பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: கட்டுரைகள்.. Page 5 of 11

ஒரு இரவில்…எல்லையற்ற விடியல்கள் —

 

Ilayaraja-16-2

எப்போதும் இல்லாத அளவிற்கு அந்த இரவு அவ்வளவு அமைதியானதாக என்னுடன் பயணித்துக் கொண்டு இருந்தது. இரவுகள் விசித்திரமானவை. மனித உணர்ச்சிகளை ஒரு இரவால் மூர்க்கம் கொள்ள வைக்கவும், அமைதிப்படுத்தி ஆற்ற வைக்க முடியும் என்பது யாரால் மறுக்க முடியும்.. மனித வாழ்வின் பாடுகளை மனித மனம் அசை போடுவதற்காக இரவு ஒரு நீண்ட அமைதி வெளியை ஏற்படுத்துகிறது.

அப்படி ஒரு இரவில் தான்.. நியான் விளக்குகள் ஒளிர்ந்த அந்த தேசிய நெடுஞ்சாலையில் எனது மகிழுந்து அமைதியாக விரைந்துக் கொண்டு இருந்தது. தனிமை கொப்பளிக்கும் பயணங்களில் எல்லோருக்கும் வழித்துணையாக வாய்க்கும் இளையராஜா தான் எனக்கும் வழித்துணையாய் வாய்த்திருந்தார். மகிழுந்து ஓட்டப் பழகியதில் இருந்து தனிமையாய் இவ்வளவு நீண்ட தூரம் பயணிப்பது இதுதான் முதன் முறை.ஏறக்குறைய தமிழ்நாட்டை குறுக்கே கடக்கிறேன். இந்த பெருநிலத்தில் நானும் நகரும் புள்ளியாக.. விழிப்புற்ற ஆன்மாவோடு.. துளித்துளியாய் சொட்டும் இரவொன்றில் தனிமையின் விரல் பிடித்து கடப்பது நினைப்பது பரவச வெளியில் உன்மத்தம் கொண்டிருந்தேன்..

எல்லோராலும் கைவிடப்பட்ட..நோயுற்ற ஒரு குழந்தையாய் இந்த உலகத்தில் நான் தோன்றினேன். என் பால்யத்தில் என் அம்மா மட்டும் என் தோழி. அவளின் கலங்கும் விழிகளும்..எதிரே இருக்கும் சாயம் போன வீட்டு வசதி வாரியக் குடியிருப்புச் சுவரும் தான் எனது பால்யக் கால நினைவுகள். அம்மாவின் கதகதப்பான உள்ளங்கைகளுக்கு அப்பால் ஒரு உலகம் இருக்கிறது என்று நம்ப முடியாத எளிய ஆன்மாவை கொண்டிருந்தனாலோ என்னவோ.. இந்த பயணம் எனக்கு மிகப்பெரிய சாகசமாக இருந்தது. வாழவே முடியாது என என்னாலே நம்பப்பட்ட என்னாலும் இந்த உலகில் எந்த புள்ளிக்கும் மிகச்சாதாரணமாக ஒரு பறவைப் போல தனித்து பறந்து போய் விட முடியும் என்கிற பெரு நம்பிக்கையை இந்த பயணமும், என் மகிழுந்தும் எனக்கு தந்திருந்தன..

இரவு விடியலை நோக்கி விரைந்துக் கொண்டிருந்தது. கண்கலங்கியவாறே என்னுள் மகத்தான நம்பிக்கையை ஏற்படுத்திய அந்த பேரன்பின் வெளிச்சத்தில் எனது பயணம் நெகிழ்வின் தாலாட்டோடு நீண்டது. இரவில் மிகப்பெரிய யானை அமர்ந்து இருந்தது போன்ற உறைந்திருந்த அந்த பெருமலைகளும், ஏற்ற இறக்க சாலைகளும் என்னை பரவசத்தில் ஆழ்த்தி இருந்தன..

சற்றே என்னை ஆசுவாசப்படுத்த … சாலையின் ஒரத்தில் இருந்த அந்த தேநீர் கடைக்கு முன்னால் என் மகிழுந்தை நிறுத்தினேன். ஏனோ இறங்க மனமில்லாமல் இருக்கையை சற்று சாய்த்து வேடிக்கை பார்த்தவாறே அமர்ந்திருந்தேன். அது ஒரு எளிய தேநீர் கடை. கடை மூடும் நேரம் போல. அந்த கடைக்காரர் சற்றே கடுகடுப்பும், முணுமுணுப்புகளும் உடைய மனிதராக தெரிந்தார். அந்த கடை வாசலில் அழுக்கு உடைகளோடு அமர்ந்திருந்திருந்த மனநிலை பிசகிய ஒருவரை அவர் ஏசிக் கொண்டிருந்தார். ஏய்..எழுந்து போ.. இனி இங்கே உட்கார்ந்தால் அடிப்பேன்..போ என்றெல்லாம் ஏசிக் கொண்டிருந்தார்.

கடையை மூடி விட்டு கிளம்பும் அவசரத்தில் இருந்த அவருக்கு அந்த மனநிலை தவறியவர் போல இருந்தவர் மிகவும் தொந்தவராக இருந்தார் போல.. கடைக்காரர் ஏதாவது செய்து அவரை விரட்டி விட முயன்றார்.

ஆனால் அந்த ஏச்சு,பேச்சுகளும் அந்த மனநிலை பாதித்தவரை பாதிக்கவில்லை. ஒரு கல்சிற்பம் போல அந்த மனிதர் உறைந்திருந்தார். வெறித்த பார்வையோடும், வாயில் எச்சில் ஒழுக..கலைந்த தலையோடும், தாடியோடும் அவர் அமர்ந்திருந்தது என்னவோ போலிருந்தது. வார்த்தைகளை நீராய் கொட்டி உறைந்திருந்த அந்த மனிதனை அசைக்கப் பார்த்த கடைக்காரர் ஒரு சமயத்தில் அலுத்துப் போனார்.

அருகே இருந்த பண்பலை வானொலியை ஒலிக்க வைத்து விட்டு இருக்கும் நாற்காலிகளை கடைக்காரர் மெதுவாய் அடுக்கி வைக்கத் தொடங்கினார்.

அக்கணத்தில் தான் இளையராஜா பண்பலையில் சோலை பசுங்கிளியே… என்று பாடத்தொடங்கினார். அந்த நள்ளிரவில்.. அப்பாடல் தானாய் தோன்றிய ஊற்றாய் எங்களுக்குள் ஊற தொடங்கியது. அந்த இசையும், அப்பாடலின் வலியும் ஏதோ மனதை பிசையத் தொடங்கினது. அதுவரை கடுகடுப்பாய் இருந்த கடைக்காரர் கூட அமைதியாகி விட்டது போல தோன்றியது. அந்த இரவை தன் வயப்படுத்தி தனது கட்டுப்பாட்டுக்குள் அந்த பாடல் இழுத்துக் கொண்டே சென்றதை என்னால் உணர முடிந்தது.

பாடல் முடிந்தது. வானொலியை நிறுத்தினார் கடைக்காரர். அந்த நிசப்த வெளியும், கேட்ட இசையும் இந்த உலகை வேறொரு தளத்திற்கு கொண்டு சென்றிருந்தன. திடீரென பெருங்குரல் எடுத்து கத்தி அழத் தொடங்கினார் அந்த மனநிலை தவறியவர். அவரை வேதனையோடு கடைக்காரர் பார்த்துக் கொண்டிருந்தார்.

மனித வாழ்வு எத்தகையது..? எதற்காக இந்த பாடுகள்… எதற்காக இவ்வளவு வலிகள்… எதை நாம் அதிகம் நேசிக்கிறோமோ அதுதானே நம்மை வலித்து கொல்கிறது…? என்றெல்லாம் என் சிந்தனை பல திசைகளில் விரிந்துக் கொண்டிருந்த போதுதான் அது நிகழ்ந்தது..

அதுவரை நிறுத்தி இருந்த அடுப்பை மீண்டும் பற்ற வைத்தார் அந்த கடைக்காரர். ஒரு தேர்ந்த முதிர்ச்சியோடு ஒரு தேநீரை தயாரித்து ஒரு கண்ணாடிக் குடுவையினுள் ஊற்றி அந்த மனநிலை பிசகியவருக்கு அருகே வைத்தார். சாப்பிட்டு இங்கே படுத்துக்கோ.. என்றவாறே விளக்கையும், அடுப்பையும் அணைத்த வாறே அவர் புறப்பட்டார். அடிக்கடி கண்களை துடைத்துக் கொண்டே வேக வேகமாய் நடந்து இருளில் கரைந்துப் போனார் அந்த கடைக்காரர்.

ஆனால் மனநிலை பிசகியவர் அழுகையை நிறுத்தவில்லை. நானும் புறப்பட்டேன். மெதுவாய் மகிழுந்தை ஓட்டிக் கொண்டு போன எனக்கு அந்த அழுகை ஒலியை தாங்க முடியவில்லை.

வலியும்..பாடுகளும்..காயங்களும் இல்லாத ஆன்மா யாருக்கும் இல்லாதது தான் கடவுளை தோற்றுவித்து இருக்கிறது என்று உணர்ந்த தருணம் அது.

இதையெல்லாம் தாண்டி ஒரு இசை..ஒரு குரல்..உயிரை உலுக்கி உள்ளுக்குள் புரையோடிப் போன ஒரு காயத்தை கண்ணீராய் சுரக்க வைக்கிறதே… நரகமாகிப் போன மனித வாழ்வில் ஏதோ ஒரு நொடியில் நம்மை ஆற்றுப்படுத்த கண்ணீர் தானே ஒரே வழி.

இதில் யார் மனநிலை பிசகியவர் என்று யோசித்த போது..நாம் எல்லாருமே தான்.. என்று நினைக்க தொடங்கியது…

இரவின் இருளை கிழித்து..என் மகிழுந்து விரைந்துக் கொண்டிருந்தது.

.

தமிழ்த்தேசியம்- சில புரிதல்கள்.

 

22228191_351255648632643_1871345362821044997_n

தமிழ்த்தேசியம் என்பது தமிழ்த்தேசிய இன நலனிற்கான கருத்தியல். இத்தனை ஆண்டு காலம் உரிமைகள் மறுக்கப்பட்டு..அடிமை இனமாக ஆளப்பட்டு வருகிற ஒரு இனத்தின் மீள் எழுச்சிக்கான கருத்தியல்.

இது மற்ற இனங்களின் மீதான வெறுப்புணர்ச்சியில் கட்டமைக்கப்படும் கருத்தியல் அல்ல. மாறாக எம் இனத்தின் மீதான பற்றுணர்ச்சியில் உருவான கருத்தியல்.

அதுவும் வெறும் பற்றுணர்ச்சியில் உருவானது அல்ல.. ஒன்றரை லட்சத்திற்கும் மேலான எம் இனத்தாரை இழந்த போது..காக்க முடியாமல் போனது எதனால் என சிந்தித்ததன் விளைவு..புரிதல் .

தமிழ்நாட்டை நேசிக்கும் எவரும் தமிழ்நாட்டினை ஆள உரிமை உள்ளவர்கள் என பேசுபவர்கள் தன்னை தமிழ்த்தேசியர்களாக ஏன் காட்டிக் கொள்ள வேண்டும்… நீங்கள் சர்வ தேசியனாக காட்டிக் கொண்டு போக வேண்டியதுதானே..

ஆனால் தமிழ்த் தேசியராக அடையாளப்படுத்திக் கொண்டு..உலக தேசியம் பேசி கீழ்மைப் பட்டு அம்பலப்பட்டு நிற்கிற திராவிட கருத்தியலுக்கு காவடி தூக்குகிற வேலை.

தமிழ்நாடு தமிழருக்கே வா..இல்லை தமிழ் நாட்டை நேசிப்பவருக்கா… என்றால் வா..வாழ்..நேசி…நேசிக்கப்படு. ஆனால் இம் மண் அதன் பூர்வக்குடிகளுக்கானது என்ற புரிதலோடு நேசி.

என் மண் எனக்கானது என்பதை மறுத்து இங்கே வாழும் பிற மொழி சிறுபான்மை மக்களை இம் மண்ணின் பூர்வக்குடிகளுக்கான அரசியலை எதிர்ப்பு அரசியலாக காட்ட முனைவதுதான் தமிழ்த்தேசியமா..

பிறகு எதற்கு தமிழ்நாடு..தமிழர் உரிமை என்றெல்லாம் பேச வேண்டும்..

இதற்கு இந்தியத் தேசியம் பேசி காவிக்கொடி பிடிப்பவன் எவ்வளவோ மேலானவன். குழப்பாமல் நம்மை எதிர்க்கிறான்.

நாம் தெளிவாக இருக்கிறோம். எதிரிக்கும் இது புரிந்திக்கிறது.

நடுவே குழப்ப நங்கூரமிட்டு..குழப்பக் குட்டையில் திராவிட மீனை தேடும்
,”தோழர்கள் ” மீண்டும்..மீண்டும் அம்பலப்படுவார்கள்..

சாதி ஒழிப்பினை பிரதானப்படுத்துவதன் நுண்ணரசியல் இங்கே ஏற்கனவே வலிமையோடு திகழும் சாதீய உணர்வை இன்னும் வலிமைப்படுத்தவே..ஊரும் ,சேரியும் சேர ஓர்மைப்புள்ளிகளை பேசாது வெறுமனே சாதி ஒழிப்பு அரசியல் பேசுவது பலனற்றது..புனைவுகளுக்கு ஏன் பலன்..இன நலன்..?

வலிந்து கட்டப்படும் கதாநாயக பிம்பம் யாருக்காக..எந்த எழுச்சிக்கு எதிரானது என்றெல்லாம் நமக்கு புரியாமலில்லை..கண்டிருந்த வான் கோழிகளைப் பற்றி கான மயில்களுக்கு கவலை இல்லை.

இருந்தும் தமிழனின் வரலாற்றில் 50 வருடத்திய தவறுகள் மீண்டும் நிகழாமல் இருக்க..தூய்மை வாதி பட்டம் சுமப்பதில் தவறில்லை.

சொல்லப்போனால் அன்று சிங்கள பேரினவாத அரசிற்கு வால் பிடித்த..மிருதுவான..இவர்களைப் போலவே தமிழர் நலன் என்ற பெயரில் தமிழ் இன நுண்ணரசியல் பேசி குழப்பிய வரதராஜ பெருமாள் தான் நினைவிற்கு வருகிறார்.

ஆனால் வரலாறு வரதராஜ பெருமாள்களுக்கு உரித்தானது அல்ல..

அது பிரபாகரனுக்கானது.
தற்போது அவர் தம்பிக்கானது.

வேண்டுமென்றே வெளிச்சப் புள்ளிகள் செலுத்தி மின்ன வைக்க கட்டாயத்தில் நாங்கள் இருட்டில் திசைமாறிப் போன விட்டில் பூச்சிகள் அல்ல.

நாங்கள் பகலவன்கள்.

பற்றி எரிவோம். பற்றி பரவுவோம்.

அனிதா- சாத்தான் தேசத்தில் பிறந்த தேவ மலர்..

21369170_340527796372095_3352100717578590891_n

 

அமைதியாய் நகர்ந்துக் கொண்டிருந்த எங்கள் மகிழுந்தில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள முடியவில்லை. அந்த நிலவியல் வெப்பமும், முந்திரிக்காடுகளும் எங்களுக்குள் ஏதோ பல செய்திகளை சொல்லி வந்தன.

சுடு வெயிலில் வெளுப்பேறி இருந்த அந்த நிலவியல் தமிழ் நாட்டுக்கு சற்றே வித்தியாசமானது. முந்திரிக்காடுகள் இரு புறமும் அடர்ந்திருக்க தமிழக வரைபடத்தில் இருந்தே தனித்திருக்கிறது அந்த சிற்றூர். அந்த நிலத்தில் நிலவும் அந்த வெப்பத்தை வெயில் என்றெல்லாம் அர்த்தப்படுத்தி விட முடியாது. ஒரு அடர் மழை போல அந்நிலத்தில் வெயில் அரூவ திரவமாய் ஊற்றிக் கொண்டிருந்தது.

அரியலூர் மாவட்டம். அதிகம் கல்வியறிவு அற்ற எளிய ஒடுக்கப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழ்கிற பகுதி. மழை காணா கரிசல் பூமி போல இது வறண்டுப் போன முந்திரிக் காடு. அரியலூர் மாவட்டம் செந்துறை என்கிற சற்றே பெரிய கிராமத்திற்கு அருகில் தான் குமிழுர் என்கிற அந்த சிற்றூர் ஒரு தனித்தீவிற்கு செல்வது போல தனிச்சாலையாக பிரிந்து தனித்துக் கிடக்கிறது.
அந்த வறண்ட பூமியில் தான் அனிதா பிறந்திருக்கிறாள். ஒடுக்கப்பட்ட குடும்ப பின்புலம். சிறுவயதிலேயே புற்று நோயால் தாயை இழந்த துயரம். வீட்டின் அனைத்து வேலைகளையும் செய்தே தீர வேண்டிய பெண்களுக்கே உரித்தான அனைத்து அழுத்தங்கள்.

ஓடு சரிந்த வீடு. கழிவறை கூட இல்லாத ,எவ்வித அடிப்படை வசதியும் இல்லாத வறுமை. அங்குதான் பூத்திருக்கிறது அனிதா என்கிற அந்த தேவ மலர்.

என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாத வறுமையும்,துயரமும் கொடும் கூரையென போர்த்தி இருக்கிற குடும்பச்சூழல்.

 

21314306_340528183038723_5780959351638067232_n

 

 

பிறந்த பிள்ளைக்கு ஊரில் பெரிய பள்ளியில் அட்மிசன் வாங்க பிறந்தநாள் அன்று முதல் அலைந்து, ப்ளே ஸ்கூலில் சிபாரிசு வாங்கி சேர்த்து, கேட்ட லட்சத்தை லட்சியம் செய்யாமல் செலுத்தி, டை கட்டி, முதுகில் பை மாட்டி ஏசி காரில் சென்று இறக்கி, டாடி மம்மியை மழலையாய் கேட்டு, ரெயின் ரெயின் கோ அவே பாட வைத்து, சிக் பஞ்ச் –ல் சிக்கன் சாப்பிட்டு, பாடத்திற்கு ஒரு டியூசன் என பயிற்றுவித்து நீட்டுக்கென நீட்ட ரூபாய் கட்டுக்களை இப்போதிலிருந்தே அடுக்கி வைக்கிற அடுக்குமாடி குடும்பம் அல்ல அது.

அனிதாவின் வீட்டைப் பார்த்தால் தான் தெரியும் அவளது அருமை.

 

 

 

21270793_340527833038758_7411614832373543784_n

 

 

21192796_340527903038751_1219323111100309993_n

அதுதான் சமையலறை. அதுதான் படிப்பறை, அது தான் படுக்கை அறை. அந்த எட்டுக்கு எட்டு இடம் தான் எல்லாமும். அனிதாவின் வீடு எங்கே கேட்ட எங்களுக்கு அடையாளம் காட்டிய ஒரு அம்மா சொன்னார். நாங்க அவள டாக்டரம்மா –ன்னு தான் கூப்பிடுவோம்.

அப்படி ஒரு வைராக்கியத்தை வைரமாய் தன் ஆன்மாவில் அழுத்தி பதிந்து வைத்திருந்து இருக்கிறாள் அவள். எந்த புற்றுநோயால் தன் தாயை இழந்தோமோ அந்த புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் ,தன் தாயைப் போல யாரும் சாகக்கூடாது, தன்னைப்போல யாரும் தவிக்கக்கூடாது என்கிற லட்சியம் எளிய வீட்டில் பிறந்த அவளுள் வலிமையாய் எரிந்துக் கொண்டு இருந்தது.

வலி தாங்கினாள். குடும்பத்தை சுமந்தாள். இரவுப் பகல் பாராது படிப்பு. அது ஒரு வகையான தவம் போல… தியானித்து கனவில் சுமந்த லட்சியத்தை மெய்யாக்க மெய் வருத்தி உழைத்தாள். இயற்கை அந்த எளிய பெண்ணிடம் இயல்பாகவே இனியவற்றை சேர்த்திருந்தது. களங்கமற்ற விழிகள், உழைப்பின் உறுதியால் கண்ட நினைவாற்றல், பொறுமையின் மொழி என அறியப்படாத ஊரில் தெரியாமல் பூத்திட்ட தேவதை அவள்.

தேசம் மாறி பிறந்ததால் தேகம் செத்து கிடக்கிறாள்.

சத்தற்ற உடல் என்றாலும் லட்சியத்தில் கொண்ட பற்றுதான் அவளை இன்று அவளை செத்து கிடக்க வைத்தது.

நம்பினாள். உழைப்பை நம்பினாள். உயிர் உருக்கி உழைத்துப் படித்தால் மண் மூடிய அன்னையை போல.. இன்னொருவரை இழக்காமல் காப்பாற்றலாம் என களங்கமற்று நம்பினாள். அவள் உழைத்தது போல கிடைத்தன மதிப்பெண்கள்.

1176/1200 என்பது சாதாரண எண்கள் அல்ல. சரிந்துப் போன கூரையில் இருந்து உறுதிக் கொண்ட உழைப்பால், கண் விழித்து, கனவு கண்டு நினைவாக்க தன்னையே உருக்கிக் அடைந்த ஒரு தனி மனித சரித்திரம்.

இயற்பியலில் 200, கணிதத்தில் 200, உயிரியியலில் 194,வேதியியலில் 199 என சிகரங்களைத் தொட்டு தனது கனவினை நிறைவேறி விட்டதாக பூரித்து நின்றாள்.
இந்திய வரைபடத்தில் வராத, தமிழக நிலவியலில் லென்சு வைத்து தேடினாலும் அகப்படாத சிற்றூரில் பிறந்து ,முந்திரிக்காடுகளில் பாம்பு கடிக்குமோ, பூரான் கடிக்குமோ, இல்லை.. ஏற்கனவே செத்துப் போனாளே நந்தினி போல நாசமாக்கப்பட்டு விடுவோமோ என்றெல்லாம் நடுங்கி, கழிவறைக்கு ஒதுங்க வழியற்று , எதுவுமே அற்று… உழைப்பை மட்டுமே கொண்டு அந்த எளிய பெண் பெற்றதை என்னால் மதிப்பெண்கள் என்றளவில் மட்டும் குறுக்க முடியவில்லை.

பெரும்பாலும் மின்சார வெட்டு, தண்ணீர் பற்றாக்குறை, மழையற்ற,வளமற்ற பூமி என எந்த தடைகளும் லட்சிய உறுதிக் கொண்ட அனிதாவின் விழிகளுக்கு முன்னால் நிற்க முடியவில்லை.

அப்போதுதான் இடி விழுந்தது போல வந்து விழுந்தது நீட் தேர்வு பற்றிய அறிவிப்பு. அதிர்ந்துப் போனது அந்த சின்ன இதயம். அதென்ன நீட், வேற சிபிஎஸ்ஸி பாடமாமே…அதெலிருந்து தான் கேள்வி கேப்பாங்களாம் என்றெல்லாம் தகவல் வர வர.. இடி விழுந்த மல்லிகைச்செடியாய் மனம் துவண்டு போனாள்.

கேள்வித்தாளுக்கும், படித்த படிப்பிற்கும் தொடர்பே இல்லையே ..மதிப்பெண் வரலையே .. என மனம் நொந்து கவலைப்பட்டவளுக்கு வந்தது சாத்தான் ஓதிய வேதமாய் வந்தது நிர்மலா சேதுராமனின் பொய் நாடக அறிவிப்பு. ஓராண்டாவது விலக்கு உண்டு என்று போகிறப் போக்கில் அள்ளி விட்டதில் ஆறுதலாகிப் போனாள் அனிதா. தமிழக அரசும் நாடக காட்சிகளை தொடர நம்பித்தான் இருந்தாள் தங்கை.

ஆனால் பணம் இருப்போரும், மருத்துவ தொழிலை பரம்பரையாக பணத்தை வைத்து விலைக்கு வாங்கியவர்களும் புகழ்பெற்ற காங்கிரசு தலைவர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் மூலம் வழக்குப் போட வாடிப் போனாள் . காட்சியில் தான் பாஜகவும்-காங்கிரசும் தான் எதிரி. ஆனால் பாஜக எடுக்கக்கூடிய நிலைப்பாட்டிற்கு ஆதரவாக சிதம்பரம் மனைவி நளினி. இங்கே எவனும் எதிரி அல்ல. பணமும் ,அதிகாரமும் இல்லாத நாம் தான் உதிரி என உணர்வதற்குள் உலர்ந்துப் போனாள் அனிதா.

இருந்தும் ஆன்மாவில் ஏதோ புள்ளியில் நம்பிக்கை ஊறிக் கொண்டே இருந்தது.
அத்தோடும் அவள் விட வில்லை. ஓடினாள்..டெல்லி உச்சநீதிமன்றம் வரை. அதிகாரமும், பணமும் பவனி வரும் உச்சநீதிமன்றத்தில் உள்ளங்களை தேடி அலைந்து சோர்ந்தாள் அனிதா .

உச்சநீதிமன்றமும் கை விட.. நாற்புறமும் கதவுகள் அடைக்கப்பட்ட சூழலில் நட்டாற்றில் விடப்பட்ட நலிந்த ரோஜா போல உடைந்தாள் தங்கை.

சோர்ந்து ஊர்த் திரும்பிய அவளை பிவிஎஸ்ஸி சேர சொல்லி அனைவரும் சொல்ல கனவு ரணமாய் சுமக்க பிணமாக மாறத் தொடங்கினாள்.

அதிகாரமும், சட்டமும் கைக் கோர்த்து தன் கழுத்தை நெறித்து கொலை செய்துக் கொண்டிருப்பதை தனது சலனமற்ற விழிகளால் அனுமதிக் கொண்டிருந்தாள் தங்கை.

நொடிக்கு நொடி ஒரு உடை மாற்றும் மோடிக்கு.. இங்கே ஒரு தேசிய இனத்தின் அறிவுப்பெட்டகமாய் உருவாக வேண்டியவள் உயிரை விட தயாராகி வருகிறாள் என தெரிந்திருக்காதுதான்.

கனவு கானலாகிப் போன பின்னர், உயிராய் சுமந்த லட்சியம் அலட்சியம் செய்யப்பட்ட பின்னர் இனி இருந்தும் பிணம் தானே என ரணம் தாங்கி தூக்கில் தொங்கினாள் தங்கை அனிதா..

என்னிடம் ஒரே ஒரு கேள்வி இருக்கிறது…
இதற்கு மேல் அவள் எவ்வளவு தாண்டா மதிப்பெண் வாங்க வேண்டும்…?

நாங்கள் சென்றிருந்த போது அவள் சவப்பெட்டியின் மீது அவள் கனவான ஸ்டெதஸ்கோப் வைக்கப்பட்டிருந்தது. குற்ற உணர்வும், அதிகாரத்தின் மீதான கோபமும் வெடித்து உடைய சென்ற நாங்கள் கதறி அழுதோம்.

யாருக்கும் அங்கே ஆறுதல் சொல்ல ஆளில்லை. ஏனெனில் ஒரு தேசிய இனத்தின் ஆறுதலும், தேறுதலும் தான் அனிதாவாய் அங்கு செத்துக் கிடந்தன.

அங்கே பல முகங்கள் தெரிந்தன. சொந்த தங்கையை இழந்த அண்ணனாய் வெடித்த சிதறிய அண்ணன் சீமானையும், அண்ணன் அமீரையும் எங்களால் யாராலும் தடுக்க முடியவில்லை. இயக்குனர் அண்ணன் கவுதமன் அதை போராட்டக்களமாக்கி அனிதாவின் கனவை காப்பாற்ற போராடிக் கொண்டிருந்தார். வரும் தலைவர்களை ஏற்று அதை ஒழுங்குப் படுத்திக் கொண்டிருந்தார் விசிக தலைவர் அண்ணன் திருமா. தினகரனும் குழப்பங்களுக்கு நடுவே வந்துப்போனார்.

இதற்கு நடுவே சில இளைஞர்கள் தண்ணீர் தொட்டியிலிருந்து கீழே குதிக்கப் போகிறோம் என்றெல்லாம் பீதி கிளப்பிக் கொண்டிருந்தார்கள்.

எதனால் எதை நியாயப்படுத்தப் போகிறோம்..அதுவும் அனிதாவின் மரணத்தை… மத்திய அரசும், அதன் எடுப்பிடி எடப்பாடி அரசும், உள்ளமற்ற நீதிமன்றமும் சேர்ந்து செய்த மாபாதக படுகொலை ஒவ்வொரு தமிழனின் உள்ளத்தையும் ரணமாக்கி வைத்திருக்கிறது. இனி எரியும் நெருப்பிற்கு யார் பொறுப்பு… இல்லையேல் இதுவும் கடந்துப் போகும்..இன்னமும் கடந்துப் போகும், கடைசியில் கடந்துப் போய் நாமும் பிணமாய் கிடந்து போவோமா என்றெல்லாம் ஏராளமான கேள்விகள் எங்களுக்குள்.

அந்நேரத்தில் இதில் மாபெரும் கொடுமை என்னவென்றால்.. கல்வி உரிமைக்காக களப்பலியான அனிதாவை ஒரு சாதியாக காட்ட முயல்வதும், அவளை சாதிப்பார்த்து சாவுக்கு கூட வராமல் ஒதுக்கி வைத்து அரசியல் செய்வதும் மனதை அறுக்கின்றன.

அனிதா எந்த சாதியும் அல்ல. அவள் அனைவராலும் வழக்கம் போல நம்ப வைக்கப்பட்டு வாக்குறுதிகளால் வஞ்சகம் செய்யப்பட்டு, கழுத்தறுக்கப்பட்ட முத்துக்குமார், செங்கொடி,விக்னேசு என்கிற ஏமாளித்தமிழர் வரிசையில் இன்னொரு தமிழச்சி. அவ்வளவே.

உலகையே பதற வைக்கும் ஒரு மரணம். பக்கத்து தெருவில் உரக்கப் பாட்டு போட்டு ஏதோ ஒரு விழா. வெறுத்துப் போனது மனம். சாதியாய் கிடந்து சாதியாய் அழிவானே தவிர ஒரு போதும் இனமாக திரள மாட்ட மாட்டானா தமிழன் என்கிற கேள்வி அனிதா போலவே தூக்கில் தொங்கிக் கொண்டு இருக்கிறது.

இறுதியாக.. பல களங்கள் கண்ட தளபதிகள்(?), தளகர்த்தர்கள்(?), வாழும் அண்ணாக்கள், என்றெல்லாம் கரை வேட்டி எல்லாம் மொடமொட வேட்டிச்சட்டையில் ..சட்டைப்பையில் கட்சிப்படம் வைத்து காட்சி காட்டும் நாடகக்காரர்கள் வர மறுக்கிற சோக முகத்தோடு வலம் வர தொடங்க ..களை கட்டியது அந்த எளிய அப்பாவி தங்கையின் மரணம்.

நீட் தேர்வு கொண்டு வந்தது காங்கிரசு அரசுதானே..அப்போது கூட்டணியில் குதுகலாமாய் கைகோர்த்து நின்றது நீங்கள் தானே.. நீங்களே முன்னால் போகிறீர்களே என எல்லாருடைய மனசாட்சியும் ஊமையாய் கேட்க… அமைதியாய் படுத்துப் ஊர்வலமாய் போகத் தொடங்கினாள் தங்கை.

நீட் தேர்வு ரத்தாகும் வரை தங்கையின் உடல் எடுக்கக்கூடாது என இளையோரும்,மாணவர்களும் கொதிக்க.. வழக்கம் போல் சாமர்த்தியமாய் வந்து குதித்தன சமரசங்கள்.

இறுதியில் கனவை சுமந்த உடல் இடுகாட்டை நோக்கி நகர…

வானம் மெல்லத் தூறிக் கொண்டிருந்தது.

போய் வா..தங்கையே..
உன் கனவுகளை தின்ற
சாத்தான்களை சரியான
நேரம் பார்த்து பழி தீர்ப்போம்.
அன்றைய தினம் தான்
உன் திரு உரு படத்தின்
முன்னால் மானத்தோடு
விழி திறப்போம்..

அன்பின் இழைகளினால் நெய்யப்பட்ட தஞ்சைப் பட்டு- அண்ணன் ஹீமாயூன்.

18300938_294063457685196_4340868929837052457_n

அவரை நான் முதன் முதலில் சந்தித்தப் போது வெக்கை நிறைந்த பாலையின் நடுவே நின்ற கள்ளிப் போல கடுகடுவென முள்ளாய் தெரிந்தார்.
அடுக்கடுக்காய் தெறித்து விழுந்த வார்த்தைகள், வேகமான நடை, உணர்ச்சிப் பிரவாகமான மொழி என எல்லாமே சற்றே தூக்கலாக தெரிந்ததால் நான் கொஞ்சம் அசெளகரியமாகதான் உணர்ந்தேன்.

மின்னல் தெறித்து விழுந்த ஒரு நொடியில் அவர் என்னைக் கவனித்து விட்டார். அய்யாவின் மகனா…என்ற கணத்தில் தம்பி என தாவி அணைத்தார். சட்டென அக்கைகளுக்குள் சிக்கிக்கொண்ட நான் அதன் பிறகு மீளவே இல்லை.

பல பொழுதுகள்..நிறைய சொற்கள்…அனுபவங்கள்…பயணங்கள் என லயிப்பு நிரம்பிய மதுக்கோப்பையாய் அவர் எனக்குள் இறங்கிக் கொண்டே இருந்தார். சின்னஞ்சிறு சொற்களிலும், சில வரி பத்திகளிலும் விவரிக்க முடியா வாஞ்சை மிக்க உறவு வெளியொன்றில் இருவருமே அகப்பட்டு போனோம். சில சிக்கலான பொழுதுகளில் மென்மையாய் நல்ல மாற்றங்களை என்னுள் ஏற்படுத்தி அமைதியாய் என்னை கவனித்தார். மேடைகளில் ஏற்றினார். நிறைய பேச வைத்தார். அதற்காக என்னை தயாரித்தார்.

மாணவர்கள் மத்தியில் அவர் ஒரு கதாநாயகன். பேரை சொன்னால் போதும் …கைத்தட்டல்கள் வானைப்பிளக்கிற அளவிற்கு ஒலிக்க வைக்கத்தெரிந்த இதயம் கவர்ந்த வசீகரன். அண்ணன் சீமானை அச்சு அசலாக நகலெடுக்க தெரிந்த அழகன்.

அவரிடம் என்ன தான் நான் பேசவில்லை…அம்பேத்கரியம், பெளத்தம், இஸ்லாம், இளையராஜா, சூஃபி ஞானம்,மெளனராகம் கார்த்திக் ,என விரிந்துக் கொண்டே போகிற விசித்திர விண்ணகம் அவர்.

என் மகிழுந்து கல்லூரிக்குள் நுழையும் போதெல்லாம் அதன் கதவை திறந்து விடும் அவரின் எளிமை பொங்கும் அன்பை கணிக்கத்தவறிய தம்பி ஒருவன் சொன்னான்..

”என்ன அண்ணே… இவர் தான் 8 கல்லூரி உரிமையாளரா…. அப்படி நடந்துக்க மாட்டறாரே…”

இல்லடா இவர் அதுக்கும் மேலானவர் என்றேன் .

எப்படி..

அங்கே பயிலுகிற… பணிபுரிகிற… அவருடன் பழகுகிற.. நாம் தமிழராய் அவருடன் பயணிக்கிற பல்லாயிரம் இதயங்களின் உரிமையாளர்.

அதனால் தான் அவர் அப்படி இருக்கிறார் என..

ஒவ்வொரு முறையும் அவர் தோள் பிடித்துதான் நான் படியேறுகிறேன். அவரும் சொல்கிறார். இதை சீக்கிரம் சரி செய்யணும் டா…உனக்கு டீரிட்மெண்ட் எடுத்து காலிபர் போட்டு நடக்க வைக்கிறது என் வேலைடா …என கம்மிய குரலில் சொல்லும் அவரது கவலை எனக்கு புரிகிறது.

எனக்கென்னவோ அதெல்லாம் வேண்டாம் எனத் தோன்றுகிறது.

உங்கள் தோள் பிடித்து நடக்க …நான் இப்படியே இருந்து விடுகிறேனே..அண்ணா..

ஆகச்சிறந்த அன்பானவனுக்கு…
அண்ணன் ஹீமாயூனுக்கு…

அன்பு நிறைந்த முத்தங்களுடன்..இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

https://www.youtube.com/watch?v=Wh_v9SZSTJA

 — 

….யார்..யார்..

16640712_255200901571452_3504575587698011278_n

 

 

வெம்மை பூக்கும்
இப்பாலையில்..
தனிமை யார்..
அனலேறிய
நினைவு யார்…

துளித்துளியாய்
வடியும் இந்த
இரவில்..
இருள் யார்..
குளிர் யார்..

அலை அலையாய்
தழுவி எழும்
இக் கடலில்
படகு யார்..
தத்தளிப்பு யார்..

நிலவொளி
சிலையாய்
உறைந்திருக்கும்
இந்தக் குளத்தில்
நீர் யார்..
மெளனம் யார்..

வானமே வழிந்து
ஓடுவதாய்
உணர வைக்கும்
இந்த அருவியில்
ஓசை யார்..
பாய்ச்சல் யார்..

மேகமாய் திரண்டு
வந்து பொழியும்
மழை மாலையில்..
தேநீர் யார்..
கவிதை யார்..

வியர்த்து அடங்கும்
நடுங்கும் நடுநிசிக்
கனவில்..
பிம்பம் யார்….
சொற்கள் யார்…

சலனங்கள்
தொலைத்த
என் விழிகளில்
காதல் யார்..
பிரிவு யார்..

தடுமாறுகிற
உன் சொற்களில்..
வலி யார்..
மொழி யார்…

முடிவாய்..
முடிந்தால்..
சொல்.

யார் ..
யார்..

நம்மில்

யார்..
யார்..

நீயும்
நானும்..

தங்க மீன்களும் அழகனும்..

13925676_162271224197754_3264854279672705024_o

நிலா முழுகி
கிடந்த
கடலில்
நட்சத்திரங்கள்
துள்ளிக்கொண்டு
இருந்த அப்பொழுதில் தான்…

என் ஒற்றைப்படகில்
நான் தனித்திருந்தேன்..

மஞ்சள் வெளிச்சமும்,
இருண்மையும்
மாறி மாறி
பிரதிபலிக்கும்
இரவு பேருந்தின்
சன்னலோர முகத்தோடு
நீ லயித்திருந்த
பொழுதொன்று
ஆகாய அந்தர
வெளியில்
மிதந்துக்
கொண்டிருந்தது..

நிரம்பி ததும்பிய
அலைகளின் நுனியில்
நேற்றிரவு உன்
விழிகளில் மின்னிய
அதே சுடர்கள்..

காட்சி மயக்கத்தில்
தடுமாறி ஆழ் கடலில்
விழுந்த என் மேனி
எங்கும்பூத்து மலர்ந்தன
அல்லிகள்..

அப்படியே
என் இரு கரம் கொண்டு
வெது வெதுப்பான
கடலின் வயிற்றினை
திறக்க தொடங்கினேன்..

புற்றீசல் போல
தங்க மீன்கள்
வானவில் சிறகுகளோடு..

வானின் நீல வண்ண
படியேறி போன
ஒரு தங்க மீன்
தன் சிறகை அசைத்தவாறே
சொன்னது…

நீ அழகன் என..

நான் சிரித்துக் கொண்டேன்..

எப்போதும்
என் முகம் பார்க்கும்
கண்ணாடி நீயாக
இருந்தால்..

எப்போதும் எனை
பார்க்கும் விழிகள்
உனதாகி இருந்தால்..

நான்
அழகன்
தான்..

– மணி செந்தில்

 

 

பயணம் என்கிற பெருவழி..

14523298_194382390986637_8173281201202185685_n
எழுதுபவனுக்கு எழுத்தின் மூலமாகத்தான் ஜீவனே நகரும். எனக்கு அந்த ஜீவனைச் சூடாக வைத்திருப்பதே பயணங்கள்தான். அது என்னை வேறொன்றாக மாற்றுகிறது. புவிப்பரப்பை முழுமையாகப் பார்க்க எல்லா இடங்களையும் அகலமாகப் பாருங்கள். பார்க்காத இடம் பார்த்தல் சுகம். புது இடம் பார்த்தால் அதீதக் கற்பனை பிறக்கும். கற்பனையில் மிதக்காத மனிதனைச் சொல்லுங்கள். அவனையும் அலைந்து பிடிப்பேன்!’’
– கோணங்கி (விகடன் 16-09-2009)

என் வீட்டிற்கு முன்னால் கிளை கிளையாய் விரிந்திருக்கும் பாதைகளை காணுகின்றேன். இப்பாதைகளின் தொடக்கப்புள்ளி எது, இப்பாதைகள் எங்கே போய் முடியும் என்றெல்லாம் சிந்தனை முடிச்சுகளை மனம் பின்னிக் கொண்டே போகிறது. உண்மையில் பாதைகள் ஒரு முடிவிலி. அவைகளுக்கு தொடக்கமும் இல்லை. முடிவும் இல்லை. எல்லாப் பாதைகளும் ரோமை நோக்கியே என்ற கிரேக்க சொற்றொடர் உண்டு. பண்டைய காலத்தில் கிரேக்கத்தின் ஆதிக்கம் பரவி இருந்த போது இச்சொற்றொடர் பிறந்திருக்கலாம். அக்காலத்தில் பாதைகள் முழுக்க அலைந்து திரிந்த யாத்ரீகர்கள், ஊர்ச்சுற்றிகள் நிறைந்து இருந்தார்கள். பொதுவாக வாழ்தல் வேண்டி பிழைப்பு கருதி, சாமியாராக,வித்தைக் காட்டுபவராக, விசித்திர பொருட்கள் விற்பவராக, குறி சொல்பவராக, கால்நடைகள் மேய்ப்பவராக நாடு, நகரம், காடு,கழனி என சுற்றிக் கொண்டே இருந்த ஊர்ச்சுற்றிகள் உண்டு,. ஊர்ச்சுற்றுதல் என்பது வெறும் கேளிக்கைக்கானது மட்டுமில்ல. அது ஒரு ஆன்மீக அனுபவம் என்கிறது பெளத்தம். பெளத்தப் பிக்குகள் பல நாடுகளுக்கு புத்தரின் போதனைகளை எடுத்துக் கூற பயணப்பட்டுக் கொண்டே இருந்திருக்கிறார்கள். அந்த காலத்தில் மதத்தினை பரப்ப பயணம் மட்டுமே ஒரே வழி. மதம் பரப்புதல் என்கிற நோக்கமும், பொருளீட்டுதல் என்கிற நோக்கமுமே பயணம் என்கிற பெருவழிக்கு பெரும்பாலும் காரணங்களாக அமைகின்றன. பயணம் என்பது பெரும் அனுபவங்களின் கூட்டுத் தொகையாக இருக்கிறது. பயணம் மூலமாக பெறும் அனுபவங்கள் மனித வாழ்க்கையையே மாற்றி அமைக்கும் வல்லமை கொண்டது. சேகுவேரா தன் நண்பன் அல்பெர்த்தோ கிரானடோவுடன் மோட்டார் சைக்கிளில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் மேற்கொண்ட பெரும் பயணமே அவனை ஒரு புரட்சியாளராக உருவாக்கியது. சேகுவேராவின் பயண அனுபவங்கள் ஆங்கிலத்தில் தமிழிலும் நூலாக கிடைக்கின்றன. சே குவேரா-புரட்சியாளனாக உருவானது எப்படி என்ற தலைப்பில் இந்த பயண அனுபவங்களை கிழக்கு பதிப்பகம் நூலாக வெளியிட்டு உள்ளது. ‘ ஒரு தகப்பனாக நான் புரிந்துகொள்ள முடியாத பல விஷயங்கள் அவனிடம் இருந்தன. கால ஓட்டத்தில் தான் அவைகளை நான் அறிந்தேன். பயணத்தின் மேல் அவன் கொண்டிருந்த தீராவேட்கையானது புதியவைகளை அறிய வேண்டும் என்கிற அவனுடைய பற்றுறுதியின் இன்னொரு அம்சமே என்பதை அப்போது நான் உணரவில்லை.’ மோட்டார் சைக்கிள் நாட்குறிப்புகள் நூலுக்கு எழுதிய முன்னுரையில் தன் மகன் குறித்து சேகுவேராவின் தந்தை எர்னஸ்டோ சீனியர் தெரிவிக்கிறார். உண்மைதான். பயணங்கள் எப்போதும் புதியவனவற்றை தேடி அலைகிற ஆன்மாவின் குரலாக இருக்கிறது.

அப்பயணத்தின் ஊடே சேகுவேரா விடை பெறுதலின் பொருட்டு ஒரு கடற்கரையில் தன் காதலி சிச்சினாவை சந்திக்கிறார். பொங்கி அலையடித்துக் கொண்டிருந்த அக்கடல் போலவே சேகுவேராவின் மனமும் பயணம் தருகிற புதிய சாகசங்களுக்காக கொந்தளித்துக் கொண்டிருந்தது. தனது காதலியின் விரல்களைப் பற்றிக் கொண்ட சே தெரிவித்தார். “ விடைபெறும் தருணம் இது. பிரிவின் துயரமும், உவப்பின்மையும் என் சுவாசத்தோடு கலந்து விட்டது. பயணங்களின் ஊடே நிகழும் சாகசங்களை நோக்கி நான் செல்லப்பட்டு விட்டேன். நான் திரும்பும்வரை நீ காத்திருப்பாயா என்று கேட்டார். சிச்சினா தலையசைத்தாள். பயணம் தொடர்ந்தது.

சே குவேரா செய்த இப்பயணம் குறித்து மோட்டார் சைக்கிள் டைரீஸ் ( Motor Cycle Diares (2004) ) என்ற புகழ்ப் பெற்ற உலகத்திரைப்படம் காணக்கிடைக்கிறது. நிலவியல் காட்சிகளும், நுட்ப உணர்வுகளும் நிரம்பிய அத்திரைப்படத்தை காணுதல் என்பதே மகத்தான ஒரு அனுபவம். கொடும் மழையிலும், பல்வேறுவிதமான பருவ சூழல்களிலும் ஆஸ்துமாவால் பலவீனமான நுரையீரலோடு சேகுவேரா பயணித்த அந்த அனுபவக் காட்சிகள் திரையில் விரியும் போது பயணம் குறித்த நம் மதிப்பீடுகள் மாறத் தொடங்குகின்றன. இதன் பாதிப்பில் வெளிவந்த மலையாளத்திரைப்படம் தான் துல்கர் சல்மான் நடித்த நீல ஆகாசம் பச்சக்கடல், செவ்வண்ண பூமி(2013).

அதே போல புரட்சியாளர் மாவோ நடத்திய பெரும் பயணமே சீனப்புரட்சிக்கு அடிப்படையாக திகழ்ந்தது. ஏகாதிபத்திய கோமிண்டாங் படைகளின் தாக்குதல் இருந்து தப்பிக்க மாவோவின் தலைமையில் 2,30,000 செஞ்சட்டை படையினர் 1934 அக்டோபர் 16 முதல் 1935 அக்டோபர் 21 வரை சுமார் ஓராண்டு காலம் நெடும்பயணம் நடத்தி, சீன விவசாயிகளை, மக்களை புரட்சிக்காக அணியப்படுத்தினர்.கடுமையான பருவ கால சூழல்களுக்கு முகங்கொடுத்து 6000 மைல் தூரத்தை செஞ்சட்டைப் படை கடந்தது. கொந்தளிக்கும் ஆறுகள், குத்தீட்டி மலைகள், அதல பாதாளமான நிலவியல் அமைப்புகள் , உணவு, உறைவிடம் ஆகியவற்றை கண்டறிவதற்கான சூழல்கள் போதாமை, தொற்று நோய்களின் தாக்குதல் என பல்வேறு விதமான சங்கடங்களை கடந்து சீனப் புரட்சியை தன் படையினரோடு நிகழ்த்திக் காட்டினார் மாவோ.

இந்தியப் பெருநிலத்தில் அண்ணல் காந்தியடிகள் சென்ற தண்டி யாத்திரைப் பற்றி நமக்குத் தெரியும். 1930 மார்ச் 12 ஆம் தேதி குஜராத்தில் உள்ள தனது சபர்மதி ஆசிரமத்தில் இருந்து , 23 நாட்கள் 240 மைல்கள் நடந்து 1930 –ஏப்ரல் 6 ஆம் தேதி தண்டியை பல ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் அடைந்த காந்தி தனது பயணத்தின் மூலமாகவே தன் போராட்ட உணர்வை பரவலாக்கினார். சாதாரண மனிதராக இருந்த காந்தியை மகாத்மா காந்தியாக்கியதற்கு மூல சம்பவமும் அந்த தென் அமெரிக்க ரயில் பயணம் தானே..

இப்படி உலகம் முழுக்க பயணங்களும், அது தரும் அனுபவங்களும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமைக் கொண்டவைகளாக இருக்கின்றன. ஒரு பயணம் என்பது ஏதேனும் காரணங்கள் கொண்டவையாக இருக்கலாம். இல்லையேல் பயணம் தருகிற அனுபவங்களும், மனநிலையுமே ஒரு பயணத்திற்கான காரணங்களாக அமையலாம்.

maxresdefault

 

தமிழ் இலக்கிய உலகில் பெரும் ஊர்ச்சுற்றிகளாக எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணனும், கோணங்கியும் திகழ்ந்திருக்கிறார்கள். இருவரின் எழுத்துக்களின் ஊடே அப்பயணங்களின் அனுபவங்களும், நிலவியல் காட்சிகளும் நிரம்பி ததும்புகின்றன. ஒரு முறை எஸ்.ரா சொன்னார் “ பயணத்திற்கென எனக்கு காரணங்கள் தேவையில்லை. எவ்வித காரணங்களும் இல்லாமல் ஒரு ஊரில் இருந்து கிடைக்கிற பேருந்து, வாகனம் என ஏதாவது ஒன்றில் ஏறி இலக்கில்லாமல் ஏதோ ஒரு ஊரில் இறங்கி, அங்கு கிடைப்பதை உண்டு, அங்கு இருப்பதை கண்டு , அங்கேயே நாலைந்து நாட்கள் தங்கி விட்டு வருவதை நானும், கோணங்கியும் வெகுநாட்கள் வழக்கமாக கொண்டிருந்தோம். ”

உண்மையில் ஊர்ச்சுற்றுதல் கேளிக்கைக்கு எல்லாம் அப்பாற்பட்ட பெரும் அனுபவமே என்று ஊர்ச்சுற்றிகள் கண்கள் மிளிர சொல்கிறார்கள். அது ஒரு வகையான போதை. ஒரு வகையான ஆழ் மனக் கோரல். அனைத்திலிருந்தும் தப்பிகிற மனநிலை.
ஆஸ்கர் விருது வாங்கிய Forest Gump என்கிற உலகத்திரைப்படம் உண்டு. அதன் கதாநாயகி எப்போதும் Forest Gump என்று பெயருள்ள அக்கதாநாயகனை Run Forest, Run Forest (ஓடு பாரஸ்ட்..) என்று சொல்லிக் கொண்டே இருப்பாள். ஒரு கட்டத்தில் அம்மாவையும், காதலியையும் இழந்த கதாநாயகன் என்ன செய்வது என்று தெரியாமல், காரணமே இல்லாமல் ஓடத் தொடங்குவான். இரவு, பகல் பாராது ஓடிக் கொண்டே பல நாடுகளை கடப்பான். அவனது இலக்கற்ற ,முடிவற்ற இந்த ஓட்டம் தொலைகாட்சிகளில் காட்டப்படும். உலக சமாதானத்திற்காகதான் ஓடுகிறார் என பலரும் நினைத்து, அவன் பின்னால் பலரும் ஓடுவர். ஒரு கட்டத்தில் அக்கதாநாயகனுக்கு வீட்டு நினைவு வந்து விடும். உடனே வீட்டை நோக்கி திரும்ப ஓடத் தொடங்குவான். ஏனெனில் அக்கதாநாயகனுக்கு தன் சோகத்தில் இருந்தும், மன அழுத்ததில் இருந்தும் தப்பிக்கும் வழியாக அந்த ஓட்டத்தை, அப்பயணத்தை கருதுவான். அது ஒன்று மட்டுமே அவனை ஆற்றுப்படுத்தும் .

தமிழ்நிலத்தில் ஊர்ச்சுற்றிகளின் பங்கு மகத்தானது. பல்வேறு விதமான தத்துவங்களை, மத போதனைகளை ,மருத்துவத்தை ,பண்பாட்டுக் கூறுகளை பரப்பியதில் ஊர்ச்சுற்றிகள் பெரும் பங்கு வகித்திருக்கிறார்கள். சமண முனிவர்களாக,பெளத்த பிக்குகளாக, புனித யாத்திரை செல்பவர்களாக விளங்கிய தமிழர்களின் ஊர்ச் சுற்றி உளவியல் அதிகார வேட்கையாக மாறிய காலத்தில் பெரும் படையெடுப்புகளை நிகழ்த்தி உலக நாடுகளை எல்லாம் வென்று இருக்கிறார்கள்.

பயண அனுபவங்களைப் பற்றி தமிழில் பல நூல்கள் காணக்கிடைக்கின்றன. பல நாடுகளுக்கு சென்று உலகம் சுற்றிய தமிழராக ஏ.கே செட்டியார் திகழ்ந்திருக்கிறார்கள். அதே போல மணியன் ,சாவி , தமிழ்வாணன், அகிலன் போன்ற பல எழுத்தாளர்களும் உலகைச்சுற்றி பார்த்து தனது அனுபவங்களை இலக்கிய பிரதிகளாக ஆக்கி இருக்கிறார்கள். காவேரி நதிக்கரை ஓரமாக எழுத்தாளர் தி.ஜானகிராமனும், அவரது நண்பர் சிட்டியும் மேற்கொண்ட பயணத்தை நடந்தாய் வாழி காவேரி (காலச்சுவடு வெளியீடு ) என்கிற படைப்பாக வெளியிட்டு இருக்கிறார்கள்.

 

14523202_194382474319962_8228487827882526794_n

ஊர்ச்சுற்றிகளின் குண இயல்புகள், ஊர்ச்சுற்றிகள் எதிர்க்கொள்ளும் சவால்கள்,பயணத்திற்கு தேவையான பொருட்கள் போன்ற ஊர்ச்சுற்றி அம்சங்களைப் பற்றி புகழ்ப் பெற்ற எழுத்தாளர் இராகுல சாங்கிருத்யாயன் “ ஊர்ச்சுற்றி புராணம் “ என்கிற புகழ்ப்பெற்ற நூலை எழுதியுள்ளார் .

( ஊர் சுற்றிப் புராணம்
ஆசிரியர் : ராகுல் சாங்கிருத்யாயன்
பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை-98
விலை ரூ 70 மொத்த பக்கங்கள் : 236)

எல்லா பாதைகளும் என் வீட்டில் இருந்தே தொடங்குகிறது என்கிறது ஒரு ஜென் மொழி. எந்த பயணமொன்றின் முடிவும் ஒருவிதமான தனிமை உணர்வை தருவது இயல்பு. ஏனெனில் பயணம் என்பதே நான் தனியன் அல்ல என்பதை உணரத்தானே…

 

தமிழரின் வரலாற்றுப் பயணம் – தமிழ்த்தேசியச் சுவடுகள் 3

 

4853487286_8a81f5ba7f_z

 

 

பின்னே திரும்பி பார்க்காதவன் முன்னே பார்க்கும் பார்வையை இழக்கிறான் என்கிறார் மாவீரன் அலெக்சாண்டர். நம்முன்னே விரிந்துக்கிடக்கும் கடந்த காலங்களின் சுவடுகளை கவனிக்காது, அறியாது எதிர்காலத்தின் பாதையை நம்மால் தீர்மானிக்க முடியாது. எனவே தமிழன் எவ்வாறு ஒரு தேசிய இனமாக உருவாக்கம் கொண்டான் என்பதற்கான பயணத்தில், தமிழரின் வரலாற்றுப் பாதையையும் நம் அறிவு வெளிச்சம் கொண்டு ஒரு பார்வை பார்த்து விட்டு வருவோம்.

ஆற்றங்கரையோரம் பிறந்தான் மனிதன். ஆற்றங்கரைகளே மனித இனத்திற்கான தொட்டில்களாக அமைந்தன . சுமார் 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன் அறிவாய்ந்த  குரங்கினம் பரிணாம வளர்ச்சியினால் மனி்த சாயலை அடைகின்றன. 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்  ஹோமோ செப்பியன்ஸ் என்ற அழைக்கப்பட்ட சற்றே மேம்பட்ட மனித குரங்கினம் தற்கால மனிதனின் மூதாதை எனக் கொள்ளலாம் என அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். குரங்கிலிருந்து உருமாறிய மனித இனம்  சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக தனக்குள்ளாக தகவல்களை பரிமாறிக் கொள்ள ஒரு வலிமை வாய்ந்த ஊடகத்தை தனது அறிவாற்றல் மூலம் அடைந்தது. அந்த தகவல் பரிமாற்ற கருவியே மொழியாகும்.

மொழியே மனித இனத்தை தனித்துவப்படுத்தும் வலிமை வாய்ந்த அடையாளமாகும்.  அதுவே மனித இனத்தை வளர்த்தெடுத்தது. விலங்காக திரிந்த மனித இனம் தனக்கென ஒரு மொழியை அடைந்த பிறகு அதன் பரிணாம வளர்ச்சி பன்மடங்கு அதிகரித்தது. மொழி மூலமாகவே மனிதன் சிந்தித்தான். மொழி மூலமாகவே அவன் உரையாடினான். மொழி மூலமாகவே அவன் பலவற்றை கண்டறிந்தான். மொழி மூலமாகவே மற்ற விலங்குகளை காட்டிலும் மேம்பட்டவனாக மனிதன் மாறினான்.

எனவே தான் ஒரு தேசிய இனத்தின் தலையாய அடையாளமாக மொழி வகுக்கப்படுகிறது.  மனித இனம் கண்டறிந்த முதன் மொழியாக தமிழ் மொழி இருந்தது என்பதை பல ஆய்வுகள் மூலம் தமிழறிஞர்கள் நிறுவி உள்ளார்கள். கல் தோன்றி,மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் என்கிறார்கள்.  முதன் முதலாக மாந்த இனம் தோன்றியது ஆப்பிரிக்கா தொடங்கி தற்போது மடகாஸ்கர் இலங்கை,தென்னிந்தியா உள்ளீட்டு நீண்ட பரவிக் கிடந்த பெருநிலத்தில்தான் என நம்மினத்தின் மாபெரும் அறிஞர் பாவாணர் பல ஆய்வுகள் மூலம் நிறுவி உள்ளார். அந்த பெரு நிலமே லெமூரியா என்றும் கொந்துவானா என்றும் அழைக்கப்படுகிற குமரிக் கண்டமாகும்.  கால ஓட்டத்தில் விளைந்த பல்வேறு கடற்கோள்களால் குமரிக் கண்டம் அழிந்தது. ஒரே நிலமாக சேர்ந்திருந்த இலங்கை, தமிழ்நாடு ,ஆப்பிரிக்கா போன்ற பகுதிகள் படிப்படியாக பிரிந்து தனித்தனி நிலங்கள் ஆயின. இன்றும் இலங்கையில் கண்டெடுக்கப்பட்டு வருகிற பழம் பொருட்களில் தாயக தமிழகத்தின் வரலாற்று நிழல் படிந்துள்ளதை சிங்கள அறிவுலகம் திட்டமிட்டு இந்திய அரசுடன் கூட்டுச்சேர்ந்து மறைத்து வருகின்றன. “ பஃறுளியாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள “ என இந்நிகழ்வுகளுக்கு சான்றளிக்கிறது தமிழரின் முதுபெரும் காப்பியமான சிலப்பதிகாரம்.

தமிழ் மொழியே உலகின் மூத்த முதற் மொழி என்பதற்கு உலக மொழிகளில் பரவிக் கிடக்கும் தமிழின் வேர்ச் சொற்களே சாட்சி. உலகின் பெரும்பாலான மொழிகளின் எழுத்து முறையில் தமிழ் எழுத்துக்களின் வடிவங்கள்  நீக்கமற நிறைந்துள்ளதாக மொழியியல் அறிஞர்கள் தொடர்ச்சியான தனது ஆய்வுகள் மூலம் நிறுவி இருக்கிறார்கள். மொழியியல் ஆய்வின் பெரும் வித்தகராக விளங்கும் பெருந்தமிழர். அய்யா. அருளியார் அவர்கள் தனது ஆய்வுகளில் பலவற்றில் உலக மொழிகளில் பரவிக் கிடக்கும் தமிழ் மொழியின் வேர்ச் சொற்களை கண்டறிந்து பதிவு செய்து இருக்கிறார்.

கி.மு.3500 முதல் கி.மு.2700 வரை நாகரீக வளர்ச்சியில் உச்சம் பெற்றிருந்த சிந்து சமவெளி நாகரீகமும் தமிழரின் நாகரீகமே என அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  சிந்துசமவெளி நாகரீகத்தில் காணப்படும் எழுத்து வடிவங்களுக்கும், பண்டைய தமிழ் எழுத்துக்களுக்கும் நெருங்கிய வடிவ தொடர்பு இருப்பது ஏற்கனவே நிறுவப்பட்டு விட்டது. சமீபத்தில் பழனி அருகே தி.கூடலூரில் சுமார் 4500 ஆண்டுகளுக்கு முந்தைய சிந்து சமவெளி நாகரீக எழுத்துக்களுடன்  கூடிய பழமையான கற்கால கருவி கிடைத்துள்ளது   இக்கருவியில் காணப்படும் எழுத்து வடிவம் சிந்துசமவெளி பகுதியில் பயன்படுத்தப்பட்ட 396 ஆவது எழுத்துடன் ஒத்துப் போவதாக இக்கருவியை கண்டுபிடித்த தொல்லியல் ஆய்வாளர் நாரயணமூர்த்தி மற்றும் ஆர்வலர் வெங்கடேசன் தெரிவிக்கிறார்கள்.(தினமணி 22-1-2015 )

சிந்துசமவெளி காணப்படும் சுட்ட களிமண்ணால் தயாரிக்கப்பட்ட செங்கற்களால் கட்டப்பட்ட வீடுகளின் அமைப்பும், அதன் ஒழுங்கும் தமிழர் நாகரீக வளர்ச்சிப் போக்கிற்கு மிக நெருக்கமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிந்துவெளி மக்கள் சிவ வழிபாடு நம்பிக்கை உடையவர்களாக விளங்கியதற்கும் சான்றுகள் இருக்கின்றன. மேலும் சிந்துசமவெளி நாகரீகத்தில் காணப்பட்ட பல பொருட்கள் ,தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களுடன் ஒத்துப்போவதையும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள். சிந்துவெளி நாகரீகத்தின் மீது படையெடுத்த சுரா பானம் அருந்தும் ஆரியர் சுரா பானம் அருந்தாத அசுரர் என அழைக்கப்பட்ட தமிழர் வாழ்ந்த சிந்துவெளி நாகரீகத்தினை வென்று இந்திய துணைக்கண்ட பெருநிலத்தில் நுழைந்தனர் என்பதை ஆரியர்களின் பாடல்களை உள்ளடக்கிய ரிக் வேதம் தனது பாடல்களின் மூலம் அடையாளப்படுத்துகிறது.

ஏறக்குறைய சிந்து சமவெளி நாகரீகத்திற்கு முன்பே  இன்றிலிருந்து 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தற்போதைய பூம்புகாருக்கு கிழக்கே கடலுக்கு அடியில் புதைந்து கிடக்கும் உலகின் பழம் பெரும் நகர நாகரீகம் தமிழர்களுடையது.

எனவே மற்ற மாந்த இனங்கள் காட்டுமிராண்டிகளாய்,விலங்குகளாய், காட்டில் விலங்குகளாய் திரிந்துக் கொண்டிருந்த காலத்திலேயே தமிழர்கள் நகர நாகரீகம் கண்டு வாழ்வாங்கு வாழ்ந்திருக்கிறார்கள் .

தாய்மொழிக்கென சங்கம் வைத்து அதன் மூலமாக தன் மொழி விழுமியங்களை காப்பாற்ற தமிழர் படைத்தவைதான் சங்க இலக்கியங்களாக ,மாபெரும் வரலாற்றியல் ஆவணங்களாக நம் முன்னால் காணக்கிடைக்கிறது. தொல்காப்பியம் தொடங்கி, எட்டுத்தொகை,பத்துப்பாட்டு என விரிந்துக் கிடக்கின்றன பண்டைத்தமிழரின் வாழ்வும்  அறிவும் . அகமும்,புறமும் என காதலும்,வீரமும் கொண்டு “யாதும் ஊரே,யாவரும் கேளீர்” என உலகம் தழுவி நேசித்த மாபெரும் இனம் தமிழினம்.

 

1414923376319297_430844540292273_1507862722_n download (1)

குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை என ஐவகை நிலங்கள் ஐந்திணைகளாக பிரிக்கப்பட்டு ,ஒவ்வொரு திணைக்குமாக தனித்தனி பண்பாட்டியல் சுவடுகளோடு வாழ்ந்தான் தமிழன். கி.மு 500 முதல் கி.பி 600 வரையிலான காலக்கட்டத்தில் சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் கடல் கடந்து சென்றும், வடவரை வென்றும் தமிழர் பெருமைகளை நிலைநாட்டினர். கரிகாற் சோழன் சிங்களம் மீது படையெடுத்து  சிங்களர்களை பிடித்து வந்து காவிரிக்கு கரை எழுப்பினான். கல்லணை கட்டி ஆற்று நீரை பாசனத்திற்கு பயன்படுத்த முடியும் என உலகத்திற்கே நீர் மேலாண்மை அறிவியலை முதன்முதலாக அறிமுகம் செய்தவன் கரிகாற்பெருவளசோழ மன்னன்.  வடவரான ஆரியனை வென்று ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனாய்  பாண்டியன் மிளிர்ந்தான். சேரன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயம் வரை படையெடுத்து சென்று இமயமலையில் வில் கொடியை பொறித்து திரும்பினான்.  கனக விசயர் என்ற வட மன்னர்களை வென்று அவர்கள் தலையில் கல் சுமக்க செய்து, கண்ணகிக்கு கோவில் கட்டினான் சேரன் செங்குட்டுவன்.

பண்டைய தமிழ் மன்னர்களை களப்பிரர்கள்,பல்லவர்கள் ஆகிய பிற இன மன்னர்கள் படையெடுப்பினால் வீழ்த்தி தமிழ்ப்பெரு நிலத்தின் ஆட்சி அதிகாரத்தினை ஆண்டனர். இவற்றில் களப்பிரர்கள்,பல்லவர்கள் பிற இனத்தவர் இல்லை ..அவர்களும் தமிழர்களே என சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

களப்பிரர்,பல்லவர் வீழ்ச்சிக்கு பிறகு பிற்கால சோழர் ஆட்சியிலும், பிற்கால பாண்டியர் ஆட்சியிலும் தமிழர் மாபெரும் புகழ் வாழ்க்கையை வாழ்ந்தனர். உலகம் முழுக்க படையெடுத்து வெல்லும் திறன் உடையவராக புலிக்கொடி ஏந்திய தமிழர்கள் விளங்கினார்கள் என்பதற்கு பிற்கால சோழர் வரலாறு சான்று பகிர்கிறது. பிற்கால சோழர் வரலாற்றினை ஆய்வு செய்த பெருந்தமிழர் சதாசிவ பண்டாரத்தார் பிற்கால சோழர் குறித்து பல முக்கிய ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார்.

இன்று நமக்கு  கிடைத்துள்ள பல தரவுகளும், ஆவணங்களும்,கல்வெட்டுகளும்,நூல்களும் இவற்றின் அருமை உணர்ந்து பாதுகாத்து  வைத்த பல அறிஞர்களின் உழைப்பால் விளைந்தவை என நாம் நினைத்து பார்க்க வேண்டும்.

-தொடர்ந்து கற்போம்..கற்பிப்போம்…புரட்சி செய்வோம்.

 

வாசிப்போம்..அறிவை யாசிப்போம்

ஏன் வேண்டும் தமிழ்த்தேசியம் … கோவை ஞானி வெளியீடு –புதுப்புனல்.  பக்கங்கள் -64 விலை:ரூ.50/-

 

 

தேசிய இனங்களும்- தமிழ்த்தேசிய இன உருவாக்கமும்- தமிழ்த்தேசியச் சுவடுகள் 2

 

lemuriaவரலாறு என்பது கால வீதிகளில் தடம் பதித்து,புகழ் மணக்க வாழ்ந்த பெரு மன்னர்களின்,புகழ் மனிதர்களின் வாழ்க்கை கதையாகவே பதியப்பட்டிருக்கிறது.  அப்படியென்றால்..காலங்காலமாக சாதாரணமாக வாழ்ந்த எளிய மக்களைப்பற்றி, அவர்களின் வாழ்வியலைப்பற்றி தெரிந்துக் கொள்ள,ஆய்வு செய்ய எழுதப்பட்டுள்ள வரலாறு அனுமதிக்கிறதா என்றால் கசப்பான உண்மை இல்லை என்பதே..

மக்களின் வரலாறு எழுதப்பட வேண்டும் என புதிய வரலாற்றுத்துறை நிபுணர்கள் விருப்புகிறார்கள்.மனித சமூகங்களின் வரலாறு நேர்மையாக எழுதப்பட்டிருந்தால், நிகழ்காலத்தில் நடக்கிற எத்தனையோ பிரச்சனைகளுக்கான,முரண்களுக்கான தொடக்கப்புள்ளியை நாம் கண்டறிந்திருக்க முடியும் . மனித சமூகம் தொடக்கத்திலிருந்தே தனது அடையாளங்களை,தனது நிலப்பரப்பை, தனது பண்பாட்டை காத்துக்கொள்ள தனது உயிரையும், உதிரத்தையும் சிந்திப்போராடி வந்திருக்கிறது.  எப்போதும் தனது நிலையை விட ஒரு உன்னதமான நிலையை நோக்கியே மானுடச்சமூகம் நகர்வதை, நகரத்துடிப்பதைதான் நாம் வரலாற்றின் ஏடுகளில் தொடர்ச்சியாக வாசித்து வருகிறோம்.

தனக்குரிய அடையாளங்களான மொழி,நிலம்,பண்பாடு போன்ற விழுமியங்களை காத்துக்கொள்ள,அவற்றையே தனது முகவரியாக,முகமாக கொள்ள மானுடச் சமூகம் தயாரானப் புள்ளிகளில் இருந்துதான் தேசிய இனங்கள் தோன்றுகின்றன. கடந்த 15 ஆம் நூற்றாண்டு தான் தேசிய இனங்களுக்கான தொடக்கத்தை நிகழ்த்திய காலக்கட்டமாக நாம் கருதலாம். அக்காலக்கட்டத்தில் தான் ஐரோப்பா கண்டத்தில் பல தேசிய இனங்களை சார்ந்த அரசுகள் உருவாகத்தொடங்கின.  சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்றவற்றை முழக்கங்களாக கொண்டு  18 ஆம் நூற்றாண்டில் உருவான பிரெஞ்சு புரட்சியும், 19 ஆம் நூற்றாண்டில் உருவான பல்வேறு தேசிய இனங்களின் எழுச்சியும்,உலகம் தழுவிய தேசிய இனங்களுக்கான விழிப்பினை தந்தன. ஒரே ஒரு தேசிய இனம் மட்டும் வாழ்கிற நாடுகளும், பல்வேறு தேசிய இனங்கள் வாழக்கூடிய நாடுகளும் தோன்ற தொடங்கிய பிறகு, உலகில் வாழும் பல்வேறு தேசிய இன மக்களும் தங்களது நிலம்,மொழி,பண்பாடு போன்ற அடிப்படை விழுமியங்களை காக்க போராடத்தொடங்கின.

இந்தியா போன்ற பல்வகை தேசிய இனங்கள் வாழக்கூடிய நாடுகளில் அந்தந்த தேசிய இனங்கள் தங்களது அடிப்படைத்தன்மைகளை இழந்து விடாமல் ,கடுமையான போராட்டங்களை சந்திக்கின்றன. மண்ணின் ஆதிக்குடிகளான தேசிய இன மக்கள் தங்கள் உரிமைகளுக்காக,விடுதலைக்காக குரல் கொடுப்பதும், போராடுவதும் அவற்றை இத்தேசிய இனங்களை அடிமைப்படுத்தி ஆண்டு வருகிற ஆளும் வர்க்கம் தனது அதிகாரத்தின் முனை கொண்டு நசுக்குவதும் இந்நாடுகளில் இயல்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் நாம் தேசிய இனம் அல்லது தேசம் என்ற சொல்லுக்கும், நாடு என்கிற சொல்லுக்கான வேறுபாட்டை தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும்.

தேசம் அல்லது தேசிய இனம் என்பதற்கு ஆங்கிலத்தில் Nation என்ற சொல் இருக்கிறது. இதன் மூலச்சொல் Natio என்கிற இலத்தீன் மொழி சொல்லாகும்.  Natio என்றால் பிறந்த இடம்,பிறந்தது எனப் பொருள். இச்சொல்லும் கூட Natus என்கிற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்ததாக அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள்.  Natus என்கிற சொல் கூட நாடு என்கிற தமிழ்ச்சொல்லில் இருந்து பிறந்ததாக  சிந்தனைச்செம்மல் கு.ச. ஆனந்தன் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஒரு தேசம் அல்லது தேசிய இனம் நான்கு அடிப்படைத்தன்மைகளை பெற்றிருக்க வேண்டும் என தோழர்.ஜே.வி.ஸ்டாலின் குறிப்பிடுகிறார்கள். அதன் பொருள் இந்த நான்கு தன்மைகளை பெற்றிருந்தால் தான் ஒரு இனம் தேசிய இனமாக வரையறுக்க முடியாது. அவையாவன. 1. பொது மொழி 2. தொடர்ச்சியான ,வரலாறு மூலமாக வரையறுக்கப்பட்ட நிலப்பகுதி 3. சற்றே ஏறக்குறைய ஒரு பொதுவான பொருளாதார வாழ்க்கை, 4. பண்பாட்டு விழுமியங்களில் வெளிபடுகிற ஒரே இனம் என்பதற்கான மனநிலை. இந்த 4 அடிப்படை தன்மைகளையும் கொண்டு வரலாற்றில் கால ஓட்டத்தில் உருவான மக்கள் கூட்டமே அல்லது மக்கள் சமூகமே ஒரு தேசிய இனம் அல்லது தேசமாகும்.

வரலாற்றின் கால ஒட்டத்தில் உருவான மக்கள் கூட்டம் என்றால்  பல்வேறு காலக்கட்டங்களில் ஒன்று சேர்ந்த சேர்ந்த பல இன மக்கள் ஒரு தேசிய இனமாக மாறி விடுதல் என்பது பொருள். உலகத்தில் இருக்கின்ற தமிழ்த்தேசிய இனம் உள்ளீட்டு எந்த ஒரு தேசிய இனமும் காலங்காலமாக இருந்து வரும் தூய, பிற இனங்கள் கலக்காத, மரபினம் அல்ல. படையெடுப்பு,இடம் பெயர்வு போன்ற காரணங்களால் வரலாற்றின் போக்கில் வந்து சேர்ந்த பல இன மக்கள்  ஆனால் தன்னை ஓரினமாக உணர்கிற மைய உளவியல் தான் ஒரு தேசிய இன உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இக்கருத்தினை 20 ஆம் நூற்றாண்டின் இந்திய வரலாறு என்ற கட்டுரையில் பேரா.முனைவர்.த.செயராமனும் உறுதி செய்கிறார். இவ்வாறாக சேர்கிற பல இன மக்களில் குறிப்பிட்ட இனமக்கள் மட்டும் தங்களது தனித்த அடையாளங்களை,மொழியை,பண்பாட்டு கூறுகளை,நலன்களை  காப்பாற்றிக்கொண்டு தொடர்ந்து வாழ்வாராயின் அவர்கள் தேசிய இன வரையறைக்குள் அடங்க மாட்டார்கள் என்பதையும் நாம் நினைவுப் படுத்திக் கொள்ள வேண்டும்.

பல தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இந்தியா திகழ்கிறது. இந்தியா /இந்தியர் ஒரு தேசம்/ தேசிய இனம் அல்ல. பல்வேறு தேசிய இனங்கள் வாழ்கிற ஒரு நாடே இந்தியா.இந்தியா ஒரு தேசம் என்பதும், இந்தியர் ஒரு தேசிய இனம் என்பதும் அடிப்படையில்லாத, வரலாற்று அரசியல் புரிதலற்ற வார்த்தைகளாகும்.

ஒரு நாடு என்பது வரம்பற்ற அதிகாரத்தோடு (இறைமை ) ஒரு மக்கள் கூட்டம் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழ்வதை குறிக்கும்.  ஒரு நாட்டில் பல்வேறு தேசிய இனங்கள் /தேசங்கள் இருக்கலாம். எடுத்துக்காட்டாக இந்தியாவில் 14 க்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் இருப்பதாக ஒரு ஆய்வு பகர்கிறது.  ஒரு தேசம் ஒரு நாடாக இருக்கலாம்.ஆனால் ஒரு நாடு தேசமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.எடுத்துக்காட்டாக பங்களாதேஷ் என்பது வங்களம் மொழி பேசக் கூடிய ஒரு தேசிய இன மக்கள் வாழக்கூடிய ஒரு தேசம். இது நாடாகவும் இருக்கிறது. ஆனால் இந்தியா என்கிற நாடு ஒரு தேசமல்ல. ஏனெனில் இந்தியர் என்கிறவர்கள் ஒரே மொழி பேசக்கூடிய மக்கள் கூட்டம் இல்லை. இந்தியர் என்பது தேசிய இனம் இல்லை. பல தேசிய இன மக்கள் வாழக்கூடிய நாடு இந்தியா.

ஆனால் தொடர்ச்சியாக இந்தியாவை ஒரு தேசமாக உருவாக்கி விட ஆதிக்க வாதிகளும், இந்தியா ஒரே நாடாக இருப்பதால் பலனடையும் மாபெரும் முதலாளிகளும் முயன்று வருகிறார்கள். அதன் வெளிப்பாடுதான் இந்தியா முழுக்க ஒரே மொழி- சமஸ்கிருதம்,இந்தி ,இந்தியா முழுக்க ஒரே மதம் –இந்து மதம்  போன்றவற்றை நடைமுறைப்படுத்த அரசுகள் தொடர்ச்சியாக முயன்றுவருகிற முயற்சிகள். இந்துக்கள் தவிர வேறு யாருக்கும் ஓட்டுரிமை இல்லை என பாஜக எம்பி பேசுவதும் இத்தகைய தன்மை கொண்டதுதான். இவற்றிக்கிடையே தான் தனித்தே பல சிறப்புகளை கொண்ட தமிழ்த்தேசிய இனம் தனது அடையாளங்களை தக்க வைக்க இம்முயற்சிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக போராடி வருகிறது.

தமிழர்கள் ஒரு தனித்த தேசிய இனமாக விளங்குகிறார்கள். அவர்களுக்கு என்று உயரிய புகழ்வாய்ந்த, வரலாற்று நீட்சிக் கொண்ட தமிழ் மொழி என்கிற தாய் மொழி இருக்கிறது.

வரலாற்றிலேயே  புகழ்பாடும்”வடவேங்கடம்-தென் குமரி” என அவ்வப்போது மாறினாலும் நிரந்தர,பொதுவான நிலப்பரப்பு இருக்கிறது.  ஏறக்குறைய ஒரு பொதுவான பொருளாதார வாழ்வை தமிழர்கள் கொண்டிருக்கிறார்கள். தாய்த் தொழிலாக விவசாயம் விளங்குகிறது. தமிழருக்கென தனித்தே இருக்கிற பொதுவான பண்பாட்டு அடையாளங்களில் தாம் ஒரினம் எனபது வெளிப்படுகிறது. சாதீய முரண்கள் இருந்தாலும் தமிழரின் தேசியத் திருவிழாவாக பொங்கல் திருநாள் விளங்குகிறது. ஜல்லிக்கட்டு,கபடி,பறை இசை இன்னும் பல்வேறு நுட்பமான அடையாளங்களில் தமிழ்தேசிய இனம் ஓரினம் என்பதை வெளிப்படுத்தி, வரலாற்றின் போக்கில் ஒரு தேசிய இனமாக உருவாகி இருக்கிறது.

ஆனால் இந்தியா என்கிற தேசிய இனங்களின் சிறைக்கூடத்தில் தமிழர் என்கிற தேசிய இன மக்கள் தங்கள் மொழியை காக்க, பண்பாட்டு அடையாளங்களை காக்க பெரும் போராட்டத்தை மேற்க்கொள்ள வேண்டி உள்ளது. அவ்வாறு எழும் தமிழ்த்தேசிய இன உணர்வினை பிளக்க,முறிக்க வெளிச்சதிகளும், உட்முரண்களும் காரணங்களாக அமைகின்றன.

தி வாக்.. (The walk )

Skydeck_The-Walk-Experience_Website-Image-e1441262518531

 

 

உலகம் எப்போதும் தனித்துவமானவர்களையே நினைவில் கொள்கிறது. சராசரிகளை சரித்திரம் தனது குப்பைத் தொட்டியில் வீசி எறிந்து விட்டு சென்று கொண்டே இருக்கிறது. இலட்சிய உறுதியும், அசாத்திய பொறுமையும்,கடும் உழைப்பும் ஒரு சேர வாய்க்கப் பெற்ற தனித்துவமான ஒரு மனிதனின் வாழ்க்கை உண்மை கதையே .. தி வாக்.. (The walk )

அவன் பெயர் பிலிப்பி பெடிட். தெருக்களில் நாம் ஒரு காலத்தில் இயல்பாக பார்த்த அந்தரத்தில் கட்டப்பட்ட கம்பிகளில் நடக்கும் வித்தைக்காரன். அதை ஒரு கலையாக அவன் கற்கிறான். பல தடைகள். பல அவமானங்கள். கடும் முன்னேற்பாடுகள்..இவைகளுக்கு பிறகு அவனது கனவான நியூயார்க் நகரத்தில் இருக்கிற டுவின் டவருக்கு இடையே இருக்கிற தொலைவை கம்பி கட்டி அதன் மேல் நடப்பதை நிறைவேற்றுகிறான்.

கம்பி மேல் நடப்பதை விட.. அதற்கான முன் தயாரிப்புகளையே இப்படம் பெரிதும் பேசுகிறது. சட்டப்படி அனுமதி பெறாத நிலையில்.. அந்த சாகசம் எதிர்க்கொள்ளும் சிக்கல்கள் , பிலிப்பின் அசாத்திய உணர்ச்சி என….நம் விழிகளை மூட மறந்து போகிற காட்சிகளை உருவாக்கி வைத்திருப்பதுதான் இப்படம் உண்மையாக செய்யும் மேஜிக்.

ஒரு வெற்றிக்கு பின்னால் இருக்கும் வலி,வேதனை, காயங்கள் என்கிற எதிர்மறைகளுக்கு நிகராக கடும் உழைப்பு, அர்ப்பணிப்பு, தன்னிலை துறத்தல் போன்ற பல நேர்மறைகளும் இருக்கின்றன என்பதை இப்படம் அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறது.

ஏதோ சில தடைகளால், தொந்தரவுகளால் நம் அல்லலுற்று ஆற்றாமை கொண்டு நிம்மதி இழக்கும் தருணங்களில்…இப்படிப்பட்ட திரைபடங்கள் நம் மனதிற்குள் ஊடுருவி நமக்கான பாதையை காட்டுகின்றன.

வலி மறந்து வழி பிறக்கிறது.

என் மனநிலை அறிந்து..சரியான படத்தை…அல்ல.. பாடத்தை பரிந்துரைத்த தம்பி லிங்கதுரைக்கு நன்றி.

http://www.imdb.com/title/tt3488710/

Page 5 of 11

Powered by WordPress & Theme by Anders Norén