போன்றதோர் மகிழ்ச்சிக்கரமான தருணம் ஏதுமில்லை. என்னையெல்ல்லாம் அடித்து துவைத்து காயப்போட்ட பல புத்தகங்கள் உண்டு. வாசித்தல் என்பது ஒரு வசீகரமான மாயச்சுழி. அச்சுழியில் சிக்கிக் கொண்டு மீளவே முடியாத பல அடிமை வாசகர்களில் அடியேனும் ஒருவன்.
 
தமிழ் இலக்கிய உலகில் தி.ஜா என்று அழைக்கப்படும் தி.ஜானகிராமன் எழுதிய மோகமுள் படித்து விட்டு அக்கதையில் வரும் யமுனாவை தேடி கும்பகோணம் வீதிகளில் நான் அலைந்திருக்கிறேன். அக்கதையில் தி.ஜா தன் எழுத்துக்கள் வாயிலாகவே யமுனாவை கண்,காது,மூக்கு, நிறம், மொழி என ஸ்தூலமாக உருவாக்கி விடுவார். இக்கதை திரைப்படமாக வந்த போது அதில் யமுனாவாக வந்த பெண்ணைப் பார்த்து சற்று ஏமாந்துப் போனேன் நான்.
Moohamul
 
பதின் வயதுகளில் காதலிக்கிறமோ இல்லையோ மோகமுள் வாசித்து இருக்க வேண்டும் என நம்புகிறவன் நான். தி.ஜாவின் எழுத்துக்கள் மிகவும் வசீகரம் ஆனவை. அவரது கதாநாயகிகளை அவர் நம் முன்னால் உருவாக்கி உலவ விடுவது இருக்கிறதே.. அது ஜகஜால வித்தை. அம்மா வந்தாள் நாவலில் வரும் அலங்காரம் அம்மாளையும், இந்துவையும் உருவப்படியாகவே நான் அறிந்திருக்கிறேன். அம்மா வந்தாள் நாவலைப் படித்த தனிமை இரவில் … எனது முதுகிற்கு பின்னால் இந்துவின் விசும்பல் கேட்டுக் கொண்டே இருந்தது போன்ற உணர்வு. அதே போல மோகமுள்ளில் வரும் யமுனாவின் கம்பீரத்தை நான் பார்க்கிற எல்லா முதிர்ப் பெண்களிடமும் தேடி இருக்கிறேன். நீதானா அந்த யமுனா..???
 
அதே போல எங்கள் ஊரைச் சேர்ந்த தஞ்சை ப்ரகாஷ்,எம்.வி.வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு,கு.பா.ரா, இவர்கள் அனைவருமே வாழ்வை வாழ்வாங்கு ரசித்தவர்கள். கும்பகோணம் டிகிரி காப்பியை துளித்துளியாக ரசித்து அருந்தி..காவிரியின் காற்றை நெஞ்சம் முழுக்க சுவாசித்து, குடந்தைக்கே உரிய இதமான பருவச் சூழலில் வாழ்ந்து.. அணு அணுவாக எம் மண்ணையும், மக்களையும் ஆவணப்படுத்தியவர்கள் அவர்கள்.. தஞ்சை மண்ணை, குடந்தைத் தெருக்களை போற்றியவர்கள். தனித்துவமான கதாபாத்திரங்களை உருவாக்கியவர்கள். ஒருமுறை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனோடு கும்பகோணம் வீதிகளில் சுற்றிக் கொண்டிருந்த போது.. நீங்கள் மோகமுள்ளில் வரும் தங்கம்மா வசித்து வந்த வீட்டை பார்த்திருக்கிறீர்களா..? என கேட்டார். விளையாட்டிற்காக தான் கேட்கிறார் என எண்ணி என்ன..சார் …கேட்கிறீங்க…? ..என்றேன். உண்மையாகதான் செந்தில் தங்கம்மா வீட்டை பார்த்திருக்கிறீர்களா.. நான் அழைத்து போகிறேன் என்றார்.
IMG_0850
உண்மையில் அது ஒரு விசித்திர தருணம். எங்கள் உரையாடலை யாராவது கேட்டால் மனம் பிழன்ற இரு நோயாளிகள் பேசிக் கொள்கிறார்கள் என நினைத்து விடுவார்களோ என்ற அச்சம் எனக்கு. இருக்காதே பின்னே..,ஒரு புனைவில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் வீட்டை காண்பிக்கிறேன் என்கிறாரே.. அப்படியென்றால் மோகமுள் உண்மைக் கதையா என்ற குழப்பம் எனக்கு. இதையெல்லாம் பொருட்படுத்தாத எஸ்.ராவோ.. வாங்க தங்கம்மா வீட்டை பார்க்க போகலாம் என்று கிளம்பி விட்டார். எனக்கென்ன பயம் என்றால்… யாராவது முதியவரை காட்டி இவர்தான் மோகமுள் பாபு என்று எஸ்.ரா அறிமுகம் செய்து விடுவாரோ என்றுதான்.
 
அது ஒரு மாலைநேரம். காவிரி அந்நேரத்தில் உண்மையாகவே நிரம்பி தளும்பி ஓடிக் கொண்டிருந்தது. எங்களது வாகனம் கும்பகோணம் பாலக்கரையில் இருந்து நீதிமன்றம் செல்லும் காவிரிக்கரையோர சாலையில் அமைதியாக சென்றுக் கொண்டு இருந்தது. நாங்கள் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. வேறு ஏதாவது சொல்லி விடுவாரோ என்று அச்சம் எனக்கு, சற்று தூரத்தில் வண்டியை நிறுத்தச் சொன்ன எஸ்.ரா அமைதியாக நடக்கத் தொடங்கினார். காவிரிக்கரை படிக்கட்டுகளில் சற்று இறங்கி நிரம்பி ஓடும் காவிரி நதியின் எழிலை அமைதியாக கவனித்துக் கொண்டே நின்றார். பின்னர் வாங்க போகலாம் என்றவாறே நடக்கத் தொடங்கினார். சற்றுத் தூரத்தில் உள்ள சற்று பழுதடைந்த வீட்டைக் காட்டி இங்கே தான் தங்கம்மா இருந்திருக்க வேண்டும். இந்த மாடியில் தான் பாபு தங்கியிருக்க வேண்டும் என்றார். நான் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தேன்.
 
மோகமுள் கும்பகோணம் தெருக்களைப் பற்றிய அழகிய சித்திரத்தை உருவாக்கியுள்ள நாவல் என்று எனக்குத் ஏற்கனவே தெரியும். எஸ்.ரா சொன்ன அத்தகவலை உறுதிப்படுத்திக்கொள்ள நாவலை மீண்டும் வாசித்தேன். கிட்டத்தட்ட 600 பக்கங்களுக்கு மேலான நாவல் அது. குறிப்பிட்ட தங்கம்மா,பாபு வருகிற அப்பக்கங்களை ஆழமாக படித்த போது. தி.ஜா விவரித்த விவரணைகளும், தெரு குறிப்புகளும், எஸ்.ரா அடையாளம் காட்டிய வீட்டிற்கு மிகச்சரியாக பொருந்தியது. நான் அதிர்ச்சியில் வியர்த்து விட்டேன்/.
 
பின்னர் எஸ்.ரா விடம் பேசிக் கொண்டிருந்த போது..சார் நீங்க சொன்னது சரிதான் சார்… அதுதான் தங்கம்மா வீடு என்றேன். அவர் மெலிதாக சிரித்துக் கொண்டார். அதிலிருந்து நான் அந்த வீட்டை கடந்து நீதிமன்றம் செல்லும் போதெல்லாம் என் முதுகுதண்டு சிலிர்க்கும். தங்கம்மா நின்று என்னை பார்த்துக்கொண்டிருப்பது போல தோற்றம். பாபு மாடியில் இருந்து பாடுவது போன்ற மெல்லிய மயக்கம்.
 
உண்மையில் ஒரு எழுத்தாளன் அவ்வளவு வலிமையானவனா..புனைவிற்கும், நிஜத்திற்கும் நடுவே இருக்கும் கோட்டை அழிப்பவனா என்றெல்லாம் எஸ்.ராவிடம் கேட்க வேண்டும் போல தோன்றியது.
 
அவரிடம் நான் கேட்க நினைத்து…கேட்டால் அதையும் சொல்லி விடுவாரோ என்ற பயத்தில் நான் மறைத்த கேள்வி ஒன்று இருக்கிறது.
 
சார்..யமுனா வீடு எங்கிருக்கிறது..?
 
-மணி செந்தில்

தமிழரின் வரலாற்றுப் பயணம் – தமிழ்த்தேசியச் சுவடுகள் 3

 

4853487286_8a81f5ba7f_z

 

 

பின்னே திரும்பி பார்க்காதவன் முன்னே பார்க்கும் பார்வையை இழக்கிறான் என்கிறார் மாவீரன் அலெக்சாண்டர். நம்முன்னே விரிந்துக்கிடக்கும் கடந்த காலங்களின் சுவடுகளை கவனிக்காது, அறியாது எதிர்காலத்தின் பாதையை நம்மால் தீர்மானிக்க முடியாது. எனவே தமிழன் எவ்வாறு ஒரு தேசிய இனமாக உருவாக்கம் கொண்டான் என்பதற்கான பயணத்தில், தமிழரின் வரலாற்றுப் பாதையையும் நம் அறிவு வெளிச்சம் கொண்டு ஒரு பார்வை பார்த்து விட்டு வருவோம்.

ஆற்றங்கரையோரம் பிறந்தான் மனிதன். ஆற்றங்கரைகளே மனித இனத்திற்கான தொட்டில்களாக அமைந்தன . சுமார் 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன் அறிவாய்ந்த  குரங்கினம் பரிணாம வளர்ச்சியினால் மனி்த சாயலை அடைகின்றன. 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்  ஹோமோ செப்பியன்ஸ் என்ற அழைக்கப்பட்ட சற்றே மேம்பட்ட மனித குரங்கினம் தற்கால மனிதனின் மூதாதை எனக் கொள்ளலாம் என அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். குரங்கிலிருந்து உருமாறிய மனித இனம்  சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக தனக்குள்ளாக தகவல்களை பரிமாறிக் கொள்ள ஒரு வலிமை வாய்ந்த ஊடகத்தை தனது அறிவாற்றல் மூலம் அடைந்தது. அந்த தகவல் பரிமாற்ற கருவியே மொழியாகும்.

மொழியே மனித இனத்தை தனித்துவப்படுத்தும் வலிமை வாய்ந்த அடையாளமாகும்.  அதுவே மனித இனத்தை வளர்த்தெடுத்தது. விலங்காக திரிந்த மனித இனம் தனக்கென ஒரு மொழியை அடைந்த பிறகு அதன் பரிணாம வளர்ச்சி பன்மடங்கு அதிகரித்தது. மொழி மூலமாகவே மனிதன் சிந்தித்தான். மொழி மூலமாகவே அவன் உரையாடினான். மொழி மூலமாகவே அவன் பலவற்றை கண்டறிந்தான். மொழி மூலமாகவே மற்ற விலங்குகளை காட்டிலும் மேம்பட்டவனாக மனிதன் மாறினான்.

எனவே தான் ஒரு தேசிய இனத்தின் தலையாய அடையாளமாக மொழி வகுக்கப்படுகிறது.  மனித இனம் கண்டறிந்த முதன் மொழியாக தமிழ் மொழி இருந்தது என்பதை பல ஆய்வுகள் மூலம் தமிழறிஞர்கள் நிறுவி உள்ளார்கள். கல் தோன்றி,மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் என்கிறார்கள்.  முதன் முதலாக மாந்த இனம் தோன்றியது ஆப்பிரிக்கா தொடங்கி தற்போது மடகாஸ்கர் இலங்கை,தென்னிந்தியா உள்ளீட்டு நீண்ட பரவிக் கிடந்த பெருநிலத்தில்தான் என நம்மினத்தின் மாபெரும் அறிஞர் பாவாணர் பல ஆய்வுகள் மூலம் நிறுவி உள்ளார். அந்த பெரு நிலமே லெமூரியா என்றும் கொந்துவானா என்றும் அழைக்கப்படுகிற குமரிக் கண்டமாகும்.  கால ஓட்டத்தில் விளைந்த பல்வேறு கடற்கோள்களால் குமரிக் கண்டம் அழிந்தது. ஒரே நிலமாக சேர்ந்திருந்த இலங்கை, தமிழ்நாடு ,ஆப்பிரிக்கா போன்ற பகுதிகள் படிப்படியாக பிரிந்து தனித்தனி நிலங்கள் ஆயின. இன்றும் இலங்கையில் கண்டெடுக்கப்பட்டு வருகிற பழம் பொருட்களில் தாயக தமிழகத்தின் வரலாற்று நிழல் படிந்துள்ளதை சிங்கள அறிவுலகம் திட்டமிட்டு இந்திய அரசுடன் கூட்டுச்சேர்ந்து மறைத்து வருகின்றன. “ பஃறுளியாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள “ என இந்நிகழ்வுகளுக்கு சான்றளிக்கிறது தமிழரின் முதுபெரும் காப்பியமான சிலப்பதிகாரம்.

தமிழ் மொழியே உலகின் மூத்த முதற் மொழி என்பதற்கு உலக மொழிகளில் பரவிக் கிடக்கும் தமிழின் வேர்ச் சொற்களே சாட்சி. உலகின் பெரும்பாலான மொழிகளின் எழுத்து முறையில் தமிழ் எழுத்துக்களின் வடிவங்கள்  நீக்கமற நிறைந்துள்ளதாக மொழியியல் அறிஞர்கள் தொடர்ச்சியான தனது ஆய்வுகள் மூலம் நிறுவி இருக்கிறார்கள். மொழியியல் ஆய்வின் பெரும் வித்தகராக விளங்கும் பெருந்தமிழர். அய்யா. அருளியார் அவர்கள் தனது ஆய்வுகளில் பலவற்றில் உலக மொழிகளில் பரவிக் கிடக்கும் தமிழ் மொழியின் வேர்ச் சொற்களை கண்டறிந்து பதிவு செய்து இருக்கிறார்.

கி.மு.3500 முதல் கி.மு.2700 வரை நாகரீக வளர்ச்சியில் உச்சம் பெற்றிருந்த சிந்து சமவெளி நாகரீகமும் தமிழரின் நாகரீகமே என அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  சிந்துசமவெளி நாகரீகத்தில் காணப்படும் எழுத்து வடிவங்களுக்கும், பண்டைய தமிழ் எழுத்துக்களுக்கும் நெருங்கிய வடிவ தொடர்பு இருப்பது ஏற்கனவே நிறுவப்பட்டு விட்டது. சமீபத்தில் பழனி அருகே தி.கூடலூரில் சுமார் 4500 ஆண்டுகளுக்கு முந்தைய சிந்து சமவெளி நாகரீக எழுத்துக்களுடன்  கூடிய பழமையான கற்கால கருவி கிடைத்துள்ளது   இக்கருவியில் காணப்படும் எழுத்து வடிவம் சிந்துசமவெளி பகுதியில் பயன்படுத்தப்பட்ட 396 ஆவது எழுத்துடன் ஒத்துப் போவதாக இக்கருவியை கண்டுபிடித்த தொல்லியல் ஆய்வாளர் நாரயணமூர்த்தி மற்றும் ஆர்வலர் வெங்கடேசன் தெரிவிக்கிறார்கள்.(தினமணி 22-1-2015 )

சிந்துசமவெளி காணப்படும் சுட்ட களிமண்ணால் தயாரிக்கப்பட்ட செங்கற்களால் கட்டப்பட்ட வீடுகளின் அமைப்பும், அதன் ஒழுங்கும் தமிழர் நாகரீக வளர்ச்சிப் போக்கிற்கு மிக நெருக்கமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிந்துவெளி மக்கள் சிவ வழிபாடு நம்பிக்கை உடையவர்களாக விளங்கியதற்கும் சான்றுகள் இருக்கின்றன. மேலும் சிந்துசமவெளி நாகரீகத்தில் காணப்பட்ட பல பொருட்கள் ,தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களுடன் ஒத்துப்போவதையும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள். சிந்துவெளி நாகரீகத்தின் மீது படையெடுத்த சுரா பானம் அருந்தும் ஆரியர் சுரா பானம் அருந்தாத அசுரர் என அழைக்கப்பட்ட தமிழர் வாழ்ந்த சிந்துவெளி நாகரீகத்தினை வென்று இந்திய துணைக்கண்ட பெருநிலத்தில் நுழைந்தனர் என்பதை ஆரியர்களின் பாடல்களை உள்ளடக்கிய ரிக் வேதம் தனது பாடல்களின் மூலம் அடையாளப்படுத்துகிறது.

ஏறக்குறைய சிந்து சமவெளி நாகரீகத்திற்கு முன்பே  இன்றிலிருந்து 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தற்போதைய பூம்புகாருக்கு கிழக்கே கடலுக்கு அடியில் புதைந்து கிடக்கும் உலகின் பழம் பெரும் நகர நாகரீகம் தமிழர்களுடையது.

எனவே மற்ற மாந்த இனங்கள் காட்டுமிராண்டிகளாய்,விலங்குகளாய், காட்டில் விலங்குகளாய் திரிந்துக் கொண்டிருந்த காலத்திலேயே தமிழர்கள் நகர நாகரீகம் கண்டு வாழ்வாங்கு வாழ்ந்திருக்கிறார்கள் .

தாய்மொழிக்கென சங்கம் வைத்து அதன் மூலமாக தன் மொழி விழுமியங்களை காப்பாற்ற தமிழர் படைத்தவைதான் சங்க இலக்கியங்களாக ,மாபெரும் வரலாற்றியல் ஆவணங்களாக நம் முன்னால் காணக்கிடைக்கிறது. தொல்காப்பியம் தொடங்கி, எட்டுத்தொகை,பத்துப்பாட்டு என விரிந்துக் கிடக்கின்றன பண்டைத்தமிழரின் வாழ்வும்  அறிவும் . அகமும்,புறமும் என காதலும்,வீரமும் கொண்டு “யாதும் ஊரே,யாவரும் கேளீர்” என உலகம் தழுவி நேசித்த மாபெரும் இனம் தமிழினம்.

 

1414923376319297_430844540292273_1507862722_n download (1)

குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை என ஐவகை நிலங்கள் ஐந்திணைகளாக பிரிக்கப்பட்டு ,ஒவ்வொரு திணைக்குமாக தனித்தனி பண்பாட்டியல் சுவடுகளோடு வாழ்ந்தான் தமிழன். கி.மு 500 முதல் கி.பி 600 வரையிலான காலக்கட்டத்தில் சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் கடல் கடந்து சென்றும், வடவரை வென்றும் தமிழர் பெருமைகளை நிலைநாட்டினர். கரிகாற் சோழன் சிங்களம் மீது படையெடுத்து  சிங்களர்களை பிடித்து வந்து காவிரிக்கு கரை எழுப்பினான். கல்லணை கட்டி ஆற்று நீரை பாசனத்திற்கு பயன்படுத்த முடியும் என உலகத்திற்கே நீர் மேலாண்மை அறிவியலை முதன்முதலாக அறிமுகம் செய்தவன் கரிகாற்பெருவளசோழ மன்னன்.  வடவரான ஆரியனை வென்று ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனாய்  பாண்டியன் மிளிர்ந்தான். சேரன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயம் வரை படையெடுத்து சென்று இமயமலையில் வில் கொடியை பொறித்து திரும்பினான்.  கனக விசயர் என்ற வட மன்னர்களை வென்று அவர்கள் தலையில் கல் சுமக்க செய்து, கண்ணகிக்கு கோவில் கட்டினான் சேரன் செங்குட்டுவன்.

பண்டைய தமிழ் மன்னர்களை களப்பிரர்கள்,பல்லவர்கள் ஆகிய பிற இன மன்னர்கள் படையெடுப்பினால் வீழ்த்தி தமிழ்ப்பெரு நிலத்தின் ஆட்சி அதிகாரத்தினை ஆண்டனர். இவற்றில் களப்பிரர்கள்,பல்லவர்கள் பிற இனத்தவர் இல்லை ..அவர்களும் தமிழர்களே என சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

களப்பிரர்,பல்லவர் வீழ்ச்சிக்கு பிறகு பிற்கால சோழர் ஆட்சியிலும், பிற்கால பாண்டியர் ஆட்சியிலும் தமிழர் மாபெரும் புகழ் வாழ்க்கையை வாழ்ந்தனர். உலகம் முழுக்க படையெடுத்து வெல்லும் திறன் உடையவராக புலிக்கொடி ஏந்திய தமிழர்கள் விளங்கினார்கள் என்பதற்கு பிற்கால சோழர் வரலாறு சான்று பகிர்கிறது. பிற்கால சோழர் வரலாற்றினை ஆய்வு செய்த பெருந்தமிழர் சதாசிவ பண்டாரத்தார் பிற்கால சோழர் குறித்து பல முக்கிய ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார்.

இன்று நமக்கு  கிடைத்துள்ள பல தரவுகளும், ஆவணங்களும்,கல்வெட்டுகளும்,நூல்களும் இவற்றின் அருமை உணர்ந்து பாதுகாத்து  வைத்த பல அறிஞர்களின் உழைப்பால் விளைந்தவை என நாம் நினைத்து பார்க்க வேண்டும்.

-தொடர்ந்து கற்போம்..கற்பிப்போம்…புரட்சி செய்வோம்.

 

வாசிப்போம்..அறிவை யாசிப்போம்

ஏன் வேண்டும் தமிழ்த்தேசியம் … கோவை ஞானி வெளியீடு –புதுப்புனல்.  பக்கங்கள் -64 விலை:ரூ.50/-

 

 

தேசிய இனங்களும்- தமிழ்த்தேசிய இன உருவாக்கமும்- தமிழ்த்தேசியச் சுவடுகள் 2

 

lemuriaவரலாறு என்பது கால வீதிகளில் தடம் பதித்து,புகழ் மணக்க வாழ்ந்த பெரு மன்னர்களின்,புகழ் மனிதர்களின் வாழ்க்கை கதையாகவே பதியப்பட்டிருக்கிறது.  அப்படியென்றால்..காலங்காலமாக சாதாரணமாக வாழ்ந்த எளிய மக்களைப்பற்றி, அவர்களின் வாழ்வியலைப்பற்றி தெரிந்துக் கொள்ள,ஆய்வு செய்ய எழுதப்பட்டுள்ள வரலாறு அனுமதிக்கிறதா என்றால் கசப்பான உண்மை இல்லை என்பதே..

மக்களின் வரலாறு எழுதப்பட வேண்டும் என புதிய வரலாற்றுத்துறை நிபுணர்கள் விருப்புகிறார்கள்.மனித சமூகங்களின் வரலாறு நேர்மையாக எழுதப்பட்டிருந்தால், நிகழ்காலத்தில் நடக்கிற எத்தனையோ பிரச்சனைகளுக்கான,முரண்களுக்கான தொடக்கப்புள்ளியை நாம் கண்டறிந்திருக்க முடியும் . மனித சமூகம் தொடக்கத்திலிருந்தே தனது அடையாளங்களை,தனது நிலப்பரப்பை, தனது பண்பாட்டை காத்துக்கொள்ள தனது உயிரையும், உதிரத்தையும் சிந்திப்போராடி வந்திருக்கிறது.  எப்போதும் தனது நிலையை விட ஒரு உன்னதமான நிலையை நோக்கியே மானுடச்சமூகம் நகர்வதை, நகரத்துடிப்பதைதான் நாம் வரலாற்றின் ஏடுகளில் தொடர்ச்சியாக வாசித்து வருகிறோம்.

தனக்குரிய அடையாளங்களான மொழி,நிலம்,பண்பாடு போன்ற விழுமியங்களை காத்துக்கொள்ள,அவற்றையே தனது முகவரியாக,முகமாக கொள்ள மானுடச் சமூகம் தயாரானப் புள்ளிகளில் இருந்துதான் தேசிய இனங்கள் தோன்றுகின்றன. கடந்த 15 ஆம் நூற்றாண்டு தான் தேசிய இனங்களுக்கான தொடக்கத்தை நிகழ்த்திய காலக்கட்டமாக நாம் கருதலாம். அக்காலக்கட்டத்தில் தான் ஐரோப்பா கண்டத்தில் பல தேசிய இனங்களை சார்ந்த அரசுகள் உருவாகத்தொடங்கின.  சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்றவற்றை முழக்கங்களாக கொண்டு  18 ஆம் நூற்றாண்டில் உருவான பிரெஞ்சு புரட்சியும், 19 ஆம் நூற்றாண்டில் உருவான பல்வேறு தேசிய இனங்களின் எழுச்சியும்,உலகம் தழுவிய தேசிய இனங்களுக்கான விழிப்பினை தந்தன. ஒரே ஒரு தேசிய இனம் மட்டும் வாழ்கிற நாடுகளும், பல்வேறு தேசிய இனங்கள் வாழக்கூடிய நாடுகளும் தோன்ற தொடங்கிய பிறகு, உலகில் வாழும் பல்வேறு தேசிய இன மக்களும் தங்களது நிலம்,மொழி,பண்பாடு போன்ற அடிப்படை விழுமியங்களை காக்க போராடத்தொடங்கின.

இந்தியா போன்ற பல்வகை தேசிய இனங்கள் வாழக்கூடிய நாடுகளில் அந்தந்த தேசிய இனங்கள் தங்களது அடிப்படைத்தன்மைகளை இழந்து விடாமல் ,கடுமையான போராட்டங்களை சந்திக்கின்றன. மண்ணின் ஆதிக்குடிகளான தேசிய இன மக்கள் தங்கள் உரிமைகளுக்காக,விடுதலைக்காக குரல் கொடுப்பதும், போராடுவதும் அவற்றை இத்தேசிய இனங்களை அடிமைப்படுத்தி ஆண்டு வருகிற ஆளும் வர்க்கம் தனது அதிகாரத்தின் முனை கொண்டு நசுக்குவதும் இந்நாடுகளில் இயல்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் நாம் தேசிய இனம் அல்லது தேசம் என்ற சொல்லுக்கும், நாடு என்கிற சொல்லுக்கான வேறுபாட்டை தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும்.

தேசம் அல்லது தேசிய இனம் என்பதற்கு ஆங்கிலத்தில் Nation என்ற சொல் இருக்கிறது. இதன் மூலச்சொல் Natio என்கிற இலத்தீன் மொழி சொல்லாகும்.  Natio என்றால் பிறந்த இடம்,பிறந்தது எனப் பொருள். இச்சொல்லும் கூட Natus என்கிற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்ததாக அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள்.  Natus என்கிற சொல் கூட நாடு என்கிற தமிழ்ச்சொல்லில் இருந்து பிறந்ததாக  சிந்தனைச்செம்மல் கு.ச. ஆனந்தன் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஒரு தேசம் அல்லது தேசிய இனம் நான்கு அடிப்படைத்தன்மைகளை பெற்றிருக்க வேண்டும் என தோழர்.ஜே.வி.ஸ்டாலின் குறிப்பிடுகிறார்கள். அதன் பொருள் இந்த நான்கு தன்மைகளை பெற்றிருந்தால் தான் ஒரு இனம் தேசிய இனமாக வரையறுக்க முடியாது. அவையாவன. 1. பொது மொழி 2. தொடர்ச்சியான ,வரலாறு மூலமாக வரையறுக்கப்பட்ட நிலப்பகுதி 3. சற்றே ஏறக்குறைய ஒரு பொதுவான பொருளாதார வாழ்க்கை, 4. பண்பாட்டு விழுமியங்களில் வெளிபடுகிற ஒரே இனம் என்பதற்கான மனநிலை. இந்த 4 அடிப்படை தன்மைகளையும் கொண்டு வரலாற்றில் கால ஓட்டத்தில் உருவான மக்கள் கூட்டமே அல்லது மக்கள் சமூகமே ஒரு தேசிய இனம் அல்லது தேசமாகும்.

வரலாற்றின் கால ஒட்டத்தில் உருவான மக்கள் கூட்டம் என்றால்  பல்வேறு காலக்கட்டங்களில் ஒன்று சேர்ந்த சேர்ந்த பல இன மக்கள் ஒரு தேசிய இனமாக மாறி விடுதல் என்பது பொருள். உலகத்தில் இருக்கின்ற தமிழ்த்தேசிய இனம் உள்ளீட்டு எந்த ஒரு தேசிய இனமும் காலங்காலமாக இருந்து வரும் தூய, பிற இனங்கள் கலக்காத, மரபினம் அல்ல. படையெடுப்பு,இடம் பெயர்வு போன்ற காரணங்களால் வரலாற்றின் போக்கில் வந்து சேர்ந்த பல இன மக்கள்  ஆனால் தன்னை ஓரினமாக உணர்கிற மைய உளவியல் தான் ஒரு தேசிய இன உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இக்கருத்தினை 20 ஆம் நூற்றாண்டின் இந்திய வரலாறு என்ற கட்டுரையில் பேரா.முனைவர்.த.செயராமனும் உறுதி செய்கிறார். இவ்வாறாக சேர்கிற பல இன மக்களில் குறிப்பிட்ட இனமக்கள் மட்டும் தங்களது தனித்த அடையாளங்களை,மொழியை,பண்பாட்டு கூறுகளை,நலன்களை  காப்பாற்றிக்கொண்டு தொடர்ந்து வாழ்வாராயின் அவர்கள் தேசிய இன வரையறைக்குள் அடங்க மாட்டார்கள் என்பதையும் நாம் நினைவுப் படுத்திக் கொள்ள வேண்டும்.

பல தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இந்தியா திகழ்கிறது. இந்தியா /இந்தியர் ஒரு தேசம்/ தேசிய இனம் அல்ல. பல்வேறு தேசிய இனங்கள் வாழ்கிற ஒரு நாடே இந்தியா.இந்தியா ஒரு தேசம் என்பதும், இந்தியர் ஒரு தேசிய இனம் என்பதும் அடிப்படையில்லாத, வரலாற்று அரசியல் புரிதலற்ற வார்த்தைகளாகும்.

ஒரு நாடு என்பது வரம்பற்ற அதிகாரத்தோடு (இறைமை ) ஒரு மக்கள் கூட்டம் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழ்வதை குறிக்கும்.  ஒரு நாட்டில் பல்வேறு தேசிய இனங்கள் /தேசங்கள் இருக்கலாம். எடுத்துக்காட்டாக இந்தியாவில் 14 க்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் இருப்பதாக ஒரு ஆய்வு பகர்கிறது.  ஒரு தேசம் ஒரு நாடாக இருக்கலாம்.ஆனால் ஒரு நாடு தேசமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.எடுத்துக்காட்டாக பங்களாதேஷ் என்பது வங்களம் மொழி பேசக் கூடிய ஒரு தேசிய இன மக்கள் வாழக்கூடிய ஒரு தேசம். இது நாடாகவும் இருக்கிறது. ஆனால் இந்தியா என்கிற நாடு ஒரு தேசமல்ல. ஏனெனில் இந்தியர் என்கிறவர்கள் ஒரே மொழி பேசக்கூடிய மக்கள் கூட்டம் இல்லை. இந்தியர் என்பது தேசிய இனம் இல்லை. பல தேசிய இன மக்கள் வாழக்கூடிய நாடு இந்தியா.

ஆனால் தொடர்ச்சியாக இந்தியாவை ஒரு தேசமாக உருவாக்கி விட ஆதிக்க வாதிகளும், இந்தியா ஒரே நாடாக இருப்பதால் பலனடையும் மாபெரும் முதலாளிகளும் முயன்று வருகிறார்கள். அதன் வெளிப்பாடுதான் இந்தியா முழுக்க ஒரே மொழி- சமஸ்கிருதம்,இந்தி ,இந்தியா முழுக்க ஒரே மதம் –இந்து மதம்  போன்றவற்றை நடைமுறைப்படுத்த அரசுகள் தொடர்ச்சியாக முயன்றுவருகிற முயற்சிகள். இந்துக்கள் தவிர வேறு யாருக்கும் ஓட்டுரிமை இல்லை என பாஜக எம்பி பேசுவதும் இத்தகைய தன்மை கொண்டதுதான். இவற்றிக்கிடையே தான் தனித்தே பல சிறப்புகளை கொண்ட தமிழ்த்தேசிய இனம் தனது அடையாளங்களை தக்க வைக்க இம்முயற்சிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக போராடி வருகிறது.

தமிழர்கள் ஒரு தனித்த தேசிய இனமாக விளங்குகிறார்கள். அவர்களுக்கு என்று உயரிய புகழ்வாய்ந்த, வரலாற்று நீட்சிக் கொண்ட தமிழ் மொழி என்கிற தாய் மொழி இருக்கிறது.

வரலாற்றிலேயே  புகழ்பாடும்”வடவேங்கடம்-தென் குமரி” என அவ்வப்போது மாறினாலும் நிரந்தர,பொதுவான நிலப்பரப்பு இருக்கிறது.  ஏறக்குறைய ஒரு பொதுவான பொருளாதார வாழ்வை தமிழர்கள் கொண்டிருக்கிறார்கள். தாய்த் தொழிலாக விவசாயம் விளங்குகிறது. தமிழருக்கென தனித்தே இருக்கிற பொதுவான பண்பாட்டு அடையாளங்களில் தாம் ஒரினம் எனபது வெளிப்படுகிறது. சாதீய முரண்கள் இருந்தாலும் தமிழரின் தேசியத் திருவிழாவாக பொங்கல் திருநாள் விளங்குகிறது. ஜல்லிக்கட்டு,கபடி,பறை இசை இன்னும் பல்வேறு நுட்பமான அடையாளங்களில் தமிழ்தேசிய இனம் ஓரினம் என்பதை வெளிப்படுத்தி, வரலாற்றின் போக்கில் ஒரு தேசிய இனமாக உருவாகி இருக்கிறது.

ஆனால் இந்தியா என்கிற தேசிய இனங்களின் சிறைக்கூடத்தில் தமிழர் என்கிற தேசிய இன மக்கள் தங்கள் மொழியை காக்க, பண்பாட்டு அடையாளங்களை காக்க பெரும் போராட்டத்தை மேற்க்கொள்ள வேண்டி உள்ளது. அவ்வாறு எழும் தமிழ்த்தேசிய இன உணர்வினை பிளக்க,முறிக்க வெளிச்சதிகளும், உட்முரண்களும் காரணங்களாக அமைகின்றன.

தமிழர்மரபும், நாம் தமிழர் அமைக்க முயல்கிற சமூகநீதியும்..

ayouth_2217504f

வெகு காலமாகவே சமூக நீதி இயக்கங்களுக்கும், தமிழ்த்தேசிய இயக்கங்களுக்கும் உள்ள இடைவெளி வரலாற்றுப் பூர்வமானது. தமிழகத்தின் வரலாற்றில் சமூக நீதிக்கான குரல்கள் வெகுகாலத்திற்கு முன்பே ஒலிக்கத் தொடங்கி விட்டன . ஆனால்  20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நீதிக்கட்சி சமூகநீதி தளங்களில் ஏற்படுத்திய அதிர்வுகள் கவனிக்கத்தக்கவையாக அமைந்தன. தமிழ்த்தேசிய உரிமைக்கான வரலாறும் இத்தகைய தன்மை உடையதுதான்.  தமிழ்த்தேசிய இனம் வரலாற்றின் போக்கில் உருவான தருணத்தில் இருந்தே அதற்கான உரிமைக்குரல்களும் தோன்றின. பழந்தமிழ் இலக்கியங்களும்,ஒலைச்சுவடிகளும் ஏற்படுத்திய இலக்கியச் செழுமை தமிழ்த்தேசிய இன ஒர்மைக்கு அடிப்படையாக திகழ்ந்தன.  தமிழ்த்தேசிய இயக்கங்களுக்கும், சமூக நீதி இயக்கங்களுக்கும் இடையிலான  அடிப்படை முரண்களை புரிந்துக் கொள்ள வேண்டும். சமூக நீதி இயக்கங்கள் சமூகத்தின் ஊடாக சமநிலை பராமரிப்பினை கோருபவை. தமிழ்த்தேசிய இயக்கங்கள் தேசிய இனமொன்றின் உரிமைகளுக்காக போராடுபவை. சமூக நீதி இயக்கங்களின் அடிப்படை அம்சங்களான சாதீய மறுப்பு,மூடநம்பிக்கை ஒழிப்பு,பெண்ணடிமை தகர்ப்பு போன்றவைகளின் விழுமியங்களை தமிழ்த்தேசிய இயக்கங்கள் இயல்பாகவே தன் மரபின் மூலமாகவே உள்வாங்கி இருக்கின்றன.

 

இனம் குறித்த வரலாற்று பெருமிதத்தால் கட்டமைக்கப்படும் தேசிய இன உணர்வே தமிழ்த்தேசியர்களின் அடிப்படையான, ஆன்ம உண்ர்வாக இருக்கிறது. தமிழர் மரபு  காலத்தாற் நீண்ட வரலாறு உடையது . இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு.. முன்பிலிருந்து,நாளது தேதிவரை எழுத்துப்பூர்வமான ஆக்கங்களான  தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள், ஐம்பெரும் காப்பியங்கள், நீதி நூல்கள் போன்ற ஆவணங்கள் தமிழர் மரபினை அடையாளப்படுத்தும் பணியினை செய்வதோடு.. தமிழ்த்தேசிய இனப் பெருமிதம் கொள்வதற்கான உளவியல் நியாயங்களை கற்பிக்கின்றன..

 

இவ்வாறாக வரலாற்றின் அடிப்படையில் இருந்து கட்டமைக்கப்படும் தமிழர் மரபு இயல்பிலேயே இயற்கை வழிபாடு, விவசாயம், பெண்களை போற்றுதல், சாதியற்ற சமூக வாழ்வு போன்ற பல்வேறு முற்போக்கு அம்சங்களை கொண்டிருக்கிறது.

’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று தமிழரால் பாட முடிந்த உளவியல் அம்சம்தான் அக்கால வாழ்வியலாக  இருந்திருக்கிறது. நாடாளும் மன்னனின் அவைக்கு சென்று அவனை ”தேரா மன்னா..” என்று எளிய பெண்ணொருத்தி ஏசும் அளவிற்கு சமூக ஒழுங்கில் பெண்களுக்கான இடம் இருந்திருக்கிறது. ஒளவையார் போன்ற பெண்பாற் புலவர்கள் அரசனுக்கு ஆலோசனை சொல்லும் இடத்திலும், நெருக்கமான தோழியாகவும் இருந்திருக்கிற மதிப்பு சார் தகுதி பெண்களுக்கு இருந்தது.

 

ஆரியர் படையெடுப்பிற்கு முன்பே ஆசீவகம் போன்ற நெறிகள் தமிழக மண்ணிலே இருந்திருக்கின்றன..இயற்கை வழிபட்டு, ஏற்றத்தாழ்வு இல்லாத மெய்யியல் கொள்கை தமிழனுக்கு இருந்திருக்கிறது. முன்னோர் வழிபாடு, நடு கல் மரபு என நீளும் தமிழரின் மெய்யியல் வரலாறு செழுமை மிக்கது. சாதியற்ற,ஏற்றத்தாழ்வற்ற தமிழர் மெய்யியல் அம்சங்களில், ஆரியர் படையெடுப்புக்கு பிந்திய பண்பாட்டு தாக்குதல்களினாலேயே தமிழரின் சமூகம் சாதீய சமூகமாக பிளவுப்பட்டு கிடக்கிறது.

 

எனவே தான் தமிழ்த்தேசிய இயக்கங்கள் தமிழர் மரபின் மூலம் தமிழ்த்தேசிய ஓர்மை உணர்வினை மீட்டெடுக்க கடுமையான சவால்களை சந்திக்க வேண்டி இருக்கிறது.குறிப்பாக 2009 க்கு பிறகான தமிழ்த்தேசிய முழக்கங்கள் வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு வலிமையும்,மூர்க்கமும் அடைந்திருக்கின்றன.அதில் முதன்மையான தமிழ்த்தேசிய அமைப்பாக நாம் தமிழர் கட்சி களங்களில் செயல்பட்டு வருகிறது.

 

பார்ப்பனீய ,சாதீய அரசியல் முனைகளால் பலமாக தாக்கப்படுவதும், கடுமையான விமரசனங்களை எதிர்க்கொள்ளுவதுமான முதன்மை தமிழ்த்தேசிய அமைப்பாக நாம் தமிழர் செயல்பட்டு வருகிறது என்பதை பல வித சான்றுகளுடன் நிரூபிக்க முடியும்.சமீபத்தில் ஹெச்.ராஜா அண்ணன் சீமானைப் பற்றி தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்ததும், பல வருடங்களுக்கு முந்தைய பேச்சு ஒன்றினை வைத்துக்கொண்டு வன்மம் குறையாமல் இந்துத்துவா அமைப்புகள் நாம் தமிழரை எதிர்த்து சமீபத்தில் போராடியதும்..இதற்கு சான்றுகள். மேலும் தமிழ்நாட்டில் இருக்கும் பல அரசியல் அமைப்புகளில் நாம் தமிழர் கட்சி மட்டும் தான் தேர்தலில் பாஜக கட்சியினை தனது முதன்மை எதிரியாக அறிவித்து, அதனை எதிர்த்து அது போட்டியிட்ட அத்தனை இடங்களிலும் தேர்தல் பணி ஆற்றியதும் இதில் குறிப்பிடத்தக்கது. பொதுவாகவே தமிழ்த்தேசிய அமைப்புகள் மீது வைக்கப்படும் தலையாய குற்றச்சாட்டு சாதீய முரண்களில் தனது கூர்மை அரசியலை நிலைநாட்ட முடியாமை. அதற்கு காரணம் சாதீய அமைப்புகள் மீதான பரிவு அல்ல. மாறாக சாதீய அமைப்புகளில் சிக்கிக் கொண்டிருக்கும் தமிழர்களை தமிழர் என்கிற ஓர்மை உணர்வில் ஒன்றிணைப்பதற்கான முனைப்பே அன்றி, வேறொன்றும் அல்ல.இன்றளவும் கொங்குப் பகுதிய சாதீய அமைப்பு ஒன்றினாலும், தலித்திய அறிவு சீவி வட்டத்தினாலும் சமமாக தாக்கப்படுகின்ற அமைப்பாக நாம் தமிழர் இருப்பதன் காரணம் வெவ்வேறான இரண்டும் தனது அரசியலுக்கு ஒரே எதிரியாக கருதுவது நாம் தமிழரை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவ்வாறாக வரலாற்றின் போக்கில் தமிழ்த்தேசிய உணர்வு தமிழர் மரபின் வாயிலாக கட்டமைக்கப்படுவதன் மூலம் தான் சாதீய மறுப்பு, பெண்ணடிமை தகர்ப்பு ,மூட நம்பிக்கைகள் ஒழிப்பு போன்ற பல்வேறு முற்போக்கு கொள்கைகளை இம்மண்ணில்

நடைமுறைப்படுத்தப்படும் என நாம் தமிழர் கட்சி நம்புகிறது. 2009 க்கு பிறகான தமிழ்த்தேசிய அமைப்புகளின் நவீன வடிவமாக நாம் தமிழர்  நிலைநிறுத்தப்படுவதற்கும், மத சாதீய உணர்வாளர்களால் கல்லெறியப்படுவதற்குமான மிக முக்கிய காரணமாக  இவ்வகையான நம்பிக்கைகளே என்பது குறிப்பிடத்தக்கது.images

சமூகநீதி இயக்கங்களுக்கும், தமிழ்த்தேசிய அமைப்புகளுக்கும் இடையே நீண்ட காலமாக பராமரிக்கப்பட்டு வரும் இடைவெளியை தனது நடைமுறை சாத்தியங்கள் மூலம் நாம் தமிழர் நிரப்ப முயல்கிறது. இன்னும் ஆழமாக சொல்லப்போனால் இரண்டிற்குமான மாற்றாக..புது வெளி ஒன்றினை..மாற்று அரசியலை நாம் தமிழர் நிறுவ முயல்கிறது. வெகுசன அரசியல் வெளியில் அதிகம் கண்டுக்கொள்ளப்படாத அயோத்திதாசர், இரட்டைமலை சீனுவாசன் போன்ற தலைவர்களின் விழாக்களை தனது கட்சி அமைப்பியல் நிகழ்வுகளாக நாம் தமிழர் கொண்டிருப்பதும்  இது போன்ற சிந்தனைகளால் தான்.. வெகுசன அரசியல் இயக்கங்கள் என்றாலே சமரசம் கொண்டு,பிழைப்புவாத அரசியல் நிலைகளை எடுப்பன போன்றதான பிம்பங்களை உடைப்பதில் நாம் தமிழர் தனது முழு கவனத்தைக் கொள்கிறது. ஒரு வெகுசன அரசியல் கட்சி சமூக இயக்கங்களுக்கான நுண்ணரசியல் தன்மைகளை பெறுவது எனபது தமிழக அரசியல் வெளியில் புதிதான ஒன்று. இயற்கை விவசாயம், மீத்தேன் எதிர்ப்பு, காட்டுக் கருவை ஒழிப்பு. ஆற்று மணல் கொள்ளை எதிர்ப்பு போன்றதான மண்சார்ந்த போராட்டங்களையும் நாம் தமிழர் மேற்கொண்டு வருவது  குறிப்பிடத்தக்கது.

 

தமிழர் மரபினை மீட்டெடுத்து..இனப் பெருமித உணர்வில்..தமிழ்த்தேசிய ஒர்மையை படைக்க விரும்பும் நாம் தமிழர் கட்சி சமூகநீதி இயக்கங்களின் அடிப்படை அம்சங்களை உள்வாங்கி  தமிழர்களுக்கான ஒருவெகு சன அரசியலை கட்டமைப்பதில் துடிப்பாக  இருப்பது தமிழின அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய போக்காகவே நாம் கருதலாம்.

ஷிண்டர்ஸ் லிஸ்ட்(1993 )- இன அழிப்பின் வலி நிறைந்த திரைமொழி

schindlers-list-17523-hd-wallpapers

 

உலக வரலாற்றில் மாபெரும் மனித அழிவு காட்சியாக 1939-45 வருடக் காலங்களில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போர் நம் கண் முன்னால் தோன்றுகிறது . மனித குலத்தில் 3 ல் ஒரு பங்கு உயிர்களை பலிவாங்கிய இரண்டாம் உலகப் போர் மனித மனங்களில் நிகழ்த்தி இருக்கிற உளவியல் மாற்றங்கள் மிக முக்கியமானவை. மனித குலத்தின் பாற் நேசமும், சமநீதியும் போதிக்கிற கம்யூனிச கொள்கைகளின் பாற் உலகம் தழுவிய ஈர்ப்பும், எழுச்சியும் இரண்டாம் உலகப் போரின் அழிவிற்கு பிந்தைய காலக்கட்டங்களில் தான் நிகழ்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்வதற்கான போராட்டம் என்பது மனித இனத்தின் தலையாய இயல்பு. உயிரோடு வாழ்ந்திருத்தல் என்கிற ஒரே ஒரு காரணிக்காக மனித இனம் எத்தகைய துன்பங்களையும் ,இழிவுகளையும் தாங்கிக் கொள்கிறது??

அப்படி..உயிர் வாழ்தலின் பொருட்டு மனித இனம் படும் பாடுகளைதான் Schindler’s List (1993) என்ற புகழ்ப்பெற்ற உலகத்திரைப்படம் பேசுகிறது..  இன அழிப்பிற்கு உள்ளான இன்னொரு இனமான தமிழினத்தை சேர்ந்தவர்கள்  என்ற முறைமையில் தமிழர்கள் தேடிப்பிடித்து இத்திரைப்படத்தை காண வேண்டிய அவசியம் இருக்கிறது.

இத்திரைப்படத்தின் பல காட்சிகள் ஈழப்பெருநிலத்தின் வன்னி வதை முகாம்களையும் ,முள்ளிவாய்க்கால் போர்க்கள காட்சிகளையும் நினைவூட்டுகின்றன.

 

 

Schindler's List

 

 

புகழ்ப்பெற்ற ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் ஆஸ்திரேலியாவின் எழுத்தாளுமை தாமஸ் கென்னலி 1982 ஆம் வருடத்தில் எழுதிய ஷிண்ட்லர்ஸ் ஆர்க்[ Schindler’s Ark ] என்ற நாவலை தழுவி இயக்கிய Schindler’s List என்கிற இத்திரைப்படம் ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லரால் இன அழிவிற்கு உள்ளாகிற யூன இனம் படுகிற பாடுகளை அணுஅணுவாய் சித்தரித்து இருக்கிறது. 1939 ஆம் வருடம் போலந்து இரண்டாம் உலகப்போரில் தொல்வியுற்ற தருணத்தில் இருந்து 1945 ஆம் ஆண்டு செக்கஸ்குலோவியா நாட்டினை நாஜிப்படைகளின் வசமிருந்து சோவியத் படைகள் மீட்கும் வரையிலான 6 வருட வாழ்க்கையினை ஜெர்மானிய வதை முகாம்களில் யூத இனம் படுகிற துயர் வழியே காவியமாய் படைக்கிறது.  தனது வயதான தாய் தந்தையரை உயிர்கொல்லி முகாமான ஆஸ்ட்விச் வதைமுகாமில் இருந்து மீட்டுத்தரும் ஆஸ்கர் ஷிண்டலரின் அலுவலகத்தை நன்றிப் பெருக்கோடு கண்ணீர் மல்க பார்க்கும் ஒரு இளம் பெண், குழந்தைகள் நாஜிப்படைகளிடம் சிக்கிக் கொள்ளாமல் ஒளிந்துக்கொள்ளும் காட்சிகள், சிவப்பு நிறந்தில் காட்டப்படும் சிறுமி ஒருத்தி தனியே அந்த கொலைக்களத்தில் நடந்து செல்வது போன்ற காட்சி என இத்திரைப்படம் முழுக்க காட்சிகளால் நிரம்பிய உணர்ச்சிக் காவியமாக விளங்குகிறது. தொடக்கத்தின் ஆஸ்கர் ஷிண்டலர் என்கிற ஜெர்மானிய நாஜிக்கட்சியை பிரதான கதாபத்திரம் சுயநலமாக, சம்பாதிக்க யூதர்களின் உழைப்பினை சுரண்ட வந்தாலும், அங்கே நடக்கிற கொடுமைகளை ஒரு மலை உச்சியின் மேல் இருந்து மனம் மாறுவது திருப்புமுனை. நிர்கதியான குழந்தைகள், உணர்வும், உடலும் மரத்துப்போன முகங்கள், இறுதியில் அனைத்தையும் இழந்து உயிரை மட்டும் இழக்கமுடியாமல் வாழ்வதற்கான போராட்டத்தில் தன்னிலை மறங்கும் மனிதர்கள் என பல்வேறு பட்ட கதாபாத்திரங்கள் நம் ஈழ மண்ணை நினைவூட்டிக் கொண்டே இருந்தார்கள்.

 

ஆஸ்கர் ஷிண்டலர் என்கிற நாஜிக் கட்சி சின்னத்தை பெருமையோடு தனது கோட்டில் அணிந்திருக்கிற ஜெர்மானியர் தொழில் வளர்ச்சி, ஊதியம் தர தேவையற்ற யூத அடிமைகளின் உழைப்பு ஆகியவற்றை முன் வைத்து போர்கோட்சே என்று அழைக்கப்பட்ட யூத முகாமிற்கு வந்து சேர்கிறார். பெரும் செல்வந்தரான அவர் தனது பணபலத்தைமுன் நிறுத்தி அங்கே இருக்கும் அதிகாரிகளிடம் பலவிதமான முறையில் சிகரெட்டுகள்,சாக்லெட்டுகள்,விலையுயர்ந்த பொருட்கள் ஆகியவற்றை கையூட்டாக அளித்து செல்வாக்கு உடைய நபராக திகழ்கிறார். அந்த வதை முகாமில் தலைமை நாஜி ராணுவ அதிகாரியாக இருக்கிற ஆமன் கோத் பல கொடுமைகளை செய்து யூத மக்களை கருணையற்ற முறையில் கொலை செய்து வருகிறார்.  தன்னிடம் பணிபுரிகிற இஸ்தக் ஸ்டெரன் என்கிற யூத இனத்தை சேர்ந்த கணக்காளரின் உறவினால் ஆஸ்கர் ஷிண்டலர் மனம் மாற தொடங்குகிறார். ஒரு மலை உச்சியின் மீது நின்று அந்த அந்த யூத முகாமில் தன் மனைவியோடு பார்த்துக் கொண்டிருந்த ஆஸ்கர் ஷிண்டலர் மனம் மாறுகிறார். அந்த கொடுமை நிலையில் இருந்து யூத இன மக்கள் 1100 பேரை எப்படி காப்பாற்றினார் என்பதை தான் 3 மணி நேரத்திற்கும் அதிகமான காட்சிகளாக இத்திரைப்படம். ஆஸ்கர் ஷிண்டலராக லியம் நிசனும்,அவரிடம் மனமாற்றம் ஏற்பட வைக்கும் யூத கணக்காளராக காந்தி திரைப்படத்தில் நடித்த பென் கிங்க்ஸ்லியும், கொடுமையான நாஜிப்படைஅதிகாரி ஆமன் கோத் கதாபாத்திரத்தில்  இரால்ப் பியன்சும் நடித்துள்ளனார்.  1993-ல் வெளியான இத்திரைப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை வென்றது. படம் முழுக்க கருப்பு வெள்ளையில் படமாக்கப்பட்டு இருந்தாலும் ஆஸ்கர் ஷிண்டலரால் காப்பாற்றப்பட்ட அந்த 1100 யூத மக்களும் 6000 பேராக விரிவடைந்து ஷிண்டலர் சந்ததியினர் என உலகத்தினரால் அழைக்கப்பட்டு ஆஸ்கர் ஷிண்டலர் சமாதிக்கு அஞ்சலி செலுத்த வரும் அந்த இறுதி காட்சி வண்ணத்தில் படமாகப்பட்டுள்ளது ஏகப் பொருத்தமானது.  

 

இத்திரைப்படத்தின் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க். இவரும் ஒரு யூதரே. இத்திரைப்படத்தை இயக்க அவர் ஏதும் ஊதியம் வாங்கவில்லை என்கிறார்கள். யூதப்படுகொலைகள் குறித்து நிறைய திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. நிறைய காணொளிக் காட்சிகள் இணைய வெளிகளில் காணக்கிடைக்கின்றன. இவற்றின் உருவாக்கத்தில் யூத இனத்தை சேர்ந்தவர்களின் பங்கு மிகுதியாக இருக்கிறது. யூத இன அரசியல், அதன் பரவலாக்கம், இஸ்ரேலிய அரசு உருவாக்கம் ஆகியவற்றின் மீது நமக்கு கடுமையான விமர்சனங்கள் உண்டு. இன்றளவும் பாலஸ்தீன பூர்வக்குடிகள் சிந்துகிற உதிரத்தில் இஸ்ரேலின் கைரேகை படிந்துள்ளது. ஆனால்  தன்னினம் அடைந்த துயரை ஒரு காயமாக ஆன்மாவில் தேக்கி வைத்து, அக்காயத்தையே மூலதனமாகக் கொண்டு தங்களுக்கான ஒரு நாட்டை உருவாக்கியதில் யூத இனம் வெற்றியடைந்து இருப்பது, இன அழிவிற்கு உள்ளான தமிழ்த்தேசிய இனம் போன்ற இனங்களுக்கு பாடமாக இருக்கிறது.

சக மனிதனை நேசிக்கும் உள்ளம் இறைவனுடையது என்பார்கள். அத்தகைய இறைவனாக Schindler என்ற ஜெர்மானியர் பல யூதர்களின் உயிரை காக்க அனைத்தையும் இழக்க துணிகிறார். திரைப்பட முடிவில் தன்னிடம் இருக்கிற தங்க பொத்தானை காட்டி ..இதனையும் விற்றிருந்தால் இன்னும் 2 யூதர்களை காப்பாற்றி இருப்பேனே என கலங்கித்துடிக்கும் போது…மனித குணத்தில் சக மனிதனை காரணமில்லாமல் நேசிக்கும் மனித நேயமே மகத்தானது என்கிற உண்மையை நாம் நமக்குள் உணர தொடங்குகிறோம். துளித்துளியாய் கசியும் தேன் துளி போல..நமக்குள்ளாக சக மனிதன் மீது,மனித இனத்தின் மீது நேசிப்பை சுரக்க வைப்பதுதான் இந்த உலகத்திரைப்படம் நமக்குள்ளாக நிகழ்த்தும் வித்தை.

உலகம் அழகானதுதான். நாம் தான் உலகத்தை நரகமாக்கி வைத்திருக்கிறோம்.

உயிர் வாழுகிற விலங்கினத்தில் மிகப்பெரிய அபாயகரமான விலங்காக மாறி அனைத்தையும் வேட்டையாடி புசிக்கிற மனிதன்..தனக்குள் இருக்கிற நேச ஊற்றை தோண்டிப்பார்க்க…அவசியம் இத்திரைப்படத்தை காணவேண்டும்.

ஆஸ்கர் ஷிண்டலர் யூத மக்களால் உருவாக்கப்பட்ட இஸ்ரேலிய நாட்டிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். அன்று ஜெருசலம் அருகே அவர் நட்ட மரமொன்று இன்றளவும் இனம் ,மொழி,சாதி, பிரிவுகள் கடந்த உலகம் தழுவிய மனித நேயத்திற்கு சாட்சியாக விளங்குகிறது.

இத்திரைப்படத்தை பார்த்து விட்டு..இறுதியில் நமக்குத் தோன்றுவது இதுதான்.

மனித அவஸ்தைகளை தாண்டி உலகில் வலிமைமிக்க துயர் எதுவும் இல்லை.அத்துயரை தீர்க்க முனையும் ஒரு கனிவு மிக்க இதயத்தை விட இறைவன் எங்கும் இல்லை.

Page 34 of 53

Powered by WordPress & Theme by Anders Norén