மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

கருத்துரிமை என்பது யாதெனில்… . -மணி செந்தில்


2013-10-31T092629Z_1799413014_GM1E9AV1BWA01_RTRMADP_3_PHILIPPINES

 

எம் முகத்தில்
நீ காறி உமிழ்ந்த
அந்த
மஞ்சள்
எச்சிலுக்கு
மற்றொரு பெயர்
உண்டென்றாய்…

எம் செவியில்
நீ உரக்கச்
சொல்லிப்போன
அவமானச் சொற்களின்
பின்னால்
மகத்தான
உரிமை ஒன்று
மறைந்து கிடக்குதென்றாய்..

எம் கண்களை நோண்டியெடுத்து
உன் கால்களுக்கு கீழே போட்டு
நசுக்கி…
அதில் கசிந்த
உதிரத்தில் தான்

உன் மஞ்சள்
எழுத்திற்கான
மை தயாரித்தாய்..

உதிர சிவப்பேறிய
எம் விடுதலைக்கான பக்கங்களில்
உன் மஞ்சள் புத்தியை
பூசி விட்டு போனதைதான்
உன் ஆக்கத்திற்கான
ஊக்கமென்றாய்..

கல்குதிரையேறி
நீ கடக்க முயன்ற
குருதிப் புனலில்
அகப்பட்ட சடலங்களில்
நெளியும் புழுக்களை
தின்பதை தான்
உன் பசியாறல்
என பகிரங்கப்படுத்தினாய்..

……………….

இருண்டுக் கிடந்த
பேரிருள் நிலத்தில்
மின்னிட்ட
ஒரு சுடரின்
திசைவழி கண்டு
விழித்தெழ கூட
எமக்கு அனுமதி இல்லை.

ஆனால்

விடுதலை தாகத்தில்
உலர்ந்த எம் உதடுகளை
நனைக்க வந்த
பெருமழையினை
அது வானின் மூத்திரம்
என வசைபாட
உனக்கு வாய்ப்பு உண்டு..
………………

திறந்த எம் விழிகளை
நோண்டிப் போடும்..
எழுந்த எம் கரத்தினை
முறித்துப் போடும்…
உன் சொல் விளையாட்டிற்கு
இறுதியாய்
கருத்துரிமை என பெயர் சூட்டினாய்.

கல்குதிரையேறி வந்த
சதிகார சம்ராட்டிற்கு
எம் மண்டையோடுகளை
கொண்டு
இராஜப்பாட்டை அமைக்க
உரிமை உண்டெனில்…

எம் துயர் இருட்டை
நக்கி பிழைக்கும்
அந்த எழுத்தை
எரித்துப் போடுதலும்..

எம்மை உருக்குலைத்துப்
போட வந்த அந்த விரல்களை
உடைத்துப் போடுதலும்

எமக்கான கருத்துரிமைதான்..

– மணி செந்தில்

மனுஷ்ய புத்திரனின் பிழைப்புத்தனங்களுக்கு

_03THPUTHITAN_1823414g

 

=========================================

மனுஷ்யபுத்திரன் அவர்களுக்கு…

 

கடந்த சில நாட்களாக  திமுக அமைத்திருக்கும்  அண்ணன் சீமான் அவர்கள் மீதான வசைபாடல் பிரிவிற்கு  நீங்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து வரிசையான வசையாடல்களை வாரி வழங்கி வருவதற்கு… அப்பட்டமான 3 ஆம் தர பிழைப்பு வாதம் தவிர வேறு என்ன காரணங்கள் இருக்க முடியும்..

அய்ய்யயோ.. நானா…பிழைப்பு வாதியா என்றெல்லாம் கூப்பாடு போட முடியாத அளவிற்கு உங்களது பிழைப்பு வாத தந்திரங்கள் பதிப்புலகிலும், அரசியல் உலகிலும் , தொலைக்காட்சி ஊடக உலகிலும் வரிசையாக வெளிப்பட்டு மூத்திரச்சந்தில் எண்ணி அடிவாங்கி  மூச்செறிந்து போய் கொண்டிருக்கிற வடிவேல் போல உங்கள் நிலைமை ஆகிக் கொண்டிருக்கிற இக்காலக் கட்டத்தில் தான் ..அரசியல் அதிகாரம் மீதான உங்கள் இனக்கவர்ச்சிக்கு சீமான் மீதான வசைபாடல் என்பது  ஒரு கருவியாக,அதிகார போட்டியினூடே நீங்கள் காட்டுகிற கபடமாக.. நீங்கள் உங்கள் சக அரசியல் போட்டியாளர்களுக்கு இடையே அமைத்துக்கொள்கிற  தகுதியாக… காட்ட விரும்பும் உங்களது எக்கசக்க ஆர்வம் புரிகிறது.

அரசியல் இருப்பினை தக்க வைப்பதற்காக, அரசியல் பங்களிப்பில் தனது பாகம் பழுது படாமல் இருப்பதற்காக, தாங்கள் எடுக்கிற பிழைப்புவாத பிச்சையில்..சீமானை சீண்டுவதென்பது ..உங்கள் புரட்சியாளர் தளபதி ஸ்டாலினிடம்  நானும்  உள்ளேன் அய்யா என்பது போன்ற அட்டெண்டன்ஸ் போடுகிற அரைகுறைச் செயலே..

சுத்த ,கலப்பிடமில்லாத, தூய இலக்கியவாதியாக உங்களை அமைத்துக் கொள்ள முயன்று, சற்றே பிழைப்பிற்காக சுஜாதாவின் பாக்கெட் சைஸ் மாத நாவல்களில் கொட்டும் சில்லரைகளுக்கு ஆசைப்பட்டு..பிறகு சுஜாதாவையே தூய இலக்கிய ஆத்துமாவாக காட்ட விரும்பி.. பிறகு அது மானாவாரியாக இலக்கிய ஏரியாக்களில் தர்ம அடி வாங்கும் வடிவேலாக தன்னை மாற்றுவதை அறிந்து…

நாமும்  தமிழ்நாட்டின் அருந்ததி ராய் போல,மேதா பட்கர் போல  ஆகலாம் என கருத்து கந்தசாமி அவதாரம் எடுத்து ..  ”மாலை மங்கும் நேரத்தில் ஜமுக் லேகியம் விற்கும் அமுக் வைத்தியர்” போல கிடைக்கும் தொலைகாட்சியில் புடைக்கும் ”கருத்து அரிப்பிற்கு”  சத்தம் போட்டு கத்தி விட்டு போவதையே தன் அறிமுகமாக அமைத்து..

வேறு எந்த வித விசேட காரணமும் இல்லாமல், கருணாநிதியிடம் தான் சன்,கலைஞர்,சன் நியூஸ் என்றெல்லாம் சேனல்கள் இருக்கின்றன என உணர்ந்துக்கொண்டு.. அதில் முகம் காட்ட, அதை கொண்டு முகவரி தேற்ற.. நீங்களே அண்ணா அறிவாலயத்திற்கு கருத்து கேட் கீப்பராக மாறிப் போன கதைகள் உலகம் அறிந்தவை மனுஷ்..

கடந்த 2009 க்கு பிறகு ஈழத்தை ஆதரிப்பவர்கள்,இனப்படுகொலையை எதிர்ப்பவர்கள் என  பெரும்பாலும் கருணாநிதிக்கும், திமுகவிற்கும் எதிர்ப்பானவர்களாக தான் ,மாறிப் போய் இருப்பதை உங்களின் கண்கள் மறைக்கும் தலைமுடி மறைத்து விட்டது போல.. எப்போதும் பிரபாகரனின் துதி கருணாநிதிக்கு எதிராகதான் போகும் மனுஷ்.. அதிலென்ன ஆச்சர்யம் உங்களுக்கு.. பிரபாகரன் என்ற பிம்பத்தின் எதிர்மறை கருணாநிதி தான்.. தன் பதவிக்காக, ஆதாயத்திற்காக , ஊழலால் விளையும் பணத்திற்காக ஈழத்தின் இனபடுகொலைகளுக்கு எதிராக கபட மவுனம் காட்டிய கருணாநிதியை பிரபாகரனின் ஆதரவாளர்கள் எதிர்ப்பதில் என்ன தவறு இருக்க முடியும்..?

சொல்லப்போனால் எங்களைப் போன்ற பல்லாயிரம் இளைஞர்களை இரட்டை இலைக்கு வாக்குக் கேட்க வைத்ததும், இரட்டை இலைக்கு ஒட்டுப் போட வைத்ததும், கருணாநிதியின் சுயநல,துரோகத்தன ,கபட அரசியல் நடவடிக்கைகளே தவிர வேறு என்ன..?

திமுகவின் ஊது குழலொன்று எங்களை அடிமை ஏஜெண்ட் என குற்றஞ்சாட்டுவதில் வியப்பில்லை தான். ஆனால் எங்களை ஜெயலலிதாவின் துதி பாடி என சொல்வதற்கு நாக்கு  மட்டும் இருந்தால் போதாதது ம.புத்திரன்.

உப்பிசம் பிடித்தவனுக்கு தட்டில் இருப்பவை எல்லாம் தரக்குறைவானதுதான் என்பது போல எங்கள் மாநாட்டில் ஹிட்லர் படம் பற்றி மட்டும் உங்கள் அரசியல் அதிகார கனவு மிதக்கிற காமாலை கண்களில் சிக்குகிற நோய் எங்களுக்கு புரிகிறது.

இவர்கள் தொலைக்காட்சியில் ஹிட்லரை பற்றி ஒளிபரப்புவார்களாம், ஏனென்றால் உலகம் முழுக்க ஆவணங்கள் (?)  இருக்கிறதாம்..மகனுக்கு ஸ்டாலின் என பெயர் வைப்பார்களாம். ஆனால் திமுக ஸ்டாலினை கடைப்பிடிக்காதாம்…  ஆனால் எங்களது அமைப்பினர் ஹிட்லர் படத்தை மாநாட்டின் ஒரு ஓரத்தில் வைத்தாலே ( இதற்கு சீமான் பல முறை விளக்கம் கொடுத்தும் இருக்கிறார் ) நாங்கள் ஹிட்லரின் ஆதரவாளர்களாம்.  நாக்கிற்கு நரம்பில்லை என்பதால் என்ன வேண்டுமானாலும் …வாங்கியதற்கு அதிகமாகவே கூவி…கோபாலபுரத்து விசுவாசத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிற உங்கள் வியாபாரத்தனத்திற்கு அகராதியில் ’வேறு பெயர்’ உண்டு…

ஈழ துயரத்தை பிசினஸாக பார்க்க நாங்கள் என்ன டெசோ கம்பெனி ஆட்களா… நினைத்தால் ,கூட்ட,பெருக்க உங்கள் கருணாநிதி வீட்டு கழிவறையாகத்தானே தானே டெசோவை வைத்திருக்கிறீர்கள்..சம்சா சாப்பிட வேண்டுமென்றால் கூப்பிடு டெசோவை என உங்கள் தலைவர் நடத்திய நாடகங்கள் நாடறிந்த நாறிபோனவைகள் என உங்களுக்கு தெரியும் தானே.. ஆனால் நாங்கள் அப்படியல்ல..இந்த நொடி வரை ..ஈழத்தின் துயரம் பேசியதால்..விடுதலைக் கனவை போற்றியதால்..நீங்கள் சொல்கிற அதே ஜெ. அரசுதான் எங்கள் மீது வழக்கு பதிந்து இருக்கிறது..

முத்துக்குமார் தெரியுமா..மனுஷ்..முத்துக்குமார்…

தன் மனதில் சுமந்த நெருப்பினை உடலில் கொட்டி செத்தானே… அதே முத்துக்குமார்… உங்கள் தலைவரைப் பற்றி தனது மரண சாசனத்தில் எழுதி வைத்திருக்கிற சொற்களைப் படித்து விட்டு ஈழ அரசியலைப் பற்றி பேச ..எங்களின் நேர்மைக் குறித்து தாக்க…உங்கள் சொற்களை தயார் செய்யுங்கள்.

சரி விடுங்கள்..காலையில் ஸ்டாலினுக்கும், மாலையில் கருணாநிதிக்கும் சால்வை கொடுத்தோமா…அறிவு சீவி முகமூடி போட்டு கலைஞர் டிவி கருத்து உதிர்த்தோமா..சந்தடிச் சாக்கில் ஏதாவது ராஜ்யசபா சீட்டுக்கு துண்டை போட்டோமா என்று இருந்து விட்டு போகாமல்…

இதற்கெல்லாம் அப்பாற்பட்டு நிற்கிற இளைஞர்கள் மீது ஏன் கல்லெறிந்து பார்க்கிறீர்கள்…?

நீங்க வாங்குற… 5 ,10 —————————   க்கு இதெல்லாம் தேவைதானா…?

 

-மணி செந்தில்

ஒற்றைத் தெறிப்பு ஊழி பெரும் தீயாய் ….

 

Naam-Tamilar-katchi-Ina-ezhuchi-Manadu-TRICHY-Photos-3

 

மாநாட்டிற்கு முந்தைய நாள் அது. அந்த நள்ளிரவு நேரத்தில் அந்த மாபெரும் மாநாட்டு திடலில் தனியே அண்ணன் சீமான் மட்டும் நின்றுக் கொண்டிருந்தார் . நான் அவரை கவனித்த போது அவர் தனித்திருந்தார். சற்று தொலைவில் தான் நாங்கள் அனைவரும் இருந்தோம். ஆழ்ந்த சிந்தனைக்கு உள்ளாகி இருந்த அவர் தன் வாழ்நாளில் மறக்க முடியா நாளொன்றாக மறுநாள் அமையப் போவதை எதிர் நோக்கி இருந்தார். மெல்ல தன் காலடிகளை கவனித்தவாறே அந்த மாநாட்டு திடலெங்கும் நடந்து வந்துக் கொண்டிருந்தார்.  இது வரை அவர் நடந்த பாதை பூக்களால் நிரம்பப் பெற்றது அல்ல.. பாதையை தேடாதே..உருவாக்கு என்று அறிவித்தவரின் தம்பியாயிற்றே..  இதுவரை யாருமே சமைக்காத புதிய பாதையை கடந்த நான்கு வருடங்களாக தனது கடும் உழைப்பினால் சீமான் உருவாக்கி இருந்தார். விமர்சனங்களும், வசவுகளும், எதிர்ப்புகளும் எதிர்பட்ட அப்பாதையில் விமர்சனங்கள் என்பவை வெறும் சொற்கள் தானே ஒழிய,கற்கள் அல்ல என்ற தன் அண்ணனின் சொற்களோடு அவர் முன்னேறிக் கொண்டிருந்தார்.  அவர் யாரையும் நம்பி நின்று நான் கண்டதில்லை. அடிக்கடி உரையாடல்களில் அவர் என்னிடம் பதிய வைக்கும் சொற்கள்..” தம்பி ..இன்று என்னுடன் நிற்கும் நீங்கள் அனைவரும் இதை விட்டு விட்டுப் போனாலும்.. நான் தனியே நின்று போராடி சாவேனே ஒழிய ,ஒரு போதும் இதிலிருந்து பின் வாங்க மாட்டேன்..”

உண்மையில் இச்சொற்களுக்கு அவர் மிக நேர்மையுடையவராக இருந்தார். கட்சியில் அவ்வப்போது நிகழும் சலசலப்புகளுக்கும் ,வெளியேற்றங்களுக்கும் அவர் சங்கடப்பட்டதே இல்லை. ஏனெனில் எங்கள் யாரையும் நம்பி அவர் இல்லை. ஆனால் அவரை நம்பி லட்சக்கணக்கான இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பதை மே 24 -2015 திருச்சியில் நடந்த  இனஎழுச்சி அரசியல் மாநாடு நிரூபித்துக் காட்டி விட்டது.

மாநாட்டு நாளுக்கு முந்தைய சில இரவுகளாக அவர் தூக்கத்தை மறந்திருந்தார். இம் மாநாட்டு வெற்றிக்காக எதையும் அர்ப்பணிக்க அவர் தயாராக இருந்தார். அவரே இறங்கி சென்னை நகரத்துவீதிகளில் சுவரொட்டிகள் ஒட்டத் தொடங்கிய போது உடனிருக்கும் நாங்களே அதிர்ந்துப் போனோம்.  அவர் இதயம் முழுக்க இலட்சிய ஆவேசம் அனலடித்துக் கொண்டிருந்தது . அவரது வேகத்திற்கும், சிந்தனை ஓட்டத்திற்கும் ஈடு கொடுக்க முடியாமல் நாங்கள் திணறியது தினந்தோறும் நடந்தது.

 

மாநாட்டு நாளான மே 24 நெருங்க..நெருங்க..முக்கிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் இனம் புரியாத பதட்டம் ஒட்டிக் கொண்டது. 5 வருடங்களாக நாங்கள் எழுதிய தேர்வொன்றுக்கு முடிவுகள் தெரியும் நாளாக மே 24 அமையப் போகிறது என நாங்கள் அனைவருமே உணர்ந்தோம்.  மாநாட்டுத் திடலில் மாநாட்டிற்கு முந்தைய நாள் இரவில் மாநாட்டு மேடையில் சீமான் –உயர்த்தும் கையில் ஒளிரும் வெளிச்சம் என்கிற நான் எழுதிய நூலை பெருந்தமிழர் தியாகம் அய்யா வெளியிட, பெருந்தமிழர் அரப்பா அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். தொடர்ச்சியாக ஒரு வாரமாக மாநாட்டுத்திடலில் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் வேலைசெய்து கொண்டிருந்தார்கள். மாநாட்டு மேடையை நள்ளிரவு வரை அண்ணன் செந்தமிழன் சீமான் நேரில் பார்வையிட்டுக் கொண்டிருந்தார். தனது வாழ்நாள் கனவொன்றினை நிஜமாக்கிட அந்த மனிதர் துடித்துக் கொண்டே இருந்தார்.  அதைத்தான் அவரது பேச்சிலும் அவர் குறிப்பிட்டார். “ நான் இதயத்துடிப்பில் வாழ்பவன் அல்ல , இலட்சியத் துடிப்பில் வாழ்பவன் .

உலகம் முழுக்க இருந்தும் நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி மாநாட்டுக்கு முதல் நாளிலிருந்து இனமானத்தமிழர்கள் வரத்தொடங்கினார்கள். பல்வேறு மாவட்டங்களிலிருந்து வருகிற நாம் தமிழர் உறவுகள் மாநாட்டுத் திடலை ஆர்வமாக சுற்றிப் பார்த்தனர். மலேசியா நாட்டு நாம் தமிழர் உறவுகள் தனிச்சீருடையோடு வலம் வந்தது அனைவரையும் கவர்ந்தது. குடும்பத்தில் நடைபெறும் திருமணத்தில் நெருங்கிய உறவுகள் சந்திப்பது போல நாம் தமிழர் உறவுகள் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்தும்,கட்டித்தழுவியும், கை உயர்த்தியும் தங்களது அன்பினை பரிமாறிக் கொண்டது அது ஒரு கட்சி மாநாடு என்கிற தோற்றத்தை மாற்றி குடும்ப நிகழ்வு என்கிற தோற்றத்தை அளித்தது.

   மாநாட்டுத் திடலில் மாநாட்டு மேடையின் இருபுறமும் மாவீரர்களின் படமும், புரட்சியாளர்களின் படமும், மொழிப்போர் ஈகிகளின் படமும், தமிழ் முன்னோர்களின் படமும் பொறிக்கப்பட்டு இருந்தது. மாநாடு அன்று விடிய விடிய மாநாட்டு மேடை அமைக்கும் பணி மற்றும் இதர வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. விடிந்தப் பிறகும் கூட மாநாட்டுத்திடலில் பணிகள் நடந்துக் கொண்டிருந்தன.

இவ்வேளையில் அண்ணன் சீமானின் மகிழுந்து தஞ்சைக்கு விரைந்துக் கொண்டிருந்தது,

எங்களுடைய மாநாட்டு நிகழ்ச்சி நிரலில் அந்நிகழ்வு இல்லை. முந்தைய நாள் இரவிலும் அதற்கான திட்டமிடல் எங்களிடம் இல்லை. ஒரு உரையாடலில் தஞ்சை பெரியகோவில் பற்றி ஒரு பேச்சு வந்தது. அந்தக் கோவிலின் பிரதான வாசலின் வழியே உள்ளே நுழையும் எவரும் அரசியலில் பெரிய சரிவை சந்திப்பார்கள்..அல்லது சாவை சந்திப்பார்கள் என்கிற மூடநம்பிக்கைப் பற்றி அண்ணன் செந்தமிழன் சீமானிடம்பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த மூடநம்பிக்கையை பலப்படுத்தும் வண்ணம் சில சம்பவங்களும் அதற்கு முன் நடைப்பெற்றதையும் விவரித்தார்கள்.அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த அண்ணன் அதை நாம் உடைப்போம் என்றார். மாநாட்டு நாளன்று தஞ்சை கோவிலுக்குள் பிரதான நுழைவாயிலின் வழியே செல்வோம் என்றார்.

உடனே உரையாடிக் கொண்டிருந்தவர்கள் ஏன் இதைச்சொன்னோம் என்ற அளவிற்கு சங்கடப்பட்டார்கள்.. அதில் ஒருவர்..இல்லை.நாளை மாநாட்டை வைச்சிகிட்டு என்று மெலிதாக முனக.. அண்ணன் சீமான் உறுதியான தன் குரலில் நாளை கோவிலுக்குள் நுழைவோம். பார்க்கலாம். என்றார்.

பெரியாரின் வழித்தோன்றல்திராவிட இயக்கத்தின் அடையாளம், கடவுள் மறுப்பின் கடவுச்சீட்டு, மூடநம்பிக்கை ஒழிப்பின் முகவரி திமுக தலைவர் கருணாநிதி கூட வங்கிக் கொள்ளையர் போல பக்கவாட்டு சுவற்றில் துளை போட்டு தான் கோவிலுக்குள் வந்தார்..என்றதும்..அண்ணன் அட்டகாசமான சிரிப்போடுநாளை போறோம்.இதை உடைக்கிறோம்பாக்கலாம்.. பாட்டன் கட்டிய கோவில் பேரனை என்ன செய்யுது என

சரி..ஏதோ அண்ணன் சொல்றார். நாளைக்கு பாக்கலாம் என நாங்கள் எல்லாம் இருக்க..மறுநாள் காலை 8 மணிக்கெல்லாம் தஞ்சையை நோக்கி மகிழுந்து விரைந்தது..

புலிக் கொடி மைந்தன்..புலிக்கொடி மன்னனின் கோட்டைக்குள் மூடநம்பிக்கை எரித்த தணலாய் உள் நுழைந்தான்..

கடவுள் மறுப்பாளன் மூடநம்பிக்கை தகர்க்க கோவிலுக்குள் நுழைந்தான்.

மறுநாள் குமுதம் ரிப்போர்ட்டரில் இந்த செய்திபுரட்சிஎன வந்திருந்தது .

அண்ணனிடம் இதைப் பற்றி சொன்ன போதுஅந்த அளவுக்கு ஒரு பொய்யை பரப்பி வைச்சிருக்கானுகடா என சொல்லி சிரித்தார்

 Naam-Tamilar-katchi-Ina-ezhuchi-Manadu-TRICHY-Photos-19

மாநாட்டு நாளான மே 24 அன்று காலை முதலே, தமிழகம் முழுக்க இருந்தும் தமிழர்கள் மாநாட்டுத்திடலில் வந்து குவியத்தொடங்கினார்கள். கடும் வெப்ப நாளான அன்று மதியம் 1 மணிக்கு பிறகு அலை அலையாய் தமிழகத்தின் அனைத்துப்பகுதிகளிலும் இருந்து நாம் தமிழர் கட்சியினர் வாகனங்களில் வரிசையாக வந்து குவியத் தொடங்கினர்.   மாலை சரியாக மணிக்கு மாநாட்டுத்திடலில் புலிக்கொடி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களால் ஏற்றி வைக்கப்பட்டது. கொடிப்பாடல் இசைக்க..இசைக்க..வானில் படிப்படியாக ஏறிய புலிக்கொடி காற்றில் அசைந்து பறந்தக் காட்சி அங்கே திரண்டிருந்தவர்களை சிலிர்க்கச்செய்தது.   பின் , கலைவளர்மதி ஐயம்மாள் செந்தமிழ்ச்செல்வன் குழுவினரின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியோடு கலை நிகழ்ச்சிகள்  தொடங்கின.. தமிழரின் பாரம்பரிய கலையான வில்லுப்பாட்டு நிகழ்ச்சி மாநாட்டு நிகழ்ச்சிகளின் முதல் நிகழ்வாக அமைந்தது பெருமைக்குரியதாக விளங்கியது. வில்லுப்பாட்டு நிகழ்ச்சி முடிந்ததும், புதுவை சித்தன் கலைக்குழுவினரின் எழுச்சிப்பாடல்கள் தொடங்கியது. ‘தலைமகனே எம் பிரபாகரனே’  என்ற பாடலை புதுவை சித்தன் பாடத்தொடங்கியபோது கூட்டம் ஆர்ப்பரித்தது. அப்போது, மாநாட்டுத் திடலுக்குள் நுழைந்த திருச்சி,கும்பகோணம்,சிதம்பரம் பகுதியை சேர்ந்த நாம் தமிழர் உறவுகள் தேசியத்தலைவரின் படம் பொறித்த பதாகைகளை தாங்கிபிடித்து, கூட்டத்தைச் சுற்றி வந்த போது, மாநாட்டுத்திடல் முழுக்க நிறைந்திருந்த தமிழர் கூட்டம் தேசியத்தலைவரே நேரில் வந்துவிட்டதாக எண்ணி ஆர்ப்பரித்து, உணர்வெய்தது. அதனைக் கண்டு பலர் மகிழ்ச்சி வெள்ளத்தில் கண்ணீர் சிந்தினர்.  சற்றே நெகிழ்ச்சியுடன் கண் கலங்கி நின்ற அண்ணன் சீமான் அவர்களை அனைவரும் கவனிக்கத் தவறவில்லை. தொடர்ந்த புதுவை சித்தனின் கொள்கை இசை. ‘எடுத்து அடிடா முப்பாட்டன் பறைய’ பாடலுடன் முடிவுற்றது. அடுத்து, தமிழனின் ஆதி இசையான பறையிசை ஆதித்தமிழர் இயக்கம் சார்பாக தொடங்கியது. தாத்தா இரட்டைமலை சீனிவாசன் படமும், பாட்டன் அயோத்திதாச பண்டிதரின் படமும் பொறித்த சீருடைகளை அணிந்து, ‘இது சாதிப்பறை அல்ல! ஆதிப்பறை!!, ‘தேடாதே பாதையை உருவாக்கு! இது தேசியத்தலைவரின் அருள்வாக்கு’ என்ற முழக்கத்தோடு பறையிசையை ஆண்களும்,பெண்களுமாக கொள்கை நடனத்தோடு நிகழ்த்தியது அங்குள்ளவர்களை எழுச்சியடைய வைத்தது. இதற்குள் மாநாட்டுத் திடலில் இலட்சக்கணக்கான தமிழர்கள் திரண்டு இருந்தார்கள். ஓயாத அலைகளாய் மாநாட்டுத் திடலை நோக்கி தமிழர்கள் வந்துக் கொண்டே இருந்தார்கள்.  பறையிசை நிறைவு பெற்றதும், சரியாக மாலை 06.10 மணிக்கு ஈழ நாட்டின் மாவீரர் துயிலுமிட பொறுப்பாளர் பெருந்தமிழர்.பொன் தியாகம் அவர்களால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. அங்கே ஈழப் பெருந்தேசத்தில் நம் தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களுக்கு முன் ஈகைச்சுடர் ஏற்றிய பெருந்தமிழர்.பொன் தியாகம் அவர்கள், அவரது தம்பியான செந்தமிழன் சீமான் அவர்களுக்கு முன் ஈகைச்சுடர் ஏற்றியது வரலாற்றியல் நிகழ்வு. அளப்பரிய ஒழுங்கமைவோடு நடைப்பெற்ற இந்நிகழ்வில் அங்கே கூடியிருந்த உலகத்தமிழர்கள் அனைவரும் நம் இனத்திற்காக,நம் தாய்மொழிக்காக, நம் இனத்தின் விடுதலைக்காக உயிர் நீத்த மாவீரர்களை நினைவு கூர்ந்து ஓர்மைக் கொண்டனர்.

 இம் மாநாட்டின் முதல் நிகழ்வாக அகவணக்கம்,வீரவணக்கம், உறுதிமொழி ஆகிய நாம் தமிழர் கட்சியின் நிகழ்வுகளை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களே முன் நின்று நிகழ்த்தியது மிகவும் பொருத்தமாக அமைந்தது. அதன் பின் இன எழுச்சிப் பேருரைகள் தொடங்கியது. மாநாட்டு மேடையில் இருக்கைகள் ஏதும் அமைக்கப்படாது, உரை நிகழ்த்துவோர் மட்டும் நின்று பேசும்படி மேடை அமைக்கப்பட்டிருந்தது. ‘பெண் விடுதலை இல்லையேல் மண் விடுதலை இல்லை’ என்பதற்கேற்ப முதலில் மகளிர் பாசறையினர் எழுச்சிப் பேருரை நிகழ்த்தினர். மகளிர் பாசறையினர் பேருரை நிகழ்த்திய பிறகு, மாணவர் பாசறை, இளைஞர் பாசறை என ஒவ்வொரு பாசறையினரும் இன எழுச்சி உரை நிகழ்த்தினார்கள். 

 

இறுதியாக அண்ணன் சீமான் பேச வரும் போது சரியாக 9 மணி. அவர் பேசுவதற்கு முன்பாக மாநாட்டு திடலில் கம்பீரமாக ஒரு குரல் ஒலித்தது. “ தம்பி சீமானிடம் விட்டு செல்கிறோம் “ என்று ஒலித்த அக்குரல் கடற்புலிகளின் தலைவர் அண்ணன் சூசைக்கு சொந்தமானது. கடந்த 2009 மே மாத இறுதிச்சூழலில் அண்ணன் சூசை அவர்கள் இங்கே இருக்கும் ஒரு உணர்வாளரிடம் பேசிய அந்த அலைபேசி உரை மாநாட்டுத் திடலில் கூடியிருந்த இலட்சக்கணக்கான தமிழர்களை விம்மியெழ செய்தது. அண்ணன் சூசை அவர்களின் அழைப்போடு..நெஞ்சம் முழுக்க கனக்கும் உணர்ச்சிப் பெருக்கோடு அண்ணன் சீமான் மேடையேறினார்.

கடந்த 5 வருடங்களாக தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சுற்றி இன விடுதலைக்காக, மொழி வளர்ச்சிக்காக, தமிழரின் இனமானம் காக்க , இன நலன் ஒன்றே நோக்கமென எழுந்த அக்குரல்…அந்த மாநாட்டு திடலிலும் எழுந்தது…

அந்த குரல் அன்று ஒரு ஒற்றைத் தெறிப்புதான்…

ஆனால்….அது தான் இன்று பெருந்தீயாய்

இலட்சியத்தை சுமந்து பரவிக் கொண்டே இருக்கிறது…

அடக்குமுறைகளும்,வழக்குகளும்,தடைகளும்

காற்றென வீசி அத்தீயை பெருந்தீயாய்… ஊழி பெருந்தீயாய் வளர்க்கின்றன…

  • மணி செந்தில்

என் அம்மாவிற்கு…

IMG_4949

என் அம்மாவிற்கு..

யாரிடமும் விளக்க முடியா..விவரிக்க முடியா அளவிற்கு உன் மீதான என் ஞாபகங்கள் விரிந்துக் கொண்டே செல்கின்றன..சொல்லப்போனால் நான் உன் பேச்சை அப்படியே கேட்கிறவன் இல்லை. உன் கனவுகளில் நீ என்னை பற்றி வரைந்திருந்த சித்திரங்களுக்கு நேர்மை செய்தவன் இல்லை. உறவுக்காரர்கள் மத்தியில் என் மகனும் அமெரிக்காவில் இருக்கிறான், ஆஸ்திரேலியாவில் படிக்கிறான் என்றெல்லாம் பெருமைப் பொங்க விவரிக்க உனக்கு வாய்ப்பே தந்ததில்லை. என்னைப் போன்ற உடல் நலம் குன்றிய மகனால் ஒரு தாய்க்கு மருத்துவமனையின் மங்கிய வண்ணம் பூசிய சுவர்களை நிலைக்குத்திய பார்வைகளோடு பார்த்துக் கொண்டிருக்கிற கலங்கிய கண்களை தவிர வேறு என்ன தர இயலும்…? சுமை நீக்க இயலா சுமை சுமக்கும் தொழிலாளியாய் உன்னை மாற்றி வைத்ததில் எனக்கு பெரும் பங்கு உண்டு அம்மா… இன்னமும் சுமக்கிறாய்..

நான் 10 மாத குழந்தையாய் இருந்த போது போலியோவால் பாதிக்கப்பட்டேன். 10 ஆவது படிக்கும் வரை நான் மருத்துவமனையை தவிர வேறு எங்கும் சென்றதில்லை. என் முன்னால் உறைந்திருக்கும் என் வீட்டு சுவற்றினை தவிர எனக்கு வேறு நண்பனில்லை. எனது ஒரே தோழி நீதான். காலில் கட்டுப் போட்டு அசையாமல் அமர்ந்திருக்கும் என்னோடு விளையாட, கொண்டாட யார் தான் வருவார்.. உன் மாயக்குதிரை கதையும்,பரம பதம் விளையாட்டும் தான் என்னை சூழ்ந்திருந்த இருட்டில் தெரிந்த மினுக்குகள்…

பதின் வயதுகளில், சற்றே தடுமாறி நடக்க முடிந்தவுடன் வாலிப வேகத்தில் வானத்தை வசப்படுத்தும் அர்த்தமற்ற இலக்குகளோடு தாறுமாறாக நான் அலைந்து திரிந்தப் போது நீதான் ஆற்றுப்படுத்தினாய்..

எப்போதும் எழுந்திரு என்கிற வார்த்தையை தவிர எந்த பெரிய அறிவுரையையும் நீ வழங்கியதில்லை. காலமும், நம்பி நின்றவர்களும் என்னைச்சுற்றி நின்று வேட்டையாட துடித்தப் போது குட்டியை காத்திட சிறகடித்து.. பாய்ந்து துடித்த கோழியாய்… எனை துயர இருட்டினில் இருந்து மீட்டெடுத்து, என்னை உருவாக்கி, கலங்கிய கண்களை துடைத்து, கலைந்த தலையை சீராக்கி, என்னை திசை திருப்பி,திருமணம்செய்து வைத்து ,என்னை இயல்பானவனாக வீதிக்கு அனுப்பி வைத்தவள் நீ..

ஒவ்வொரு முறையும் உன் விழிகளின் வெளிச்சத்தை நான் தான் தீர்மானிக்கிறேன் அம்மா. நான் ஒவ்வொரு முறை கீழே விழும் போதும் நீதான் உடைந்து விடுகிறாய். உன் விழிகள் இருள்கின்றன. ஆனாலும் அதை என்னிடம் காட்டாமல்…எழுந்திரு என்று சொல்லி விட்டு நகருகிறாய்..மின்னொளி படரும் மேடைகளில் நான் சிரமப்பட்டு ஏறி நிற்கையில் இயல்பாய் உன் கண்கள் கலங்குகின்றன…அதே சமயத்தில் நான் பேசுகையில்,எழுதுகையில், இயல்பாய் உன் கண்கள் ஒளிர்கின்றன..

இப்போது கூட தவறி விழுந்து காலில் கட்டோடுதான் நான் அமர்ந்திருக்கிறேன்..இப்படியே இருக்காதே…மாநாட்டு வேலைகளுக்கு கிளம்பு என்கிறாய்..உனக்கு தெரியும் புலிக்கொடியும், சீமானின் சொற்களும் தான் எனது ஆகப்பெரும் மருந்து என…

என் உடல் நலனுக்கு பொருந்தாத..என் பொருளாதார வலுவிற்கு எதிரான ஒரு போராட்டப் பாதையை வலிந்து என் வாழ்க்கையாய் நான் தீர்மானித்தப் போது நீ அமைதியாய் இருந்தாய். பிழைப்பை விட்டு விட்டு, பொன்னான நேரத்தை கொலை செய்து விட்டு, வியர்வை வடியும் முகத்தோடு,கருஞ்சட்டை அணிந்து முச்சந்தியில் முழங்கி விட்டு அசதியோடும், வெறும் கையோடும், சொல்லப்போனால் சற்றே கடனோடும்…வீட்டிற்கு திரும்பும் நான் யாருக்கும் உவப்பானவன் இல்லைதான். ஆனாலும் எனக்கான நியாயங்களை தனக்கான சமாதானமாக ஆக்கிக் கொண்டு என்னை அன்புடன் வருடிச்செல்லும் உன் சொற்களுக்கு நான் என்ன கைமாறு செய்வேன்..

கைமாறு செய்தல் தான் தாய்மைக்கான போற்றுதலா என்பதில் எனக்கு குழப்பங்கள் உண்டு.ஆனால் என்னோடு நீ நிற்பதில் உனக்கு எவ்வித குழப்பங்களும் இல்லை அம்மா… ஏனென்றால்
நீ என்னை உன்னிடத்தில் இருந்து பிரித்தே பார்ப்பதில்லை..

இந்த பதிவைப்படித்து பார்த்து விட்டு..இது மட்டும் தானா என்று நீ பார்க்கிற பார்வைக்கு என்னிடத்தில் பதில் ஏதும் இல்லை.

அன்னையர் தின வாழ்த்துக்கள்.

கங்காரு -தீவிர அன்புணர்வின் எளிய மொழியியல்…

Kangaroo

 

மிருகம்,உயிர்,சிந்து சமவெளி போன்ற சர்ச்சை திரைப்படங்களை இயக்கிய சாமி இயக்கியுள்ள கங்காரு வேறு தளத்தில் பயணிக்கிறது. எப்போதும் உணர்வு சார்ந்த திரைக்கருவில் மிகை நடிப்பிற்கான சாத்தியங்கள் அதிகம். அதே போன்ற அண்ணன் -தங்கை அன்புணர்வினை தீவிரமாக பேசுகிறது கங்காரு..

எப்போதும் வாழ்க்கை நினைத்தது போல அமைந்துவிடுவதில்லை.நினைப்பது போல நடக்காததன் அவஸ்தைகளை,வலிகளை,வேதனைகளை, ஏமாற்றங்களை,சவால்களை பேசுவதுதான் திரைப்படங்களும், இலக்கியங்களும்… மனித மனம் விசித்திரமானது. அந்த விசித்திரங்களின் தொகுப்பில் மகத்தானது அன்பு என்கிற மகத்தான உணர்வு.ஒரு வகை பதிலீட்டை,எதிர்பார்ப்பை,கைமாற்றை கோரி நிற்கிற மாபெரும் துயராக அன்புணர்வு பேருருவம் அடையும் போது மனித மனம் பிறழ்வு அடைகிறது. அப்படிப்பட்ட அன்பினை யாசகமாக கோரி நின்ற சகோதர உணர்ச்ச்சியின் பிறழ்வு அவஸ்தைகளை தான் கங்காரு பேசுகிறது.

எங்கிருந்தோ வந்த ஒரு சிறுவனின் கரங்களில் ஒரு கைக்குழந்தை. டீக்கடை வைத்திருக்கும் தம்பி இராமைய்யா அவர்களுக்கு அடைக்கலம் தந்து அவர்களை வளர்க்கிறார். தனது தங்கையே உலகமென வாழும் அந்த சிறுவனும்,கைக்குழந்தையும் வளர்கிறார்கள். உரிய வயது வந்தவுடன் தங்கைக்கு காதல் பிறக்கிறது. அது கனிந்து அண்ணனின் ஆசியோடு திருமணமாக மலர இருக்கையில் காதலன் கொல்லப்படுகிறான். அதன்பின் பார்த்த மாப்பிள்ளையும் கொல்லப்படுகிறார். பின் திருமணம் செய்து கொள்கிற இளைஞன் நோக்கியும் கொலை முயற்சி. இதற்கு பின்னால் இருப்பது யார் என்ற மர்ம முடிச்சுகளுடன் திரை மொழி அமைத்திருக்கிறார் இயக்குனர் சாமி.

தன் முந்தையப்படங்களின் பாலியல் உறவுகள் சார்ந்த சாயல் வந்து விடக்கூடாது என்பதில் கவனம் கொண்டிருக்கிறார் இயக்குனர். மின்னும் உயர் நட்சத்திரங்கள், மாபெரும் அரங்கங்கள், பிரம்மாண்டமான சண்டைக்காட்சிகள் ஆகிய எதுவுமின்றி,புதிய நட்சத்திரங்களைக் கொண்டு தான் கொண்டிருக்கிற கதைக்கருவினை மிகச்சரியாக திரைமொழிக்கு நகர்த்தி விட வேண்டும் என்கிற இயக்குனரின் உழைப்பு திரைப்படத்தில் தெரிகிறது.

தனது குட்டியை தானே சுமந்து திரியும் விலங்கினங்களில் சற்றே வித்தியாசமானது கங்காரு . தனது வயிற்றோடு இருக்கிற பையில் தனது குட்டியினை வைத்துக் கொண்டு திரிகிற கங்காருவினை முன் மாதிரியாக வைத்து கதையினை அமைத்திருக்கிறார்கள். மனித மனதிற்குள் பூட்டி கிடக்கிற விலங்கு விழித்தால் அடைகிற அவலங்களும், அன்பின் மிகுதியில் மனிதமனம் அடைகிற பிறழ்வுகளுமாக உளவியல் சார்ந்த திரைக்கதையாக கங்காரு உருவாகியுள்ளது.

மனப்பிறழ்வு கொண்ட கதாநாயகனாக நடித்திருப்பவர் இன்னும் உடல் மொழியில் மெனக்கிட்டு இருக்கலாம். கதாநாயகியாக பிரியங்கா. அமைதிப்படை 2 –ல் நடித்தவர். தன்னை தவறாக வழிநடத்த முயல்கிற தனது அக்காவினையும், அவரது ஆட்களையும் செருப்பால் அடித்து வெளுக்கிற காட்சியில் மின்னுகிறார். தங்கையாக நடித்திருக்கும் புது முகம் தனது அண்ணனுக்காக அவசர அவசரமாக கஞ்சியினை விழுங்கும் காட்சியில் நன்கு நடித்திருக்கிறார். தம்பி இராமையா, கலாபவன் மணி,சுந்தர்ராஜன் போன்றவர்கள் எப்போதும் குணச்சித்திர கதாபாத்திரங்களின் சுடர் விடுபவர்களே.இப்படமும் அவர்களுக்கு விதிவிலக்கல்ல.

மருத்துவராக நடித்திருக்கிற வெற்றிக்குமரன், தயாரிப்பாளராகவும் இருந்து, தங்கையின் கணவனாகவும் நடித்து இருக்கிற சுரேஷ் காமாட்சி ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களுக்கு தங்களால் முடிந்த நேர்மையை செய்திருக்கிறார்கள்.

படத்தில் குறைகளே இல்லையா.. என்ற கேள்வி எழுப்பிகிறவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது தெலுங்கன் கரங்களிலும், மார்வாடி கரங்களிலும்,கன்னடத்தான் கரங்களிலும் சிக்கி வதைபடுகிற திரை உலகினை மீட்க எம் நண்பர் சுரேஷ் காமாட்சி போன்றோர் போராடத் தொடங்கியுள்ளார்கள். அப்போராட்டத்தின் முதற்படி தான் கங்காரு போன்ற திரைப்படங்கள். அடுத்தடுத்து வரும் திரைப்படங்களில் இப்படத்திற்கான தவறுகளை திருத்திக்கொள்வார்கள என்கிற எனது நம்பிக்கைதான் இப்படத்தினை தவறுகள் கடந்து நேசிக்கச்சொல்கிறது. எளிய பொருட்செலவில் உண்மையான பாச உணர்வின் தீவிரத்தை பேசுகிற கங்காரு..நான்கு பாட்டு,இரண்டு குத்து, நான்கு காமெடி என்கிற பெயரில் கடிகள் என்கிற வகையில் வெளிவருகிற எத்தனையோ திரைப்பட குப்பைகளுக்கு மத்தியில் மதிப்புறு படமே..

கங்காரு – தமிழன் தயாரித்த தமிழர்களுக்கான திரைப்படம்.

அவசியம் அனைவரும் காண்போம்.

ஜெயகாந்தனை நான் வெறுக்கிறேன்

images (1)

ஜெயகாந்தனை நான் வெறுக்கிறேன் -மணி செந்தில்
——————————————————————————————

ஜெயகாந்தனுக்கு ஏன் நீங்கள் ஒரு பதிவு எழுதவில்லை..என்று கேட்டே விட்டான் என் தம்பி துருவன் செல்வமணி.

இறந்து விட்டார் என்பதற்காக அவரை ஆஹா-ஓஹோ என புகழ்ந்து பதிவிடும் போக்கு இணையத்தளம் வந்த பிறகு அதிகமாகி விட்டது என நான் கருதுகிறேன்.ஜெயகாந்தன் ஒரு வேளை மீண்டும் பிழைத்தாரென்றால்….”நான் செத்தால் இப்படியெல்லாம் எழுதுவீர்கள் என்றால்…நான் சாகவே மாட்டேன்” என சொல்லி விடுவார் போல…
வெறுப்பின் குணாம்திசியங்களோடு,கறாராய் வாழ்ந்த அம்மனிதனுக்கு திகட்ட திகட்ட இரங்கல் உரைகள்.

நான் ஜெயகாந்தன் தமிழ்ச்சிறுகதை உலகினை ஆட்சி செய்த போது வாசிக்க தொடங்கவில்லை. என் அம்மா பைண்டிங் செய்யப்பட்ட ஜெயகாந்தன் நாவல்களை அடிக்கடி வாசித்துக் கொண்டிருப்பதை கண்ட போதுதான் அக்காலத்திய பெண்களின் புரட்சிக்காரனாய் அவர் திகழ்ந்திருந்ததை என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது..அவரது அக்கினி பிரவேசம் சிறுகதையை என் அம்மா சிலாகித்து பேசும் போது எனக்கென்னவோ அதில் கொண்டாட ஏதுமில்லை என்றுதான் தோணிற்று. அதன் பின்னால் அவரை நான் வாசித்த போது புதுமைப்பித்தன்,திஜா,எம்.வி.வி,கரிச்சான்குஞ்சு,தஞ்சை ப்ரகாஷ் போன்ற என் அபிமான அக்காலத்து எழுத்தாளர்கள் அளவிற்கு ஜெயகாந்தன் என்னை ஈர்க்கவில்லை. மேலும் தமிழ்மொழி குறித்தும், காஞ்சி மடம் குறித்தும்,பெரியார் குறித்தும் அவர் கொண்டிருந்த கருத்துக்கள்,செயல்பாடுகள் ஆகியவை எனக்கு எதிரானவையாக இருந்தன, ஜெயகாந்தன் எழுத்துக்களில் புலப்படும் அதிகப்படியான உரையாடல்கள் அக்காலத்திற்கு உகந்தவையாக,புதுமையாக இருந்தாலும்..எனக்கு சற்று மிகையாக தான் தெரிந்தன..ஜெயகாந்தனின் கதாபாத்திரங்கள் அவரைப்போலவே நெகிழ்வற்ற பாத்திரங்களாக விளங்கின. மரபுகள் மீதான கலகமாய் ஜெயகாந்தனை நாம் கொண்டாட முடியாது.. ஏனெனில் அவருடைய வெளிப்படையான பார்ப்பன,இந்துத்துவ ஆதரவு அதற்கு எதிராக இருக்கிறது. சினிமா உலகிற்கு ரஜினிகாந்த் போல இலக்கிய உலகிற்கு ஜெயகாந்தன் திகழ்ந்திருக்கிறார் போல…என்ன செய்வது..எனக்கு நடிப்பில் கார்த்திக் (முத்துராமன்) தான் பிடிக்கும்.

ஜெயகாந்தனின் திரைப்படங்களில் நான் “ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் ,சில நேரங்களில் சில மனிதர்கள்” போன்ற படங்களும் மெலோ டிராமா வகையை சார்ந்தவையே… அப்படங்களில் நடித்த நடிகை லெட்சுமி படங்களை விட என்னை ஈர்த்தார்.

இப்போது நானும் இணையத்தளங்களில் கொட்டிக்கிடக்கும் ஜெயகாந்தன் பற்றிய வாழ்க்கை விவரணைக் குறிப்புகளில் இருந்தும், அவரது பல கட்டுரைகளில் இருந்தும் ஜெயகாந்தன் பற்றிய ஒரு புகழ் கட்டுரையை தேற்றி விடலாம் தான். ஆனால் அது ஜெயகாந்தன் உருவாக்க முனைந்த பிம்பத்திற்கு எதிரானது…இந்து நாளிதழில் நேற்றைய சமஸ் கட்டுரை கூட எனக்கு மிகவும் அந்நியமாக,சடங்காக தெரிந்தது அவ்வாறுதான்.. ஒரு வேளை.. ஜெயகாந்தனைப் பற்றி ஆவணப்படம் எடுத்த..அவருடன் நெருங்கிப் பழகிய ரவி சுப்ரமணியன் சமரசமற்ற ஒரு பதிவு எழுதினால் ஏறக்குறைய ஜெயகாந்தன் என்கிற மனிதனுக்கு நேர்மையாக இருக்கும்.

உன்னை பிடிக்காது என்பதை ஜெயகாந்தனிடம் நேரடியாக சொல்வதே..வெளிப்படையாக வாழ்ந்த அந்த எழுத்தாளனுக்கு நான் செலுத்துகிற உண்மையான அஞ்சலி..

அதைத்தான் அவரும் விரும்புவார்.

மற்ற படி ஜெயகாந்தனை நான் வெறுக்கிறேன். நான் வெறுக்க ,நிராகரிக்க ஜெயகாந்தன் இருந்தார் .இப்போது இல்லை. அந்த காரணங்களுக்காக வருந்துகிறேன்.

மரம் வெட்டிகள் சொன்ன கதை..

07-1428394570-andhra-encounter43

 

பால்யத்தின்
பாடப்புத்தகங்களிலும்,
தேவதைக் கதைகளிலும்
சட்டென சந்தித்திட
இயலும் சாதாரண
மரம் வெட்டிகள்தான்
நாங்களும்..

தங்கக்கோடாலியை
எடுத்து தருகிற
தேவதையை
யாரோ கற்பழித்து
போட்ட தினத்தில் தான்…

அடிவயிற்றுப்
பசித்தீக்காக
நாங்கள் வெயில்
அலையும் வனத்தில்
நின்று கொண்டிருந்தோம்..

எம் காதோரம்
பெருகுகிற வியர்வைத்
துளிகளுக்குள்
வீட்டில் பூனை உறங்குகிற
எம் வீட்டு அடுப்படிக்
கதைகள் ஒளிந்திருக்கின்றன…

புன்னகை மறந்த எம்
உதடுகளில்
பசித்திருக்கும்
எம் குழந்தைகள்
உதிர்க்கும்
நடுநிசி முனகல்களின்
சாயல் படிந்திருக்கின்றன…

கனவுகளில் கூட
அச்சம் துறக்க மறக்கிற
நிலைக்குத்திய
விழிகளுக்கு சொந்தக்காரர்கள்
நாங்கள்…

அப்படித்தான்
அன்றும்
நீண்டது முடியத்துடிக்கிற
பயணமொன்றின்
இறுதி ஊர்வலம்..

அன்றுதான்…
காற்றின் துடுப்புகளை
முறித்துப்போட்டு
எங்களை நோக்கி
முன்னேறிய துப்பாக்கி
ரவைகளை நாங்கள் சந்தித்தோம்..

உடனே ஏதாவது சொல்லி
துப்பாக்கி சீறலில்
கருணை கசிகிறதா
என கணத்தில் கணக்கிட்டோம்..

நாங்கள் இந்தியர்கள்
என்றோம்.

இல்லாத முகவரியை
சுமக்கிற அடையாளமற்ற
அஞ்சலட்டைகள்
என்றன துப்பாக்கி ரவைகள்..

நாங்கள் திராவிடர்கள்
என்றோம்..

உங்களை வைத்து
பிழைப்பதற்காக
எங்கள் எஜமானர்கள்
செய்து வைத்து வைத்த
நூற்றாண்டு மோசடி
என்று நகைத்தன
துப்பாக்கி ரவைகள்..

நாங்கள் மனிதர்கள்
என்றோம்..

உயருகிற அதிகார முனைகள்
என்றுமே மனிதர்களை
தின்றுதான் பசியாறுகின்றன
என்று தர்க்கம் உரைத்தன
துப்பாக்கி ரவைகள்..

இறுதியாக
சொன்னோம்….
நாங்கள் தமிழர்கள் என…

உயிருள்ள சடலங்கள்
உயிரற்று விழுவதால்
எழப்போவது
எதுவுமில்லை..
என்று காறி உமிழ்ந்த
படியே
சீறி துளைத்தன
ரவைகள்…

 

ராஜ வாழ்க்கை…

358843-bigthumbnail

எப்போதும் என் குதிரை
இராஜபாட்டையில்
செல்வதான கனவில்..

நான் மன்னன் இல்லை
என்பதையும்,
வாழ்க்கை குதிரை
இல்லை என்பதை மறந்து
போனேன்…

சறுக்கி விழும்
தருணங்களே
அறிவிக்கின்றன…
சதுப்பில் பயணப்படும்
எருமையாய் வாழ்வும்
ஒட்டிய ஈயாய் நானும்…

சொற்களின் மினுக்கும் சிறகுகள்

11064900_10153260048767074_1943520695953753847_nகாற்றில்
மிதந்து திரிகிற
உன் சொற்களில்
மின்மினி பூச்சிகளின்
சிறகினை கண்டேன்…

வளைந்து,நெளிந்து
திரிகிற புதிர் பாதையில்
ஆயிரத்தி எட்டு
நட்சத்திரங்களை
விதைத்து போயின அவை.

சட்டென கிளைத்த
மெளனத்தில்…
நட்சத்திரம் அழிந்த
வானமாய் நிர்மூலமானது
நானும் கூட….

 

தோட்டாவின் பாடல்..

thalaivar1

அடிமை இடுகாட்டின்
பற்றி எரியும் வரலாற்று
பெருமித பிணங்களுக்கு
நடுவே…

குனிந்த தலைகளாய்..
முணுமுணுத்த உதடுகளாய்..
கடந்துப் போன துயரோடிய
சாட்சிகளாய்..

நீண்டிருந்த வரிசைகளுக்கு
நடுவே..
ஏதிலியாய் ஏதுமற்று
எதுவுமற்று எல்லாமும் அற்று
மானம் விற்று வாழ்ந்த
மானுட சவங்களுக்கு நடுவே..

உதிரம் உறைந்த ஆயுத முனைகள்
குத்தி கிழிக்கும் சதை துணுக்கில்
சதா ஒழுகிக் கொண்டிருக்கும்
சிங்க இன இறுமாப்புகளுக்கு
நடுவே..

வலிகளின் தடம் சுமந்து
இழப்பின் பெருமூச்சாய்
அனல் காற்று அலைகழித்த
அவலங்களுக்கு நடுவே..

அலைகழிக்கும்
துயர் காற்றின்
சிறகுகள்
ஒடித்து
சீறி பாய்ந்தது
ஒளி கமழும் தோட்டா ஒன்று…

பஃருளி ஆற்றின்
பன்மலை அடுக்கமும்,
பத்து தலையாய்
பரவிக் கிடந்த ஒற்றை
உடலின் உயிர் நுனியும்,
சோழத்து கொடியில்
பாய்ந்திருந்த வரிப்புலியின்
தோல் வரியும்
சிலிர்த்தன..சிலிர்த்தன..

அடுக்கடுக்காய்
எழுந்த ஆதிக்க அலைகளின்
வளை நெறித்து
தாழ் பணிந்த முதுகுகளின்
நிமிர்வாய் உலவியது
அந்த தோட்டாவின் சீறல்..

பேரினவாத
பூட்ஸ் கால்களில்
மிதிப்பட்டு கிடந்த
விடுதலை
விழிகளின் விலங்கொடிக்க
புதிய பூபாளத்தினை
புகட்டி விட்டுப் போனது
அந்த தோட்டாவின் பாடல்..

குருதிச் சிவப்பேறிய
விளைநிலத்தில்…
மண்டையோடுகள்
உருண்டு,புரண்ட
அலைகடல் ஓரத்தில்..

தொடைமிச்சங்களும்,
மார்பு கறிகளும்
விற்கப்பட்ட
சாத்தான் வீதிகளில்…

தாழ்ந்திருந்த தலைகளை
வெட்டத்துணியும் வல்லாதிக்க
வாட்களின் மின்னிய
நுனிகளுக்கு அப்பால்..

பெருமுழக்கத்தோடு
தோட்டாவின் பாடல்
கேட்டிற்று..

இருண்மை வீதிகளில்
உயிரற்ற உடலாய்
கிடந்த
மானுட வாழ்வின்
மகத்தான பிரகடனம்
தோட்டாவின்
ஒளிச்சிறகுகளால்
உயிர்த்தெழுந்தது.

அது ஒற்றைத் தோட்டா
அல்ல..

எம் இனத்தின் பெரும் வரலாறு..

Page 36 of 53

Powered by WordPress & Theme by Anders Norén