பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: அரசியல் Page 4 of 15

திருவாளர் பொதுஜனம் 51

பட்டீச்சுரம் என்பது கும்பகோணம் மற்றும் பாபநாசம் தொகுதிகளின் நடு எல்லையில் இருக்கின்ற ஊர். ராஜராஜ சோழன் சமாதி இந்த ஊருக்கு அருகிலுள்ள உடையாளூரில் இருக்கிறது. அண்ணன் சீமானைத் தவிர எந்த அரசியல் தலைவரும் அந்த இடத்திற்கு இதுவரை வந்ததில்லை. வந்தால் அரசியல் சரிவுகள் ஏற்படும் என்றும், உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் மூட நம்பிக்கைகள் உண்டு.மூடநம்பிக்கை என்றாலே திராவிடம் தானே.அதனால்தான் எந்த திராவிடத் தலைவர்களும் அங்கு வருவதில்லை.

வரலாற்றுப் பெருமைகள் பல வாய்ந்த இந்த மண்ணில்தான் இன்று கும்பகோணம் மற்றும் பாபநாசம் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.சற்றே ஊர் எல்லைக்கு வெளியே தான் எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக அண்ணன் சீமானின் கூட்ட ஒலிபரப்பு தொடங்கிய உடன் மக்கள் வீட்டில் இருந்து வெளியே வர தொடங்கினர்.கூட்டம் தொடங்கியவுடன் இளம் பேச்சாளர்கள் பேசத் தொடங்க ‌ அதன் பிறகு நான் பேசினேன். எனக்குப் பிறகு‌ வேட்பாளர்களான ‌ பெருந்தமிழர் கிருஷ்ணகுமாா் அவர்களும் வழக்கறிஞர் மோ ஆனந்தும் பேசினர்.நான் பேசிக் கொண்டிருக்கையில் ‌ நீண்ட நேரமாக ஒருவர் என்னை கவனித்துக் கொண்டே இருந்தார்.

நான் பேசியபோது திமுக, அண்ணா திமுக காரர்கள் போல அரசியல் என்பது எங்களுக்கு தொழில் அல்ல. காலையில் வேலைக்குப் போய்விட்டு மாலை தேர்தல் பணிகளுக்காக எங்கள் தம்பிகள் ஒவ்வொரு நாளும் வருகின்றார்கள். இனத்திற்காக தங்கள் பணத்தை செலவழித்து இன விடுதலைக்காக உறுதியாக நிற்கிறார்கள் என்று பேசினேன்.நீண்ட நேரமாக அவர் என்னை கவனித்துக் கொண்டே இருப்பதாக எனக்குத் தோன்றியது.எனக்குப் பிறகு ஐயா கிருஷ்ணகுமார் பேசிக் கொண்டிருக்கையில் தயங்கியவாறே அருகில் வந்தார்.என்ன நினைத்தார் என தெரியவில்லை.51 ரூபாய் பணமும் ஒரு சீட்டையும் தந்து விட்டு சென்று விட்டார். அதை பிரித்து பார்த்தால் திருவாளர் பொதுஜனம் 51 என எழுதி இருந்தது.

அதில் அவரை தொடர்பு கொள்ள அலைபேசி எண்ணும் எழுதியிருந்தது.அது வெறும் பணம் அல்ல. எளிய மனிதனின் நம்பிக்கை. அது அவருக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் நம்பிக்கை பிறந்த கணம். அது ஒரு பரஸ்பர நம்பிக்கை கொடை.அதே நபர் கூட்டம் முடிந்து நாங்கள் செல்லும் வரை ஓரமாக நின்று எங்களை கவனித்துக் கொண்டே இருந்தார்.‌‌ நாங்கள் அந்த இடத்தில் விட்டுக் கிளம்பும்போது நெஞ்சம் நிமிர்த்தி அவர் கம்பீரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அவரது பெயர்.திருவாளர் பொதுஜனம்.

தமிழ்நாடு- ஓர் வரலாற்று சித்திரம்

தமிழினம் தனது தனி நலன்களுக்காக போராட புரட்சிப் பாதையில் படை எடுத்து விட்டது.அந்த படையெடுப்பை எதிர்க்கும் எந்த அரசியல் கட்சியும் இனி தமிழகத்தில் வாழ முடியாது.
-ம. பொ. சி 1954 செப்டம்பர்.

ஒவ்வொரு தேசிய இனமும் தனது அடையாளங்களில் முதன்மையாக கொண்டிருப்பது மொழி. மொழி என்ற முகமே ஒரு தேசிய இனத்தின் முகவரி. உலகத்தில் தோன்றியுள்ள எத்தனையோ நாடுகள் மொழி அடிப்படையிலான தேசிய இனங்களை சார்ந்தே நிலப் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
 ஒரு தேசிய இனம் என்பது பொதுவான மொழி, வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு, பொதுவான மக்கள் பொருளியல் வாழ்க்கை, பொது பண்பாடாக வெளிப்படும் நாம் ஓரினம் என்கின்ற உளவியல் பாங்கையும் தழுவி வரலாற்றின் தொடர்ச்சியாக வந்த ஒரு நிலையான சமூகம் என அறியப்படுகிறது.


சங்க காலம் தொட்டே தமிழ்மொழி பேசப்பட்டு வந்த தமிழக எல்லை என்பது வரையறுக்கப்பட்ட எல்லையாக இருந்து வந்திருக்கிறது. சேர சோழ பாண்டியர்கள் ஆண்டாலும் வடவேங்கடம் தொடங்கி தென்குமரி வரையிலான பெரும் நிலப்பரப்பு தமிழகம் என அறியப்பட்டு வந்திருக்கிறது.
 “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து”என்கிறது தொல்காப்பியம்.
சேர சோழ பாண்டியர்களான தமிழ் மூவேந்தர்கள் 1300 வருடம் ஆண்டுகளாக ஒற்றுமையுடன் இருந்து தமிழக நிலப்பரப்பினை காத்து வந்து இருக்கிறார்கள்.கி-மு இரண்டாம் நூற்றாண்டில் கலிங்கத்து மன்னன் காரவேலன் இந்தக் கூட்டணியை உடைத்து எறிந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
இடைக் காலத்திலும் மூவேந்தர்கள் ஒருவருக்கொருவர் படையெடுத்து வெற்றி தோல்வி கண்டாலும், தமிழக நிலப்பரப்பு ஏறக்குறைய பிறமொழி இனத்தாரிடம் சிக்காமல் பாதுகாக்கப்பட்டே கிபி 12ஆம் நூற்றாண்டு வரை வந்தது. 

 
முகலாயர் படையெடுப்பின்போது கூட சில இன ஊடுருவல்கள் நடந்ததே ஒழிய தமிழக நிலப்பரப்பை பொருத்தவரையில் அது தமிழர்களின்  தாயகமாக தான் விளங்கியது.
வரலாற்றின் முதல் விடுதலைப் போர் என அறிவிக்கப்படுகிற 1857 சிப்பாய் கலகத்திற்கு முன்பாகவே 1801 ஆண்டிலேயே ஆங்கிலேயருக்கு எதிராக தமிழக மண்  போர்க்கோலம் கண்டது. அதற்கும் முன்பாக மாவீரன் பூலித்தேவனும், மருதநாயகம் யூசப்பும் வெள்ளையர் ஆதிக்கத்திற்கு எதிராக தமிழக மண்ணில் எழுச்சியோடு போராடினார்கள். 1801ஆம் ஆண்டு மருதுபாண்டியர் தூக்கிலிடப்பட்ட காலகட்டத்தில் ஏறக்குறைய முந்தைய சென்னை மாகாணம் என அழைக்கப்பட்ட தமிழ்நாடு கேரளா ஆந்திரா கர்நாடகா போன்ற பகுதிகளில் ஆங்கிலேயர் ஊடுருவி ஆட்சி செய்ய தொடங்கி விட்டார்கள். திப்புசுல்தானின் வீழ்ச்சி தென்னகத்தில் ஆங்கிலேயர் கால் ஊன்றுவதற்கு நாற்றங்காலாய் அமைந்தது. 


1825 ஆம் ஆண்டு தெலுங்கு கன்னட மலையாள பகுதிகளை தமிழ் நாட்டோடு இணைத்து சென்னை மாகாணம் ( Madras presidency) கடலூரை தலைநகரமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.1858 ஆம் ஆண்டு விக்டோரியா மகாராணி பேரறிக்கைக்கு பிறகு ஆளுநர் நியமிக்கப்பட்ட சென்னை மாகாணம் தனித்த பெரும்பகுதியாக திகழ்ந்தது. சென்னை மாகாணத்தின் தலைநகராக, முக்கிய பகுதியாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் கூடிய சென்னை திகழ்ந்ததால் தென்னிந்தியா முழுக்க சென்னை அரசியல் முக்கியத்துவம் பெற்ற பகுதியாக விளங்கியது. சென்னையை தலைமையிடமாகக் கொண்ட இந்தப் பெரும் நிலப்பரப்பு 1956 இல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படும் வரை ஒரே மாகாணமாக தான் இருந்தது.
ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு முன்பாக இந்தியா என்கிற ஒரு நாடு இல்லை. இந்தப் பெரும் நிலப்பரப்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறுநில மன்னர்களால், சமஸ்தான ஜமீன்தார்களால் ஆளப்பட்டு வந்தது. அதற்கு முன்பாக கூட வரலாற்றில் எப்போதும் இன்று இந்தியா என வரையறுக்கப்படும் இந்தப் பெரும் நிலப்பரப்பு ஒருபோதும் ஒரே மன்னரால் ஆளப்பட்டது இல்லை. இந்த நிலப்பரப்பு முழுக்க வாழும் மக்கள் ஒரே மொழி பேசியதில்லை.மொழி, பண்பாடு, பருவநிலை, பழக்கவழக்கங்கள் என அனைத்திலும் முரண்பட்ட இந்த பெரும் நிலப்பரப்பை ஆங்கிலேயர் தனது துப்பாக்கி முனையின் மூலமாக இந்தியா என்ற ஒரு பெரும் நாடாக கட்டி எழுப்பினர்.


அதற்கு முன் இந்தப் பெரும் நிலப்பரப்பு வரலாற்றில் எப்போதும் இந்தியா என்று அழைக்கப்பட்டதில்லை. ஆங்கிலேயர் தனது அதிகார வசதிக்காக இந்தியா என்ற நாட்டை உருவாக்கி சென்னை, மும்பை, கல்கத்தா என அதிகார தலைநகரங்களை உருவாக்கினர்.
பலதரப்பட்ட மொழி பேசும் பண்பாடு பழக்கவழக்கங்கள் கொண்ட அப்போதே ஏறத்தாழ 20 கோடி மக்கள் தொகைக்கும் அதிகமான மக்கள் கூட்டத்தை கட்டி ஆள இந்தியா என்கின்ற ஓர்மை ஆங்கிலேயருக்கு தேவைப்பட்டது. ஆனால் இந்தியா என்கின்ற நாடு ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்ட போது நாமெல்லாம் இந்தியர் என்கின்ற உணர்வு அப்போது யாருக்கும் இல்லை என்பதுதான் மிக முக்கியமானது. ஆங்கிலேயர் எப்படி நிர்வாக வசதிக்காக இந்தியா என்கின்ற நாட்டை உருவாக்கினார்களோ, அதேபோல ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைக்க ‘இந்தியர்’ என்கின்ற அடையாளம் ஆங்கிலேய எதிர்ப்பாளர்களுக்கு அன்று தேவைப்பட்டது.


1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திரமான நாளுக்கு பிறகு, இந்தியாவை ஒரே நாடாக இந்திய அரசியலமைப்பு சட்டம் கூட கருதவில்லை என்பது தான் குறிப்பிடத்தக்கது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவை ஒன்றியங்களின் நாடு என்றுதான் குறிப்பிடுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு மூல காரணமாக அமைந்த இந்திய அரசியலமைப்பு சட்ட அமர்வு விவாதங்களின் போது கூட மொழிவழி மாநிலங்கள் பிரிவது குறித்து விவாதிக்கப்பட்டு இருக்கின்றன. சுதந்திர இந்திய நாட்டில் முதன்மையான ஆளுங்கட்சியான காங்கிரஸ் தனது ஒவ்வொரு பொதுத் தேர்தல் அறிக்கையிலும் மொழிவாரி மாகாணப் பிரிவினை நடைமுறைப்படுத்தப்படும் என வாக்குறுதியை அளித்தது.
1947 இல் இந்தியா விடுதலைப் பெற்ற ஒரு நாடாக அறிவிக்கப்பட்டாலும், மொழி உணர்வுகள், பல்வேறு பண்பாட்டு கலாச்சார விழுமியங்கள் இவற்றின் முரண்கள் காரணமாக மொழிவாரி மாநிலங்கள் தோன்றுவதற்கான மக்கள் உளவியல் தொடக்கத்திலிருந்தே இருந்தன. 1954 ல் தொடங்கப்பட்ட தெற்கெல்லை போராட்டம் என வரலாற்றில் அறிவிக்கப்பட்ட திருவிதாங்கூர் எல்லைப் போராட்டம் மொழி உணர்வுக்கு சரியான எடுத்துக்காட்டாகும். 1954 ஆகஸ்ட் 11 ஆம் தேதி தங்களை தாய்த் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையோடு போராடிய திருவிதாங்கூர் தமிழர்கள் 10 பேர் மலையாள காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.அதேபோல சித்தூர், திருத்தணி , கன்னியாகுமரி போன்ற எல்லையோர மாவட்டங்களிலும் போராட்டங்கள் வெடித்தன.


ஆனாலும் அப்போதைய ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி மொழிவழி மாகாணப் பிரிவினையில் அக்கறை காட்டாததோடு மட்டுமில்லாமல், தமிழர்களின் நலனுக்கு எதிராக நடந்து கொள்வதில் தீவிரமாக இருந்தது. அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த பழுத்த தேசியவாதியான காமராஜர்  ஒட்டுமொத்த இந்தியாவின் தானே அனைத்து பகுதிகளும் இருக்கப் போகின்றன என்ற பரந்த எண்ணத்தில் மொழிவழி மாகாணப் பிரிவினையில் அக்கறை காட்டாமல் இருந்துவிட்டார். தொடர்ச்சியான பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு 1957 ஆம் ஆண்டு படாசுக்கர் எல்லை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. பிரகாசம் தலைமையிலான ஆந்திரத் தலைவர்கள் ‘மதராஸ் மனதே’ என முழங்கி சென்னை ஆந்திராவோடு இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு போராடினார்கள்.ஐக்கிய கேரளம் வேண்டும் என்று கேரள பொதுவுடமை கட்சியின் தலைவர் உயர்திரு ஏகே கோபாலன் தலைமையில் மலையாளிகள் போராடி வந்தனர். தமிழக பொதுவுடைமை கட்சியின் தலைவர் தோழர் ஜீவா தேவிகுளம், பீர்மேடு தமிழ்நாட்டிற்கே சொந்தம் என அறிவிக்க , பொதுவுடமை கட்சியிலும் பிரிவினைகள் தோன்றின. திருவாங்கூர் கொச்சி போன்ற பகுதிகளில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளை கேரளாவோடு  இணைப்பதற்கு திராவிட இயக்கத்தின் தலைவராக இருந்த ஈவேரா ஒப்புதல் அளிக்க , அதை தமிழ்த் தேசிய அமைப்புகள் கடுமையாக எதிர்த்துப் போராடினர். 1960 ஆம் ஆண்டு தான் திருத்தணி தமிழ்நாட்டோடு தளபதி கே விநாயகம் தலைமையிலான போராட்டத்தால் இணைக்கப்பட்டது. மார்ஷல் நேசமணி, தளபதி கே விநாயகம், ம பொ சிவஞானம், உள்ளிட்ட எண்ணற்ற தலைவர்கள் எல்லை மீட்புப் போரில் தமிழகத்தின் எல்லைக் காக்க போராடினர்.  

ஆனாலும் தமிழர்களின் பரந்துபட்ட மனப்பான்மையின் காரணமாக தமிழகம் தனது பூர்வீக நிலத்தில் பலவற்றை இழக்க நேரிட்டது. கர்நாடகாவிலும் கொள்ளேகால் வனப்பகுதி உள்ளிட்ட பல பகுதிகளையும்,ஆந்திராவிடம் சித்தூர், நெல்லூர் மாவட்டங்களையும், கேரளா விடம் தேவிகுளம் பீர்மேடு, மூணாறு உள்ளிட்ட பல பகுதிகளையும் அன்றைய தமிழகத் தலைவர்களின் அலட்சியப் போக்கினாலும், திராவிட தேசிய அரசியல் கட்சிகளின் தமிழர் விரோத நிலைப்பாடுகளாலும் தமிழகம் இழந்தது.
திராவிட-தேசிய கட்சிகளின் தமிழர் விரோத மனப்பான்மையால் தமிழக எல்லைப் போராட்டம் முழுவதுமாக வெற்றி அடைய முடியாமல் பகுதி வெற்றியோடு தமிழர்கள் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.


1956 ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படும் அறிவிப்பு வெளியானது. தற்போதைய எல்லை படி சென்னை மாகாணம் என வழங்கப்பட்ட நிலப்பரப்பு தனித்த மாநிலமாகவே உருவானது. 


விருதுநகர் மாவட்டம் மண்மலை மேடு என்ற கிராமத்தை சேர்ந்த சங்கரலிங்கனார் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டுமென 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து தன் உயிரைத் துறந்தார். 1962 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய பாராளுமன்றத்தில் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையோடு கொண்டுவரப்பட்ட மசோதா தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 1964 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அப்போதைய சென்னை மாகாண சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட மசோதாவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்திமொழி எதிர்ப்பு போராட்டத்தின் காரணமாக ஆட்சிக்கு வந்த அண்ணா தலைமையிலான திமுக அரசாங்கம் 1968 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டும் மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்றியது.


முதன்முதலாக தமிழ்நாடு என்கிற மொழிவாரி மாநிலம் உருவான நாளான 1956 நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு நாள் என அறிவித்து  2019 அக்டோபர் 25 ஆம் தேதி தமிழக அரசு ஒரு அறிவிப்பு ஒன்றினை செய்தது. 
இந்த உலகில் வாழும் 12 கோடி தமிழ்த் தேசிய இன மக்களின் தாயக நிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இந்திய ஒன்றியத்தின் கீழ் தமிழ்நாடு ஒரு மாநிலமாக உருவாக்கப்பட்ட நாளான 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு நாளாக அறிவிக்கப்பட்டிருப்பது வரலாற்றுச் சிறப்பு கொண்டது. 2009 ஈழத்தில் நடந்த இன அழிப்பிற்கு பிறகு தாயகத் தமிழகத்தில் பொங்கியெழுந்த தமிழ் தேசிய உணர்விற்கு கிடைத்த வெற்றியாக தமிழ்நாடு நாள் அமைந்து உள்ளது.


கேரளா கர்நாடகா ஆந்திரா போன்ற மாநிலத்தவர்கள் தங்கள் மாநிலம் உருவான நாளை மிகப் பெரிய விழாவாக எடுத்து, தங்கள் மாநிலத்திற்கு என பொதுவாக இருக்கும் கொடியை அந்நாளில் ஏற்றி கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். இதுபோன்ற ஒரு உயர்வு நிலை தமிழகத்திற்கு ஏற்படாதா என எண்ணியிருந்த நிலைமையில், தமிழக அரசின் தமிழ்நாடு நாள் அறிவிப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
நாம் தமிழர் இயக்கத்தை நடத்திய ஐயா சி பா ஆதித்தனார் வடிவமைப்பில் ஏற்கனவே உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டு கொடி சில மாற்றங்களோடு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையிலான குழுவினரால் உருவாக்கப்பட்டு , இன்று பரந்துபட்ட தமிழர்களால் அது ஏற்றுக்கொள்ளப்பட்டு அதுவே தமிழ்நாட்டு கொடியாக பட்டொளி வீசி பறக்கிறது.
தமிழக அரசியல் கட்சிகளில் ‘தமிழ்நாடு நாள்’ கட்சியின் நிகழ்ச்சியாக கொண்டாடப்பட்டு தமிழ்நாட்டு கொடி ஏற்றப்பட வேண்டும் என்கிற அறிவிப்பினை வெளியிட்ட இந்திய தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட முதல் அரசியல் கட்சி என்கிற பெருமையை நாம் தமிழர் கட்சி பெறுகிறது. 


தமிழராய் பிறந்ததில் பெருமைகள் கொள்வோம்.நாம் தமிழராய் திகழ்வதில் பெருமிதம் கொள்வோம்

நான் சீமானோடு நிற்கிறேனா..??

மனிதனின் மிகப்பெரிய பலமும், பலவீனமும் அவனது மறதி தான் என்கிறார் எமர்சன். எத்தனையோ வலிமிக்க நினைவுகளை, காயங்களை மனித மனம் மறதி என்கின்ற மருந்தினால் காலத்தின் துணைக் கொண்டு ஆற்றுப் படுத்துகிறது. ஆனாலும் சில நினைவுகள் வாழ்நாள் முழுக்க நம்முள் அழிக்கமுடியாத படிமமாய்பதிந்து கிடக்கின்றன.குறிப்பாக அண்ணன் சீமான் பற்றிய நினைவுகள் கடந்த சில நாட்களாக என் நெஞ்சில் அலை மோதிக் கொண்டிருக்கின்றன.

எதனாலும் மறக்கமுடியாத அந்த 2009 இன அழிவு நாட்களும், அந்த நாட்களில் அண்ணன் சீமான் அவர்களின் வகி பாத்திரமும் மறக்கமுடியாத காலத்தால் கடக்க முடியாதவை.உண்மையில் சீமான் தனி மனிதனாகத் தான் வந்தார். அவர்தான் முன்னால் நின்றார்.ஐந்து முறை தொடர்ச்சியாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறைப்பட்டு, அடக்குமுறைகளுக்கு உள்ளாகி, தனது வருமானத்தை இழந்து, எதிர்காலத்தை அழித்து, உதிரமென தன் உடலில் வழிகிற வியர்வையால் அவர் கட்டியெழுப்பிய வலிமையான கோட்டை தான் நாம் தமிழர் கட்சி.இதில் எங்கள் எவருக்கும் பங்கு இல்லை. அவரோடு நாங்கள் நிற்கவில்லை. சொல்லப்போனால் அவர் நின்றிருந்த காலங்களில் நாங்கள் இல்லவே இல்லை. அவர் முன்னால் நின்றார். சிறைப்பட்டார். வதைப்பட்டார். தெருத்தெருவாய் அலைந்து முழங்கித் தீர்த்தார். பிறகுதான் நாங்கள் பின்னால் போய் நின்றோம். அப்போதும் அவர் முன்னால் தான் நின்றார்.இப்போதும் அவர் முன்னால் தான் நின்று கொண்டிருக்கிறார்.

ஏதேதோ ஊர்களில், முகமற்ற, முகவரியற்ற எங்களை எல்லாம் தேர்ந்தெடுத்து, பயிற்சி கொடுத்து, தான் அடைந்த வெளிச்சத்தில் எங்களுக்கும் பங்கு கொடுத்து, எங்களை மேடையேற்றி, தன் நேரத்தை எங்களுக்கு தாரைவார்த்து எங்கள் ஒவ்வொருவரையும் அண்ணன்தான் உருவாக்கினார்.என்னைப் புகழ்ந்து பேசாதே. பேச வந்த கருத்தினைத் தெளிவாக பேசு.வாழ்க முழக்கம் போடாதே. தேசியத் தலைவரைப் போற்று.சால்வை அணிவிக்காதே‌. புத்தகங்கள் அளித்து அறிவினை விரிவு செய் என எங்களுக்கு வகுப்பெடுத்த எங்களது ஆசான் அண்ணன் சீமான்.ஐநா மன்றம் வரை எங்களில் பலரை அவர்தான் அனுப்பி வைத்தார். பேச வைத்தார். வெளிச்ச வீதிகளில் எங்களை உலவ வைத்தார். புகழ் மழையில் எங்களை நனைய வைத்தார். அனைத்தும் அவர் எங்களுக்கு அளித்தது.அவருக்கான மேடையில் எங்களுக்கு இடம் அளித்தார். எங்களைப் பேச வைத்து அழகு பார்த்தார். நாங்கள் ஒவ்வொருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது அவரது கண்கள் பெருமிதத்தால் ஒளிரும். அது தாய்மைக்கே உரிய பண்பு. எங்களை அவையத்து முந்தி இருக்கச் செய்துவிட்டு, நான் தலைவர்களை உருவாக்க வந்த எளியவன் என தன்னைத்தானே அவர் அறிவித்துக் கொண்டார்.

இப்போது புதிதாக “சீமானோடு நிற்கிறோம்” என்றெல்லாம் முழக்கங்கள் கேட்கின்றன. மனசாட்சியைத் தொட்டுச் சொல்லட்டும். நாம் சீமானோடு நின்றோமா… அவரைப்போல சிறைப்பட்டு வாழ்வினை இழந்து வதைபட்டோமா..அவரைப்போல் வழக்குகள் வாங்கி நீதிமன்றம் நீதிமன்றமாக அலைந்து கொண்டிருக்கிறோமா…உண்மையில் மனசாட்சி என்ற ஒன்று நமக்கு இருந்தால் அது சொல்லும்.நாம் சீமானுடன் நிற்கவில்லை. சீமான் பின்னால் நின்றோம் என.அனைத்து வதைளையும் அவர் வாங்கிக் கொண்டு சிறகுகளால் பொத்தி பாதுகாக்கப்பட்ட கோழிக்குஞ்சுகள் போல தாய்க்கோழியாய் நம்மை பாதுகாத்த அவரது தாய்மையை வார்த்தைகளால் விவரிக்க முடியுமா..நாம் மட்டும்தான் கட்சியில் இருக்கிறோமா..

எங்கோ சுடு பாலைவனத்தில் எண்ணெய்க் கிணற்றில் நின்றுகொண்டு, குளிர் மிகுந்த நாட்டில் நட்ட நடு இரவில் ஒரு விடுதியில் வேலை பார்த்துக்கொண்டு, இன்னும் எங்கெங்கோ தொலைதூர நாடுகளில் அடையாளங்கள் தெரியாத மனிதர்களாக வாழ்ந்து கொண்டு சொந்த ஊரில் புலிக்கொடி ஏற்றியதை பற்றியும், அண்ணன் சீமானை பற்றியும் பேசிக் கொண்டிருப்பவர்களின் நம்பிக்கையை “ஊடகங்கள்” மூலம் உடைக்க நினைப்பதை நாம் எப்படி ஏற்பது..??நமக்கு என்ன உரிமை இருக்கிறது.. மேடை போட்டு கொடுத்தார்கள். மக்களைத் திரட்டி நிறுத்தினார்கள். அது அனைத்தும் அண்ணன் சீமானுக்காக.. தலைவர் பிரபாகரனுக்காக.நாம் ஏறிப் பேசியதை தவிர , வெளிச்சத்தில் நின்றதை தவிர நாம் செய்த வேலை என்ன..??அமைதியாக ஒரு காலகட்டத்தை கடந்து இருந்தால் அனைத்துமே சரியாகி இருக்குமே.. அதை உணர்ந்து தானே அண்ணன் மௌனமாக இருந்தார். அந்த மௌனத்திற்கு பின்னாலும் அவர் சுமந்த வலிகளை‌ நாம் அறிவோமா..?? எத்தனையோ நாடுகளுக்கு அவர்தானே அனுப்பினார்.. நம்பிக்கைகளோடு நம் தம்பிகளும் வளரட்டும் என நம்மைக் கைபிடித்து அழைத்துச் சென்று அனுப்பி வைத்தவர் அண்ணன்தானே..அண்ணனை மிக இழிவுபடுத்தி சுந்தரவள்ளி, சவுக்கு சங்கர் மற்றும் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டோர் மூலமாக மூன்றாம்தர சொற்களில் வந்த விமர்சனங்களுக்கு, வசவுகளுக்கு மௌனத்தாலும், “மரியாதைக்குரிய” சொற்களாலும் விருதளித்து மகிழ்ந்தவர்கள் யார்..??ஜூனியர் விகடனில் அண்ணனை மிக இழிவுபடுத்தி வந்த அந்த மூன்று பக்க மொட்டை கடிதத்திற்கு நேர்மையோடு நாம் ஆற்றிய எதிர்வினை என்ன..?? அண்ணனையும், அமைப்பையும் நேசிப்பவர்களாக இருந்தால் அண்ணனைப் பற்றி இழிவுபடுத்திய அந்தக்கடிதத்தோடு உடன்படுகிறேன் என்ற வார்த்தைகள் உள்ளே இருந்து வந்திருக்குமா..??கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் புகழுரைகள் நம்மை புகழ்வதை காட்டிலும்,அண்ணனை இழிவுபடுத்துகிறது என்று நாம் சிந்தித்திருந்தால் அவர்களுடன் ‘எனக்கு பிடிச்சிருக்கு’ என இணைந்து நின்று இருப்போமா..கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை. சரி.விலகவும் இல்லை. சரி .ஒரு உட்கட்சி உரையாடலாக, நமக்குள் இருக்கிற ஒரு பிரச்சினையை பொது வெளிக்குக் கொண்டு வந்து ஊரறிய செய்வதன் உள்நோக்கம் என்ன..??நமக்கு எத்தனை வாய்ப்புகளை அண்ணன் கொடுத்தார்..?? எத்தனை இரவுகளில் நமக்கு அவர் எத்தனை மொழிகளில் அறிவுறுத்தினார்..??

நமது ஆன்மா நேர்மையானதாக இருந்திருந்தால் இந்த நேரத்தில் நாம் பேசாமல் அமைதியாக இருந்திருப்போம். கடந்திருப்போம்.சொல்லப்போனால் அவைகளே பிரச்சனைகளை தீர்க்கின்ற வழிகளாக கூட அமைந்திருக்கும். உலகத்தில் தீர்க்க முடியாத பிரச்சினை என்ற ஒன்றே இல்லை. ஒன்றே ஒன்று இருக்கிறது. அது “தான்” என்ற எண்ணம். எல்லா நேரத்திலும் நாம் பேசும் பொருளாக இருக்க வேண்டிய அவசியமில்லை. கால ஓட்டத்தின் சில தருணங்களில் நாம் அமைதியாகத்தான் இருக்கவேண்டும். அந்த அமைதி தான் அந்த சூழலுக்கான பதில் என்கிற பக்குவம் அண்ணனிடம் இருந்தது. நம்மிடம் இருந்ததா..??இந்தப் பதிவையும் நான் எழுதுவதற்கு ஒரு வேளை அண்ணன் சீமான் என்னை கண்டிக்கக் கூடும். ஆனாலும் இனிமேலும் பேசாமல் இருப்பது என்னை நானே தற்கொலை செய்து கொள்வதற்கு சமமாகும்.

2011 நாகப்பட்டினம் இளைஞர் பாசறை மேடை எனக்கு நினைவுக்கு வருகிறது. எந்த அடையாளமும் இல்லாத நம்மை முன்னிறுத்தி “இதோ இவர்கள் என் தம்பிகள்” என நம்மை அறிமுகப்படுத்திய அந்தத் தாய்மைக்கு முன்னால் என்றென்றும் பற்றுறுதியோடு நிற்பது ஒன்றும் தவறல்லவே. அது என் பிறப்பின் கடமை. பெருமை.அழைத்துப் பேசி இருக்கலாமே என சிலர் சொல்கிறார்கள். எத்தனை முறை அண்ணன் நம்மிடம் எடுத்துச் சொல்லி இருப்பார்.. ஒவ்வொரு முறையும் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டோர் அண்ணனை இகழ்ந்து எழுதும் பதிவுகள் குறித்து அந்த நேரத்தில் எழுதப்பட்ட விளக்கம் என்ன..?? அந்தப் பதிவு எழுதியவர்கள் அனைவரும் மறுபுறம் யாரை புகழ்ந்து எழுதினார்கள் என்பது உலகத்திற்குத் தெரிந்ததுதான். அப்படி புகழ்ந்து எழுதும் போதும் கூட என் அண்ணனைப் பற்றி எழுதாதே என்று‌ ஒற்றை வார்த்தை வந்திருக்குமா..??இன்னும் எழுதிக் கொண்டே போகலாம். இனி பேசி ஒன்றும் இல்லை. அண்ணனும் மனிதர்தானே. நம்மை தம்பிகளாக அவரும் தானே தாய்போல உயிரென நேசித்தார்.. அவருக்கும் மனது இருக்கிறதே.. வலிக்கும் தானே.. எத்தனைதான் அவரும் தாங்குவார்..??அதனால்தான் அவர் அமைதியாகிப் போனார்.

என்னைப் பொறுத்தவரையில் அவரது அந்த அமைதி மிகுந்த மரியாதைக்குரியது. கண்ணியமும், கவனமும் கொண்டது.நான் பெற்ற உயரம், நான் அடைந்த வெளிச்சம் அனைத்தும் அண்ணன் சீமான் தந்தது. அவர்தான் என்னை உருவாக்கினார். அவரைத் தவிர நான் நம்பிக்கை கொள்வது எதுவும் இல்லை.மீண்டும் மீண்டும் என்னை நானே உறுதிப்படுத்திக்கொண்டு,என் ஆன்மாவின் அடி ஆழத்திலிருந்து சொல்கிறேன்.நான் ஒருபோதும் அண்ணன் சீமானோடு நிற்கவில்லை.அவர் பின்னால் நிற்கிறேன்.

நாம் தமிழர்.

ஏனெனில் நாங்கள் நாம் தமிழர்..

❤️

நாம் தமிழர் பிள்ளைகள் எல்லோரும் கோபமாகப் பேசுகிறார்கள், சீமான் இளைஞர்களது உணர்ச்சிகளை தூண்டி அரசியல் செய்கிறார், நாம் தமிழர் இளைஞர்கள் அரசியலை போர்க்களமாக பார்க்கிறார்கள், மற்ற அமைப்பினரோடு இணைந்து இயங்க மறுக்கிறார்கள், எவருடனும் சேராமல் தனித்து நிற்கிறார்கள், வலைதளங்களில் ஆக்ரோஷமாக எழுதுகிறார்கள்.. என்றெல்லாம் ஏகப்பட்ட விமர்சனங்கள் நம் மீது தொடர்ச்சியாக வந்து கொண்டே இருக்கின்றன.11 ஆண்டுகளாக ஊர் ஊராக இரவும் பகலும் அலைந்து திரிந்து ஒரு தேசிய இனத்தின் கனவாக ஒரு அமைப்பையே கட்டியெழுப்பி உறுதியான கோட்டையாக, தன் வாழ்வினையே விலையாகக் கொடுத்த ஒரு அண்ணனும், அவனது எளிய தம்பிகளும் கட்டி எழுப்பியிருக்கிறார்கள் என்றால்.. நம்பிக்கையின் உதிரம் பாய்ச்சப்பட்டு இருக்கிற அந்த இலட்சியக் கோட்டையினை புரளி பேசி, அவதூறு எழுதி, சத்தற்ற பொல்லாங்கு இறுமல்களால் சரித்து விடலாம் என்றால்.. சாத்தியமா என்ன..???நமது அமைப்பில் இருக்கும் சிலருக்கே இதுபோன்ற சந்தேகங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு புன்னகையோடு சில பதில்களை அளிப்போம்.

????

தான் அடிமை என உணர்ந்த ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்கான விழிப்பும், எழுச்சியும் நீங்களெல்லாம் நினைப்பது போல அவ்வளவு நாகரீகமாகவும்,நாசூக்காகவும் இருக்காது தான்.இதுவரை மொட மொட வெள்ளைச்சட்டைப் போட்டுக் கொண்டு சட்டைப்பையில் கட்சித் தலைவன் படத்தை வைத்துக்கொண்டு பெரிய பெரிய கார்களில் பவனி வந்து, பிளக்ஸ் அடித்து,போஸ்டர் அடித்து வட்டம்,நகரம்,ஒன்றியம் ,கட்டம், சதுரம் என பொறுப்பு வாங்கி பஞ்சாயத்து பண்ணுவதுதான் அரசியல் என்பதை தலைகீழாக மாற்றத் துடிக்கும் படித்த இளைஞனின் அரசியல் அவ்வளவு பரவசமாக இருக்காது தான்..வீழ்ந்த கதையை அறிந்து,. வீழும் நிலையை உணர்ந்து,இனி எழ வேண்டிய நிலை அறிந்து பதவி,பட்டம்,பணம் என எதையும் எதிர்பாராமல் உடல் முழுதும் வியர்வை வழிய வீதி தோறும் அலைந்து எளிய மக்களின் புரட்சியை வரலாற்றின் பொன்னேடுகளில் பொறிக்க உழைப்பவர்களின் உழைப்பு அவ்வளவு உவப்பானதாக இருக்காது தான்.உள்ளன்போடு தாய் மண்ணை நேசித்து, உதிரம் வழிய இறந்த உடன் பிறந்தவர்கள் நினைவை சுமந்து, இனம் அழிய உடன் நின்ற துரோகிகளுக்கு இனி எழ முடியாத வீழ்ச்சியை அளித்து, எதிரிகளின் பகை முடிக்க விலை தலையே ஆனாலும் தரத்துடித்து, இனம் அழிந்த வலி ஈந்த கடும் சினத்தையே அரசியல் மூலமாகக் கொண்டு ,மூர்க்கமாக நிற்கும் எங்களின் எழுத்தோ,கருத்தோ,பேச்சோ, மூச்சோ நீங்கள் நினைக்குமளவிற்கு அவ்வளவு மென்மையானதாக இருக்காது தான்.இதுவரை இருந்ததே இனிமேலும் இருக்க வேண்டும்.. அதே துருப்பிடித்த உங்களது தகர தத்துவம்,அதே நீர்த்துப் போன உங்களது வாய்க்கரிசி வாக்குறுதிகள், அதே யாருக்கும் பயன் படாத பட்டுப்போன வசனங்கள்,அதே காலத்தை கடத்தும் உங்களது தவறுகள் இன்னும் இனி வரும் தலைமுறைக்கும் நீடிக்க வேண்டும் என்ற உங்களது ஆத்மார்த்த பிராத்தனைகளுக்கு வெடிகுண்டு வைக்கும் எங்களை உங்களால் சற்றும் சகிக்க முடியாதுதான்..எங்களைப் போன்றே எங்கள் அண்ணன் சீமானும் தானே வளர்ந்து, தானே நிமிர்ந்தவன் தான்.. ஒரு காட்டு மரம் போல.. தன்னிச்சையாக வளர்ந்து நிற்பவன் தான்.. புயல் காற்றே வீசினாலும் வளைய மறுப்பவன்தான்.. வணங்க மறுப்பவன்தான்.. அவனுக்கு சமரசம் இல்லாத போரியியல் பண்பினை அவனுக்கு அவன் அண்ணன் பிரபாகரன் தந்தது. அதை அவன் தன் தம்பிகளுக்கு வழங்கி வருகிறான். மக்கிப்போன உங்கள் அரசியல் தத்துவங்களுக்கு இதையெல்லாம் காண முடியாதுதான்..முடியாது தான்..முடியாது தான்எங்களது உடையும்,எங்களது படையும் உங்களை வெறுப்பேற்றும் தான்..எங்களது அண்ணனின் மொழியும்,எங்களது வழியும் உங்களை உறங்க விடாது தான்..எங்களது தர்க்கமும்,எங்களது தத்துவமும்உங்கள் கோட்டைகளை தகர்க்கும் தான்..ஆமாம் . திட்டமிட்டுதான் நகர்கிறோம்.வன்மம் கொண்டுதான் வளர்கிறோம்.முடிந்தால் எதிருங்கள்.இல்லையேல் நகருங்கள்.எதுவும் முடியவில்லையா..இப்படியே உங்கள் மனதிற்குள்ளாகவேபதறுங்கள்.கதறுங்கள்.ஏனெனில் நாங்கள் வானையே உரசவளரும் சிகரங்கள்.நாம் தமிழர்.

????

சீமான் என்றொரு காலம்.

❤️
❤️

ஒரு விடியலின் வெளிச்சப் பாய்ச்சல்அவன்.எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டு என்பதை அவன் உணர்ந்து தான் இந்த இடத்தில் நிற்கிறான்.இந்தப் பத்தாண்டுகளில் அவன் கொடுத்த விலை… அவன் தான். தன்னையே விலையாகக் கொடுத்து இந்த இடத்தில் இருக்கிறான்.கடும் உழைப்பினால் அணுஅணுவாய் தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு ஒரே சமயத்தில் சிற்பியாகவும், சிற்பமாகவும் அவனேநிற்கிறான்.ஒரு பத்தாண்டு காலத்திற்கு முன்பாக இந்த இடத்தில் அவன் நிற்பான் என கண்டிப்பாக அவனே நினைத்துக்கூட பார்த்ததில்லை. ஆனாலும் உறுதியாக பத்தாண்டுகளாக நின்று கொண்டே இருக்கிறான். எவரிடத்திலும் கூட்டு இல்லை. தனித்து துணிவோடு சமரசம் இல்லாமல் சண்டை போடுகிறான்.பத்தாண்டுகளுக்கு முன்னால் தலைவர் பிரபாகரன் படத்தை வைத்திருந்தாலே பயந்து ஒளிந்த காலம் ஒன்று இருந்தது. அவன்தான் அந்தக் காலத்தை தனி ஒருவனாக மாற்றினான்.பிள்ளையார் ஊர்வலங்கள் நடைபெற்று காவி தேசமாய் போன ஒரு நிலத்தில் அவன் முருகனை முப்பாட்டன் என முழங்கினான். கால வீதியில் புறக்கணிக்கப்பட்ட அந்த முருகனைத்தான் இப்போது பிள்ளையாரை தூக்கி சுமந்த கரங்கள் கூட தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. ஆம்… தூக்கிப் பிடித்தாகத்தான் வேண்டும். அந்த நிலையை அவன் உருவாக்கி விட்டான். தமிழ் பேசினாலே தரக்குறைவு என்று எண்ணி தலைகுனிந்த நிலத்திலே, தமிழ் பேசினால் தான் தலைநிமிர்வு என்று மாற்றினான். ராஜீவ் காந்தியைக் கொன்று விட்டார்கள்.. கொன்றுவிட்டார்கள்.. என்று பழித் தூற்றி, குற்ற உணர்வு கொள்ளச் செய்து எங்கள் உறவுகள் துடிக்க துடிக்க கொல்லப்பட்டபோது நாங்கள் வாய்மூடி மௌனமாக, கைக்கட்டி, வாய்ப் பொத்தி இருந்த ஒரு காலம் ஒன்று இருந்தது.எங்கள் தலைவன் பிரபாகரன். யார் அந்த ராஜீவ் காந்தி..?? என்று கம்பீரமாக குரலெழுப்பி.. ஆமாம் இப்போது என்ன அதற்கு.. என அவன்தான் முதலாவதாக தலை நிமிர்ந்தான்.இன்று அவனைப் போல் தலைநிமிர்ந்த ஒரு தலைமுறையையே அவன் மிகுந்த திட்டமிட்டு உருவாக்கி வைத்திருக்கிறான். இனி தமிழ் மொழியைப் பற்றி, தமிழர் வரலாற்றைப் பற்றி, இழிவாகப் பேசினால் தமிழ்நாட்டில் வாழ முடியாது என்ற நிலையை ஏற்படுத்தி இருக்கிறான்.மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ, எட்டு வழிச்சாலை, என்றெல்லாம் எங்கள் மண் அழிக்கப்படும் போதெல்லாம் அவன் மக்கள் மன்றங்களில் போராட்டமாய் வெடித்தான்.ஐபிஎல் மைதானத்தில் புலிக் கொடி பறந்தது.எம்மை தாக்கிய சிங்களவனுக்கு இந்த நிலத்தில் அடி விழுந்தது. சிறைகள் குறித்தோ, வழக்குகள் குறித்தோ, அச்சப்படாத ஒரு புதிய தலைமுறை பிறந்தது.இத்தனைக்கும் பின்னால் அவன் மட்டுமே காரணமாக இருக்கிறான்.கம்பீரக் குரல் எடுத்து பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு முன்னால் “பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறந்தது. சிறுத்தையே வெளியே வா..”என அவன் சீறிய போது.. ஆதி வனத்தில் உறுமும் புலியைக் கண்டோம்.கெஞ்சுவதில்லை பிறர்பால்.. அவர் செய் கேட்டினிற்கும் அஞ்சுவதில்லை. மொழியையும் நாட்டையும் ஆளாமல் துஞ்சுவதில்லை.. எனப் பாவலரேறுத் தமிழை அவன் முழங்கிய போது எதிரே எதிரியாக கூட யாரும் எஞ்சுவதில்லை.எல்லாவித புயல், மழைகளுக்கும் நடுவே எதற்கும் அஞ்சாது , கொட்டும் மழையில் கலையாது கூட்டம் நடத்தி.. அனல் பறக்க செய்தான்.இதுவரை இந்த தமிழர் நிலம் பார்த்திராத மனவுறுதியை அவன்தான் ஒரு வாழ்வியலாக எங்களுக்கு கற்பித்தான்..பொங்கி ஆர்ப்பரிக்கும் அலைகளுக்கு நடுவே படகோட்டி பழகியவன் அவன். சாதாரண பத்தாண்டுகள் அல்ல. இதுவரை நடந்த சரித்திரத்தையே புரட்டிப்போட்ட அந்த கிராமத்து எளிய மனிதனின் அசாதாரண சாதனை நாட்கள் அவை..

❤️

இன்று உறுதியில்அவன் ஒரு ராஜகோபுரமாய் நிமிர்ந்து நிற்கிறான்.எப்போதாவது வீசுகின்ற காற்றில், உயர பறக்கின்ற அவதூற்று சருகுகள் கோபுர உச்சியினை தொட்டுவிட முயற்சிக்கின்றன.ஆனால் கோபுரத்தின் சிகரமோ.. நம்பிக்கையின் வானத்தை தான் முத்தமிட்டு கொண்டு நிற்கிறது.ஆம்.சீமான் என்பவன் தனி மனிதனாக இருந்த காலம் முடிந்து போய்விட்டது.அவன் ஒரு காலத்தை உருவாக்கிவிட்டான்.அந்தக் காலமும் அவன் தான்.இனி..களமும் அவன் தான்.புழுதிக் காற்றினால் பூபாளம் பாடும்புதிய விடியல் ஒன்றின் வெளிச்சப் பாய்ச்சலை தடுத்து விட முடியுமா என்ன..???

❤️

நம்மை வழிநடத்தும் நம் அண்ணனின் சொற்கள்..

விவாதங்களில் பலவகை உண்டு என நான் அறிந்திருக்கிறேன். எந்த வகை விவாதங்கள் என்றாலும்‌ ஏதோ சிலவற்றைக் கற்றுக் கொள்வதற்கான வழிகளாகவும், பகிர்ந்து கொள்வதற்கான முறைகளாகவும் தான் கடந்த சில ஆண்டுகள் வரை விவாதங்கள் நிகழ்ந்து வந்தன. கடந்த 2009ஆம் ஆண்டிற்குப் பிறகு ஏற்பட்டிருக்கிற தமிழ் தேசிய எழுச்சி சமூக வலைதளங்களிலும் பிரதிபலிக்க, ஆட்சியிலும், அதிகாரத்திலும், கருத்து தளத்திலும், அறிவுத் தளத்திலும் அதுவரை “ஒரே அடியாளாக” இருந்த திராவிடக் கருத்தாக்க ஆதரவு கூட்டத்திற்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது. கட்டமைத்து வைத்திருக்கிற கனவுக் கோட்டை எங்கிருந்தோ வந்த எளிய இளைஞர்களால் செங்கல் செங்கலாக பெயர்க்கப்படும் என்பதை அவர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. எனவே அவர்களிடம் வழக்கமாக இருக்கும் அவர்களுக்கே உரித்தான கலையான அவதூற்று வசவுகள் மூலம் இந்த விவாதங்களை எதிர் கொள்ளத் தொடங்கினார்கள்.திராவிட ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் நடக்கும் விவாதங்களை “வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம் மேடைகளாக” மாற்றத் தொடங்கினார்கள். அதற்கு பதில் அளிக்கிறேன் என்று முறையில் சில இளைஞர்களும் இறங்கத் தொடங்க “அறிவார்ந்த பரிமாறல்”என்கிற முறையில் நிகழ்ந்து வந்த விவாதங்கள் வசவுகள் கணக்கு வழக்கின்றி வாரி இறைக்கப்படும் வெறும் கூச்சல்களாக மாறிப்போயின.இப்போதெல்லாம் திட்டமிட்டு விவாதங்கள் சில பல “கணக்குகளோடு” உருவாக்கப்படுகின்றன. நாம் தமிழர் கட்சி பெரியாரைப் பற்றி எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டு இருக்கிறது என்பதை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்கள் ஏற்கனவே பலமுறை மிகத்தெளிவாக அழுத்தம் திருத்தமாக விவரித்திருக்கிறார்.ஆயினும் இது போன்ற விவாதங்கள் தொடர்ச்சியாக உருவாக்கப் படுவதன் “அரசியலை” முதலில் நாம் கற்றுணர வேண்டியிருக்கிறது. இது நோய் தொற்றுக் காலம். தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இளைஞர்கள் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் அளித்தல், கபசுர குடிநீர் வழங்கல் போன்றவற்றைச் தொடர்ச்சியாக செய்து வருகிறார்கள். இந்த மூன்று மாதங்களில் தொடர்ச்சியாக கட்சியில் பல்லாயிரக்கணக்கான நபர்கள் இணைந்து வருகிறார்கள் என்பதை தகவல் தொழில்நுட்ப பாசறை புள்ளிவிபரங்களோடு வெளியிட்டிருக்கிறது. சாத்தான்குளம் படுகொலைகள் இயல்பான எளிய மனிதர்களையும் பதட்டத்திற்கு உள்ளாகியிருக்கிறது.அதிகாரம் நிகழ்த்தியிருக்கிற இந்த ஆணவ படுகொலைக்கு எதிராக வீதிகளில் இறங்கி தனிமனித இடைவெளி யோடு, முகக் கவசம் உள்ளிட்ட நோய்த்தொற்று கட்டுப்பாட்டோடு நமது இளைஞர்கள் போராடி வருகிறார்கள்.இதையெல்லாம் விட்டுவிட்டு நம்மை நாமே பாதுகாத்துக் கொண்டு மக்களோடு இணைந்து களங்களில் நிற்கிற இக்காலகட்டத்தில் பெரியார் பற்றிய விவாதங்கள் திட்டமிட்டு, பல்வேறு கணக்குகளோடு, உருவாக்கப்படும் திசை திருப்பல் களாகவே காணமுடிகிறது. திராவிட கட்சிகள் இன்று மக்களோடு அன்னியப்பட்டு நிற்கின்றன. அதனால் அவர்கள் “கடந்த காலங்களின் பெருமிதங்களை(?)” தூக்கிக் கொண்டு விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.வெளிச்சங்கள் தேவைப்படுவோருக்கு வேண்டுமானால் இந்த விவாதங்கள் பயன்படலாம்.ஆனால் நமக்கு அப்படி அல்ல. நாம் நிகழ்காலத்தின் மைந்தர்கள். மக்களோடு நிற்பவர்கள். கட்சியின் தத்துவ நிலைப்பாடுகளை கட்சியின் தலைமை அறிவிக்கும். ஏற்கனவே அறிவித்தும் இருக்கிறது. இதில் தனிநபர்கள் விவாதித்துக் கொள்ளவோ, சண்டை போட்டுக் கொள்ளவோ ஏதுமில்லை. எனவே நமது உறவுகள் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் இந்த நோய்த்தொற்று காலத்தில், பாதுகாப்பாக இருந்துக்கொண்டு அலைபேசி வாயிலாக அவரவர்களால் முடிந்த அளவிற்கு கட்சி வளர்ச்சிப் பணிகளை தொடர்ச்சியாக எடுத்துச் செல்வோம். சமூக வலைதளங்களில் ஏற்படும் அர்த்தமற்ற கடந்த காலங்கள் குறித்தான விவாதங்கள் கடந்த கால “பெருமிதங்களில்” (?) வாழ்கிற திராவிட ஆதரவாளர்களுக்கு வேண்டுமானால் பயன்படலாம். நமக்கு வேறு வேலை இருக்கிறது. இன்னும் நேர்மையாக அண்ணன் சீமான் சொற்களில் இருந்து நாம் அறிந்து கொள்வது என்னவென்றால்.. “நல்ல பழங்களைக் கூட நாம் முழுமையாக உண்பதில்லை. தோலை சீவி விதைகளை நீக்கி பிறகுதான் உண்கிறோம்.நம் பலவற்றிலும் முரண்படுகின்ற ஹிட்லர், முசோலினி போன்றவர்களிடம் கூட நல்ல கருத்துக்களை எடுத்துக் கொள்கிறோம். “பாதை இல்லை என வருத்தப்படாதே.. இறங்கி நட.. அதுவே பாதையாகி விடும்.” என்கிறார் ஹிட்லர். நம் உயிர்த் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் “பாதையை தேடாதே.. உருவாக்கு” என்கிறார்.விவேகானந்தர் போன்ற நமக்கு கருத்து முரண்கள் உள்ள பெரியோர்களிடம் கூட எடுத்துக் கொள்ள வேண்டிய நல்ல கருத்துக்கள் இருக்கின்றன.எல்லா மனிதர்களிடமும் இருந்து எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தேவையானதை எடுத்துக் கொண்டு தேவையற்றதை தவிர்ப்பதுதான் அறிவுடைமை. அது ஐயா பெரியார் அவர்களுக்கும் பொருந்தும். இதைப் புரிந்துகொள்ளாமல் தேவையற்ற விவாதங்களில் நம்மை சிக்க வைத்துக்கொள்ளக்கூடாது. “நம் திறமைகளை வளர்த்துக்கொள்ள, நல்ல புத்தகங்களை வாசிக்க, நல்ல திரைப்படங்களை தேடி தேடி கண்டு தரிசிக்க, எழுத்து திறமையை வளர்த்துக்கொள்ள கவிதை, கட்டுரை போன்றவற்றை எழுதப் பழக இந்த ஓய்வு காலத்தை பயன்படுத்துவோம். உடலை உறுதி செய்ய உடற்பயிற்சி என்பதை வாழ்நாள் பழக்கமாக்க முயற்சி செய்வோம். மன உளைச்சல்கள், தேவையற்ற அழுத்தங்கள் ஏற்படுத்தும் எல்லாவற்றிலும் இருந்து தள்ளி நிற்போம்.இதனடியில் சில மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற தகவல் தொழில்நுட்ப பாசறை கருத்தரங்கில் அண்ணன் சீமான் அவர்கள் ஐயா பெரியார் குறித்த தனது நிலைப்பாட்டினை தெளிவாக அறிவித்த உரையின் எழுத்து வடிவம் இருக்கிறது. இத்தோடு முடிப்போம்.. இதனையும் கடப்போம்.******தகவல் தொழில்நுட்பப் பாசறை கூட்டத்தில் அண்ணன் பேசியது! ( நன்றி: தமிழினியாள்.)பெரியாரை எதிர்க்கிறோமா?நம்மை பெரியாருக்கு எதிரியாகக் கட்டமைக்கிறார்கள். திராவிடக் கட்சிகளும், ஆட்சிகளும் இம்மண்ணுக்கு விளைவித்த வஞ்சகங்களையும், துரோகங்களையும் பேசுவதால் நம்மைப் பெரியாருக்கு எதிரியாக மடைமாற்றுகிறார்கள். தகப்பன் என்பவன் பெற்றவனாக இருக்க வேண்டும். தலைவன் என்பவன் இரத்தவனாக இருக்க வேண்டும். எனது மொழி புரியாதவன் எனக்கு இறைவனாக இருக்க முடியாது. எனது வலி உணராதவன் எனக்குத் தலைவனாக இருக்க முடியாது. இது நாம் தமிழர் கட்சியின் கொள்கை முடிவு. உலகெங்கும் ஒடுக்கப்பட்டு அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் விடுதலைக்கு, உரிமைக்கு, மேம்பாட்டுக்குப் போராடிய அத்தனைப் பேரையும் நமது வழிகாட்டியாக ஏற்கிறோம். மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், ஏங்கல்ஸ், இங்கர்சால், சாக்ரட்டீஸ், அரிஸ்டாட்டில், பிளேட்டோ, புத்தன், பூலே, மாசேதுங், பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா உள்ளிட்ட யாவரையும் நமது பெருமைக்குரிய வழிகாட்டியாக ஏற்கிறோம். அதனைப் போலவே, அறிவாசான் அம்பேத்கரையும், ஐயா பெரியாரையும் பெருமைக்கும், வணக்கத்துக்குரிய வழிகாட்டியாக ஏற்கிறோம். அண்ணல் அம்பேத்கரை வழிகாட்டியாக ஏற்கிறோம். ஆனால், நமது தாத்தா அயோத்திதாசப்பண்டிதரையும், தாத்தா இரட்டைமலை சீனிவாசனையுமே தலைவராக ஏற்கிறோம். மாமேதை மார்க்சை வழிகாட்டியாக ஏற்போம். ஆனால், நமது இனத்தைச் சேர்ந்த ஜீவானந்தத்தையும், சிங்காரவேலரையும், நல்லக்கண்ணுவையுமே தலைவராக ஏற்போம். சேகுவேராவை நான் கொண்டாடுகிறேன். பிடல் காஸ்ட்ரோவைப் புகழ்ந்துப்போற்றுகிறேன். ஆனால், தலைவர் பிரபாகரன்தான் எனக்குத் தலைவர். ஆகவே, ஐயா பெரியாரை தமிழ்த்தேசியத்தின் எதிரியாகவும் கருதவில்லை; தமிழ்த்தேசியத்தின் தலைவராக ஏற்கவுமில்லை என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.கற்றதைப் பற்ற வையுங்கள்!**********************************எது நல்லதோ அதனை எடுத்துக் கொள்வதும், எது அல்லதோ அதனைத் தவிர்த்துவிடுவதும்தான் அறிவு. இணையத்தில் நாம் எழுதுகிறபோது மிகுந்த கண்ணியத்தோடும், கவனத்தோடும் கருத்துகளைப் பதிவுசெய்ய வேண்டும். நாம் பிரபாகரன் எனும் மனிதப்புனிதரை தலைவராக ஏற்றிருக்கிறோம். நாம் கண்ணியக்குறைவாகப் பதிவு செய்தால் அவரின் பெயரைச் சொல்வதற்கே தகுதியற்றவர்களாகிவிடுவோம். நான் எனது தம்பிகளை சரியாக வழிநடத்தவில்லை என்றாகிவிடும். ஐயா வலம்புரிஜான் அவர்கள் கூறியது போல, “நமது எழுத்துக்கள் எடைக்குப் போடுவது போல இருக்கக்கூடாது. எடை போடக்கூடியதாக இருக்க வேண்டும்”. தேவையில்லாதவற்றை ஒருபோதும் எழுதாதீர்கள்! தவிர்த்துவிடுங்கள். அறிவிற்சிறந்த பிள்ளைகள் உங்களது அறிவும், ஆற்றலும் இனமேம்பாட்டுக்கும், மீட்சிக்குமே பயன்பட வேண்டும். ஆபிரகாம் லிங்கன் தனது மகனை பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டு ஆசிரியர்களுக்குக் கடிதம் எழுதுகிறபோது, “குற்றங்குறை சொல்வோரைப் புறந்தள்ளக் கற்றுக்கொடுங்கள்” என்று கூறுகிறார். அதனைத்தான் நானும் எனது தம்பிகளுக்குக் கற்றுக்கொடுக்கிறேன். தேவையற்றவற்றைப் புறந்தள்ளுங்கள். நற்செய்திகளையும், உயர்ந்த நெறிகளையுமே பதிவிடுங்கள். நல்லதொரு கவிதையைப் படித்தால் அதனைப் பதிவிடுங்கள். தினமும் ஒரு குறளைப் பதிவிடுங்கள். பாரதியார், பாரதிதாசன் கவிதைகளைப் பதிவிடுங்கள். பாவலேறு பெருஞ்சித்திரனார் பாக்களைப் பதிவிடுங்கள். ஆகப்பெரும் அறிஞர்கள் கூறியவற்றைப் பகிர்ந்துகொள்ளுங்கள். கற்றதைப் பற்ற வையுங்கள். தீயவற்றைத் தீயிடுங்கள். இணையத்தை நாம் தமிழர் வசமாக்குங்கள். இதுதான் சமூக வலைத்தளங்களில் நமது செயல்பாடாக இருக்க வேண்டும்-அண்ணன் சீமான்.எனவே திட்டமிட்டு கட்டமைக்கப்படும் விவாத வலைகளில் சிக்கிக் கொள்ளாமல் கட்சிப் பணிகளிலும், சமூகப் பணிகளிலும் நம் கவனத்தை செலுத்துவோம்.

இனியாவது பேசுங்கள்.

மீண்டும் ஒரு நிம்மதியற்ற இரவாக இந்த இரவு கழிந்து கொண்டிருக்கிறது. சாத்தான்குளம் தந்தை- மகன் படுகொலை செய்திகளை பார்க்கும்போது சத்தியமாக மனநிம்மதி கொள்ள முடியவில்லை. நானும் என் கவனத்தை திசை திருப்பிக் கொள்ள என்னென்னவோ செய்து பார்க்கிறேன். மீண்டும் மீண்டும் அதே காட்சிகள் நினைவுக்கு வந்து மனதை அலைக்கழிக்க செய்கின்றன.இதுபோன்ற கொடுமைகள் ஈழ நிலத்தில் நடந்ததாக சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். தந்தைக்கு முன்பாக மகனையும், தாய்க்கு முன்பாக மகள் மகனையும், பெற்ற பிள்ளைகளுக்கு முன்பாக பெற்றோர்களையும் கொடுமைப்படுத்தும் காட்சிகளை சிங்களப் பேரினவாத அரசு செய்வதாக நான் செவி வழி செய்திகளாக படித்திருக்கிறேன். அறிந்திருக்கிறேன். அதேபோன்ற நிகழ்வுகள் தமிழகத்திலும் நடைபெறாது என நம்பியிருந்தேன். இது ஜனநாயக நாடு. சட்ட மாண்புகளின் அடிப்படையில் அரசுகள் நடைபெறுவதாக நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிற பேச்சுரிமை, எழுத்துரிமை ,கருத்துக்களை பகிரும் உரிமை என பல்வேறு உரிமைகளின் வாயிலாக நமது சுதந்திர வாழ்வு கட்டமைக்கப்பட்டிருக்கிறது என நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அப்படியெல்லாம் இல்லை என்கின்ற உண்மையை இப்போது நாம் மெல்ல மெல்ல உணரத் தொடங்கி இருக்கிறோம். எந்த நேரத்திலும் உங்கள் குதத்தில் லத்திகள் திணிக்கப்படும் ஒரு நிலத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்கிற உண்மையை சாத்தான் குலத்தைச் சேர்ந்த தந்தை- மகன் ஆகிய 2 பேர் தங்களது உயிரை இழந்து உலகத்திற்கு அறிவித்திருக்கிறார்கள்.இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு எத்தனையோ மாறுதல்கள் இந்த நாடு சந்தித்து இருக்கிறது. ஆனால் காவல்துறை கட்டமைப்பில் மட்டும் இந்த நாடு இன்னும் ஆங்கிலேயர் காலத்திலேயே இருந்து வருவது என்பது சத்தியமான உண்மை. எத்தனையோ மனித உரிமை விழிப்புணர்வு ஏற்பட்ட இக்காலத்திலும் கூட ஒரு காவல் அதிகாரி நட்டநடு வீதியில் ஒரு பெண்ணை அறைந்ததில் அந்தப் பெண்ணின் காது சவ்வு கிழிந்து செவிடாகி போனதை நாம் ஒரு செய்தியாக கண்டு கடந்து போனோம்.. அணு உலைக்கு எதிராக அமைதியாக போராடிக்கொண்டிருந்த கூடங்குளம் மக்களை கடற்கரையில் வைத்து அடித்து, இழுத்து போனபோது.. சில அனுதாப முணுமுணுப்புகளும், அரசியல் சார்ந்து உப்புச்சப்பற்ற கருத்துக்களையும் தவிர நம்மிடத்தில் இருந்து எதுவும் வரவில்லை. பல வருடங்களுக்கு முன்பாக சிதம்பரத்தில் பத்மினி என்ற பெண் காவல் நிலையத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோது ஏற்பட்ட அதிர்வலைகள் சில வாரங்களில் அடங்கி அது ஒரு காலத்து செய்தி என்பதைத்தவிர வேறு எதுவும் நிகழாமல் அடங்கியது.எல்லா அநீதிகளும் ஒரு செய்தி என்கிற அளவிற்கு நவீன உலகத்தின் சமூக வாழ்க்கை நமது மனநிலையை மாற்றி வைத்திருக்கிறது. ஊடகங்களும் அடுத்தடுத்து வருகிற முக்கிய செய்திகளிலும், தற்போதைய செய்திகளிலும் கவனத்தை வைத்துக்கொண்டு ..அடுத்து ஏதாவது ஒரு செய்தி வருகிறதா என காத்துக்கொண்டிருக்கிற, வக்கிரம் மிகுந்த வணிக எதிர்பார்ப்பிற்கு மாறிவிட்டன. அவர்களுக்கு யார் முதலில் செய்தி தருவது என்பது மட்டுமே முக்கியமானது. டிஆர்பிக்காக போட்டி போட்டுக் கொள்ளும் போட்டியில் ஒருவர் செத்தாலும் அது செய்திதான். ஒரு கோடிப் பேர் செத்தாலும் அது ஒரு செய்தி தான். அதைத் தாண்டி இங்கு எதுவும் இல்லை.மனித உயிருக்கு இங்கே மதிப்பில்லை. அப்படி ஒரு மனநிலையை திட்டமிட்டு அதிகாரம் உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. மனித உயிருக்கு மதிப்பு ஏற்பட்டால் சகமனிதன் கேள்விகேட்க தொடங்குவான். கேள்வி கேட்டால் பிரச்சனைகள் வரும். பிரச்சனைகளால் போராட்டங்கள் வெடிக்கும். போராட்டங்களால் அதிகாரத்திற்கு அழுத்தங்கள் மிகும். எனவேதான் மனித உயிருக்கு மதிப்பற்ற நிலையை அதிகார நிறுவனங்கள் திட்டமிட்டு உருவாக்கி வைத்திருக்கின்றன.குறிப்பாக காவல்துறை எப்போதும் அதிகாரத்தின் அடியாளாக இருந்து வருவதென்பது ஆங்கிலேயர் காலத்து தொடர்ச்சி. எனவே அரசு /அரசாங்கங்கள் உள்ளிட்ட அதிகார நிறுவனங்கள் தங்களின் பாதுகாப்பிற்காக காவல்துறைக்கு உள்ளீடாக கட்டற்ற சுதந்திரத்தை வாரி வழங்கி இருக்கின்றன. அந்த கட்டற்ற சுதந்திரம் தான் சர்வாதிகாரமாக, மனித உயிர்களை பலி கொள்ளும் ஏதோச்சதிகாரமாக மாறி இருக்கின்றது. நேர்மையாக இருக்கின்ற சில காவல் துறையை சேர்ந்த நண்பர்கள் கூட என்னிடம் எத்தனையோ முறை கனிவாக அறிவுறுத்தி இருக்கிறார்கள். “ஏன் சார் உங்களுக்கு இந்த வேலை..” என்று கேட்பதில் ஒரு பக்கம் அன்பு இருந்தாலும்.. இன்னொரு பக்கம் நம்மை தடுக்கவேண்டும், கொஞ்சம் அச்சுறுத்தி வைக்க வேண்டும் என்கின்ற அவர்களது உள்ளார்ந்த விருப்பத்தையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும். அப்படியானால் காவல்துறையில் நல்லவர்களே இல்லையா என்று சொன்னால்.. அது மிகச் சொற்பமான எண்ணிக்கையில் என்பதுதான் நமக்கு முன்னால் இருக்கின்ற மாபெரும் ஆபத்து. அந்த சொற்பமான எண்ணிக்கை பெரும்பான்மையான எண்ணிக்கையாக மாறவேண்டும் என்பதுதான் இரண்டு உயிர்களை பறிகொடுத்து நிற்கின்ற ஒட்டுமொத்த சமூகமும் காவல்துறையிடம் எதிர்பார்க்கின்ற மாற்றம். அதேபோல நமது மனநிலையும் மாற வேண்டியது அவசியம். ஏதோ ஒரு குற்றத்திற்காக கைது செய்யப்படும் ஒருவர் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்படும்போது திருப்தி அடைகிற “கூட்டு மனசாட்சி”என்கின்ற பொது உளவியலை நமக்குள் நாம் அழித்தொழிக்க வேண்டும். எந்த குற்றத்தையும் நீதிமன்றம் மூலம் தண்டிக்க வேண்டும் என்கின்ற ஜனநாயக வழி குணாதிசயம் நமக்கு ஏற்பட வேண்டும். இல்லையேல் காவல்துறையின் துப்பாக்கி முனையிலும், குதங்களில் நுழையும் லத்தி முனையிலும் தான் நாட்டின் நீதி பரிபாலனம் நடைபெறும்.காவல்துறையின் அடக்குமுறை என்பது பல்வேறு வடிவங்களைக் கொண்டது. சற்று நுட்பமான, அதே சமயத்தில் கனிவும், மதிப்பும் இல்லாத, உயர்ந்த குரலோடு கூடிய அவர்களது அதிகார ஆணவ நடவடிக்கைகள் ஒருபோதும் சட்டத்தின் வாயிலாக, நீதியின் வடிவத்தோடு நடைபெற்றதில்லை. வரம்பு மீறல் என்பது அவர்களைப் பொறுத்தவரையில் எழுதப்படாத சட்டம்.கடந்த 2019 மாவீரர் தின குருதிக்கொடை அளிக்கும் நிகழ்வின்போது நாங்கள் இதை அனுபவித்தோம். குருதிக் கொடை என்பது மனித உயிர் காக்கும் முக்கிய சேவை. ஒரு திருமண மண்டபத்தில் உள்ளரங்கு நிகழ்ச்சியாக குருதிக்கொடை நிகழ்வினை நாங்கள் நடத்திக் கொண்டிருக்கும்போது காவல் அதிகாரிகள் வந்து எங்கள் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினார்கள். கேட்டால் அனுமதி பெறவில்லை என்றார்கள். அதிலும் அங்கு வந்த ஒரு காவல் அதிகாரி ஒருவர் அங்கே இருந்த மருத்துவப் பணியாளர்களை தடித்த வார்த்தையால் ஏசத் தொடங்கினார். நிகழ்வு நடத்த மண்டபம் தந்த மண்டப மேலாளர் ஒருமை வார்த்தைகளால் ஏசப்பட்டார். உள்ளரங்கு நிகழ்ச்சிகளுக்கு யாரும் அனுமதி பெறுவதில்லை. மேலும் குருதிக்கொடை நிகழ்ச்சி குடந்தை அரசு தலைமை மருத்துவமனை அனுமதி பெற்று அதன் ஊழியர்களால் நடத்தப்படுகின்ற ஒரு நிகழ்வு. அரசு மருத்துவமனைக்காக நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தன்னிச்சையாக முன்வந்து குருதி வழங்குவது என்பது உண்மையிலேயே பாராட்ட வேண்டிய ஒரு செயல். ஆனால் நாங்கள் தேசியத் தலைவர் படம் பயன்படுத்துகிறோம் என்றும், மண்ணிற்காக போராடிய மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகிறோம் என்றும் அதனால் நாங்கள் குருதி கொடுக்கக்கூடாது என்றும், காவல்துறையினர் எங்களைத் தடுத்து நிறுத்தினர். தடுத்து நிறுத்திய காவல் அதிகாரி “இதை எவ்வாறு உங்களால் தடுத்து நிறுத்த முடியும்..” என கேட்ட என் முகத்தை பார்க்கவே இல்லை.என் அருகில் நின்று கொண்டிருந்த தம்பிகளை விரட்டுவதிலேயே அவர் குறியாக இருந்தார். சத்தமாகப் பேசி அங்கே இருந்த பெண்களை, புதிதாக வந்து இருப்பவர்களை அச்சுறுத்த வேண்டும் என்கின்ற அவரது நோக்கம் எனக்கு புரிந்தது.நாட்டில் எவ்வளவோ தவறுகள் நடக்கின்றன அதைத் தடுக்காமல் குருதி கொடுப்பதைப் போய் தடுக்கிறீர்களே என கேட்ட நாம் தமிழர் கட்சியின் திருவிடைமருதூர் தொகுதி இணைச்செயலாளர் தம்பி பிரகாஷ் யை ஒரு உதவி ஆய்வாளர் அடிக்க பாய… எந்த நொடியும் பெரும் தகராறு வெடித்து இரு தரப்பிற்கும் கைகலப்பு உண்டாக்கக்கூடிய சூழல் ஏற்பட்டது. அந்த நேரத்தில் சற்று சுதாரிக்காமல் இருந்திருந்தால் காவல்துறையின் லத்திகள் மக்கள் உயிர் காக்க, குருதி கொடுக்க வந்த, இந்த மண்ணை நேசிக்கின்ற இளைஞர்களின் புட்டத்தை பதம் பார்த்து முடித்திருக்கும். அந்த நேரத்தில் இதை புரிந்துகொண்ட நானும், கட்சியின் மூத்த நிர்வாகிகளும் திட்டமிட்டு தம்பிகளை அப்படியே அமைதிப்படுத்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று குருதிக்கொடை நிகழ்வினை தொடர்ந்து நடத்தினோம். இந்த நிகழ்வு குறித்து நாங்கள் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரியிடம் அன்று மாலையே சென்று புகார் அளித்தோம். ஆனாலும் ஒரே துறை அல்லவா.. ஏதேதோ சமாதானம் பேசி இனி இவ்வாறு நடக்காது என்றெல்லாம் கூறி அந்த மேலதிகாரி எங்களை அனுப்பி விட்டார்.நவம்பர் மாதம் வந்தாலே காவல்துறை எங்கள் மீது பாய தொடங்கிவிடும். எளிய பிள்ளைகள் காசு வசூலித்து தலைவர் பிரபாகரன் படம் அச்சிட்டு சுவரொட்டி ஒட்டுவார்கள். அதை காவல்துறை விடியவிடிய கிழித்துக் கொண்டிருக்கும். சென்ற வருடம் கூட எனது சின்னத்தம்பி ஒருவன் கேட்டான். இந்த நாட்டை கொள்ளை அடித்து சுரண்டிக் கொழுத்த எத்தனையோ அரசியல்வாதிகளின் படங்கள் சுவரொட்டிகளாய் இங்கே இருக்கலாம். ஆனால் இனத்திற்காக மொழிக்காக தன்னையே அர்ப்பணித்து போராடிய எங்கள் உயிர் தலைவன் படத்தை அவர் பிறந்தநாளில் கூட நாங்கள் ஒட்டக்கூடாதா என்று..கேட்டால் காவல்துறையிடம் தயாராக ஒரு பதில் இருக்கிறது. “மேலிட உத்தரவு.” அந்த மேலிடத்தைத்தான் பலரும் பல காலமாக தேடிக் கொண்டிருக்கிறார்கள். எந்த சட்டத்தின் வாயிலாக இதுபோன்ற அடாவடிகளை காவல்துறை செய்து வருகிறது என்பது யாருக்குமே தெரியாது. தெருவோர வியாபாரிகளிடம் அத்துமீறுவது, மாதக்கடைசியில் எங்கேயோ நின்று கொண்டு வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி சாவியை பிடுங்கிக்கொண்டு லைசென்ஸை எடு.. ஹெல்மெட் போடல.. ஹெட்லைட் சரியா எரியல ..என்ற கேள்விகள் எல்லாம் கேட்டு, கடைசியில்” எதற்கு கோர்ட் கேஸ் என்று அலைய வேண்டும்.. ஏதாவது கொடுத்து விட்டு போங்கள்” என வசூலை போடுவது, காவல் நிலையத்தில் அமர்ந்துகொண்டு நீதி அரசர் போல வாத பிரதிவாதங்களை கேட்டு நீதிமன்றத்தையே நடத்துவது, என நடப்பதை எல்லாம் பார்த்துக்கொண்டுதான் அமைதியாக கடந்து போகிறோம். எதிர்பாராத விதமாக ஒரு நாள் சாலையில் அவசர வேலை காரணமாக வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது காவல்துறையிடம் மாட்டிக் கொண்டு ஒதுங்கி நிற்கின்ற நிலை நமக்கு வரும் போதுதான் அது பற்றியே நாம் சிந்திக்கத் தொடங்குகிறோம். அப்போது கூட கையில் இருப்பதை கொடுத்து விட்டு அந்த இடத்தில் இருந்து தப்பித்து செல்வதை தான் நாம் ஒவ்வொருவரும் விரும்புகிறோம். அப்படி ஓடி ஓடி த்தான் அநியாயமாக இரண்டு உயிர் கொலை செய்யப்படுவதற்கு நாமும் மறைமுக காரணமாக அமைந்திருக்கிறோம். உண்மைதான்.. நடந்து முடிந்திருக்கிற 2 கொலைகளுக்கும் நாமும் ஒரு காரணம்.அநீதியை எதிர்ப்பது என்பது பிரச்சனையில் சிக்கிக் கொள்வதல்ல. அது சாதாரண வாழ்க்கையில் நாம் எதிர்கொள்கிற இயல்பு என்பதனை எப்போது குணாதிசியமாக கொள்கிறோமோ அப்போதுதான் “சாத்தான்குளங்கள்” இல்லாது ஒழியும்.சாலையில் என்று யாராவது போராடிக்கொண்டு இருந்தால்.. நமக்கென்ன என வேடிக்கை பார்த்துவிட்டு கடக்கும் ஒவ்வொருவரின் புட்டத்திலும் நுழைய ஒரு அதிகாரத்தின் லத்தி காத்துக்கொண்டிருக்கிறது என்பதை உணரும் தருவாயில் தான்.. அதிகாரங்களை எதிர்த்து நிற்பதற்கான வலிமை ஏற்படும். இல்லையேல் “சாத்தான்குளங்கள்” சரித்திரத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்டுக் கொண்டே செல்லும்.வாழ்வதற்கான போராட்டம் என்கிற நிலை மாறிவிட்டது.இனி போராட்டமே வாழ்க்கை என்கிற நிலை தொடங்கியிருக்கிறது.எப்போதுமே அமைதியாக இருப்பதைப் போன்ற அநீதி எதுவும் இல்லை.எல்லா நேரத்திலும் அமைதியாக இருக்கின்ற அனைத்து குரல்களும் நடக்கின்ற அனைத்து தவறுகளுக்கும், கொலைகளுக்கும் ஆதரவானதே..அநீதியை எதிர்த்து எங்கிருந்தோ எதிர்த்து எழும்பும் ஒவ்வொரு குரலும் இனி இதுபோன்ற கொடுமைகள் நடக்காமல் இருப்பதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தும் வெளிச்சத் துளிகள்.

சீமான் என்ற தனி ஒருவன்.

 

 

 

 

 

 

 

தலைமை என்பது பன்மைச் சொல் அல்ல. கூடி செயல் செய்யலாம். கூடி தலைமையேற்க முடியாது. தலைமையேற்க உறுதி வாய்ந்த தனி ஒருவனே தகுதி உடையவனாகிறான்.இந்த உலகத்தின் எல்லா புரட்சிகர மாறுதல்களும் தனி ஒரு மனிதனின் சிந்தனைத் துளியிலிருந்து தான் வெளிப்படுகிறது. இந்த உலகத்தின் எல்லா தத்துவங்களும், எல்லா மதங்களும், எல்லாப் புரட்சிகளும், தனி ஒரு சில மனிதச் சிந்தனைகளின் விளைச்சல்தான். தன்னம்பிக்கை கொண்ட தனிமனிதர்கள் ஒரு சிலரின் வாழ்க்கை கதைகளே உலக வரலாறு என்கிறார் விவேகானந்தர். உலகின் இருள் நீங்க சிந்தித்த எடிசன் என்கின்ற அந்தத் தனி ஒருவன் தான் உலகத்தின் வெளிச்சமாக மாறிப் போகிறான். ஒரு தொடர்வண்டிப் பயணத்தில் காந்தி என்கின்ற ஒரு தனி ஒருவருக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அவமதிப்பு தான்
1947 ஆகஸ்ட் 15 அன்று மூவர்ண கொடி டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட ஒரு காரணமாக அமைந்தது. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த இடத்திலிருந்து உதிர மண்ணை அள்ளிக் கொண்டு உருவேற்றிக் கொண்ட ஒரு தனிச் சிறுவன்தான் பகத்சிங் என்ற பெயரில் புரட்சிகர அரசியலின் அடையாளமாக மாறிப் போனான். பிரபாகரன் என்கின்ற ஒரு தனிமனிதனின் துருப்பிடித்த அந்த ஒற்றை துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட ஒரு தோட்டா தான் அடுத்து வந்த 30 ஆண்டுகால போராட்டத்தின் திசையை தீர்மானித்தது. சேகுவேரா நல்ல தளபதிதான். ஆனால் அவருக்கும் கூட பிடல் காஸ்ட்ரோ என்கின்ற ஒரு தனிமனிதன் தலைவராக தேவைப்பட்டார். அலைபாயும் கடலுக்கு நடுவே திசையற்று நிற்கின்ற கப்பலுக்கும் கூட ஒரே ஒரு திசைமானி தேவைப்படுகிறது. கரை நெருங்குவதை கண்டுணர்ந்து நம்பிக்கை கொள்ள ஒரே ஒரு கலங்கரை விளக்கம் தேவைப்படுகிறது. ஏங்கல்சுகளால் எல்லாவற்றையும் எழுதிவிட முடியாது. அதற்கு ஒரு கார்ல் மார்க்ஸ் தான் சிந்திக்க வேண்டும்.

அவரை முதன்முதலாக நான் நேரில் கண்ட இடம் ஒரு சிறைச்சாலை. கடந்த 2008ம் ஆண்டு பாண்டிச்சேரி சிறையில் ஒரு தனி அறையில் தனிமையாக அவர் அமர்ந்திருந்த போதுதான் அவரை கண்டேன். இனம் அழிந்து கொண்டிருந்த காலம் அது. உறங்கா இரவுகள் தந்த விழி சிவப்பில் கலங்கிய கண்களோடு அவர் அமர்ந்திருந்தார். அப்போது அவர் தனி ஒருவன் தான். ஈழத்தில் அவர் உயிருக்கு உயிராக பழகியவர் தளபதிகள், பெரும் வீரர்கள் ஒவ்வொருவராக வீர மரணம் அடைகிற செய்திகளை ரணம் பட்ட இதயத்தோடு அவர் உள்வாங்கி உருக்குலைந்த நாட்களில் தனி ஒருவனாகத்தான் இருந்தார். எல்லாம் அழிந்து முடிந்த காலகட்டத்தில், இனி ஏதாவது ஒன்று செய்ய வேண்டுமே என்ற பதைபதைப்பில், அடுத்து என்ன செய்யலாம் என்று அனைவரும் கைப்பிசைந்து நிற்கும்போது, சீமான் என்கின்ற அந்தத் தனி ஒருவன் தான் தனித்தக் குரலில் சொன்னான். முள்வேலி கம்பிகளுக்குள் சிக்கியுள்ள மக்களை மீட்க மதுரையில் கூடுவோம். “அறுத்தெறிவோம் வாரீர்.” 2011 – ஒரு நூற்றாண்டு கடந்த ஒரு பேரியக்கம். பலம்வாய்ந்த ஆளும் கட்சியோடு கூட்டணி சேர்ந்து நிற்கிறது. எம் இனத்தை துடிக்கத் துடிக்க அழித்த காங்கிரஸ் 63 இடங்களில் தமிழ்நிலத்தில் துணிச்சலாக போட்டியிடுகிறது. இப்போது இருக்கின்ற கூட்டம் போல கூட இல்லை நாங்கள். ஒருவித மனச்சோர்வு அந்த நேரத்தில் எங்களை சூழ்ந்திருந்தது. திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என அனைத்து தரப்பிலும் இருந்து செய்திகள் வந்து கொண்டிருந்தன. காங்கிரஸின் உதிரம் படிந்த கை மீண்டும் தமிழ்நாட்டில் எழுந்தால்.. நாம் தமிழர் என நாங்கள் கூடி முழங்கி எழுந்ததற்கு பொருளில்லை என்கின்ற அச்சம் எங்களால் மனதில் குடிகொண்டிருந்தது. ஏனெனில் நாங்கள் அன்று ஒரு கட்சி அல்ல. ஊருக்கு ஊர் சிறு குழுக்களாக திரண்டு கொண்டிருந்தோம் அவ்வளவுதான். 63 இடங்கள். வலு வாய்ந்த திமுக காங்கிரஸ் கூட்டணி. எப்படி எதிர்ப்பது என எங்கள் யாரிடத்திலும் எந்த திட்டமும் இல்லை. முன்னணி நிர்வாகிகள் சிலர் சொன்னார்கள். தேர்தலில் போட்டியிடாத வைகோவிடம் சென்று அவரையும் அழைத்துக்கொள்வோம் என்றார்கள். இவர்கள் பேசியது அறிந்த வைகோ அலைபேசியை அணைத்து வைத்துவிட்டு படுத்து விட்டது வேறு கதை. எதுவும் எங்களுக்கு சாதகமாக இல்லாத சூழல் அன்று.எங்களுக்கு முன் அமர்ந்திருந்த சீமான் என்கின்ற அந்தத் தனி ஒருவன் தான் சொன்னான். “இது வெறும் தேர்தல் அல்ல. சோனியா காந்தி மகன் ராகுல் காந்திக்கும் பிரபாகரனின் தம்பி சீமானுக்கும் நடக்கின்ற யுத்தம்.” “தமிழினத்தின் உதிரம் படிந்து சிவந்து இருக்கிற காங்கிரசின் கையை வெட்டி வீழ்த்துவோம், காங்கிரஸைக் கருவறுப்போம்” என்று முதலாவதாக அந்தத் தனி ஒருவன் தான் எழுந்து நின்று சொன்னான். தலைவரை தத்துவமாகக் கொண்டு அவர் மீது சத்தியமிட்டு சொல்கிறேன். காங்கிரசை வீழ்த்த அன்று எடுத்த முடிவு சீமான் என்ற தனி ஒருவன் எடுத்த முடிவு. முடிவில் காங்கிரஸ் முடிந்தது.

புலிக்கொடி தமிழக மண்ணில் எழுந்து பறந்தது. 2016. பல கட்சிகளிடமிருந்து அழைப்பு. ஆனால் சீமான் என்ற தனி ஒருவன் எங்கள் யாரிடமும் கேட்கவில்லை. தனித்துப் போட்டி என தன்னம்பிக்கையோடு அறிவித்தான். அவன் கரம் பிடித்து நடக்கிற எங்களுக்கு கூட அந்த முடிவு ஒரு அதிர்ச்சி தான். சென்னையில் நடந்த பொதுக்குழுவில் அந்த முடிவை அறிவித்தபோது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முதன்மையான எட்டு பேர்களில் நானும் ஒருவன். ஊர் திரும்பிக் கொண்டிருக்கிறேன். இந்த முடிவு சரியா தவறா என்று எனக்கு தெரியாது. என் மனதிற்குள் கடுமையான போராட்டம். அந்த இரவில் அண்ணன் அலைபேசியில் வந்தான். “எதற்கும் கவலைப்படாதே. நான் இருக்கிறேன். என் தம்பி தங்கைகளுக்காக நான் ஓடுவேன். வாக்கு கேட்பேன்‌. துணிந்து நில்.” என்றான். அப்போதும் அவன் தனி ஒருவன் தான். வேட்பாளர்களாக நின்ற நாங்கள் யாரும் அடையாளம் அற்றவர்கள். புதியவர்கள். எதுவுமில்லாத இளையவர்கள்.வரலாற்றின் வீதிகளில் முகமற்ற எங்களுக்கு சீமான் என்கின்ற தனி ஒருவன்தான் முகவரியாகிப் போனான். பொதுத் தொகுதிகளில் ஆதித் தமிழர்கள் நின்றார்கள். பெருமங்கை ஜெயலலிதாவை எதிர்த்து ஒரு திருநங்கை சகோதரி களத்தில் நின்றார். வேட்பாளர்கள் யாருக்கும் அவரவர் சாதி பெரும்பான்மை இருக்கின்ற இடத்தில்
இடமில்லை. பொதுத் தொகுதியில் எப்படி ஆதித்தமிழரை நிறுத்தலாம் என்பதான கேள்விகள். அவன் சாதி பார்த்து நீ வாக்களிக்க யோசித்தால் என்றால்.. உன் ஓட்டு எனக்கு வேண்டாம். உன் ஓட்டு எனக்கு தீட்டு என கம்பீரமாக அந்த தனி ஒருவன் தான் அறிவித்தான். ‌ அந்த தனி ஒருவன் தான் வீதிக்கு வீதி ஓடினான். எதுவுமற்ற தம்பி தங்கைகளுக்கு எல்லாமாகவும் இருந்து வாக்குகள் சேகரித்தான். இப்படித்தான் 2016ல் படைத்தோம் புதிய அரசியல் வரலாறு.

2019 பாராளுமன்றத் தேர்தல். சட்டமன்ற தேர்தலை விட இன்னும் கடுமையான களம். கட்சியின் பலத்தை நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாயம்.பலமான வேட்பாளர்களை நிறுத்துவோம் என அனைவரும் முடிவெடுக்கிறோம். அந்தத் தனியன் அப்போது அமைதியாக இருக்கிறான். நாங்கள் எல்லோரும் பேசி முடிக்கிறோம். இறுதியாக பேச எழுந்த அவன் மொத்தம் 40 இடங்களில் 20 இடம் ஆண்களுக்கு 20 இடம் பெண்களுக்கு. என அறிவிக்கிறான்.
வழக்கம் போல் நாங்கள் அதிர்ச்சி அடைகிறோம். ஆனாலும் அந்த சீமான் என்ற தனி ஒருவன் வற்றாத தன்னம்பிக்கையோடு 20 பெண்களையும் 20 ஆண்களையும் வேட்பாளராக நிறுத்துகிறான். அப்போதும் அவன் தனி ஒருவன் தான். இப்படித்தான் 2016ல் பெற்ற நாலரை லட்சம் வாக்குகள் அடுத்த மூன்றே வருடங்களில் நான்கு மடங்காக உயர்ந்து 17 லட்சம் ஆனது. உண்மையின் கனல் வீசி தமிழின் அனல் பூசி முழங்கிய அந்த தனி ஒருவனது முழக்கங்களால் தான்
அடையாளமற்ற ஒரு இளைஞர் கூட்டம் அரசியல் அதிகாரம் நோக்கி அணியமாகி வருகிறது. எப்போதும் அவன் தனி ஒருவனாகத்தான் இருக்கிறான். அரசியலுக்காக கூட யாரிடமும் கூட்டு வைப்பதில்லை. அவன் அவனது அண்ணன் போலவே யாரிடமும் சேராமல் தனித்தே தனி ஒருவனாய் நிற்கிறான். இனம் காக்கின்ற இப்பணியை அவன் செய்யத் தொடங்கும்போது இன்று உடன் நிற்கின்ற நாங்கள் யாரும் அன்று அவனுடன் இல்லை. நாளையே நாங்களும் நகர்ந்தாலும் அவன் காலம் கையளித்த இப்பணியை கட்டாயம் செய்து பயணித்துக் கொண்டுதான் இருப்பான். எவரையும் நம்பி இல்லை அவன். ஆனால் அவனை நம்பி எண்ணற்ற இளம் புரட்சியாளர்கள் இலட்சியப் புன்னகையோடு அவன் பின்னால் நிற்கிறார்கள். கூடி நிற்கிறோம். ஆனால் முன்னால் அவன்தான் நிற்கிறான் கூடி வாழ்கிறோம். ஆனால் அவன்தான் தலைமையேற்கிறான். தீர்மானங்களையோ முடிவுகளையோ யார் வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் தலைவனாக அவன் தான் வழி காட்டுகிறான். ஆளாளுக்கு முடிவெடுத்தால் போகிற பயணம் முடியாது. சரியான தனி‌ ஒருவன் தலைமை ஏற்க மறுத்தால்.. எந்த இனமும் விடியாது. கூடிப் பேசிக் கொண்டிருந்தால் விவாதம் மட்டுமே மிஞ்சும். கடமையாற்ற களம் செல்பவர்கள் மனதில் தலைவன் சொல் மட்டுமே எஞ்சும். கூட்டுத்தலைமைகளால் இனத்திற்கான விடுதலைக் கூடு கட்ட முடியாது. வானத்தின் எல்லையைத் தொட்டு பறக்கும் வல்லூறு ஒன்றின் வலிமை கொண்ட தனி ஒருவன்தான் இனத்திற்காக நாடு கட்ட தகுதியானவன். இது தனி மனித துதிபாடல் அல்ல. இலட்சிய உறுதியில் மாறாமல் நீண்டகாலம் பயணித்து எப்படியும் இனத்தின் விடுதலை இலக்கை வென்று முடிக்கின்ற , எப்போதாவது வரலாற்றின் போக்கில் தமிழ்த்தேசிய இனத்தில் தோன்றுகிற தனி ஒருவன் பற்றிய தேடல்.அது குறித்த புரிதல். இதையெல்லாம் அறிந்து தான் இறுமாப்போடு சொல்கிறோம். சீமான் என்கின்ற ஒருவன் தான் எழுதப்பட இருக்கிற நாளைய நம் இனத்தின் வரலாறு.

தேவைப்படுகிற புரிதலின் வெளிச்சம்..

 

 


***

எதையும் புரிந்து கொள்ளாமல் தாங்கள் சொன்னது மட்டுமே சரி என வாதாடுகிற சங்கிகள் மட்டுமல்ல இன்னும் சிலதுகள் இருக்கின்றன. தாய்மதம் மாற சொல்கிறார் சீமான் என இஸ்லாமிய கிருத்துவ மதங்களை தழுவிய தமிழர்களிடம் பதிவுகள் இட்டும் , காணொளிகள் போட்டும் குழப்பம் ஏற்படுத்தி வருகின்றன.

அண்ணன் சீமான் சொன்னது ஆதித் தமிழரின் நம்பிக்கையை, மெய்யியல் தத்துவங்களை கொள்ளையடித்து இந்துத்துவ மயமாக்கி கொண்ட வருணாசிரம கேடுகளில் இருந்து தமிழர்கள் விடுதலை அடைந்துகொள்ள மீண்டெழும் தமிழர் சமயங்கள் என்கின்ற முழக்கத்தை அவர் முன்வைக்கிறார்.

அது தமிழரின் பண்பாட்டு விழுமியங்களை கொள்ளையடித்த இந்துத்துவ ஆரிய பிழைப்புவாத கொள்கைகளுக்கு எதிரானது.

இதில் எங்கும் இஸ்லாமிய கிறிஸ்தவ மதங்களுக்கு மாறி இருக்கிற தமிழர்கள் உட்பட மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் பிறப்பால் தமிழர்கள். வேறு நாட்டிலிருந்து வந்திருக்கிற மத நம்பிக்கைகளில் ஆர்வம் கொண்டு அந்தந்தப் மதங்களை தழுவி இருக்கிறார்கள். அந்தந்த மதங்களுக்கு உரிய வழிபாட்டு வழிமுறைகளை ஒத்துக் கொண்டுதான் பயணிக்கிறார்கள்.
எனவே மற்ற தமிழர்களாகிய நாங்கள் அந்த நம்பிக்கைகளை மதிக்கிறோம். அவைகள் பிற மதங்கள் என்கின்ற சொல்லுக்கு உட்பட்டவை.

ஆனால் இந்துமதம் என்கின்ற அமைப்பு அவ்வாறல்ல.இந்து என்கிற சொல் ஆங்கிலேயன் உருவாக்கிக் கொடுத்தது. இன்னும் ஆழமாக சொன்னால் ஒரு மதம் அல்லது ஒரு வழிபாட்டுமுறை என்பதற்கான எந்த அடிப்படை தன்மைகளும் இவர்கள் காட்டும் இந்து மதம் என்பதற்கு கிடையாது. மற்ற மதங்கள் யாரோ ஒருவரால் தோற்றுவிக்கப்பட்டு ஏறக்குறைய உலகம் முழுவதும் பொதுமையான வழிபாட்டு முறைமைகள் கொண்டவை. அந்தந்த மதத்திற்கான புனித நூல்கள் இருக்கின்றன.

ஆனால் இந்து என்று இவர்கள் சொல்கின்ற மதத்திற்கு அவ்வாறெல்லாம் எதுவும் இல்லை. எடுத்துக்காட்டாக தமிழகத்துக்கு உள்ளேயே பல்வேறு மெய்யியல் நம்பிக்கைகள் இருந்து இருக்கின்றன. இங்கே சைவத்துக்கும் வைணவத்துக்கும் இடையே பெரும்போரே நிகழ்ந்திருக்கிறது. வைணவ பெருமாள் சிலையை இழுத்து வந்து கடலிலே மூழ்கடித்த சைவ மன்னர்களை தமிழ் நிலத்தில் தமிழர் வரலாற்றில் பரவலாகப் பார்க்கலாம். இதைத்தான் கமலஹாசன் தசாவதாரம் திரைப்படத்தில் காட்சிமயப்படுத்தி இருப்பார். இந்த முரண், இந்த வேறுபாடு தமிழர் நிலத்தில் மிகமிக இயல்பானது. சைவம் வைணவம் மட்டுமல்ல.. ஆசிவகம் சக்தி வழிபாடு காளி வழிபாடு சமணம் பௌத்தம் நாத்திகம் என பல்வேறு நம்பிக்கைகளுக்கு தமிழ் மண்ணில் இடம் உண்டு.

இவைகளை ஒரே சட்டத்தின் மூலமாக ஒன்றாக அடக்கி ஆட்சி செய்ய ஆங்கில ஆட்சியாளர்கள் கண்டுபிடித்த ஒற்றைப் பெயர்தான் இந்து மதம். அது மதம் அல்ல ‌.இந்தியாவை ஒரே குடையின் கீழ் ஆங்கிலேயர் ஆட்சி செய்வதற்கான ஏற்பாடு ‌.

இத்தனை ஆண்டுகாலம் இந்து என்று தமிழர்கள் அடிமைப்படுத்த பட்டதால் சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு உள்ளாகி போனோம். எங்களது மொழி தீண்டத்தகாத மொழியாகி எங்களது கோவிலுக்கு வெளியே நிற்க வைக்கப்பட்டது. எங்களுக்கு எங்களது கடவுளர்கள் இருக்கிற கருவறைக்கு செல்கிற உரிமை மறுக்கப்பட்டது. எங்களது பண்பாட்டு விழுமியங்களில் பல ஊடுருவல்கள் நிகழ்ந்து எங்களது வாழ்வியலே மாறிப்போனது. எனவேதான் நாங்கள் இந்துக்கள் அல்ல என முழங்க தொடங்கியிருக்கிறோம். நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி தனது முதல் தீர்மானமாக தமிழர்கள் இந்துக்கள் அல்லர் என்பதை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்கிறது.

எனவேதான் தமிழர் என்கின்ற தேசிய நிலத்தின் தொன்மையான மெய்யியல் கோட்பாடுகளை மீட்பதற்காக அண்ணன் சீமான் எழுப்பும் அறைகூவலை இஸ்லாம் கிறிஸ்தவ மதங்களுக்கு எதிரான ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ளக்கூடாது ‌.

எல்லா மதங்களிலும் மத அடிப்படைவாதிகள் இருக்கிறார்கள். இவர்களுக்குப் பொதுவான ஒரு குணாதிசயம் இருக்கிறது. தேசிய இனம் மொழி போன்றவைகள் மீது பற்றுறுதி கொண்டு ஒரு இனம் மீள எழும்புவது மத அடிப்படைவாதிகளுக்கு பிடிக்காது. தேசிய இனமாக திரள்வது மதம் மீதான பற்றுறுதியை சிதைத்துவிடும் என மத அடிப்படைவாதிகள் அஞ்சுவார்கள். எனவேதான் மத அடிப்படைவாதிகள் அண்ணன் சீமானின் இந்த முழக்கங்கள் குறித்து தேவையற்ற குழப்பங்களை திட்டமிட்டு பரப்புகிறார்கள்.

அண்ணன் சீமான் மீண்டெழும் தமிழர் சமயங்கள் என்கின்ற முழக்கம் தமிழர் தொன்மை மெய்யியல் கோட்பாடுகளை மீட்டெடுக்க நடத்தப்படுகின்ற புரட்சிகர நடவடிக்கை. இது தமிழர்களை வீழ்த்துகிற வருணாசிரம ஆரிய சாதிய நிலைகளுக்கு எதிரானது‌. தமிழர்கள் இந்துக்கள் அல்லர் என்ற முழக்கத்தின் தொடர்ச்சிதான் மீண்டெழும் தமிழர் சமயங்கள் , தாய் மதம் திரும்புவோம் போன்ற அறைகூவல்கள். இந்து என்பது ஒரு மதம் என தமிழர்களாகிய நாங்கள் ஏற்கவில்லை. நாங்கள் தனித்த மெய்யியல் நம்பிக்கைகளை உடைய தொன்மையான தேசிய இனம். சீக்கியர்கள் எப்படி தங்களை இந்துக்கள் என ஒத்துக் கொள்ள மறுக்கிறார்களோ,லிங்காயத்துகள் எப்படி தனி மதமாக தங்களை ஆக்கிக் கொண்டார்களோ அதேபோல நாங்களும் எங்கள் தாய்மதம் நோக்கி திரும்ப தொடங்கியிருக்கிறோம். அதுவும் காலப்போக்கில் நிகழ்கிற சமூக மாற்றத்தில் ஏற்படப் போகின்ற உளவியல் மாற்றம் மூலமாக ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் நிகழப்போகின்ற மாற்றங்கள் இவை. வற்புறுத்தலின் பேரிலோ அதிகாரத்தின் பெயரிலோ கட்டாயத்தின் பேரிலோ நிகழ்பவை அல்ல.

இந்த நடவடிக்கையில் ஏற்கனவே தமிழர் என்கின்ற தேசிய இனத்தில் பிறந்த தமிழர்களில் இஸ்லாம் கிருத்தவம் பௌத்த சமண இன்னும் பல்வேறு நம்பிக்கைகள் கொண்ட மதங்களை தழுவியவர்கள் பாதிக்கப்படப் போவதில்லை. அவர்களது நம்பிக்கைகளை தமிழராகிய நாங்கள் போற்றி மதிக்கிறோம். அவரவர் அந்த நம்பிக்கைகளோடு அந்தந்த மதங்களை போற்றி வணங்கி அதிலேயே தொடரலாம். அதை யாரும் ஆட்சேபிக்கவில்லை.
மீண்டும் அழுத்தமாக சொல்கிறோம். மற்ற மதங்களான கிறித்தவ இஸ்லாமிய பௌத்த இன்னும் பல்வேறு மதங்களை தழுவி இருக்கிற தமிழர்கள் கொண்டு இருக்கிற நம்பிக்கைகளுக்கு மீண்டெழும் தமிழர் சமயங்கள் என்கின்ற எங்களது முழக்கம் எதிரானதல்ல. அது தமிழர் என்கின்ற தேசிய இனத்தின் தொன்ம மெய்யியல் நம்பிக்கைகளை மீட்டெடுத்து வரலாற்றின் பாதையில் எங்கள் மீது சுமத்தப்பட்ட இருக்கிற ஆயிரமாயிரம் அடிமைத் தளைகளை உடைத்தெறிய நடக்கிற புரட்சிகர நடவடிக்கை.

பரவச வானை உரசிப் பார்த்த எளிய கரங்கள்..

 

 

 

ஒரு பிரம்மாண்டமான கூட்டத்தை பொறுப்பேற்று நடத்துவது என்பது ஏறக்குறைய‌ முதன்முதலாக தன் ஒரே மகளின் திருமணத்தை பொறுப்பேற்று நடத்துகிற‌ தந்தையின் வலிக்கு நிகரானது. ஆனால் கும்பகோணம் நாம் தமிழருக்கு பிரம்மாண்டமான கூட்டங்களை நடத்துகிற அனுபவம் புதிதல்ல என்றாலும்.. இந்த முறை வேறு வகையான மாறிப்போன சூழல்கள்.

வீரத்தமிழர் முன்னணியில் சாமிமலை கூட்டம் ஒரு வருட காலத்திற்கு முன்பே அண்ணன் சீமானால் அறிவிக்கப்பட்டது என்றாலும் நடுவில் ஏற்பட்ட பல சூழல்கள், குடந்தை நகரச் செயலாளர் கார்த்தியின் மரணம் மற்றும் ஊரக உள்ளாட்சி மன்றத் தேர்தல் போன்ற பலவற்றால் அதன் வேலைகளை தொடங்கவே முடியாத நிலைக்கு நாங்கள் ஆளாகி இருந்தோம். குறிப்பாக தம்பி கார்த்தியின் மரணம் மிகப் பெரிய உளவியல் சோர்விற்கு என்னையெல்லாம் உள்ளாக்கியிருந்தது. இந்த பின்னடைவுகளுக்கு மத்தியில் தான்
ஜனவரி மாத தொடக்கத்தில் தைப்பூச திருவிழா திருமுருகன் பெருவிழா பணிகள் எங்களுக்கு கட்சித் தலைமையால் மீண்டும் நினைவூட்டப்பட்டது. தொடக்கத்தில் இதை எடுத்து செய்ய முடியுமா என்கின்ற மிகப்பெரிய தயக்கம் சமீபகால சூழ்நிலைகளால் எங்களுக்கு ஏற்பட்டு இருந்தது. ஆனாலும் விடாப்பிடியாக வீரத்தமிழர் முன்னணியின் பொறுப்பாளர் தம்பி செந்தில்நாதன் இதை நாங்கள் நடத்தியே ஆக வேண்டும் என வற்புறுத்திக் கொண்டிருந்தான். அவனோ தஞ்சைக் கோபுரத்தின் உச்சியில் தமிழை ஏற்றி வைக்க உற்சாகமாய் உழைத்தவன். இந்த நிகழ்வையும் வெல்ல வைக்க வேண்டுமென எங்களை தூண்டிக்கொண்டே இருந்தான்.

சாமிமலை மிகச்சிறிய சிற்றூர். அந்த ஊரில் மிகப் பெரிய கூட்டங்கள் நடந்ததில்லை. இரவு ஒன்பது மணிக்கு மேல் அந்த ஊர் மக்கள் நடமாட்டம் இல்லாமல் போய்விடும். அந்த ஊரில் ஒரு மாபெரும் மாநாடு போன்ற ஒரு பொதுக் கூட்டத்தை நடத்துவது என்பது மிகப்பெரிய சவால். கூட்டத்திற்கு தேவைப்படும் ஒவ்வொரு பொருளையும் பக்கத்து பெரிய ஊர்களான கும்பகோணம் பாபநாசம் தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் இருந்துதான் எடுத்துச் செல்ல வேண்டும்.

இப்படிப் பல சவால்கள். குறுகிய காலம். மிகுந்த பொருளாதார நெருக்கடி.இதையெல்லாம் தாண்டி ஒரு பிரம்மாண்டமான கூட்டத்தை நடத்தியே ஆக வேண்டுமென அண்ணன் சீமானின் அன்பான அறிவுறுத்தல். அந்த மனிதனின் குரல் கேட்ட பிறகு எதையும் செய்துவிட துடிக்கின்ற உளவியல் இயல்பாகவே நமக்கு வாய்த்து விடும். இவ்வாறாக நாங்களும் தயாரானோம்.

காலம் வெவ்வேறு காரணங்களுக்காக தகுதி வாய்ந்த சிலரை தேர்ந்தெடுத்து அதுவாகவே உருவாக்கி அனுப்பி வைக்கிறது.

அப்படி எங்களில் ஒருவனாக இருந்தவன் வீரத்தமிழர் முன்னணி குடந்தை தொகுதி பொறுப்பாளர் தம்பி வெங்கட் ரவி. அதுவரை அவனை சாதாரணமாகத்தான் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரு பொறுப்பினை ஏற்றுக் கொண்டவுடன் 100% அதற்கு நேர்மையாக நின்று உறுதியாக உழைத்த தம்பி வெங்கட்டு தான் இந்த நிகழ்வில் நான் கண்டடைந்த மகத்தான ஆச்சரியம். அவனது காலடி படாத இடம் அந்தக் கூட்டம் நடந்த திடலில் எங்கும் இல்லை.
பிளக்ஸ் அச்சிட்டு மேடையை தயார்செய்ததிலிருந்து நிகழ்விற்கு வந்திருந்த அனைவருக்கும் உணவு ஏற்பாடுகள் வரை பல வேலைகளை எடுத்துக் கொண்டு செய்தான்.
அவனே நாற்காலிகளை தூக்கிக் கொண்டு ஓடினான். குடிநீர் குடுவைகளை எடுத்துக்கொண்டு ஓடினான். நிகழ்ச்சி தொடங்கி அண்ணன் வர வேண்டிய நேரம். அப்போதுதான் கவனித்தோம். மைக் பொருத்தப்பட வேண்டிய போடியம் இல்லை.ஒரு நொடியில் எங்களுக்கு உலகமே மாறி போய்விட்டது. இதுவரை அறியாத பதட்டம். இவ்வளவு பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் இப்படிப்பட்ட தவறு ஏற்பட்டது என்பது எங்களால் ஜீரணிக்கவே முடியவில்லை.உடனே பரபரப்பானோம். தம்பி வெங்கட்டு என்னையும் அழைத்துக் கொண்டு இன்னொரு தம்பியையும் அழைத்துக்கொண்டு ஒரே இருசக்கர வாகனத்தில் மூன்று பேராக பறந்தான். போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டு இருந்த போடியம் வந்த மினி லாரியை மீட்டெடுத்து தம்பி லிங்க துரையோடு போடியம் மேடையை தூக்கிக்கொண்டு நாங்கள் உள்ளே நுழைந்தபோது அண்ணன் திடலில் நுழைந்தார். உயிர் வந்தது எங்களுக்கு.

இப்படியாக ஒவ்வொரு வேலையிலும் தம்பி வெங்கட்டு உழைத்துக் கொண்டே இருந்தான். கூட்டம் முடிந்த பிறகு அவனை நெஞ்சார தழுவினேன். கண்கலங்கி என்னை இறுக்க கட்டிப்பிடித்தான். நெருக்கடிகள் தான் ஒரு களத்தின் நாயகனை உருவாக்கும் என்பதற்கு அவன்தான் உதாரணம்.

அவனோடு துணையாக நின்ற பல தம்பிகள், பாபநாசம் கும்பகோணம் திருவிடைமருதூர் தொகுதிகளை சேர்ந்த பொறுப்பாளர்கள் என பலருக்கும் இந்தக் கூட்ட வெற்றியில் பங்கு இருக்கிறது. அதேபோல இறுதிநேரத்தில் நிதி நெருக்கடி மிகுந்த போது அதை ஓரளவுக்கு சரி செய்ய உதவிய ஒருங்கிணைந்த சோழ மண்டலத்தின் நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்கள், வளைகுடா நாடுகளின் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள், வீரத்தமிழர் முன்னணி ஐக்கிய ராச்சிய பொறுப்பாளர்கள் முருகன் சிலைக்கு தொகை கொடுத்து உதவிய கோவை மண்டலச் செயலாளர் அப்துல் வகாப் என அனைவருக்கும் இந்த நேரத்தில் நாங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

தம்பி முனைவர் செந்தில்நாதன் கடுமையான தனது உடல் நலிவிற்கு மத்தியிலும் எங்களுடன் நின்றான். தேர்ந்த அறிவோடு நிகழ்ந்த அவனது திட்டமிடல்கள் எங்களை வழி நடத்தின.

பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் செயலாளர் தம்பி தூயவன், சாமிமலை பொறுப்பாளர் பிரபு, வீரத்தமிழர் முன்னணி அப்துல்கலாம், எப்போதும் காவல் துறையோடு மல்லுக்கட்டி ஓடியாடி உழைத்த என் உயிர் இளவல் வழக்கறிஞர் மோ ஆனந்த் , தம்பிகள் , மாவட்ட செயலாளர் அரவிந்தன் ,ஜஸ்டின், திருவிடைமருதூர் தொகுதி செயலாளர் புஷ்பராஜன் , ஒன்றிய செயலாளர் பூபேஷ் குப்தா,லிங்கதுரை ,கார்த்திக் நிமலன், அசோக், சக்தி, சிவபாலன், அஸ்வின், பார்த்தா, ஹரி, ராம், ராஜா, சாமிநாதன், மாவட்டத் தலைவர் முருகன், பரணி, விஜி,பிச்சுவா மணி, காளிமுத்து ,பூசாரி வேடமிட்டு கலக்கிய விஜி,முத்து,பழனிவேல் உணவு ஏற்பாடுகள் செய்த மதிபாலா, அருண், விஜய் சங்கர், நிகழ்வுக்கு வந்திருந்தவர்களுக்கு சென்னையில் இருந்தாலும் தனது உறவினர் மூலமாக மதிய உணவு ஏற்பாடுகளை செய்த ராஜா ராம்தாஸ் என பலருக்கும் இந்த நிகழ்வின் வெற்றியில் பெரும் பங்கு இருக்கிறது.

பெரும் தமிழறிஞர்கள் பெருந்தமிழர் கிருஷ்ணகுமார், இறைநெறி இமயவன், ஆய்வறிஞர் ம.சோ.விக்டர், சத்தியவேல் முருகனார் ஆகியோர் வரலாற்று சிறப்புரைகளை வழங்கி பெருமை சேர்த்தனர்.

இந்த நிகழ்வின் கதாநாயகன் அண்ணன் சீமான். வழக்கம்போல எங்களை கண்காணித்து நிறை குறைகளை சுட்டிக்காட்டி வழிநடத்தி தன் தமிழால் தகுதி சேர்த்த அண்ணனுக்கு எப்போதும் தம்பிகளாய் உடன் நிற்பதில் பெருமை கொள்கிறோம்.

இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு நடக்க வேண்டுமென என் உயிர்த் தம்பி மறைந்த குடந்தை நகர செயலாளர் மோ. கார்த்திக் விருப்பப்பட்டான். நிகழ்வு நடக்கும் போது அவனது மூச்சுக்காற்று அங்குதான் உலவியிருக்கும் என எனக்கு நன்கு தெரியும். இந்த நிகழ்வுக்கு ஏற்பட்ட ஒவ்வொரு தடைகளையும் ஒரு இறை போல அரூபமாக நின்று தகர்த்துக் கொண்டே இருந்தான். அவனது கனவிற்கு நிறைந்த எங்களது உழைப்பின் மூலமாக எங்களது கண்ணீர் அஞ்சலியை செலுத்தினோம்.

தமிழகமெங்கும் பல ஊர்களிலிருந்து பேருந்துகள் வாகனங்கள் எடுத்துக்கொண்டு எம் நாம் தமிழர் உறவுகள் அந்த சிறிய ஊரில் குவிந்து நிகழ்வினை மாற்றிக் காட்டினார்கள். கும்பகோணத்தையே அதிரச் செய்த காலையில் நடைபெற்ற வேல் ஊர்வலத்தில் இருந்து மாலையில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டம் வரை நாம் தமிழர் கட்சி உறவுகள் நாடெங்கிலும் திரண்டு வந்துகொண்டே இருந்தார்கள்.
நிகழப் போகின்ற பெரும் அரசியல் மாற்றத்திற்கு இந்தக் கூட்டமே ஒரு வரலாற்று சாட்சியாக மாறிப் போயிருக்கிறது.

கூட்டம் முடிந்தது. கடுமையான உடல் சோர்வு, எதிர்நோக்கி இருக்கிற பொருளாதார நெருக்கடிகள் என கூட்டம் நடத்துகிற அனைவருக்கும் வருகிற வழக்கமான சிக்கல்கள் எங்களுக்கும் இருந்தன. ஆனால் இதையெல்லாம் தாண்டி ஒரு வரலாற்று நிகழ்வில் நாங்களும் உழைத்தோம் என்கின்ற நிறைவு எங்களிடம் என்றும் நிற்கும்.

கூட்டம் முடிந்து அனைவரும் சென்று விட்ட பிறகு எதையோ சாதித்தது போல தம்பி வெங்கட் முகம் நிறைந்த புன்னகையோடு என் கைகளை இறுக்கப் பிடித்துக் கொண்டான்.உண்மையில் அவனைப் போன்ற எளிய தம்பிகள் தான் நாம் தமிழர் கட்சியின் பலம்.

கலையும் நேரம் வந்தது. மிகச்சிலரே அந்த நள்ளிரவில் அந்த திடலில் மீதம் இருந்தோம். எந்த அடையாளமும் இல்லாத இந்த எளிய பிள்ளைகள் ஒரு மாபெரும் கூட்டத்தை நடத்திய பரவசத்தில் முகம் நிறைந்த புன்னகையோடு ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டோம்.

மீண்டும் இன்னொரு இதேபோன்ற பரவசத்திற்காக, அந்த மகத்தான உணர்ச்சி வெள்ளத்தை மீண்டும் அனுபவிக்கும் லட்சிய வேட்கையோடு எங்களது பயணத்தை அந்த நொடியிலிருந்து அதே இடத்திலிருந்து தொடங்கினோம்.

காலியாக இருந்த அந்த மேடை பதாகையில் கம்பீரமாக நின்ற முருகன் எங்களை சிறு புன்னகையோடு பார்த்துக்கொண்டிருந்தான்.

Page 4 of 15

Powered by WordPress & Theme by Anders Norén