பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: கவிதைகள் Page 4 of 8

காதலின் பெருங்குளம்..

 

 

 

27867625_396526987438842_5551065892319946309_n

https://youtu.be/rMAOPsp5EB0

நினைவுகள்
பாசியாய்
படர்ந்திருக்கிற
அந்த விழிகளில்தான்..

தவழும்
கனவலைகளில்
தவிப்போடு
நான் நீந்துகிறேன்..

காற்றின் சிறகுகளோடு
கணப்பொழுதுகளில்
கைக் கோர்த்து
நடம் புரிகிற
அந்த காரிருள்
கூந்தல் இழைகளில்தான்
நான் விழித்திருக்கிறேன்.

அசையா நொடிகளில்
கசிந்துருகி..
இமையோரம் ததும்பி
நதியென பின்
பெருக்கெடும்
கண்ணீர்த் துளிகள்
வழிகிற அந்த
செம்மை கன்னக்
கதுப்புகளில் தான்
நான் உயிர்த்தெழுகிறேன்..

மோகத்திரள்
மழை மேகமாய்
கருக்கிற முடிவிலி
இரவில் ..
நிகழாத
பெளர்ணமிக்காக
காத்திருக்கும்
அடிவானமாய்
சிவந்திருக்கும்
அந்த தேவதையின்
நிலா முகத்தில் தான்
நித்தமும் நான்
குளிர் காய்கிறேன்..

கால மலர்கள்
வாழ்வின் விருட்சத்தில்
இருந்து உதிர்ந்து
இதய வேரில் நிறைந்தாலும்
இன்னமும் வசந்தமாகவே
என் புன்னகையில்
நிறைந்திருக்கிற
அந்த கவிதை
கழுத்தோரம் தான்
நான் இளைப்பாறுகிறேன்..

நாம் வாழ்ந்தது
சம்பவங்களின் சங்கிலித்
தொடர் அதிரும்
வாழ்வின் ஓட்டமல்ல..
இன்னமும் நீளும்
மாபெரும் காப்பியத்தின்
பொன்னெழுத்து பக்கங்கள்
என மயக்க மொழியில்
வெளிவந்த அந்த
வார்த்தை
தடுமாற்றங்களில் தான்..
என் மிச்ச வாழ்விற்கான
உயிர் எச்சத்தை நான்
உருவாக்குகிறேன்..

இன்னுமொரு இரவு..
மற்றுமொரு மதியம்..
பிறிதொரு மாலை..
என அடுக்கடுக்காய்
நினைத்துப் பார்த்து
சிலிர்க்கும் அந்த
நிலாக்கால
நேசங்களில் தான்
நான் பூத்துக் கொண்டே
இருக்கிறேன்..

யாருமற்ற அந்தர வெளியில்
தனித்து பறக்கும்
பெருங் கழுகொன்றின்
தனிமை போல..

நானும்..
என் காதலும்
தனித்திருக்கிறோம்…

பின்னிரவு குளிரில்
உறைந்திருக்கும்
ஆழ் கடலின் சலனமற்ற
அமைதி போல..

காத்திருக்கும்
என் உணர்வுகளின்
ராகத்தை இளையராஜா
பாடலாய் வாசித்துக் காட்ட..

என் நரம்புகளால்
இறுக்கி கட்டப்பட்ட
ஒரு கிடார் இருக்கிறது..

வாசித்துக் கொண்டே
இரு..

உயிரோடு நானும்
இருக்கிறேன்..

……..

இவ்வாறாக நீளும்
இந்த கவிதை ஒரு போதும்
முடிவதில்லை தான்.

அது போலத்தான் எனதன்பும்..

……..

தினங்களில் குறுக்கிக்
கொள்ள..
என் காதல்
இன்பியல் நிகழ்வல்ல..

மாறாய் பிரிவின்
இரத்தம் கசியும்
இசைத்தட்டு..

வாழ்வின் நிகழ்தகவு
முள்ளாய் கீறினாலும்..

மகத்தான
வாழ்வொன்றின்
ஆன்ம ராகத்தை
பாடியே
தீரும்..

மீண்டும்..

கேட்கிறாயா சகி..?

அந்தந்த நேரத்து நியாயங்கள்..

 

26733705_386350815123126_611877709230030666_n (1)

 
அந்த அழகான
பலிபீடம்
அந்த ஒற்றை
வெள்ளாட்டின்
முன் கருணை
விழிகளோடு
வீற்றிருந்தது..

குளிர்மையும்
வழுவழுப்பும்
நிரம்பிய
அதன் வளைவுகளில்
வெள்ளாடு லயித்திருந்தது..

அழகானது இது..

தலை பொருந்துவது
போன்ற வளைவு..

சற்றே சாயலாம்.
கொஞ்சம் உறங்கலாம்..

வெள்ளாட்டின் விழிகளில்
வண்ணக்கனவுகள்
மிளிர்ந்தன..

கத்தியின் கனம்
தெரிவு செய்ய
வெள்ளாட்டின் கழுத்து
மிருதுவான வருடல்களால்
ஆராயப்பட்டது..

தனித்தே பிறந்த,திரிந்த
வெள்ளாடு தன் மீது
சொரியும் வருடல்களால்
கசிந்தது..

எவ்வளவு கதகதப்பான
கரங்கள்..
ஆதரவாய்..ஆதுரமாய்..

நீ தனியன் இல்லை
என்பதை உணர்த்துவது
போல..

கலங்கி அழத் தொடங்கியது..
வெள்ளாடு.

அனலேறிய அப்பகற்
பொழுதில் தன் மீது
தெளிக்கப்பட்ட
குளிர் நீரை அருவியென
கருதி சிலிர்த்த வெள்ளாட்டின்
கழுத்தில் மாலையும்
இடப்பட்டது…

எவ்வளவு மரியாதை..
வெறும் ஆடு என
கருதாமல்..
செய்யப்பட்ட
பெருமை அருமை.

ஆகா.. இவ்வுலகம்
அன்பின் மடியாய்..
கருணையின்
கருவறையாய்..

சே..இந்த அன்பிற்காக
சாகவும் செய்யலாம்..

என வெள்ளாடு
கண்கலங்கி
உருகிய அந்நொடியில்..தான்

தலை தனித்து விழுந்தது.

 

நித்திய நிலவொன்றின் சத்திய வார்த்தைகள்..

26063421_379710325787175_827668468199724837_o

 

சொற்களின் ஊடே
ஒளிந்திருக்கும்
முட்கள் நட்சத்திரங்களைப்
போல மின்னி..
பேரன்பின் கதிர்களை
மறைக்கின்றனவா
என்றெல்லாம் நான்
சிந்திப்பதில்லை.

இன்னும் கூட
வார்த்தைப் பின்னல்களால்
உருவேறிய அந்த சாட்டை
ஆன்ம உதிரத்தின்
சுவை பருகுகிறது என்று
நான் கலங்குவதில்லை..

ஏனெனில்..
கொடுங்காயத்தின் வலி
மறைத்துக் கூட
என் உணர்வுகளின் நிலா
வெளிச்சம்..
உன் இருட்பாதையில்
உன் துணையாய்
நகரும் என்பதை நான்
அறிவேன்..

உரையாடல்களற்ற
பொழுதொன்று
கால நதியில் சருகென
மிதக்கும் அந்த நொடியில்..
உன் விழிகள் என்னைத்
தேடும்.

நான் தூரத்து புல்லாங்குழல்
இசையாய் கரைந்திருப்பேன்..

அக்காலைப் பொழுதில்
உன் தேநீர் கோப்பையில்..
உதிரும் உன் ஒரு துளி
கண்ணீரைப் பற்றிதான்
கவலை எனக்கு.

உன் குளிர் கால
போர்வையினுள் பரவும்
வெப்பமாய்.. என் கனவுகளை
அன்று நீ உணர்வாய்..

அதற்கு முன் புல்லின்
நுனியில் பூத்திருக்கும்
எனதன்பின்
பனித்துளி யாரும்
அறியாமல்..

அனலேறிய இவ்வாழ்வின்
சூடு பொறுக்காமல் ஆவியான
கதை..

உனது மிச்ச வாழ்வின்
தேடலாய் இருக்கக்கூடும்
என்கிற அச்சத்தில் தான்

உனது விடியலின்
வெளிச்சக் கீற்றாய்..
நான் எரிந்துக் கொண்டே
இருக்கிறேன்..

…..

அதை நீ
தீப்பந்தம் என்கிறாய்..
நான் மெழுகுவர்த்தி என்கிறேன்..

இந்த புரிதலின்
வேறுபாட்டினில் தான்..

இந்த முடிவிலிக் கவிதை‌‌..
சில பூக்களோடும்..
சில புன்னகைகளோடும்..
ரகசிய கண்ணீர் துளிகள்
பலவற்றோடும்..

தொடர்ந்துக் கொண்டே
இருக்கிறது.

……….

கடலானவனின் கதை..

 

21_2bg

 

அந்த புன்னகை
கடல்.
யாரும்
கறைப் படுத்தி
விட முடியாது.

அந்தப் பார்வை
கடவுளின்
சாயலுடையது.
யாரும் களங்கப்
படுத்தி விட முடியாது.

அந்த வீரம்
வானம்.
யாரும் அளந்து
விட முடியாது.

அந்த அறம்
மழை.
யாரும் மலராமல்
இருக்க முடியாது.

அந்த நேர்மை
சுடர் விண்மீன்.
யாரும் கவனிக்காமல்
கடக்க முடியாது.

அந்த தியாகம்
பெருமழை அருவி.
யாரும் நனையாமல்
தப்ப முடியாது.

அந்த மொழி
வீசும் மென்சாறல்.
யாரும் சிலிர்க்காமல்
சிதற முடியாது.

அந்த கருணை
பாலையின் ஊற்று.
யாரும் தணியாமல்
தடம் புரள முடியாது.

மொத்தத்தில்..
அந்த
மனிதன் ..

யாரும்
கடக்கவே முடியா..
பெருங்காவியம்.

உலகத்தமிழர்களுக்கு..

தலைவர் பிறந்தநாள் வாழ்த்துகள்.

ஒரு மணல் வீடும் சொச்ச பாரத்தும்..

22730590_356813458076862_6275861430852755470_n

அந்த பிஞ்சு
விரல்களுக்கும்
ஒரு மணல் வீடு
இருந்திருக்கும்..

அலை தழுவி
கலைக்காத
தொலைவில்..
காக்கிச் சட்டைகளும்
கந்து வட்டியும்
கனவுகளை அழிக்காத
வரையில்…

அந்த மணல் வீடு
அப்படியே
இருந்திருக்கும்..

இரவின்
கரு நிழல்
பகலின் மீதும்
படிய தொடங்கும்
நிலத்தில் தான்
குழந்தைகள் எரியத்
தொடங்குகின்றன…

கொழுந்து விட்டெரியும்
நெருப்பில் பொசுங்கும்
மயிலிறகு தேகங்களுக்கு
எரிவதற்கான காரணங்கள்
தேவையில்லை..

புரியவுமில்லை.

பணம் தின்ன
பிணம் பண்ணும்
நிலத்தில்
இனி ரணம்
சுமக்க இயலாது என
தீ கனம் சுமந்து
எரிகிறார்கள்.

நேற்றைய ஊடகப்
பசிக்கும்..
குற்ற உணர்வற்ற
நமது
முணுமுணுப்புகளுக்கும்
தீ நியாயம்
செய்திருக்கிறது.

இன்றையப் பசிக்கு
நியாயம் செய்ய
சாவின் நாவுகள்
டிஜிட்டல் பாரத
வீதிகளில் தேடி
அலைகின்றன..

எங்கோ முகவரியற்ற
வீதிகளில்
விளையாடிக்கொண்டு
இருக்கும்
குழந்தைகளோ..

அறுக்க கதிரற்று
உயிர் உதிர்க்க
காத்திருக்கும் விவசாயியோ
அவைகளுக்கு கிடைக்கக்
கூடும்..

பிரதமரின் ஆடை
செலவிற்கு கூட
பெறுமானம் இல்லாத
குழந்தைகள் செத்துதான்
போகட்டுமே..

இறக்கை விரித்து
அயல் தேசம் பறக்கிற
அவசரத்தில்
விவசாயி சாவு
விக்கலுக்கு கூட
சமமானதில்லை..

சாகட்டும்.

நீரோவின்
புல்லாங்குழலுக்கு
சாவுகளைப்
பற்றி சங்கடங்கள்
இல்லை.

…..
எல்லாம் கடக்கின்றன.
அவசர கதி வாழ்வில்
மறதி என்பது நீதி.

இன்று
கவலைப்பட..
கோபம் கொண்டு
இரண்டு கெட்ட வார்த்தைகள்
உதிர்க்க..
காரணங்கள் கிடைக்கும்
வரை..

நமக்கு சொச்ச பாரத்தும்
மிச்ச கருப்புப் பண
கனவும் இருக்கவே
இருக்கின்றன..

கூடவே நாம்
உச்சுக் கொட்ட
ஒரு நாள் செய்திகளும்..

ஆகையால் எனக்கு கடலென்றும் பெயர் …

 

header_essay-stormy-nationalgeographic_2474065

நள்ளிரவின்
நட்சத்திர மிதவைகளோடு
எனக்கு முன்
உயிர்ப்புடன்
உரையாடிக் கொண்டிருந்த
அந்த பெருங்கடலுக்குள்
சட்டென பாய்ந்தேன்..

எனக்குள்ளும்
ஆர்ப்பரித்து
கிடக்கிற அலைகளும்..
ஆசைகளாலும்
இருண்மைகளாலும்
இறுகிக் கிடக்கிற
சில நினைவுப் பாசிகள்
படிந்திருக்கிற
பாறைகளும் நிரம்பிக்கிற
கடலொன்று இருக்கிறது
என அறியாமலேயே
பெருங்கடல் என்னை
உள் வாங்கியது.

திணறிய மூச்சுக்கூட்டில்
சில கனவுக் குருவிகள்
கத்திக் கொண்டிருந்ததை
கவனிக்காத பாவனையோடு
மூழ்கி தீர தொடங்கினேன்..

உடைந்த மண்பானை
குடுவை என உடலம்
மாறிப் போனதாய்
உன்மத்தம் கொண்டேன்..

அடுக்கடுக்காய் சரிந்த
வாழ்வின் கசப்பு மீந்த
ஓலைகளில் இன்னும்
மங்காமல் தேங்கிற்று
என் பால்யத்தின்
புன்னகை ஓன்று.

என் விழிகளொடு
கசிந்தவை எல்லாம்
கடலோடு கலக்க..

என்னுள் மிஞ்சியவையும்
கடல் நீலமாய் மாற..

அந்த முழு நிலா இரவில்
நானே பெருங்கடலானேன்..

என்றேனும் உங்களில்
உணர்ச்சிகளின்
விளிம்பில் பேயாட்டம்
ஆடும்
யாராவது உணர்ந்துக்
கூட பார்க்க இயலும்..

சற்று முன் நீர்
தெளித்து
உங்கள் கண்ணீரையோ..
மாசற்ற புன்னகையையோ..
நனைத்து விட்டு
மீண்டும் கடலுக்கே
திரும்பிய அந்த
பேரலை…

நானாக இருப்பேன் என.

இறுதி மேடை..

22310419_354474694977405_8608714965574738064_n

தேர்ந்தெடுக்கப்பட்டு
உருவாக்கப்பட்ட
பொன்னிற மாலை ஒன்றில்..
அந்த சிவப்பு கம்பளம்
விரிக்கப்பட்ட மேசையின்
முன்
அவர்களெல்லாம்
அகம் மகிழ ஒன்று
கூடி இருந்தார்கள்..

கனிவு நிரம்பிய
ஒருவன்
விழிகளை
பிடுங்கிதான்
அம் மேசையின்
மெழுகு வர்த்தி
கொளுத்தப்பட்டிருந்தது.

நம்பிக்கை இறந்த
அவனது
ஆன்மாவின் உதிரத்துளிகள்
அவர்களது கண்ணாடிக்
கோப்பையை செந்நிற மாய்
நிறைக்க…
ஆரம்பித்தது அவன்
எழுதிய கவிதை
ஒன்றின் மேல்…
வன்ம வெறுப்புணர்வின்
வண்ணம் பூசும் வேலை..

காவியமாய் மலரத் தொடங்கிய
கவிதையை அவரவர் தங்கள்
அழுக்குகளுக்கு ஏற்ப
அதை மலிந்த ஓவியமாய்
மாற்றிக்கொண்டிருந்தார்கள்.

வெட்டப்பட்ட அவனது
ஆழமான நம்பிக்கைகள்
ஆங்காங்கே
அந்த அறை முழுக்க
மாமிசத்துணுக்குகளாய்
சிந்திக்கிடக்கின்றன..

அவரவரின் துரோகங்களுக்கு
அவனின் சொற்களை
தூக்கிலேற்றி
தங்கள் சொற்களின்
மேல் புனித பூச்சு
நிகழ்த்தினார்கள்.

ஏதோ தருணத்தில்
அவர்களுக்காக
அவன் சிந்திய
கண்ணீரின்
வெப்பத்தில் தான்
அவர்கள்
மாலை நேர
மயக்கத்து குளிர்
காய்ந்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களது காலணி
இடுக்குளில் இடறப்பட்ட
அவனது
களங்கமற்ற நேசத்தின்
வண்ணச்சிறகுகள் மீது
எளிதில் எச்சில் துப்பி
தூரப் போனார்கள்.

அவனது இறப்பில்
மகிழ்ந்திருந்த அவர்களுக்கு
தெரியாது..

அவரவர்களுக்கு என்று
ஒரு செந்நிற மேடை
தயாராகி காத்து இருக்கிறது
ஒரு பொன்மாலை விருந்திற்காக..

பூனை வளருங்கள்..

 

22405521_351864861905055_1599742958714680446_n

 

பூனை வளருங்கள்.

உங்களுக்கு
அடிமையாய் இருக்க..

உங்கள் வருகையை
எதிர்பார்த்திருக்க..

உங்கள் கால்களில்
பணிந்து நளிந்து
குழைய..

நள்ளிரவுகளில்
கதகதப்பாய்
உங்களோடு உறங்க..

நீங்கள் மிச்சம்
வைக்கும் எதையும்
நாசூக்கு பார்க்காமல்
நக்கித் தின்ன..

எதன் பொருட்டும்
உங்கள் அதிகாரத்தின்
மீது
சொல்லொன்றும்
உரைக்காமல்
மெளனிக்க..

ஏவும் பொழுதுகளில்
உங்கள் சுட்டு விரல்
காட்டுகிற…
எலிகளையும்
இன்னும் பிறவையும்
வேட்டையாட..

பூனை வளருங்கள்.

அது.
மனம் பிசகும்
தருணமொன்றில்
நம் கழுத்தை
கவ்வும் அபாயம்
இருப்பினும்…

தூக்குக் கயிற்றின் பாடல்..

 

 

21192660_340527729705435_3007562946593908183_nஅந்த தூக்குக்கயிறு
கனவின் வெப்பத்தை
சுமந்து வாறே
இன்னும் ஊசலாடிக்
கொண்டு தான்
இருக்கிறது…

காற்றின் சிறகுகளோடு
பின்னி..
எரிதழலினுடாக கரைந்துப்
போன அனிதா இன்னும்
குரல் வளை நெரிய
இருமிக் கொண்டுதான்
இருக்கிறாள்..

துயர் மிக்க பின்னிரவின்
கடைசித் துளி கரைவதற்கு
முன்னால் சற்றே கவனித்துக்
கேளுங்கள்..

குரல் வளை ஒன்று
நொறுங்கி உடைந்து
கானலாகிப் போன
அவள்
கனவுகளின் கேவல் ஒலி
உங்கள் ஆன்மாவை
தீண்டலாம்..

நள்ளிரவுகளில் விழி எரியும்
வெப்பத்தை
சுமந்து புத்தகங்களின்
பக்கங்களை அவள்
மென் விரல்களால்
புரட்டும் ஒலி குளிர் காற்றால்
போர்த்திக்கிடக்கும்
உங்கள் செவிகளில்
முணுமுணுப்பாய் முனகலாய்
கேட்கக்கூடும்.

ஓடுகள் சரிந்த
வீட்டின் கூரையை
ஊடுருவி பாதரச
பிம்பமாய் மிதந்து
வருகிற
தேவதையின்
கண்ணீர் துளி
விழி மூடி உறங்கும்
உங்கள் விழிகளில் விழலாம்..

விழுந்த சூட்டினில் சுக
கனவுகளோடு கிறங்கிக்
கிடக்கிற உங்கள் இமைகளில்
தீ எரியலாம்…

ஆனால் நாம் இதற்கெல்லாம்
அசரப் போவதில்லை.

வலி மிகுந்த நினைவு
என்றொரு பாலையை
கடக்க மறதி ஒட்டகங்கள்
நம் முன்னால் காத்துக்
கிடக்கின்றன..

எதையும் கடப்போம்.
எதையும் மறப்போம்.
மீறி துளிர்த்தால்
பிக் பாஸ் உலகத்தில்
ஒளிந்துக் கொள்ள
நமக்கு ஓரிடம் உண்டு.

இன்னும் உறுத்தினால்..
எவனையாவது திட்டி
சமூகக் கடமை
ஆற்றி விட்ட அக திருப்தியை
முகநூலின் முட்டுச்சந்தில்
தேடி திரியலாம்..

இன்னும் ஏதேனும்
எட்டிப்பார்த்தால்
எடப்பாடி:தினகரன்
கமல்:, ரஜினி
என்றெல்லாம் யோசித்து
சரிந்துக் கொள்ள
சாக்கடைகள் நமக்குண்டு..

95 வயது முதியவர்
இன்னும் இருக்கிறரா
ஜெ இட்லி சாப்பிட்டாரா
என்கிற சரித்திரக்
கேள்விகளில் நமது மனதை
தொலைக்கலாம்….

என்ன செய்யலாம் ..
இன்றைய சூடான செய்தி
எங்கிருக்கிறது என நோண்டி
நொங்கெடுக்க..
இருக்கவே
இருக்கின்றன ஏற்கெனவே
முடிவுகள் தீர்மானிக்கப்பட்ட
விவாத அரங்குகள்.

இவர்கள் விவாதிக்க
வேண்டுமெனில்.
தினந்தோறும் அனிதா
தூக்கில் தொங்கியாக
வேண்டும்..

என்ன செய்வது..

கனன்று எரிந்து தணிந்திருக்கிற
சாம்பலின் ஊடாய் அனிதா
புன்னகைக்கிறாள்.

நம்மைப் பொறுத்த வரை
என்றோ அவள் மரித்துப் போனாள்..

அவளோ மரித்தது நானல்ல.
என்னை
மறந்து ..திரியும் நீங்களே
இறந்துப் போன பிணங்கள்
என புன்னகைக்கிறாள்.

இன்னும் தூக்குக் கயிறு
ஊசலாடிக் கொண்டே
சொல்கிறது..

பிணங்களே…நீங்கள்
என் மீதேறி தொங்கி
என்னை இழிவாக்காதீர்கள்..

நேரடியாக சுடுகாட்டில்
சென்று படுத்து விடுங்கள்..

ஏனெனில் அதுதான்
உங்கள் நாடு..
பிணங்களுக்கான வீடு.

ஹம்ரா தேஷ் கே…
குச்சு குச்சு ஹோத்தா ஹை..

பயண மொழி..

 

road-trip-1

இப்படி ஒரு பயணம்.

தேநீர் கடைகள்.

இரவு ரசித்தல்..

இளையராஜா.

காலை விடியல் வான்
கண்டல்..

பல நினைவுப்புள்ளிகளோடு
கால நதியில் கல்லெறிந்து
பார்த்தல்..

சில துளி கண்ணீர்.

ஆங்காங்கே
பல சிறு புன்னகைகள்..

சாலையை கடக்கும்
முகம் அறியாத
வயதான தாய்
மீது காரணமின்றி
துளிர்க்கிற
மாசற்ற அன்பு..

பக்கத்து இருக்கையில்
நம்மோடு பயணிக்கிற
நமது நம்பிக்கை..

முடிவில் சில கவிதைகள்..

டாட் .

Page 4 of 8

Powered by WordPress & Theme by Anders Norén